Thursday, December 07, 2006

தமிழிசை - ஒரு மீள் பதிவு

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அருமையான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.
பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது

இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸுஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும். தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:

பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும். ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும். புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.
மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:

நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.
பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.


பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

- சிமுலேஷன்

Saturday, December 02, 2006

புகைப்படப் புதிர்-05 - Ad Club-Business Line Quiz 2006

இன்று (02.12.2006) சென்னை சவேரா ஹோட்டலில், அட்-கிளப்பும், பிஸினஸ் லைன் வர்த்தக இதழும் சேர்ந்து , தங்களது வருடாந்திர 'அட்-கிளப்-பிஸினஸ் லைன் குவிஸ்', நிகழ்ச்சியினை நடத்தின.

அதிலிருந்து சில கேள்விகள். விடை தெரிந்தால் சொல்லுங்கள்.


01. இந்தப் பிரபலம் யார்? அவர் விளம்பரம் தருவது எதற்காக?



02. இந்த ராஜா, எந்த நிறுவனத்தின் (mascot) சின்னம்?


03. இந்த சின்னம் எந்த நிறுவனத்திற்குரியது?



04. இந்தப் பானம் எங்கு, எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது?



05. இந்த நிறுவந்த்தின் பெயரிலுள்ள TEN என்ற வார்த்தை எவற்றைக் குறிக்கின்றது?





மேலும் பல புதிய கேள்விகள் அடுத்த பதிவில்.

- சிமுலேஷன்

Wednesday, November 29, 2006

புகைப்படப் புதிர்-04


இவர்தான் அவர்!










Monday, November 20, 2006

2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்

2007ஆம் வருடம் சென்னையில் இடைத்தேர்தல் ஒன்று வருகின்றது. வழக்கமாகவே, இடைத்தேர்தலுக்குண்டான பரபரப்பில் மத்திய, மாநிலக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கின்றன. வலைபதிவர்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக, இடைத் தேர்தலில் நிற்க சென்னை வலைப்பதிவர்கள் சங்கமும் தீர்மானம் செய்து, உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மனுச் செய்வதற்கும் அன்றே கடைசி நாள்.

பாலபாரதி: இன்றைக்கு நாம ஒரு முக்கியமான வட்டத்தை அடைந்திருக்கின்றோம். அடுத்தபடியாக என்ன வட்டத்துக்குச் செல்வதுன்னு முடிவு பண்ணவேண்டிய நேரமிது. நான் சும்மா ஒரு மணி நேரம் மட்டும் பேசி, விவாதத்தை துவக்கி வைக்கிறேன். அதுக்கப்புறம், எல்லோரும் ஆளுக்கு ஒரு அம்பது முதல் அறுவது வினாடிகள் வரைக்கும் தாராளமாகப் பேசலாம்.

பொன்ஸ்: என்ன வட்டம்? என்ன சொல்றாரு தலைவர்?

வரவணையான்: அதுவா.. ஒண்ணுமில்லை. "முக்கியமான கட்டத்தை அடைஞ்சிருக்கோம்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?", அப்படின்னு சொல்லிச் சொல்லிப் போரடிச்சுருச்சாம். சரி. சரி சொந்தச் செலவில் சூனியம வச்சுக்க அடுத்த ஆளைக் கூப்பிடுங்கப்பா.

மா.சிவக்குமார்: நாங்க இந்தக் கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு ஒரு சோதனை வைச்சிருந்தோம். கூட்டம் நடக்கற இந்த ஹாலுக்கு வர்ற வழியிலே கொஞ்சம் 'சாணம்' எல்லாம் போட்டு வச்சிருந்தோம். அதை மிதிச்ச சில அப்பாவி கிராமத்து வலைபதிவர்கள், ஒண்ணுமே பண்ணாம ஒழுங்கு மரியாதையா வந்துட்டாங்க. ஆனா, ஒரு சில படிச்ச பட்டணத்து வலைபதிவர்கள் மட்டும், செருப்பை, தண்ணிய ஊத்திக் கழுவிட்டு வத்திருக்காங்க. இந்த மாதிரி ஆட்களாலதான், சுற்றுப் புறச் சூழலும் கெட்டு, நாடும் கெட்டுப் போகுது. அதனால அவங்க இந்தத் தேர்தல்ல நின்னா யாரும் ஆதரிக்கக் கூடாது.

டோண்டு இராகவன்: அது சரி. தேர்தல் விண்ணப்பப் படிவத்தை யாராவது பார்த்தீங்களா? ஒரு சினிமாபட விளம்பரத்தோட நோட்டீஸ் பின்னாலையா, இந்த மாதிரி விண்ணப்பம் அச்சடிப்பாங்க? சினிமா படத்தோடப் பேரைப் பாருங்க. "அண்ணா நீ என் தெய்வம்". வேகமாச் சொல்லிப் பாருங்க. அனானின்னு வரும். அதைக் கூடப் பொருத்துக்கலாம். ஆனா, வேட்பாளர்கள் விவரம் கேட்கற இடத்திலே, வேட்பாளரின் வேலை= Government, Private, Others அப்படீன்னு போட்டிருக்கு. இதில Othersனு ஒரு option இருக்கே; ரொம்ப ரொம்ப ஆபத்தானது. அத முதல்ல தூக்கச் சொல்லணும்.

பால பாரதி: முதல்ல தேர்தல் அறிக்கை தயார் செய்யணும். அந்த அறிக்கையிலே என்ன ஃபான்ட் உபயோகப்படுத்தணும், எவ்வளவு மார்ஜின் விடணும், என்ன கலர் அப்படீங்கறதையெல்லாம் இப்பவே முடிவு பண்ணிடனும். ஆனா, மொத்தத்திலே நம்ம அறிக்கை மட்டும் வித்தியாசமா இருக்கணும்.

விக்கி என்கிற விக்னேஷ் தலமையில், "சென்னை வலைப்பதிவர் தேர்தல் அறிக்கை அழகுபடுத்தும் ஆயத்தக் குழு", அந்த நிமிடமே பொறுப்பேற்று கொள்கின்றது.

இராமகி: என்னப்பா, அறிக்கைக்காக குழு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டீங்க. ஆனா, அதுல சொல்ல வேண்டிய விஷயம் என்னென்னன்னு யோசிச்சீங்களா? ஆளுக்கு ஒரு நல்ல கருத்தாச் சொல்லுங்க.

ரோசா வசந்த்: நான் முதல்ல தேர்தலே வேணுமான்னு கேக்கறேன்.

லக்கிலுக்: வலைப்பதுவு சுனாமியார் பாசறை சார்பாக நாலு சீட்டு கொடுத்திடுங்க. இல்லாட்டி, கொலசாமிக் குத்தத்துக்கு ஆளாயிடுவீங்களோன்னு அச்சப்படறேன்.

டி.பி.ஆர்.ஜோசஃப்: டில்லி, மும்பை, கொல்கத்தா, இங்கெல்லாம், வலைப்பதிவர்கள் தேர்தல்லே மாநகராட்சியயே கைப்பற்றியிருக்காங்க. நாமளும் உடனடியாகப் பெரிய அளவில் சிந்திச்சு, சமுதாயத்துக்கு பயனளிக்கும்படியாக பாராளு மன்றத்துக்குக் குறி வைக்கணும்.

மா.சிவக்குமார்: தேர்தல்னாலே சத்துணவுத் திட்டம்தான் எல்லோரும் கை வைக்கிற இடம். நாம ஜெயிச்சா, சத்துணவுத் திட்டத்திலே ஓட்ஸ்/உளுத்தங் கஞ்சி அப்புறம் வேகவைத்த மணிலாக் கொட்டை, ஆட்டுப்பால் தருவோம் அப்படீன்னு சொன்னா எப்படி இருக்கும்? அப்புறம் இராணிப் பேட்டைதொகுதியிலிருந்து மொதல்ல பிரச்சாரத்தை ஆரம்பிக்கணும்.

மரபூர்: 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. அதனால, கோவில் நிவாரணப் பணியிலே ஒரு நாள் கலந்துக்கிட்டாக் கூட, வாழ்நாள் பூரா, தினமும் பிரசாதம் அப்படீன்னு நம்ம அறிக்கையிலே சொல்லலாமா?

பால பாரதி: இல்லை. இல்லை. அதெல்லாம், தவறான கருத்துக்களை ஆவணப்படுத்துவதற்கு ஒரு முன்னுதாரணமாப் போய் விடும். இப்படித்தான், ஒருத்தர், கோயில்களில், கற்பூரம் ஏத்துவது, இந்துமத நம்பிக்கை அப்படின்னு எழுதி வச்சுட்டுப் போய்ட்டார். இதைப் படிக்கிற அடுத்த தலை முறை, அதை அப்படியே நம்பினா என்ன ஆகும்?

ஓகை: இந்த இடத்திலதான், நான் ஒரு மாற்றுக் கருத்துப் பதிய விரும்புறேன்.

சிமுலேஷன்: எதுக்கு நாம தேர்தல்ல எல்லாம் போட்டி போடணும்? அப்புறம் ஜெயிச்சுட்டா தேர்தல் அறிக்கையெல்லாம் நிறைவேத்தி வைக்கணும்.....சரி. இல்லாட்டி இன்னொரு ஐடியா. தேர்தல் அறிக்கை அப்படீன்னு சொல்லிட்டு, சும்மா ப்ளாங் பேப்பரை கொடுத்திடலாமே. யாராவது கேட்டாக் கூட, இது ப்ளாங்க் பேப்பர் இல்லை. ப்ளாக் பேப்பர் அப்படீன்னு டக்குனு சொல்லிடலாம். ஜெயிச்சாலும் நிறைவேத்தணும்னு ஒரு கட்டாயமுமில்லே.

சிவஞானம்ஜி: இவ்வளவு கஷ்டப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கறதுக்கு, பேசாம, வேற எந்தக் கட்சி அறிக்கையிலாவது, நாம, 'பின்னூட்ட அறிக்கை' அப்படீன்னு சிம்பிளா கொடுத்துட்டுப் போயிடலாம்.

கூட்டத்தில் இடையே இடைவேளை விடப்படுகின்றது. புதியதாக ஒருவர் வந்து, 'நான் வலப்பதிவர் இல்லை; ஆனால் தீவிர வாசகர்.உங்களுக்கெல்லாம் சாப்பிட ஏதாவது ஸ்பான்ஸர் செய்ய விரும்பறேன்", என்று சொல்லி எல்லோருக்கும் சுடச் சுட இட்லி, வடை வழங்குகின்றார். வலைப்பதிவர் சந்த்திப்பில் போண்டா சாப்பிட்டிருக்கோம், மசால் வடை சாப்பிட்டிருகுக்கோம், பிஸ்கெட் சாப்பிட்டிருக்கோம். இப்படியெல்லாம், சுடச் சுட இட்லி, வடையெல்லாம் கொடுத்து அசத்தறாங்களே; ஸ்பான்ஸர்ஸ் வாழ்க", என்று சொல்லிக் கொண்டே எல்லோரும், இரசித்துச் சாப்பிடுகிறார்கள்.

அரைமணி நேரத்தில், தமிழ் மணத்தில் செய்திகளை முந்தித் தரும் இட்லி வடையின் ஒரு புதிய பதிவு வெளியாகின்றது.

"சென்னை வலைப்பதிவர்கள் இடைத்தேர்தலில் கலந்து கொள்ள முடியாத பரிதாபம். மயக்க மருந்து கலந்த இட்லி, வடை சாப்பிட்டதால், தேர்தலில் மனுச் செய்யும் நேரத்தைக் கோட்டை விட்டனர்."

டிஸ்கி: மக்களே, "தமிழ் வலைபதிவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்பக் கம்மி" என்று, ஒரு சிலர் கூறித் திரிகின்றார்கள். அதனைப் பொய்யாக்குவதும், மெய்யாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது.

- சிமுலேஷன்

Monday, October 09, 2006

குழந்தைத் தொழிலாளர்களும் அக்டோபர் 10ம்



குழந்தைகளை தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் தொழிலாளர்களாகப் பணிபுரிய வைப்பதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் இருந்த போதிலும், இந்த வழக்கம் காலம் காலமாய் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால், இம்முறை மத்திய மாநில அரசுகள், குழந்தைத் தொழிலாளர் முறையினைத் தொடர, அக்டோவர் 10ஆம் தேதியினைக் 'கெடு' தேதியாக அறிவித்துள்ளது. இந்த தேதிக்குப் பின்னால், விதியினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக வீட்டு வேலைகளிலும், உணவு விடுதிகளிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தகளைப் பணியிலமர்த்த முடியாது. இப்போது பணியிலிருக்கும் குழந்தைகளின் வாழக்கைக்கு, மாற்று வழி நடைமுறையில் எப்படி இருக்குமென்பது போகப் போகத்தான் தெரியும். உணமையிலேயெ இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்ப்ட்டால், சம்பதப்ப்ட்டட்வர்கள் பாராட்டுதல்களுக்குறியவர்கள்தான்.
























இந்தப் படங்களில் இருப்பவற்றையெல்லாம்விட மிகக் கொடுமை என்ன தெரியுமா? உங்கள் வீட்டுக்குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள, ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவதுதான்.

ஆமாம். கடைசியாக உள்ள அந்த வண்ணக் காத்தாடி எதனைக் குறிகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?

- சிமுலேஷன்

Wednesday, October 04, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. மாயாமாளவ கௌளை இராகத்திலுள்ள ஸ்வரங்களில் ஒரே ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ஸ்வரங்கள் இல்லாமலிருப்பதனால், இந்த இராகத்தினை எவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கமகம் ஏதுமின்றி, ஆரோகண, அவரோகங்களைப் பாடினாலே, இராகத்தின் சாயல் வெளிப்படும். அதனாலேயே சங்கீதப் பிதாமகர் எனப்படும், ஸ்ரீ புரந்தர தாசர் இந்த எளிய இராகத்தில், ஆரம்பப் பாடங்களான சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம் ஆகியவற்றை முதன் முதலாக அமைத்தார்.

உண்மையிலேயே மாளவ கௌளை எனப்படும், இந்த இராகத்திற்கு, 'மாயா' என்ற ப்ரி·பிக்ஸ் சேர்க்கப்பட்டது, மேளகர்த்தா இராகப் பட்டியலில், வரிசை எண் கண்டுபிடிக்கப் பயன்படும் 'கடபயாதி' சூத்திரத்திற்காகத்தான். அப்படியானால் இது ஒரு மேளகர்த்தா இராகம் என்று இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்கள்.

பரஸ், நாதநாமக்ரியா என்ற இராகங்கள் மாயாமாளவ கௌளையின் ஒன்றுவிட்ட சகோதரிகள்தான். இந்த முக்கிய இராகத்திலிருந்து கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட ஜன்ய இராகங்கள் பிறந்திருப்பதாக அறிகின்றோம். அவற்றில் சில, கௌளை, மலஹரி, பௌளி, லலிதா, வசந்தா, பிந்து மாலினி, ஜகன் மோகினி, சாவேரி ஆகியவையாகும். ஹிந்துஸ்தானியில் 'பைரவ்' எனப்படும் இராகம்கூட மாயாமாளவ கௌளையினை ஒத்ததாகும்.

திருத்தணி முருகன் அருள் பெற்று, முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய, 'ஸ்ரீநாதாதி குருகுஹோ' என்ற கீர்த்தனை, மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு நல்ல பாடலாகும். மேலும், தியாகையரின், 'மேரு ஸமான', 'துளசி தள' மற்றும் ஸ்வாதி திருநாளின் 'தேவ தேவ கலயாமிதே' ஆகியவையும் மிகவும் புகழ் பெற்ற பாடல்களாகும்.

இளையராஜா அவர்கள் பல பாடல்களில் இந்த இராகத்தினைப் பயன்படுத்தியுள்ளார். அது சோக ரசமாகட்டும், அல்லது மகிழ்ச்சியான தருணமாகட்டும். 'மஞ்சள் நிலாவுக்கு இன்று முதலிரவு', 'அந்திவரும் நேரம்'. 'மதுர மரிக்கொழுந்து வாசம்', 'பூவ எடுத்து ஒரு மால' என்று தொடரும் இந்தப் பட்டியல், இதற்கு எடுத்துக்காட்டாகும். 'மஞ்சள் நிலாவுக்கு' என்ற இந்தப் பாடலின் பின்னணி இசையில் வரும் புகைவண்டியின் ஓசை, மிகவும் இயற்கையாக இழைந்து வரும். 'சிவசம்போ' என்று இளமை ததும்பப் பாடிய எம்.எஸ்.வி அவர்களுக்கு 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு மாணிக்கமாகும். முகாரி இராகம் என்று பாடலில் வந்தாலும், டி.ஆரின் 'கடவுள் வாழும் கோவிலிலே' என்ற பாடலும் மாயாமாளவ கௌளைக்கு சிறந்த உதாரணமாகும்.

இராகம்: மாயாமாளவ கௌளை
15ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. அலைமகள் மலைமகள் - நவராத்திரி*
02. அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா
03. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு*
04. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - தீபம்*
05. ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
06. அரும்பு அரும்பா சரம் தொடுத்து - சின்னத் தாயி
07. அழகான பொண்ணு நான் - அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
08. சின்னச் குயிலே குயிலே - மனசெல்லாம்
09. என் இதயம் இதயம் நீயே நீயே ராசாத்தி - இளையவன்
10. என் தாயெனும் கோயிலில் - அரண்மணைக் கிளி
11. எனக்கென யாரிங்கே - இவன்
12. எங்கே நான் காண்பேன் - சாதனை
13. என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட - சக்களத்தி*
14. கோவிந்தா வரதா ஸ்ரீஹரி கோபாலா - துக்காராம்
15. இதோ இதோ என் நெஞ்சிலே - வட்டத்துக்குள் சதுரம்*
16. இளம் காதல் வீணை - வெள்ளைப் புறா ஒன்று
17. இள மனதினில் - மஞ்சள் நிலா
18. கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம்*
19. காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே
20. காதல் மகராணி - காதல் பரிசு
21. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலய மணி*
22. கண் பாரும் தேவி - கொக்கரக்கோ
23. கனவா இது உண்மையா - அறுவடை நாள்
24. கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும்
25. காட்டுக் குயிலே - இதயத்தைத் திருடாதே
26. கொட்டு களி கொட்டு - சின்னவர்
27. குயிலப் புடிச்சி கூண்டிலடிச்சி - சின்னத் தம்பி*
28. மச்சி மன்னாரு - என்னுயிர்த் தோழன்
29. மதுர மரிக் கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்*
30. மனதில் உறுதி வேண்டும் - மனதில் உறுதி வேண்டும்
31. மானின் இரு கண்கள் கொண்ட - மாப்பிள்ளை
32. மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு*
33. மாரியம்மா மாரியம்மா - கரகாட்டக்காரன்
34. மாசறு பொன்னே வருக - தேவர் மகன்
35. மூக்குத்திப் பூ மேலே காத்து - மௌன கீதங்கள்*
36. நண்டூருது நரியூருது - பைரவி*
37. நன்றி சொல்லவே எனக்கு - உடன் பிறப்பு
38. நீ நினைத்த நேரமெல்லாம் - பெண்ணை நம்புங்கள்
39. நீயே கதியம்மா - சின்ன துரை
40. நிலவே நீயொரு சேதி சொல்லாயோ - பட்டினத்தார்
41. நீயான தங்கமே - ராஜ கோபுரம்
42. ஓணபுத்தட்டு புல்லாக்கு வாங்கித் தாரேன் - சின்ன ஜமீன்
43. பூப்போலே ஒன் புன்னகையில் - கவரி மான்*
44. பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழககாலே*
45. ராம நாமன் ஒரு வேதமே - ஸ்ரீ ராகவெந்திரர்*
46. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்
47. ராசாத்தி ராசாத்தி - கண்ணா உன்னைத் தேடுகிறேன்
48. சாமிகளே சாமிகளே சொந்தக் கதை - என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்
49. சரிகமபதனி என்னும் - ராக பந்தங்கள்
50. சிவ சம்போ - நினைத்தாலே இனிக்கும்
51. சிவகாமி நினைப்பினிலே - கிளி பேச்சு கேட்கவா
52. சொல்லடி அபிராமி - ஆதி பராசக்தி
53. சொல்லால் அடித்த சுந்தரி - சின்னக் கவுண்டர்
54. சொர்க்கத்தில் நிக்க நிக்க - ராஜஸ்தான்
55. தாயுண்டு தந்தையுண்டு - கோவில் காளை
56. தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் - முடிவல்ல ஆரம்பம்*
57. துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்
58. உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி - பணக்காரன்
59. உன் எண்ணம் எங்கே எங்கே - தம்பி பொண்டாட்டி
60. உயிரே உயிரே உருகுதே - ஒருவர் வாழும் ஆலயம்
61. வானம் இடி இடிக்க - உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
62. வத்திக் குச்சி பத்திகாதுடா - தீனா
63. வயசு வந்த வாலிபனுக்கு - என் மன வானில்
64. விழிகளில் கோடி அபிநயம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

வழக்கம் போல, நட்சத்திரக் குறியிட்ட பாடல்களைப் பதிவு செய்து கேட்டு வருகிறீர்களென்று நம்புகின்றேன். இப்போது இந்தப் பதிவுக்குண்டான கேள்வி.

"கௌளை" என்று முடியும் இராகங்களின் (குறைந்தபட்சம் நான்கு) பெயர்களைக் கூறவும்.

- சிமுலேஷன்

Sunday, September 24, 2006

புகைப்படப் புதிர்-03


01. ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் தனது பாடல்களில், இரண்டு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை என்னென்ன? (லல்லுவின் சினனமொன்று உண்டிங்கு)


02. இந்தக் கலைஞர் யார்? இவரது சகோதரரும் ஒரு புகழ் பெற்ற பல்கலை வித்த்கர்? இவர் பெயர் தெரியாதென்றால், இவர் சகோதரர் பெயராவது என்ன?
(இசைக் கலைஞனுக்கு ஏனோ திரையில் பாடல்கள் என்றால் அலர்ஜி)

03. இந்தப் புகழ் பெற்ற பாடகர் யார்? கச்சேரிகள் பல செய்திருந்தாலும், திரைப்படத்தின் மூலமே பெரிதும் புகழ் பெற்றார்? (மதுரை முதல் மருத வரை)


04. இவர்களுக்குள் என்ன சம்பந்தம்? (கூவி அழைத்தால் குரல் கொடுப்பாள்)


05. இந்தப் பிரபலம் யார்? (காதறந்த ஊசியும் வாராது கடைவழி காண்)

Saturday, September 23, 2006

புகைப்படப் புதிர்-02

அடுத்த புகைப்படப் புதிருக்குத் த்யாராக இருப்பீர்களென்று நினைக்கின்றேன்.

01. ஒரு பிரபலத்தை மணந்த இந்தப் பிரபலம் யார்?



02. கருப்புக் கண்ணாடி சகிதம் கலக்கும் இவர் யார்?


03. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் இடையில் நிற்பவர் யார்? அவ்ருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?



04.இந்த இரண்டு பிரபல்ங்களுக்ளிடையே இருந்த உறவு முறை என்ன?

05. ஆல்த்தூர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களின் பெயர் தெரியுமா? பெயர் தெரியாதென்றால் இவர்களில் அண்ணா யார்? தம்பி யார்? (வலதா? இடதா?

Friday, September 22, 2006

புகைப்படப் புதிர்-01

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.


01. இந்தப் பிரபலங்கள் யார் யார்?

02. யாருடைய சிலை இது? எங்குள்ளது?

03. இவர் யார்? என்ன செய்துகொண்டிருக்கின்றார்


04. இந்த நாதசுரக் கலைஞர் யார்?


05. பசுப் பையன் போலத் தோற்றமளிக்கும் இந்தக் கலைஞர் யார்?

Sunday, September 17, 2006

போண்டா வடை போயாச்சு

நேற்றைய தினம் பூர்ணம் விசுவநாதன் நாடகக் குழுவில் பணியாற்றும், மெலட்டூர் நடராஜன் என்ற நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மயிலையில் படைப்பாளிகளின் ஒர் சந்திப்புக்குச் செல்வதாகக் கூறியவர், என்னையும் வரச் சொன்னார். அப்புசாமி, சீதப்பாட்டி புகழ் பாக்கியம் ராமஸ்வாமி அவர்கள் மயிலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஒவ்வொரு மாத்ம் மூன்றாம் சனிக்கிழமையன்று ஒத்த கருத்துடைய படைப்பாளிகளின் கூட்டத்துக்கு ஏர்பாடு செய்து வருகின்றார்.

இந்தக் கூட்டத்தில் கிழக்குப் பதிப்பக பத்ரி த்ங்களது அப்புசாமி படைப்புகளை பற்றிப் பேசினார். இந்தச் சந்திப்பில் மற்ற பிரபலங்கள் சிலரையும் நான் சந்த்திது உரையாட முடிந்த்தது. முதலில் ராணி மைந்தன். இவர் பலருடைய வரலாற்றுச் சரிதைகளைப் புத்தகமாக எழுதியுள்ளவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றிய ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளார். பிறகு, கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன். சமீபத்தில் 1981ல் கல்கி மற்றும் தினமணிக்கதிரில் வரும் இவரது கேள்வி-பதில் பகுதிக்கு கேள்விகள் கேட்டு வருவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு, தேவன் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் தேவன் நினைவுப் பதக்கம் வென்றவரில் இவரும் ஒருவர். (மற்றவர் துக்ளக் சத்யா.) அடுத்தபடியாக வாதூலன் என்ற் பெயரில் எழுதி வந்த லக்ஷ்மணன். இவர் 'பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதியுள்ளார்.

வெளிநாட்டுத் தோழர்களே. உங்கள் மனம் குளிர ஒரு விஷயம் கிட்டத்தட்ட ஒரு தொண்ணூறு நிமிடங்கள நல்ல பொழுதாகப் போன இந்தச் சந்திப்பில் போண்டாவோ, வடையோ கொடுக்கப்படவில்லை. கேக்தான் தரப்பட்டது

Friday, September 15, 2006

ராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்

இசைக் கச்சேரியில் எல்லாத் தகவலும் தருவது எப்படி? ஒரு யோசனை.

சிந்தனை-- சிமுலேஷன்

சில சபாக்களில், இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது என்ன பாடல் என்றும், யாரது பாடல் என்றும், முக்கியமாக என்ன ராகம் என்றும் 'பிட்" நோட்டீஸ் போட்டு எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறார்கள். சில பாடகர்களும், இந்தக் காலத்தில் தாம் பாடும் பாடல் பற்றிய விபரங்கள மைக்கில் அறிவிக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது பெரும்பாலான இரசிகர்களுக்ககுப் பிடித்திருக்கிறது. ஆனால், சில பாடகர்கள் இவ்வாறு அறிவிப்பு செய்வது, பாடல் பாடி வரும் ஓட்டத்திற்குத் (flow) தடையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் சில இரசிகர்களுக்கு, பாடலின் இராகத்தைக் தாங்களே கண்டுபிடிப்பது ஒரு விதமான இரசனை என்றும் சரியான இராகத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தங்களைத் தாங்களே முதுகில் ஷொட்டுக் கொடுத்துக் கொள்வது போலவும் ஒரு எண்ணம். இந்த மாதிரி இரசிகர்கள், பாடகர் பாடும் முன்பே, எல்லா விபரங்களையும் போட்டு உடைப்பது, சஸ்பென்ஸை உடைத்து 'சப்'பென்றாக்கும் ஒரு செயல் என்றே எண்ணுகிறார்கள்.

இந்த மாதிரி, இரண்டு விதமான இரசிகர்களையும் திருப்தி செய்யும் வண்ணம், எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த யோசனையை, கடந்த வருடம் 'முத்ரா" பயிற்சிப் பட்டறையில் தெரிவித்திருந்தேன். அவர்களது 'ஸாமுத்ரா" பத்திரிகையிலும், இது பிரசுரமானது. சில சபாக்களுக்கும் இந்த யோசனையைச் சொன்னேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மட்டும், "இது எங்களுக்கு அதிகப் பளுவைக் கொடுக்கும்; அதனால் ஒத்து வராது!" என்றும் தெரிவித்திருந்தனர். மற்றவர்களிடமிருந்து பதிலொன்றுமில்லை.

அது என்ன அப்பேர்ப்பட்ட யோசனை என்று கேட்கிறீர்களா? அது இதுதான். அதாவது இரசிகர்களுக்கு பாடல் என்ன, இராகம் என்ன, இயற்றியவர் யார் என்பது போன்ற விபரங்கள் தரப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் எல்லாவற்றையும் இரசிக்க முடியும். அதே நேரத்தில், சற்றே விபரம் தெரிந்த இரசிகர்களின் ஆர்வத்தையும் குலைக்கக் கூடாது. பாடகரின் ஓட்டத்தையும் தடுக்கக் கூடாது. நான் கூறும் யோசனை என்னவென்றால், இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையின் ஒர் மூலையில் டிஜிட்டல் கடிகாரம் ஒன்று இருக்குமே, அது மாதிரியான் இடத்தில் ஓர் டிஜிட்டல் டிஸ்பிளே போர்ட் (Digital Display Board) ஒன்று வைக்க வேண்டும். பாடகர் பாடலைத் துவக்கிய ஓரிரு நிமிடங்கள் கழித்து, இந்த போர்டில், என்ன பாடல், என்ன இராகம், என்ன தாளம், யாரது பாடல், போன்ற விபரங்கள் scrolling முறையில் வர வேண்டும். இவை வெளிவருவதற்கு முன்னரே, இசையார்வலர்கள், இந்த விவரங்களைத் தாங்களே கண்டு பிடித்துக் கொள்வதென்றால் அதனைச் செய்து கொள்ளலாம். பாடகர், இந்த விபரங்களை முதலிலேயே, Digital Display Boardஐ இயக்குபரிடம் கொடுத்து விடுவதால் அவரது ஒட்டம் எக்காரணம் கொண்டும் தடை பெறாது.

மேலும், இந்த போர்டில், மேற்கண்ட விபரங்கள் தவிர, பாடல் குறித்த சுவையான பல விபரங்களையும் கொடுக்கலாம். உதாரணமாக, தியாகய்யரின் 'சக்கனி ராஜ" பாடல் பாடப்படும்போது, அவர் வாழ்வில் அந்தப் பாடல் பாடக் காரணமாக இருந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். (சன் டிவியில் "ஒளியும் ஒலியும்" போன்றதொரு நிகழ்ச்சியில் "இந்தப் பாடல் படம் பிடிக்க ஒரு கோடி செலவாயிற்றாம்... இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் காலை ஒடித்துக் கொண்டார்..." என்றெல்லாம் 'விக்கி' என்றொரு கேரக்டர், ஸ்க்ரோலிங் முறையிலே வந்து சொல்லுமே, அதைப் போலவே, இந்த யோசனை)

சிறிது செலவானாலும், இரசிகர்களை இந்த யோசனை கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. முதலில் செயல்படுத்தும் அமைப்புகள் தகவல் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

====

சிரிப்புவெடிகள்-- என். சுவாமிநாதன்

"போடறதுதான் போடறான், கிரிக்கெட் ஸ்கோர் போட்டா என்னா?"

"ந்யூஸ் ஹெட்லைன் போட்டா நல்லா இருக்கும்.."

"செல்வி தொடர்ல இன்னிக்கு என்னாச்சுனு ஒரு வரி போட்டா செளகரியமா இருக்கும்.."
=========
"என்னடா வரிசையா நாலஞ்சு ராகம் போட்டிருக்கானே.."

"அது ராகமாலிகையாம்"
=========
"என்ன வயலின்காரர் கீழ இறங்கி போர்டைப் பார்க்கிறாரே"

"பக்க வாத்தியம் புதிசு.. ஆலாபனையில் ராகம் என்னனு பிடிபடலையாம்.. படிச்சுத் தெரிஞ்சிக்கலாமேன்னுதான்..."
=========
என்ன அடிக்கடி பைரவி பைரவினு வருது? பாடகர் பைரவி பாடலியே.."

"ரவி சார் போர்டு செலவை ஸ்பான்சர் செஞ்சிருக்காராம்.. போர்டு உபயம்பை ரவி"னு காட்டறாங்க"
=========
"ஹரிகாம்போதி வர்ணத்திலேயே கச்சேரி களை கட்டிவிட்டதுன்னு தலைவர் புகழராரே, பாடகர் ஹரிகாம்போதியே பாடலியே.."

"பாடகர் பாடறதா இருந்தார்.. பாடல்.. தலிவரு கச்சேரிக்கு லேட்டா வந்தாரு.. கையில் கொடுத்த நோட்டீசைப் படிச்சிட்டு பேசிட்டாரு"
=========
"ரெண்டு மணி நேரமா இன்னம் காம்போதியா பாடிட்டு இருக்காரு?"

"பாட்டு மாறிடுச்சு... போர்டுல பிரச்னை.. ராகம் பேரை மாத்த முடியலயாம்..."
=========
மரத்தடியில் முன்பு நான் எழுதிய பதிவையும் அதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் என். சுவாமிநாதன் அவர்கள் அளித்த மறுமொழியும் மீள்பதிகின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, September 10, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார்.

மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும். இருந்தபோதும் இதனை கல்யாணியின் ஜன்யம் என்றும் சிலர் கூறுவதுண்டு. மோகனம் என்ற பொருளுக்கெற்றபடியே இது ஒரு அழகான இராகமாகும். (என்னது? எல்லா இராகத்துக்கும் இதையே சொல்லி ஜல்லி அடிக்கின்றேனா?)

இசைக் கச்சேரிகளில், சிறிது நேர இராக ஆலாபனைக்குப் பிறகு 'நன்னுப் பாலிம்ப' என்று மோகன இராகத்தில் பாடகர் ஆரம்பிக்கும்போது, இரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் எழுந்து, தாளம் போட்டுக் கொண்டு பாடலை இரசிப்பதைப் பல முறை பார்த்திருக்கலாம். அவ்வளவு தூரம், கேட்பவர் மனதை மயக்கும் இராகம் மோகனமாகும். அதேபோல பாபநாசம் சிவனது 'காபாலி,...கருணை நிலவு" என்ற பொருட் செறிவு மிகுந்த அழகான பாடலும் மோகனத்தில் அமைந்த பிரபலமான தமிழ்க் கீர்த்தனையாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய பல பாடல்கள் மோகனத்தில் அமைந்துள்ளன, விருத்தம், கீர்த்தனை, வர்ணம் என்ற பல விதமான படைப்புகளும் இந்த இராகத்தில் பாடலாம். தமிழ்த் திரையிசைக்கு மோகனம் நல்ல பங்களிப்பினைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பல நல்ல
பழைய பாடல்கள் மோகனத்தில் அமைக்கப் பெற்றுள்ளன.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்.

பாடல் - திரைப்படம்

01. ஏபிசி நீ வாசி - ஒரு கைதியின் டைரி
02. ஆதரவார் ஆதரவார் - ஞான சௌந்தரி
03. அடி எளச்சி எளச்சி கொழைச்சி கொழைச்சி - மகாராசன்
04. அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா - எதிர் நீச்சல்
05. ஆடுவரென்பதினால் ஆடவர் என்பார் - பாட்டும் பரதமும்
06. ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் **
07. அமுதைப் பொழியும் நிலவினிலே - தங்கமலை ரகசியம் **
08. அத்தான் வருவாக முத்தம் கொடுப்பாக - டும் டும் டும்
09. ஆத்தோரம் காத்தாட - எங்கேயோ கேட்ட குரல்
10. பன்சாயீ... காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
11. எனக்கொரு மகன் பிறப்பான் - அண்ணனுக்கு ஜே
12. எங்க மகராணிக்கு - தலைமுறை
13. என்ன பார்வை - காதலிக்க நேரமில்லை *
14. என்ன சமையலோ - உன்னால் முடியும் தம்பி * (இராக மாலிகை)
15. என்னை முதன்முதலாக பார்த்த - பூம்புகார்
16. எண்ணத்தில் - கல்லுக்குள் ஈரம்
17. கீதம் சங்கீதம் நீதானே - கொக்கரக்கோ *
18. கிரிதரா கோபாலா - மீரா **
19. குண்டுமல்லி குண்டுமல்லி - சொல்ல மறந்த கதை
20. ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி
21. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில் *
22. இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு
23. இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் **
24. இந்தப் பூவுக்கொரு அரசன் - பூவரசன்
25. இறைவன் வருவான் - சாந்தி நிலையம் *
26. இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள் *
27. காலை - மேல் நாட்டு மருமகள்
28. கலையாத கனவொன்று கண்டேன் - நாயக்கரின் மகள்
29. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
30. கண்மணியே காதல் என்பது கற்பனையோ - ஆறிலிருந்து அறுபது வரை *
31. கண்மணியே உன் இதய - மனிதன் மாறவில்லை
32. கஸ்தூரி மானே - புதுமைப் பெண்
33. காத்திருந்தேன் தனியே - ராசா மகன்
34. கேளடா - பாரதி
35. கேட்குதடி கூ கூ - கட்டுமரக்காரன்
36. கிருஷ்ணா ஹரி கோவிந்த முராரி - கிருஷ்ண பக்தி
37. குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - வள்ளி
38. குறிஞ்சி மலரின் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் *
39. குழந்தையும் தெய்வமும் - குழந்தையும் தெய்வமும் *
40. மதியா விதியா - பாரிஜாதம்
41. மலரே பேசு - கீதாஞ்சலி
42. மலர்கள் நனைந்தன - இதயக் கமலம் **
43. மல்லிகை மாலை கட்டி - புதிய ராகம்
44. மீன்கொடி தேரில் - கரும்பு வில் *
45. முப்பது பைசா மூணு முழம் - போக்கிரி
46. நாடுதே என் மனம் நாதமே - மாயாவதி
47. நாள்தோறும் எந்தன் கண்ணில் - தேவதை
48. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள் *
49. நான் தங்க ரோஜா - டைம்
50. நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்
51. நாராயணாய நமோ - திருமழிசை ஆழ்வார்
52. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
53. நிலவும் மலரும் - தேன் நிலவு *
54. நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்
55. ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடித் தென்றல்
56. ஒரு ராகம் பாடலோடு - ஆனந்த ராகம்
57. ஒரு தங்க ரதத்தில் - தர்ம யுத்தம் *
58. பாடும்போது நான் தென்றல் காற்று - சுமதி என் சுந்தரி *
59. பாக்காதே பாக்காதே - ஜென்டில்மேன்
60. பால் போலே - பாய்ஸ்
61. பருவம் பார்த்தருகில் வந்து வெட்கமா - மருத நாட்டு வீரன்
62. பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா *
63. பெற்ற தாயினும் பிறந்த - விஜயகுமாரி
64. பொன்னழகுப் பெருமை - ரிக்ஷாக்காரன்
65. பொன்னுல பொன்னுல - சிட்டுக்குருவி *
66. பூவா தலையா - பூவா தலையா
67. பூவில் வண்டு கூடும் கண்டு - காதல் ஓவியம் *
68. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
69. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்
70. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் *
71. செந்தமிழ் நாடென்னும்போதினிலே - வேதாள உலகம்
72. தாமதம் செய்யலாமோ - முத்துக்குள் முத்து
73. தாம்த தீம்த - பகலில் ஒரு நிலவு
74. தேன்மல்லிப் பூவே - தியாகம் *
75. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன் *
76. உன் அழகைக் காண இரு கண்கள் போதாது - திரு நீலகண்டர்
77. உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும்
78. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் *
79. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் - சலங்கை ஒலி *
80. வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் *
81. வந்த நாள் முதல் இந்த நாள் வரை - பாவ மன்னிப்பு
82. வாராயோ தோழி - ஜீன்ஸ்
83. வரும் பகைவரைக் கண்டு - அம்பிகாபதி
84. வாழிய வாழியவே பல்லாண்டு - ஆடிப் பெருக்கு
85. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் - சாவித்ரி
86. வாழ்வோம் வாழ்வோம் மாதர்காள் - ராஜகுமாரி
87. வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு - புயல் பாடும் பாட்டு
88. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா - காதல் கோட்டை **
89. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே - நாம் இருவர் *
90. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் - தேடி வந்த மாப்பிள்ளை *
91. விதியின் விளையாடல் மதியினால் மாற்றும் - நவஜீவனம்

மோகனத்தின் மொத்த உருவம் என்று பார்த்தால் இந்த நட்சத்திரக் (*) குறியிட்ட பாடல்களைச் சொல்லலாம். இதில் ஒரு சில பாடல்களுக்கு இரட்டை நட்சத்திரங்கள்கூட வழங்கியுள்ளேன். முன்னமே கூறியபடி நட்சத்திரப் பாடல்களை ஒருங்கே பதிவு செய்துக் கேட்டு வர, மோகன இராகம் மனதில் நன்கு பதிந்துவிடும். அடுத்தபடியாக, இசையார்வலர்கள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்தால் (அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்) இந்த நட்சத்திரப் பட்டியலிலுள்ள பாடல்களை ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அசை போட்டுச் சும்மா பாடிப் பார்த்தால், மோகனமென்ன, 'மோகனக் கல்யாணி'யைக்கூடக் கண்டு பிடித்துவிடுவீர்கள். ஆமாம், நீங்கள்தான் ஏற்கெனவே முந்தைய பதிவின் மூலம் கல்யாணியைக் கண்டுணரத் தொடங்கிவிட்டீர்களே!

மூன்று பதிவுகள் முடிந்ததன் விளைவாக, இனிமேலிருந்து உங்களுக்கு ஒர் 'குவிஸ்' வைக்கலாமென்றிருக்கின்றேன். அதற்கு சரியான விடையை யாரேனும் முதலில் தர, விடை தருவதற்கான நேரக்கெடு முடிவடைந்துவிடும் பதிவுத தொடரின் இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு, ஒரு பரிசு வழங்கவிருக்கின்றேன். வெளிநாடுகளில் இருப்பவருக்கு அவருடைய இந்திய முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வாரக் கேள்வி:

மோகனம் 'அவுடவ' இராகங்களில் ஒரு சிறந்த இராகமாகும். 'அவுடவ' இராகம் என்றால் என்ன?

- சிமுலேஷன்

Thursday, September 07, 2006

புத்திசாலிப் பன்றிகளும்...பராமரிப்புப் பணிகளும்...

உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பதிவு பிடிக்குமோ அல்லது புரியுமோ தெரியாது. விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன் பேர்வழி என்ற பெயரில் கட்டுரை எழுத வேண்டுமென்ற அல்ப ஆசை ஏற்படுவது அனவருக்கும் இயற்கையே. அந்த வகையில் இதுவும் ஒரு பதிவுதான்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் முதலீட்டில் சுமார் 40-45% பங்கு, அங்குள்ள பைப்லைன் எனப்படும் குழாய்களிலேயெ செலவழிக்கப்படுகின்றது. இந்தக் குழாய்கள் அரை அங்குல விட்டத்திலிருந்து, ஐம்பது அங்குல விட்டம் (diameter) வரை இருக்கும். இவை திரவ மற்றும் வாயு நிலையிலுள்ள பெட்ரோலியப் பொருட்களை, ஆலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன. மேலும் ஆலையின் இறுதி விளை பொருட்களான (finished products) எல்.பி.ஜி, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை ஆலையிலிருந்து சந்தைக்கு எடுத்து செல்வதிலும் இந்தக் குழாய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலநேரம், நாடு விட்டு நாடு செல்லும் (cross country) குழாய்களையும் நீங்கள் நேரில் பார்த்திருக்காவிட்டாலும், சில ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், நரம்பு மண்டலம் போன்று இந்த எண்ணெய்க் குழாய் வலை (pipeline network) செயல்படுகின்றது என்றால் மிகையாகாது.

மிகுந்த முதலீட்டில் பதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் இந்தக் குழாய்கள், கணிசமான காலம் உழைக்க வேண்டும். அப்படி இல்லாமல், ஏதேனும், பாதிப்பு ஏற்பட்டு, கசிவும் ஏற்பட்டாலோ, எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்படும். மேலும் பாதுகாப்பு (safety) மற்றும் சுற்றுச் சூழல் (environment) குறித்த பிரச்னைகளும் ஏற்படும். எனவே, இந்தக் குழாய்கள், சேதம் ஏதேனும் ஏற்படாமல், அவற்றிகென வரையறுக்கப்பட்ட அளவுகளுக்குள் (specifications) இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளும் வகையில் பராமரிப்புப் பணிகளை (maintenance) இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும். அந்த முயற்சியில் ஒன்றுதான், பன்றிகளைப் (pig) பயன்படுத்தும் பணியாகும்.


பன்றி என்றால் உண்மையான உயிருள்ள பன்றி என்று நினைத்துவிட வேண்டாம். பன்றி எனப்படுவது குழாய்களுக்குள் பயணம் செய்யும் ஒரு வகை சாதனம் அல்லது கருவியாகும். இதில் பல வகைகள் உண்டு. முதலாவதாக சாதாரணமாக குழாய்க்குள் இடைவெளி இல்லாமல் பயணம் செய்யும் சரியான விட்டம் கொண்ட ஒரு ரப்பர் பந்து. இது குழாயின் அளவிற்கேற்ப பல அளவுகளில் இருக்கும். இவை பெரும்பாலும், ஒரு குழாயில் வெவ்வேறு திரவங்களை கடத்தப் பயபடுகின்றன. உதாரணமாக, கெரசினுக்கும், டீசலுக்கும் ஒரே குழாய் இருக்கும். ஒரே குழாயில் முதலில், கெரசினும், அடுத்ததாக பன்றி எனப்படும் இந்த ரப்பர் பந்தும், அதனையடுத்து, டீசலும் பயணம் செய்யும். இந்தப் பன்றியினைச் செலுத்துவதற்கும், முடிவில் சேகரிப்பதற்கும் ஏதுவாக, குழாய் வடிவங்களில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

வெகுகாலம் மெற்கண்டபடி, ஒரு பிரித்தாளும் ஊடகமாகவே (interface medium) இருந்த பன்றியில் எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களினால், புத்திசாலிப் பன்றிகள் (intelligent pigs) வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிசாலிப் பன்றிகளில் குழாய்களின் விட்டத்தை அளக்கவும், குழாயின் சுற்றுச் சுவரின் தடிமன் (wall thickness) போன்ற பல்வேறு பரிணாமங்களை அளக்கும் சென்ஸர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு முறை குழாயின் ஒரு முனையிலிருந்து ஏவி விட்டால் (pig launch), மறு முனை சென்றடவதற்குள், குழாயின் பல்வேறு பரிணாமம் குறித்த தகவல்களையும், பராமரிப்பு பொறியாளருக்கு தந்து விடுகின்றது. இந்தத் தகவலுக்கேற்ப, முன்னெச்செரிப் பராமரிப்புப் பணிகள் (preventive maintenance) மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கணிசமான சேதங்கள் தவிர்க்கப்படலாம்.

அடுத்த முறை, சென்னை தண்டயார்பேட்டை, கொருக்குப் பேட்டை அல்லது மும்பை செம்பூர் போன்ற பகுதிகளில் செல்லும்போது, பெட்ரோலியக் குழாய்களின் அருகில் மேய்ந்து அசிங்கம் பண்ணிக் கொண்டிருக்கும் பன்றிக்கூட்டம் ஒன்றினைப் பார்க்கும்போது, அந்தக் குழாய்க்குள்ளே ஒரு புத்திசாலிப் பன்றி ஒன்றும் சென்று பராமரிப்பு செய்துகொண்டிருக்கலாம் எனபதனையும் நினைவில் வையுங்கள்.

(ப்ளாகரில் உள்ள பிரச்னை காரண்மாக இதற்குண்டான் படங்களை வலையேற்ற முடியவில்லை)

- சிமுலேஷன்

Friday, September 01, 2006

சென்னையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு

மதுமிதா அவர்களின் புத்தகத்திற்கு ஒரு வலைபதிவர் என்ற முறையில் சுய அறிமுகம் செய்துகொண்ட போது "வலைப்பதிவர் சந்த்திப்புகள் மூலம் நண்பர்கள் சிலர், பலராகக் கூடும்" என்று எழுதியிருந்தேன். ஏற்கெனவே போண்டா புகழ் உட்லேண்ட்ஸ் சந்திப்புகளின் மூலம் டோண்டு ராகவன், ஜயராமன், டி.பி.ஆர்.ஜோசப், சிவஞானம்ஜி, மரபூர் சந்திரசேகரன், ஜி.ராகவன், மா.சிவகுமார், கிருஷ்ணா, ரவிச்சந்திரன், மதன், ஜயகமல், சரவணன் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம், மயிலை நாகேஸ்வரராவ் பூங்காவில் மசால் வடையுடன் மற்றைய வலைப்பதிவர்களின் அறிமுகம் கிடைத்தது. அனைவருடனும், நேரம் செலவழிக்க முடியாவிடினும், அறிமுகமும், யார் யார் என்ற விவரங்களும் அறிந்து கொள்ள முடிந்தது. வந்தவர்கள் பட்டியல் வருமாறு:- முத்து தமிழினி, பால பாரதி, ஜி.கௌதம், வரவணையான், ரோசா வசந்த், ப்ரியன், அருள், சிவஞானம்ஜி, ஜீவ், பாலகிருஷ்ணன் கீதா, பொன்ஸ், லக்கி லுக், பரஞ்சோதி, ஜெய்சங்கர், மா.சிவக்குமார், மற்றும் செந்தில். பலரது பெயர் விடுபட்டிருக்கலாம். பெயர் விடுபட்டவர்கள் தவறாக எண்ண வேண்டாம்.

இவ்வாறு சந்த்திப்புகள் அவ்வப்போது (அடிக்கடி அல்ல) நடப்பது ஆரோக்கியமான விஷயம். முடிந்தவரையில் அனைவரும் கலந்து கொள்வதும் குழு மனப்பான்மையையும் குறைக்க உதவும் என்று நம்புகின்றேன்.

மற்றபடி, சந்திப்பு விவரங்களை அவரவர்கள் தங்களுகே உரித்தான பாணியில் பதிவார்களென்று எண்ணுகின்றேன்.

-சிமுலேஷன்

Thursday, August 31, 2006

சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங்"

"எது வரைக்கும் சார் போறீங்க?"

"கிண்டி ஸ்டேஷன் வரைக்கும். என்ன விஷயம்?"

"சார் எனக்கு அலெக்சாண்டர் ஸ்கொயர் வரைக்கும் போகணும்"

"ஓ"

"அங்கே, இன்னிக்கி ஒரு இன்டெர்வியூ"

"ஒகே. ஆல் த பெஸ்ட்"

"சார்..."

"என்ன?.."

"கொஞ்சம் லிப்ட் கொடுக்க முடியுமா?. நானே நடந்து போகலாமுன்னுதான் பார்த்தேன். நேத்திக்கி கால்ல ஒரு சுளுக்கு ஆகி விட்டது. டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு. ஆனா, இன்னிக்கின்னு பாத்து இந்த இன்டெர்வியூ. இது எனக்கு முக்கியமான இன்டெர்வியூ சார். ப்ளீஸ் லிப்ட் கொடுங்க சார்.

"!!! ??? @@@ ####"

"அட்லீஸ்ட், இந்த ரோடு எண்ட் வரைக்கும் லிப்ட் கொடுத்தால் போதும் சார்"

"@@@ (((((( !!!! @@@"

"சார் பாஸ்ட்டா நடக்காதீங்க சார். உப்பு மூட்டை தூக்கிறது ரொம்பக் கஷ்டம் ஒண்ணுமில்லே சார். ப்ளீஸ். என்னை முதுகிலே உப்பு மூட்டையாத் தூக்கிட்டுப் போய் இந்த ரோடு எண்ட்லே விட்டுடுங்க சார்"

"ஏன் சார் ஒடறீங்க. சார்... சார்'

(முன்னொரு நாள் ராஜ் டி.வியில் பார்த்த gag type நிகழ்ச்சியிலிருந்து)

- சிமுலேஷன்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக் கலைஞருக்கும் பிடித்த இராகமாகும். இதனை மேல் நாட்டு இசையிலே, "ஹார்மோனிக் மைனர் ஸ்கேல்" (Hamonic Minor Scale) என்று கூறுவார்கள். சிம்மேந்திர மத்தியம் என்ற இராகத்திற்கும், கீரவாணிக்கும், மத்தியமம் மட்டுமே வித்தியாசமாகும். கீரவாணியில் சுத்த மத்தியமும் (ம1), சிம்மேந்திர மத்திய இராகத்திற்கு பிரதி மத்யமும் (ம2) வரும். தமிழ்த் தியாகைய்யர் எனப்படும், பாபநாசம் சிவன் அவர்களின், "தேவி நீயே துணை" என்ற பிரபலமான கீர்த்தனை, கீரவாணியில் அமைந்ததாகும்.

ஜனரஞ்சகமான கீரவாணி இராகத்தினை, எந்த ஒரு சூழ்நிலைக்கும் அழகாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, சின்னத் தம்பியின், 'போவோமா ஊர்கோலம்', ஒரு மகிழ்ச்சியான பாடலாகும். ஆனால், இதே இராகத்தினை, அபூர்வ சகோதரர்கள் படத்தில், 'ஒன்னை நெனெச்சேன், பாட்டுப் படிச்சேன்' என்ற பாடலில் சோகம் ததும்பும் விதத்தில் வடித்திருப்பார்கள். கேளடி கண்மணியில், எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்திய. 'மண்ணில் இந்தக் காதல் அன்றியும்' கீரவாணிதான். எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கீரவாணியை உடனே இனம் கண்டு கொள்ள ஒரு பாடல் வேண்டுமென்று யாராவது கேட்டால் இருக்கவே இருக்கிறது, பொன்னு மணியின், 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு'. பாடல் படமாக்கப்பட்ட விதமும், பாடலின் மெலடியும், கீரவாணியைத் தூக்கி நிறுத்துகின்றன.

இராகம்: கீரவாணி
21ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ
அவரோகணம்: ஸ நி3 த1ப ம1 க2 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்

01. ஆடாத மனமும் - மகாதேவி
02. ஆகாயத் தாமரை - நாடோடிப் பாட்டுக்காரன்
03. ஆலமரம் வேலமரம் - செந்தூரம்
04. ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது - பொன் மேகலை
05. அந்த வானத்தப் போல - சின்னக் கவுண்டர்
06. அரிதாரத்தப் பூசிக்கொள்ள - அவதாரம்
07. ஆயிரம் கோடி சூரியன் போலே - கரிசக்காட்டுப் பூவே
08. பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
09. சந்தா ஓ சந்தா - கண்ணெதிரே தோன்றினாள்
10. சின்ன மணிக் குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
11. தெய்வம் தந்த வீடு - அவள் ஓரு தொடர்கதை
12. எங்கே செல்லும் இந்தப் பாதை - சேது
13. எங்கே சென்று தேடுவேன் - ஞான சௌந்தரி
14. எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன - க்ஷத்ரியன்
15. என்னைக் காணவில்லையே - காதல் தேசம்
16. என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
17. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
18. எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
19. கூட்ஸ் வண்டியிலே - குங்குமச் சிமிழ்
20. ஹைவேஸ்ஸிலே ஸ்பீட் பிரேக்கில்லே - மனசெல்லாம்
21. இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்
22. இதயமே இதயமே என்னை மறந்தது - ஜூலி கணபதி
23. இளவேனில் இது வைகாசி மாசம் - காதல் ரோஜாவே
24. இன்னிசை - துள்ளாத மனமும் துள்ளும்
25. கத போலத் தோணும் இது கதையும் அல்ல - வீரத் தாலாட்டு
26. கண்ணே இன்று கல்யாண - ஆணழகன்
27. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
28. கீரவாணி கீரவாணி - பாடும் பறவைகள்
29. குங்குமக் கோலம் - அண்ணன் ஒரு கோயில்
30. குயிலே குயிலே உந்தன் கீதங்கள் - காதல் ஓவியம்
31. குயிலுக்கு கூ கூ கூவிட - ·ப்ரண்ட்ஸ்
32. மால கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன்
33. மலரே தென்றல் பாடும் ஞானம் - வீட்டுல் விசேஷங்க
34. மலர்களிலே ஆராதனை - கரும்பு வில்
35. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
36. மாமனோட மனசு - உத்தம ராசா
37. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
38. மனிதா மனிதா இனி உன் விழிகள் - கண் சிவந்தால் மண் சிவக்கும்
39. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே
40. மஞ்சள் பூசும் - ப்ரண்ட்ஸ்
41. மண்ணில் இந்தக் காதல் - கேளடி கண்மணி
42. முன் பனியா - நந்தா
43. முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா
44. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
45. நான் புடிச்ச கிளியே - ராசுக்குட்டி
46. நான் தேடிய - எங்கே எனது கவிதை
47. நீ எங்கே என் அன்பே - சின்னத் தம்பி
48. நீதானே நீதானே - தாலாட்டுப் பாடவா
49. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி
50. நேரமிதே நேசன் குணவிலாசன் - ராஜகுமாரி
51. நிலா அது வானத்து மேலே - நாயகன்
52. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஒரு ஆலயம்
53. நினைவுகள் நெஞ்சினில் - ஆட்டோக்ரா·ப்
54. ஓ ஊர்வலம் - மாநகரக் காவல்
55. ஒ பாப்பா லாலி - இதயத்தைத் திருடாதே
56. ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்கா முடி
57. ஒன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
58. ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் - படிக்காதவன்
59. ஒரிடந்தனிலே நிலை இலா உலகினிலே - வேலைக்காரி
60. ஒரு காதல் தேவதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
61. ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி
62. ஒரு முத்துக்கிளி - தாயம்மா
63. ஒரு துளிர் ஒண்ணு அரும்புது - தொடரும்
64. பாடிப் பறந்த கிளி - கிழக்கு வாசல்
65. பாடும் வானம்பாடி - நான் பாடும் பாடல்
66. பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா - தேன் நிலவு
67. பெண்ணொருத்தி - ஜெமினி
68. பூ முடியும் - வெள்ளிக் கிழமை விரதம்
69. பூங்காற்றே இனி போதும் - படிச்ச புள்ள
70. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
71. பூங்கொடிதான் பூத்தாடாதாம்மா - இதயம்
72. பூப்பூக்கும் மாசம் தை மாசம் - வருஷம் பதினாறு
73. போவோமா ஊர்கோலம் - சின்னத் தம்பி
74. ராஜராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி
75. ராசாத்தி மனசிலே - ராசாவே உன்னை நம்பி
76. ரோட்டோரம் பாட்டுச் சத்தம் - என் மன வானில்
77. சலாம் குலாமு - ஹலோ
78. சிறு சிறு சிறகுகளில் - கொஞ்சிப் பேசலாம்
79. சிட்டுப் பறக்குது குத்தாலத்தில் - நிலவே முகம் காட்டு
80. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
81. சுத்தாதே பூமித்தாயே நில் - நிலவே முகம் காட்டு
82. தளுக்கி தளுக்கி - கிழக்கு வாசல்
83. தங்கச் சங்கிலி - தூரல் நின்னு போச்சு
84. துளியோ துளி முத்துத் துளி - காதலிக்க நேரமில்லை
85. உன் குத்தமா என் குத்தமா - அழகி
86. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
87. உன்னை நான் அறிவேன் - குணா
88. உன்னை நினைக்கவே - ஜே ஜே89. உரு மாறி வந்து - விஜயகுமாரி
90. வானம் அதிரவே - ரமணா
91. வானத்திலிருந்த்து குதிச்சி வந்தேனா - பூந்தோட்டம்
92. வெண்ணிலவுக்கு வானத்த - தாலாட்டு பாடவா
93. வெற்றிக் கொடி கட்டு - படையப்பா
94. எவனோ ஒருவன் - அலை பாயுதே

கீரவாணி இராகம் ரொம்பப் பிடித்துப் போயிற்றோ என்னமோ தெரியவில்லை. மரகதமணி என்ற இசையமப்பாளர், கீரவாணி என்ற பெயரிலும் வலம் வந்தார். அழகன் படத்தின் அழகான பாடல்களைக் கொடுத்தவர் இவரே. அம்சலேகா என்பவரும் இவரா என்று தெரியவில்லை.

ஜீவா வெங்கட்ராமன் என்பவரும் இந்த இராகத்தைப் பற்றி வலையில் பதிந்துள்ளார். http://jeevagv.blogspot.com/2005/05/blog-post.html

கிரணாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த இராகத்தைச் சிலர் ஸ்டலாக, கிர்வானி என்றும் அழைப்பதுண்டு.

By the way, Dumb Sharad எனப்படும் ஊமை விளையாட்டில், கீரவாணி என்ற பெயர் வந்தால் என்ன அபிநயம் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

- சிமுலேஷன்.

Wednesday, August 30, 2006

சென்னை குவிஸ்

27.08.2006 ஞாயிறன்று மதியம், மயிலையில், "சென்னை தின விழா" கொண்டாட்டங்களின் நிறைவுப் பகுதியாக, "சென்னை குவிஸ்" ஒன்று பி.எஸ். மேல்நிலைப் பள்ளையில் நடைபெற்றது. இரண்டு பேர் கொண்ட குழு மட்டுமே கலந்து கொள்ள முடியும். தனியாகச் சென்ற நான், சுரேஷ் என்பரிடம், 'ஆன் த ஸ்பாட்' அறிமுகம் செய்து கொண்டு, குழுவாக கலந்து கொண்டேன். நடுநிலைப் பள்ளி மாணவர்களில் ஆரம்பித்து, சீனியர் சிட்டிசன்கள் வரை கலந்துகொண்ட இந்தக் குவிஸ்ஸில், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, திரு.இராமமூர்த்தி (முன்னாள் தமிழ் கிரிக்கெட் வர்ணணையாளர்) அவர்களும் குடும்பத்துடன், கலந்து கொண்டார். குவிஸ்ஸை நடத்தியவர் சென்ற வருடம் முதல் பரிசு பெற்ற அவினாஷ் என்பவர்.

ப்ரிலிம்ஸ் எனப்படும் தகுதிச் சுற்றில் 35 கேள்விகள். அதில் 20க்கும் மேற்பட்ட மதிபெண்கள் பெற்று அதிக மதிபெண்கள் பெற்ற ஆறு குழுக்கள் மட்டுமே இறுதி சுற்றுக்குச் சென்றன. நாங்கள் பெற்ற மதிபெண்கள் 14. தகுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றைக் கொடுத்திருக்கின்றேன் (சொந்த வாக்கியங்களில்). பதில் தெரிந்தால் சொல்லுங்கள். கேட்கப்பட்ட கேள்விகள பலவற்றையும் நினவுபடுத்தித் தர இயலாததால், சொந்தச் சரக்கு சிலவற்றையும் இங்கு இணைத்து உங்களைப் படுத்திவிட இருக்கின்றேன். (இறுதி சுற்றின்போது நான் அங்கு இல்லாததால் இந்தக் கேள்விகள்கூடக் கேட்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன்.) முடிவுகளை, வார இறுதியில் தெரிவிக்கின்றேன்.

1. சிந்தாதறிப் பேட்டை - பெயர்வரக் காரணம் என்ன?
2. மறைந்த பிரபல இசைக் கலைஞர், எம். எல். வசந்தகுமாரி அவர்களின் முழுப் பெயர் (expansion of initials) என்ன?
3. சென்னையின் பழம்பெரும் சங்கீத சபா எது?
4. சென்னையிலுள்ள ஒச்சர் ஸ்டுடியோஸின் (Ocher Studios) நிர்வாக இயக்குநர் யார்?
5. சென்னை-மைசூர் எக்ஸ்பிரஸ்ஸின் பெயரை, வேறொரு பெயருக்கு மாற்ற வேண்டுமென்று, கர்னாடக ஆளுநர் சதுர்வேதி, இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அது என்ன புதுப் பெயர்? காரணம் என்ன?
6. மவுண்ட் ரோடிலுள்ள, இன்றும் இயங்கும் பழம்பெரும் நிறிவனம் எது?
7. வை மேக்ஸ் (wi-max) என்ற நிறுவனம், எந்தெந்த நிறுவனங்களின் கூட்டு முயற்சி?
8. சென்னையில் காணப்படும் புள்ளி மாஙளின் மற்றொரு பெயர் என்ன?
9. மாயா, கௌதம், நிகில், அனிதா - இவர்களுக்குள்ள ஒற்றுமை என்ன?
10. பெரிய ஆள், வல்லுனர் என்பதற்குக் கூறப்படும், புரதம் நிறைந்த இந்த உணவுப் பொருடகளின் பெயர் என்ன?


சொந்தச் சரக்கு

1. 'மாம்பலம்' என்ற இடத்திற்கு இந்தப் பெயர்வரக் காரணம் என்ன?
2. இந்தியாவில் முதன்முதலாக முறையான தொழிற்சங்கம் (Trade Union) எங்கு தொடங்கப்பட்டது?
3. மணலி இராமகிருஷ்ண முதலியார், தான் தினமும் காலையில் ஆற்றில் நீராடிய பின்னர், ஆலயம் செல்லும் வழக்கம் கொண்டிருந்ததாக எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஆறு எது?
4. சென்னையில் 'ப்ரோடீஸ் காசல் சாலை' (Broadies Castle Road) எங்குள்ளது?
5. 'கெல்லீஸ்' என்ற இடத்தின் பழைய பெயர் என்ன?
6. மயிலாப்பூர் கபாலி கோவில், முதன் முதலில் எங்கிருந்தது?
7. உலகப் புகழ் பெற்ற "யேல்" பல்கலைக் கழகத்திற்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு?
8. சென்னையிலுள்ள "பாடல் பெற்ற ஸ்தலங்கள்" என்னென்ன? பாடியவர்கள் யார்?
9. செனடோஃப் சாலைக்கு (Cenotaph Road) அப்பெயர் வரக் காரணம் என்ன?
10. ஆர்மீனியன் சாலையிலுள்ள, ஆர்மீனியன் சர்ச் தவிர, சென்னையில் ஆர்மீனியர்கள் கட்டிய ஒரு முக்கிய படைப்பு எது?

- சிமுலேஷன்

Thursday, August 24, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி



கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக இளையராஜா, கல்ய¡ணி என்றால், ஒரு கலக்கு கலக்கி விடுவார். இந்த ஒரே இராகத்தில், பல வித்தியாசமான பாடல்களைத் தந்துள்ளவர் அவர். 'வெள்ளைபுறா ஒன்று', 'ஜனனீ, ஜனனீ', 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே', 'நிற்பதுவே நடப்பதுவே', 'காற்றில் வரும் கீதமே', என்று தொடரும் இந்த வித்தியாசமான பாடற் பட்டியலைப் பார்த்தால், கண்டிப்பாக நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். பாடற் பட்டியலுக்குப் பே¡கு முன்பு சின்ன விளக்கங்கள்.

இராகம்: கல்யாணி65ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை): ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை): ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

கர்னாடக இசையிலே ஸப்தஸ்வரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்களின் permutation and combinationகளில் கிடைப்பது 72 தாய் இராகங்களாகும். இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயருமுண்டு. இந்த 72 இராகங்களையும் மேலும், மேலும் கலக்கக் கிடைப்பது, ஆயிரக்கணக்கான ஜன்ய(சேய்) இராகங்களாகும். 72 மேளகர்த்தா இராகங்களும் ஒரு வரிசைப்படி அ¨மந்துள்ளன. இந்த அமைப்பு ஒரு சக்கரம் போல அமைந்திருப்பது, அறிந்து கொள்ள சுவாரசியமாக இருக்கும். இந்தத் தொடரிலே, அப்படி இப்படி இந்த சமாச்சாரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து விடலாம் என்றுதான் இருக்கின்றேன்.

இந்த மேளகர்த்தா இராகங்களின் துவக்கப் பெயரைக் கொண்டு, அவற்றின் வரிசை எண் என்னவென்று கூற முடியும். வெங்கடமகி என்பவர், இந்த வரிசை எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதற்காக 'கடபயாதி என்ற சூத்திரம் ஒன்றினை வடித்துள்ளார். இந்த சூத்திரத்தினைப் பயன்படுத்துவதற்காக, சில இராகங்களுக்கு மட்டும் சிற்சில பெயர் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி கல்யாணியை, 'மேச' என்ற prefix சேர்த்து, மேசகல்யாணி என்றழைத்தார். மற்றபடி நேமாலஜி/நியூமராலஜி சமாச்சாரம் ஏதும் இதில் கிடையாது. இப்போது மேளகர்த்தா சக்கரத்தைப் பற்றியும், "கடபயாதி" சூத்திரத்தினைப் பற்றியும் §மலும் அறுக்காமல், பின்னாளில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

வட இந்தியாவில் இதே கல்யாணி இராகம், 'யமன்' என்றழைக்கப்படுகின்றது. இதற்கு, 'சாந்த கல்யாணி' என்ற மற்றொரு பெயருமுண்டு. இந்த இராகம், ஹங்கேரி நாட்டிலும் பிரபலம் என்பது பெரும்பாலோர் அறியாததொன்று. மேளகர்த்தா இராகமான கல்யாணியிலிருந்து 150க்கும் மேலான ஜன்ய இராகங்கள் பிறந்த்திருப்பதாகத் தெரிகின்றது. இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. ஆதாரம் உன்றன் திவ்ய பாதமே - பக்த கௌரி
02. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர்
03. ஆடும் அருள் ஜோதி - மீண்ட சொர்க்கம்
04. ஆழ் கடலில் முத்தெடுத்து - ராகம் தேடும் பல்லவி
05. அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன் *
06. ஆராரோ ஆராரோ - ஆனந்த்
07. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
08. சரணம் பவ கருணாமயி - சேது
09. தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் *
10. என்னை ஒருவன் பாடச் சொன்னான் - கும்பக்கரை தங்கையா
11. இகலோகமே - தங்கமலை ரகசியம்
12. இளவட்டம் கேட்கட்டும் - மை டியர் மார்த்தாண்டன்
13. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப் புதல்வன் *
14. இசையமுதம் - கோடீஸ்வரன்
15. ஜனனீ ஜனனீ - தாய் மூகாம்பிகை *
16. கலை வாணியே - சிந்து பைரவி *
17. கனவிலும் உனை மறவேன் நான் - மச்சரேகை
18. கண்ணாலே காதல் கவிதை சொன்னானே - ஆத்மா
19. கண்ணன் வந்தான் - ராமு *
20. காவிரிப் பெண்ணே வாழ்க - பூம்புகார் *
21. காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு *
22. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - தெய்வ மகன் *
23. கொக்கு சைவக் கொக்கு - முத்து
24. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்
25. மனதில் ஒரு பாட்டு - தாயம் ஒண்ணு
26. மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் - அஷோக் குமார்
27. மஞ்சள் வெயில் - நண்டு *
28. மஞ்சள் வெயில் மாலையிலே - காவேரி
29. மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர் *
30. முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப் பதுமை *
31. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம் *
32. நமக்கினி பயமேது - ஜகதலப்ரதாபன்
33. நான் என்பது நீ அல்லவோ தேவா - சூரசம்ஹாரம்
34. நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள்
35. நானே உன் அடிமையே - மண மகள்
36. நீது சரணமுலே - சேவாசதனம்
37. நினைக்கின்ற பாதையில் அணைக்கின்ற - ஆத்மா
38. நிற்பதுவே நடப்பதுவே - பாரதி *
39. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம் *
40. பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் - பெண்
41. புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது
42. ராதா அழைக்கிறாள் - தெற்கத்திக் கள்ளன்
43. சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் - இது நம்ம ஆளு *
44. செண்பகவல்லி உன்னைச் சேவித்தேன் - காசினி வேண்டினி
45. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி *
46. சிங்கநடை போட்டு - படையப்பா
47. சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத் தங்கம்
48. சுந்தரேஸ்வரனே சுபகராக்ருபா - கன்னிகா
49. சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி *
50. சுத்திச் சுத்தி - படையப்பா
51. தாலாட்டும் காற்றே - தேவன்
52. தானே தனக்குள் - பேரும் புகழும் *
53. தாயைப் பணிவேன் - ஜகதலப்ரதாபன்
54. தாழையாம்பூ முடிச்சு - பாகப் பிரிவினை
55. தேன் சிந்துதே வானம் - சொல்லத்தான் நினைக்கிறேன் *
56. திருவளர் உருவே போற்றி - பக்த துளசிதாஸ்
57. துணிந்த பின் மனமே - தேவதாஸ் *
58. உள்ளம் ரெண்டும் - தூரத்து இடி முழக்கம்
59. உன்னை நான் பார்க்கையில் - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
60. உப்புக் கருவாடு - முதல்வன்
61. வா காத்திருக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை
62. வைதேகி ராமன் - பகல் நிலவு
63. வான் பொய்த்தாலும் தான் பொய்யா - ஆடிப் பெருக்கு
64. வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம் *
65. வாசமல்லிப் பூவு - செவ்வந்தி
66. வீணையடி நீ எனக்கு - ஏழாவது மனிதன்
67. வெள்ளை புறா ஒன்று - புதுக் கவிதை *
68. விழிகள் மீனோ மொழிகள் தேனோ - ராகங்கள் மாறுவதில்லை
69. யாரறிவான் இறைவன் திருவருள் - ஞான சௌந்தரி

இவ்வளவு பெரிய பட்டியலில், ஒரு சில பாடல்களில்* மட்டும், கல்யாணி இராகத்தினை, 'டபக்'கென்று கண்டுபிடிக்க முடிகின்றது. மற்ற சில பாடல்களில் முடிவதில்லையே! காரணம் என்னவென்றால், இந்த இசையமப்பாளர்கள், பாரம்பரிய இசைவாணர்கள் போலல்லாமல், தமது பாடல்களில் சில அன்னிய ஸ்வரங்களையும், 'சாப்பிடு', என்று சேர்த்து விடுவதுதான். எனவேதான் அவை 100% ஒரே இராகத்தில் இல்லாமல் இருந்து, இராகம் கண்டுபிடிக்கச் சில சமயம் படுத்துகின்றன.

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு இலக்கணம் மிக முக்கியம். ஆனால் திரையிசை இயக்குநர்களுக்கோ, மனமகிழ்வு ஏற்படுத்துதல் மட்டுமே முக்கியம். வலைப்பதிவர்கள் போல, அவர்களுக்கு யார் கட்டுப்பாடும் கிடையாது. அதனால், அவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி, விருப்பப்பட்ட இராகங்களுக்கு, வேண்டுமென்றபோது, 'வித்தவுட்டில்' போய்விட்டு, பல்லவியில் சமர்த்தாக ஆரம்பித்த இராகத்திலேயே வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

முன்னமே கூறியது போல, இந்தப் பட்டியலில், கல்யாணி இராகம் எந்தெந்தப் பாடல்களிலெல்லாம், பிரதானமாக இருக்கிறது என்று கருதுகிறீர்களோ, அந்தப் பாடல்களை மட்டும் ஒருங்கே பதிவு செய்து, பத்து முறை கேட்டுப் பாருங்கள். அதன் பின், தப்பித் தவறி விபரீத ஆசை ஏற்பட்டு, ஏதெனும் ஒரு கச்சேரிக்குப் போய், பாடகர் 'நிதிசால சுகமா' அல்லது, 'பங்கஜ லோசனா' என்று பாட ஆரம்பித்தவுடன், "ஆபோகிதானே இது?" என்று அப்பாவியாய்க் கேட்கும் என்று பக்கத்து சீட் பார்ட்டியிடம், "நோ, நோ. கல்யாணியாக்கம் இது", என்று அசத்தத் தோன்றும்.

- சிமுலேஷன்.

Saturday, August 19, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெரும்பாலும், மனதிற்கு இனிமையான ஒரு கர்னாடக இராகங்களில் அமைந்திருப்பதனைக் கவனிக்கலாம். இப்படி இராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை ஒப்பு நோக்கும் முயற்சியாக, "தமிழ்த் திரையிசையில் இராகங்கள்" என்ற தலைப்பிலே, ஒரு தொடர் எழுத எண்ணியுள்ளேன். இராகங்களைப் பற்றிய புரிதல், எந்தவொரு இசையினையும் மேலும் இரசிக்கத் தூண்டுமென்பதே, இதன் நோக்கம்.

இராகம்: கானடா
இது கரஹரப்ரியா என்ற மேளகர்த்தா (72 தாய் இராகங்களில் ஒன்று) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமகும்

ஆரோகணம் (ஸ்வரங்களின் ஏறு வரிசை):
ஸ ரி2 க2 ம1 த2 நி2 ஸ

அவரோகணம் (ஸ்வரங்களின் இறங்கு வரிசை):
ஸ நி2 ஸ த1 ப ம1 ப க2 ம1 ரி2 ஸ

கானடா இராகம், எந்த ஒரு நேரத்திற்கும் பாட இசைந்தது. பக்தி இரசனையினைத் தூண்டக்கூடியது. ஆலாபனைக்கு உகந்த இந்த இராகம், இராகமாலிகைகளில் பெரிதும் கையாளப்படுகின்றது. 'தர்பாரி கானடா' எனப்படும் வட இந்திய இராகத்திற்கும்,கானடா இராகத்திற்கும் தொடர்பு உண்டு. தொடரின் நோக்கம் கருதி இந்த இசை இலக்கணங்களுக்குள்,
தற்போது மேலும் இறங்கப் போவதில்லை,

பாடல் - திரைப்படம்
01. அலை பாயுதே கண்ணா - அலை பாயுதே
02. அந்தோ புவி மேல் அடிமையாக - மச்ச ரேகை
03. அழகு தெய்வம் மெல்ல மெல்ல - பேசும் தெய்வம்
04. கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்குத் தலை வணங்கு
05. கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள்
06. கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு - கொஞ்சும் சலங்கை
07. மனக்கோவில் தன்னில் வாழும் - காவேரி
08. மன்னவா மன்னவா, மன்னாதி மன்னன் - வால்டேர் வெற்றிவேல்
09. மோகனாங்க வதனி உன்னைக் காணும் - மனோன்மணி
10. முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே - உத்தம புத்திரன்
11. நாணிச் சிவந்தன கண்கள் - கர்ணன் (இந்தப் பகுதி மட்டும்)
12. நடராஜனா இல்லை சிவகாமியா - பாட்டும் பரதமும்
13. பெண்ணின் பெருமையே பெருமை - மிஸ்ஸியம்மா
14. பொன்னென்பேன் - போலீஸ்காரன் மகள்
15. பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
16. புது வெள்ளை மழை பொழிகின்றது - ரோஜா
17. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
18. வானம்பாடிகள் போலே - கள்வனின் காதலி

சிந்துபைரவியின் "பூமாலை வாங்கி வந்தான்" பாடலை இங்கே கேட்கலாம்.



இந்தப் பாடல்களையெல்லாம் ஒருங்கே பதிவு செய்து கேட்டுக் கொண்டேயிருந்தால், கானடா இராகம் உங்களுக்கு எளிதில் பிடிபட்டுவிடும்.

விரைவில் அடுத்த இராகத்துடன்...

- சிமுலேஷன்

தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள்

எதற்கெடுத்தாலும், திரைப்படங்களை உதாரணம் காட்டுவதே நம் மக்களுக்கு வேலையாகி விட்டது. சரி. சரி. தமிழ்த் திரைப் படங்களின் தலைப்புகளில் வந்துள்ள உறவுகளைப் பார்ப்போம்.

01. அன்னை
02. அன்னை ஒர் ஆலயம்
03. அன்னையின் ஆணை
04. தாய்
05. தெய்வத் தாய்
06. தாயா தாரமா?
07. தாயின் மடியில்
08. தாய்க்குத் தலைமகன்
09. தாய்க்குப் பின் தாரம்
10. தாயைக் காத்த தனயன்
11. தாய் மகளுக்குக் கட்டிய தாலி
12. ஒரு தாய் மக்கள்
13. சின்னத் தாயி
14. மக்களைப் பெற்ற மகராசி
15. என்னைப் பெத்த ராசா
16. அன்புள்ள அப்பா
17. உத்தம புத்திரன்
18. அன்புச் சகோதரர்கள்
19. அபூர்வ சகோதரர்கள்
20. இரு சகோதரர்கள்
21. கோவை பிரதர்ஸ்
22. அண்ணன் ஒரு கோயில்
23. என் அண்ணன்
24. அண்ணா நீ என் தெய்வம்
25. சபாஷ் தம்பி
26. என் தம்பி
27. சின்னத் தம்பி
28. பெரிய தம்பி
29. சின்னத் தம்பி பெரிய தம்பி
30. உன்னால் முடியும் தம்பி
31. தம்பிக்கு எந்த ஊரு?
32. தம்பி பொண்டாட்டி
33. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
34. மனைவி ரெடி
35. தங்கை
36. தங்கைக்காக
37. என் தங்கை
38. என் தங்கை கல்யாணி
39. தங்கைக்கோர் கீதம்
40. கண்ணே பாப்பா
41. உள்ளத்தில் குழந்தையடி
42. பெற்றால்தான் பிள்ளையா?
43. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
44. குழந்தையும் தெய்வமும்
45. குழந்தைக்காக
46. தேவர் மகன்
47. தெய்வ மகன்
48. பிதாமகன்
49. பாட்டி சொல்லைத் தட்டாதே
50. மந்திரி குமாரி
51. மாப்பிள்ளை
52. சபாஷ் மாப்பிள்ளே
53. சின்ன மாப்பிள்ளை
54. தேடி வந்த மாப்பிள்ளை
55. பேர் சொல்லும் பிள்ளை
56. கணவன்
57. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
58. எங்க வீட்டுப் பிள்ளை
59. எங்க மாமா
60. மாமன் மகள்
61. மணிப்பூர் மாமியார்
62. மாமியார் வீடு
63. மாமியார் மெச்சிய மருமகள்
64. மேல் நாட்டு மருமகள்
65. சித்தி
66. சக்களத்தி
67. சொந்தம்
68. குடும்பத் தலைவன்
69. பணக்காரக் குடும்பம்

Thursday, August 17, 2006

உறவுகள் நூறு - தேன்கூடு - உறவுகள் - போட்டி

உறவுகள் நூறு
-------------------

"உறவுகள் ஃபார் டம்மீஸ்" என்ற தலைப்புதான் முதலில் கொடுக்கலாம் என்று நினைத்தேன். நமது இந்தியக் குடும்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவு முறைகள் இருக்கலாம் என்று எண்ணி, இதனை எழுத ஆரம்பித்த பின், அது நூறையும் தாண்டியது என்பது வியப்பிலாழ்த்தியது. எனக்குத் தெரிந்தபடி, நம்மிடையே காணப்படும் உறவு முறைகள் வருமாறு:-

1. அம்மா, 2. அன்னை, 3. தாய், 4. ஆத்தா - நம்மை இவ்வுலகிற்கு ஈன்றவள்
5. அப்பா, 6. தந்தை, 7. தகப்பன், 8.வாப்பா - நம்மை இவ்வுலகிற்கு ஈன்றவன்

9. சகோதரி - தாயின் உதரத்தில் கூடப் பிறந்தவள்
10. அக்கா, 11. தமக்கை - மூத்த சகோதரி
12. தங்கை - இளைய சகோதரி

13. சகோதரன் - தாயின் உதரத்தில் கூடப் பிறந்தவன்
14. அண்ணா, 15. தமையன் - மூத்த சகோதரன்
16. தம்பி, - இளைய சகோதரன்

17. மகள், 18. புதல்வி, 19. புத்திரி - பெண் குழந்தை/வாரிசு
20. மகன், 21. தனயன், 22. புதல்வன் - ஆண் குழந்தை/வாரிசு

23. சீமந்த புத்திரி, 24. ஜேஷ்ட புத்திரி - மூத்த மகன்
25. கனிஷ்ட புத்திரி - இளைய மகள்

26. புத்திரன் - 'புத்' என்னும் நரகத்தில் விழாமல் காப்பாற்றும் மகன்
27. தலைச்சன், 28. சீமந்த புத்திரன், 29. ஜேஷ்ட புத்திரன் - மூத்த மகன்
30. கனிஷ்ட புத்திரன் - இளைய மகன்

31. பாட்டி, 32. அவ்வா, 33. ஆயா - பெற்றோரின் தாய்
34. அம்மத்தா, 35. அம்மாயி, 36. அம்மம்மா 37. அம்மச்சி, 38. நானி - அம்மாவின் அம்மா / அம்மா வழிப் பாட்டி
39. அப்பத்தா, 40. அப்பாயி, 41. அப்பம்மா, 42. அப்பச்சி, 43. தாதி - அப்பாவின் அம்மா/ அப்பா வழிப் பாட்டி

44. தாத்தா - பெற்றோரின் தகப்பன்
45. அப்பப்பா - அப்பாவின் அப்பா
46. அம்மப்பா - அம்மாவின் அப்பா

47. அத்தை - அப்பாவின் சகோதரி
48. அத்திம்பேர், - அத்தையின் / அக்காவின் கணவர் (அத்தையின் அன்பர் = அத்திம்பேர்)
49. பாவா - அக்காவின் கணவர்

50. மாமி - மாமாவின் மனைவி
51. மாமா - அம்மாவின் சகோதரன், அக்காவின் கணவர்

52. சித்தி, 53. சின்னம்மா, 54. சிறு தாயார் - சித்தப்பவின் மனைவி / அம்மாவின் இளைய சகோதரி
55. சித்தப்பா - அப்பாவின் இளைய சகோதரர் / அம்மாவின் இளைய சகோதரியின் கணவர்

56. பெரியம்மா - பெரியப்பவின் மனைவி / அம்மாவின் மூத்த சகோதரி
57. பெரியப்பா - அப்பாவின் மூத்த சகோதரர் / அம்மாவின் மூத்த சகோதரியின் கணவர்

58. நாத்தனார், 59. நங்கையார் - கணவனது சகோதரி
60. மச்சான் - கணவன், சகோதரியின் கணவன்

61. மைத்துனி, 62. மச்சினி, 63, கொழுந்தியாள் - மனைவியின் சகோதரி
64. மைத்துனன், 65. மச்சினன், 66. கொழுந்தன் - மனைவியின் சகோதரன்

67. சகலை, 68. ஷட்டகர் - மனவியின் சகோதரியின் கணவர்
69. ஓரகத்தி, 70. ஓர்ப்படி - கணவனது சகோதரனின் மனைவி (ஒரகத்தி = ஒர் அகத்தில் இருக்கும் பெண்?)

71. மருமகள் - மகனின் மனைவி / ஆடவனுக்கு சகோதரியின் புதல்வி / பெண்மணிக்கு நாத்தனாரின் புதல்வி
72. மருமகன் - மகளின் கணவன் / ஆடவனுக்கு சகோதரியின் புதல்வன் / பெண்மணிக்கு நாத்தனாரின் புதல்வன்

73. மாட்டுப் பெண், 74. நாட்டுப் பெண் - மகனின் மனைவி
75. மாப்பிள்ளை - மகளின் கணவன் / தங்கையின் கணவன்

76. மாமியார் - கணவன் / மனவியின் தாய்
77. மாமனார் - கணவன் / மனவியின் தந்தை

78. சின்ன மாமியார் - மாமியாரின் தங்கை / சின்ன மாமனாரின் மனைவி
79. சின்ன மாமனார் - மாமனாரின் தம்பி / சின்ன மாமியாரின் கணவர்
80. பெரிய மாமியார் - மாமியாரின் அக்கா / பெரிய மாமனாரின் மனைவி
81. பெரிய மாமனார் - மாமனாரின் அண்ணா / பெரிய மாமியாரின் கணவர்

82. அத்தங்கா - அத்தையின் மகள்
83. அத்தான் - அத்தையின் மகன்
84. அம்மங்கா - மாமன் மகள்
85. அம்மாஞ்சி - மாமன் மகன்

86. அண்ணி, 87. மன்னி, 88. மதனி, 89. பாபி - அண்ணனின் மனைவி
90. தாயாதி, 91. பங்காளி - சித்தப்பா / பெரியப்பா வழித்தோன்றல்கள்

92. பேத்தி - மகனது / மகளின் புதல்வி (பேத்தி - தனது பெயரை உடையவள்)
93. கொள்ளுப் பேத்தி - பேரன் / பேத்தியின் புதல்வி
94. எள்ளுப் பேத்தி - பேரன் / பேத்தியின் பேத்தி

95. பேரன் - மகனது அல்லது மகளின் புதல்வன் (பேரன் - தனது பெயரை உடையவன்)
96. கொள்ளுப் பேரன் - பேரன் / பேத்தியின் புதல்வன்
97. எள்ளுப் பேரன் - பேரன் / பேத்தியின் பேரன்

98. கொள்ளுப் பாட்டி - தாத்தா/ பாட்டியின் அம்மா
99. எள்ளுப் பாட்டி - தாத்தா/ பாட்டியின் பாட்டி
100. கொள்ளுத் தாத்தா - தாத்தா/ பாட்டியின் அப்பா
101. எள்ளுத் தாத்தா - தாத்தா/ பாட்டியின் தாத்தா

102. அத்தை பாட்டி - அம்மா / அப்பாவின் அத்தை
103. மாமிப் பாட்டி - அம்மா / அப்பாவின் மாமி
104. மாமாத் தாத்தா - அம்மா / அப்பாவின் மாமா
105. சித்திப் பாட்டி - அம்மா / அப்பாவின் சித்தி

106. சம்பந்தி - மருமகள்/ மருமகனது பெற்றோர்

Friday, August 11, 2006

கிளைகளற்ற மரங்கள் - தேன் கூடு - உறவுகள் - கவிதைப் போட்டி



"அடுத்த வீட்டு ஆத்ரேயா,

அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;

சின்னக் குட்டி ஷில்பாவோ,

சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.

எனக்கென்று அப்படி

யாருண்டு இன்றிங்கு?" என்று கேட்ட

பேரப் பிள்ளையிடம்,

பேச்சை மாற்றும் வழி மறந்து,

பேதலித்து நின்றாள்,

முப்பது வருட முன்பாக

முதல் குழந்தையுடன் போதுமென

முடிவெடுத்த

முத்துப் பாட்டி.


- சிமுலேஷன்

Sunday, August 06, 2006

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதை போட்டி



பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதைப் போட்டி ---------------------------------------------------------------------------------------------
அப்பா மத்தியானம் சாப்பிட்ட பின், ஈஸிசேரில் சிறிது நேரம் தலையைச் சாய்ப்பது வழக்கம். கால் மீது கால் போட்டுக் கொண்டு தூங்கும் அப்பாவின் கால் கட்டைவிரல் நகத்தில் வந்து உடம்பை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பூனை. இது ஒரு நாள், இரண்டு நாளாக நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்தது கொண்டிருக்கிறது. அதனை பொதுவாகப் பூனை என்று சொல்லுவதைவிட, புஸ்ஸி என்று சொல்லுவதையே எல்லோரும் விரும்பினர். அனுதினமும் வந்து போகும் புஸ்ஸியின் போக்கில், சிறிது மாற்றங்கள் தென்படலாயின. அது 'மாதமா'யிருக்கிறதோ என்னமோ என்று அம்மா சொன்னாள்.

அம்மா சொன்னது சரியாய்த்தான் போயிற்று. அன்று அதிகாலை வாசலிலுள்ள நெல் ரூமிலிருந்து, புஸ்ஸியிடமிருந்து பலமான சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில், 'ம்மியாவ், ம்மியாவ்', என்று காதைக் கிழிக்கும் ஒரே சப்தம். புஸ்ஸி குட்டி போட்டு விட்டாள் போல உள்ளது என்று அம்மா போய்ப் பார்த்தாள். ஜாக்கிரதை என்று எச்சரித்து விட்டு, அப்பா நெல் மூட்டைகளுக்கிடையே எட்டிப் பார்த்து, புஸ்ஸி குட்டி போட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தார். அம்மா ஒரு கொட்டங்கச்சியில் பால் எடுத்து வந்து நெல் ரூமில் வைத்தாள். நாங்கள் அத்தனை பேரும் ஒடி வந்து, குட்டிகளைப் பார்க்க வந்தோம். மூட்டைகளின் பின்னால், எதோ கொசகொசவென்று தெரிந்தது. மொத்தம் ஆறு குட்டிகள், இல்லை, இல்லை ஏழு என்றான் அண்ணா. இத்தனை நாட்கள் சாதுவாக இருந்த புஸ்ஸி, ஆக்ரோஷமாக, பல்லைக் காட்டியபடி "பர்ர். பர்ர்ர்" என்று சப்தம் இட்டபோது, ஏதோ புலியைப் பார்ப்பது போல, நாங்களெல்லோரும் பயந்தே போய்விட்டோம். அப்பா எல்லோரையும் கவனமாக இருக்கும்படி மீண்டும் எச்சரித்தார். பூனைக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காலை டிபன் சாப்பிடாமலேயே, எல்லோரும் பள்ளிக்கு ஓடினோம்.

மாலை வேகவேகமாக வந்து, டிபன் முடித்து, பூனைக்குட்டிகளைப் பார்க்க ஓடினோம். இப்போது புஸ்ஸி அங்கு இல்லை. குட்டிகளைச் சற்றுக் கூர்மையாகப் பார்க்க முடிந்தது. இப்போது ஏண்ணிப் பார்த்தால், மொத்தம் ஐந்து தான்.

"அம்மா, அம்மா, இங்கே வாங்கோளேன், பூனைக்குட்டி ரெண்டைக் காணோம்".

"அம்மாப்பூனைதான் சாப்பிட்டிட்டுருக்கும்", என்றாள் கீரைக்காரப் பட்டம்மா.

"என்னது அம்மாப்பூனை சாப்பிட்டுருக்குமா? என்று ஒரே நேரத்தில் கேட்டொம்.

"ஆமாங்கண்ணு. குட்டி போட்ட பூனைக்கு சத்தி வேணுமில்லே. அதனாலே ஒண்ணு, ரெண்டு குட்டிகளை சாப்பிட்ரும்"

எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது. புஸ்ஸி வந்தாலே அதனைத் துரத்தி அடிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.

இப்போது குட்டிகள், மூட்டையின் மேல் தமது கூரான நகங்களைக்கொண்டு ஏற முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தன. ஏற முயற்சி செய்வதும், சறுக்கி விழுவதும் பார்க்க முகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த விளையாட்டில், ஐந்தில், இரண்டு மட்டும் கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தன.

"பங்கஜம் சித்தி மாதிரியே தூங்கிண்டுருக்கு பாரு" என்றான் அண்ணா.

"நீ மொதல்ல பங்கஜம் சித்தியப் பாத்திருக்கியாடா?" என்றாள் பத்மினி.

"தெரியாது. அம்மாதான் சொல்லுவா; பங்கஜம் சித்தி மாதிரி தூங்காதேன்னு."

கரெக்ட். அம்மா அடிக்கடி சொல்லுவதுண்டு. மைசூரிலுள்ள பங்கஜம் சித்தி, ஒரு தூங்குமூஞ்சியென்று. எப்போது பார்த்தாலும் தூங்கிண்டே இருப்பாளாம்.

இந்த இரண்டு தூங்குமூஞ்சிப் பூனைகளுக்கும், பங்கஜம் சித்தி போலெவே மூஞ்சியும் இருந்தன. என்ன, ஒண்ணு சின்னது; இண்ணோண்ணு கொஞ்சம் பெரிசு. எனவே, சின்னதுக்கு, 'சின்னப் பங்கஜம்' என்றும், பெரியதுக்குப் 'பெரிய பங்கஜம்' என்றும் பெயர் வைத்தோம்.

ஒரு பூனைக்குட்டி மட்டும், மூட்டை மீது பாதிவரை ஏறிவிட்டான். அங்கிருந்து மற்ற குட்டிகள் மீது ஒரே பாய்ச்சல். அப்பப்ப, நகங்களை வேறூ விரித்துக் காட்டுதல், பற்களை வைத்துக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்துதல் என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தான். வீரதீர பராக்கிரமசாலியானஇந்தப் பூனைக்குட்டிக்கு, 'சூரப்புலி' என்று பேர் வைத்தோம்.

அடுத்தவனும் கிட்டத்தட்ட சூரப்புலியாவே இருந்தான். ஆனால், உருவம் மட்டும் சற்றே வித்தியாசம். கொஞ்சம் கட்டி முட்டியாக இருந்தான். மிருதுவான உடம்பில், வயிற்றுப் பாகத்தில் எலும்புகள் கட்டியாகத் தெரியும். அதற்கு என்னமோ, அண்ணா 'ஆழ்வார்ப் பேட்டை' என்று பெயர் வைத்தான், அவனுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் தமிழ்ப் பாடத்தில் வந்த, "குடை" என்று வந்த பாடலில், வந்த ஆழ்வார்ப் பேட்டை என்ற வந்த பெயர் பிடித்திருந்தது. அதனையே இரண்டு நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பூனைக்குட்டிக்குப் பேராக வத்து விட்டான். அவன் எப்போது அப்படித்தான். பாடத்தில் ஏதேனும், புதுமையாகப் பேர் ஒன்று கிடைத்து விட்டால் போதும், அதனையே அலப்பிக்கொண்டிருப்பான். 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', என்று அக்காவின் நண்பர் வீட்டுக்குச் சென்று உளறிக் கொண்டிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது ஒரு தனிக் கதை.

நாங்கள் எல்லோருமே கடைசியாகப் பார்த்தது ஒரு கலக்கலான கரும்பூனைக்குட்டி. இந்தக் கரும்பூனக்குட்டி ரொம்ப ரொம்பவே அழகாக இருந்தது. ஸாஃப்டாக, அப்போதுதான் குளித்துவிட்டு வத்த கைக்குழந்தையைப் போல இருந்தது. அதனைத் தொட்டுப் பார்க்க எல்லொருக்கும் ஆசை. அண்ணா, தான் ஒரு தைரியசாலி என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று, அந்தக் கரும்பூனைக்குட்டியைக் கையால் தூக்கினான், "ம்மியாவ். மீயாவ்" எண்று கத்தத் தொடங்கின அடுத்த நிமிடம், எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் வந்தது புஸ்ஸி. அண்ணா கையில் இருந்த குட்டியைப் பாய்த்து வந்து தனது வாயால் கவ்வி எடுத்து சென்றது.

"போதும் பூனையோட விளையாடினது. போய்த் தூங்குங்கோ" என்று அப்பா சப்தம் போட்டார்.

மறுநாள் நெல் ரூமில் போய்ப் பார்த்தால், புஸ்ஸியையும் காணவில்லை. குட்டிகளையும் காணவில்லை. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறும்தான் ஆஃபீஸ் ரூமுலிருந்து, குட்டிகளின் சப்தம் வருவதைப் பார்த்தோம். 'தாய்ப் பூனை, குட்டிகளை, இப்படி அடிக்கடி இடம் மாற்றி கொண்டேயிருக்கும்', என்று பட்டம்மாவிடம் சொல்லத் தெரிந்து கொண்டோம். புஸ்ஸி வந்து அந்தக் கரும்பூனைக்குட்டியை நாக்கால் நக்கிக் கொண்டேயிருந்தது. இந்தப் பூனைக் குட்டியிடம், ஒரு வெள்ளை முடி கூடக் கிடையாது. அத்தனையும் கருப்பு முடி. புஸு, புஸுவெனெ பார்க்கவே ரொம்ப அழகாக இருந்த, இந்தக் குட்டியை மட்டும் புஸ்ஸி, தனியாகக் கவனிப்பது போலத் தோன்றியது. 'அழகான குட்டி என்று அதிகப் பெருமையா? இல்லை, கறுப்பாக இருக்கும் குட்டிக்கு தனிக் கவனிப்பா', என்று புரியவில்லை. ஆனால், புஸ்ஸிக்கு, இந்தக் கறுப்பன் மட்டும் செல்லம் என்று புரிந்தது. எங்களுக்கும் செல்லமாகி விட்ட, இந்த கரும்பூனக்குட்டிக்கு 'செல்லம்' என்றே பெயர் வைத்தோம். எப்படியோ, ஐந்து குட்டிகளுக்கும் பெயர் வைக்கும் படலம் அன்று முடிந்தது.

வீட்டுப் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிட்டு, ஓடோடி வருவோம். அம்மாவிடம் கேட்டு, கொட்டாங்கச்சியில் பால் வைப்போம். சின்னப் பங்கஜமும், பெரிய பங்கஜமும் பல நாட்கள் பால் குடிக்கக்கூட எழுந்து வராமல், தூங்கிக் கொண்டேயிருக்கும். சூரப்புலிக்கும், ஆழ்வார்ப் பேட்டைக்கும் பால் குடிப்பதிலே, பலத்த சண்டை நடக்கும். செல்லம் மட்டும் தனியாக ஒய்யாரமாக வந்து பால் குடிக்கும் அழகே தனிதான். குட்டிகள் பெரிதாகப் பெரிதாகப் புஸ்ஸியின் வருகை குறைந்து கொண்டே வரத் தொடங்கியது.

ஐந்து பூனைக்குட்டிகளுக்கும் விளையாட்டுகள் பல காண்பிப்போம். சோடா மூடிகளை, ஹாலின் இந்தப் பக்கதிலிருந்து அந்தப் பக்கத்திற்கு, முன்னங்கால்களால், ட்ரிபிள் பண்ணிக் கொண்டு செல்வது பார்க்க, மிகவும் நன்றாக இருக்கும்.அப்புறம் சணல் உருண்டைகளைப் போட்டு அவற்றைக் குதறிக், குதறி விளயாடும் அழகு இருக்கிறதே. அதனைப் பார்த்தால்தான் புரியும். சொன்னால் புரியாது. உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும் செல்லத்தைக் காட்டி, அதன் புகழ் பாடாமல் இருக்கவே மாட்டோம்.

அன்றைக்குச் சாப்பிடும்போது, சித்தப்பா கல்யாணம் குறித்து அப்பா சொன்னார், மெட்ராஸில் நடக்கவிருக்கும் வேணுச் சித்தப்பா கல்யாணம் என்றதுமே எல்லோரும் துள்ளிக் குதித்தோம். வெள்ளியன்று மாலை கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று, அக்கா பூனைக்குட்டிகளை என்ன செய்வது என்று கேட்டாள். அவள் எங்களுடைய எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளமாட்டாள். ஆனால், இன்று அவள் எங்கள் பூனைக்குட்டிகளைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி, ஒரு முக்கியமான சமயத்தில் விவாதப் பொருளாக எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

"அப்பா, அப்பா, பூனையெல்லாம் ஒரு கூடையில் போட்டு, மெட்ராஸுக்கு எடுத்துக் கொண்டு போலாம் அப்பா" என்றான் அண்ணா.

"பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போலாமே", என்றாள் அக்கா.

"ஆமா, அவாதான் ரொம்பப் பாத்துக் கிழிச்சுடப் போறா. பால்காரியிடம் கொடுத்துட்டுப் போலாம்", என்றாள் அம்மா.

"கோவாப்ரேடிவ் சூப்பர் மார்க்கெட்டில் விட்டாலென்ன? ராஜேந்திரன் அன்னிக்கே கேட்டார். கடையில் எலித் தொந்தரவு ரொம்ப இருக்குன்னு" என்றார் அப்பா.

"அது கூட நல்ல ஐடியாதான்; நாமளும் நாலு நாள் கழிச்சி வந்து அவன்கிட்டேயிருந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று அம்மா, முடிவாகச் சொன்னாள்.

சாயந்தரம் சூப்பர் மார்க்கெட் போய் அப்பா ராஜேந்திரனிடம் பேசிவிட்டு வந்த்தார். அவர் இரண்டு பூனைகளை மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னாராம். பியூன் பழனியப்பன் துணை கொண்டு, சின்னப் பங்கஜத்தையும், பெரிய பங்கஜத்தையும் கொண்டு போய் சூப்பர் மார்க்கட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தோம். எங்களுக்கு என்னாவோ போல இருந்தது. ஆனாலும், செல்லம், ஆழ்வார்ப்பேட்டை, சூரப்புலி இன்னமும் எங்களிடமே இருந்ததால் ரொம்பப் பெரியதாக ஃபீல் செய்யவில்லை.

மறுநாள் காலை பூனைகளின் சப்தம் கேட்டு எழுந்தோம். கீரைக்காரப் பட்டம்மாவிடம் அம்மா பேசிக் கொண்டிருந்தாள்.

"பார்த்துப் பத்திரமா எடுத்துட்டுப் போ பட்டம்மா"

தனது காலிக் கூடையில், சும்மாட்டுத் துணியை வாகாக வைத்து, ஆழ்வார்ப்பேட்டையையும், சூரப் புலியையும் வைத்துத் தூக்கிச் சென்றாள். இப்போது செல்லம் மட்டும் தனியாக, மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுருந்தது. சுமார் எட்டு மணியிருக்கும். பால்காரி தனம் வந்து செல்லத்தையும் தூக்கிச் சென்றாள். எப்படித்தான் நாலு நாட்கள் இவர்களைப் பிரிந்து இருக்கப் போகிறோமோ என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதே, வெள்ளோட்டிலிருந்து, பாட்டியுடன் ராஜன் சித்தப்பாவின் பையன்கள் கண்ணனும் கோபியும் வந்தார்கள். மாலையில் நீலகிரி எக்ஸ்பிரசில், எல்லொரும் மெட்ராஸ் கிளம்பினோம். சித்தப்பா கல்யாணம் படு ஜோராக நடை பெற்றாலும் என்னவோ போல, சுரத்தில்லாமல் இருந்தோம்.

பாட்டி கூடக் கேட்டாள், ஏண்டி, ராஜம், கொழந்தைங்க ரொம்ப டல்லா இருக்காளே. உடம்புக்கு ஒண்ணுமில்லேயே"

"நேத்திக்குத்தான் சொன்னேனே அம்மா. பூனைக்குட்டிகளப்பத்தி. அதுகள விட்டுட்டு வந்தது, இதுகளுக்குத் தாங்கலே. வேற ஒண்ணுமில்லே"

"வேற வேலை இல்லாயாக்கும்? நாலுக்கும் பாட்டு படிப்புண்ணு ஒண்ணுமில்லாம, பூனையோடயே வெளயாடிண்டுருக்கணுமாமா?". கேட்ட பாட்டியை நாங்கள் முறைத்துப் பார்த்தோம்.

சித்தப்பா கல்யாணம் முடிந்து, திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ப்ளூவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம். காலையில் கோயமுத்தூரிலேயே டிபன் சாப்பிட்டுவிட்டதால், வந்தவுடன் குளித்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பினோம். மாலை ஸ்கூலிலிருந்து வந்தவுடன், சூப்பர் மார்க்கெட்டுக்குப் படையெடுத்தோம். ராஜேந்திரன் இல்லை அங்கே. சூபர்வைசர்தான் இருந்தார். பூனை எங்கே என்றோம். 'அங்கேதான் எங்கியாவது இருக்கும்', என்றும் 'எனக்கு தெரியாது' என்றும் மாற்றி மாற்றிக் குழப்பிச் சொன்னார். அந்த மார்க்கெட்டுக்குள் எங்களால் ஒன்றும் தேட முடியவில்ல்லை. காய்கறி மார்க்கெட்டுக்குப் போய், பட்டம்மா இருக்கிறாளா என்று பார்த்தால், அவளும் ஊருக்குப் போய் விட்டாளாம்.

பால் கொடுக்க, தனம் ராத்திரி எட்டு மணி சுமாருக்கு வந்தாள். செல்லத்தைத்தான் கொடுக்க வந்திருக்கிறாளோ என்று ஆவலாக ஓடினோம். அவள்பாட்டுக்கு பழைய பாக்கி பால் ஊத்திவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தாள். "பூனை எங்கே" பூனை எங்கே", என்று மூணு பேரும் கத்தினோம். அதுவா, முந்தா நேத்திக்கு செட்டியாரோட லாரிக்கு அடிலே மாட்டிகிச்சி. அங்கேயே ஒடனே செத்து போச்சு" என்றபடி நடையைக் கட்டினாள்.

"என்னது அம்மா; இப்படி சொல்றா. எல்லோரும் பாத்துண்டேயிருக்கோம்"

"சரிடா; நம்ம கையிலே என்ன இருக்கு? நாம இப்ப என்ன பண்ண முடியும்? எல்லாரும் சாப்பிட வாங்கோ"

தனக்கு சாப்பாடு வேண்டாமென்று கூறி அண்ணா போய்ப் படுத்துக் கொண்டான். பத்மினியோ, தனக்கு வயித்தை வலிக்கிறது; மோர் மட்டும் போதுமென்று கூறிவிட்டாள் எனக்கும்கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால், சாப்பிட மாட்டேனென்றால் அம்மா அடிப்பாள். அடியைவிட திட்டுதான் பயங்கரமாக இருக்கும்.

ராத்திரி இரண்டு மணியிருக்கும் அண்ணா என்னவோ அனத்திக் கொண்டேயிருந்தான். "செல்லம்,...செல்லம்" அப்டீன்னு சொன்னது போலத் தோன்றியது. அம்மா தொட்டுப் பார்த்தாள்.

"நரேஷுக்கு ஜொரம் அடிக்கறது பாருங்கோ. அந்தக் குரோசின் பாட்டில எடுத்துக் கொடுக்கிறேளா?", என்று அம்மா,அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது சன்னமாகக் காதில் விழுந்தது.

-------0-------

Friday, June 30, 2006

மக்கள் குறை தீர்க்க மயிலை எம்.எல்.ஏவின் வலைப்பதிவு




தனது தொகுதி மக்கள் குறை தீர்க்கும் பொருட்டு, மயில எம்.எல்.ஏ, எஸ்.வி.சேகர் ஒரு வலைப்பதிவு துவக்கியிள்ளார்.

இதன் url: http://mylaporemla.blogspot.com/

இதற்கு முன்னர் இந்தியாவில், மக்கள் பிரதிநிதிகள், புதிய தொழில்நுட்பத்தினை இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்களாவென்று தெரியவில்லை.

- சிமுலேஷன்

Wednesday, May 31, 2006

வலைப்பூ குறித்த நூல் ஆய்வுப் பணிக்காக...

"அன்பு வலைப்பதிவாளர்களே!
ஓர் ஆய்வுக்காக இந்தப்பதிவு.வலைப்பூ குறித்த நூல் ஆய்வுப் பணியொன்றில் உள்ளேன்.
வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பூவினை இந்த ஆய்வுக்காக சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் பட்சத்தில், ஆய்வுநூலில் தங்கள் வலைப்பதிவினை சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்து, கீழே கொடுத்த விபரங்களை பூர்த்தி செய்து, தங்கள் வலைப்பூவில் தனிப்பதிவாக இட்டு, அதன் சுட்டியினை(url) இங்கே பின்னூட்டத்தில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்ற மதுமிதா அவர்களின் வேண்டுகோளினையேற்று...

வலைப்பதிவர் பெயர்: சுந்தரராமன்

வலைப்பூ பெயர்: சிமுலேஷன் படைப்புகள்

சுட்டி(url): http://simulationpadaippugal.blogspot.com

ஊர்: பிறந்தது-மேட்டுப்பாளயம் (கோயமுத்தூர்)-25 வருடங்களுக்கு மேலாக வசிப்பது சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 20.08.2005

இது எத்தனையாவது பதிவு: 45

இப்பதிவின் சுட்டி(url): http://www.blogger.com/post-create.g?blogID=13812519

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பத்தில் மரத்தடியில் உறுப்பினர். அடிக்கடி வலைப்பதிவு என்ற வார்த்தையப் பற்றிக் கேள்விப்பட்டதால் அது என்னவென்று புரிந்து, அதன் அருமை றிந்து, அங்கும் காலடிபதிக்க ஆசை.

சந்தித்த அனுபவங்கள்: அனுபவங்களைப் பகிற்கிறேன்; (மற்றவர்கள்) பகிர்ந்தவற்றை அனுபவிக்கின்றேன்

பெற்ற நண்பர்கள்: ஒரு சிலர் (அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் சிலர் பலராகலாம்)

கற்றவை: ஒவ்வொரு நாளும் / ஒவ்வொரு ஆயிரம் நொடிகளிலும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் புதுப் புது விஷயங்கள்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சொல்ல ஒன்றுமில்லை

இனி செய்ய நினைப்பவை: ஆங்கிலத்திலுமோர் வலைப்பதிவு

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சுத்திகரிப்பு ஆலையில் கெமிகல் எஞ்ஜினீயராகத் துவங்கிய பணி, பின்னர் அங்கேயே மென்பொருள் துறையில் நுழைந்தது - உபயம் சிமுலேஷன் டெக்னாலஜி. தற்போது கற்றவற்றை மறந்துவிடாதபடி எண்ணெய் மற்றும் எரிசக்திக் துறைகளுக்கான மென்பொருள் ஆலோசகர் பணி.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: பொழுதுபோக்காய் "தமிழ்த் திரைப்பாடல்களில் இராகங்கள்" என்று பல வருடங்களாகத் தொகுத்தவற்றை, புத்தகமாகப் போடக் கிடைத்த தைரியம் மரத்தடியிலும், வலைப்பதிவிலும் எழுதிய பின்னரே கிடைத்தது. குடும்பத்தினர் ஒத்துழைப்பு அடுத்த வலிவான காரணம். மிகவும் ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சியான விஷயம் RagaChintamani என்ற பெயரில் ஆங்கிலத்தில் சொந்தச் செலவில் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு, மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்தது. 160 இராகங்களில் அமைந்த 1800 பாடல்களின் விபரங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் இரண்டாம் பதிப்புக்கு, அலுவலக வேலைப்பளுவினால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

Tuesday, April 11, 2006

ஊழிக்கூத்து



மகாகவி சுப்ரமணிய பாரதியின் "ஊழிக்கூத்து" என்ற தலைப்பில் அமைந்த "வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட" என்ற பாடல் எமக்குப் பிடித்த பாடலாகும், இந்தப் பாடலுக்கு எங்கள் அம்மா, சந்திரகௌன்ஸ் இராகத்தில் மெட்டமைத்துக் கொடுத்த பின்னர் வீட்டில் எல்லோரும் அதனைப் பாடிக் கொண்டேயிருப்போம். சகோதரிகள் எந்த இடத்தில் பாரதிப் பாடல் போட்டி நடை பெற்றாலும், கலந்து கொண்டு இந்தப் பாடலைப் பாடிப் பரிசுகளை வாங்கி வந்து விடுவார்கள்.

இந்தப் பாடலின் வரிகள் இங்கே.

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

இதனை ஒலி வடிவில் கேட்க இங்கே.




பாடல்: மகாகவி சுப்ரமணிய பாரதி
இசையமைப்பு: எனது அம்மா
பாடியவர்: எனது முதல் மகன் ஆதித்யா
பின்னணி: எனது இரண்டாம் மகன் அநிருத்
இராகம்: சந்திரகௌன்ஸ்
தாளம்: ரூபகம்

Tuesday, April 04, 2006

தய்யரத் தய்யா...தய்யரத் தய்யா - தேவையா இது?

"காற்றினிலே வரும் கீதம்" என்ற படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடல் விருப்பமான பாடலாகும்.அதனை வலையிலே தேடிய போது கிடைக்கவில்லை. நம்மைப் போல யாராவது தேடினால்.....




இந்தப் பாடலின் இராகம் என்னவென்று தெரியுமா? இராகத்தின் பெயர் "சாவித்ரி"

- சிமுலேஷன்

Sunday, March 26, 2006

உபவாசக் குரங்குகளும் உன்னதத் திட்டமிடலும்



ஒரு நாள் குரங்குக் கூட்டம் ஒன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தன. கூட்டத்திலுள்ள எல்லாக் குரங்குகளும் அதற்கு ஒத்துக் கொண்டன.

"உண்ணாவிரதம் முடிக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுத்தான் விரதத்தை முடிக்க வேண்டும். எனெவே, அதற்குத் தேவையான உணவை இப்போதே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்." என்றது தலைக் குரங்கு.

எல்லாக் குரங்குகளும் "ஆமாம்; ஆமாம்" என்றன.

குட்டிக் குரங்குக் கூட்டமொன்று உடனே தேடிச் சென்று, பழுத்த, சுவையான வாழைப் பழத்தார் ஒன்றினைக் கொண்டு வந்து சேர்த்தன.

"நான் நினைகின்றேன். அவரவர் பங்கை இப்போதே உண்ணாவிரதம் தொடங்கும் முன்னரே பிரித்துக் கொடுப்பது நல்லது. உண்ணாவிரதம் முடிந்த பின்பு எவ்வளவு களைப்பாக இருப்போம் தெரியுமா? அப்போது பிரித்துக் கொடுப்பது என்பது மிகவும் அலுப்பான வேலையாகும்" என்றது, தலையின் மனைவி.

எல்லாக் குரங்களும், இதுவல்லவா, யோசனை! என்று தங்கள் பங்கு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டன.

"நாம் ஏன், வாழப் பழத்தை உரித்துத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது" என்றது ஒரு இளம் குரங்கு.

"ஆமாம்; ஆமாம். இதுவும் சரியான யோசனைதான் என்றது மற்றோர் குரங்கு.

"சரி; தோலை உரித்து வைத்துக் கொள்வோம். ஆனால் யாரும் விரதம் முடிவதற்குள் சாப்பிட்டு விடக்கூடாது" என்றது தலை.

சரி. மாலை விரதம் முடிந்ததவுடன் சாப்பிட வேண்டுமென்ற முடிவுடன், தோலை உரித்த பழத்துடன், தயார் நிலயில் இருந்தன குரங்குகள்.

ஒரே ஒரு குட்டிக் குரங்கு மட்டும், தனது அப்பாவிடம், "நான் வாழைப் பழத்தை சும்மா, வாயில் வைத்துக் கொள்கின்றேன். சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். சரியா ப்ளீஸ்?" என்று கேட்டது.

"நல்ல யோசனை. எல்லோரும் இதே மாதிரியே செய்யலாம். உண்ணாவிரதம் முடிந்தவுடன், பழத்தை கடித்துச் சாப்பிட எளிதான வழி இதுதான்" என்றது தலை.

பின்னர் எல்லாக் குரங்குகளும் வாழைப் பழத்தின் தோலை உரித்து, பழத்தை வாயில் வைத்துக் கொண்டன. இப்போது திரு, திருவென்று ஒவ்வொரு குரங்கும் மற்ற குரங்கை பார்த்து அசடு வழிந்தன.

அடுத்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!!!

- 'தி ஹிண்டு'வின் 'யங் வேர்ல்ட்'டில் வந்த ஒரு கர்நாடக நாட்டுக் கதை

- சிமுலேஷன்