Saturday, August 20, 2005

ஸ்ரீராம நவமிக் கச்சேரி

"ஸார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்." என்றார் பாட்டு வாத்யார்.

ஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக் கச்சேரிகளை அப்பாவும், வரதராஜ ஐயங்காரும்தான் (தலைவர்) சேர்ந்து ஆரம்பித்தனர் . முட்டைக் கோஸ்
கிலோ மூணு ரூபா, உருளைக் கிழங்கு கிலோ நாலு ரூபா, சஙகீதம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நகரில் இப்படி ஒரு முயற்சி எடுத்தது ஒரு துணிச்சலான விஷயம்தான்.

குருட்டு முனையில் பெருமாள் கோயில் கொண்ட அந்த அக்ரஹாரத்தில் ரோட்டை மறித்து போடப்படும் மேடையில் கச்சேரிகள் நடக்கும். இரசிகர்கள் உட்கார, மேடை முன்பாக ஜமக்காளம் விரித்திருக்கும். ஆண்கள் யாராக இருந்தாலும் அந்த ஜமக்காளத்தில்தான் உட்கார வேண்டும். அது யு.பி.எல் ஜி.எம்மாக இருந்தாலும் சரி. டேன் இண்டியா டைரக்டராக இருந்தாலும் சரி. சிறிய ஊர் என்றாலும், இரசிகர்கள் குறைவு என்றாலும் பாட வருபவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. பி.வி.ராமன், பி.வி.லஷ்மண் சகோதரர்கள், மகாராஜபுரம், வோலேடி, னேதுனூரி, மதுரை சோமு, லால்குடி, உமையாள்புரம், வேலூர் ராமபத்ரன் போன்ற பெரும் புள்ளிகள்தான் வந்து பாடுவார்கள்/வாசிப்பார்கள். ஊட்டி, மைசூர் செல்ல இருக்கும்
வித்வான்களும் இடெனரரியை மாற்றி இவ்வழியே செல்வது வழக்கம்.

அப்பா, வித்வான்களை சாயங்காலமே வீட்டிற்கு அழைத்து வருவார். இட்லி, கேசரி, காபி மற்றும் அரட்டை முடிந்த பின் எட்டு மணி வாக்கில் கச்சேரிக்குச் செல்வார்கள். மற்ற ஊர்களில் தெரியவில்லை. மேட்டுமாநகரிலே நடைபெறும் இந்த இரவு நேர ஸ்ரீராம நவமிக் கச்சேரிகள்,
சாவகாசமாக சுமார் 9 மணியளவில் ஆரம்பித்து 12 அல்லது மறுநாள் காலை 1 மணி வாக்கில் முடியும்.

அப்பா வித்வான்களோடு கிளம்பிய பின், நாங்கள் அம்மாவுடன் கச்சேரிக்குக் கிளம்புவோம். நாங்கள் என்றால், நானும் எனது சகோதரிகள் மூவரும். அவர்கள் ஒரே சந்தோஷத்துடன் கிளம்புவார்கள். வெகு நாட்கள் கழித்துச் சந்த்திக்க இருக்கும் தோழிகளை எண்ணி. ஆனால் எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது அங்கே. எனவே வேறு வழியில்லாமல், களத்திற்கு கூட்டிச்
செல்லப்படும் பலி ஆடு போ அழைத்துச் செல்லப்படுவேன். கச்சேரியின் இறுதியில் அப்பா கொடுக்கும் வோட் ஆப் தாங்க்ஸ் விஷேஷமானது. அது வெறும் நன்றியுரை மட்டுமல்லாது, ஒரு பாராட்டு விமர்சன உரையாகவும் இருக்கும். அதனைக் கேட்கவே பெரும்பாலான வித்வான்கள் இங்கு வந்து பாடுவதாக அப்பாவின் நண்பர் முத்துக் கிருஷ்ணன் கூறுவது உண்டு. மேடையின்
முன்பாக உள்ள ஜமக்காளத்தில் முதல் வரிசையில் அப்பா உட்காருவார். அம்மா மற்றும்
சகோதரிகள் மேடையின் இடது பக்கம் இருக்கும், துரை மாமா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள். நான் அங்கே போக முடியாது. பெண்டுகள் கூட்டம். எனவே அப்பா பக்கத்தில் போய் உட்காருவேன்.

பாடகர் யாராக இருந்தாலும், வாதாபி கணபதிம் பஜே என்று ஆரம்பித்தவுடன் வந்து விடும் எனக்கு முதல் கொட்டாவி. அடுத்த கொட்டாவி வரும் முன்னே, என்னை நானே டைவர்ட் பண்ணிக் கொள்ள எண்ணி, திண்ணையத் திரும்பிப் பார்ப்பேன். அவர்கள் என்னைக் கேலி செய்து ஏதோ ஒரு ஜோக் சொல்லிக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள். முதல் பாட்டின் அனுபல்லவி வரை கூடத் தாங்காது எனக்கு. அப்பேர்ப்பட்ட ஔரங்கசீப், ஐயாவாள். வலது பக்கத் திண்ணையில் ஒரு புரம் சுவாமி படங்களும் விக்கிரகங்களும். மற்றொரு பக்கம் உள்ள காலித் திண்ணையில் எனக்காகவே ஜமக்காளங்கள் குமிக்கப்பட்டு, "வா, வா, வந்து தாச்சுக்கோ" என்று
கெஞ்சியபடி இருக்கும்.

ஜமக்காளங்கள் நடுவே போய் ஒரு அற்புதமான தூக்கம். நல்ல வேளை; குறட்டை ஒன்றும் பலமாக இருக்காது. சுமார் ஒரு மூணு மணி நேரம் கழித்து பாடகர், "பவமான" என்று மங்களம் பாடும்போது, தங்கையால் நான் எழுப்பப்படுவேன். "பாவமான" என்று என்னைப் பற்றித்தான் பாடுகிறாரோ என எண்ணிக் கொள்வேன். மங்களம் பாடிக் கொண்டிருக்கும்போதே, க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்திரிகள், மணியடித்து கர்ப்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பார். நானாவித சப்தங்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில், எங்கே இருக்கிறோம்
என்று கூடத் தெரியமல், கடுப்போ கடுப்புடன் எழுந்திருக்க வேண்டியிருக்கும்.

சொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வீட்டிற்கும் கச்சேரி நடக்கும் அக்ரஹாரத்திற்கும், உள்ள தூரம் எவ்வளவு என்று. சுமார் ஒண்ணரை அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள வீட்டிற்கு இரவு ஒரு மணி வாக்கில் நடந்து போவது என்பது எப்படி இருக்கும். ஏற்கெனவே இந்தக் கச்சேரி தண்டனை போதாதா? இப்போது நடக்க வேறு சொல்கிறார்களே. இவர்களை எப்படிப் பழி வாங்கலாம்?. நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதத்தை எடுத்து விட வேண்டியதுதான். நண்பர்கள் முன்னால், அப்பா, அம்மா மானத்தை வாங்கி விடலாமென்று எண்ணி, ஓவென்று அழ ஆரம்பித்து, சீன் காட்டிப் பார்ப்பேன்.

ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் அவர்கள் அசர மாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு, அன்றைக்கு பாடப்பட்ட பாபனாசம் சிவனின் காபாலியை விமர்சனம் செய்து கொண்டு நடந்து கொண்டேயிருப்பார்கள். மோகன ஆலாபனை என்னம்மா இருந்தது என்று புளகாங்கிததுடன் கூறுவார்கள். அருமைச் செல்வனின் முகாரி எப்படி உள்ளது என்று யாரும் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். நம் விதி இதுதான் என்று மனதிற்குள் புலம்பியபடியே வீடு வந்து சேர்வேன். நான் எப்போது பெரியவனாவேன். இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல், பாபுவின்
மாமா போல எப்போது தனியாகவே வீட்டில் தூங்குவேன் என்று எண்ணியபடியே
இருப்பேன்.

அனிருத் ஓடி வந்து, "அப்பா, பாட ஆரம்பிக்கலாமா" ன்னு ஆதித்யா கேக்கறான்.

ஒஎஸ். காமெராவுக்கு பேட்டரி மாத்திட்டு வந்துடறேன். ஆரம்பிக்கச் சொல்லு.

வாதாபி கணபதிம் பஜே என்று ஹம்ஸத்வனியில் ஆரம்பிக்கிறான். கூட்டத்தினர் தலையை ஆட்டி இரசிக்கின்றனர். ஆ.. அந்த மூலையிலே உட்கார்ந்திருக்கும் நீலச் சட்டை கொட்டாவி விடுகின்றானே. ஆஹா. அனுபல்லவி ஆரம்பிப்பதற்குள் கண்ணை மூடி சாமியாட ஆரம்பித்து விட்டானே. கொஞ்சம் இருங்கோ ஸார். அந்தப் பையனை எழுப்பிட்டு வந்துடரேன்.

சூடான் அனுபவங்கள்


 பெரும்பாலும் யாரும் அதிகம் போகாத நாடு ஒன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. ஆம். ஆப்பிரிக்க நாடான சூடான் தான் அது. சூடானின் தலை நகரான கார்ட்டுமில் (Khartum) உள்ள எரிசக்தி மற்றும் சுரங்கத்துறையின் கீழ் வரும் சூடானீஸ் பெட்ரோலியம் கார்பொரேஷனில் இரண்டு மாச அசைன்மெண்ட். சூடான் ஒரு சர்வாதிகார நாடு. தீவிரவாதிகள் உலா வரும் பயங்கர நாடு என்று நண்பர்கள் மாற்றி மாற்றி எச்சரிக்கை. ஆனால் அங்கு போய்ப் பார்த்தால் நம்ம டெல்லி அல்லது ஹைதராபாத் போலத்தான் உள்ளது. படம் பார்த்துக் கதை சொல்லும் நண்பர்கள், கொஞ்சம் ஓவராகவே பீலா விட்டிருகிறார்கள் என்று புரிந்தது. சூடான் ஒன்பது நாடுகளால் சூழப்பட்ட பெரிய நாடு. எகிப்துக்குக் கீழே உள்ள நாடு என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.


கடந்த நாலு வருஷமாக, கச்சா எண்ணை (க்ரூட் ஆயில்) உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி என்று புஷ்டியாகவே வளர்ந்து வருகிறது சூடான். இந்த எண்ணைப் பணத்தை சூடான் உள் நாட்டுப் போருக்கு உபயோகிப்பதாக மேலை நாடுகள் குற்றச்சாட்டு. அதனால் கனடா நிறுவனமான தலிஸ்மான் இந்த எண்ணை உற்பத்தியில் இருந்து உன் பேச்சு கா என்று வெளியேறி விட்டது. ஆனால் மலேஷியாவும், சைனாவும் இன்னமும் தொகுதி போட்டுக் கொண்டு உட்கார்ந்துள்ளன. அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த நம் நாட்டு ஒ.என்.ஜி.சி நிறுவனமும் தற்போது சுமார் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்து, கச்சா எண்ணையை இந்தியாவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் மேலும் பல முதலீடுகள் செய்ய இருப்பதால், அடுத்த சில வருடங்களில் பல இந்திய முகங்களை கார்ட்டுமில் பார்க்கலாம். இட்டிலி, வடை, சாம்பார் கிடைக்கக் கூடும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.


கார்ட்டூமிலுள்ள சூடான் மக்கள் பழகுவதற்கு நல்லவர்கள். இந்தியர்கள் பால் அன்பு கொண்டவர்கள். முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இந்தியர்கள் இங்கு வந்து ஒரு பாலம் கட்டியுள்ளார்கள். நிறைய இடங்களில் வேப்ப மரமும் நட்டுள்ளார்கள். ஆனால் வேப்ப மர கல்யாணம் எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. வழக்கம் போல எல்லா நாடுகளிலும் இருப்பது போல, நூறு முதல் இருனூறு குஜராத்திக் குடும்பங்கள் உள்ளன இங்கு. அவ்வப்போது சில ஹிந்தி சினிமா படங்களும் திரையிடப்படுகின்றன. ஓரிரண்டு இந்திய உணவு விடுதிகளும் உள்ளன. வெள்ளை நைல் நதியும்,நீல நைல் நதியும் சங்கமிக்கும் கூடுதுறை கார்ட்டுமாகும். நைல் நதியில்முதலைகள் நீந்திச்செல்வது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்வது சகஜமான காட்சியாகும்.
 
 ஓம்துர்மானில் உள்ள மார்க்கெட்டில் முதலை தோலினால் ஆன ஹாண்ட் பேக் கிடைக்கும். மகா முதலை ஹாண்ட் பேக் ஒன்று வாங்கினால், ஒரு சின்னக் குட்டி முதலை பர்ஸ் இலவசம். முதலை மூஞ்சியுடன் கிடைக்கும் இந்த ஹாண்ட் பேக்குகளை படித்துறையில் உட்கார்ந்து கொண்டு, சுடச்சுடச் செய்கிறார்களோ என்று ஒரு சந்தேகம்.


இந்த மக்கள் விரும்பி அருந்தும் பாரம்பரிய பானம் கர்கடே ஆகும். சிவப்புக் கலரில் சில்லென்று இருக்கும் இந்த கர்கடே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உ.பா என்று எண்ணி விடாதீர்கள். செம்பருத்திப் பூவிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தப் பானம் உடம்புக்கு மிகவும் நல்லதாம். தற்போது கர்கடே டிப் சாஷே ஆகவும் கிடைக்கிறது. அடுத்து அரதேப் என்ற புளியினால் ஆன பானத்தையும், அம்ருத் என்ற் கொய்யாப் பழச் சாறும் குடிக்கிறார்கள்.

ஃபூல் என்ற வேகவைத்த பீன்ஸினால் (mashed beans) ஆன ஒரு கொசப்பலான உணவு. சுமார் இரண்டு இன்ச் எண்ணையால் (கச்சா எண்ணை அல்ல) மூழ்கடிக்கப்பட்டிருக்கும். இதனை ஒரு தட்டில் வைத்து ஐந்து அல்லது ஆறு பேர், ப்ரெட்டுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது சம்பிரதாய வழக்கம். நோ எச்சில்; நோ பத்து.

எண்ணை உற்பத்தி நன்றாக இருந்தாலும், தற்போது, மற்ற வளைகுடா நாடுகள் பக்கத்தில் கூட வர முடியாது சூடானால். வசதியானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ப்ரென் ட்ரெய்னால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நான் ரெஸிடெண்ட் சூடானீஸ் ஆடம்பர பங்களாக்கள் கட்டுகிறார்கள். இந்த பங்களாக்களில் காவல் புரியும் மால் ந்யுட்ரிஷியன்கள் சுட்டெரிக்கும் வெயிலில், வெளியிலே உட்கார்ந்திருந்து கருகிக் கொண்டிருப்பார்கள். போதாதென்று, அனேகமாக எல்லா பங்களாக்கள் வாசலிலும், டீசல் ஜெனெரேட்டர்கள் வேறு புகை கக்கியபடி இருக்ககும்.

உள்னாட்டுப் போர் போன்ற அரசியல் விவகாரங்கள் முடிந்து விட்டால், தனக்குள்ள எண்ணை வளத்தினால் வெகு விரைவில் வளைகுடா நாடுகளைப் போல சூடான் வளர்ந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் விஜயம் செய்த போது எப்படி இருந்தது; இப்போ எப்படி ஆகி விட்டது என்று ஒரு நாள் ஓட்டலாமே. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது கீழை நாடுகளுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய எல்லோரும் விரும்பும் எண்ணும் இன்னாளில், எனக்கு இந்த சூடான் பயணம் ஒரு புது வித அனுபவம்தான்.

- சிமுலேஷன்

Embarrassment

முன்னொரு காலத்தில் விருப்பப்பட்ட திரைப்படங்களை மட்டும் தியேட்டரில் சென்று பார்ப்போம். ஆனால் தற்போது விரும்பியோ விரும்பாமலோ டிவி மூலம், திரைப்படங்கள்
வரவேற்பு அறைக்கு வந்து விடுகின்றது. சில பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.

மும்பாயிலுள்ள எனது மாமா மாமிக்கு, கிரிஷ் என்று நாலு வயதில் பையன். மாமா மாமி டிவியில் சினிமா பார்க்கும்போது, கிரிஷ¤ம் கூட இருப்பான். படத்தில் கொஞ்சம் ஏடாகூடமாக சீன் வரும்போது, மாமி, பையனிடம், கிரிஷ் வா, சின்ன பாத்ரூம் போயிட்டு வந்துடலாம், என்று நைஸாக அவனை டிவி இருக்கும் இடத்திலிருந்து அப்புற்றப் படுத்துவது வழக்கம்.

ஒரு முறை டிவியில் சினிமா பார்த்துக் கொன்டி¢ருக்கும்போது, மாமியின் கஸின் வந்து விட்டாள். வெகு நாட்கள் கழித்து இருவரும் சந்திப்பதால் பேசிக்கொண்டேயிருந்தனர். டிவி? அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருந்தது. கிரிஷ் பயல் மட்டும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹீரோவும் ஹீரோயினும் நெருங்கி வரத் துடங்கினர். கிரிஷ் உடனே அம்மாவிடம் டிவியைக் காட்டி, "அம்மா, அம்மா, நான் வேண்டுமென்றால் சின்ன பாத்ரூம் போயிட்டு வந்து விடட்டுமா?" என்றான்.

Read Only Memory

Read Only Memory!!!

அஞ்சாறு வருஷங்ளுக்கு முன்பு, பொழுது போகவில்லையே; எங்கேயாவது போகலாம் எண்று எண்ணி பேப்பரில் என்கேஜ்மெண்ட் காலத்தைப் பார்த்தேன். சாந்தோம் அருகே உள்ள பெரிய அரங்கத்தில் ஒரு மெமரி நிறுவனம் தனது விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி வித்தியசமாக ஆக இருக்கும் போல உள்ளதே என்று எண்ணி குடும்பத்துடன் சென்றோம்.நினைத்தபடியே நிகழ்ச்சி புதுமையாகத்தான் இருந்தது.

முதலில் சிறுமி ஷாமினி வந்து மேஜை மீதிருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை ஓரிரு நிமிடங்களே பார்த்து விட்டு அத்தனை பொருட்கள் பெயரையும் தப்பில்லாமல் கட கடவென்று ஒப்பித்தாள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரது கைதட்டலையும் வாங்கிச் சென்றாள். பின்பு ராமகிருஷ்ணன் என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து இன்கம்டாக்ஸ் ஆக்ட்டின் க்ளாஸ் (clauses of income tax act) ஒவ்வொன்றையும் பிட்டுப் பிட்டு வைத்தார். இந்த வயதில் கூட மெமரி பயிற்சி சூப்பராக வேலை செய்கிறதே என்று எண்ணி வியந்தோம். இப்படியே இந்த மெமரி நிறுவனத்தில் பயிற்சி எடுத்திருந்த அனைவரும் வந்து
ஒவ்வொருவாக வந்து தத்தம் திறமைகளை காட்டிக் கலக்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்தபடியாக வந்தவர் குட்டியப்பன். சற்றே ஆர்த்த்டாக்ஸ் ஆக தோற்றம் அளித்த குட்டியப்பன் எடுத்துக் கொண்டது பகவத் கீதை. கீதையின் சருக்கங்கள் ஓவர் ஹெட் ப்ரொஜக்டரில் திரையிடப்பட்டது பார்வையளர்களுக்கு. பயபக்தியுடன் மேடை ஏறிய குட்டியப்பன் திரையைப் பார்க்காமலே, எந்த சருக்கத்தில் எந்த ச்லோகம் வருகின்றது என்பதை ஒரு பிழையும் இல்லாமல் சொல்லிக் கைதட்டல் பெற்றார். பின்னர் மேலும் அவர் பார்வையாளர்கள் கீதையிலிருந்து கேட்ட கேள்விகளுக்கும் தனது மெமொரி பவர் மூலம் பதிலளித்துக் கலக்கினார். மேடையை விட்டு கீழே இறங்கிய குட்டியப்பன் பெற்ற கைதட்டல் அடங்க வெகு நேரமாகியது.

அடுத்த நிகழ்ச்சியை அறிவிக்க வந்த அறிவிப்பாளர், ஒலிபெருக்கியில் அறிவித்தார், "Mr.Kuttiappan, You have forgotten and left your slippers on the stage. Please come and take them".

என்றான் முருகன்

சுஜாதா அவர்கள் விகடனில் "என்றான் முருகன்" என்ற தலைப்பில்
வாசகங்கள் எழுதக் கேட்டிருந்தார்.

வாத்யார் பிரசுரிக்காமல் விட்டு நான் எழுதிய வாசகங்கள் கீழே வருமாறு:-

1. அம்மா மாம்பழம் பிடிக்குமே உங்களுக்கு என்றான் முருகன் கனிவாக.

2. பாம்பைப் போன்ற தீவிரவதிகளை விஷம் வைத்துக் கொன்றால் கூடத் தவறில்லை என்றான் முருகன் நச்சென்று.

3. டிபன் பாக்ஸி¢ல் மிளகாய் பஜ்ஜியை வைத்தது யார் என்றான் முருகன் காரமாக.

4. உனக்காக ஸ்பெஷல் ஐஸ் க்ரீம் வாங்க வந்தி¢ருக்கேன் சாப்பிடு என்றான் முருகன் குழைவாக.

5. பில்டர் காபிதான் பெஸ்ட்; இல்லை இல்லை. இன்ஸ்டன்ட் காபிதான் பெஸ்ட் என்றான் முருகன் குழம்பியபடி.

6. ஸம்மர் வருது; வீடு முழுவதும் ஏ.ஸி பண்ண வேண்டும் என்றான் முருகன் கூலாக.

7. இந்த நாத்தம் பிடிச்ச ஊது பத்தியை யார் இங்கு வைச்சது என்றான் முருகன் காட்டமாக.

8. என்னமோ குடிக்கக் கொடுத்தான்; வயிற்று வலி தாங்க முடியிலை என்றான் முருகன் கடுப்பாக.

9. நாமே தோய்க்கறதை விட, வண்ணானுக்குப் போட்டால் துணிகள் நன்றாக வெளுக்குமே என்றான் முருகன் பளிச்சென்று.

10. உனக்கு எத்தனை சல்லடைதான் வாங்கித் தருவது என்றான் முருகன் சலிப்பாக.