Saturday, March 28, 2020

ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம்





ஜெயலலிதா  மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் 
--------------------------------------------------------------------------------------------------

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் ஒரு முழு நீளப் புத்தகம் எழுதியிருக்கின்றார் என்ற சேதி வந்தே போதே, அதனைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டேன்.... ஜெயலலிதா, உயிருடன் இருக்கும் போதே இந்த புத்தகம் கொண்டு வர முயற்சி எடுத்து, கோர்ட்டில் தடை வாங்கப்பட்டப் புத்தகம்..... அதனாலேயே இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்ற ஆவல் இன்னமும் மிகுந்தது....  அவர் மறைவுக்குப் பின்னர் 2018 ல்  வெளியான இந்தப் புத்தகத்தை எப்போது வாங்கினேன் என்று தெரியவில்லை.... இப்போதுதான் கரோனா வைரஸ் புண்ணியத்தில் ஓரிரு நாட்கள் முன்பு படித்து முடித்தேன்..... இந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க முடிவதில்லை,,,,. சோசியல் மீடியா அந்தளவுக்கு  பாதிப்பு ஏற்படுத்துகின்றது..... ஆனால் இந்த முறை எடுத்த புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு வெறியுடன் படித்து முடித்தேன். 

இந்தப் புத்தகத்தில் அப்படி என்னென்ன இருக்கின்றன என்று சொன்னால், அவை ஒரு மிகப் பெரிய பட்டியலாக இருக்கும்..... ஜெயலலிதாவின் அப்பழுக்கற்ற ஆங்கிலம், அவரது நிறைவேறாத காதல், எம்.ஜி.ஆருடன் அவருக்கு இருந்த சிக்கலான உறவு, சசிகலாவுடனான அவரது தோழமை இவையெல்லாம் இங்கே பேசப்பட்டிருக்கின்றன....... அது தவிர, அவரது ஆணவம், மூர்க்கமான கோபம், எதிரிப்பை மன்னிக்காத பழி வாங்கும் குணம், அவரது தனிமை உறவு, அடிமனத்தின் கோபம்,  பட்ட அவமானங்கள் ஆகியவையும் விரிவாக்கப் பேசப்பட்டிருக்கின்றன...... ஆண் சார்ந்த அரசியலில் ஒரு பெண் உயர்நிலைக்கு வருவது எத்தனை சிரமம் என்பது இந்த நூலை வாசித்த பின்னர் அனைவரும் உணர முடியும்..... ஜெயலலிதாவின் முன்னாள் தோழிகள் சாந்தினி, ஸ்ரீமதி ஆகியோர், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவுக்குப் பல காலஅந்தரங்க காரியதரிசியாக இருந்த சோலை, பத்திரிகையாளர் சோ ராமசாமி போன்ற பலரை மேற்கோள் காட்டி பல சுவாரசியமான விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  

இருபது வயது முதல் முப்பது வயதுக்குள்ள ஒவ்வொரு வாசகரும் ஜெயலலிதா எப்படிப்பட்டவர் என்று இந்த நூலின் மூலம் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்..... ஆனால், எழுபதுகளிருந்து அரசியலில் ஆர்வம் காட்டி  வரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட என்னைப் போன்ற கூட்டாளிகளுக்கு இந்தப் புத்தகம், அவ்வளவு நிறைவு அளிக்காது என்றே நம்புகின்றேன்..... காரணங்கள் பல....  இதற்கு ஆசிரியர் வாஸந்தி என்ன செய்திருக்கலாம்?

- ஆசிரியர் வாஸந்தி அவர்கள் ஜெயலலிதாவின் பால்ய கால நண்பர்களிடமிருந்து பல விபரங்கள் கேட்டுப் பெற்றதாக எழுதியுள்ளார்..... அவர்கள் பெயர்களையும் எழுதியுள்ளார்... ஆனால் அரசியல்வாதிகளின் பெயரைக் கூரும்போது, அவர்களிடம் பேட்டி எடுத்தாரா அல்லது அந்த அரசியல்வாதிகள் சொன்ன பத்திரிகைகள் வழி வந்த விஷயங்களை ஆதாரமாக எடுக்கொண்டாரா என்று தெரியவில்லை.... உதாரணமாக ஆர்.ஏ.ம்.வீரப்பன், சோலை போன்றவர்களிடமிருந்து பர்ஸ்ட் ஹேண்ட் இன்பர்மேஷன் பெற்றாரா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. 

- அடுத்தகாக ஜெயலலிதா அவர்களின் அரசியல் பயணம் 1989 ல் ஆரம்பித்து 2016  வரை என நீண்ட நெடிய வரலாறு கொண்டது......  இதில் ஆறு  முறை (1991, 2001, 2002, 2011, 2015, 2016) முதலமைச்சராக இருந்திருக்கிறார்..... இதற்கேற்ப அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டிருந்தால் (Chapterization) படிக்க இலகுவாக இருந்திக்கும்..... இப்படி செய்யாத காரணத்தினால், நாம் படிக்கும்போது இப்போது ஜெயலலிதா முதல்வரா? அல்லது எதிர்க்கட்சியா என்று புரியாமல் குழம்பிவிடுகின்றோம்..... குறிப்பாக இறுதி அத்தியாயங்களில் என்ன வழக்கு, எப்போது வருகிறது, எதில் ஜெயிக்கிறார், எதில் தோற்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாதபடி அப்படி ஒரு குழப்பம் ஏற்படுகின்றது. 

- மற்ற அல்ல அரசியல்வாதிகளையும் போலவே, ஜெயலலிதா எல்லா எதிர்க்கட்சிகளுடனும் கூட்டு வைத்திருக்கின்றார்.... எந்தக் கால கட்டத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்திருந்தார் என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை....  அதனை ஆசிரியர் இன்னமும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

- இரண்டு பாகங்கள் கொண்ட இந்த வரலாறை காலச்சுவடு ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறது..... மொத்தம் பதினெட்டு அத்தியாயங்கள்...... ஆனால் எந்த ஒரு அத்தியாயத்திற்கும் தலைப்பே இல்லை..... தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான விஷயம் என்னெவென்று பிடிபட்டிருக்கும்.

- ஜெயலலிதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த உறவு, சோபன் பாபுக்கும் இடையே இருந்த உறவு பற்றியெல்லாம் (ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால்) ஓரளவு வெளிப்படையாகவே எழுதிய ஆசிரியர் சில விஷயங்களையெல்லாம் அவசர கதியில் எழுதியிருப்பதாகத் தெரிகின்றது..... சில இடங்களில் ஆழ்ந்து எழுதவில்லையே என்று தெரிகின்றது.... இல்லை இது எடிட்டரின் குறையோ... அறியேன்...... உதாரணமாக, கருணாநிதிக்கு அடுத்தபடியாக எதிரியாயாக எண்ணிக் கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பனை மீண்டும் ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் என்ற விளக்கம் கொடுக்க முடியவில்லை. நெடுந் செழியன் உள்ளிட்ட நால்வர் அணி மேல் இருந்த சினம், வெறுப்புக் கருத்துக்கள் பற்றிய விபரங்கள் போன்ற இல்லை.  திருநாவுக்கரசு அவ்வப்போது மட்டுமே வந்து போகின்றார். அவரது பங்களிப்பு என்ன, ஏன் பிறகு விரோதம் போராடினார் இவையெல்லாம் தெரிவதில்லை. 

- பத்திரிகை உலகம் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த வன்மம் பற்றி பத்திரிகையாளரான வாஸந்திக்கு பெருத்த கோபம் இருந்ததை பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு கூட ஆதரவு தெரிவிக்கின்றாரே என்ற அசூயை  வராமலில்லை. 

- அடுத்த பதிப்பு என்று ஒன்று காலச்சுவடு கொண்டு வந்தால் கண்டிப்பாக ஒரு பிற்சேர்க்கை அகராதி என்ற ஒண்றினைச் சேர்க்க வேண்டும். இதில் காலவரிசைப்படி (Chronological  order) வாழ்க்கை நிகழ்வுகள் பட்டியலிடப்பட வேண்டும். எந்தெந்த ஆண்டுகளில் முதலைவராக இருந்தார், எந்தெந்த ஆண்டுகளில் எதிரிக்கட்சித் தலைவராக இருந்தார், எப்போது யாருடன் கூடு வைத்தார் போன்ற விபரங்கள் பட்டியலாக இட்டால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.  

எடிட்டிங்கில் பல குறைகள் இருந்தாலும் எழுத்தாளர் வாஸந்தியின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது. அதிலும் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு ஆளுமையின் வரலாற்றினை, அதுவும் பல்வேறு சென்சிடிவ் விஷயங்களை இணைத்து, அவர் உயிரோடு இருந்த கால கட்டத்திலேயே எழுவது என்பது ஒரு மாபெரும் தீரச் செயல் என்றே கூற வேண்டும்..... வாழ்க்கை வரலாறு என்றாலே காக்காய் பிடித்தல், ஜால்றா அடித்தல், என்று படித்து பழகி விட்ட தமிழ் வாசகர்களுக்கும் வாஸந்தி அவர்கள் எழுதியுள்ள "ஜெயலலிதா - மனமும் மாயையும்" ஒரு வித்தியாசமான அனுபவத்தினைத் தரும்.                 
  
நூல்                                     - ஜெயலலிதா மனமும் மாயையும்
ஆசிரியர்                           - வாஸந்தி   
பதிப்பகம்                         - காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் 
முதல் பதிப்பு                   - ஜனவரி 2018 
திருத்தப்பட்ட பதிப்பு    - ஜுலை 2018 
பக்கங்கள்                        - 342  

- சிமுலேஷன் 




Tuesday, January 14, 2020

கதை விமர்சனங்களுக்கான காணொளிப் பதிவுகள்

பலப் பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதும் வலைப்பதிவு இது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு இந்த வலைத்தளத்தில் நூல் விமர்சனம் செய்துள்ளேன். அட்டேன்க்ஷன் டெபிசியன்ஷி சின்ரோம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த நூல் விமர்சனங்களையே வீடியோ முறைகள் செய்தாலென்ன என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் "நூல்வி" என்றதொரு சேனல் ஐந்து நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் ஒவ்வொரு வீடியோவும். செய்வதாகத் திட்டம். இதுவரை இடம் பெற்றுள்ள நூல் விமர்சனங்கள் வருமாறு:-

1 . அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.


2. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார்.



3. அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை அப்பட்டமாக எழுத்தில் பதிவு செய்வதில் இந்திரா பார்த்தசாரதி என்றுமே தயங்கியதில்லை. அவரது புனைவுகளில் கூட, ஊடாடியிருக்கும் நிஜங்களைக் கண்டுபிடித்துப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும். அப்படியிருக்க, அரசியல் பின்னணியைக் களமாகக் கொண்ட "சுதந்தர பூமி", நாவல் அரசியல் விரும்பும் வாசகர்களைக் கவருவதில் வியப்பேதுமில்லை. சுதந்தர பூமி டெல்லி அரசியலில் உள்ள அரசியல் தரகர்கள் பற்றியும் அங்கு நடைபெறும்  உள்ளடி வேலைகள் பற்றியும் குறித்துப் பேசும் நாவல். 



4. ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை. இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது.



உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.
நன்றி.
- சிமுலேஷன் சுந்தர்