Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, December 24, 2016

விமர்சகர்



வெகு நாட்களுக்கப்புறம், கல்யாணராமனுக்கு இன்றைக்குத்தான் கொஞ்சம் டென்ஷன்  இல்லாமல் இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் நான்கு கச்சேரிகள் செய்து விட்டார். குசும்பனின் விமர்சனங்கள்தான் அவரை இப்போதெல்லாம் டென்ஷன் ஆக்குகின்றன. குசும்பன் போன்ற விமர்சகர்கள் இல்லாத, சாதாரண ரசிகர்கள் இல்லாத பள்ளி மாணவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் கச்சேரி, இன்று அனந்த கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில்.

இந்தக் குசும்பன் பெயருக்கேத்த மாதிரி நிறையாக குசும்ம்பு பிடித்தவர்தான். அவருடைய விமர்சனங்கள் ரொம்பவே காரசாரமாகவும், விவரமாகவும், நக்கலாகவும் இருக்கும். சும்மா மற்றவர்கள் மாதிரி கேண்டீன் எப்படி இருந்தது, பாடகர் என்ன புடவை கட்டிக்க கொண்டு வந்தார், என்றெல்லாம் எழுதி பக்கங்களை நிரப்ப மாட்டார். டெக்கனிகளாகப் பின்னிப் பெடலெடுத்து விடுவார். இந்த மாதிரித்தான் கல்யாணராமனின் கடந்த நான்கு கச்சேரிக்களையும் பின்னிக் கிழித்து விட்டார்.

இந்தக் குசும்பன் யாரென்று தெரிந்து வைத்துக் கொண்டாலாவது கொஞ்சம் மஸ்கா அடித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் புனைபெயரில் எழுதும் குசும்பன் யாரென்று எந்தக் கச்சேரியிலும்  பார்த்துக் கண்டு பிடிக்க முடியவில்லை.

போன முறை, ஆலாபனைகளைப் பாராட்டி எழுதியிருந்தாலும், ஸ்வர பிரயோகங்களில் தவறு செய்து, ஸ்ரீ ராகத்தினை மத்யமாவதியாக மாற்றி விட்டதை சுட்டிக் காட்டியியிருந்தார். அப்புறம் உச்சரிப்புப் பிழையெல்லாம் வேறு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். விமர்சனம் சரியாக இருந்தாலும், அதனை ஜீரணம் செய்யும் பக்குவம் இல்லாத கல்யாணராமனுக்கு இன்று பள்ளி மாணவர்களிடையே கச்சேரி செய்யும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி.

வெகு நாட்கள் கழித்து கல்யாணராமன், நிம்மதியாகக் கல்யாணியில் ஆலாபனையை ஆரம்பிக்க, நோட்டுப் புத்தகத்தை எடுத்து விமர்சனம்  எழுத ஆரம்பித்தான், பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் குசும்பன் என்ற குமரேஷ்.

- சிமுலேஷன்
  
 

Friday, May 29, 2015

தேவதை வந்தாள்


"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..."
கேப்டன், ராதிகாவைத் தள்ளி விட்டு மாவாட்டிக் கொண்டிருந்த காட்சியைக் டி.வி.யில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராமசர்மா.

"என்னடி இது? அப்பா போய் சினிமாப் பாட்டெல்லாம் டி.விலே பாத்திண்டிருக்கார்?"

"சித்தப்பா, நான் அப்புறமா சொல்றேன். நீங்க மொதல்லே, உங்க கையாலே அவருக்கு இந்தத் தயிர் சாதத்தை ஊட்டி விடுங்கோ"

கஞ்சனூர்   ராமசர்மான்னா எப்படிக் கூட்டம் அலை மோதும். கும்மோணத்லேந்தும், தஞ்சார்லேந்தும் வண்டி வெச்சுக் கூட்டிண்டு போவாளே! ஆனா, இப்ப மனுஷன் இப்படிப் படுத்த படுக்கையாக் கெடக்கறாரே!

"சரஸா, டாக்டர் என்ன சொல்றாரு?"

"சித்தப்பா, அப்பாக்கு அல்ஷைமெர்ஸ் டிஸீஸ் வந்துடுத்து. என்ன பண்றார்னு அவருக்கே தெரியல. பட்டப் பகல்லே கோயிலுக்குப் கெளம்பிப் போயிடறாரு, நடை சாத்தியிருக்கும்னு கூடத் தெரியாம. கிட்னி எல்லாம் கூட வீக்காயிடுத்தாம். அவருக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்திடுங்கோன்னு டாக்டர் சொல்லிட்டார். சரின்னு அவருக்குப் பிடிச்ச காசி ஹல்வா, கடுகுப் பச்சடின்னு ஒவ்வொண்ணாப் பண்ணிக் கொடுத்துட்டேன். ஆகஸ்ட் வந்தா தொண்ணூத்தி நாலாகப் போறது. நெறவா வாழ்ந்துட்டார். பிரச்னை இல்லாம எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச் சரி."

"அப்புறம் அன்னிக்குப் போன்லே என்னமோ சொன்னியே, ஹரிஹரன் வரணும்னுட்டு. நாளைக்கிக் கார்த்தால வந்துடுவன். இந்நேரம் மெட்ராஸ்லே வந்து எறங்கியிருப்பன்"

"ஆமாம் சித்தப்பா, “தேவதை எப்ப வருவா", தேவதை எப்ப வருவா?”ன்னு கேக்காத நாளே இல்ல"

ஒரே ஒரு தெருவையே கிராமம்னு சொல்லிக் கொள்ளும் அந்தக் கோட்டூர் கிராமத்தில் ஸ்கார்ப்பியோ வந்து நின்ற போது, அந்த தெருவிலுள்ள இருபது குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தன.

"பாத்து பாத்து அண்ணா! மேலே உத்தரம் இடிக்கப் போறது"

சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து நிமிர்ந்த ஹரிஹரன் முன்னால் பாய் போடப்பட்டிருந்தது.

"அண்ணா ஸ்ருதி பாக்ஸ்?"

"அதெல்லாம் வேணாம்மா. மொபைல்லேயே ஆப் இருக்கு. அது போதும்."

" ஸ..ரி...க.. . பா.... நீ..ஸா"

ஆரோகணத்தில் கோடி காட்டிவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிஷாதத்தில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தான் ஹரிஹரன்.

ராமசர்மா கண்ணைத் திறந்து வாஞ்சையுடன் பார்த்தார்.

"ம்..ம்..மேலே பாடுன்னுசொல்வது போல இருந்தது.

"ஸரஸ்வதி...ஸ்ரொதஸ்வனி..."

ஹரிஹரன் பல்லவி எடுக்க ராம சர்மா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சரஸா, உனக்குக் கூட ஸ்ரொதஸ்வனின்னுதானேப் பேரு. அப்றம்  எப்படி நீ சரஸாவானே?"

"சித்தப்பா அப்பாக்கு இந்த ராகம்னா உசிரு. கீரவாணியோட ஜன்யம். எனக்கும் அப்பா இந்தப் பேரத்தான் வெச்சார். ஆனா அம்மாதான் கூப்பிட முடியலேன்னு ஸரஸ்வதின்னு மாத்திட்டா. கடேசிலே இப்ப சரஸாவாயிட்டேன். அப்புறம் இந்த "சிந்திய வெண்மணி" ஏன் பாக்கறார்னு கேட்டேளே! அதுவும் இதே ராகம்தான். அப்பா போட்ட பாட்டைப் பாட யாரும்  இல்லைன்னுதான் இந்தப் பாட்டு டி.விலே வந்தா ரொம்ப ஆசையாக் கேப்பார். "           

ஹரிஹரன் அனுபல்லவியிலிருந்து சரணத்துக்கு வருவதற்குள் சித்தப்பவாவிடம் இவ்வளவும் சொல்ல முடிந்தது.  ஆனால் ஹரிஹரனும், ராமசர்மாவுமோ வேறு ஓர் உலகத்திலிருந்தார்கள்.


ஹரிஹரன் சரணம் முடித்து, மறுபடியும், ‘ஸரஸ்வதிஸ்ரொதஸ்வனின்னு பல்லவி எடுக்கும்போது ராமசர்மா அந்த ராக தேவதையுடன் சங்கமமாகியிருந்தார்.

(சிமுலேஷன்)

Tuesday, November 01, 2011

வாடிக்கையாளரே ராஜா

“என்னங்க, வண்டியை அந்தக் கடையாண்டை நிறுத்துச் சொன்னா, இங்கே வந்து நிறுத்தறீங்க”

ஆள்வார்ப்பேட்டையிலிருந்த சற்றே சிறிய கண்ணாடிக்கடையினை விட்டுக் கொஞ்சம் தள்ளி வந்து, ஒரு பெரிய கடையின் முன்னால் பைக்கை நிறுத்தினான் ராஜேஷ்.

“வா. ரம்யா. இந்தக் கடைக்கே போகலாம்”

“எதுக்குங்க. அந்தக் கடையிலும் ஏற்கெனவே ஒரு முறை கண்ணாடி வாங்கியிருகோம். இந்தக் கடையிலேயும் வாங்கியிருகோம். ஆனா, அந்தக் கடையிலே இருநூறு ரூபாய்  கொறச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் காபி, கூல் ட்ரிங்ஸ் எல்லாம் கூடக் கொடுத்தாங்க. அதை விட்டுட்டு இங்க ஏன் வந்தீங்க?”

“ரம்யா. போனமுறை அந்தக் கடைக்குப் போன போது, நடந்த சம்பவம் மறந்துடுச்சா?”

“ஆமாமா? யாரோ ஒரு எலக்ட்ரீஷியனுக்கு ஷாக் அடிச்சுதுன்னு நினைக்கிறேன்!”

“கரெக்ட். நாம கண்ணாடி வாங்கிட்டிருந்தப்போ எலக்ட்ரீஷியன் ஒருத்தன் சீலிங்லே ட்ரில்லிங் மெஷின் வெச்சுட்டு வேலை செஞ்சுட்டிருந்தான். அவனுக்கு திடீர்னு எலக்ட்ரிக் ஷாக் அடிச்சுடிச்சு. கிட்டத்தட்ட மயக்கம் போடற நெலமைக்கு வேற போயிட்டான். உடனே கடை ஓனர், கடையிலே பரபரப்பு அதிகமாகி, வியாபாரம் பாதிச்சுருமோன்னு எண்ணி, அவனை ‘அப்புறமா வாப்பா’ன்னு சொல்லிட்டாரு. அவனுக்கு என்ன ஆச்சுன்னு கேக்கவும் இல்ல. ஒரு வாய்த்தண்ணி கூட கொடுக்கவும் இல்லை. ஆனா அதே சமயத்திலே நமக்கெல்லாம் கூல் ட்ரிங்க்ஸ். காபி எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணிட்டிருந்தாரு.

ஒரு பிஸினஸ் செய்பவருக்கு வாடிக்கையாளர்தான் ராஜாவாக இருக்கலாம். வாடிக்கையாளரைக் கவனிப்பது முக்கியமாகவும் இருக்கலாம். ஆனா, அதே சமயம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட வேண்டாமா? அதனாலதான் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத அந்தக் கடையை எனக்குப் பிடிக்கலே. விலை கம்மியாயிருந்தாலும் சரி”

ராஜேஷைப் பெருமையுடன் பார்த்தாள் ரம்யா. 

- சிமுலேஷன்

தேவையா மொபைல்

சுரேஷ், பாரதி பூங்காவில் பத்தாவது சுற்றுச் சுற்றிக் கொண்டிருந்த போதும், அந்தக் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அழுக்கான ஒரு டி-ஷர்ட். அரை நிஜார் தெரிய ஒரு லுங்கி.  ஐந்து நாட்களுக்கும் மேலே ஆகியிருக்கும் அவன் குளித்து. வறுமைக்கோட்டைத் தாண்டி வர, அவனுக்குப் பல வருடங்களாகலாம். இப்படிப்பட்ட ஒருவன் மொபல் போனில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிக் கொண்டிருப்பது சுரேஷுக்கு ஆச்சரியத்தையும் மட்டுமல்ல, எரிச்சலையும்கூடத் தந்தது.

இந்த மாதிரி அவன் பேசிக் கொண்டிருந்தால், நிச்சயம் மாசம் ஆயிரம் ருபாய்க்குக் குறைவாக  பில் வராமலிருக்காது. அவன் சம்பாதிப்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய் இருக்கலாம். அதில், ஆயிரம் ருபாய்க்கு மொபைலில் பேசினால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படி என்ன அரட்டை வேண்டிக் கிடக்கு? திருந்தாத ஜென்மங்கள்!” என்றெல்லாம் நினத்தபடி வாக்கிங்கை முடித்த சுரேஷுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனுடன் பேசிப் பார்த்தால் என்ன? “இப்படியெல்லாம் காசை வீணாக்காதே அப்பா”, என்று நைசாக எடுத்துரைத்தால்தான் என்னவென்று யோசித்தபடி அந்த லுங்கி வாலாவை நெருங்கினான்.
சுரேஷைப் பார்த்தவுடன் அவன் மையமாகச் சிரித்தான்.

“டெய்லி போன்ல பேசறீங்க போலிருக்கு.”

“ஆமாங்க”

“டெய்லி அரை மணிநேரத்துக்கும் மேலே பேசறீங்களே. நெறையக் காசு ஆவுமே. யார்கூட அப்படிப் பேசறீங்க?”

“என்னோட பொண்ணுகிட்டையும், பையன்கிட்டையும்தாங்க”

“என்னது? பொண்ணு, பையன்கிட்டேயா? அவங்க எங்க இருக்காங்க?”

“அவங்க பெங்களூர்லே படிக்கறாங்க சார். என் சம்சாராம் மூணு மாசம் முன்னாடி தவறிப் போச்சு. அதனால அவங்களைப் பள்ளிக் கூடத்திலேர்ந்து நிறுத்திரலாமான்னு நெனைச்சேன். ஆனா அவங்க அம்மா வேலை செஞ்ச எடத்து மொதலாளி அம்மாவோட மக, என் பசங்கள பெங்களூரு கூட்டிட்டுப் போய்ப் படிக்க வெக்கறேன்னு சொன்னாங்க. என்னாலையும் சரி, என் பசங்களாலையும் சரி. தினமும் ஒருத்தருகொருத்தர் தெனமும் பேசாம இருக்க முடியாது. அதுக்காக அவங்களே எனக்கும் எம் பசங்களுக்கும் மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஸ்கூலுக்குப் போறத்துக்கு முன்னாடி தெனம் அரை மணிநேரம் என்னோட பேசுவாங்க. ஆனா, அவங்களோட மொபைல் பேசறது இன்னியோடக் கடைசி நாளுங்க.”

“ஏம்ப்பா? என்ன ஆச்சு?”

“மொதலாளியம்மா எனக்கும் பெங்களூர்லே வேலை வாங்கிக் கொடுத்துட்டாங்க. இன்னிக்கி ராத்திரியே நானும் பெங்களூரு போறேன். இனிமே என் பசங்களோடயே நானும் இருப்பேன் சார். போன்ல பேசத் தேவையில்லை”

- சிமுலேஷன்

Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்.

"என்னம்மா? இந்த நேரத்திலே?"

"அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ."

"எதுக்கும்மா?"

"அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்."

"மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்"

"என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?"

"அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு"

"எதுக்கு?..."

"என்னடி இது? என்னோட டான்ஸ் வருது?..."

"ஆமாம்மா. இந்தக் குரங்கு டி.வி போட்டாத்தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சா. சேனல் மாத்திண்டே வரும்போது, திடீர்னு, "பாட்டி டான்ஸ், பாட்டி டான்ஸ்ன்னு" கத்த ஆரம்பிச்சுட்டா. சரின்னு உடனே ஒனக்குப் போன் பண்ணிச் சொல்லலாமேன்னுதான் பண்ணினேன்"

சமீபத்தில் எழுபதுகளில் தூர்தர்ஷனில் ஆடிய தனது டான்ஸை பார்த்துவிட்டு படுத்த மைதிலிக்குத் தூக்கம் வர வெகு நேரமாயிற்று.

- சிமுலேஷன்

Monday, August 03, 2009

கலக்கலா ஒரு கலாச்சாரம்

பெர்க்ளே யூனிவர்சிட்டியின் அந்த மையமண்டபத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கூட்டத்தில் கபிலனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமாயிருக்கவில்லை வீழிநாதனுக்கு. கபிலனை உணவகத்திகு அழைத்து சென்றார்.

“என்ன கபிலன். கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சென்னை போகப்போறதா...”
“ஆமா ஐயா. என்னுடைய ஆராய்ச்சியை முடிச்சுட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.”

“ஏன். உங்கள மாதிரி ஆட்களை எங்களோட கலிபோர்னியா யூனிவர்சிட்டிலே கொத்திக் கொண்டு போய்விட மாட்டோமா? இன்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு” பற்றி ஆராய்ச்சி பண்ணினது பெரிய விஷயம் இல்லை. ஆனா அத பத்தி சமயம் வரும்போதெல்லாம் இங்க இருக்கற மக்கள்ளுக்கெல்லாம் எடுத்துச் சொன்னீங்க பாருங்க. அது பெரிய விஷயம். அதுவும் சான்டாக்ளரால மட்டும் கிட்டத்தட்ட எழுவது நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கீங்க. எப்படி முடிஞ்சுது இதெல்லாம்?”

“ஐயா! உன்மையிலேயே நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி எல்லோரோடையும் பகிர்ந்துக்க்ணும்னு ஒரு ஆர்வம்தான். இந்த ஆராய்ச்சியிலே நான் படிச்சுத் தெரிஞ்சுகிட்டதைவிட, பட்டுத் தெரிஞ்சுகிட்டதுதான் அதிகம்.”

“அப்படியா! கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க கபிலன்.”

“ஐயா, என்னோட இந்த ஆராய்ச்சிக்கு ரொம்ம்பவுமே உதவியாய் இருந்ததுன்னா, அது என் குடும்பம்தான். தமிழர் பண்பாடு அப்படின்னு சொன்னா, அதுக்கு உதாரணமா எங்க குடும்பத்தப்பத்தி சொல்லலாம். அதாவது, “விருந்தோம்பல்”, “அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறது”, “சுற்றுபுறத்தை சுத்தமா வச்சிக்கிறது” அப்படின்னு பல உதாரணாம் சொல்லலாம்.
எங்க வீட்ல எந்த நேரத்துலே எந்த உறவுக்காரங்க வந்தாலும், சாப்பிடாமப் போக முடியாது. எங்கப்பா விட்டாலும் எங்கம்மா விட மாட்டாங்க. அதே மாதிரி, எங்க பாட்டி, பள்ளிக் கூடத்துக்குப் போனதில்லையே ஒழிய, எல்லா இதிகாசமும், இலக்கியமும் படிச்சவங்க. இலக்கியத்திலே பாதி எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான். ஒவ்வொரு வாரமும், சிவ்வயும், வெள்ளியும், அவங்க பூஜை பண்ணிட்டு, எனக்கும் என் தங்கைக்கும், எங்க சித்தப்பா பசங்களுக்கும் இதெல்லாம் அழகாச் சொல்லிக் கொடுப்பாங்க. என்னோட தங்கை பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டின்னு எந்தப் போட்டியாயிருந்தாலும் கலந்துகிட்டு பரிசு வாங்கிட்டு வத்துடுவா. அவ்வளவு ஆர்வம். எங்கப்பா வியாபரத்திலே நல்லா சம்பாதிகிறார். ஆனா ஊதரித்தனமா செலவு செய்யறது பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், சம்பாதிக்கிறதுல ஒரு பங்கை தனம், தர்மத்துக்கும் செலவு பண்றதுக்குத் தயங்கவே மாட்டார்.”

“கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கபிலன். நானும் அடுத்த மாசம் சென்னக்கு வருவேன். வந்தால் உங்களைக் கண்டிப்பா வந்து சந்திப்பேன். வாழ்த்துக்கள்.”

காத்தே பசிபிக் விமானம் சென்னையத் தொட்டபோது அதிகாலை மணி 2. விமான நிலையத்திற்கு யாரையும் வரவேண்டாமென்று சொன்னத்தும் நல்லதாகப்பட்டது கபிலனுக்கு. கஸ்டம்ஸ் சோதனைகள் முடிந்து வீட்டிற்கும் நுழைய காலை மணி ஆறாகி விட்டது.

“என்ன அப்பா. ஒரே அமக்களமா இருக்கு. அமெரிக்காவிலேர்ந்து வர்றது பெரிய விஷயமா?”

“கபிலா. இது உனக்காக மட்டுமில்லை. நம்ம ரித்திஷுக்குகாகவும் தான். அவனுக்கு இன்னிக்குப் பர்த்டே.”

“ஆஹா ரித்திஷ். வா...வா... பிறந்தநாள வாழ்த்திக்கள். எப்படிடா படிக்கிறே?”

“மாமா. அசையாதே. சுட்டுறுவேன்.”

“டேய் . என்னடா இது நிஜத் துப்பாக்கி மாதிரியே இருக்கு?”

“மாமா. இது தாத்தா எனக்கு நேத்திக்கு வாங்கிக் கொடுத்தாங்க.ஐநூறு ரூபாய். எனக்கு இன்னிக்கி பர்த்டே. என்னோட ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் சாயங்காலம் பார்ட்டி. அவங்களுக்க்கெல்லாம் ரிடர்ன் கிஃப்ட் கொடுக்கணும். எதுனாச்சும் வாங்கிட்டு வந்திருக்கியா?”

“கொஞ்ச நேரம் பொறு. குளிச்சிட்டு வந்து கிஃப்டெல்லாம் எடுத்துத் தர்ரேன்.”

“கபிலா வாடா. எப்டிடா கண்ணு இருக்கே. பாத்து எத்தினி நாளாச்சு. குளிச்சிட்டு வந்து சாப்பிடு. குட்டித் தூக்கப் போடு. அப்புறமா கடைக்குப் போய், மெழுகுவர்த்தி. கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா, எல்லாம் வாங்கிட்டு வந்திடு”

“யாருக்கும்மா”

“எல்லாம் ரித்தீஷோட ஃப்ரண்ட்ஸுக்குத்தான். இன்னிக்கி சாயந்தரம் பர்த்டே பார்ட்டி இல்லியா?”
“கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா இதெல்லாம் ஒரே நேரதிலே பசங்க சாப்பிட்டா என்னவாகும்”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும்”

“சரி. சரி. கோயிலுக்குப் போயிட்டு வந்தாச்சா?”

“இல்லைப்பா. இன்னம் இல்லை; இன்னிக்கி டீ.வியிலே நடிகை தயனநாரா பேசுனாங்க. அவங்களோட யார் வேணும்னாலும் பேசலாம். தாத்தா போன் போட்டுப் பேசிச்சு. கொஞ்ச நேரத்திலே ஒளிபரப்பாகப் போவுது.”

“அப்படியா! தாத்தா என்னம்மா பேசினார்?”

““என்ன பேசறது. அவருக்குக் கையே ஓடலை. லைன் கெடச்சதே பெரிய விஷயம். ஒங்களோட பேசணுன்னு ரொம்ப நாளா நெனைச்சேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” அப்படீன்னு சொல்லிட்டுப் போனை டொக்குன்னு வெச்சிட்டார்.”

“அப்படீன்னா சாயந்திரம் கோயிலுக்குப் போறோமா?”

“சாமி எங்கப்பா போகப் போகுது? அடுத்த வருஷம் பாத்துக்கலாம். பர்த்டே பார்ட்டிக்கு எற்பாடு பண்ணனும்லே.”

“அண்ணா, எப்படிண்ணா இருக்கே. நல்ல வேளை நீ இன்னிக்கி வந்தே. நாளைக்கு என்னை கார்லே எக்மோர் கொண்டு போய் விடறியா? அழகி போட்டி, செமி ஃபைனல்லே ஜெயிச்சுட்டேன். அடுத்தது ஃபைனல்ஸ்தான்.”

“என்னப்பா இது? என்னமோ அழகிப் போட்டி அது இதுங்றா”

“ஆமாம்ப்பா. இப்பவே மிஸ்.அண்ணாநகர் ஆகிட்டா. அடுத்து ஜெயிச்சா, மிஸ்.சென்னைதான். அப்புறம் நமக்கு எல்லாம் பெருமைதானே.”

“சரி.சரி. பாட்டி எங்கே? பாட்டியைப் பாக்கவேயில்லையே.”

“பாட்டி பாரு டீ.வி. ரூமுக்குள்ளே இருக்கு”

என்னது டீ.வி ரூமா? என்ன பாட்டி, ரொம்ப வேலையோ?

“ஆமாண்டா. நேத்திகே, “மொட்டுக்கள்” பாக்கலை. கரெக்டா எழு மணிக்கு உங்க சித்தப்பா வந்து கழுத்தறுத்துட்டான். நல்ல வேளை. மறுநாள் காலைலே மறு ஒளிபரப்புறான். “மொட்டுக்கள்” ரொம்ப சூப்பராப் போவுது. ஒரே சஸ்பென்ஸ். ராஜாவைக் கொலை பண்ணினது யாருன்னே தெரியலை. அவன் பொண்டாட்டி சந்தியா? இல்லை. அவளோட கள்ளக் காதலன் சாரதியா. இல்லை ராஜாவோட அண்ணன் மூர்த்தியா? யாருன்னே கண்டு பிடிக்க முடியலை.”

“அது சரி, எப்படி உங்க ராமாயணம். மகாபாரதம் எல்லம் போகுது. பெரியபுராணம் மனப்பாடம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டே இருப்பீகளே. முடிச்சிட்டீங்களா?”

“இல்லைடா. ரெண்டு சீரியல் பாக்கறதுக்குள்ளேயே களைப்பா ஆயிடுது. அதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது”

“கபிலா போன அடிக்குது பாரு. அமெரிக்காலேர்ந்துன்னு நெனைக்கிறேன்”

“கபிலா. நாந்தான் வீழி பேசறேன். சென்னை போய்ச் சேர்ந்தாச்சா? முக்கியமான விஷயம். கலிபோர்னியா யூனிவசிட்டிலே ஒரு இடல் உனக்காகப் பிடிச்சிட்டேன். அடுத்த மாசம் சேரனும். ஆனா, இன்னிக்கே உன்னோட சம்மதம் வேனும். வெளீநாட்டு மக்களுக்கு நம்ம பண்பாடு, கலாசாரம்னு சொல்லிக் கொடுத்த உங்களை விட நாங்க தயாரா இல்லை. என்ன சொல்லறே?””

“ஐயா. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, என்னை மன்னிக்கணும். நான் இப்ப உள் நாட்டிலே பண்ண வேண்டிய வேலையே நெறைய இருக்கு.”

-----0-----
- சிமுலேஷன்

Saturday, July 05, 2008

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா - நூல் விமர்சனம்

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது.

மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த ஓல்ஸோல் மிளகாய் மற்றும் வெல்ல வியாபாரியான ஏகாம்பரத்தின் இதயம் ஒரு தடவை துடிக்கிறதை நிறுத்திட்டு நின்று போய் அப்புறம் படபடவென்று அடிச்சுகிச்சி.

ஆசிரியருக்குக் கடிதத்தில் “காமத்தீ என்ற கதைக்கு ஜெயராஜ் படம் ரொம்ப ஓவர் ஸார்! ச.ராஜரத்தினம்”, என்ற ஒரு கடிதமும், “பராசக்தியாரே! கருணை பெரியதா? காதல் பெரியதா?”ன்னு ஒரு கேள்வி-பதில் மட்டுமே எழுதி அனுபவம் பெற்றிருந்த “அரச மணி’ என்ற புனை பெயரும் கொண்ட ராஜரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம், “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற சூத்திரத்தை அழகாக விளக்குகின்றார் வாத்தியார் சுஜாதா. எண்பதுகளில் வத்திருந்த காரணத்தினால், “சுஜாதா சிறுகதைப் பட்டறை” என்ற ஒரு அமைப்பு இருந்தது கூடப் பலருக்கும் தெரிந்திருக்காது.

விசா பப்ள்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பின் விலை ரூபாய் 50 தான்.

- சிமுலேஷன்

Sunday, August 06, 2006

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதை போட்டி



பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதைப் போட்டி ---------------------------------------------------------------------------------------------
அப்பா மத்தியானம் சாப்பிட்ட பின், ஈஸிசேரில் சிறிது நேரம் தலையைச் சாய்ப்பது வழக்கம். கால் மீது கால் போட்டுக் கொண்டு தூங்கும் அப்பாவின் கால் கட்டைவிரல் நகத்தில் வந்து உடம்பை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பூனை. இது ஒரு நாள், இரண்டு நாளாக நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்தது கொண்டிருக்கிறது. அதனை பொதுவாகப் பூனை என்று சொல்லுவதைவிட, புஸ்ஸி என்று சொல்லுவதையே எல்லோரும் விரும்பினர். அனுதினமும் வந்து போகும் புஸ்ஸியின் போக்கில், சிறிது மாற்றங்கள் தென்படலாயின. அது 'மாதமா'யிருக்கிறதோ என்னமோ என்று அம்மா சொன்னாள்.

அம்மா சொன்னது சரியாய்த்தான் போயிற்று. அன்று அதிகாலை வாசலிலுள்ள நெல் ரூமிலிருந்து, புஸ்ஸியிடமிருந்து பலமான சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில், 'ம்மியாவ், ம்மியாவ்', என்று காதைக் கிழிக்கும் ஒரே சப்தம். புஸ்ஸி குட்டி போட்டு விட்டாள் போல உள்ளது என்று அம்மா போய்ப் பார்த்தாள். ஜாக்கிரதை என்று எச்சரித்து விட்டு, அப்பா நெல் மூட்டைகளுக்கிடையே எட்டிப் பார்த்து, புஸ்ஸி குட்டி போட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தார். அம்மா ஒரு கொட்டங்கச்சியில் பால் எடுத்து வந்து நெல் ரூமில் வைத்தாள். நாங்கள் அத்தனை பேரும் ஒடி வந்து, குட்டிகளைப் பார்க்க வந்தோம். மூட்டைகளின் பின்னால், எதோ கொசகொசவென்று தெரிந்தது. மொத்தம் ஆறு குட்டிகள், இல்லை, இல்லை ஏழு என்றான் அண்ணா. இத்தனை நாட்கள் சாதுவாக இருந்த புஸ்ஸி, ஆக்ரோஷமாக, பல்லைக் காட்டியபடி "பர்ர். பர்ர்ர்" என்று சப்தம் இட்டபோது, ஏதோ புலியைப் பார்ப்பது போல, நாங்களெல்லோரும் பயந்தே போய்விட்டோம். அப்பா எல்லோரையும் கவனமாக இருக்கும்படி மீண்டும் எச்சரித்தார். பூனைக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காலை டிபன் சாப்பிடாமலேயே, எல்லோரும் பள்ளிக்கு ஓடினோம்.

மாலை வேகவேகமாக வந்து, டிபன் முடித்து, பூனைக்குட்டிகளைப் பார்க்க ஓடினோம். இப்போது புஸ்ஸி அங்கு இல்லை. குட்டிகளைச் சற்றுக் கூர்மையாகப் பார்க்க முடிந்தது. இப்போது ஏண்ணிப் பார்த்தால், மொத்தம் ஐந்து தான்.

"அம்மா, அம்மா, இங்கே வாங்கோளேன், பூனைக்குட்டி ரெண்டைக் காணோம்".

"அம்மாப்பூனைதான் சாப்பிட்டிட்டுருக்கும்", என்றாள் கீரைக்காரப் பட்டம்மா.

"என்னது அம்மாப்பூனை சாப்பிட்டுருக்குமா? என்று ஒரே நேரத்தில் கேட்டொம்.

"ஆமாங்கண்ணு. குட்டி போட்ட பூனைக்கு சத்தி வேணுமில்லே. அதனாலே ஒண்ணு, ரெண்டு குட்டிகளை சாப்பிட்ரும்"

எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது. புஸ்ஸி வந்தாலே அதனைத் துரத்தி அடிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.

இப்போது குட்டிகள், மூட்டையின் மேல் தமது கூரான நகங்களைக்கொண்டு ஏற முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தன. ஏற முயற்சி செய்வதும், சறுக்கி விழுவதும் பார்க்க முகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த விளையாட்டில், ஐந்தில், இரண்டு மட்டும் கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தன.

"பங்கஜம் சித்தி மாதிரியே தூங்கிண்டுருக்கு பாரு" என்றான் அண்ணா.

"நீ மொதல்ல பங்கஜம் சித்தியப் பாத்திருக்கியாடா?" என்றாள் பத்மினி.

"தெரியாது. அம்மாதான் சொல்லுவா; பங்கஜம் சித்தி மாதிரி தூங்காதேன்னு."

கரெக்ட். அம்மா அடிக்கடி சொல்லுவதுண்டு. மைசூரிலுள்ள பங்கஜம் சித்தி, ஒரு தூங்குமூஞ்சியென்று. எப்போது பார்த்தாலும் தூங்கிண்டே இருப்பாளாம்.

இந்த இரண்டு தூங்குமூஞ்சிப் பூனைகளுக்கும், பங்கஜம் சித்தி போலெவே மூஞ்சியும் இருந்தன. என்ன, ஒண்ணு சின்னது; இண்ணோண்ணு கொஞ்சம் பெரிசு. எனவே, சின்னதுக்கு, 'சின்னப் பங்கஜம்' என்றும், பெரியதுக்குப் 'பெரிய பங்கஜம்' என்றும் பெயர் வைத்தோம்.

ஒரு பூனைக்குட்டி மட்டும், மூட்டை மீது பாதிவரை ஏறிவிட்டான். அங்கிருந்து மற்ற குட்டிகள் மீது ஒரே பாய்ச்சல். அப்பப்ப, நகங்களை வேறூ விரித்துக் காட்டுதல், பற்களை வைத்துக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்துதல் என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தான். வீரதீர பராக்கிரமசாலியானஇந்தப் பூனைக்குட்டிக்கு, 'சூரப்புலி' என்று பேர் வைத்தோம்.

அடுத்தவனும் கிட்டத்தட்ட சூரப்புலியாவே இருந்தான். ஆனால், உருவம் மட்டும் சற்றே வித்தியாசம். கொஞ்சம் கட்டி முட்டியாக இருந்தான். மிருதுவான உடம்பில், வயிற்றுப் பாகத்தில் எலும்புகள் கட்டியாகத் தெரியும். அதற்கு என்னமோ, அண்ணா 'ஆழ்வார்ப் பேட்டை' என்று பெயர் வைத்தான், அவனுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் தமிழ்ப் பாடத்தில் வந்த, "குடை" என்று வந்த பாடலில், வந்த ஆழ்வார்ப் பேட்டை என்ற வந்த பெயர் பிடித்திருந்தது. அதனையே இரண்டு நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பூனைக்குட்டிக்குப் பேராக வத்து விட்டான். அவன் எப்போது அப்படித்தான். பாடத்தில் ஏதேனும், புதுமையாகப் பேர் ஒன்று கிடைத்து விட்டால் போதும், அதனையே அலப்பிக்கொண்டிருப்பான். 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', என்று அக்காவின் நண்பர் வீட்டுக்குச் சென்று உளறிக் கொண்டிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது ஒரு தனிக் கதை.

நாங்கள் எல்லோருமே கடைசியாகப் பார்த்தது ஒரு கலக்கலான கரும்பூனைக்குட்டி. இந்தக் கரும்பூனக்குட்டி ரொம்ப ரொம்பவே அழகாக இருந்தது. ஸாஃப்டாக, அப்போதுதான் குளித்துவிட்டு வத்த கைக்குழந்தையைப் போல இருந்தது. அதனைத் தொட்டுப் பார்க்க எல்லொருக்கும் ஆசை. அண்ணா, தான் ஒரு தைரியசாலி என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று, அந்தக் கரும்பூனைக்குட்டியைக் கையால் தூக்கினான், "ம்மியாவ். மீயாவ்" எண்று கத்தத் தொடங்கின அடுத்த நிமிடம், எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் வந்தது புஸ்ஸி. அண்ணா கையில் இருந்த குட்டியைப் பாய்த்து வந்து தனது வாயால் கவ்வி எடுத்து சென்றது.

"போதும் பூனையோட விளையாடினது. போய்த் தூங்குங்கோ" என்று அப்பா சப்தம் போட்டார்.

மறுநாள் நெல் ரூமில் போய்ப் பார்த்தால், புஸ்ஸியையும் காணவில்லை. குட்டிகளையும் காணவில்லை. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறும்தான் ஆஃபீஸ் ரூமுலிருந்து, குட்டிகளின் சப்தம் வருவதைப் பார்த்தோம். 'தாய்ப் பூனை, குட்டிகளை, இப்படி அடிக்கடி இடம் மாற்றி கொண்டேயிருக்கும்', என்று பட்டம்மாவிடம் சொல்லத் தெரிந்து கொண்டோம். புஸ்ஸி வந்து அந்தக் கரும்பூனைக்குட்டியை நாக்கால் நக்கிக் கொண்டேயிருந்தது. இந்தப் பூனைக் குட்டியிடம், ஒரு வெள்ளை முடி கூடக் கிடையாது. அத்தனையும் கருப்பு முடி. புஸு, புஸுவெனெ பார்க்கவே ரொம்ப அழகாக இருந்த, இந்தக் குட்டியை மட்டும் புஸ்ஸி, தனியாகக் கவனிப்பது போலத் தோன்றியது. 'அழகான குட்டி என்று அதிகப் பெருமையா? இல்லை, கறுப்பாக இருக்கும் குட்டிக்கு தனிக் கவனிப்பா', என்று புரியவில்லை. ஆனால், புஸ்ஸிக்கு, இந்தக் கறுப்பன் மட்டும் செல்லம் என்று புரிந்தது. எங்களுக்கும் செல்லமாகி விட்ட, இந்த கரும்பூனக்குட்டிக்கு 'செல்லம்' என்றே பெயர் வைத்தோம். எப்படியோ, ஐந்து குட்டிகளுக்கும் பெயர் வைக்கும் படலம் அன்று முடிந்தது.

வீட்டுப் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிட்டு, ஓடோடி வருவோம். அம்மாவிடம் கேட்டு, கொட்டாங்கச்சியில் பால் வைப்போம். சின்னப் பங்கஜமும், பெரிய பங்கஜமும் பல நாட்கள் பால் குடிக்கக்கூட எழுந்து வராமல், தூங்கிக் கொண்டேயிருக்கும். சூரப்புலிக்கும், ஆழ்வார்ப் பேட்டைக்கும் பால் குடிப்பதிலே, பலத்த சண்டை நடக்கும். செல்லம் மட்டும் தனியாக ஒய்யாரமாக வந்து பால் குடிக்கும் அழகே தனிதான். குட்டிகள் பெரிதாகப் பெரிதாகப் புஸ்ஸியின் வருகை குறைந்து கொண்டே வரத் தொடங்கியது.

ஐந்து பூனைக்குட்டிகளுக்கும் விளையாட்டுகள் பல காண்பிப்போம். சோடா மூடிகளை, ஹாலின் இந்தப் பக்கதிலிருந்து அந்தப் பக்கத்திற்கு, முன்னங்கால்களால், ட்ரிபிள் பண்ணிக் கொண்டு செல்வது பார்க்க, மிகவும் நன்றாக இருக்கும்.அப்புறம் சணல் உருண்டைகளைப் போட்டு அவற்றைக் குதறிக், குதறி விளயாடும் அழகு இருக்கிறதே. அதனைப் பார்த்தால்தான் புரியும். சொன்னால் புரியாது. உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும் செல்லத்தைக் காட்டி, அதன் புகழ் பாடாமல் இருக்கவே மாட்டோம்.

அன்றைக்குச் சாப்பிடும்போது, சித்தப்பா கல்யாணம் குறித்து அப்பா சொன்னார், மெட்ராஸில் நடக்கவிருக்கும் வேணுச் சித்தப்பா கல்யாணம் என்றதுமே எல்லோரும் துள்ளிக் குதித்தோம். வெள்ளியன்று மாலை கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று, அக்கா பூனைக்குட்டிகளை என்ன செய்வது என்று கேட்டாள். அவள் எங்களுடைய எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளமாட்டாள். ஆனால், இன்று அவள் எங்கள் பூனைக்குட்டிகளைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி, ஒரு முக்கியமான சமயத்தில் விவாதப் பொருளாக எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

"அப்பா, அப்பா, பூனையெல்லாம் ஒரு கூடையில் போட்டு, மெட்ராஸுக்கு எடுத்துக் கொண்டு போலாம் அப்பா" என்றான் அண்ணா.

"பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போலாமே", என்றாள் அக்கா.

"ஆமா, அவாதான் ரொம்பப் பாத்துக் கிழிச்சுடப் போறா. பால்காரியிடம் கொடுத்துட்டுப் போலாம்", என்றாள் அம்மா.

"கோவாப்ரேடிவ் சூப்பர் மார்க்கெட்டில் விட்டாலென்ன? ராஜேந்திரன் அன்னிக்கே கேட்டார். கடையில் எலித் தொந்தரவு ரொம்ப இருக்குன்னு" என்றார் அப்பா.

"அது கூட நல்ல ஐடியாதான்; நாமளும் நாலு நாள் கழிச்சி வந்து அவன்கிட்டேயிருந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று அம்மா, முடிவாகச் சொன்னாள்.

சாயந்தரம் சூப்பர் மார்க்கெட் போய் அப்பா ராஜேந்திரனிடம் பேசிவிட்டு வந்த்தார். அவர் இரண்டு பூனைகளை மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னாராம். பியூன் பழனியப்பன் துணை கொண்டு, சின்னப் பங்கஜத்தையும், பெரிய பங்கஜத்தையும் கொண்டு போய் சூப்பர் மார்க்கட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தோம். எங்களுக்கு என்னாவோ போல இருந்தது. ஆனாலும், செல்லம், ஆழ்வார்ப்பேட்டை, சூரப்புலி இன்னமும் எங்களிடமே இருந்ததால் ரொம்பப் பெரியதாக ஃபீல் செய்யவில்லை.

மறுநாள் காலை பூனைகளின் சப்தம் கேட்டு எழுந்தோம். கீரைக்காரப் பட்டம்மாவிடம் அம்மா பேசிக் கொண்டிருந்தாள்.

"பார்த்துப் பத்திரமா எடுத்துட்டுப் போ பட்டம்மா"

தனது காலிக் கூடையில், சும்மாட்டுத் துணியை வாகாக வைத்து, ஆழ்வார்ப்பேட்டையையும், சூரப் புலியையும் வைத்துத் தூக்கிச் சென்றாள். இப்போது செல்லம் மட்டும் தனியாக, மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுருந்தது. சுமார் எட்டு மணியிருக்கும். பால்காரி தனம் வந்து செல்லத்தையும் தூக்கிச் சென்றாள். எப்படித்தான் நாலு நாட்கள் இவர்களைப் பிரிந்து இருக்கப் போகிறோமோ என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதே, வெள்ளோட்டிலிருந்து, பாட்டியுடன் ராஜன் சித்தப்பாவின் பையன்கள் கண்ணனும் கோபியும் வந்தார்கள். மாலையில் நீலகிரி எக்ஸ்பிரசில், எல்லொரும் மெட்ராஸ் கிளம்பினோம். சித்தப்பா கல்யாணம் படு ஜோராக நடை பெற்றாலும் என்னவோ போல, சுரத்தில்லாமல் இருந்தோம்.

பாட்டி கூடக் கேட்டாள், ஏண்டி, ராஜம், கொழந்தைங்க ரொம்ப டல்லா இருக்காளே. உடம்புக்கு ஒண்ணுமில்லேயே"

"நேத்திக்குத்தான் சொன்னேனே அம்மா. பூனைக்குட்டிகளப்பத்தி. அதுகள விட்டுட்டு வந்தது, இதுகளுக்குத் தாங்கலே. வேற ஒண்ணுமில்லே"

"வேற வேலை இல்லாயாக்கும்? நாலுக்கும் பாட்டு படிப்புண்ணு ஒண்ணுமில்லாம, பூனையோடயே வெளயாடிண்டுருக்கணுமாமா?". கேட்ட பாட்டியை நாங்கள் முறைத்துப் பார்த்தோம்.

சித்தப்பா கல்யாணம் முடிந்து, திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ப்ளூவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம். காலையில் கோயமுத்தூரிலேயே டிபன் சாப்பிட்டுவிட்டதால், வந்தவுடன் குளித்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பினோம். மாலை ஸ்கூலிலிருந்து வந்தவுடன், சூப்பர் மார்க்கெட்டுக்குப் படையெடுத்தோம். ராஜேந்திரன் இல்லை அங்கே. சூபர்வைசர்தான் இருந்தார். பூனை எங்கே என்றோம். 'அங்கேதான் எங்கியாவது இருக்கும்', என்றும் 'எனக்கு தெரியாது' என்றும் மாற்றி மாற்றிக் குழப்பிச் சொன்னார். அந்த மார்க்கெட்டுக்குள் எங்களால் ஒன்றும் தேட முடியவில்ல்லை. காய்கறி மார்க்கெட்டுக்குப் போய், பட்டம்மா இருக்கிறாளா என்று பார்த்தால், அவளும் ஊருக்குப் போய் விட்டாளாம்.

பால் கொடுக்க, தனம் ராத்திரி எட்டு மணி சுமாருக்கு வந்தாள். செல்லத்தைத்தான் கொடுக்க வந்திருக்கிறாளோ என்று ஆவலாக ஓடினோம். அவள்பாட்டுக்கு பழைய பாக்கி பால் ஊத்திவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தாள். "பூனை எங்கே" பூனை எங்கே", என்று மூணு பேரும் கத்தினோம். அதுவா, முந்தா நேத்திக்கு செட்டியாரோட லாரிக்கு அடிலே மாட்டிகிச்சி. அங்கேயே ஒடனே செத்து போச்சு" என்றபடி நடையைக் கட்டினாள்.

"என்னது அம்மா; இப்படி சொல்றா. எல்லோரும் பாத்துண்டேயிருக்கோம்"

"சரிடா; நம்ம கையிலே என்ன இருக்கு? நாம இப்ப என்ன பண்ண முடியும்? எல்லாரும் சாப்பிட வாங்கோ"

தனக்கு சாப்பாடு வேண்டாமென்று கூறி அண்ணா போய்ப் படுத்துக் கொண்டான். பத்மினியோ, தனக்கு வயித்தை வலிக்கிறது; மோர் மட்டும் போதுமென்று கூறிவிட்டாள் எனக்கும்கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால், சாப்பிட மாட்டேனென்றால் அம்மா அடிப்பாள். அடியைவிட திட்டுதான் பயங்கரமாக இருக்கும்.

ராத்திரி இரண்டு மணியிருக்கும் அண்ணா என்னவோ அனத்திக் கொண்டேயிருந்தான். "செல்லம்,...செல்லம்" அப்டீன்னு சொன்னது போலத் தோன்றியது. அம்மா தொட்டுப் பார்த்தாள்.

"நரேஷுக்கு ஜொரம் அடிக்கறது பாருங்கோ. அந்தக் குரோசின் பாட்டில எடுத்துக் கொடுக்கிறேளா?", என்று அம்மா,அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது சன்னமாகக் காதில் விழுந்தது.

-------0-------

Saturday, March 11, 2006

நிஜமல்ல... கதை



"வாங்க செல்வி. வாங்க. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கம்மா"

"மேடம், எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. ஆனா, நான் போன ஆறு மாசமாப் படற அவஸ்தை சொன்னாப் புரியாது".

"சொன்னாப் புரியாதுன்னு நீயா எப்படிம்மா சொல்ல முடியும்? என்ன கஷ்டப் படறீங்கன்னு, நீங்க வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியும். தயவு செய்து உங்க மனக்கஷ்டத்தை எல்லார் முன்னாடியும் கொட்டிருங்க. அப்பத்தான் உங்க மனச்சுமை குறையும்."

"மேடம், என்னோட கணவர், தினமும் என்னை சிகரெட்டால சுட்டு, இம்சை பண்ணறார்!."

"என்னது!. தினமும் சிகரெட்டால சுடுவாரா? என்னமோ டெய்லி காபி குடிக்கிற மாதிரி சொல்றீங்க!."

"ஆமாம். மேடம். ஒரு நாள் விடாம, தினமும் இந்தக் கொடுமை நடக்கும்"

"நேயர்களே. செல்விக்கு நடக்கிற இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா. இந்த மாதிரி கொடுமை செல்விக்கு மாத்திரமல்ல. இந்த நாட்டிலே பல பெண்களுக்கு ஏற்பட்டுகிட்டிருக்கு. ஆனா, இந்த மாதிரி கொடுமை ஏன் நடக்கிறது? அவர்கள் கணவர்கள் ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? சரி, செல்வியின் கணவர் கிருஷ்ணனும் இங்க வந்திருக்கிறார். அவரையே கேப்போம்."

"வாங்க, கிருஷ்ணன், செல்வி சொல்றது உண்மையா? நீங்க அவங்களை சிகரெட்டால
சூடு வப்பிங்களாமே."

"ஆமாம்." கிருஷ்ணன் தலையக் கவிழ்ந்து கொள்கிறார்.

"என்ன கிருஷ்ணன். இப்படி செய்யிறதுக்கு ஒங்களுக்கு வெக்கமாயில்லையா? ஏன் இப்படிப் பண்ணறீங்க?"

"மேடம். எனக்கும் அதுதான் தெரியலை. என்னயும் அறியாமப் பண்ணிடறேன்."

"கிருஷ்ணன். நீங்க பேசுறது எனக்குப் புரியவேயில்லை. அறியாம எப்படி இந்த மாதிரிப் பண்ண முடியும்?... ஒரு நிமிஷம் இருங்க. கிருஷ்ணன் ஒரு போன் கால் வருது."

"ஹலோ"

"ஹலோ!. மேடம் நான் தாம்பரத்திலேர்ந்து ராஜகோபால் பேசறேன்."

"சொல்லுங்க ராஜகோபால்"

"மேடம், இந்தப் ப்ரொக்ராமை டி.வியிலே பார்த்துகிட்டு இருக்கேன். நான் செல்வி, கிருஷ்ணன் இவங்க பக்கத்து வீட்லதான் குடியிருக்கேன்."

"அப்படியா ராஜகோபால். இவங்களை உங்களுக்குத் தெரியுமா? இந்த விஷயமும் தெரியுமா?"

"நெறையவே தெரியும் மேடம். இவங்க இரண்டு பேரும் நல்லாவே பொய் சொல்லறாங்க. இவங்க சொல்றது போல எதுவுமே நடப்பதில்லை. இவங்க இரண்டு பேரும் அவங்க மூஞ்சி டிவியிலே தெரியுணும்னு இப்படி நாடகம் ஆடறாங்க. ஆமாம் நான் சொல்றது உண்மைதான் மேடம். எப்படி நடிக்கணும்னு இவங்க போனவாரம் வீட்ல பேசிக்கிட்டிருந்ததை நானும் கேட்டிக்கிட்டுதான் இருந்தேன். ஆனா அவங்க, தாங்க இந்த மாதிரி திட்டம் போட்டது யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க."

செல்வி விக்கி விக்கி அழுகின்றார்.

"ஓகே. ராஜகோபால். எங்களுக்குப் போன் பண்ணி உண்மையைச் சொன்னதுக்கு ரொம்பத் தாங்ஸ். நிகழ்ச்சியத் தொடர்ந்து கவனியுங்க"

"செல்வி எதுக்கு இப்படி அழறீங்க. ராஜகோபால் சொன்னது உண்மதானா?"

"ஆமாம் மேடம். உண்மைதான்"

"எதுக்காக இப்படிப் பண்ணிட்டீங்க"

"இல்லை மேடம். என்னோட வொய்புக்கு டி.வியிலே வரணும்னு, குறிப்பா சீரியல்லே வரணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக நாங்க என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துட்டோம். ஒரு சான்ஸ் கூட கெடைக்கல. ஏதாவது பிரச்னை அப்படீன்னு சொல்லிகிட்டு இங்க வந்தா. அட்லீஸ்ட் ஒரு இருபது நினிஷம் டி.வியிலே வரலாமேன்னுதான் இப்படித் திட்டம் போட்டோம்."

"மேடம், எங்களை மன்னிச்சிடுங்க. எங்க மூஞ்சியும் டி.வியிலே வரணும்னு ஒரு வெறியிலே இப்படிப் பண்ணிடோம்."

"ஹலோ"

"ஹலோ"

"மேடம் நான் பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஸ்டூடன்ட் கார்த்தி பேசறேன்"

"சொல்லுங்க கார்த்தி"

"மேடம். இப்ப டி.வியிலே வந்தாங்களே செல்வி. அவங்க அட்ரஸ் வேணும் மேடம்."

"எதுக்கு"

"அவங்க நடிப்பு நல்லா இருந்தது. இந்த மாதிரி இயல்பா நடிக்கிறவங்களைத்தான் நானும் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டுருந்தேன். அவங்க ஹஸ்பெண்டுக்கு ஆட்சேபணை இல்¨லன்னா, அவங்களை எங்கள் முதல் சினிமாவுக்கு ஹீரோயினா புக் பண்ண விரும்பறோம்."

செல்வியும், கிருஷ்னனும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகின்றனர்.

"கார்த்தி சார், ரொம்ப தாங்ஸ். உங்களுக்கு எங்க ப்ரொக்ரோம் மூலமா ஒரு ஹீரோயின் கிடைச்சது எங்களுக்கு ஒரு பெருமை."

"நேயர்களே, செல்வி பாருங்க. என்ன ஒரு தன்னம்பிக்கை! தன்னுடைய முகம் டி.வியி§லா, சினிமாவிலோ தெரியணும்கிறதுக்காக எப்படி கஷ்டப்பட்டு ஐடியா போட்டுகிட்டு வந்திருக்காங்க! அதுக்கு அவங்க கணவர் கிருஷ்ணனும் முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கார். புது டைரக்டர் கார்த்தியோட அறிமுகமாகப் போகிற செல்விக்கு நம்ம சமூகம் வாழ்த்துகளைத் தெரிவிச்சே ஆகணும். சமூகம்னா யாருங்க? நீங்களும், நானும்தான். நாளைக்கு இன்னொரு நிஜத்துடன் சந்திப்போம்."

----0-----

Sunday, February 26, 2006

பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு



"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|"

பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசாரதியிடமிருந்து. அதே நேரம் , "அம்மா போன்; உங்களுக்குத்தான்" என்று மாலினியிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள், சாந்தி.

"போன் அடிச்சது கூடக் காதிலே விழல. உங்க அப்பா வழக்கம் போல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரா".

இது வழக்கமான பல்லவி. தினமும் நடக்கும் கூத்துதான். பார்த்தா தினமும் சத்தமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவார். மாலினியும் உடனே கத்த ஆரம்பித்து விடுவாள். அது என்னவோ, சத்தமாக சொல்வதே அவருக்குத் திருப்தி அளிக்கும் விஷயம். மாலினிக்கோ, "பிரார்த்தனை என்பது மனதுக்குள்ளே சொல்ல வேண்டிய விஷயம்; அதனை எதற்காக இப்படி உரக்கச் சொல்ல வேண்டும்" என்பது அவள் வாதம்.

"இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம புக்கை யார் எடுத்தது? எதெதுதான் காணமப் போறதுங்குற வெவஸ்தையே இல்லாமப் போச்சு" என்று அலுத்துக் கொண்டார் பார்த்தா.

"கிட்டத்தட்ட இரண்டு வருஷமா, இந்தச் ஸ்லோகத்தை சொல்றேள்; இன்னிக்கி ஒரு நாள்
புக் இல்லாம சொல்ல முடியாதா?"

"ஒன்னால முடிஞ்சா எடுத்துக் கொடு; ப்ரீ அட்வைஸை யாரும் கேட்கலை"

சரி. வேற வழியில்லை. புக் இல்லாமலேயே சொல்லுவோம் என்று ஆரம்பித்தார், பார்த்தா. சரளமாக வாயிலிருந்து தட தடவென்று வந்து விழுந்தது. பரவயில்லையே, கலக்குகிறோமே என்று எண்ணிய அடுத்த வினாடியே, சறுக்கல்.

"பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத...பகவான் பகஜ்ஹாநந்தீ... பகவான்..."

"என்ன ஆச்சு? அடுத்த வரி மனதிற்குள் வர மேட்டேங்கிறதே. என்ன செய்ய? நா¨ளைக்குப் புக் கெடச்ச உடனே இரண்டு தரம் சொல்லிவிட வேண்டியதுதான்" என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே,

"ஆதித்யோ ஜ்யோத்ரதிய..." என்ற அடுத்த அடி உரக்கக் கேட்டது.

தனது பக்தியை மெச்சி, ஸாட்சாத் பகவானே அசரீரியாய் அடுத்த வரி எடுத்துக் கொடுத்து விட்டாரோ என்று ஆடிப் போய்விட்டார், பார்த்தா.

ஆனால், குரல் எதுவோ பரிச்சயமான குரலாக இருக்கின்றதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாலினி,

"என்னது, பட்டம்மா; நீயா விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொன்னது" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ஆமாம்மா. ஐயா தெனைக்கும் பூஜை செய்யும் போது, ஒரக்க இது சொல்றாரில்லையாம்மா. நானும் பாத்திரம் தேய்க்கும்பாது, இத்தெ கேட்டுக்கிகினே இருப்பேன். அப்படியே மனசிலே பதிஞ்சி போயிருச்சு. அம்மா தப்பா எடுத்துக்காதீங்க"

----------0----------

Tuesday, February 21, 2006

தூண்டுதல்

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திறம்பட நிர்வகித்தவர் திரு.வி.ஆர்.தீனதயாளு. அவர் ஒருமுறை அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களுடன் உரையாடும் போது, தனது ஆலையிலுள்ள எழுத்துச் சிற்பிகளின் எழுத்தோவியங்கள் கொண்ட ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவ்வாறே ஒரு சிறப்பிதழ் எங்களுக்கென ஒதுக்கப்பட்டது. எனது கதை ஒன்றும் அதில் பிரசுரமானது. வெளிவந்த காலம் - ஆகஸ்ட் 1990.








Saturday, January 28, 2006

சுட்ட அப்பளம்

A47ல் வந்து அடையாறு ஸிக்னலில் இறங்கி பத்து நிமிடமாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இன்னமும் வீடு வந்து சேரவில்லை. மற்ற பஸ்களில் ஏறினால் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள நிறுத்தத்தில் இறங்கலாம். இருந்தாலும், குறைந்த இடங்களிலேயே இந்தப் பஸ் நிற்பதனால் அண்ணாநகரிலில் நான் வேலை செய்யும் வங்கியிலிருந்து வீட்டிற்கு அரை மணியில் வந்து சேர முடிகின்றது.

நான் குடியிருக்கும் நேருநகர் 3ஆம் தெரு முனையில் இருக்கும் காலி மனையினைத் தாண்டி வரும் போது இன்றும் அந்த வாசனை அடித்தது. வாசனை என்று சொல்லலாமா? இல்லை. நாற்றம் என்றே சொல்லலாமா? எதோ ஒன்று. அப்பளம் சுடும் போது வருமே, அதே வாசனைதான். இப்போதெல்லாம் வீட்டில் அப்பளம், வடாம் செய்வதேயில்ல. அண்ணாவுக்கு கொலஸ்ட்ரால் என்று சொல்லி எண்ணெய்ச் செலவையும் கட்டுப்படுத்திவிட்டோம். சின்ன வயதில் அம்மா அடிக்கடி அப்பளம் பொரிப்பாள். சுடுவாள். அப்போது கூட எதுவும் தோன்றியதில்லை.

ஆனால், ஒரு வாரம் முன்பு, இதே வழியாக, சந்துருவுடன் நடந்து வரும் போது அவன் சொன்னது இந்த வழியில் வரும் ஒவ்வொரு முறையும் நினவுக்கு வருகின்றது.

"இந்த இடத்தில் பாம்புகள் நிறைய உள்ளன. அதனால்தான் இந்த வாசனை" என்றான் சந்துரு.

"அப்படியா! நான் கேள்விப்பட்டதே இல்லை. அப்கோர்ஸ் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் குவார்ட்டர்ஸ் பக்கம். அங்கேயெல்லாம் நாங்கள் பாம்பே பார்த்ததில்லை."

"நம்ம ஏரியாவிலே கூட இத்தனை நாளே இல்லை. இப்பத்தான் கொஞ்ச நாளா."

"சந்துரு, நாம யாராவது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து இந்தப் புதரையெல்லாம் வெட்டிப் பாம்பை அடிச்சா என்ன?"

"நமக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். வேகன்ட் லான்ட் ஓனர், ட்ரெஸ் பாஸிங்னு சொல்லிக் கேஸ் போட்டுட்டான்னா; இரண்டாவது நாம வம்புக்குப் போகாத வரைக்கும் பாம்பு நம்மை ஒண்ணும் பண்ணாது. நாமளா வெணும்னே அதை அடிச்சா பாவம். அந்தப் பாவம் நம்மளோட போகாது. தலைமுறை, தலைமுறையா வருமாம்."

"இருந்தாலும் இந்தத் தெருவிலே எத்தனை குழந்தைங்க இங்கெல்லாம் வந்து விளையாடறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லையே!"

"கல்யாண். எனக்குத் தெரிஞ்சு ஆறு மாசமா இங்கே பாம்புகள் இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கி ஒண்ணும் ஆகாது. சும்மா கண்டதுக்கெல்லாம் பயப்படாதே."

சந்துருவின் வார்த்தைகளால் தற்காலிகமாக சமாதானம் ஏற்பட்டாலும், ஒவ்வொரு முறை இந்தத் தெருவைக் கடக்கும் போதும், ஒவ்வொரு முறை இந்த வாசனை வரும் போதும் எனக்கு மனக்கலக்கம் ஏற்படும்.

இன்று ஏதெனும் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். பொதுவாகவே, தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டது என்றாலோ, புகார் கொடுக்கக் கூடிய முதல் பொது சேவகனாக எங்கள் தெருவில் இருந்து வந்தேன். இந்தப் பாம்பு விவகாரத்தில், யாரிடம் போய், என்ன புகார் கொடுப்பது என்று தெரியவில்லை. பாம்பைக் கொல்வது வேறு தலைமுறை பாவம் என்று சந்துரு சொன்னதும் நினவுக்கு வந்தது.

என்னதான் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு யோசனை தோன்றியது. பாம்புப் பண்ணைக்குத் தொடர்பு கொண்டால் என்ன. அவர்கள் ஆட்களை அனுப்பி பிடித்துச் செல்வார்கள் அல்லவா என்று தோன்றியது. நாளை ஆபீஸிலிருந்து போன் செய்து விட வேண்டும். அப்படியே அவர்கள் ஒத்துக் கொண்டாலும், வந்து பிடித்துச் செல்லும் வரை பாதுகாப்பாக இருக்க என்ன செய்வது?

"நாய்கள் ஜாக்கிரதை" என்ற போர்டுகள் பார்த்திருப்பீர்கள். அதைப் போல "பாம்புகள் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்தால் என்ன? என்று தோன்றியது. சனிக்கிழமை காலை ஓய்வாக இருக்கும் போது "பாம்புகள் ஜாக்கிரதை" என்று ஒரு பெரிய அட்டையில் எழுதி, அந்த மனைக்கு அருகே உள்ள விளக்குக் கம்பத்தில் மாட்டி விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வெள்ளிக் கிழமை மாலையின் சந்தடிகளை மீறி, அடையாறுக்குள் நுழைய மணி ஆறாகி விட்டது.

தெருவில் நுழையும்போதே மௌனமான பரபரப்பு ஒன்று தென்பட்டது. எதிரில் கணேசன் ஸ்கூட்டரில் வந்த்தார். என்னைப் பார்த்தவுடனே வேகத்தைக் குறைத்தார்.

"என்ன சார் கூட்டம்? ஏதாவது விசேஷம்?"

"அந்தக் கோரத்தை ஏன் சார் கேக்கறீங்க. நம்ம ப்ளாட்டுக்கு எதிரிலே இருக்கும் ஒர் சின்ன வீடு.

அங்கே புதுசா குடி வந்தாரே எலெட்ரிசிடி போர்டு ஏ.இ. அவரோட பொண்ணு தவறிடுச்சு"

"யாரு ரம்யாவா?"

"இல்ல சார். லதான்னுட்டு ஒரு சின்னக் குழந்தை. நாலு வயசிருக்கும். லதாக்குட்டின்னு சொல்வாங்களே. பாவம். மூணு மணிக்கு சைக்கிள் விளையாடிக்கிட்டே வந்துருக்கு போல இருக்கு. திடீர்னு ரோட்ல மய்க்கமா கிடக்கான்னனு பசங்க வந்து சொன்னாங்க. நம்ம செக்ரட்டரி, வாட்ச்மேன் எல்லோரும் ஒடிப் போய்ப் பார்த்தாங்க. அதுக்குள்ளே உடம்பு நீலமா மாறி, வாயிலே நுரை தள்ளிருச்சு. கட்டு விரியனோ. நல்ல பாம்போ தீண்டியிருக்கு போல இருக்கு. வி.எச்.எஸ்ஸ¤க்குத் தூக்கிட்டுப் போனாங்க. ஒண்ணும் பிரயோசனம் இல்லை. அப்படியே கே.கே.நகருக்குப் பாடியை அவங்க தாத்தா வீட்டுக்கு எடுத்திட்டுப் போயிட்டாங்க. விதி பாருங்க. எப்படி வருது."

"சரி வர்றேன் சார். பையனை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வரணும்"

நான் எதனைத் தடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது.

அபார்ட்மென்டில் நுழைந்த்தவுடன் ஒவ்வொருவரும் சோகமாய் தங்கள் அனுதாபங்களையும், அனுபவங்களையும் பறிமாறிக் கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் ஒரே அமைதிதான். டி.வி கூட ய¡ரும் போடவில்லை. இதே எண்ணங்களே நினைவுக்கு வரும் என்பதால், ஒன்பது மணிக்கே சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையை விரித்தோம்.

அஞ்சு நிமிஷம் கூட ஆகியிருக்காது. காலிங் பெல் அடித்தது. வியூ பைண்டரில் எட்டிப் பார்த்தேன். விஜியும், அத்திம்பேரும் தெரிந்த்தனர்.

கதவைத் திறந்து, "வாங்கோ அத்திம்பேர்", என்றேன். களைப்பாய் நுழைந்தனர் இருவரும்.

"மாப்ளை வாங்கோ! என்னடி திடீர்னு" என்றாள் அம்மா.

"இல்லம்மா. மஹாபலிபுரம் போயிட்டு வர்றோம். நேரமாய்டுத்து. இங்கே தங்கிட்டு, கார்த்தால ஆத்துக்கு வர்றோம்னு போன் பண்ணிட்டோம்."

படுக்கைகள் மூலையில் ஒதுக்கப்ட்டன. அத்திம்பேருக்கு ஈஸிசேரைப் போட்டுவிட்டு, வேஷ்டி எடுத்துத் தர உள்ளே சென்றேன்.

"சாம்பார் கொஞ்சமா இருக்கு; நிமிஷத்லே அதைப் பெருக்கிடறேன். உருளக் கிழங்குக்கறியும் ஒடனே பண்ணிடறேன்."

"சாம்பார் இது போதும்மா. கறிகிறியெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒரு நாலு அப்பளத்தச் சுட்டுப் போடு. எங்களுக்கு ஒண்ணும் அவ்வளாப் பசியில்லே." என்றாள் விஜி.

எங்கள் ப்ளாட்டில் பால்கனி பின்புறம். பால்கனிக்குச் சென்றாள் அம்மா. பக்கத்து வீட்டு சாந்தா மாமியிடம், பால்கனி வழியாகவே கிசுகிசுத்தார். பின்னர் புடவைத் தலைப்பில் என்னவோ மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அத்திம்பேரிடம் வேஷ்டியை நீட்டினேன்.

சில நிடங்களில் சமையலறையிலிருந்து, அப்பளம் சுடும் வாசனை வரத் தொடங்கியது.

-------000-------

- (சிமுலேஷன்)

Tuesday, November 01, 2005

கிழவரும், சிறுவனும், கழுதையும்

'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு:

ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள்.

பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள்.

உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான்.

சிறிது நேரம் சென்றது.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார்.

உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.

சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த
அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார்.

கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்; புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.

இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

கதை இத்துடன் முடியவில்லை...

பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று.

சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.

கதை இன்னமும் முடியவில்லை...

உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?",

கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.

கதையை இன்னமும் முடிக்க மனமில்லை.

ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".

கதை போதிக்கும் நீதி யாது?

முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட, ஆற்றில் குதிப்பதே மேல்.