Monday, December 28, 2009

எம் தமிழர் செய்த படம்



திரைப்பட வரலாறு, காட்டுயிர் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பங்களித்தவர் தியோடர் பாஸ்கரன். இவர் தமிழ் சினிமா குறித்து எழுதிய ஒரு புத்தகம், "எம் தமிழர் செய்த படம்". தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்றின் முக்கிய பரிணாமங்கள் சிலவற்றின் மீது கவனத்தைச் செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகம்.

இது புத்தக வடிவம் என்று சொன்னாலும் கூட, குங்குமம், தீராநதி, மனோரமா இயர் புக், இந்தியா டுடே, தினமணி, காலச்சுவடு, புதிய பார்வை, கசடதபற ஆகிய இதழ்களில், தியோடர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பேயாகும். ஆகவே, முழுப்புத்தகம் படிக்கும்மோது ஓட்டம் சிறிது தடைப்டுகின்றது. இதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்தப் புத்தகத்தில் நல்ல பல சுவையான விஷயங்கள் இருப்பதனை ரசிக்கலாம். ஆவணப் படங்களின் தோற்றம், பிரிட்டிஷ் அரசும் தமிழ்த் திரையும், சினிமாவும் தணிக்கையும் ஆகிய தலைப்புகளில் அலசியுள்ளார். இது தவிர, தமிழ் சினிமாவில் பாத்திரப் பேச்சு, இலக்கியம், பாட்டு, திராவிட இயக்கத்தின் குரல், நாவல்களின் பங்கு, கலைப் படங்கள், சினிமா ரசனை, ஆபாசம்-வன்முறை உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்த தனது பார்வையயும் எடுத்து வைக்கின்றார்.

இப்புத்தகத்திலிருந்து சில சுவையான சில விஷயங்கள்:-

- திருச்சியில் வசித்து, ரயில்வேயில் டிராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட்டிற்கு தொழில் நுணுக்கக் கருவிகளில் மிகுந்த ஈடுபாடு. 1905ல் திருச்சி ரயில் நிலையத்தில் டூபா என்ற பிரஞ்சுக்காரரைச் சந்தித்து, அவரிடமிருந்து சினிமாக் காட்சி சாதனங்களிப் பெற்று ஒரு exhibitor ஆக உருவாகின்றார். பின்னர் டாக்கி யுகத்தில், கோவையில் 'லைட் ஹவுஸ்', வெரைட்டி ஹால் முதலிய திரையரங்குகளைக் கட்டுகின்றார்.

- டூரிங் திரையரங்குகள் வந்த போது, டிக்கெட் என்ற்ய் எதுவும் கிடையாது. ஓரணா அல்லது இரண்டணா காசு கொடுத்து உள்ளே நுழையலாம். காசில்லாதவர்கள் அரிசி, ப்ருப்பு, புளி முதலியவற்றைக் கொடுத்து காட்சியைப் பார்க்கலாம். இப்படிச் சேர்ந்த பண்டங்களை அந்த வாரச் சந்தையில் ஒரு ஸ்பெஹல் கடை போட்டு விற்றுவிட்டு, காட்சியாளர் அடுத்த ஊருக்கு மூட்டை கட்டுவார்.

இது போன்ற சுவையான பல் வேறு விஷயங்களையும், எப்படி வேவ்வேறு மனிதர்கள் இந்தத் தமிழ்த் திரையுலகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் என்பதனையும் "எம் தமிழர் செய்த படம்' அழகுற விளக்குகின்றது.


பதிப்பு: உயிர்மைப் பதிப்பகம்
விலை: Rs.100

- சிமுலேஷன்