Wednesday, August 10, 2011

தி.ஜானகிராமன் நாவல்களில் பெண்கள் - ஒரு விமர்சனம்



Get this widget | Track details | eSnips Social DNA

தி.ஜானகிராமன் நாவல்களில் பெண்கள்
என்ற தலைப்பில் எனது அம்மா கோவை வானொலி நிலையத்தில் வழங்கிய ஒரு படைப்பு. (ஒலிபரப்பானது 1984 ஆம் ஆண்டாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்).

- சிமுலேஷன்




Sunday, July 31, 2011

ஃபலூடா பக்கங்கள்-03



இந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை

தமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு?



கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, "ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே! அது என்ன ஆச்சு? அதனை வெட்டியெடுப்பதற்க்காக ஏதேனும் திட்டங்கள் போடப்பட்டதா? மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

கடற்கரையில் பலூன் சுடுதல்


வெகுநாட்கள் கழித்து பெசண்ட் நகர் பீச் சென்றிருந்தோம். மக்கள் தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியினால் கலர், கலராகப் பலூன்களை குறி பார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.

என் பையன் கேட்டான், "அப்பா, இந்தத் துப்பாக்கி குண்டுகள் யார் மீதாவது தவறாகப் பட்டுவிட்டால் என்ன ஆகும்? "அவை குண்டுகள் இல்லை. காரீய ரவைகள்" என்று சொன்னேன்.

ரவைகள் பட்டு யாரும் சாகாவிட்டாலும், அவை குறி தவறி, வேகத்துடன் வந்து யாராவது கண்ணில் பட்டால் அதோ கதிதானே? சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? ஒரு வேளை இந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவில்லையோ?

மயிலாப்பூர் காக்கைகள்

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. அதனால் நிறையப் பறவைகளும் உள்ளன. அதிகாலையில் இவை காச்சூ, மூச்சென்று கத்தி எல்லோரையும் எழுப்பிவிட்டு விடும். ஆனால், ஏழு மணிக்கு மேலே ஒரு பறவையையும் பார்க்க முடியாது. அவை இரை தேடக் கிளம்பிவிடும் போல. பின்னர் மாலை 6-7 மணி வாக்கில் மீண்டும் இவைகளின் சப்தம் கேட்கும். என்னுடைய கேள்விகள்:--

இந்த பறவைகள் இரை தேட தினமும் எவ்வளவு தூரம் செல்லும்?   மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா? அல்லது மாங்காடு வரைசெல்லுமா? ஒவ்வொரு நாளும் ஒரே திசையில் பறக்குமா? அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா? தினமும் இரை கிடக்குமா? இல்லை, சில நாட்கள் பட்டினியும் கிடக்குமா? பட்டினி  கிடந்து சாகவும் நேரிடுமா?

- சிமுலேஷன்

Tuesday, July 19, 2011

அபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (ஸ்ரீ ஸ்ரீ) அமெரிக்காவில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள தமிழர்களிடையே பிரபலமானவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர்.

ஸ்ரீ ஸ்ரீயும் நானும் சேர்ந்து இன்று "தமிழ்த் திரையிசையில் அபூர்வ ராகங்கள்" என்ற நிகழ்ச்சியினை நடத்துகின்றோம். விபரங்கள் வருமாறு:-

July 9th 7. 30 am PST (8 PM IST) Very special program

Aboorva Raagangal in Tamil Film Music -Live

(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:00 )

Tamizh Radio - http://www.tamizhradio.com/


visit www.itsdiff.com for the weekly radio program archives - KZSU Stanford Radio 90.1 FM

Tune in to 90.1 FM or listen live via internet on Wed 6 - 9 am http://kzsulive.stanford.edu/
- சிமுலேஷன்

Saturday, July 16, 2011

பாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்



ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை.  வாத்யார் பற்றி ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". வேடந்தாங்கலைப் போலவே இதுவும் ஒரு நல்ல தலைப்பு. பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது. கல்கியில் தொடர்கதையாக வந்த "பாப்கார்ன் கனவுகள்' கதையினை, பூர்ணம் விசூவநாதன் அவர்கள் குழுவில் இருந்த குருகுலம் தியேட்டர்ஸ் எம்.பி.மூர்த்தி 95ல் நாடகமாக போட்டார்.

வங்கியில் வேலை பார்க்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் மாதவனான லட்சுமிநாராயணன்தான் கதாநாயகன். வங்கியில் நாடகம் போட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் நாயகன், அடுத்த கட்டமாக சினிமா உலகிற்குள் கதாநாயகனாக நுழைய முயற்சிக்கின்றான். பொறுப்பில்ல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை சுற்றதார் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இவனை   ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்து கரை சேர்க்கவேண்டுமென்று, "பாங்க் எக்ஸாம்" புத்தகமெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பிரம்மப் பிரயத்தனம் எடுக்கும் மாமனாரை "தட்சன்" ரேஞ்சுக்குப் பார்க்கின்றான். ஆனால் மனைவி விஜயலக்ஷுமிக்குக் கணவனது நடவடிக்கைகள் எதுவுமே தப்பாகத் தெரியவில்லை.  அதுவே லக்ஷ்மி நாரயணனுக்குத் தெம்பு தருகின்றது. நாடகம்,சினிமா என்று பைத்தியமாகவே அலைகின்றான்.

பாங்க் உத்தியோகத்தில் இருந்து, நாடகம், சீரியல், சினிமா என்று உயிரை விடத் தயாராயிருந்த ம.வே.சிவக்குமாரின் சொந்த அனுபங்களே, பாப்கார்ன் கனவுகளில்  பாதிக்கு மேலே இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவரது மற்றைய கதைகள் போலவே நிகழ்காலத்திலேயே (லக்ஷ்மிநாரயணன் பதில் சொல்கின்றான்; பைக்கில் ஏறி செல்லுகின்றான் போன்று) எழுதப்பட்ட  கதை முதல்முறை அவரது கதையினை வாசிப்பவருக்குப் புதிராக இருக்கலாம்.

வேலை வெட்டி இல்லாமல், பொறுப்பிலாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரேனும் பார்த்தால், "ஏதேனும் ஒரு இடத்தில் இவன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டானா?" என்று எல்லோரும் எரிச்சலடைவது இயற்கை. ஆனால், அப்படியெல்லாம், ஓவர் பில்டப் கொடுத்து, கிளிஷேயாக ஆக்காமல், நல்ல அரசாங்க வங்கியில், பொறுப்பான  வேலையில் இருக்கும் ஒருவன்கூட தனது நடவடிக்கைகளால், படிப்பவரது எரிச்சலைச் சம்பாதிக்க முடிகின்றது என்றால், அதுவே ஆசிரியர் மவேசியின் வெற்றி.

'பாப்கார்ன் கனவுகள்" - கொறித்துப் பார்க்கலாம்.

கதை - பாப்கார்ன் கனவுகள்
ஆசிரியர் - ம.வே.சிவக்குமார்
பதிப்பு - அல்லையன்ஸ் கம்பெனி - 2007
பக்கங்கள் - 176
விலை - Rs. 55/-

- சிமுலேஷன்

Thursday, July 14, 2011

இந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்


"சமுத்ரா" ஜூன் மாத  இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-02


காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.


பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர்.  தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், "அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.


மாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம்? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.


போன வாரம் நாரதகான சபாவில் "அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு  சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.

மௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில்  அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.

 "மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...!"




இந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்களின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா? காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.

2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.




- சிமுலேஷன்

Sunday, July 03, 2011

அபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya

ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:     S R2 G2 P N2 S

அவரோகணம்: S N2 P G2 R2 S

வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.

கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.



இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.



MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.



கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்",  என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.



கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.






மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-01



பறவைகளுக்கும் தாகம் உண்டு

போட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம்.




தென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும்

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் "வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில் மலரும் பூமி என்ற பகுதியில் "தென்னந் தோப்பு தேவதை" என்ற நிகழ்ச்சி ஒளீபரப்பாகின்றது. இதன் ஸ்பான்ஸர் யாரென்றால் Cadbury நிறுவனத்தினர். Cadbury நிருவந்துக்கும் க்கும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தால்,  இந்த வீடியோவில் இருக்கின்றது விடை.





ஞானி அங்கீகரித்த ஆபாசம்




சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புத்தகம் ஒன்றினைப் பரிசளித்தார். என் மேல் என்ன கடுப்போ தெரியவில்ல. "விருந்து"என்ற தலைப்பு கொண்ட நாவலை எழுதியவர் அலிடாலியா ராஜாமணி, ப்ரியாராஜ் என்ற பெயர்களில் எழுதி வரும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி என்ற நபர்.   'கதை எப்படி?' என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "உவ்வே" ரகம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது வன்மம் கொண்டு எழுதப்பட்ட கதையென்றால் மிகையில்லை. இதில் நான் மிகவும் நொந்த விஷயம் என்னவென்றால், இந்த நாவலை மிகவும் சிலாகித்து "ஞாநி" முன்னுரை எழுதியிருப்பதுதான். ஞாநியின் மீதிருந்த மதிப்பு தடாலென்று இறங்கியது.

பற்கள் தேய்ந்த காரணம்

பல் மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது, "மேல்வரிசைப் பல்லின் விளிம்பு மட்டும் சற்றே தெய்ந்த்திருகின்றதே! ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ?" என்றேன்.

"நகம் கடிக்கும் பழக்கம் உண்டோ" என்றார் டாக்டர்.

"அட. ஆமா."

- சிமுலேஷன்

Saturday, July 02, 2011

வாக்கிங் செல்லும் வயதானவர்களே! ஜாக்கிரதை!

முந்தாநேற்று, விடியற்காலையில் வாக்கிங் போவது என்று தீர்மானித்து, இரண்டாமவன் அனிருத்தும், நானும் ஆறு மணியளவில் (!) வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்து சர்க்கரை கலந்த தண்ணீரோ அல்லது வெறும் தண்ணீரோ கொண்டு வந்து கொடுக்கட்டுமாவென்றும் கேட்டேன். அந்த மாமி, கூச்சப்பட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாமென்றும், ஒரு ஆட்டோ கிடைத்தால் நல்லபடியாக வீட்டுக்குச் சென்று விடுவோமென்றும் கூறினார். சரியென்று அவர்களுக்கு ஆட்டோ கூப்பிட முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உயரமான மாமா தடாலென்று கீழே விழுந்தார். ஆனால் அவர், தலையைச் சற்றே தூக்கிக் கொண்டதால் பின் மண்டையில் அடி ஏதும் படவில்லை. ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரர் உடனே வர, மாமாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மாமியையும் ஏறிக் கொள்ளச் சொல்லி காளியப்பா மருத்துவமனைக்கு செல்லலாமென்று சொல்ல, மாமியோ வீட்டுக்குப் போய் பணம், மொபை போன் இன்ன பிற சாமன்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார். இப்படி நாங்கள பேசிக் கொண்டிருக்கும்போதே, மாமா மயக்கநிலை அடைந்து, நாங்கள் பேசும் எந்த வார்த்தைக்கும் எதிர்வினை காட்டாது இருந்தார். மாமி மிகவும் பயந்து விட்டார். ‘மொபைல் என்னிடம் உள்ளது, போன் செய்து கொள்ளலாம், பணமும் என்னிடம் உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டம்’ என்று சொல்லி ஒரிரு நிமிடங்களில் காளியப்பா மருத்துவமனையினை அடைந்தோம். எனது பையனை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். மாமாவை ஓ.பி.யில் அட்மிட் செய்துவிட்டு, எனது பையனிடம் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களின் டெலிபோன் நம்பர் வாங்கி டயல் செய்யச் சொன்னேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உடனே உதவிக்கு வந்தார். இதனிடையே ட்யூட்டி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, இரத்த நாளங்களில் ப்ளாக் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இவர் ஏற்கெனவே இருதய நோயாளி. அதனால் அவரது குடும்ப டாக்டரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணுகின்றார். மேலும் தான் பொதுத் துறை நிற்வனமொன்றில் ஜி.எம் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராததால் விஜயா மருந்த்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்கிறார். வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடம்பு ஒத்துழைக்குமாவென்று தெரியவில்லை. மாமி தனது வீடு பக்கத்தில்ததன் உள்ளது என்றும், தெரிந்தவர்களிடம் விபரம் சோல்லி விட்டும், பணம், மொபைல் இன்ன பிற ஐட்டங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் விரைந்தார். இப்போது ட்யூட்டி டாக்டர் என்னிடம் வந்து, “நீங்கள் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவரை உடனே ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (Vascular Surgeon) வந்து பரிசோதிக்க வேண்டும். கவனமாகக் கேளுங்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான் வரவேண்டும். சாதாரண இருதய நிபுணர் (Cardilogist) பத்தாது” என்று சொல்லுகின்றார். நான் என்ன சொல்லுவது? என்ன முடிவு எடுப்பது? அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்ததில் அவர் மகன பெங்களூரில் இருக்கின்றான் என்றும், பெண் கனடா நாட்டில் இருக்கின்றாள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து விட்டேன். அடுத்த பத்து நிமடங்களில் மாமி, தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து சேர்ந்ததாலும், எனக்கும் அலவலகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்ததாலும், நான் விடை பெற்றுக் கொண்டேன். மாமி கைகளைப் பற்றி கொண்டு அழுதே விட்டார். “தெய்வம் போல வந்தீர்கள் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.



அன்று மாலை மாமியிடமிருந்து போன் வந்தது. தங்களது குடும்ப இருதய நிபுணர் வந்து பார்த்து, அவரது அனுமதியின் பேரில் மாமாவை விஜயா மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும், அவர் அபாய நிலயில் தற்போது இல்லையென்று, ஆனால் ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்வதற்காக ஒரிரு நாட்கள் அங்கே இருக்கப் போவதாகவும் கூறினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அனுபவ்த்திற்குப் பிறகு விடியற்காலையில் வாக்கிங் செல்வபர்களுக்குக், குறிப்பாக வயதானவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக் ஒரிரு அறிவுரைகள் சொல்ல விரும்புகின்றேன்.



- ஆள் நடமாட்டம் உள்ள தெருக்களிலேயே வாக்கிங் செல்லுங்கள். ஆள் அரவமற்ற தெருக்களில் செல்லாதீர்கள். ஒரு வேளை உங்களுக்கு மயக்கம் போன்ற பிரச்னைகள் வரும்போது, உதவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

- “வீட்டுக்குப் பக்கத்தில்தானே வாக்கிங் செல்கிறோம், எதற்கு சுமை?” என்றெண்ணி, மொபைல் போன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அதிலும் ICE (In Case of Emergency) என்ற பெயரில்) அவசர, ஆபத்துக் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயரை கட்டாயம் சேமித்து வையுங்கள்.

- அருகில் சென்றாலும் நூறு ரூபாயேனும் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டி வரலாம்.

- ஆபத்துக்கு உதவ எத்தனையோ பேர் இருந்தாலும், வெட்கப்பட்டுக் கொண்டு பெரும்பாலோனோர் அதனை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியினை ஏற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.

- சர்க்கரை வியாதி உள்ளவர்ளுக்கு, சர்க்கரையின் அளவு குறையும் போது தலை சுற்றல், மயக்கம் வரலாம். ஒரு சாக்லேட்டோ, கேண்டியே பாக்கெட்டில் வைத்திருப்பது நலம்.

- இருதய நோயாளியாக இருக்கும் பட்சத்தில், ஆபத்து நேரத்தில் என்ன மருந்து குடிக்க வேண்டுமென்றும், வீட்டு முகவரியும் கொண்ட ஒரு அட்டையினை மேல் சட்டைப் பையில் வைத்திருப்பது மிகவிம் நல்லது.

- சிமுலேஷன்

டாக்டர்.ஹெச்.வி.ஹண்டே



சமீபத்தில் Win TVல் ஒரு அரசியல் கலந்துரையாடல் நடை பெற்றுக் கொண்டிருந்தத்து. காரசாரமாக ஒருவர் மத்திய அமைச்சர்களை விளாசிக் கொண்டிருந்தார். யாரென்று கவனித்ததில், எம்ஜியார் அமைச்சரவையில் சுகாதாரத்த துறை அமைச்சராக இருந்த Dr.H.V.Hande அவர்கள். அவர் இத்தனை காலமும் எங்கிருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. என்னைக் கவர்ந்த  டீசண்டான ஒரு சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். ராஜாஜியின் சீடர்களில் ஒருவரான இவர், “மூதறிஞர் ராஜாஜி” என்ற புத்தகமும் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்றத்திகு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஹண்டே, மருத்துவத் துறையிலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றார். ஹண்டே மருத்துவமனையின் பெயரில் இயங்கி வரும் வலைத்தளத்தில் அவரது மருத்துவ சேவைகள குறித்த விபரங்கள் இருக்கின்றதே தவிர, அரசியலில் அவரது பங்களிப்புக் குறித்து இணையத்தில் எந்த இடத்திலும் அவர் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சமீபத்திய தேர்தலில், கொளத்துரில் ஸ்டாலினுக்குத் தண்ணி காட்டிய சைதை துரைசாமியைப் போல, 1981ல் அண்ணாநாகரில், கருணாநிதிக்குத் தண்ணி காட்டியவர் டாக்டர் ஹண்டே அவர்கள். 699 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டாலும் உச்சநீதி மன்றத்தில் இந்தத் தேர்தல் குறித்து வழக்கு தொடர்ந்த விபரம் இந்தத் தளத்தின் மூலம் அறிகின்றேன். சிவகங்கை வழக்குப் போல இந்த வழக்கும் “நிலுவையில்” உள்ளது என்று யாராவது சொன்னால் ஆச்சரியப்ப்பட மாட்டேன். கிட்டத்தட்ட 85 வயதை எட்டும் இந்த வயதிலும், ஹண்டே அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. யாரேனும் ஹண்டே பற்றிய விபரங்களைத் தொகுத்தால் நல்லது.

- சிமுலேஷன்

Friday, July 01, 2011

கண்ணாடிக்கு குட்பை

என் முதல் பையன் ஆதித்யாவுக்கு கண்ணாடி அணிவது என்பது அறவே பிடிக்காது, என்றாலும் வேறு வழியில்லாது வெகு நாட்களாக கண்ணாடி அணிந்து வந்துள்ளான். கண் எக்சர்ஸைஸ் செய்து பவரை  குறைந்தாலும், கண்ணாடி அணிவதை ஒரு போதும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாகத் தனது நண்பர்கள் பலரும் லேசர் ஆபரேஷன் செய்து கொண்டு கண்ணாடி அணிவதனையே விட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தானும் அப்படிப்பட்ட ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி வந்தான். எங்களது வழமையான கண் டாக்டரிடம் கேட்ட போது, இதற்குச் சுமார் எண்பதாயிரம் செலவு செய்ய வேண்டி வரும்  என்று சொன்னதால், அவ்வளவு எல்லாம் செலவு செய்து இதுதேவையில்லை என்று எண்ணி முடிவினைத் தள்ளி போட்டோம். சமீபத்தில் எனது தங்கை பெண், வாசன் கண் மருத்துவமனையில் இதே மாதிரியான ஆபரேஷன் செய்து கொண்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று feedback கொடுக்க நாங்களும் வாசன் கிளினிக்கை அணுகினோம். காலடி எடுத்து வைத்த முதல் நிமிடத்திலிருந்து நல்லதொரு ரிசப்ஷன். அத்தனை பணியாளர்ககுக்கும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டுமென்ற நல்லதொரு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.
Zyoptix Laser Surgery என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை ஒரு Personalised treatment ஆகும். இரண்டு சிறப்பு மருத்துவர்கள் கண்களைச் சோதித்த பின், கண்ணை ஸ்கேன் பண்ணிக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள். இதற்குச் சுமார் 700 ரூபாய் ஆகின்றது. பின்னர் இந்த ஸ்கேன் ரிபோர்ட்டை ஆய்வு செய்து, நம் கண்கள் இந்த அறுவை சிகிச்சைக்கேற்றவைதானா என்று முடிவு செய்கிறார்கள். நமக்கு வசதியான நாளில், வசதியான நேரத்தில் ஆபரேஷன் தியேட்டர் காலியாக இருக்கும் பட்சத்தில் ஆபரேஷனை வைத்துக் கொள்ள சம்மதிகின்றார்கள்.  ஒவ்வொரு கண்ணுக்கும் பத்து நிமிடங்கள் என்று மொத்தம் இருபது நிமிடங்களில் ஆபரேஷன் முடிகின்றது. மற்றுமொரு இருபது-முப்பது நிமிடங்கள் அங்கே இருந்து அவர்களது அறிவுரைகளக் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சக்குச் சுமார் 36,000 ரூபாய் செலவாகின்றது. ஒரு வார காலம் டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன்ற போன்ற சாதனங்களைப் பார்க்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒய்வு எடுக்க வேண்டும். பின்னர் வாசன் விளம்பரத்தில் வருவது போல “கண்ணாடிக்குக் குட்பை” என்று தைரியமாகச் சொல்லலாம். எனது மகன் பெற்ற வெற்றியினக் கண்டு, எனது மனைவியும் zyoptix laser surgery செய்து கொள்ள வேண்டுமென்று விருப்பப்பட்டு அவளது விருப்பமும் சென்ற வாரம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. கண்ணாடி அணியாமல், எல்லோரையும் போலப் நாமும் பார்க்க முடியும் என்ற அவளது முப்பதாண்டு கால ஆசை நிறைவேறியுள்ள இந்த நேரத்தில், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், குறிப்பாக மருத்துவத்துறையின் ஜெட் வேக வளர்ச்சியையும் வியந்தோதுகின்றோம். நாங்கள் சென்றிருந்த நாளில் கிட்டத்தட்ட 10 பேருக்கு இதே ஆபரேஷன் நடைபெற்றது. வந்திருந்த ஒவ்வொருவரும், சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களிலிருந்து வந்தவர்கள என்று பார்க்கும் போது, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும் புலப்பட்டது.
-       - சிமுலேஷன்

Saturday, June 11, 2011

இந்தப் பாடல்கள் பிரபலம் அடைய அப்படி என்ன காரணம்?

இங்கே இடம் பெற்ற எல்லாப் பாடல்களும் அந்தந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவை. கூர்ந்து கவனித்தால் இந்தப் பாடல்களிடையே ஒரு ஒற்றுமையும் இருப்பது தெரிய வரும். அப்படிப்பட்ட சிறப்பான ஒற்றுமைதான் இவை மிகவும் பிரபலம் அடையக் காரணம் போலும். அப்படி இந்தப் பாடல்கள் பிரபலம் அடைய என்ன காரணம்?





















இதே வரிசையில் நான் குறிப்பிட மறந்த மற்ற பாடல்கள், உங்களுக்குக் தெரியவந்தால் பின்னூட்டத்தில் சுட்டியுடன் குறிப்பிடுங்கள்.

- சிமுலேஷன்

Saturday, March 26, 2011

சுதந்தர பூமி - இந்திரா பார்த்தசாரதி - நூல் விமர்சனம்



அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை அப்பட்டமாக எழுத்தில் பதிவு செய்வதில் இந்திரா பார்த்தசாரதி என்றுமே தயங்கியதில்லை. அவரது புனைவுகளில் கூட, ஊடாடியிருக்கும் நிஜங்களைக் கண்டுபிடித்துப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும். அப்படியிருக்க, அரசியல் பின்னணியைக் களமாகக் கொண்ட "சுதந்தர பூமி", நாவல் அரசியல் விரும்பும் வாசகர்களைக் கவருவதில் வியப்பேதுமில்லை.

சுதந்தர பூமி டெல்லி அரசியலில் உள்ள அரசியல் தரகர்கள் பற்றியும் அங்கு நடைபெறும்  உள்ளடி வேலைகள் பற்றியும் குறித்துப் பேசும் நாவல். தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பிற்காக டெல்லி செல்லும்  முகுந்தன், ப்ரொஃபஸர் மிஸ்ராவைச் சந்திக்கிறான். தனது அரசியல் அபிலாஷைகளுக்கு, இந்தத் தமிழ் இளைஞன் நன்கு பயன்படுவான் என்று அவரது அரசியல் மூளைக்குப் புரிய வெகு நேரமாவதில்லை. அரசியல் சதுரங்கத்தில் மிஸ்ரா, எப்படிப் படிப்படியாகக் காய் நகர்த்துகின்றார் என்பதே கதை.

முகுந்தனின் அரசியல் வாழ்க்கை 'காபி' போடுவதில் ஆரம்பித்து காபினெட்டில் இடம் பெறுவது வரை செல்கிறது.  இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக வரும் முக்கியப் பாத்திரம், டாக்டர் சரளா பார்க்கவா என்ற 'எதற்கும் துணிந்த' பெண்மணி. ஒரு சமயம இவர் செய்யும்போராட்டங்களைப் பார்க்கும்போது மம்தா பானர்ஜி போன்ற அரசியல்வாதிகளை நினவூட்டினாலூம், நீரா ராடியா போன்றவர்களின் நினவு வருவதும் தவிர்க்க முடியவில்லை. ப்ரொஃபஸர் மிஸ்ராவுக்கு பிரதமரிடம் நல்ல செல்வாக்கு. பிரதமர் ஒரு பெண்மணி என்று குறிப்பிடப்படுள்ளதால் இது, இந்திரா காந்தி காலத்தைச் சேர்ந்த கதை என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு சமயம் மிஸ்ராவும், முகுந்தனும் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்ய அங்கு லோக்கல் அரசியல்வாதிகளுடன் நடக்கும் விவாதத்தில் "உண்மைத் தமிழன்" யார் என்ற விவாதம் சூடு பிடிக்கின்றது. இந்த இடத்தில், மிஸ்ரா மூலம், ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி எட்டிப் பார்த்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை நன்றாகவே அடிக்கடி நக்கல் அடிக்கின்றார். மலேஷியாவுக்குப் போய்விட்டு வந்திருக்கும் ஒரு மந்திரியை, " அயல்நாடு சென்று வெற்றி சூடிவரும் தமிழரே வருக, வருக" என்று போஸ்டர் அடித்து வரவேற்பதனைக் கண்ட மிஸ்ரா, "வெற்றி சூடி வரும் என்றால் என்ன அர்த்தம்? மலேஷியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதாவது சண்டையா?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். காரிக்கண்ணன் மற்றும் இருங்கோவேள் என்ற இரண்டு பாத்திரங்களைப் படிக்கும் போது "சோ"வின் எழுத்து நினவுக்கு வருகின்றது. அப்படி ஒரு நையாண்டி.

டெல்லித் தமிழன் முகுந்தன், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தமிழ் வெறி போல் வடநாட்டில் இல்லை" என்று சொல்லும்போது, மிஸ்ரா, "நீங்கள் தமிழைப் போற்றுவது போல், அங்கு பசுவைப் போற்றுகிறார்கள்" என்று ஸேம் ஸைடு கோல் போடத் தயங்குவதில்லை.

இ.பாவுக்கு அண்ணாதுரை பற்றி நல்ல அபிப்ராயம் போலிருக்கிறது. (ஞானி வீட்டு "கேணி" சந்திப்பில்கூட  இ.பா, அண்ணாவப் பற்றி சிலாக்கியமாகத்தான் பேசினார்). அண்ணா இறந்த நாளன்று, அவரது சமாதியில் மக்கள் பிரார்த்தனை செய்ய வந்திருப்பது அறிந்த்த மிஸ்ரா, ஆச்சரியப்படுகின்றார். பெரியார் ராமசாமி பற்றிப் பேசும்போது, "ஐ நோ...ஐ நோ... அவர் தமிழ்நாட்டின் 'டான் க்வீக்ஸாட்' என்று எனக்குத் தெரியும்" என்று மிஸ்ரா சொல்லும்போது, இ.பா தனக்கு  மனதில் பட்டதைச் சொல்ல என்றுமே தயங்கியதில்லை என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இதே மாதிரி கருத்தினை இ.பா வேறு ஒரு இடத்திலும் ("இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்)  சொல்லத் தயங்கியதில்லை.

 காபினெட்டில் இடம் பெற்ற முந்தன்ம் பிரமரின் மனதிலும் நன்றாகவே இடம் பெற்று விடுகின்றான். பிரமர் அவனை அழைத்து, "தமிழ்நாட்டைப் பற்றி ஒரு முக்கியமான தகவல் வத்திருக்கிறது. நீங்கள் இப்பொழுது தமிழ்நாடு செல்வது மிகவும் அவசியமாகிறது. நீங்கள் மேல்நாடு சென்று பங்களாதேஷ் பற்றிச் சொற்பொழிவு
ஆற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பம். ஆனால், தங்களை முஜிபுர் ரஹ்மான் என்று நினைத்துக் கொண்டு, செய்கின்ற அக்கிரமத்துக்க்கெல்லாம் கொள்கை முலாம் பூசி ஏமாற்றுபவர்கள அவர்களுக்குரிய இடத்தில்  வைக்க வேண்டுமென்பது என் கருத்து." என்று சொல்லி அவனை தமிழ்நாட்டுக்குச் செல்லும்படி பணிக்கிறார். அவனும் தமிழ்நாட்டுக் செல்ல சம்மதிப்பதாக முடிகின்றது கதை.

சுதந்தர பூமியின் கதாநாயகனான முகுந்தன் உட்பட யாருமே இங்கு பலவீனங்கள் அற்ற உத்தமர்கள் இல்லை. ஒரு நாவலுக்குரிய க்ளைமேக்ஸ் ஏதுமில்லை இல்லாத காரணத்தால், இ.பா ஒரு புதினம் என்று எழுத வேண்டியதை விட, தான் கேள்விப்பட்ட சம்பவங்களையும், நபர்களையும்  பற்றித் தன் வாழ்நாளிலேயே பதிவு செய்யும் வண்ணம் புனைவு கலந்த புதினம் ஒன்று எழுதியுள்ளார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. டெல்லியில் பலகாலம் இருந்ததாலும், பல்வேறு பிரமுகர்களின் பரிச்சயம் கிடைத்தாலும், எந்த விஷயத்தையும் சுவாரசியமாகச் சொல்ல முடியுமமென்ற காரணத்தினாலும்  இ.பாவுக்கு இது சாத்தியமாயிருக்கின்றது.

இது சுதந்தர பூமி மட்டுமல்ல, "தந்திர பூமியும்" கூட.

பெயர்         - சுதந்தர பூமி
ஆசிரியர் - இந்திரா பார்த்தசாரதி
பதிப்பு         - கிழக்குப் பதிப்பகம்
ஆண்டு      - 1973,1978,1993,2006
பக்கங்கள் - 256
விலை         - Rs. 100

- சிமுலேஷன்

Tuesday, March 22, 2011

அருண் ஷோரி எனக்கு எழுதிய மறுமொழி



- சிமுலேஷன்

Saturday, February 19, 2011

கண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்

"கண்டு கொள்ளுவோம் கழகங்களை" மற்றும் "திராவிட மாயை - ஒரு பார்வை" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் எழுத்தப்பட்ட புத்தகங்கள். ஆனால் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். திராவிடக் கட்சிகளின் மூதாதையர் வரலாறு, அக்கட்சிகளின் நிலையில்லாத கொள்கைக் கோட்பாடு போன்றவற்றின் போலித்தனம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன இரண்டுமே.




"கண்டு கொள்ளுவோம் கழகங்களை"

"கண்டு கொள்ளுவோம் கழகங்களை" என்ற கட்டுரைத் தொடர் மூலம் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள் எண்பதுகளில் துக்ளக் இதழில் எழுதி வந்தார். அவரது மகனும், 'அகடவிகட அக்கப்போர்' என்ற அரசியல் பத்திரிகையின் ஆசிரியருமான ஜெ.மோகன்ராஜ் அவர்கள் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பல புதிய விஷயங்களைத் தரும் விதமாகவும், எண்பதுகளில் துக்ளக் இதழில் ஜெபமணியின் கட்டுரைகள் படித்து வந்த எம்மைப் போன்ற தலைமுறையினருக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன இந்தக் கட்டுரைகள்.

இந்தத் தொகுப்பிலிருந்து சில சுவாரசியமான விஷயங்கள்:

- 1942ல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டப் போராட்டமாக,"இனி போராட்டமே கிடையாது... வெள்ளையனே வெளியேறு... மக்களே... செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள்" என்று அறிவிக்க,, அண்ணாதுரை அவர்கள் கிண்டலாக த்ம்பிமார்களுக்கு பின்வருமாறு எழுதினாராம். "தம்பி காந்தியாருக்கு நல்ல பைத்தியம் பிடித்திருக்கிறது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது. ரெயில் ஓடாது. தந்தி இருக்காது. டேலிபோன் இருக்காது. ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்த்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூடச் செய்ய முடியாது. புரிகிறதா தம்பி?"

- நீதி கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் மதச்சின்னங்களை அணிவார்கள். சர்.ராமசாமி முதலியார், சர்.பி.டி.ராஜன் போன்ற நீதிக்கட்சியின் தலைவர்கள்,, நெற்றியில் மதக்குறி இல்லாமல் வெளியே வரவே மாட்டார்கள்.

- தூத்துக்குடியில் புதுக் கிராமக் கொடுமைகள் பற்றி குறிப்பிடுகின்ற்றார் ஜெபமணி. ஆனால் விபரங்கள் தரவில்லை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்குக் கொடுமைகள் போலும்.

- நீதிக் கட்சியில் இருந்த அமைச்சர்கள் பெற்ற மாதச் சம்பளம் 5333 ரூபாய், 5 அணா, 4 பைசா. அவர்கள் காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ரூபாய் 8 அணா. அரிசி ரூபாய்க்கு 18 படி கிடைத்து வந்தது. நீதிக் கட்சியின் அமைச்சர்கள், அன்று அவர்கள் வாங்கிய சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் 395 சவரன்களை வாங்கிக் கொள்ளலாம்.

- ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அண்ணாதுரை எழுதியது பற்றிக் குறிப்பிட்ட ஜெபமணி, "ஜஸ்டிஸ்" என்பதில் மூன்று வட எழுத்துக்கள். ஒன்றுதான் தமிழ் எழுத்து. அதை மூன்று வடமொழி எழுத்துக்களுடன் அப்படியே எழுத அண்ணாதுரைக்குத் தயக்கமில்லை. ஆனால் இராஜாஜி என்பதை "இராசாசி" என்று மட்டும் எழுதுகிறார்", என்கிறார்.

- "டால்மியாபுரம் (கல்லக்குடி) என்ற ஊரின் பயரை மாற்ற வேண்டுமென்று புறப்பட்டவர்கள். மதுரையிலுள்ள "ஹார்விபட்டி"யினை ஏன் எதிர்க்கவில்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையினை ஏன் எதிர்க்கவில்லை" என்று கேட்கின்றார் ஜெபமணி.

- தேசிகாச்சாரி சாலை, தேசிகா சாலை ஆனது. ஆனால், தியாகராய நகரிலுள்ள டி.எம்.நாயர் சாலை மட்டும் மாறாமல் இருக்கிறது. முரணைச் சுட்டிக் காட்டுகின்றார்.

- பகுத்தறிவு உள்ளவர் ஒருவர் வீட்டில் திருமணம் நடந்ததாம். அவர். "பகலில் திருமண வீட்டில் குத்து விளக்கா... எவ்வளவு அறீவீனம்?" என்று சொல்லி விளக்கை ஊதி அணைத்தார்ராம். அவர் இப்போது சட்ட சபை உறுப்பினராகத்தான் இருக்கிறார். (யார் இதுவெனத் தெரியவில்லை.) அன்னார் அண்ணா சமாதியில், பகலிலும் எரியக்கூடிய விளக்கைப்பற்றி ஒன்றும் சொல்லவும் இல்லை. பகுத்தறிவுக்கு இது விரோதமாச்சே என்று அவர் அதனை அணிக்கவும் இல்லை.

- ஹிந்தி போராட்டத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றின் முடிவில், "மதுவைக் குடிக்கச் உதவியவர்கள், மொழியைப் படிக்க உதவ மறுத்ததேன்? மதுவை விட மொழி கொடியதா"" என்று வினவுகின்றார் ஜெபமணி.

- தியாகிகளுக்கும், இராணுவத்தினருக்கும் நிலமற்ற ஏழைகளுக்கும்தான் அரசு நிலங்கள் கொடுக்கப்படும். இதுதான் அரசின் கொள்கை. அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வருக்கு, சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள, பல இலட்சங்கள் பெறுமானமுள்ள, அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்தார். "என் சொத்து பூராவும் மக்களுக்குச் சொந்தம்" என்று சொல்லிக் கொள்ளும், இந்நாள் முதமைச்சர் தாம் இலவசமாகப் பெற்ற அரசு நிலத்தை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை" என்று சாடுகின்றார் ஜெபமணி. (அட்டைப் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் படமும் சேர்த்திருப்பதால், இது அவரைப் பற்றிய செய்தியாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.)

பெயர்: கண்டு கொள்ளுவோம் கழகங்களை
ஆசிரியர்: தியாகி நெல்லை ஜெபமணி
பதிப்பு: முத்துமாலையம்மன் பதிப்பகம், கிழக்கு அபிராமபுரம், சென்னை-4
பதிப்பசிரியர்: ஜெ.மோகன்ராஜ்
கிடைக்குமிடம்: அகடவிகட அக்கப்போர் அலுவலகம், தணிகாசலம் தெரு, ஹிந்தி பிரச்சார சபா எதிரில். தி.நகர், சென்னை-17
பக்கங்கள்: 254
விலை: Rs.100




திராவிட மாயை - ஒரு ஆய்வு

"திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் சுப்பு என்ற கேட்டபோது, கம்யூனிஸ்ட், காங்க்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளில் 'எம்.எல்.ஏ'வாக இருந்த சுப்புவோ என்றுதான் எண்ணியிருந்தேன். பிறகுதான் தெரிந்தது. இவர் வேறு ஒருவரென்று. 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்று தெரிந்தது. தமிழ் ஹிந்து இணைய இதழில், "போகப் போகத் தெரியும்" என்ற பெயரில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே "திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற இந்நூல்.

வலைப்பதிவர்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன் படிப்பவர்களை இழுக்கும் வண்ணம் பல கட்டுரைகளுக்குத் தலைப்புகள் வைத்திருக்கின்றார். உதாரணாமாக, "கால்டுவெல்லின் தாயாதிகள்", "புறநானூற்றுப் பூனைகள்" போன்றவை.

நெல்லை ஜெபமணியின் புத்தகத்தை போலவே, சுப்புவின் இந்தப் புத்தகத்தை படிக்கும்போதும் பல பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

- திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர், சர்.பி.டி.தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைக்க்கின்றார்.

- ஜெபமணி கூறியது போலவே, சுப்புவும், நீதிக்கட்சியின் த்லவர்கள் மாதச் சம்பளம் Rs.4333 (ஜெபமணி சொன்னதூ Rs.5333)) பெற்றது குறித்துச் சொல்லுகிறார். ஜெபமணி இந்த்தப் பணத்தில் மாதம் 395 சவரன்கள் வாங்க முடியும் என்று சொல்லும் போது, சுப்பு இந்தப் பணத்தில் எத்தனை இட்லிக்கள் வாங்காலாமென்று கேட்கின்றார். அந்தக் காலகட்டத்தில் ரூபாய்க்கு 64 இட்லிக்களாம்.

- குமு.அண்ணல் தங்கோ என்பவர் எழுதிய வரிகளை மேற்க்கோள் காட்டி, இது "காவிய தண்டனை" என்கின்றார் சுப்பு.

- "திரைப்படங்களில் பாரதி பாடல்களைத் தடை செய்த நீதிக் கட்சியினரின் அரசு, திரைப்படங்களில் வெளியிடப்பட்ட ஆபாசம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. நாராயணன் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கிய "லைலா எஸ்ரெல்ல நட்சத்திரம்" (1931) என்ற படத்தில் வந்த நடிகைகள் மறைக்க வேண்டியதெல்லாம் காட்டிவிட்டார்கள். கமலஹாசன் பொறாமைப்படும் அளவுக்கு முத்தக் காட்சிகளும் இருந்தன. அதாவது, கவர்ச்சிக்குத் தடையில்லை. கருத்துக்குத் தடையுண்டு என்பது அந்த அரசின் கொள்கையாக இருந்தது" என்கிறார்.

- "வாழ முடியாதாவர்கள்" என்ற தலைப்பில் வெளியான (ஆபாசம்)கதை குறித்து கண்ணதாசன் நொந்து போய்த் தன் கருத்துக்களைத் (வனவாசம்) தெரிவித்திருக்கின்றாராம்.

- திருப்பதி சென்று வந்ததற்காக சிவாஜி கணேசனைக் குறிவைத்து, அவரது போஸ்டரில் சாணி அடித்தும். அவரது கார் மீது கல்லெறிந்த்தும் அவமானப்படுதியவர்கள், "தனிப்பிறவி" என்ற திரைப்படத்தில் "முருகனாக" நடித்த எம்.ஜி.ஆர் மீது ஒரு முணுமுணூப்பும் தெரிவிக்கவில்லையாம்.

- திராவிடக் கட்சிகளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், அடிக்கடி கிறிஸ்தவ, முஸ்லீம் பிரச்சாகர்களைப்பற்றிக் கூற ஆரம்பித்து விடுவதேன் என்று புரியவில்லை. ஒருவேளை திராவிட இயக்கங்களின் ஒருதலைப்பட்சமான மத இணக்கத்தினை சுட்டிக் காட்டுவதற்கோ?

சுப்பு அவர்களின் கட்டுரைகளின் தலைப்புகள் புதுமையாக இருந்தாலூம் அத்தலைப்புகள் மூலம் சொல்ல வரும் சேதி என்னெவென்று புரியவில்லை. உதாரணமாக, "ஐய்யப்பமாரின் அதிர்வேட்டு", "எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏன் வரவில்லை", "எருமைத் தலையனுக்கு எக்ஸ்டிரா டைம்" போன்றவை. இவை ஒருவேளை வலையுலக மேதவிகளுக்குப் புரியுமோ என்னவோ, சாமானிய வாசகனுக்குக் கண்டிப்பாகப் புரியாது.   வலைப்பதிவுக் கட்டுரைகளைத் புத்தகமாக வெளியிடும்போது, அவற்றை அப்படியே பதிப்பிக்காமல். அதீத அக்கறை எடுத்து தொகுத்து வெளியிட வேண்டியது பதிப்பகத்தின் கடமை. அந்த வகையில், விறுவிறுப்பாக இல்லாமல் "என்ன சொல்ல வர்றே" என்று எண்ணும் வண்ணம், படிப்பவருக்குச் சோர்வை ஏற்படுத்துகின்றது இந்தத் தொகுப்பு.

பெயர்: திராவிட மாயை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125

திராவிட இயக்கங்களின் கொள்கைக் குழப்பங்கள் என்ற ஒரே விஷயத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம், இரு வேறு காலங்களைச் சேர்ந்த, இரு வேறு நபர்கள் எழுதும் போது அது எப்படி வேறுபடுகின்றது என்று அறிய ஒரே மூச்சில் இந்த இரண்டு புத்தகங்களையும் படித்து அறியலாம்.  இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுபவர்கள் கூட, எதிர்க் கருத்துக் கூறவேனும் இவற்றை ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

- சிமுலேஷன்

Saturday, February 12, 2011

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் – நூல் விமர்சனம்


இ.பா என்றழைக்கப்படும் இந்திரா பார்த்தசாரதியின் கதைகளில் ஒன்றான் “ஹெலிகாப்டர்கள் தரையில் இறங்கிவிட்டன” படித்த பின்பு, அதனைப் பர்றி ஒரு பதிவு இடவேண்டுமென்று எண்ணி இதுநாள் வரை அது நிறைவேறவில்லை. ஆனால் சமீபத்தில் படித்த “இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்” படித்தவுடன் அவை குறித்து உடனே பதிவு இடவேண்டுமென்ற வகையில் அவை சுவாராசியமானவை.

இவரது கட்டுரைகளில், சங்க இலக்கியம் மற்றும் தமிழரின் தற்கால வாழ்க்கை முறைகள் பற்றி அதிகம் பேசுகின்றார். அடுத்ததாக மார்க்ஸிசம் பற்றிப் பேசுகின்றார். கட்டுரைகளின் தலைப்புகள் அழகாகவும், அதில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு பொருத்தமாகவும் உள்ளன. இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டம் தொண்ணூறுகளின் இறுதியாக இருந்திருக்கலாம். புத்தகத்தின் முதற்ப் பதிப்பு 2000ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டு இருப்பதனால். எல்லாக் கட்டுரைகளிலும் தற்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த எரிச்சலைத் தெரிவித்தாலும், இ.பா போன்ற ஒரு சிலராவது இது போன்ற கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார்களே என்று மெத்த  மகிழ்ச்சி ஏற்படுகின்றது. 

“பாரத வர்ஷே; பரத கண்டே” என்ற இந்தக் கட்டுரையில் ‘தேசபக்தி’ என்ற சொல்லாடலே இந்தியாவில் இருந்ததில்லை என்றும் , அது ஒரு உருவாக்கப்பட்ட ‘சொல்லாடல்’ என்றும் குறிப்பிடுகின்றார். ‘தேசபக்தி’ என்று ஜல்லியடிப்பவர்களைப் பார்த்து இ.பா பெரிதும் கடுப்பானவர் போலத் தெரிகின்றது. தாய்நாடு, தாய்மொழி என்ற கருத்துக்கள் யாவும் மேல் நாட்டிலிருந்து இறக்குமதியானவை என்கிறார்.  ‘மாத்ருபூமி’ அல்லது ‘தாய்நாடு’ என்ற சொல்லாட்சி, மேல் நாட்டுப் பாதிப்புக்கு முன்னால் இந்தியாவில் வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை. தேசப்பற்று என்ற பிரக்ஞை அக்கால மக்களுக்கு அரசியல் அடிப்படையில் இல்லை என்றாலும், ‘ஊர்ப்பற்று’ இருந்திருக்கிறது. அதாவது ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவரோ அந்த ஊரின் பால் உணர்ச்சிகரமான ஈடுபாடு நம்நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றது, என்றும் சொல்லுகின்றார். அளவுக்கு மீறிய இந்த ‘ஊர்ப் பற்றை’ச் சாடுவதற்காகவே ‘கணியன் பூங்குன்றனார்’, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, என்று பாடினோரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. “தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கட்டுரையில் ஆரிய, திராவிடப் பிரச்னையைச் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எழுப்பிக் கொண்டிருப்பது, இ.பாவுக்கு ‘டான் குயோட்ட்டோ’வை (Don Quixote) நினவூட்டுகின்றதாம். கடந்து போன பொற்க்காலக் கதாநாயகனாகத் தன்னைப் பார்த்துக் கொண்டு, காற்றாலை இயந்திரங்களை எதிரிகளாக நினைத்து, அவற்றுடன் போரிடுவத்து டான் குயோட்டின் பொழுதுபோக்கு.  இந்தக் கட்டுரையில்  ‘மகாபலிபுரம், தஞ்சைப்பெரிய கோயில், தாராசுரம், சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம்” எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கின்றதே என்று அங்கலாய்க்கின்றார். ‘தரம் தாழ்ந்த திரைப்படம், அரசியல், வழிபாட்டுணர்வு’ ஆகிய மூன்றின் கலவையே தமிழர்களின் சமுதாய நெறிகளாக மாறிவிட்டது என்று சொல்லும்  இ.பாவின் குரல் எனக்கு ஜெயகாந்தனின் கருத்துக்களைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுகின்றது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற இந்தக் கட்டுரையில் பரத நாட்டியத்தையும், கர்நாடக இசையையும், ஓர் உயர்தர ரசனை நிலையிலிருந்து அனுபவிக்கும் தமிழ்ப் புரவல மேட்டுக் குடியினர் எத்தனை பேர் நடனத்துக்கும், இசைக்கும் அவர்கள் பயன்படுத்தும் அளவுகோல்களை வைத்துக் கொண்டு இக்காலத் தமிழிலக்கியம் படிக்கைன்றார்கள்?” என்பது போன்ற நமது பல ரசனைக் குறைபாடுகளை சுட்டிக் காட்டும் இ.பா, பிரச்னைக்குத் தீர்வும் நம் கையிலேதான் உள்ளது என்கிறார். “என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்” என்ற தலைப்பில் “பேசும் தமிழ் மொழிக்கும், எழுதும் மொழிக்கும் பெரிய இடைவெளி இருப்பதனால், செந்தமிழ், நவீனத் தமிழ் என்று இரண்டு வகைத் தமிழும் தேவை”, என்று வலியுறுத்துகின்றார். “என்று தணியும் இந்த அடிமையின் மோகம்” என்ற தலைப்பில் ‘நூற்றைம்பது ரூபாய் கொடுத்து ஆர்தர் ஹெய்லி வாங்குவோமே தவிர, முப்பது ரூபாய் கொடுத்து ஜெயகாந்தன் வாங்குவோமா?’ என்று வினவும், இ.பா, காலனி ஆதிக்கத்தின் எச்சமாகிய மொழி அடிமை உணர்வு நம்மைவிட்டு இன்னும் அகலவில்லை என்றும் கூறுகின்றார். அடுத்து வரும் “வேரில்லா அற்புதங்கள்” என்ற கட்டுரையில் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் மகள் கான்வெண்டிட்டில் படித்து வந்ததாகவும், அவள் ஒரு முறை எதிர்வீட்டுப் பஞ்சாபி பெண்ணுடன் சண்டை போடும்போது, அமெரிக்கன்  “ஸ்லாங் டிக்ஷனரி” கூட போடுவதற்குக் கூச்சப்படும், ‘பசுமையான சொற்களை’ப் பயன்படுத்தும்போது, திகைத்துப் போய் நிற்கின்றார்.  ‘வரலாற்றின் நகைச்சுவை என்ற கட்டுரை படிக்கும்போது பல புதிய தகவல்கள் தெரிகின்றன. அதாவது தொழில்கள் பரம்பரை வழியனவாக இருந்தனவாக ஆரம்ப ரிக் வேதத்தில் கூறப்படவில்லையாம். ஒரு ரிஷி தாம் கவிஞரென்றும், தம் தந்தை மருத்துவரென்றும், தாய்வழிப் பாட்டனார் ‘கல் உடைப்பவர்’ என்றும் கூறுகின்றாராம்.  வரலாற்று கதாநாயகர்களைப் பற்றி ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதியபோது, அவர்களின் பலங்களையும், பலகீனங்களையும் சொல்லியிருப்பது போல, நம்நாட்டு வரலாற்றுக் கதாநாயகர்களைப் பற்றி நம் கதாசிரியர்கள்  கூற முடியுமா? ராஜ ராஜன் காலத்தில் தேவதாசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? (எனக்குத் தெரியவில்லை). மாமன்னர் அக்பர் ஒரு சின்னப் பெட்டியில் விஷம் தோய்ந்த இனிப்புப் பண்டங்களையும், இன்னொரு பெட்டியில் நல்ல இனிப்புப் பண்டங்களையும் வைத்து, (வேலைக்காரர்களை?) பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்து உண்ணச் சொல்லுவாராம். அதிர்ஷ்டமிருந்தால் நல்ல பெட்டியிலிருந்த்து தேர்ந்தெடுப்பான். இல்லாவிட்டால் மரணம். இது அக்பருக்கு ஒரு விளையாட்டாம். ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்ற கட்டுரையில் பெண் விடுதையைப் பற்றிப் பேசும்போது, பாரதி கூட ‘பெட்டைப் புலம்பல்’ என்று அவரையறியாமல் கூருகின்றான் என்கிறார். பாரதிதாசன் காணும் பெண்ணோ, தமிழ் ஆண்கள் சுயநலத்தின் காரணமாக மத்தில் உருவகிக்கும் பெண்ணின் படிவம்தான். ஔவையாரைப் பற்றிக் கூறும்போது, முதுமையை வலிந்து ஏற்றுக் கொண்ட நிலையில்தான் ஆண்களாகிய அரசர்களுடன் தோழமை கொண்டாட முடிகிறதென்றும், அழகிய இளம் பெண்ணாகவே தொடர்ந்திருந்தால், ஏதாவ்து ஒர்ர் அரசரின் அந்தப்புரத்தை அலங்கரிக்க நேர்ந்திருக்கும். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் முதலிலும், முடிவிலும் தீர்மானமாக இ.பா சொல்வது, ‘பெண்களைக் கண்டு அஞ்சும் ஆண்கள் ஒன்று அவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள் அல்லது தெய்வமாக்க விரும்புகிறார்கள். ‘படமாடும் கோயில்களும் நடமாடும் நம்பர்களும்’  என்ற தலைப்பில்  கோயில்களின் தூய்மை பற்றியும், பொதுவாகவே இந்து ஆலயங்கள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் சொல்லுகின்றார்.

மேற்கண்ட கட்டுரைகள் போல இந்தப் புத்தகத்தில் பல்வேறு தைஅலூகளில் மொத்தம் 27 கட்டுரைகள் உள்ளன. அவற்றில் போஸ்டர் கலாசாரம், சாதிப் பாகுபாடுகள். சினிமாக் கவர்ச்சி, உள்வட்டக் கண்ணோட்டம் (Elitism), நாடகங்கள், கபிலரின் கவிதை, கண்ணகியின் கற்பு  போன்ற பல்வேறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றார்.

200 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பினை வாசித்த பின், பல புதிய விஷயங்களும் , பல புதிய  கண்ணோட்டங்களும் கிடைத்துள்ளன. இ.பாவின் மற்றைய ஆக்கங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுள்ளன இந்தக் கட்டுரைகள்.

பெயர்:       இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
பதிப்பு:      அருந்ததி நிலையம் – 2000
விலை:      Rs.55

-      - சிமுலேஷன்

Sunday, January 30, 2011

மானசரோவர் – அசோகமித்திரன் – நூல் விமர்சனம்



தமிழில் திரைப்படத்துறையைப் பின்னணியாகக் கொண்டு வந்த நாவல்களில் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" முதன்மையானது. அந்த அளவுக்கு திரைப்பட உலகின் விவரங்களை எடுத்துச் சொல்லாவிட்டாலும், இதே திரைப்படப் பின்னணியில் வந்த மற்றுமொரு நாவல்,

அசோகமித்திரனின் "மானசரோவர்". எண்பதுகளில் ‘சாவி’யில் தொடராக வெளி வந்ததாம் இது. திரையுலகின் கீழ் மட்டத்தில் இருக்கும் ஆனால் ஓரளவு செல்வாக்கு கொண்ட கோபால் என்ற ஸ்கிரிப்ட் ரைட்டருக்கும், சத்யன் குமார் என்ற புகழ் பெற்ற வடநாட்டு நடிகனுக்கும் உள்ள உறவு அல்லது நட்பு அல்லது தொடர்பு ஆகியவைதான் மானசரோவர் நாவலின் முக்கிய அம்சம். 'நத்தானியெல் வெஸ்ட்', 'டாக்டர் ஜிவாகோ' என்று படிக்கும் இருவரையும் அறிவுஜீவிகள் என்று சொல்லலாமாவென்று தெரியவில்லை. (சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் அருண் கோடர்ட் படிப்பது நினைவுக்கு வருகின்றது)


நாவலை எட்டுப் பாகங்களாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு பகுதியிலும் கோபாலும், சத்யன் குமாரும் மாறி, மாறி 'தன்மை' (1st person) நிலையிலிருந்து ‘கதைசொல்லி’களாக அமைத்திருப்பது சற்றே வித்தியாசமான பாணி. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சுமார் 25 பாத்திரங்களுக்கு மேலே வந்து போகின்றார்கள். ஆனாலும் அதில் முக்கியமானவர்கள், கோபால்ஜி என்றழைக்கபடும் கோபால், யூசுப் என்ற சத்யன் குமார், கோபாலின் மனைவி ஜம்பகம், புகையிலைச் சித்தர், ஜெயசந்திரிகா என்ற நடிகை, சியாமளா என்ற துணை நடிகை, கோபாலின் பெண் காமாட்சி, அவரின் பையன் ராஜா, ஆகியோர் மட்டுமே.

பிரிவினைக்கு முன் பெஷாவரிலிருந்து பம்பாய் வந்தவன் நடிகன் சத்யன் குமார். பெற்றோர்களையும் உறவினர்களையும் பிரிந்து வந்தவனுக்கு, பெற்றவர்களிடம் பாசம் காட்டியதேயில்லையே என்ற குற்ற உணர்வு எப்போதும் கொண்ட சத்யன் குமாருக்கு, போட்டிகள் நிறைந்த யதார்த்த உலகம் வெறுப்பளிக்கின்றது. அந்த சமயத்தில் கோபால் ஆதர்ச நண்பனாகத் தெரிகின்றான். மேலுன் தான் மதிக்கும் மெஹர் பாபா போலவும், கோபால் தோற்றமளிப்பதால் அவனை கோபால்ஜி என்றும் மரியாதையுடன் அழைக்கின்றான். கோபாலுக்கு ஒரு சமயம குடும்பத்தில் பெரிதும் இக்கட்டான தருணம் ஏற்படுகின்றது. அதனை இங்கே விரிவாக விவரித்தால் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும், எனபதனால் அவற்றை இங்கே தவிர்கின்றேன்.

கோபால் யாரும் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுகின்றான். அவன் வீட்டை தன்னந்தனியனாகக் காலி செய்யும் கட்டம்,பச்சாதாபத்தினை ஏற்படுத்தும் கட்டமாகும். புகழ்பெற்ற நடிகனுக்கே உண்டான பிஸி ஷெட்யூலிலும், கோபால்ஜியைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கின்றான் சத்யன் குமார். அவனக் கண்டுபிடிக்கவேண்டுமென்று மெனக்கெடுகின்றான். அது எதற்கு எனபதுதான் 'மானசரோவர்' என்ற தலைப்பை நியாயப்படுத்தும் விஷயமாகும்.

இந்த நாவலில் வரும் சத்யன் குமாரும், கோபால்ஜியும் 1ste personல் பேசிக்கொண்டேயிருப்பது என்னவோ, பாலகுமாரன் நாவல்களில் வரும் நாயகர்களைச் சித்திரிப்பது போலத் தோன்றுகின்றது. தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் போல அனாவசியக் காட்சிகளையும், பாத்திரங்களையும் (ஜவர்ஹர்லால் நேருவின் மரணம் இன்ன பிற) வலிந்து புகுத்தியிருப்பது போல எனக்கு முதலில் தோன்றியது. குறிப்பாக எனக்கு இந்த சித்தர் முதலான பாத்திரங்கள் வேறு எரிச்சலைத் தந்தன. அதுவும் சித்தர்கள் என்றாலே, புகையிலை, கஞ்சா, அபினி கேஸ் போலவும், ஆனால் அவர்களுக்கு மட்டும் உலகில் நடக்கும் சூழ்ச்சுமங்கள் எல்லாம் ஞானக்கண்ணால் தெரியும் என்று பில்டப் கொடுப்பதும். ஆனால் வாசகர்களுக்கு கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் யதார்த்தமாகக் காண்பிக்க வேண்டுமென்றால் இவையனைத்தும் அவசியமென்று அசோகமித்திரன் நினைத்திருக்கக்கூடும்.

சிறந்த படைப்பினை வாசித்தாலோ, கேட்டோலோ, பார்த்தாலோ அது வாசகர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணி, அவர்களை ஒரிரு நாடகளாகவாவது தூங்க விடாமல் செய்ய வேண்டும். அந்த பாத்திரங்களை வாசகர்கள் வெகு காலத்திற்கு மறக்கக் கூடாது. அந்த வகையில் ‘மானசரோவர்’ படித்து முடித்த வாசகர்களை, வெகு காலம் வரை கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் மறக்க முடியாமல் செய்ததில் அசோகமித்திரன் வெற்றி பெற்றே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஜம்பகம், சியாமளா முதலானோர், ‘நல்லவர்களா? கெட்டவர்களா?’ என்ற கேள்விக்கும் விடை கிடைக்காது என்ற காரணத்தால் அவர்களையும் கட்டாயம் மறக்க மாட்டார்கள்.

புத்தகம்: மானசரோவர்
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பதிப்பாண்டு: 2006 (முந்தயவை 1989, 1999)
பக்கங்கள்: 208
விலை: Rs. 90

- சிமுலேஷன்