Tuesday, December 19, 2006

குறும்புப் போட்டிக்கு கூட்டுத் தயாரிப்பு

தேன்கூடு+தமிழோவியம் "குறும்பு" போட்டிக்கு, டாபிகலாக ஏதேனும் படைக்க எண்ணம். ஆனால், இது ஒரு கூட்டுத் தயாரிப்பு; படங்கள் உதவி மட்டுமே என்னிடமிருந்து; குறும்பான கமெண்ட் கொடுத்துக் கலக்கப் போவது நீங்கள்தான். எங்கே உங்கள் குறும்புக் கமெண்டுகளை பின்னுட்டமாக இடுங்கள் பார்க்கலாம்.

- சிமுலேஷன்

1.
2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

ரெடி..... ஒன்...ட்டூ...த்ரீ.... ஸ்டார்ட்....

Thursday, December 14, 2006

புகைப்படப் புதிர்-05 - இந்திய இசைக் கருவிகள்

இசை விழா நடக்கும் இந்நாட்களில் இசைக் கருவிகளை வைத்து ஒரு புதிர்.



01. தயிரைக் கடைந்த சர்தார்.

02. எத்தனை முகமெனெ எண்ணினால் போயிற்று.

03. கொத்தமங்கலத்தில் பாணம் விடமுடியுமா?

04. மூஞ்சிக்கும் வீணைக்கும் என்ன முடிச்சு?

05. சூரியகாந்தியில் பீட்டர் விட்ட பாடல்.

06. ஆமாஞ்சாமிகளின் ராஜ்ஜியம்.


07. இதில் சுநாதவினோதினி இராகம் வாசிப்பது சுலபமோ?


08. காஷ்மீர்ப்பெண்ணே. எக்ச்யூஸ் மீ. நீங்க எந்த காலேஜ்?

09. ஒய்.ஜி.எம்மின் மர்மத் தொடர்.




10. ஸ்வரங்களே மண்டலமானால்...

- சிமுலேஷன்


Thursday, December 07, 2006

தமிழிசை - ஒரு மீள் பதிவு

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அருமையான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.
பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது

இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸுஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும். தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:

பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும். ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும். புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.
மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:

நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.
பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.


பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

- சிமுலேஷன்

Saturday, December 02, 2006

புகைப்படப் புதிர்-05 - Ad Club-Business Line Quiz 2006

இன்று (02.12.2006) சென்னை சவேரா ஹோட்டலில், அட்-கிளப்பும், பிஸினஸ் லைன் வர்த்தக இதழும் சேர்ந்து , தங்களது வருடாந்திர 'அட்-கிளப்-பிஸினஸ் லைன் குவிஸ்', நிகழ்ச்சியினை நடத்தின.

அதிலிருந்து சில கேள்விகள். விடை தெரிந்தால் சொல்லுங்கள்.


01. இந்தப் பிரபலம் யார்? அவர் விளம்பரம் தருவது எதற்காக?



02. இந்த ராஜா, எந்த நிறுவனத்தின் (mascot) சின்னம்?


03. இந்த சின்னம் எந்த நிறுவனத்திற்குரியது?



04. இந்தப் பானம் எங்கு, எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது?



05. இந்த நிறுவந்த்தின் பெயரிலுள்ள TEN என்ற வார்த்தை எவற்றைக் குறிக்கின்றது?





மேலும் பல புதிய கேள்விகள் அடுத்த பதிவில்.

- சிமுலேஷன்

Wednesday, November 29, 2006

புகைப்படப் புதிர்-04


இவர்தான் அவர்!










Monday, November 20, 2006

2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்

2007ஆம் வருடம் சென்னையில் இடைத்தேர்தல் ஒன்று வருகின்றது. வழக்கமாகவே, இடைத்தேர்தலுக்குண்டான பரபரப்பில் மத்திய, மாநிலக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்கின்றன. வலைபதிவர்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக, இடைத் தேர்தலில் நிற்க சென்னை வலைப்பதிவர்கள் சங்கமும் தீர்மானம் செய்து, உறுப்பினர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மனுச் செய்வதற்கும் அன்றே கடைசி நாள்.

பாலபாரதி: இன்றைக்கு நாம ஒரு முக்கியமான வட்டத்தை அடைந்திருக்கின்றோம். அடுத்தபடியாக என்ன வட்டத்துக்குச் செல்வதுன்னு முடிவு பண்ணவேண்டிய நேரமிது. நான் சும்மா ஒரு மணி நேரம் மட்டும் பேசி, விவாதத்தை துவக்கி வைக்கிறேன். அதுக்கப்புறம், எல்லோரும் ஆளுக்கு ஒரு அம்பது முதல் அறுவது வினாடிகள் வரைக்கும் தாராளமாகப் பேசலாம்.

பொன்ஸ்: என்ன வட்டம்? என்ன சொல்றாரு தலைவர்?

வரவணையான்: அதுவா.. ஒண்ணுமில்லை. "முக்கியமான கட்டத்தை அடைஞ்சிருக்கோம்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?", அப்படின்னு சொல்லிச் சொல்லிப் போரடிச்சுருச்சாம். சரி. சரி சொந்தச் செலவில் சூனியம வச்சுக்க அடுத்த ஆளைக் கூப்பிடுங்கப்பா.

மா.சிவக்குமார்: நாங்க இந்தக் கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு ஒரு சோதனை வைச்சிருந்தோம். கூட்டம் நடக்கற இந்த ஹாலுக்கு வர்ற வழியிலே கொஞ்சம் 'சாணம்' எல்லாம் போட்டு வச்சிருந்தோம். அதை மிதிச்ச சில அப்பாவி கிராமத்து வலைபதிவர்கள், ஒண்ணுமே பண்ணாம ஒழுங்கு மரியாதையா வந்துட்டாங்க. ஆனா, ஒரு சில படிச்ச பட்டணத்து வலைபதிவர்கள் மட்டும், செருப்பை, தண்ணிய ஊத்திக் கழுவிட்டு வத்திருக்காங்க. இந்த மாதிரி ஆட்களாலதான், சுற்றுப் புறச் சூழலும் கெட்டு, நாடும் கெட்டுப் போகுது. அதனால அவங்க இந்தத் தேர்தல்ல நின்னா யாரும் ஆதரிக்கக் கூடாது.

டோண்டு இராகவன்: அது சரி. தேர்தல் விண்ணப்பப் படிவத்தை யாராவது பார்த்தீங்களா? ஒரு சினிமாபட விளம்பரத்தோட நோட்டீஸ் பின்னாலையா, இந்த மாதிரி விண்ணப்பம் அச்சடிப்பாங்க? சினிமா படத்தோடப் பேரைப் பாருங்க. "அண்ணா நீ என் தெய்வம்". வேகமாச் சொல்லிப் பாருங்க. அனானின்னு வரும். அதைக் கூடப் பொருத்துக்கலாம். ஆனா, வேட்பாளர்கள் விவரம் கேட்கற இடத்திலே, வேட்பாளரின் வேலை= Government, Private, Others அப்படீன்னு போட்டிருக்கு. இதில Othersனு ஒரு option இருக்கே; ரொம்ப ரொம்ப ஆபத்தானது. அத முதல்ல தூக்கச் சொல்லணும்.

பால பாரதி: முதல்ல தேர்தல் அறிக்கை தயார் செய்யணும். அந்த அறிக்கையிலே என்ன ஃபான்ட் உபயோகப்படுத்தணும், எவ்வளவு மார்ஜின் விடணும், என்ன கலர் அப்படீங்கறதையெல்லாம் இப்பவே முடிவு பண்ணிடனும். ஆனா, மொத்தத்திலே நம்ம அறிக்கை மட்டும் வித்தியாசமா இருக்கணும்.

விக்கி என்கிற விக்னேஷ் தலமையில், "சென்னை வலைப்பதிவர் தேர்தல் அறிக்கை அழகுபடுத்தும் ஆயத்தக் குழு", அந்த நிமிடமே பொறுப்பேற்று கொள்கின்றது.

இராமகி: என்னப்பா, அறிக்கைக்காக குழு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டீங்க. ஆனா, அதுல சொல்ல வேண்டிய விஷயம் என்னென்னன்னு யோசிச்சீங்களா? ஆளுக்கு ஒரு நல்ல கருத்தாச் சொல்லுங்க.

ரோசா வசந்த்: நான் முதல்ல தேர்தலே வேணுமான்னு கேக்கறேன்.

லக்கிலுக்: வலைப்பதுவு சுனாமியார் பாசறை சார்பாக நாலு சீட்டு கொடுத்திடுங்க. இல்லாட்டி, கொலசாமிக் குத்தத்துக்கு ஆளாயிடுவீங்களோன்னு அச்சப்படறேன்.

டி.பி.ஆர்.ஜோசஃப்: டில்லி, மும்பை, கொல்கத்தா, இங்கெல்லாம், வலைப்பதிவர்கள் தேர்தல்லே மாநகராட்சியயே கைப்பற்றியிருக்காங்க. நாமளும் உடனடியாகப் பெரிய அளவில் சிந்திச்சு, சமுதாயத்துக்கு பயனளிக்கும்படியாக பாராளு மன்றத்துக்குக் குறி வைக்கணும்.

மா.சிவக்குமார்: தேர்தல்னாலே சத்துணவுத் திட்டம்தான் எல்லோரும் கை வைக்கிற இடம். நாம ஜெயிச்சா, சத்துணவுத் திட்டத்திலே ஓட்ஸ்/உளுத்தங் கஞ்சி அப்புறம் வேகவைத்த மணிலாக் கொட்டை, ஆட்டுப்பால் தருவோம் அப்படீன்னு சொன்னா எப்படி இருக்கும்? அப்புறம் இராணிப் பேட்டைதொகுதியிலிருந்து மொதல்ல பிரச்சாரத்தை ஆரம்பிக்கணும்.

மரபூர்: 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பழமொழி. அதனால, கோவில் நிவாரணப் பணியிலே ஒரு நாள் கலந்துக்கிட்டாக் கூட, வாழ்நாள் பூரா, தினமும் பிரசாதம் அப்படீன்னு நம்ம அறிக்கையிலே சொல்லலாமா?

பால பாரதி: இல்லை. இல்லை. அதெல்லாம், தவறான கருத்துக்களை ஆவணப்படுத்துவதற்கு ஒரு முன்னுதாரணமாப் போய் விடும். இப்படித்தான், ஒருத்தர், கோயில்களில், கற்பூரம் ஏத்துவது, இந்துமத நம்பிக்கை அப்படின்னு எழுதி வச்சுட்டுப் போய்ட்டார். இதைப் படிக்கிற அடுத்த தலை முறை, அதை அப்படியே நம்பினா என்ன ஆகும்?

ஓகை: இந்த இடத்திலதான், நான் ஒரு மாற்றுக் கருத்துப் பதிய விரும்புறேன்.

சிமுலேஷன்: எதுக்கு நாம தேர்தல்ல எல்லாம் போட்டி போடணும்? அப்புறம் ஜெயிச்சுட்டா தேர்தல் அறிக்கையெல்லாம் நிறைவேத்தி வைக்கணும்.....சரி. இல்லாட்டி இன்னொரு ஐடியா. தேர்தல் அறிக்கை அப்படீன்னு சொல்லிட்டு, சும்மா ப்ளாங் பேப்பரை கொடுத்திடலாமே. யாராவது கேட்டாக் கூட, இது ப்ளாங்க் பேப்பர் இல்லை. ப்ளாக் பேப்பர் அப்படீன்னு டக்குனு சொல்லிடலாம். ஜெயிச்சாலும் நிறைவேத்தணும்னு ஒரு கட்டாயமுமில்லே.

சிவஞானம்ஜி: இவ்வளவு கஷ்டப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கறதுக்கு, பேசாம, வேற எந்தக் கட்சி அறிக்கையிலாவது, நாம, 'பின்னூட்ட அறிக்கை' அப்படீன்னு சிம்பிளா கொடுத்துட்டுப் போயிடலாம்.

கூட்டத்தில் இடையே இடைவேளை விடப்படுகின்றது. புதியதாக ஒருவர் வந்து, 'நான் வலப்பதிவர் இல்லை; ஆனால் தீவிர வாசகர்.உங்களுக்கெல்லாம் சாப்பிட ஏதாவது ஸ்பான்ஸர் செய்ய விரும்பறேன்", என்று சொல்லி எல்லோருக்கும் சுடச் சுட இட்லி, வடை வழங்குகின்றார். வலைப்பதிவர் சந்த்திப்பில் போண்டா சாப்பிட்டிருக்கோம், மசால் வடை சாப்பிட்டிருகுக்கோம், பிஸ்கெட் சாப்பிட்டிருக்கோம். இப்படியெல்லாம், சுடச் சுட இட்லி, வடையெல்லாம் கொடுத்து அசத்தறாங்களே; ஸ்பான்ஸர்ஸ் வாழ்க", என்று சொல்லிக் கொண்டே எல்லோரும், இரசித்துச் சாப்பிடுகிறார்கள்.

அரைமணி நேரத்தில், தமிழ் மணத்தில் செய்திகளை முந்தித் தரும் இட்லி வடையின் ஒரு புதிய பதிவு வெளியாகின்றது.

"சென்னை வலைப்பதிவர்கள் இடைத்தேர்தலில் கலந்து கொள்ள முடியாத பரிதாபம். மயக்க மருந்து கலந்த இட்லி, வடை சாப்பிட்டதால், தேர்தலில் மனுச் செய்யும் நேரத்தைக் கோட்டை விட்டனர்."

டிஸ்கி: மக்களே, "தமிழ் வலைபதிவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்பக் கம்மி" என்று, ஒரு சிலர் கூறித் திரிகின்றார்கள். அதனைப் பொய்யாக்குவதும், மெய்யாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கின்றது.

- சிமுலேஷன்

Monday, October 09, 2006

குழந்தைத் தொழிலாளர்களும் அக்டோபர் 10ம்



குழந்தைகளை தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் தொழிலாளர்களாகப் பணிபுரிய வைப்பதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் இருந்த போதிலும், இந்த வழக்கம் காலம் காலமாய் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால், இம்முறை மத்திய மாநில அரசுகள், குழந்தைத் தொழிலாளர் முறையினைத் தொடர, அக்டோவர் 10ஆம் தேதியினைக் 'கெடு' தேதியாக அறிவித்துள்ளது. இந்த தேதிக்குப் பின்னால், விதியினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக வீட்டு வேலைகளிலும், உணவு விடுதிகளிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தகளைப் பணியிலமர்த்த முடியாது. இப்போது பணியிலிருக்கும் குழந்தைகளின் வாழக்கைக்கு, மாற்று வழி நடைமுறையில் எப்படி இருக்குமென்பது போகப் போகத்தான் தெரியும். உணமையிலேயெ இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்ப்ட்டால், சம்பதப்ப்ட்டட்வர்கள் பாராட்டுதல்களுக்குறியவர்கள்தான்.
























இந்தப் படங்களில் இருப்பவற்றையெல்லாம்விட மிகக் கொடுமை என்ன தெரியுமா? உங்கள் வீட்டுக்குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள, ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவதுதான்.

ஆமாம். கடைசியாக உள்ள அந்த வண்ணக் காத்தாடி எதனைக் குறிகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?

- சிமுலேஷன்

Wednesday, October 04, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. மாயாமாளவ கௌளை இராகத்திலுள்ள ஸ்வரங்களில் ஒரே ஸ்வரஸ்தானங்களுடன் கூடிய ஸ்வரங்கள் இல்லாமலிருப்பதனால், இந்த இராகத்தினை எவரும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கமகம் ஏதுமின்றி, ஆரோகண, அவரோகங்களைப் பாடினாலே, இராகத்தின் சாயல் வெளிப்படும். அதனாலேயே சங்கீதப் பிதாமகர் எனப்படும், ஸ்ரீ புரந்தர தாசர் இந்த எளிய இராகத்தில், ஆரம்பப் பாடங்களான சரளி வரிசை, ஜண்டை வரிசை, அலங்காரம், கீதம் ஆகியவற்றை முதன் முதலாக அமைத்தார்.

உண்மையிலேயே மாளவ கௌளை எனப்படும், இந்த இராகத்திற்கு, 'மாயா' என்ற ப்ரி·பிக்ஸ் சேர்க்கப்பட்டது, மேளகர்த்தா இராகப் பட்டியலில், வரிசை எண் கண்டுபிடிக்கப் பயன்படும் 'கடபயாதி' சூத்திரத்திற்காகத்தான். அப்படியானால் இது ஒரு மேளகர்த்தா இராகம் என்று இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்கள்.

பரஸ், நாதநாமக்ரியா என்ற இராகங்கள் மாயாமாளவ கௌளையின் ஒன்றுவிட்ட சகோதரிகள்தான். இந்த முக்கிய இராகத்திலிருந்து கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட ஜன்ய இராகங்கள் பிறந்திருப்பதாக அறிகின்றோம். அவற்றில் சில, கௌளை, மலஹரி, பௌளி, லலிதா, வசந்தா, பிந்து மாலினி, ஜகன் மோகினி, சாவேரி ஆகியவையாகும். ஹிந்துஸ்தானியில் 'பைரவ்' எனப்படும் இராகம்கூட மாயாமாளவ கௌளையினை ஒத்ததாகும்.

திருத்தணி முருகன் அருள் பெற்று, முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிய, 'ஸ்ரீநாதாதி குருகுஹோ' என்ற கீர்த்தனை, மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு நல்ல பாடலாகும். மேலும், தியாகையரின், 'மேரு ஸமான', 'துளசி தள' மற்றும் ஸ்வாதி திருநாளின் 'தேவ தேவ கலயாமிதே' ஆகியவையும் மிகவும் புகழ் பெற்ற பாடல்களாகும்.

இளையராஜா அவர்கள் பல பாடல்களில் இந்த இராகத்தினைப் பயன்படுத்தியுள்ளார். அது சோக ரசமாகட்டும், அல்லது மகிழ்ச்சியான தருணமாகட்டும். 'மஞ்சள் நிலாவுக்கு இன்று முதலிரவு', 'அந்திவரும் நேரம்'. 'மதுர மரிக்கொழுந்து வாசம்', 'பூவ எடுத்து ஒரு மால' என்று தொடரும் இந்தப் பட்டியல், இதற்கு எடுத்துக்காட்டாகும். 'மஞ்சள் நிலாவுக்கு' என்ற இந்தப் பாடலின் பின்னணி இசையில் வரும் புகைவண்டியின் ஓசை, மிகவும் இயற்கையாக இழைந்து வரும். 'சிவசம்போ' என்று இளமை ததும்பப் பாடிய எம்.எஸ்.வி அவர்களுக்கு 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' மாயாமாளவ கௌளையில் அமைந்த ஒரு மாணிக்கமாகும். முகாரி இராகம் என்று பாடலில் வந்தாலும், டி.ஆரின் 'கடவுள் வாழும் கோவிலிலே' என்ற பாடலும் மாயாமாளவ கௌளைக்கு சிறந்த உதாரணமாகும்.

இராகம்: மாயாமாளவ கௌளை
15ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்
01. அலைமகள் மலைமகள் - நவராத்திரி*
02. அல்லா உன் ஆணைப்படி - சந்திரலேகா
03. அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு*
04. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - தீபம்*
05. ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
06. அரும்பு அரும்பா சரம் தொடுத்து - சின்னத் தாயி
07. அழகான பொண்ணு நான் - அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
08. சின்னச் குயிலே குயிலே - மனசெல்லாம்
09. என் இதயம் இதயம் நீயே நீயே ராசாத்தி - இளையவன்
10. என் தாயெனும் கோயிலில் - அரண்மணைக் கிளி
11. எனக்கென யாரிங்கே - இவன்
12. எங்கே நான் காண்பேன் - சாதனை
13. என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட - சக்களத்தி*
14. கோவிந்தா வரதா ஸ்ரீஹரி கோபாலா - துக்காராம்
15. இதோ இதோ என் நெஞ்சிலே - வட்டத்துக்குள் சதுரம்*
16. இளம் காதல் வீணை - வெள்ளைப் புறா ஒன்று
17. இள மனதினில் - மஞ்சள் நிலா
18. கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம்*
19. காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே
20. காதல் மகராணி - காதல் பரிசு
21. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலய மணி*
22. கண் பாரும் தேவி - கொக்கரக்கோ
23. கனவா இது உண்மையா - அறுவடை நாள்
24. கண்ணின் மணியே - மனதில் உறுதி வேண்டும்
25. காட்டுக் குயிலே - இதயத்தைத் திருடாதே
26. கொட்டு களி கொட்டு - சின்னவர்
27. குயிலப் புடிச்சி கூண்டிலடிச்சி - சின்னத் தம்பி*
28. மச்சி மன்னாரு - என்னுயிர்த் தோழன்
29. மதுர மரிக் கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்*
30. மனதில் உறுதி வேண்டும் - மனதில் உறுதி வேண்டும்
31. மானின் இரு கண்கள் கொண்ட - மாப்பிள்ளை
32. மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு*
33. மாரியம்மா மாரியம்மா - கரகாட்டக்காரன்
34. மாசறு பொன்னே வருக - தேவர் மகன்
35. மூக்குத்திப் பூ மேலே காத்து - மௌன கீதங்கள்*
36. நண்டூருது நரியூருது - பைரவி*
37. நன்றி சொல்லவே எனக்கு - உடன் பிறப்பு
38. நீ நினைத்த நேரமெல்லாம் - பெண்ணை நம்புங்கள்
39. நீயே கதியம்மா - சின்ன துரை
40. நிலவே நீயொரு சேதி சொல்லாயோ - பட்டினத்தார்
41. நீயான தங்கமே - ராஜ கோபுரம்
42. ஓணபுத்தட்டு புல்லாக்கு வாங்கித் தாரேன் - சின்ன ஜமீன்
43. பூப்போலே ஒன் புன்னகையில் - கவரி மான்*
44. பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோவில் கிழககாலே*
45. ராம நாமன் ஒரு வேதமே - ஸ்ரீ ராகவெந்திரர்*
46. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்
47. ராசாத்தி ராசாத்தி - கண்ணா உன்னைத் தேடுகிறேன்
48. சாமிகளே சாமிகளே சொந்தக் கதை - என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்
49. சரிகமபதனி என்னும் - ராக பந்தங்கள்
50. சிவ சம்போ - நினைத்தாலே இனிக்கும்
51. சிவகாமி நினைப்பினிலே - கிளி பேச்சு கேட்கவா
52. சொல்லடி அபிராமி - ஆதி பராசக்தி
53. சொல்லால் அடித்த சுந்தரி - சின்னக் கவுண்டர்
54. சொர்க்கத்தில் நிக்க நிக்க - ராஜஸ்தான்
55. தாயுண்டு தந்தையுண்டு - கோவில் காளை
56. தென்னங் கீற்றும் தென்றல் காற்றும் - முடிவல்ல ஆரம்பம்*
57. துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்
58. உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி - பணக்காரன்
59. உன் எண்ணம் எங்கே எங்கே - தம்பி பொண்டாட்டி
60. உயிரே உயிரே உருகுதே - ஒருவர் வாழும் ஆலயம்
61. வானம் இடி இடிக்க - உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
62. வத்திக் குச்சி பத்திகாதுடா - தீனா
63. வயசு வந்த வாலிபனுக்கு - என் மன வானில்
64. விழிகளில் கோடி அபிநயம் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

வழக்கம் போல, நட்சத்திரக் குறியிட்ட பாடல்களைப் பதிவு செய்து கேட்டு வருகிறீர்களென்று நம்புகின்றேன். இப்போது இந்தப் பதிவுக்குண்டான கேள்வி.

"கௌளை" என்று முடியும் இராகங்களின் (குறைந்தபட்சம் நான்கு) பெயர்களைக் கூறவும்.

- சிமுலேஷன்

Sunday, September 24, 2006

புகைப்படப் புதிர்-03


01. ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் தனது பாடல்களில், இரண்டு ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை என்னென்ன? (லல்லுவின் சினனமொன்று உண்டிங்கு)


02. இந்தக் கலைஞர் யார்? இவரது சகோதரரும் ஒரு புகழ் பெற்ற பல்கலை வித்த்கர்? இவர் பெயர் தெரியாதென்றால், இவர் சகோதரர் பெயராவது என்ன?
(இசைக் கலைஞனுக்கு ஏனோ திரையில் பாடல்கள் என்றால் அலர்ஜி)

03. இந்தப் புகழ் பெற்ற பாடகர் யார்? கச்சேரிகள் பல செய்திருந்தாலும், திரைப்படத்தின் மூலமே பெரிதும் புகழ் பெற்றார்? (மதுரை முதல் மருத வரை)


04. இவர்களுக்குள் என்ன சம்பந்தம்? (கூவி அழைத்தால் குரல் கொடுப்பாள்)


05. இந்தப் பிரபலம் யார்? (காதறந்த ஊசியும் வாராது கடைவழி காண்)

Saturday, September 23, 2006

புகைப்படப் புதிர்-02

அடுத்த புகைப்படப் புதிருக்குத் த்யாராக இருப்பீர்களென்று நினைக்கின்றேன்.

01. ஒரு பிரபலத்தை மணந்த இந்தப் பிரபலம் யார்?



02. கருப்புக் கண்ணாடி சகிதம் கலக்கும் இவர் யார்?


03. எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் இடையில் நிற்பவர் யார்? அவ்ருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?



04.இந்த இரண்டு பிரபல்ங்களுக்ளிடையே இருந்த உறவு முறை என்ன?

05. ஆல்த்தூர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களின் பெயர் தெரியுமா? பெயர் தெரியாதென்றால் இவர்களில் அண்ணா யார்? தம்பி யார்? (வலதா? இடதா?

Friday, September 22, 2006

புகைப்படப் புதிர்-01

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.


01. இந்தப் பிரபலங்கள் யார் யார்?

02. யாருடைய சிலை இது? எங்குள்ளது?

03. இவர் யார்? என்ன செய்துகொண்டிருக்கின்றார்


04. இந்த நாதசுரக் கலைஞர் யார்?


05. பசுப் பையன் போலத் தோற்றமளிக்கும் இந்தக் கலைஞர் யார்?

Sunday, September 17, 2006

போண்டா வடை போயாச்சு

நேற்றைய தினம் பூர்ணம் விசுவநாதன் நாடகக் குழுவில் பணியாற்றும், மெலட்டூர் நடராஜன் என்ற நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, மயிலையில் படைப்பாளிகளின் ஒர் சந்திப்புக்குச் செல்வதாகக் கூறியவர், என்னையும் வரச் சொன்னார். அப்புசாமி, சீதப்பாட்டி புகழ் பாக்கியம் ராமஸ்வாமி அவர்கள் மயிலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஒவ்வொரு மாத்ம் மூன்றாம் சனிக்கிழமையன்று ஒத்த கருத்துடைய படைப்பாளிகளின் கூட்டத்துக்கு ஏர்பாடு செய்து வருகின்றார்.

இந்தக் கூட்டத்தில் கிழக்குப் பதிப்பக பத்ரி த்ங்களது அப்புசாமி படைப்புகளை பற்றிப் பேசினார். இந்தச் சந்திப்பில் மற்ற பிரபலங்கள் சிலரையும் நான் சந்த்திது உரையாட முடிந்த்தது. முதலில் ராணி மைந்தன். இவர் பலருடைய வரலாற்றுச் சரிதைகளைப் புத்தகமாக எழுதியுள்ளவர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றிய ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளார். பிறகு, கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன். சமீபத்தில் 1981ல் கல்கி மற்றும் தினமணிக்கதிரில் வரும் இவரது கேள்வி-பதில் பகுதிக்கு கேள்விகள் கேட்டு வருவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஆண்டு, தேவன் அறக்கட்டளை அமைப்பு வழங்கும் தேவன் நினைவுப் பதக்கம் வென்றவரில் இவரும் ஒருவர். (மற்றவர் துக்ளக் சத்யா.) அடுத்தபடியாக வாதூலன் என்ற் பெயரில் எழுதி வந்த லக்ஷ்மணன். இவர் 'பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதியுள்ளார்.

வெளிநாட்டுத் தோழர்களே. உங்கள் மனம் குளிர ஒரு விஷயம் கிட்டத்தட்ட ஒரு தொண்ணூறு நிமிடங்கள நல்ல பொழுதாகப் போன இந்தச் சந்திப்பில் போண்டாவோ, வடையோ கொடுக்கப்படவில்லை. கேக்தான் தரப்பட்டது

Friday, September 15, 2006

ராக அறிவிப்பு: சிந்தனையும் சிரிப்புவெடிகளும்

இசைக் கச்சேரியில் எல்லாத் தகவலும் தருவது எப்படி? ஒரு யோசனை.

சிந்தனை-- சிமுலேஷன்

சில சபாக்களில், இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது என்ன பாடல் என்றும், யாரது பாடல் என்றும், முக்கியமாக என்ன ராகம் என்றும் 'பிட்" நோட்டீஸ் போட்டு எல்லாத் தகவல்களையும் தந்துவிடுகிறார்கள். சில பாடகர்களும், இந்தக் காலத்தில் தாம் பாடும் பாடல் பற்றிய விபரங்கள மைக்கில் அறிவிக்கிறார்கள். இந்த மாதிரி செய்வது பெரும்பாலான இரசிகர்களுக்ககுப் பிடித்திருக்கிறது. ஆனால், சில பாடகர்கள் இவ்வாறு அறிவிப்பு செய்வது, பாடல் பாடி வரும் ஓட்டத்திற்குத் (flow) தடையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் சில இரசிகர்களுக்கு, பாடலின் இராகத்தைக் தாங்களே கண்டுபிடிப்பது ஒரு விதமான இரசனை என்றும் சரியான இராகத்தைக் கண்டுபிடித்துவிட்டால், தங்களைத் தாங்களே முதுகில் ஷொட்டுக் கொடுத்துக் கொள்வது போலவும் ஒரு எண்ணம். இந்த மாதிரி இரசிகர்கள், பாடகர் பாடும் முன்பே, எல்லா விபரங்களையும் போட்டு உடைப்பது, சஸ்பென்ஸை உடைத்து 'சப்'பென்றாக்கும் ஒரு செயல் என்றே எண்ணுகிறார்கள்.

இந்த மாதிரி, இரண்டு விதமான இரசிகர்களையும் திருப்தி செய்யும் வண்ணம், எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த யோசனையை, கடந்த வருடம் 'முத்ரா" பயிற்சிப் பட்டறையில் தெரிவித்திருந்தேன். அவர்களது 'ஸாமுத்ரா" பத்திரிகையிலும், இது பிரசுரமானது. சில சபாக்களுக்கும் இந்த யோசனையைச் சொன்னேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மட்டும், "இது எங்களுக்கு அதிகப் பளுவைக் கொடுக்கும்; அதனால் ஒத்து வராது!" என்றும் தெரிவித்திருந்தனர். மற்றவர்களிடமிருந்து பதிலொன்றுமில்லை.

அது என்ன அப்பேர்ப்பட்ட யோசனை என்று கேட்கிறீர்களா? அது இதுதான். அதாவது இரசிகர்களுக்கு பாடல் என்ன, இராகம் என்ன, இயற்றியவர் யார் என்பது போன்ற விபரங்கள் தரப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் எல்லாவற்றையும் இரசிக்க முடியும். அதே நேரத்தில், சற்றே விபரம் தெரிந்த இரசிகர்களின் ஆர்வத்தையும் குலைக்கக் கூடாது. பாடகரின் ஓட்டத்தையும் தடுக்கக் கூடாது. நான் கூறும் யோசனை என்னவென்றால், இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையின் ஒர் மூலையில் டிஜிட்டல் கடிகாரம் ஒன்று இருக்குமே, அது மாதிரியான் இடத்தில் ஓர் டிஜிட்டல் டிஸ்பிளே போர்ட் (Digital Display Board) ஒன்று வைக்க வேண்டும். பாடகர் பாடலைத் துவக்கிய ஓரிரு நிமிடங்கள் கழித்து, இந்த போர்டில், என்ன பாடல், என்ன இராகம், என்ன தாளம், யாரது பாடல், போன்ற விபரங்கள் scrolling முறையில் வர வேண்டும். இவை வெளிவருவதற்கு முன்னரே, இசையார்வலர்கள், இந்த விவரங்களைத் தாங்களே கண்டு பிடித்துக் கொள்வதென்றால் அதனைச் செய்து கொள்ளலாம். பாடகர், இந்த விபரங்களை முதலிலேயே, Digital Display Boardஐ இயக்குபரிடம் கொடுத்து விடுவதால் அவரது ஒட்டம் எக்காரணம் கொண்டும் தடை பெறாது.

மேலும், இந்த போர்டில், மேற்கண்ட விபரங்கள் தவிர, பாடல் குறித்த சுவையான பல விபரங்களையும் கொடுக்கலாம். உதாரணமாக, தியாகய்யரின் 'சக்கனி ராஜ" பாடல் பாடப்படும்போது, அவர் வாழ்வில் அந்தப் பாடல் பாடக் காரணமாக இருந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். (சன் டிவியில் "ஒளியும் ஒலியும்" போன்றதொரு நிகழ்ச்சியில் "இந்தப் பாடல் படம் பிடிக்க ஒரு கோடி செலவாயிற்றாம்... இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போதுதான் அஜீத் காலை ஒடித்துக் கொண்டார்..." என்றெல்லாம் 'விக்கி' என்றொரு கேரக்டர், ஸ்க்ரோலிங் முறையிலே வந்து சொல்லுமே, அதைப் போலவே, இந்த யோசனை)

சிறிது செலவானாலும், இரசிகர்களை இந்த யோசனை கவரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. முதலில் செயல்படுத்தும் அமைப்புகள் தகவல் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

====

சிரிப்புவெடிகள்-- என். சுவாமிநாதன்

"போடறதுதான் போடறான், கிரிக்கெட் ஸ்கோர் போட்டா என்னா?"

"ந்யூஸ் ஹெட்லைன் போட்டா நல்லா இருக்கும்.."

"செல்வி தொடர்ல இன்னிக்கு என்னாச்சுனு ஒரு வரி போட்டா செளகரியமா இருக்கும்.."
=========
"என்னடா வரிசையா நாலஞ்சு ராகம் போட்டிருக்கானே.."

"அது ராகமாலிகையாம்"
=========
"என்ன வயலின்காரர் கீழ இறங்கி போர்டைப் பார்க்கிறாரே"

"பக்க வாத்தியம் புதிசு.. ஆலாபனையில் ராகம் என்னனு பிடிபடலையாம்.. படிச்சுத் தெரிஞ்சிக்கலாமேன்னுதான்..."
=========
என்ன அடிக்கடி பைரவி பைரவினு வருது? பாடகர் பைரவி பாடலியே.."

"ரவி சார் போர்டு செலவை ஸ்பான்சர் செஞ்சிருக்காராம்.. போர்டு உபயம்பை ரவி"னு காட்டறாங்க"
=========
"ஹரிகாம்போதி வர்ணத்திலேயே கச்சேரி களை கட்டிவிட்டதுன்னு தலைவர் புகழராரே, பாடகர் ஹரிகாம்போதியே பாடலியே.."

"பாடகர் பாடறதா இருந்தார்.. பாடல்.. தலிவரு கச்சேரிக்கு லேட்டா வந்தாரு.. கையில் கொடுத்த நோட்டீசைப் படிச்சிட்டு பேசிட்டாரு"
=========
"ரெண்டு மணி நேரமா இன்னம் காம்போதியா பாடிட்டு இருக்காரு?"

"பாட்டு மாறிடுச்சு... போர்டுல பிரச்னை.. ராகம் பேரை மாத்த முடியலயாம்..."
=========
மரத்தடியில் முன்பு நான் எழுதிய பதிவையும் அதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் என். சுவாமிநாதன் அவர்கள் அளித்த மறுமொழியும் மீள்பதிகின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, September 10, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

இந்தியாவிற்கு மட்டும் உரித்தானதல்லாமல், ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளிலும், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் 'மோகனம்' எனப்புடும் இராகம் பிரபலமானது. வளைகுடா நாடுகளிலும், இந்த இராகத்தைக் கேட்டிருக்கலாம். பாரம்பரிய முறையில், தாளமின்றி விருந்தாமாகப் பாடப்படும் திருவாசகத்திலும் மோகனம் பெரும்பங்கு வகிக்கின்றது. வட இந்தியாவில், மோகனம் 'பூப்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவேதான், மோகனம் பாடுவதில் வல்லவரான, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், 'சங்கீத பூபதி' என்றழைக்கப்பட்டார்.

மோகன இராகம், ஹரிகாம்போதி என்ற மேளகர்த்தா (தாய்) இராகத்தின் ஜன்ய (சேய்) இராகமாகும். இருந்தபோதும் இதனை கல்யாணியின் ஜன்யம் என்றும் சிலர் கூறுவதுண்டு. மோகனம் என்ற பொருளுக்கெற்றபடியே இது ஒரு அழகான இராகமாகும். (என்னது? எல்லா இராகத்துக்கும் இதையே சொல்லி ஜல்லி அடிக்கின்றேனா?)

இசைக் கச்சேரிகளில், சிறிது நேர இராக ஆலாபனைக்குப் பிறகு 'நன்னுப் பாலிம்ப' என்று மோகன இராகத்தில் பாடகர் ஆரம்பிக்கும்போது, இரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் எழுந்து, தாளம் போட்டுக் கொண்டு பாடலை இரசிப்பதைப் பல முறை பார்த்திருக்கலாம். அவ்வளவு தூரம், கேட்பவர் மனதை மயக்கும் இராகம் மோகனமாகும். அதேபோல பாபநாசம் சிவனது 'காபாலி,...கருணை நிலவு" என்ற பொருட் செறிவு மிகுந்த அழகான பாடலும் மோகனத்தில் அமைந்த பிரபலமான தமிழ்க் கீர்த்தனையாகும்.

கிருஷ்ணரைப் பற்றிய பல பாடல்கள் மோகனத்தில் அமைந்துள்ளன, விருத்தம், கீர்த்தனை, வர்ணம் என்ற பல விதமான படைப்புகளும் இந்த இராகத்தில் பாடலாம். தமிழ்த் திரையிசைக்கு மோகனம் நல்ல பங்களிப்பினைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பல நல்ல
பழைய பாடல்கள் மோகனத்தில் அமைக்கப் பெற்றுள்ளன.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்.

பாடல் - திரைப்படம்

01. ஏபிசி நீ வாசி - ஒரு கைதியின் டைரி
02. ஆதரவார் ஆதரவார் - ஞான சௌந்தரி
03. அடி எளச்சி எளச்சி கொழைச்சி கொழைச்சி - மகாராசன்
04. அடுத்தாத்து அம்புஜத்தப் பாத்தேளா - எதிர் நீச்சல்
05. ஆடுவரென்பதினால் ஆடவர் என்பார் - பாட்டும் பரதமும்
06. ஆஹா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் **
07. அமுதைப் பொழியும் நிலவினிலே - தங்கமலை ரகசியம் **
08. அத்தான் வருவாக முத்தம் கொடுப்பாக - டும் டும் டும்
09. ஆத்தோரம் காத்தாட - எங்கேயோ கேட்ட குரல்
10. பன்சாயீ... காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
11. எனக்கொரு மகன் பிறப்பான் - அண்ணனுக்கு ஜே
12. எங்க மகராணிக்கு - தலைமுறை
13. என்ன பார்வை - காதலிக்க நேரமில்லை *
14. என்ன சமையலோ - உன்னால் முடியும் தம்பி * (இராக மாலிகை)
15. என்னை முதன்முதலாக பார்த்த - பூம்புகார்
16. எண்ணத்தில் - கல்லுக்குள் ஈரம்
17. கீதம் சங்கீதம் நீதானே - கொக்கரக்கோ *
18. கிரிதரா கோபாலா - மீரா **
19. குண்டுமல்லி குண்டுமல்லி - சொல்ல மறந்த கதை
20. ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி
21. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில் *
22. இந்த அம்மனுக்கு - தெய்வ வாக்கு
23. இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன் **
24. இந்தப் பூவுக்கொரு அரசன் - பூவரசன்
25. இறைவன் வருவான் - சாந்தி நிலையம் *
26. இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள் *
27. காலை - மேல் நாட்டு மருமகள்
28. கலையாத கனவொன்று கண்டேன் - நாயக்கரின் மகள்
29. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
30. கண்மணியே காதல் என்பது கற்பனையோ - ஆறிலிருந்து அறுபது வரை *
31. கண்மணியே உன் இதய - மனிதன் மாறவில்லை
32. கஸ்தூரி மானே - புதுமைப் பெண்
33. காத்திருந்தேன் தனியே - ராசா மகன்
34. கேளடா - பாரதி
35. கேட்குதடி கூ கூ - கட்டுமரக்காரன்
36. கிருஷ்ணா ஹரி கோவிந்த முராரி - கிருஷ்ண பக்தி
37. குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா - வள்ளி
38. குறிஞ்சி மலரின் - அழகே உன்னை ஆராதிக்கிறேன் *
39. குழந்தையும் தெய்வமும் - குழந்தையும் தெய்வமும் *
40. மதியா விதியா - பாரிஜாதம்
41. மலரே பேசு - கீதாஞ்சலி
42. மலர்கள் நனைந்தன - இதயக் கமலம் **
43. மல்லிகை மாலை கட்டி - புதிய ராகம்
44. மீன்கொடி தேரில் - கரும்பு வில் *
45. முப்பது பைசா மூணு முழம் - போக்கிரி
46. நாடுதே என் மனம் நாதமே - மாயாவதி
47. நாள்தோறும் எந்தன் கண்ணில் - தேவதை
48. நான் ஒரு பொன்னோவியம் - கண்ணில் தெரியும் கதைகள் *
49. நான் தங்க ரோஜா - டைம்
50. நான் உந்தன் தாயாக வேண்டும் - உல்லாசப் பறவைகள்
51. நாராயணாய நமோ - திருமழிசை ஆழ்வார்
52. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
53. நிலவும் மலரும் - தேன் நிலவு *
54. நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்
55. ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடித் தென்றல்
56. ஒரு ராகம் பாடலோடு - ஆனந்த ராகம்
57. ஒரு தங்க ரதத்தில் - தர்ம யுத்தம் *
58. பாடும்போது நான் தென்றல் காற்று - சுமதி என் சுந்தரி *
59. பாக்காதே பாக்காதே - ஜென்டில்மேன்
60. பால் போலே - பாய்ஸ்
61. பருவம் பார்த்தருகில் வந்து வெட்கமா - மருத நாட்டு வீரன்
62. பழகத் தெரிய வேணும் - மிஸ்ஸியம்மா *
63. பெற்ற தாயினும் பிறந்த - விஜயகுமாரி
64. பொன்னழகுப் பெருமை - ரிக்ஷாக்காரன்
65. பொன்னுல பொன்னுல - சிட்டுக்குருவி *
66. பூவா தலையா - பூவா தலையா
67. பூவில் வண்டு கூடும் கண்டு - காதல் ஓவியம் *
68. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
69. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்
70. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் *
71. செந்தமிழ் நாடென்னும்போதினிலே - வேதாள உலகம்
72. தாமதம் செய்யலாமோ - முத்துக்குள் முத்து
73. தாம்த தீம்த - பகலில் ஒரு நிலவு
74. தேன்மல்லிப் பூவே - தியாகம் *
75. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன் *
76. உன் அழகைக் காண இரு கண்கள் போதாது - திரு நீலகண்டர்
77. உன் பேரைச் சொன்னாலே - டும் டும் டும்
78. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் *
79. வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் - சலங்கை ஒலி *
80. வந்ததே ஓ ஓ - கிழக்கு வாசல் *
81. வந்த நாள் முதல் இந்த நாள் வரை - பாவ மன்னிப்பு
82. வாராயோ தோழி - ஜீன்ஸ்
83. வரும் பகைவரைக் கண்டு - அம்பிகாபதி
84. வாழிய வாழியவே பல்லாண்டு - ஆடிப் பெருக்கு
85. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் - சாவித்ரி
86. வாழ்வோம் வாழ்வோம் மாதர்காள் - ராஜகுமாரி
87. வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு - புயல் பாடும் பாட்டு
88. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா - காதல் கோட்டை **
89. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே - நாம் இருவர் *
90. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் - தேடி வந்த மாப்பிள்ளை *
91. விதியின் விளையாடல் மதியினால் மாற்றும் - நவஜீவனம்

மோகனத்தின் மொத்த உருவம் என்று பார்த்தால் இந்த நட்சத்திரக் (*) குறியிட்ட பாடல்களைச் சொல்லலாம். இதில் ஒரு சில பாடல்களுக்கு இரட்டை நட்சத்திரங்கள்கூட வழங்கியுள்ளேன். முன்னமே கூறியபடி நட்சத்திரப் பாடல்களை ஒருங்கே பதிவு செய்துக் கேட்டு வர, மோகன இராகம் மனதில் நன்கு பதிந்துவிடும். அடுத்தபடியாக, இசையார்வலர்கள் நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்தால் (அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கூட இருக்கலாம்) இந்த நட்சத்திரப் பட்டியலிலுள்ள பாடல்களை ஒரு அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அசை போட்டுச் சும்மா பாடிப் பார்த்தால், மோகனமென்ன, 'மோகனக் கல்யாணி'யைக்கூடக் கண்டு பிடித்துவிடுவீர்கள். ஆமாம், நீங்கள்தான் ஏற்கெனவே முந்தைய பதிவின் மூலம் கல்யாணியைக் கண்டுணரத் தொடங்கிவிட்டீர்களே!

மூன்று பதிவுகள் முடிந்ததன் விளைவாக, இனிமேலிருந்து உங்களுக்கு ஒர் 'குவிஸ்' வைக்கலாமென்றிருக்கின்றேன். அதற்கு சரியான விடையை யாரேனும் முதலில் தர, விடை தருவதற்கான நேரக்கெடு முடிவடைந்துவிடும் பதிவுத தொடரின் இறுதியில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு, ஒரு பரிசு வழங்கவிருக்கின்றேன். வெளிநாடுகளில் இருப்பவருக்கு அவருடைய இந்திய முகவரிக்கு பரிசு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வாரக் கேள்வி:

மோகனம் 'அவுடவ' இராகங்களில் ஒரு சிறந்த இராகமாகும். 'அவுடவ' இராகம் என்றால் என்ன?

- சிமுலேஷன்