Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

Friday, February 24, 2006

அமெரிக்க அனுபவங்கள்-01



ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்கா
------------------------
அமெரிக்காவில் பொதுவாகப் போலீஸை, ஆபீசர்ஸ் என்று குறிக்கிறார்கள். இங்கு அவர்கள் அனவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்களும் அதற்குத் தக்கபடி, மக்களின் தோழனாகவும், குற்றம் செய்பவருக்குக் கிலியாகவும் இருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்காவுடன், எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சில அனுபவங்கள்.

நரேஷ், ராஜன், ராமன் மற்றும் நான் நால்வரும் அப்போது நியூஜெர்சியிலுள்ள, டிரைடென்டிற்கு ஒரு ப்ரோஜெக்டிற்காகச் சென்றிருந்தோம். மதிய உணவிற்காக, மான்மோத் மாலுக்குச் செல்வது
வழக்கம். போய் வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடும். அப்போது எங்களிடம் காரெல்லாம் கிடையாது. எனவே நாங்கள் ஒரு குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்து எளிதில் போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால், ஜார்ஜ் எங்களைக் கூப்பிட்டு எச்சரித்தார். " னீங்கள் போகும் வழியிலே garage campaus** (residetial vehicle?) உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்," என்றார் (**இதன் சரியான பெயர் ஞாபகம் வரவில்லை. பெரிய கன்டெயினர் போல போர்ட்டபிள் வீடுகள் முப்பது, நாப்பது இருக்கும் ஒர் இடம். இதில் குடியிருப்போர் பெரும்பாலானோர் வசதிக் குறைவானவர்கள். சண்டை மற்றும் அடி, தடிக்குப் போகத் தயங்காதோர்) நாங்கள் இரண்டு வாரமாக, அந்த வழியிலேயே போய் வருகிறோமே, ஒரு பிரச்னையும் வரவில்லையே1" என்று எண்ணி, ஜார்ஜ் கூறிய அறிவுரையை அலட்சியம் செய்து விட்டோம்.

ஒரு நாள் இந்த காரேஜ் குடியிருப்பின் வழியே வந்து கொண்டிருக்கும் போது, அங்குள்ள ஒரு குட்டிப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் எங்களைப் பார்த்து. " நீங்கள் எங்கிருந்து வருகிறிர்கள்?, என்றான். அவனுடன் பேசும் ஆவலில், நாங்கள்,"இந்தியா" என்று உடனே பதில் சொன்னோம். அவன் எங்களை செவ்விந்தியர்கள் என்றெண்ணி, "அப்படியானால் உங்கள் வில், அம்பு முதலானவை எங்கே?அவற்றைக் காட்ட முடியுமா?", என்றான். உடனே எங்களிலொருவர், "மான்மோத் மால் அருகே, ஸ்னீக்கர்ஸ் ஸ்டேடியம் உள்ளது. அங்கே அவை கிடைக்கும்." என்றார். அந்தப் பையன் அப்போது போய் விட்டான். நாங்களும் எங்கள் வேலையப் பார்க்கச் சென்று விட்டோம்.

மறுனாள் மதியம், மான்மோத் மாலிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி, எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். இது ஏதோ விபரீதம் என்றெண்ணி, எட்டி நடை போட்டோம். உடனே, அந்த்தப் பெண்மணியுடன், இரண்டு, மூன்று பேர் சேர்ந்து எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். "எங்கள் பையனுக்கு வில், அம்பு போன்ற ஆயுதங்கள் வாங்கித் தருவதாகச் சொன்னீர்களா?," என்று ஏதோதோ உளறிக் கொண்டே வந்தனர்கள் அவர்கள். என்ன சொன்னார்கள் என்று அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால், அந்த அமெரிக்கச் சிறுவன், எங்களைப் பற்றி அவன் குடும்பத்தாரிடம் ஏதோ நன்றாகப் போட்டுக் கொடுத்திருக்கிறான்
என்று மட்டும் புரிந்தது.

ஆனால் நாங்கள் எங்களைத் தொடர்ந்த நாலு பேரையும் பொருட்படுத்தாமல், பேசாமல் அலுவலகத்தை நோக்கி நடந்தோம். இன்னமும் நாலைந்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகம் வந்து விடும் என்ற தெம்பில். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டால் நிம்மதி என்றெண்ணியிருந்த்த எங்களுக்கு ஒர் அதிர்ச்சி. அலுவலக் வாசலில், பளீர் பளீர் என்று காரில், சிவப்பு மற்றும் நீல நிற எச்சரிக்கை விளக்குகள் எரிய அமெரிகாவின் ஆபீசர்கள். எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்மணிதான், அதற்குள் போன் செய்து போலீஸை வரவழைத்திருக்கிறாள். ஒரு சிறுவனைக் கடத்த முயன்றதாகப் புகார் வந்திருப்பதாக போலீஸ் ஆபீசர்கள், டிரைடன்ட் தலைவரிடம் சொன்னார்கள். பின்னர், தலை வந்து, "இவர்கள்
இந்தியாவிலிருந்து வந்துள்ள என்ஜினியர்கள். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். கடத்தல் போன்ற வேலைகளிலெல்லாம் ஈடுபட, இந்த தயிர்சாத கோஷ்டிகளுக்குத் தெரியாது", என்று சமாதானம் சொன்னார். சமாதானமடைந்த போலீசாரும், பயந்தாக்கொள்ளிக் குடும்பத்தினரும், இடத்தை விட்டு அகன்றனர்.

அன்றிலிருந்து, யாரிடமும் அனாவசியமாக வாயைக் கொடுத்து, மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முடிவு செய்தோம்.

...தொடரும்.

Thursday, February 23, 2006

ஜப்பான் அனுபவங்கள்



"இகேபுகரோ"விலுள்ள "விங்ஸ்" ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிடா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, ஷட்டில் பஸ் பிடித்து வந்து விடுங்கள்" என்ற செய்தியும், இகேபுகரோ வரை படமும் இமெயிலில் அனுப்பியிருந்தார், நககோமி ஸான். சரிதான், இதொ வந்து விடும் என்று எண்ணி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், சுமார் இரண்டு மணி நேரப் பயணம். வரும் வழியெங்கும் சிக்கலான மேம்பாலங்கள். ஒவ்வொன்றும் ராட்சத சங்கிலிகள் கொண்டு பிணைக்கப்ப்ட்டிருந்தன. அடிக்கடி வரும் நில நடுக்கத்தால் சேதம் ஏற்படாமலிருக்க இந்த ஏற்பாடாம்.

விங்ஸ் ஹொட்ட்டலில் அனியாயத்திற்குச் சின்ன அறை. ஆனால், அந்தச் சின்ன அறையிலேயே, டி.வி, ப்ரிட்ஜ் முதலானவைகள் இருந்தன. சந்துரு போன்ற நண்பர்கள் வந்தால், உடம்புக்கு ஒரு அறையும், கால்களுக்கு ஒரு அறையும் தேவைப்படும். இதற்கு ஒர் இரவுக்கு சுமார் 70 டாலர்கள். நண்பர் ராய் சொனனார்; கேப்ஸ்யூல் ரூம்களும் இங்கே 30 டாலருக்குக் கிடைக்கும். இவை பெரும்பாலும், குடித்துவிட்டு, இரயிலைத் தவறவிட்ட கோஷ்டிகள் தங்குவதற்கான இடமாகும். இந்த கேப்ஸ்யூல் ரூம்கள், சாதாரண அறைகளே அல்ல. சவப் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்ப் போல் இருக்குமாம். தங்க வேண்டிய நபர் தனது உடைமைகளை, லாக்கரில் வைத்து விட்டு, இந்த சவப் பெட்டி போன்ற கேப்ஸ்யூலில் ஏறிப் படுத்துக் கொள்ள வேண்டுமாம். மறுனாள் காலை எழுந்து, வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வார்களாம்.

இகேபுகரோ, நல்ல பெரிய ஸ்டேஷன்.எஜமானுக்காகக் காத்திருந்து, காத்திருந்து இறந்த நாய் ஒன்றிற்கு, இரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் சிலை ஒன்று செய்து வைத்த கதை ஒன்று, சின்ன வயதிலே படித்திருபீர்களே!. அது இங்குதான். தானியங்கி இயந்திரத்தில் காசை அள்ளிப் போட்டு, டிக்கெட் வாங்கி, கதவிலே செருக, தானாகவே வழிவிடும் அமைப்பு எல்லா நாடுகளிலும் இருப்பது போலத்தான். ஆனால், டிக்கெட் மட்டும் கருப்பு நிறத்தில், பளபளப்பாக இருக்கிறதே, என்றெண்ணி, நண்பரிடம் விசாரித்தேன். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும், முட்டையின் ஒடுகளிலிருந்து தயாரிக்கக்ப்படுகின்றது என்று சொன்னார். எதற்கு என்று புரியவில்லை.

ஒரு முறை வாங்கிய டிக்கெட் என்றால், இயந்திரம் அதனை வாங்கி முழுங்கி விட்டு, வழி விடும். சீஸன் டிக்கெட் என்றால் வழிவிட்டு, டிக்கெட்டை மறு கேட்டில் திரும்பக் கொடுக்கும். சரவணன், ஒரு முறை பயன்படுத்த்ப்படும் டிக்கெட்டை வாங்கிவிட்டு, வெளி கேட்டில் மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டார். எங்களுக்கோ ஆச்சரியம். இது எப்படி முடியுமென்று. அப்போது ஒரு ஜப்பானியர் ஒடி வந்து, "அது என்னோட சீஸன் டிக்கெட்" என்று கத்தியபடியே வந்து தனது டிக்கெட்டைக் கேட்டார். அப்போதுதான் புரிந்தது. சரவணன், மின்னல் வேகத்தில், தனக்குப் பின்னால் வந்த்த் ஜப்பானியரின் சீஸன் டிக்கெட்டைத் தவறுதாலக எடுத்து வந்து விட்டாரென்று.

டிரெயினில் கூட்டமென்றால் அப்படி ஒரு மாம்பாலக் கூட்டம். ஒர் ஒழுங்கோடு, டிரெயினில் இறங்குபவர்களுக்கு வழி விட்டு, வாயிலில் இரு புறமும், இரு வரிசைகள் அமைத்து நிற்கிறார்கள். அதே போல் டிரெயினில், ஒருவரோடு ஒருவர் பேச வேண்டுமே. மூச். எல்லாருடய கையிலும், புத்தம் புதிய மாடல்களில் மொபைல் போன்கள். ஆனால், யாருமே பயணத்தின் போது பேசுவதில்லை. பெரும்பாலோர், மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வெளி நாடுகளையும் போலவே, அடுத்து வரும் ஸ்டேஷன் என்னவென்று, அழகாக அறிவுப்பு செய்கிறார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனது பெயர், தக்கனோடபாபா. முதல் நாள், தக்கனோடபாபா, தக்கனோடபாபா என்று சொல்லிச் சொல்லிப் பார்த்ததில், முதன் முறையாக நாக்கு சுளுக்கிக் கொண்டது.

நாங்கள் வேலை செய்து அலுவலகம் மிக ஒழுங்குடன் இருந்தது. சீனியாரிட்டிப்படி சீட்ட்ங் அரேஞ்மென்ட் இருந்தது. வாரம் ஒரு முறை தலைவர், பொதுவான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லுவார். இதற்காக யாரும் மீட்டிங் ரூமுக்குச் செல்வதில்லை. அவரவர், அவரவர் இடத்திலேயே நிற்க, தலைவர் 5 முதல் 10 நிமிடங்கள் பேச, வாரந்திர மீட்டிங் சுருக்கமாய் முடிந்துவிடும்.

இந்தியாவில் புதிது புதிதாய்க் கிடைக்கும் ரெடிமேட் சப்பாத்தி, பரொத்தா, குருமா வகையறாக்கள் கொண்டு போயிருந்தோம். அவற்றை எப்படிச் சுட வைத்துச் சாப்பிடுவது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது, மார்க்கெட்டிங் மானேஜர், எங்களைத் தரதரவென அருகிலுள்ள மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று, எலெக்ரிகல் தவா ஒன்று வாங்கிக் கொடுத்தார். அதனைக் கொண்டு வந்து மதியம் ஆபீசிலேயே ஆன் செய்து சுரேஷ் மலபார் பரோட்ட்டாவும், எம்.டி.ஆர் மசாலாவும் சுட வைக்க ஆரம்பித்தான். அலுவலகத்திலுள்ள அனவரும் எட்டிப் பார்த்தனர். இண்டியன் கறியின் வாசனை, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த்தில் ஆச்சரியமில்லை. முதல் ஒரிரு வாரங்களிலேயே, கொண்டு வந்த்திருந்த சரக்கு அனைத்தும் தீர்ந்துவிட, இப்போது இண்டியன் ரெஸ்டாரென்டுகளைத் தேடிப் படையெடுத்தோம். நியூ டெல்லி, ஜ்யோதி பொன்ற பல இண்டியன் ரெஸ்டாரென்டுகள் இருந்த்தன. எல்லா இடங்களிலும், ஒரே மெனுதான். அரிசிச் சாப்பாடு மற்றும் கறி அல்லது டால். சாப்பாடுக்குப் பதில் "நான்" வேண்டுமானால் கேட்கலாம்.

ஒரே ஒரு வாரக் கடைசியில், ஷிஞ்சுகுக்கு என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம். நான் பார்த்தவரை, மற்ற நாட்டினரை விட, ஜப்பானியர், மரியாதையுடனும், அன்பாகவும் இருக்கிறார்கள். குமார் ஸான், ராமன் ஸான், என்று எல்லோரையும் ஸான் சேர்த்துக் கூப்பிடுகிறார்கள். இவர்களுக்கு ஏனோ, "ல" கரமே வருவதில்லை. கோகுல் என்பவரை, கோகுற் என்பார்கள். லைலாவை, றைறா என்பார்களோ?

அலுவலகத்திலிருந்து, பெரும்பாலும் 8 அல்லது 9 மணிக்கே கிளம்புகிறார்கள். எங்கே? வீட்டிற்கு மற்றும் பாருக்குதான். மறுநாள் காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் ஆஜராகி விடுகிறார்கள். இரவில் எவ்வளவுதான் தண்ணி போட்டாலும், மறுநாள், ஹேங்கோவர் ஏதுமின்றி, அமைதியாக அலுவலகம் வந்து விடுகிறார்கள். பெரும்பாலோனோர் சிகரெட் புகைக்கின்றார்கள். பேஸிவ் ஸ்மோக்கிங்கினால் பொது இடங்களில் நிற்கவே முடியாத அளவிற்கு சிகரெட் புகை.

டெக்னாலஜியில் முன்னணியிலிருக்கும் ஜப்பானியர், புதிது புதிதாக ஏதேனும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சில பொருட்கள் உள் நாட்டு உபயோகத்திற்கு மட்டுமே. ஒரு புத்தக் கோயிலுக்கு, ஜப்பானிய நண்பரொருவருடன் சென்றிருந்தேன். மணியடித்து விட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள். ஓட்டைக் காலணா போண்ற, நாணயமொன்றை விசேஷமானது என்று சொல்லி கோவிலில் வீசி எறிகிறார்கள். அதன் மதிப்பு 5 யென் மட்டுமே. (என்ன போங்கு?)

சில மார்க்கெட்டுகளில், கம்ப்யூட்ட்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் விற்பதற்கான கடைகள் உண்டு. ஒவ்வொன்றும் 9 அல்லது 10 மாடிக் கட்டடங்களாக இருக்கும். பேக்ஸ் மெஷினுக்கென்று ஒர் தளம். வீடியோ கேம்ஸ்க்கன ஒர் தளம் என்று. பெரும்பாலான கடைகளின் வாசலில், மெகபோன் வைத்து, கம்ப்யூட்டரைக் கூவிக் கூவி விற்கிறார்கள்.

இகேபுகரோ மற்றும் ஷிஞ்சுகுக்கு போன்ற இரயில் நிலையங்கள், சிக்கலானதும், நெருக்கடியானதுமாகும். இந்த இரயில் நிலையங்களுக்கு, குறைந்தபட்சம், பத்து தெருக்களிலாவது நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் டோக்கியோ வரை சென்ற எங்களுக்கு புல்லட் ட்ரெயினில் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் தெருவில் நடந்து போகும் போது, இந்தியர் ஒருவரைப் பார்த்து விசாரிக்க, அவர், இந்திய தூதகரகத்தில் பணி புரியும் தெலுங்குக்காரர் என்று தெரிந்தது. ஸ்ரீகாந்த் அவருடன் தெலுங்கில் மாடலாடி மகிழ்ச்சி கொண்டான்.

இறுதியாக, இந்தியா திரும்புமுன் ஒர் சம்பவம். ஹோட்டலிலிரிந்து, விமான் நிலையம் செல்ல ஷட்டில் பஸ்ஸில் அமர்ந்தேன். போகும் வழியில்லுள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து, பிலிம் காட்ட வேண்டுமென்று, டிஜிட்டல் கேமிராவை பையிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு மணினேரப் பயணத்தில் அசந்து தூங்கிவிட்டேன். காமிராவை மறந்து இறங்கி விட்டேன். நாரிட்டா விமான நிலையத்தின், இன்டீரியர் டெகொரேஷனால் கவரப்பட்டு, காமிராவின் மூலம் படம் எடுக்க எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஷட்டில் பஸ்ஸிலேயே, காமிராவைத் தவற விட்டிருப்பதை உணர்ந்தேன்.

காமிரா கிடைக்குமா, கிடைக்காதாவெறு எண்ணியபடியே, இன்பர்மேஷன் கவுண்டரை அணுகினேன். புகார் ஒன்று கொடுக்க்கப்பட்டது. எங்கிருந்து வந்தேன், எந்தப் பஸ்ஸில், எந்த சீட்டில் உட்கார்ந்தேன் போன்ற விபரங்கள் பெறப்பட்ட்டன. கவுண்டரிலிருந்த பெண்மணி, " தகவல் அனுப்பியுள்ளேன்; காத்திருங்கள்" என்ராள். ஐந்து நிமிடல் கழித்து,

"உங்கள் காமிரா கிடைத்து விட்டது; அது மேல் தளத்திற்கு ஐந்து நிமிடங்களில் வந்து சேரும்; சென்று வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள்.

வியப்புடன் மேல் தளத்திற்குச் சென்றேன். ஐந்து நிமிடம் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து, ஒர் ஊழியர், எனது காமிராவைக் கொண்டு வந்து கொடுத்தார். "கால தாமதத்திற்கு வருந்துகிறோம், மன்னிய்ங்கள்." என்று அவர் வந்து சொன்ன போது, வியப்பு மீண்டும் அதிகமானது.

மேற்கண்ட காமிரா சம்பவத்தை, இங்கு வந்து எல்லோரிடமும் சொன்ன போது, "ஜப்பான்னா, ஜப்பான் தான்; இங்கே நடக்குமா இப்படி" என்று சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரி கூறினார்கள்.

நடு ராத்திரி சென்னை வந்திறங்கிய, எனது லக்கேஜ்களைப் பார்த்த எனது மனவிக்கு அதிர்ச்சி. "லேப்டாப் எங்கே?" என்றாள். பகீரென்றது. லேப்லாப் பையில், லேப்டாப், அலுவலகம் குறித்த முக்கிய காகிதங்கள். பாஸ்போர்ட், அலவன்ஸாகக் கொடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் அனைத்தும் அல்லவா வைத்திருந்தேன். டாக்ஸியில் விட்டு விட்டேன் போலிருக்கிறதே என்று எண்ணி, நானும், பையனும், புறப்பட்டுக் கொண்டிருந்த் டாக்ஸியத் துரத்தத் தொடங்கினோம். பெட்ரோலின் வேகத்துடன், மனித சக்தியால் போட்டி போட முடியவில்லை.

வந்த டாக்ஸீ, ப்ரீ பெய்ட் டாக்ஸியாக இருந்ததால், சிறிது நம்பிக்கை இருந்தது. பில்லை வைத்து, நம்பரைக் கண்டு பிடித்து, விமான நிலையத்திலிருக்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, " இப்போதே வருகிறோம்" என்றோம்.

நடு இரவில், காரை எடுத்திக் கொண்டு, விமான நிலையம் சென்று, ப்ரீ பெய்ட் டாக்ஸியின் அலுவலகத்து நபரை விசாரிக்க, அவர், "இதோ டிரைவர் வந்து விட்டார்," என்றார். பத்து நிமிடத்தில் டிரைவர், லேப்டாப்பை அதிலுள்ள பொருட்களுடன் கொண்டு வந்து கொடுத்தார். போன உயிரே வந்தது போலிருந்தது. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்து, சன்மானமும் கொடுத்து விட்டு வந்தோம்.

ஜப்பானில் காமிரா தொலைந்து கிடைத்த சம்பவத்தை, நண்பர்களிடம் பகிர்ந்த்து கொள்ளும் போதெல்லாம், அவர்களிடமிருந்து,

"என்ன இருந்தாலும் ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா?"

என்ற கமெண்ட்ஸ் கேட்கும் போதெல்லாம்,

"இல்லை, இல்லை, இங்கேயும் நேர்மை உண்டு; இதெல்லாம் இங்கேயும் நடக்கும்; தொலந்து போன லேப்டாப் கூடக் கிடைத்திருக்கிறது"

என்று சொல்ல நினைத்தாலும்,

"பொருட்களைத் தொலைப்பதே உம் வழக்கமோ; லேப்டாப் கூடத் தொலப்பீரோ"

என்று யாரேனும், கேலி பேசுவார்களோ என்ற அச்சத்தினாலும்,

"எல்லாச் சாமான்களையும் நான் எடுத்துக் கொண்டு இற்ங்கினேனா என்று அந்த டாக்ஸி டிரைவர் பார்த்திருக்க வேண்டாமோ?: மற்ந்து விட்ட லேப்டாப்பை அப்படியே அமுக்கி விடலாமா; வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து, விற்கப் போய் மாட்டிக் கொண்டு விடப்போகின்றோம்; ஆகவே கொடுத்து விடலாம்" என்ற எண்ணத்தில்தான் திருப்பிக் கொடுத்திருப்பானோ என்ற எணணமும் ஏற்பட்டாதாலும்,

"ஆமாம்; ஆமாம்; ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா" என்றே சொல்லி வருகிறேன்.

Monday, August 22, 2005

அஸ்ஸாம் அனுபவங்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.
கௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை
சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),
ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்
"ஒப்பந்த ஆலை" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்
புகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த
நிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.

ஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,
பின்னர் அங்கிருந்து "இண்டியன் ஏர்" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,
கோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து
12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.
இப்பொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க
வேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.

இப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு "பரூவா"
வாகவோ, அல்லது "போரா" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்
பெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது
இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க
அம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்
சீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்
தொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து
கொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்
அடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்
புறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து
எட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குகளைக் கையால் பிடித்துக் கொண்டே
பயணத்தைத் தொடர்த்தோம்.

சிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்
உதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்
ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,
வலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,
கண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது
நேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்
இப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்
மாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது
புறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்
இணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்
கேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்
புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா
சாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க
முடியவில்லை.

நுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.
ஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற
தேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது
ஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்
மேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்
ப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது
ஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்
வேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக "டாட்டா, பை பை"
சொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை
முடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை
கொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு
மணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்
விடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்
பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.

விருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,
காலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது
ஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்
கதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதிலிருந்த வாசகம் வருமாறு.

"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக
நம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்
போட்டுச்
சொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து
விடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,
பக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு
நாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி
ஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், "இதற்கே இவ்வளவு அலட்டிக்
கொள்கிறாயே!. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா
அதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்
காட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்
வைத்திருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்", என்றார். ஓரிரு
நாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை
நிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, "அங்கே பாருங்கள்.
யானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது" என்றார். யானைக் கூட்டம்
சென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.

நான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு
வனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்
ஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான
நாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், "இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்
டவுன் ஹை" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப
வேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்
நெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,
ஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த
பந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்
வாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்
அதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்
கொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.

அஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி
பேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்
பெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,
பணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு
உள்ளது.

ஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய
உறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்
மறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்
சில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட
தேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்
போன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு
இருக்கும்.
டாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.

அஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வன சரணாலயம் பற்றிக்
கூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்
நான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது
எனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,
காண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி
வாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற "காமாக்கியா" ஆலயத்தையும்
சேர்த்து கொள்ளுங்கள்.

காண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்
கொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று
தீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.
வேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,
கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான
காண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து
அல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்
ரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு
வாங்கி விட்டோம். ஐனூறு ரூபாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்
முதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த
காண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்
என்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்
முகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்
வாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்
அதனை ஆமோதித்தோம்.

இந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.
ஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,
நெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்
உபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு
செய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,
சாப்பிட முயற்சி செய்த
பின்புதான், "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" எண்ற்ற பழமொழியின்
அர்த்தம் புரிந்தது.

இரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று
என்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே
தொகுத்துக் கூறியுள்ளேன்.

Saturday, August 20, 2005

சூடான் அனுபவங்கள்


 பெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்கள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான் உள்ளது. படம் பார்த்துக் கதை சொல்லும் நண்பர்கள், கொஞ்சம் ஓவராகவே பீலா விட்டிருகிறார்கள் என்று புரிந்தது. சூடான் ஒன்பது நாடுகளால் சூழப்பட்ட பெரிய நாடு. எகிப்துக்குக் கீழே உள்ள நாடு என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.


கடந்த நாலு வருஷமாக, கச்சா எண்ணை (க்ரூட் ஆயில்) உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி என்று புஷ்டியாகவே வளர்ந்து வருகிறது சூடான். இந்த எண்ணைப் பணத்தை சூடான் உள் நாட்டுப் போருக்கு உபயோகிப்பதாக மேலை நாடுகள் குற்றச்சாட்டு. அதனால் கனடா நிறுவனமான தலிஸ்மான் இந்த எண்ணை உற்பத்தியில் இருந்து உன் பேச்சு கா என்று வெளியேறி விட்டது. ஆனால் மலேஷியாவும், சைனாவும் இன்னமும் தொகுதி போட்டுக் கொண்டு உட்கார்ந்துள்ளன. அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த நம் நாட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனமும் தற்போது சுமார் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்து, கச்சா எண்ணையை இந்தியாவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் மேலும் பல முதலீடுகள் செய்ய இருப்பதால், அடுத்த சில வருடங்களில் பல இந்திய முகங்களை கார்ட்டுமில் பார்க்கலாம். இட்டிலி, வடை, சாம்பார் கிடைக்கக் கூடும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.


கார்ட்டூமிலுள்ள சூடான் மக்கள் பழகுவதற்கு நல்லவர்கள். இந்தியர்கள் பால் அன்பு கொண்டவர்கள். முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் இங்கு வந்து ஒரு பாலம் கட்டியுள்ளார்கள். நிறைய இடங்களில் வேப்ப மரமும் நட்டுள்ளார்கள். ஆனால் வேப்ப மர கல்யாணம் எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. வழக்கம் போல எல்லா நாடுகளிலும் இருப்பது போல, நூறு முதல் இருனூறு குஜராத்திக் குடும்பங்கள் உள்ளன இங்கு. அவ்வப்போது சில ஹிந்தி சினிமா படங்களும் திரையிடப்படுகின்றன. ஓரிரண்டு இந்திய உணவு விடுதிகளும் உள்ளன. வெள்ளை நைல் நதியும்,நீல நைல் நதியும் சங்கமிக்கும் கூடுதுறை கார்ட்டுமாகும். நைல் நதியில்முதலைகள் நீந்திச்செல்வது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்வது சகஜமான காட்சியாகும்.
 
 ஓம்துர்மானில் உள்ள மார்க்கெட்டில் முதலை தோலினால் ஆன ஹாண்ட் பேக் கிடைக்கும். மகா முதலை ஹாண்ட் பேக் ஒன்று வாங்கினால், ஒரு சின்னக் குட்டி முதலை பர்ஸ் இலவசம். முதலை மூஞ்சியுடன் கிடைக்கும் இந்த ஹாண்ட் பேக்குகளை படித்துறையில் உட்கார்ந்து கொண்டு, சுடச்சுடச் செய்கிறார்களோ என்று ஒரு சந்தேகம்.


இந்த மக்கள் விரும்பி அருந்தும் பாரம்பரிய பானம் கர்கடே ஆகும். சிவப்புக் கலரில் சில்லென்று இருக்கும் இந்த கர்கடே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உ.பா என்று எண்ணி விடாதீர்கள். செம்பருத்திப் பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தப் பானம் உடம்புக்கு மிகவும் நல்லதாம். தற்போது கர்கடே டிப் சாஷே ஆகவும் கிடைக்கிறது. அடுத்து அரதேப் என்ற புளியினால் ஆன பானத்தையும், அம்ருத் என்ற் கொய்யாப் பழச் சாறும் குடிக்கிறார்கள்.

ஃபூல் என்ற வேகவைத்த பீன்ஸினால் (mashed beans) ஆன ஒரு கொசப்பலான உணவு. சுமார் இரண்டு இன்ச் எண்ணையால் (கச்சா எண்ணை அல்ல) மூழ்கடிக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு தட்டில் வைத்து ஐந்து அல்லது ஆறு பேர், ப்ரெட்டுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது சம்பிரதாய வழக்கம். நோ எச்சில்; நோ பத்து.

எண்ணை உற்பத்தி நன்றாக இருந்தாலும், தற்போது, மற்ற வளைகுடா நாடுகள் பக்கத்தில் கூட வர முடியாது சூடானால். வசதியானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ப்ரென் ட்ரெய்னால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நான் ரெஸிடெண்ட் சூடானீஸ் ஆடம்பர பங்களாக்கள் கட்டுகிறார்கள். இந்த பங்களாக்களில் காவல் புரியும் மால் ந்யுட்ரிஷியன்கள் சுட்டெரிக்கும் வெயிலில், வெளியிலே உட்கார்ந்திருந்து கருகிக் கொண்டிருப்பார்கள். போதாதென்று, அனேகமாக எல்லா பங்களாக்கள் வாசலிலும், டீசல் ஜெனெரேட்டர்கள் வேறு புகை கக்கியபடி இருக்ககும்.

உள்னாட்டுப் போர் போன்ற அரசியல் விவகாரங்கள் முடிந்து விட்டால், தனக்குள்ள எண்ணை வளத்தினால் வெகு விரைவில் வளைகுடா நாடுகளைப் போல சூடான் வளர்ந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் விஜயம் செய்த போது எப்படி இருந்தது; இப்போ எப்படி ஆகி விட்டது என்று ஒரு நாள் ஓட்டலாமே. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது கீழை நாடுகளுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய எல்லோரும் விரும்பும் எண்ணும் இன்னாளில், எனக்கு இந்த சூடான் பயணம் ஒரு புது வித அனுபவம்தான்.

- சிமுலேஷன்