Monday, March 17, 2008

மயிலை திருத்தேர்

"கயிலையே மயிலை; மயிலையே கயிலை" என்றழைக்கப்ப்டும் மயிலாப்பூர் கபாலி திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திரப் ப்ரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

"காணக் கண் கோடி வேண்டும்" என்று பாடல்பெற்ற இந்த அழகிய திருத்தேர் வைபவத்திற்கு, மயிலாப்பூர் KUTCHERIBUZZன் இந்த இணைப்பில் நேரடி வர்ணனை செய்யப்படுகின்றது. வர்ணன கொடுப்பவர் வின்சென்ட் டிசோசா என்று நம்புகின்றேன்.

வெளியூர் ஆத்திக அன்பர்களும் அயல்நாடு வாழ் இந்தியர்களும் நேரடி வர்ணனையைக் கண்டு மகிழுங்கள். வர்ணனை ஆங்கிலத்தில் இருப்பதால் உங்கள் வெளிநாட்டு நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்.

- சிமுலேஷன்

Saturday, March 15, 2008

டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு - நூல் விமர்சனம்


சுஜாதா எழுதி பூர்ணம் விசுவநாதன் இயக்கத்தில் வெளிவந்த "அடிமைகள்" போன்ற நாடகங்கள் சிலவற்றை எண்பதுகளில் பார்த்திருக்கின்றேன். நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது நாரத கான சபாவில், குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் குழுவினரின் "டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் மூலம்.

நாடகத்தின் ஆரம்பக் காட்சியே கோர்ட் சீனாகும். அடுத்த இரண்டு மணி நேரமும் இந்தக் கோர்ட்டிலேயே இருக்கப் போகின்றோம் என்பதினை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்து விட்டு, சென்னையிலுள்ள ஒரு பொது மருத்துவமனையில், டெபுடி டைரக்டராக இருக்கும் டாக்டர் நரேந்த்திரன், தற்போது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கிறார்.

அவர் மீது, மூன்று முக்கியக் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார் பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் நாகராஜன். பெரியவர் சரவணனுக்குச் சென்று கொண்டிருந்த குளூக்கோஸ், ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கிவிட்டு, அவரைச் சாகடித்தது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தான் வேலை செய்யும் பொது மருத்துவமனையிலேயே, தனது காரியதரிசி மஞ்சுளாவிற்குக் கருக்கலைப்பிற்கு ஏற்பாடு செய்தார் என்பது. லூக்கேமியா என்ற இரத்தப்புற்று நோயினால் போராடிக் கொண்டிருக்கும், ரவி என்ற சிறுவனுக்குத் தவறான மருந்தைக் கொடுத்து, அவன் சாவதற்கும் காரணமாயிருந்தார் என்பது மூன்றாம் குற்றச்சாட்டு.

"எனக்கு வக்கீல் யாரும் தேவையில்லை, நானே எனக்காக வாதாடிக் கொள்கிறேன்," என்று சொல்லி, குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, தண்டனை வேண்டும் என்று கூறிக் கோர்ட்டாரைக் குழப்புகிறார் வினோதமான டாக்டர் நரேந்திரன். இதனை ஒப்புக் கொள்ளாத ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், கணேஷும், வசந்தும் டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். வழக்கமான டிடெக்டிவ்களாக வரும் இருவருக்கும், துப்பறியும் வேலை என்று ஒன்றும் பெரியதாக இல்லை. இவர்கள் நடத்தும் இந்தக் கேஸில் நியாயம் வென்றதா? அரசியல் வென்றதா? யதார்த்தம் என்ன? என்பதே கதை.

குருகுலம் குழுவினர் திறம்பட நடித்துள்ளனர். "பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் தனது வாதங்களைச் சொல்லலாம்," என்ற வழமையான கோர்ட் வசனங்களையே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு, ஜட்ஜ் வழக்கறிஞர்களைப் பெயர் சொல்லி அழைப்பது (நாகராஜன், உங்க க்ராஸ் எக்ஸாமினேஷனை ஆரம்பியுங்க...) புதுமையாகவும், உண்மையிலேயே கோர்ட் விவாதங்கள் இப்படித்தான் யதார்த்தமாகவும் இருக்குமோ என்றும் யூகிக்கத் தோன்றுகின்றது. ஜட்ஜ் பாத்திரம் ஏற்ற குருகுலம் M.B.மூர்த்தி முதல், "எளவு" எனப்படும் இளவழகன் வரை அனைவரும் அளவாகவே நடித்திருக்கிறார்கள் எனலாம். ஓவ்வொரு வசனங்களிலும் தோன்றும், அங்கதத்திலும் சுஜாதா எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். பாத்திரங்களின் வேடப் பொருத்தங்கள் அருமை. டாக்டர் நரேந்திரனின் உயரமான ஆளுமை, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றது. ஒரு நேரத்தில், கோர்ட்டிலேயே, "போடா" என்று சொல்லுவது அவரது கேரக்டரைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. முதிர்வான கணேஷும், நடிகர் சூர்யா போன்ற இளமையான வசந்த்தும் பாத்திரப் பொருத்தத்தில் நிச்சியமாக ஏமாற்றவில்லை. ஆனால் குறுந்தாடியுடன் கூடிய கணேஷையும், ஜொள்ளுவிட வாய்ப்பில்லா வசந்த்தையும் யாரும அவ்வளவாக எதிர்பார்த்திருக்க முடியாது. சிறுவன் ரவி, பார்வையாளர்கள் பெரும்பான்மையோரை அழ வைத்திருப்பான். பத்தாம் வகுப்புப் பாடங்களைப் படித்துவிட்டு, வகுப்பாசிரியரிடம் பாடம்(!) வாங்கிப் பின்னர், அப்பாவிடமும் பெல்ட்டால் அடி வாங்கும்போது, ஏனோ "தாரே ஜமீன் பர்" ஞாபகத்திற்கு வந்தது.

"அன்னியன்", "இந்தியன்" போன்ற கதைகளையெழுதி வந்த வாத்தியாருக்குப் பல ஆண்டுகளாகவே, இந்தியச் சமூகத்தின் மேல் இருந்து வந்த ஒரு சினிசிசத்தினை டாக்டர் நரேந்திரன் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் "அறிவாளியாகவும், மனிதாபிமானமும் மிக்க ஒரு மனிதன், மதியூகத்துடனும் செயல்பட முடியாதா?," என்ற கேள்வி மனதினில் எழாமலில்லை. மஞ்சுளாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாமே! ரவியின் பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வைத்திருக்கலாமே," என்றெல்லாம் யோசித்தால் கதையாவது, நாடகமாவது.

இடைவேளை ஏதுமில்லாமல், காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு கூட்டிக்கொண்டே சென்று பார்வையாளர்களை இரண்டு மணிநேரம் பரவசப்படுத்தினாலும், தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு, அவர் எழுத்தினால் ஏற்பட்ட தாக்கத்தை, அவரது சினிமாவோ, நாடகங்களோ தரவில்லை; தரவும் இயலாது," என்பதே உண்மை.

- சிமுலேஷன்

Sunday, February 24, 2008

மாரமணனும் மாயக்கூத்தனும்

சென்ற முறை டல்லஸ் சென்றபோது, "உன்னிக்கிருஷ்ணன் கச்சேரி உள்ளது போலாமா?" என்றான் வைத்யா. ஆஹா, அமெரிக்கா வந்து மண்டை காய்ந்து கொண்டிருக்கும் நமக்கு "கரும்பு தின்னக் கூலியா?" என்றெண்ணி, உடனே சரியென்றேன். டல்லஸ்ஸின் "இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமி", அந்த சனி மாலை, நம்மவர்களால்களை கட்டியிருந்தது. "உன்னோட 'ராக சிந்தாமணி' புத்தகத்தையும் கொண்டு வா. யாராவது ஆர்வம் காட்டக்கூடும்" என்றதால், புத்தகப் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன்.

கச்சேரி ஆரம்பிக்க அரை மணிநேரம் இருந்ததால் யாரை மொக்கை போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் வந்தார். வந்தவர் நேராக் "என்னிடம், நீங்கள்தானே சிமுலேஷன்?" என்றார். "ஆஹா, நம்மை எப்படிக் கண்டுபிடிதார் இவர்?", என்று இன்ப அதிர்ச்சியில் இருந்த எனக்கு, பதில் சொல்ல ஒரு சில நிமிடங்கள் ஆனது. "ஆமாம், நான் தான் சிமுலேஷன். மன்னிக்கவும். உங்க்களைத் தெரியவில்லையே!" என்றேன்". தனது பெயர் "மாயா" என்ற மாயக்கூத்தன் கிருஷணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அது சரி. எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்' என்றதற்கு, "உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தின் அட்டையில் இருக்கும் போட்டோவை பலமுறை, உங்களது வலைப்பதிவில் பார்த்துளேன். அதனை வைத்தே கண்டுபிடித்தேன்" என்று மாயா சொன்னபோது, இவர்தான் அந்த 'அமெரிக்காவின் சி.ஐ.டி.சங்கரோ" என்று ஆச்சரியப்பட்டேன்.

பழகுவத்ற்கு இனிய மாயா, அவர்தம் நண்பர் கார்த்திக்கையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள்தாம் டல்லஸ்ஸின் "இணடியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமியினைத் திற்ம்பட நிர்வகித்து வரும் நிர்வாகிகளுள் சிலர்.



(மாயா மற்றும் கார்த்திக்குடன் சிமுலேஷன்)

(உன்னிக்கிருஷணன் மற்றும் வைத்யாவுடன்)

(மாயா மற்றும் உன்னிக்கிருஷ்ணனுடன்)



(களைகட்டிய கச்சேரி மேடை)


அன்றைய மாலை உன்னிக்கிருஷ்ணன் புண்ணியத்தால் அருமையாகக் கழிந்தது. அதிலும் குறிப்பாக, "மாரமணன் உமா ரமணன்" என்ற பாபநாசம் சிவன் அவர்களது ஹிந்தோள ராகப்பாடல் அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது. இந்தப் பாடல் சிவனையும், திருமாலையும் ஒரே நேரத்தில் அழகுற வர்ணிக்கும் பாடல் என்பது சங்கீதம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பாடலின் வரிகளும் பொருளும் தெரியவேண்டுவோர் 'லலிதா ராமின்' இந்தக் கட்டுரையில் அவற்றைக் காணலாம்.




வீடியோ குவாலிட்டியினைப் பொறுத்தருள்க.

Tuesday, December 18, 2007

பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபி

"பேஷ்..பேஷ்... காபின்னா, இதான் காபி"

"என்ன அத்திம்பேர்.இந்த மினிஹால்லே, கான்டீன்னும் கெடையாது. காபியும் கெடையாது. எங்க போய் காபி சாப்பிட்ட்டேள்?"

"டேய் குடிச்சாதான் காபியா? கேட்டாக் காபியில்லையா? அபிஷேக் ராகுராம்னு ஒரு பையன் காபி ராகம் பாடினான் பாரு. அட்டகாசம்."

"அத்திம்பேர். மோகனம், கல்யாணின்னு சொன்னாப் புரியறது. சங்கராபரண்ம்னு சொன்னாப் புரியறது. காபின்னா என்ன? தமிழ்ப் பேரா?"

"அதெல்லாம் தெர்யலையேப்பா. வடநாட்லே kaafiனு சொல்றா. நாம் காபி, இல்லாட்டி காப்பி அப்டீங்கறோம்."

"குடிக்க்ற காப்பிலெ கும்பகோணம் டிகிரி,பீபரி, ரொபஸ்டா, சிக்கரி கலந்த காபின்னு வெரைட்டி இருக்றாப்ல, காபி ராகத்லேயும் வெரைட்டி இருக்கா?"

"நிச்யமா. கர்நாடக காபி, உபாங்க காபி, ஹிந்துஸ்தானி காபின்னு பலவகை இருக்கு. அதைத் தவிர வடநாட்ல வேற எந்த ப்ளெண்ட் போட்டாலும் அதை, 'மிஸ்ர காபி'ன்னு சொல்லிடுவாங்க.நாம பெரும்பாலும் பாடறது ஹிந்துஸ்தானி காபிதான். இந்தக் காபி ராகம் கரஹரப்ரியாங்ற 22ஆவது மேள்கர்த்தாவின் ஜன்ய ராக்ம். அப்படீன்னா, இதனோட ஆரோகணம், அவரோகணம் சொல்லு பார்ப்போம்."

"கரஹரப்ரியாவுக்கு, ஸ,ரி2,க2,ம1,ப,த2,நி2,ஸா - ஸா,நி2,த2,ப,ம1,க2,ரி2,ஸ .



காபிக்கு,

ஆரோகண்ம்; ஸ,ரி2,ம1,ப,நி3,ஸா
அவரோகண்ம்: ஸ்,நி2,த2,நி2,ப,ப1,க2,ம1,ட2,ப்,க2,ரி2,ஸ,ந்3,ஸ

சரியா, அத்திம்பேர்?"

"ஆஹா. கலக்றியே. ஆரோகணம் எவ்வளவு சிம்பிளா இருக்கோ, அவரோகணம் அவ்வளவுக்கவ்வளவு காம்ளெஸா இருக்கு பார்த்தியா. ஆனா, நான் ஏற்கெனவே சொன்னா மாதிரி வெறும் ஆரோகணம், அவரோகணங்றது ஒரு ஸ்கேல் மட்டும்தாண்டா.

இந்திய இசைன்னாலே, கமகம் முக்கியம். சரி. சரி. கமகத்தைப் பத்தி அப்புறமா வெளக்கிச் சொல்றேன். ஒனக்கு, காபில்லே என்னென்ன பாட்டு தெரியும் சொல்லு?"

"நான் சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கவா? நம்ம கர்நாடிக், "என்ன தவம் செய்தனை யசோதாவையே, பார்த்திபன் கனவுலே, வேற மாதிரி ஹாண்டில் பண்ணியிருக்கார் பாருங்கோ. கேட்கறேளா?"

"ஆஹா. வீடியோ ஐபாடெல்லாம் வாங்கிட்டியா? பார்ததிபன் கனவு-ஆலங்குயில் பாட்டுதானே. போடு, போடு. பாக்கறேன்."



"ரோஜா படத்லே வந்த, 'காதல் ரோஜாவே'காபிதான். அப்புறம், ரஜனி ஸ்ரீதேவி நடிச்சு, "ப்ரியா"ன்னு ஒரு படம் வந்ததே எய்ட்டிஸ்லே. இளையராஜாவோட "ஹேய் பாடல் ஒன்று. ஜேஸுதாஸும், ஜானகியும் பாடினது. அதுவும் ஒரூ நல்ல காபிதான்."

"சரி. அதையும் கேட்டுடலாம்"



பாலபாஸ்கர்ங்றவரோட ஃப்யூஷன் ஒண்ணு இங்க இருக்கு. பாருங்கோ.



"சரிடா. ஒரேடியா சினிமாப் பாட்டு, ஃப்யூஷன்னு போட்டுண்டிருக்கியே. கர்நாடிக்லே என்ன தெரியும். ஒரு கர்நாடிக் பாட்டுப் போடேண்டா. "

"'என்ன தவம் செய்தனை' சொல்லிட்டேன். த்யாகராஜரோட, 'இந்த சௌக்ய', 'மீ வல்ல குணதோஷமேமி, அப்புறம், 'பருலன்ன மாட'ன்னு ஒரு ஜாவளி உண்டு.

இப்ப புரந்தரதாசரோட 'ஜகதோதாரணா' எம்.எஸ் பாடிக் கேட்கலாமா? இல்ல. பாக்கலாமா?"



ஒரு நிமிஷம் அத்திம்பேர். பாட்டைக் கேட்டுண்டுருங்கோ. இத வந்துடறேன். ஆபீஸ் கலீக் ஒருந்தன் வந்திருக்கான். அவனைப் பாத்துட்டு வந்துடறேன். காபி சாப்பிடத்தான் கூப்பிடறான் போலயிருக்கு.

Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது ஒவ்வொரு ராகத்துக்கும் ஆரோகணம், அவரோகணம்ன்னு ஏழு ஸ்வரங்கள் ஏறு வரிசையிலும், எறங்கு வரிசையிலும் இருக்கும். இப்படி அடுத்தடுத்தாப்ப்ல வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு நட்பு இருந்தால், அவை பாடுவதற்கு சுலபமா இருக்கும். அந்த மாதிரி இல்லாம, அடுத்தடுத்ததா வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு ஒறவோ, நட்போ இல்லாமலிருந்தா அந்த ராகங்கள் ரொம்ப நேரம் பாடறதுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த ராகங்களைத் தான் விவாதி ராகம்ன்னு சொல்றோம். 72 மேளகர்த்தா ராகங்கள்ல 40 ராகங்களை விவாதி ராகங்கள்ன்னும் மத்ததையெல்லா "சம்வாதி" ராகங்கள்ன்னும் சொல்றோம்.

சரி, சரி விவாதியப் பத்தி நெறைய விவாதம் பண்ணியாச்சு. இப்ப நம்ம ரசிகப்ரியாவுக்கு வருவோம். இந்த இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் இதோ;

ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸா
ஸா நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

ரொம்ப நேரம் பாடறத்துக்கு கொஞ்சம் கஷ்டமான ராகம் அப்படீன்னு சொன்னாலும், ரசிகப்ரியா ஒரு அழகான, ரசிக்கும்படியான ராகமாகும் (தலைப்பு வந்தாச்சு. ஓகேவா?). ஆனா, இதுலே நெறயப் பாட்டு இல்ல. இருக்கற ஒண்ணு, ரெண்டு பாட்டைத்தான் இங்கே போடலாம்னுதான் ஒரு ஐடியா.

மொதல்ல சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கலாமா? "கோவில் புறா" அப்படீங்கற படத்ல வர்ற "சங்கீதமே"ங்ற இந்தப் பாட்டு, ரசிகப்ரியா ராகம்தான். ஆனா வழக்கமான சினிமாப் பாட்டு மாதிரியே, இதிலும் ஒரே ராகம்தான் முழுசும் இருக்கும்னு கேரண்டியெல்லாம் கொடுக்க முடியலை. சரி, பாட்டை இப்பக் கேட்கலாமா?



கர்நாடக சங்கீதத்லே மொதல்லே நாம் கேக்க இருக்கறது, ரவிகிரண் பாடின "ரசிகப்ரியே, ராக ரசிகப்ரியே" என்ற பாடல். அதனன இங்கே கேக்கலாம்.

ரசிகப்ரியாவின் ஆரோகணம், அவரோகணம் என்னென்னு ஏற்கெனவே பார்த்தோம். அதனை டெவலெப் செய்வது எப்படின்னும், ஜெயதேவரின் அஷ்டப்தி ஒண்ணும் இங்கே கேப்போம் இப்ப.

இப்ப அடுத்ததா கேக்கப் போறது ஒரு அழகான தில்லானா. இதைப் பாடினது யாருன்னா, மறைந்த பண்டிட்.விஸ்வேஸ்வரன்அவர்கள். நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் கணவர். இந்தத் தில்லானாவை, ஒரு முறை ஒரு ஊர்லேர்ந்து, இன்னோரு ஊருக்குக் கார்ல போகும்போது இயற்றினாராம். கர்நாடிக், ஹிந்துஸ்தானி சந்தூர், கிடார்னு எது எடுத்தாலும், ஒரு ஆர்வத்துடன் செய்த ஒரு மேதை அவர்.






சிதம்பரம் அகாடெமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்லேர்ந்து இந்தத் தில்லானா அடங்கின "அந்தர்த்வனி" ங்கற "சிடி"ய வெளிட்ருக்காங்க.

அடுத்ததா இப்ப நாம் பாக்கப்போறது "காவலம் ஸ்ரீகுமார்" என்ங்றவரோட பாட்டு. மனுஷன் ஜேஸுதாஸையும், பாலமுரளி கிருஷ்ணாவையும் கலந்த மாதிரி என்னமாப் பாடறார் பாருங்க. எளிமையான இருந்து கொண்டு எப்படி அலட்டாமல் பாடறார்ன்னும் பாருங்க. இவர் "கைரளி"ங்ர மலையாள டி.வி சானல் ஒண்லே அருமையான ப்ரொக்ராம் ஒண்ணு கொடுப்பார்ங்றது மட்டும்தான் இத்தன நாள் தெரிஞ்ச விஷயம். இப்பதான் புரியுது, ஸ்ரீகுமார் ஒரு பெரிய வித்வான்னு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்க்ருதம், இந்த மொழிகள்லதான் கர்நாடிக் கச்சேரிலே பொதுவாக் கேட்போம். ஆனா, மலையாள மொழிலே பாடறதே இல்லியேன்னு நெனைக்கறது உண்டு. இப்போ நீங்க கேக்கப் போறது ஒரு மலையாளக் க்ருதி. "குட்டிகுஞ்சு தங்காச்சி" அப்படீங்றவர் எழுதினது.






Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ ..........................................................................

"வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!"

- வீரபாண்டிய கட்டபொம்மன்

"கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"

- பராசக்தி

"கேள்வியை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?

- திருவிளையாடல்

"கை வீசம்மா, கை வீசு; கடைக்குப் போகலாம் கை வீசு"

- பாசமலர்

"நீ முந்திண்டா நோக்கு...; நான் முந்திண்டா நேக்கு..."

- வியட்நாம் வீடு

"வேற ஒண்ணும் இல்லடி. கிளிக்கு றெக்க மொளச்சுடுது. ஆத்தவிட்டு பறந்து போய்டுத்து.

- கௌரவம்

by சிமுலேஷன்

Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...


பல்லவி

அண்ணலின் ஆணையேந்தி
அன்னை ஜானகியைத் தேடி
அலைகடல் கடந்தாய் அன்றே
அஞ்சனைத் தவப் புதல்வா!

அனுபல்லவி

அசோகவனம் அழித்தாய்
அக்சனை அங்கே மாய்த்தாய்
இலங்கையை கடைந்தெரிந்தாய்
இடர்களைக் களைந்தெரிந்தாய்
இத்தனை செயல் புரிந்தும்
இறுமாப்பே இல்லையானாய்
எத்தனை எட்டினாலும் ஐய
நின் நிகருமுண்டோ

சரணம்

ஒப்பிலா வலிமை பெற்றாய்
ஓதுவோம் உந்தன் நாமம்


இராகம்: கல்யாண வசந்தம்
தாளம்: ஆதி

பாடியவர்: ஆதித்யா
மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ்


Tuesday, February 06, 2007

புனைபெயர்களும் புதிரும்...

புனைபெயரில் எழுதி வந்துள்ள பலரின் உண்மையான பெயர் என்னெவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கலாம். சிலருக்கு அவர்கள் யாரென்பது தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் சொல்லலாமே.


**** வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கு பின்னூட்ட்டங்கள் மூலம் விடைகள் வந்துவிட்டன.

01. அகஸ்தியன்
02. அகிலன்
03. அசோகமித்திரன்
04. அம்பை
05. ஆதவன்
06. இந்திரா பார்த்தசாரதி
07. ஏ.கே.செட்டியார்
08. கல்கி
09. கல்யாண்ஜி
10. கண்ணதாசன்
11. கடுகு
12. கர்நாடகம்
13. கரிச்சான் குஞ்சு
14. காந்தன்
15. சாவி
16. சாண்டில்யன்
17. சிட்டி
18. சுபா
19. சுஜாதா
20. செம்பியன்
21. சோ
22. ஜெகச்சிற்பியன்
23. ஸ்ரீ வேணுகோபாலன்
24. ஜீவா
25. ஸ்டெல்லா புரூஸ்
26. தமிழ்வாணன்
27. தாமரை மணாளன்
28. துமிலன்
29. தேவன்
30. பசுவய்யா
31. பரணீதரன்
32. பரந்தாமன்
33. பாக்கியம் ராமஸ்வாமி
34. புதுமைப் பித்தன்
35. புஷ்பா தங்கதுரை
36. பூவண்ணன்
37. பொன் வண்ணன்
38. ஞானி
39. ரகமி
40. ராண்டார்கை
41. ராஜெஷ் குமார்
42. மகரம்
43. மதன்
44. மனுஷ்ய புத்திரன்
45. மாயாவி
46. மெரினா
47. மௌனி
48. லஷ்மி
49. நாடோடி
50. வல்லிக் கண்ணன்
51. வண்ணதாசன்
52. வாதூலன்
53. வாண்டு மாமா
54. வாலி
55. விடையவன்

விடைகளும், விடுபட்டவைகளும் வரவேற்கப்படுகின்றன.


- சிமுலேஷன்

Saturday, January 27, 2007

ஒடிசி குவிஸ் 2007 (2)

1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?)

2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருடங்கள் கழித்து, நோபல் சொசைட்டி தங்கப் பதக்கங்களை மீண்டும் வழங்கியது ஏன்? (கரையாத மனமும் உண்டோ?)

3. 1980ஆம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற 'நேஷனல் ஹாக்கி லீக்' போட்டிகளின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 110,000 கலந்துகொண்டு ஒரு புதிய சாதனை செய்தார்கள். அது என்ன? (அலை பாயுதே கண்ணா)

4. சென்னை ம்யூசிக் அகாடெமி வழங்கும் 'சங்கீதக் கலாநிதி' விருதினை 1946 மற்றும் 1967 ஆண்டுகளில், பெற்றவர்களிடையே உள்ள ஒற்றுமை என்ன? (ஹேப்பி பர்த் டே தியாகு)

5. ரே ஹாருன் என்னும் கார் பந்தய வீரர், 1911ஆம் ஆண்டு தனது காரில் ஒரு சிறிய மாற்றம் செய்த காரணத்தினால், பந்தயத்தில் முதலாவதாக வர முடிந்தது. அதன்பின் எல்லாக் கார்களிலும் ஏற்பட்ட அந்த மாற்றம்தான் என்ன? (1953ல் சிவாஜியுடன் பண்டரி பாய்)

- சிமுலேஷன்

ஒடிசி குவிஸ் 2007

நேற்றைய தினம் சென்னை ம்யூசிக் அகாடெமியில், "ஒடிசி குவிஸ்" நடை பெற்றது. 'ஒடிசி' சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த்கக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்டுதோறும, பெரிய குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்திப் பல பரிசுகளையும் வழங்குகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இந்திய ரூபாயாகும். சில மாதிரிக் கேள்விகள் இங்கே. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.



01. மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார்? இந்தப் படத்தின் சிறப்பு என்ன?


02. இந்தக் கொடியினை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றியவர் யார்?



03. இந்த விலங்கின் பெயர் என்ன? எந்த அமைப்ப, இந்த விலங்கினை தனது சின்னமாகக் (Logo) கொண்டுள்ளது?


04. இந்த வரைபடத்தில் உள்ள நாட்டிற்கும், நாம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அது என்ன?



05. இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும்


இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன?

- சிமுலேஷன்

Thursday, January 25, 2007

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து



பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


மாணிக்கவாசகரின் திருவாசகம்

பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்

(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)



இராகம்: பாகேஸ்ரீ
பாடியவர்: ஆதித்யா

Friday, January 05, 2007

பாட்டுக் கேட்கப் போனார்...படம் வரைந்து வந்தார்

இசை விழாக்களுக்குச் செல்லும் பலரும், கச்சேரிகளைக் கேட்பது மட்டுமின்றி, அரட்டை அடிப்பது, கேன்டீனில் ரவுண்டு கட்டுவது போன்ற இன்ன பிறவும் செய்வதுண்டு. ஆனால், ஆள்வார்ப்பேட்டை சீத்தம்மா காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தணிக்கை அதிகாரியும், வருமானவரி ஆலோசகருமான வி.சுப்பிரமணியன், புதுமையான பொழுதுபோக்கு ஒன்றினை வைத்துள்ளார்.

கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக்களை இரசித்துக் கொண்டே, இசைக் கலைஞர்களை வரைந்து தள்ளுகின்றார். கச்சேரி முடிவதற்குள்ளாகவே, வண்ணமும் அடித்து, முடிவில் அந்தந்த இசைக் கலைஞர்களிடம், தான் வரைந்த படத்தினைக் காண்பித்து ஆட்டோகிராஃபும் வாங்கி விடுகின்றார். இதனால் எல்லா இசைக் கலைஞர்களிடமும், இவருக்கு நன்கு பரிச்சயமுண்டு. இந்த வருட இசை விழாவில் இவர் வரைந்த சில படங்களை இங்கே காணலாம்.


01. ப்ரவசனக் கலைஞர் விசாகா ஹரி

02. ஓ.எஸ்.அருண் மற்றும் குழுவினர்

03a. மஹதி
03b. கர்னாடிகா சகோதரர்கள் சசிகிரண் & கணேஷ்

04. சாருலதா மணி
05. காயத்ரி கிரீஷ்

06. சரஸ்வதி வாக்கியேயக்காரா டிரஸ்ட் நிறுவனர் என்.வி.எஸ்

07. சங்கீதக் கலாநிதி டி.என்.கிருஷ்ணன்

08a. ஐஷ்வரியா வித்யா ரகுநாத்
08b. வி.சங்கர நாராயணன்

09. மதுரை சுந்தர்

10a. ஆர்.பாலசுப்ரமணியன்
10b. டி.கே.கோவிந்தராவ்

11. புல்லாங்குழல் என்.ரமணி மற்றும் குழுவினர்

12. சவிதா நரசிம்மன்

13. சுகுணா புருஷோத்தமன்


14. சிக்கில் குருசரண்

இவரது 'அனைவரையும் கவரும் ஹரிதாஸ் பஜன்' படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

- சிமுலேஷன்

Thursday, December 21, 2006

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி?

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி? (How to identify Ragas?) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசுதா ஹாலில் நடைபெற்றது, நடத்தியவர்கள் டாக்டர்.சுந்தர் மற்றும் சூரியபிரகாஷ். டாக்டர்.சுந்தர் ஒர் எலும்புச் சிகிச்சை மருத்துவர். சூர்யப் ப்ரகாஷ் அவர்கள் ரிசர்வ் வங்கிகியிலே பணி புரிபவர். காதுக்கினிய இசைக் கச்சேரிகள் பல தந்து, வளர்ந்து வரும் ஒரு இசைக் கலைஞர். டாகடர்.சுந்தரும் தனது ஒய்வு நேரங்களில் இசைக் கச்சேரிகள் செய்வதனுடன், சூர்யப்ரகஷுடன் சேர்ந்து இசை குறித்தான விழிப்பு நிகழ்ச்சிகள் பல நடத்தி வருகின்றார். சரி. மேலே குறிப்பிட்ட இந்தப் பட்டறையிலிருந்த்து சில துளிகளைப் பார்ப்போம்.

இராகம் என்பது கேட்பவருக்கு இனிமையான ஒலியெழுப்பக் கூடிய ஸ்வரங்களின் வரிசையாகும். மேலும் இராகம் என்பது இந்திய இசையின் ஒரு தனித்தன்மையுமாகும். ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு. ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்த ராகங்கள் என்ற பெயர் உண்டு. இந்த மேளகர்த்தா இராகங்களிலிருந்து ஸ்வரங்களை சிறிது மாற்றக் கிடைக்கும் எண்ண்ற்ற இராகங்கள் ஜன்ய இராகங்கள் எனப்படும்.


"இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட இராகங்களை ஒரு கச்சேரியில் இனங் கண்டு கொள்ள வேண்டிய தேவை என்ன? பின்னர் எப்படி இனங் கண்டு கொள்ளுவது?" என்பது பற்றிய இந்தப் பட்டறை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. சென்னையெங்கும் பல்வேறு இசைக் கச்சேரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு விவாதப் பட்டறைக்கு, கிட்டத் தட்ட 200 பேர் கொள்ளக் கூடிய ஒரு அரங்கம், நிரம்பி வழிந்ததென்றால், இரசிகர்கள் வெறும் பாட்டை மட்டும் இரசிக்க விரும்புவதில்லை. மென்மேலும் அறிய ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.

முதன் முதலில் இசை நிகழ்ச்சி செல்லும் ஒருவர், அங்கு பாடப்படும் பாடல்களைச் சும்மா கேட்டுவிட்டு வருகின்றார். இரண்டு மூன்று முறை ஒரே பாடலைக் கேட்ட அவருக்கு, அந்தப் பாடல் மனதில் பதிகின்றது. பின்னர் அந்தப் பாடலின் அழகை இரசிக்க ஆரம்பிக்கிறார். புரிந்த மொழியாக இருந்தால், பொருளழகை இரசிக்கின்றார். அடுத்ததாகப் பொருள் புரிந்தாலும், புரியாவிட்டாலும், இராகத்தின் அழகினை இரசிக்கவும் செய்கின்றார்.

அடுத்த கட்டமாக, "இது என்ன இராகம்?', என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆவல் ஏற்படுவது மனித இயல்பு. பின்னர் அந்த இரகத்தினை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கின்றார். அடுத்த முறை, வேறொரு நிகழ்ச்சியில், அதே இராகத்தில் வேறொரு பாடல் பாடப்படும்போது, "இது நமக்குத் தெரிந்த இந்த இராகம்தானே. சரியாகக் கண்டு பிடித்து விட்டோமே", என்று தனக்குத்தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிறார்.

அடுத்த கட்டமாக, தனக்குத் தெரிந்த நண்பர்களுடன், இதனை அலசி, விவாதம் செய்யும் அளவுக்கு, தேறி விடுகின்றார். ஆக மொத்தம், இது ஒரு தேடுதல் பயணத்தில் ஒரு கட்டமாகும். இந்தக் கண்டு பிடித்தலை எப்படிச் செய்யலாமென்றால், வழிகள் வருமாறு:-

1.தெரிந்ததிலிருந்து தெரியாதற்கு: தெரிந்த பாடல்களின் இராகங்களை, மனதிலிருத்திப் , பின்னர் அதனைக் குறிப்பாக வைத்து, மற்ற பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிப்பது. இதனைப் பெரும்பாலோனோர் செய்கின்றனர். உதாரணமாக, "என்ன தவம் செய்தனை யசோதா" என்ற எளிமையான பாடல் "காப்பி" இராகத்தில் அமைந்தது என்று மனதில் பதியவைத்துக் கொண்டால், அடுத்த முறை, "ஜகதோதாரணா" என்று யாராவது ஆரம்பிக்க, உடனே, காப்பி மனதில் பளிச்சிட்டுப் "பேஷ், பேஷ், இந்தக் காப்பியும் ரொம்ப நன்னாயிருக்கே" என்று சொல்லத் தோன்றும்.

2. திரைப்படப் பாடல்கள் மூலம் ***: அடுத்தபடியாக, திரைப்படப் பாடல்களை ரெஃபரன்ஸாக எடுத்துக் கொள்வது. இதுவும் பலரும் கடைப்பிடிக்கும் ஒரு நுட்பம்தான். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நமது காதுகளில் விழுவது, திரைப்படப் பாடல்கள்தான். அவற்றின் தரத்தினைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதனை விட்டு, அந்தப் பாடல்களிலுள்ள, இராகங்களை மனதில் பிடிக்க முயற்சிக்கலாம். உதாரணமாக, "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே", "பூமாலை வாங்கி வந்தான், பூக்கள் இல்லையே", பாடல்கள், "கானடா" இரகத்தில் அமைந்தவை", என்று நண்பர் சொல்வதை மனதில் இருத்திப் பதிய வைத்துக் கொண்டால், அடுத்த முறை, யாரேனும், "மாமாவசதா" என்று ஆரம்பிக்க, "ஆஹா, நமக்குத் தெரிந்த கானடாதானே இது" என்று ஒரு உற்சாகம் பிறக்கும்.

3. ஸ்வரஸ்தானங்கள் மற்றும் 'பிடி'களிலிருந்து: ஒவ்வொரு இராகங்களுக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்வரங்கள் உள்ளன. இதில் சில ஸ்வரங்கள், ஜீவஸ்வரஙள் எனப்படும் ஆதார ஸ்வரங்களாகும். அதே போல, ஒவ்வொரு புகழ் பெற்ற இராகங்களுக்கும், பாரம்பரியமாகப் பாடும் ஒரு 'பிடி' என்றுண்டு. ஒவ்வொரு இராகத்திற்கும் இந்த ஜீவஸ்வரங்கள் என்னென்னவென்றும், சரியான பிடி என்னவென்றும் தெரிந்து வைத்துக் கொண்டால், அந்த ஸ்வரங்களை, குறிப்பிட்ட பிடியில் பாடகர் உச்சரித்த மறு நிமிடமே, அல்லது இசைக் கலைஞர் தனது, இசைக் கருவியில் இசைத்த மறு நிமிடமே, இது இன்ன இராகம் என்றுணர முடியும். உதாரணமாக, "கரி கா ஸா நி ரி கா" என்ற ஸவரங்களில் 'நி" யை அசைத்து கமகத்துடன் பாடத் துவங்க, இது கல்யாணி என்று புரியும். கல்யாணியை இந்த ஸ்வரங்களை வைத்து மாற்றி மாற்றிப் பாடினாலும், ஆரம்பத்தில் "கரி கா ஸா நி ரி கா" என்று குறிப்பிட்டுப் பிடிப்பது அதற்கே உண்டான சிறப்பு (Charecteristics of Kalynani). ஒவ்வொரு இரகத்துக்குமுண்டான இந்த சிறப்புப் பிடிகளை மனதிற் கொள்வதும், இராகங்களைக் கண்டு பிடிக்கும் வழிகளில் ஒன்றாகும். இந்த நுட்பம் சிறிது கடினமேயென்றாலும், அனுபவத்தில் கொள்ள எளிதாகும்.

4. இராக முத்திரைகள் மூலம்: பெரும்பாலான வாக்கேயக்காரர்கள், தங்களது பாடல்களில், அவரவர் முத்திரைகள் வைத்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உதாரணமாக, முத்துஸ்வாமி தீட்சிதர், தனது பாடல்களில், எதேனும் ஒரு இடத்திலாவது, "குருகுஹ" என்ற பதம் வருமாறு பார்த்துக் கொள்வார். பாபநாசம் சிவன் அவர்கள், "இராமதாச" என்ற முத்திரை வத்திருப்பார். இதே போல, பல பாடல்களில், இராகத்தின் பெயர்கூட முத்திரையாக வைக்கப்பட்டிடுருக்கும். பாடலைக் கூர்ந்து கவனித்தால், இந்த இராக முத்திரையினைக் கண்டு பிடித்து, இந்தப் பாடல் இன்ன இராகம் என்று கூறி விடலாம். உதாரணமாக, "மஹா கணபதிம்" என்ற பாடலில் வரும், "மஹா காவ்ய நாடகாதிப்ரியம்" என்ற தொடரில் வரும் "நாட" என்ற பதத்தினைக் கொண்டு, இது "நாட்டை" என்று கண்டு பிடிக்கலாம். இந்த நுட்பமும் அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் எல்லாப் பாடல்களிலும், இராக முத்திரை நிச்சயம் இருக்குமென்று சொல்லிவ்ட்ட முடியாது.

5. அனுபவபூர்வமாக: எந்த ஒரு கலைக்கும், குறுக்கு வழி கிடையாது. மேற்கண்ட வழிகள் பல இருந்தாலும், அனுபவபூர்வமாக இராகங்களைக் கண்டுணர்தலுக்கு இணையாக எதுவும் கிடையாது. கேட்கக் கேட்கக் கேள்வி ஞானம் பிறக்கும். கேள்வி ஞானம் பிறக்க, எந்தவொரு முயற்சியுமின்றி, இராகங்களை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

இந்த உரைகளுக்குப் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்.சுந்தரும், சூர்யப்ரகாஷும் மாறி மாறி விடையளித்தனர். "ஸ்வரங்களின் பெர்முடேஷன் காம்பினேஷங்களின் அடிப்படையிலே பிறப்பது எண்ணற்ற இராகம் என்றால், எல்லா இராகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவா, அல்லது கண்டு பிடிக்கப்படாத்த இராகங்களும் உள்ளனவா? வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இராகங்களை உருவாக்குவது (Invention) என்பது முடியுமா? அல்லது கண்டு பிடித்தலே (Discovery)சாத்தியமா?" என்று கேள்வி கேட்டென். ஸ்வர்ங்களைக் கலக்கி ஒரு இராகத்தினை உருவாக்கி அதற்கு நமது பெயரை வைத்து அழைத்தல் சாத்தியமே என்றும், ஆனால், அந்த இராகம் நிலைத்து இருப்பது என்பது, பாடுபவர் மற்றும் கேட்பவரின் மனதைக் கவர்ந்தால் மட்டுமே என்றும் பதிலளிக்கப்பட்டது.

"அடுத்த்படியாக, இராகங்களுக்கு மருத்துவ குணம் உண்டா?" என்ற கேள்விக்கு, சூர்யப் ப்ரகாஷ், உண்டு என்ற தொனியில் பதிலளித்தார். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து. "தனக்கு ஒரு கச்சேரியில், கரகரப்ரியா இராகம் கேட்டவுடன், ஸ்பாண்டிலிடிஸ் என்ற நோய் குண்மாகிவிட்டது," என்று டுமீல் விட்டார். ஆனால், டாக்டர்.சுந்தர் அவர்கள், இந்தகைய முடிவுகள் எந்த முறையில் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியது" என்றார். சூரியப்ரகாஷ், "பாடுபவர் தான் பாடும் பாடலினால் ஒருவருக்கு நோயினைக் குண்மாக்க முடுகின்றதோ இல்லையோ, இரத்தக் கொதிப்பு எளிதில் வர வைக்க முடியும்", என்று கூற, கூட்டத்தினர் அந்த நகைச்சுவையினை இரசித்தனர்.

*** திரையிசையின் மூலம் இராகங்களைக் கண்டுபிடிப்பது குறித்த எனது முந்தைய பதிவுகள்:

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

- சிமுலேஷன்

Tuesday, December 19, 2006

ரவுசு




ஐ.டிகம்பெனிக்களில், செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டுடுவிடக் கூடாது என்பதற்காக, சில் பல திட்டங்கள் உண்டு. அதிலொன்று, மாத்தில் ஒரு நாள் ஊழியர்களைப் பாரம்பரிய உடையில் வரச் சொல்வது.

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு புராஜக்ட் மானேஜர் வந்த் கோலம்தான் இது.

குறும்புப் போட்டிக்கு கூட்டுத் தயாரிப்பு

தேன்கூடு+தமிழோவியம் "குறும்பு" போட்டிக்கு, டாபிகலாக ஏதேனும் படைக்க எண்ணம். ஆனால், இது ஒரு கூட்டுத் தயாரிப்பு; படங்கள் உதவி மட்டுமே என்னிடமிருந்து; குறும்பான கமெண்ட் கொடுத்துக் கலக்கப் போவது நீங்கள்தான். எங்கே உங்கள் குறும்புக் கமெண்டுகளை பின்னுட்டமாக இடுங்கள் பார்க்கலாம்.

- சிமுலேஷன்

1.
2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

ரெடி..... ஒன்...ட்டூ...த்ரீ.... ஸ்டார்ட்....

Thursday, December 14, 2006

புகைப்படப் புதிர்-05 - இந்திய இசைக் கருவிகள்

இசை விழா நடக்கும் இந்நாட்களில் இசைக் கருவிகளை வைத்து ஒரு புதிர்.



01. தயிரைக் கடைந்த சர்தார்.

02. எத்தனை முகமெனெ எண்ணினால் போயிற்று.

03. கொத்தமங்கலத்தில் பாணம் விடமுடியுமா?

04. மூஞ்சிக்கும் வீணைக்கும் என்ன முடிச்சு?

05. சூரியகாந்தியில் பீட்டர் விட்ட பாடல்.

06. ஆமாஞ்சாமிகளின் ராஜ்ஜியம்.


07. இதில் சுநாதவினோதினி இராகம் வாசிப்பது சுலபமோ?


08. காஷ்மீர்ப்பெண்ணே. எக்ச்யூஸ் மீ. நீங்க எந்த காலேஜ்?

09. ஒய்.ஜி.எம்மின் மர்மத் தொடர்.




10. ஸ்வரங்களே மண்டலமானால்...

- சிமுலேஷன்