Sunday, October 16, 2011

மெரினா - சுஜாதா - நூல் விமர்சனம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவம்தான் கதைக்கான களம். நூற்றுச் சில பக்கங்கள் கொண்டது சுஜாதாவின் மெரினா என்ற இந்தக் குறுநாவல். குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது.

கதையின் முடிச்சு பலமானது அல்லதான். இருந்தாலும் தனது விறுவிறுப்பான நடையால் கட்டிப் போடுகின்றார் சுஜாதா. அதிலும் குறிப்பாக முதல் சில அத்தியாயங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. ஒரு புறம் ந்டுத்தரக் குடும்பத்தினர்களும், குழந்தைகளும் குதூகலமாக விளயாடிக் கொண்டிருக்கும் மெரினா கடற்கறையின் மற்றொரு புறம் பணக்கார இளந்தாரிப் பையன்கள் அடிக்கும் கூத்துடன் ஆரம்பித்து, அதில் ஒரு குறிப்பிட்ட முயற்சி எப்படி 'விவகார'மாய் முடிகின்றது என்று துவங்குகின்றது. போதை மருந்து இன்ன பிற கெட்ட சகவாசங்கள் இருக்கும் ஒரு அயோக்கினாய் இருந்தாலும், நாயகன் திலீப் எப்படியாவது தப்பித்துக் கொள்ள மாட்டானா என்று வாசகர்களை ஏங்க வைப்பதுதான் சுஜாதாவின் சாமர்த்தியம். இதற்கு உதவ கணேஷ், வசந்த்தும் வருகின்றார்கள். இருவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் செய்யாததால் மனதில் நிற்பதில்லை. ஆனால் கணேஷ் அப்சர்வ் பண்ணும் ஒரு சிறிய விஷயமான ஒரு சின்னஞ்சிறு முடிச்சினை வைத்துக் கொண்டு நூறு பக்கங்களுக்கு மேல் சுவாரசியமாக எழுதும் சுஜாதாவும் அவரது நடையும் மனதை விட்டு நீங்குவதில்லை.

கதை: மெரினா - குறுநாவல்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பு: விசா பப்ளிகேஷன்ஸ் - 1999
பக்கங்கள் - 112
விலை - Rs. 35

- சிமுலேஷன்