Monday, December 27, 2010

இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் இதைக் கேட்க வேண்டாம்

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் அன்புக்குரிய்வரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்பவரா? அல்லது இளகிய நெஞ்சம் கொண்டவரா? அடிக்கடி ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி சோகப்படுபவரா? அப்படியானால் இந்த இசையினை நிங்கள் கேட்க வேண்டாம்.


    Get this widget |     Track details  | eSnips Social DNA    
                                                                                  இந்த இனிய பாகேஸ்ரீ ராகத்தினை வாசித்தவர் எம்பார் கண்ணன் அவர்கள். வாசித்த பொழுது கடம் கார்த்திக் குழுவினரின் “என்ஸெம்பிள்” நிகழ்ச்சி. இடம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா. நாள் 27th Dec 2010.
சிமுலேஷன்

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது...


1.    1. மிருதங்கம், கடம், கஞ்சிரா எல்லாம் சேர்ந்து வாசிக்கும்போது கூட 'தனி ஆவர்த்தனம்'னு சொல்லறாங்களே! ஏன்?  

2. ஏன் ஒரு கச்சேரிலேகூட ‘மங்களம்’ மொதல்ல பாட மாட்டேங்கறாங்க?

3. சங்கீத முமோர்த்திகள் ஏன் ‘ஜம்பை’ ராகத்தில் ஒரு கீர்த்தனை கூடப் போடல்லே?

4. ‘தம்பூரா கண்ணன்’ ஏன் ‘ஸோலோ’ கச்சேரி செய்யறதில்லே?

5. Portable, Vennai, Portable Thamboor கண்டுபிடிச்சா மாதிரி Portable Flute, Portable Mohrsing ஏன் யாரும் கண்டுபிடிக்கல?

6. நேத்திக்குக் கச்சேரிலே காம்போதி ராகத்திலே வாசிச்ச ‘மல்லாரி’ சூப்பர்!

7. தனி ஆவர்த்தனத்தின் போது எல்லோரும் எந்திரிச்சுப் போயிடராங்களாமே. ஏன் மொதல் அயிட்டமா, தனி ஆவர்த்தனத்தை வச்சுக்கக் கூடாது?

8. பசி நேரத்திலே கேட்கக் கூடாத ராகம் எது? தாளம் எது? 
- காபி ராகம், அட தாளம்                                                                  

9. மரியாதையான ராகங்கள் எது?
- வலஜி, காம்மோஜி

10. மரியாதை இல்லாத ராகங்கள் எவை?
- அடாணா, கானடா, பேகடா

11. மூக்கைப் பிடிச்சுண்டு பாட வேண்டிய ராகம் எது?

- பீலூ

12. கடம் விதவான் மாதிரி, மிருதங்க வித்வானும் ஏன், மிருதங்கத்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க மாட்டேங்கறாரு?

- சிமுலேஷன்

Thursday, December 23, 2010

குற்றம் நடந்தது என்ன? - குறைவான விலையில் காய்கறிகள்

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது அவரிடம் ஒரு கோப்பு சென்றது. அதில் அன்றைய தினம் ஐ.சி.எஸ் அதிகாரி எஸ்.ஏ.வெங்கட்ராமன், தனது மகளின் கல்யாணத்திற்கு காய்கறிகள் வாங்க, ஜெயில்களுக்கும், மாணவர்கள் விடுதிகளுக்கும் காய்கறி சப்ளை செய்யும் ஒருவரிடம், மார்க்கெட் விலையை விடக் குறைவான விலைக்கு, காய்கறிகளை வாங்கியதாகக் குற்றச்சாட்டு. இதை விசாரணை செய்ய ஒரு கமிஷன் அமைக்குமாறு நேரு உந்தரவிட்டார்.

கமிஷன் விசாரணையில் "காய்கறிக்கு நான் பணம் செலுத்தி விட்டேன்" என்று வெங்கட்ராமன் கூறினார். எனினும், குறைந்த விலைக்கு வாங்கியது அவரது ஊழல் எண்ணத்தை, அதாவது உத்தியோகத்தை, தனது தனி நன்மைக்குப் பயன்படுத்தும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதி, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் வெங்கட்ராமன் ஐ.சி.எஸ் ஜெயில் தண்டனை பெற்றார். ஜெயிலில் இருக்கும்போது, ஜெயில்களின் நடத்தை விதிகளுக்கான புத்தகத்தை முழுமையாகப் படித்து, புதிய அம்சங்களைச் சேர்த்தும், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த விதிமுறைகளைக் களைந்தும், புதிதாக ஒரு மேனுவலை உருவாக்கினார். நாடெங்கிலும் அது இன்றும் பின்பற்றப்படிகிறது.டது.



"வேலையில் நேர்மையான நீங்கள் காய்கறிக்கு டிஸ்கவுண்ட் பெற்றது சிறையிலடைக்கும் அளவுக்குப் பெரிய குற்றமா?" என்று அவரிடம் கேட்கப்பட, அதக்ற்குப் பதிலளித்த அவர், "எனது பதவியை உபயோகித்து பலனடைந்தது தவறுதான். அடைந்த பலன் எவ்வளவு என்பதைவிட, இது போல் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் மனநிலை, பிற்காலத்தில் பெரிய தவறுகளையும், ஊழலையும் செய்யும் தைரியம் எனக்கும் பிற அதிகாரிகளுக்கும் அளிக்கலாம்" என்று கூறினார்.

 
முருகன். ஐ.ஏ.எஸ் (ஓய்வு), துக்ளக்கில்



- சிமுலேஷன்

Wednesday, December 22, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள் - ராகங்களைக் கண்டுபிடியுங்கள்

இசை விழா 2010 - 11 - சில புதிர்கள்

இங்கே 10 ராகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடியுங்கள் முடிந்தால்.

  
1


 
2


 3


4



5


6


7


8


9


10

- சிமுலேஷன்

சபாஷ் சரியான போட்டி!

யதார்த்த வாழ்வில், எந்தச் சந்தர்ப்பத்துக்காகவும் யாரும் பாடுவதில்லை என்ற போதும், இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் என்றும் அபத்தங்களாய் ஒலித்ததில்லை. அதிலும் பாட்டுப்போட்டி நடத்தி ஒருவரை மற்றவர் வெல்லும் சாத்தியக்கூறு வெகு அரிதென்றாலும், திரையுலகில், பாட்டுப் போட்டிக்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இத்தகைய பாட்டுப்போட்டிக்களில் இடம் பெரும் பாடல்கள் பெரும்ப்பாலும் அழியாப் புகழ் பெற்றவை. தமிழ்த் திரையுலகில் இடம் பெற்ற மறக்க முடியாத போட்டிப் பாடல்களைப் பார்போமா!

"வஞ்சிகோட்டை வாலிபன்" படத்தில் இடம் பெற்ற "கண்ணும் கண்ணும் கலந்து" என்ற நடனப் போட்டி மிகவும் புகழ் பெற்றது. பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா அவர்களின் நடனப் போட்டி மிகவும் சுவாரசியமானது.போட்டியின் இடையே வரும் பி.எஸ்.வீரப்பவின் "சபாஷ்! சரியான போட்டி!" என்ற வசனம் காலத்தால் அழிக்க முடியாதது. பத்மினி, வைஜயந்தி மாலா இருவருமே புகழ் பெற்ற கலைஞர்கள் என்பதானால், யாருமே தோல்வி அடையாதபடியாக காட்சி அமைக்கப் பெற்றிருக்கும்.



மீண்டும் பத்மினி ஒரு போட்டிப் பாடலில். இந்த முறை எம்.ஜி.ஆருடன் "மன்னாதி மன்னன்" படத்திற்காக. எம்.ஜி.ஆரின் நடனம் நல்லதொரு முயற்சி! இறுதியில் சிங்கம் படம் வேறு வரைந்து ஜெயித்தும் விடுகின்றார்.



"திருவிளையாடல்" படத்தில் இடம் பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "ஒரு நாள் போதுமா?" பாடல். வடநாட்டிலிருந்து வந்த ஒரு இசைக் கலைஞர் பாடுவது போல அமைந்த இந்த புகழ் பெற்ற பாடல் பல ராகங்கள் அடங்கிய ஒரு அற்புதமான ராகமாலிகா ஆகும். பாடலின் பல்லவி 'மாண்டு' ராகத்தில் துவங்கும். சகிக்க முடியாதது பாலையா பின்னால், உசிலைமணி போன்ற ஒரு குடுமிக் கூட்டம் தேவையில்லாமல் தலையாட்டிக் கொண்டிருப்பது மட்டுமே. இந்த வடநாட்டுப் பாடகரைத் தோற்கடிக்கும் வண்ணம், சிவபெருமான் பாடுவதாக அமைந்த பாடல் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய "கௌரி மனோகரி" ராகத்தில் அமைந்த "பாட்டும் நானே" என்ற பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரலில் நல்ல பாவத்துடன் அமைந்த அற்புதமான பாடல். இருந்த போதும் தட்டையான இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு "ஒரு நாள் போதுமா?" என்ற ராகமாலிகா பாடியவர் பயந்து ஓடிவிட்டார் என்பதை சங்கீதம் தெரிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.





அடுத்தாக "அகத்தியர்" படத்தில் இடம் பெரும் "வென்றிடுவேன்; எந்த நாட்டையும் வென்றிடுவேன்" என்ற பாடல். அகத்தியருக்கும், ராவணனுக்கும் நடக்கும் இந்தப் போட்டியில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், டி.எம்.எஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள். நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோஹனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கல்யாணி, சரஸ்வதி போன்ற எக்கச்சக்க ராகங்கள் இந்தப் பாடலில் இடம் பெரும். ஆனால் 'ஒருநாள் போதுமா?' பாடல் போல இயல்பாக இல்லாமல் வலிந்து புகுத்தப்பட்டது போல இருக்கும்.



"பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு நிகரானவன்" என்ற சுத்தமான சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைந்திருக்கும். இருவதுமே ஓவர் ஆக்டிங் செய்தாலும், எல்லோராலும் ரசிக்கபடும்படியாக இருக்கும். குறிப்பாக, ஸ்வரம் பாடும் க்ளைமாக்ஸ் காட்சி.



"தாய் மூகம்பிகை" என்ற படத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி மற்றும் ராஜேஷ்வரி குரலில் "இசையரசி என்னாளும்" என்ற பாடல் 'சூர்யா' எனப்படும் 'சல்லாபம்' என்ற ராகப் பாடல். தாய் மூகாமிபிகையாக கேயார் விஜயா நடிக்க மனோரமா அவருடன் போட்டி போடுவதாக் அமைந்த பாடல். மூகாம்பிகையின் பக்தையான வாய் பேச முடியாத சரிதா, க்ளளைமேக்ஸில் எண்ட்ரீ கொடுப்பது நல்ல திருப்பம்.



"சிந்து பைரவி" படத்தில் பாடகரான சிவக்குமார் "மரி மரி நின்னே" என்ற தியாகராஜரின் பாடலை சாரமதி ராகத்தில் பாட (ஒரிஜினல் ராகம் தோடி), அதற்குப் பதிலடியாக, சுஹாசினி, அதே ராகத்தில் "பாடறியேன்.. படிப்பறியேன்" என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடி, இறுதியில், மரி மரி நின்னேவையும் கலந்து பாடி கைதட்டலை அள்ளிச் செல்வார். இந்தப் பாடலில் சுஹாசினியின் முகபாவங்கள் குறிப்பிடும்படி இருக்கும்.





கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ அவர்கள் தமிழ்த் திரையில் பாடிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தது "படையப்பா" படத்தில் இடம் பெற்ற "மின்சாரப்பூவே" என்ற பாடல். இது வெறும் பாட்டுப் போட்டியாக இல்லாமல், ரஜினி பாட, ரம்யா கிருஷ்ணன் ஆடும்படியாக அமைந்திருக்கும். ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்துள்ளது இது.



இவை தவிர, "இது நம்ம ஆளு" படத்தில் ஷோபனா, பாக்யராஜ் இருவரும் பாடும் "சங்கீதம் பாட ஞானம் உள்ளவர் வேண்டும்" என்ற பாடலில் பாடத் தெரியாத பாக்யராஜ் நன்றாகவே சமாளிப்பார். சுட்டி கிடக்கவில்லை.

மேற்கண்ட பாடல்களைத் தவிர, வேறேதும் பாடல்கள் விடுபட்டுப் போயிருந்தால், சுட்டியுடன் குறிப்பிடுங்கள். அவற்றையும் இணைக்கின்றேன்.

- சிமுலேஷன்

Monday, December 20, 2010

கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா?

நம்மில் பலருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா என்ற எண்ணம் வருவது இயற்கை. இதற்குப் பெரிய காரணம் சோம்பல்தான். தேர்தல் சாவடிக்க்குச் சென்று, கால் கடுக்க வரிசையில் நின்று ஒட்டுப் போடுவதனால் என்ன பயன் என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே, உட்கார்ந்த இடத்திலிரிருந்தே குறிப்பிட்ட தேதிக்குள், எந்த நேரத்தில் வேண்டுமானால் ஓட்டுப் போடலாம் என்றிருந்தால் எப்படி இருக்கும்?

ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய படைப்புகளையும் போட்டிக்காக இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பிடித்தால் ஒட்டும் போடுங்கள்.

1. பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம் - ஒற்றன்-அசோகமித்திரன்
2. பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் -  சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்
3. பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் - நாணயவியல் 

- சிமுலேஷன்

Saturday, December 11, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள்

இந்த வருடத்திய (2010 - 11) இசை விழா ஆரம்பமாகிவிட்டது. அதனால் சங்கீத ஜாம்பவான்களைப் பற்றிய சில புதிர்களைப் பார்ப்போமா? ஒவ்வொரு படத்தொகுப்பிலும், ஒரு பிரபல சங்கீத மேதை ஒளிந்து கொண்டிருக்கின்றார். அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது, இந்தக் குறிப்பிட்ட படங்களிலிருந்து விடையினை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றும் சொல்ல வேண்டும்?


- சிமுலேஷன்

Saturday, December 04, 2010

கவிஞர் கண்ணதாசனும் களிமண்ணும்

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிறது.)

வீட்டு சுவர்களில் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் சுவிட்ச் பாயிண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுகளும் பொருத்தும் பழக்கம் அறிமுகமாகியிருந்த நேரம் அது. குளிப்பதற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண்டிருந்த கவிஞர், அப்போதுதான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த்தார்; பார்த்ததும் திகைத்தார்.

"இவ்வளவு தாழ்வாக சுவிட்ச் போர்டும், ப்ளக் பாயிண்ட்டும் இருந்தால் குழந்தைகள் தவழ்ந்து விளையாடும்போது, ப்ளக் பாயிண்ட்டுக்குள் விரலை விட்டுவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே அல்லவா உலை வைத்துவிடும்?" கவிஞர் உலவியபடியே சிந்தித்தார்.

தோட்டத்திலிருந்து கொஞ்சம் களிமண்ணை எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்து நன்றாக உள்ளங்கையில் வைத்துக் குழைத்தார். பின்னர் அதை அப்படியே ப்ளக் பாயிண்டில் இருந்த ஓட்டைக்குள் திணிக்க முயன்றார்.

அவ்வளவுதான்...

"அம்மா" என்று ஒரு அலறல். கண்ணதாசன் அலறினார்.

மின்சாரம் 'சப்ளை'யாகிக் கொண்டிருந்த ப்ளக் பாயிண்ட், ஈரக் களிமண்ணை உள்வாங்கிக்கொண்டு, அதை உள்ளே திணித்த கவிஞருக்கு "ஷாக்" கொடுத்து தூக்கி எறிந்துவிட்டது.

கவிஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, கவிஞர் ஹலில் மல்லாந்து மயங்கிக்கிடந்தார்.

நல்லவேளை! கவிஞரின் உயிருக்கொன்றும் ஆபத்து ஏற்படவில்லை.

சொல்லும் 'பொருளின்' மீது நொடியில் பாட்டெழுதும் புலமை பெற்ற அந்தப் பிறவிக் கலைஞருக்கு, மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்போது, அதில் தண்ணீர் பட்டால் "ஷாக்" அடிக்கும் என்ற சாதாரண விஷயம் அந்தச் சூழலில் ஞாபகம் வராதது ஆச்சரியம்தான்.

தகவல் - சுபாசுந்தரத்தின் "ஆல்பம்"

- சிமுலேஷன்

Friday, November 26, 2010

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

ராகசிந்தாமணி கிளப்பில் முன்பு ஒரு முறை "ஹேமவதி-தர்மவதி-நீதிமதி" ராகங்களுக்கிடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்த்தோம். இப்போது தமிழ்த் திரையிசையில் 'தர்மவதி' ராகத்தில் அமைந்த சில பாடல்களைப் பார்க்கலாம். அதற்கு முன்னால், தர்மவதி ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் என்னெவென்று பார்ப்போம்.

இராகம்:               மாயாமாளவ கௌளை
59ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்:     ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ

தர்மவதி ராகத்தினை தீக்ஷிதர் வழி வந்தவர்கள் 'தம்மவதி' என்றும் அழைப்பதுண்டு. ஆனால் "தர்மவதி வேறு; தம்மவதி வேறு", என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

முதலில் நாம் கேட்க வேண்டியது "உத்தரவின்றி உள்ளெ வா" படத்தில் எம்.எஸ்.வி இசையில் அமைந்த "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ" என்ற பாடல். ஆனால் இந்த அருமையான பாடலுக்கு இணையத்தில் சுட்டி கிடக்கவில்லை. (யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). எனவே மேலே செல்வோம்.

"அவன் ஒரு சரித்திரம்" என்ற படத்தில் வரும் "அம்மானை, அழகு மிகு அம்மானை" என்ற பாடல். இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். நல்ல பாவத்துடன் பாடியுள்ளவர்கள், டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம்.  வாணி ஜெயராம் அவர்கள் திரையுலகிற்கு வந்த புதிதில் பாடிய பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜியும். மஞ்சுளாவும் மிகுந்த ரொமான்ஸுடன் நடித்திருப்பார்கள்.


எம்.எஸ்.வி அவர்களுக்கு தர்மவதி ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கிறது. மீண்டும் இதே ராகத்தில், 'மன்மத லீலை' படத்தில், 'ஹலோ, மை டியர் ராங் நம்பர்" என்ற பாடல்.



அடுத்தாக எஸ்.பி.பியின் தேன் சிந்தும் குரலில் "இளஞ்சோலை பூத்ததா" என்ற பாடல். இடல் பெற்ற படம் "உனக்காகவே வாழ்கிறேன்". முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல 'கோரியோகிராபி' மிகவும் சுமாராக இருந்தாலும், தர்மவதி ராகம் சொட்டி வரும் இந்தப் பாடலில்,  இடையிடையே வரும் புல்லாங்குழல், வேணை, வயலின் இசை, மிருதங்க ஒலி மற்றும் சலங்கை ஒலிகளும் அமர்க்களமாக இருக்கும்.



"இளஞ்சோலையில்' சிவகுமாரும், நதியாவும் சொதப்பியிருக்கும்போது, மம்முட்டியும், மதுபாலாவும் "அழகன்' படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நளினமாக ஆடியிருப்பர்கள். அது தர்மவதி ராகத்தில் அமைந்த "தத்திதோம்" என்ற பாடல்தான். பார்க்கலாமா?



அடுத்து நாம் பார்க்க இருப்பது, 'ரமணா" படத்தில் இடம் பெற்ற "வானவில்லே, வானவில்லே" என்ற பாடல். ஹரிஹரனும், சாதனா சர்கமும் பாடியது. சந்தோஷமும், குஷியும் குதித்து நடை போடும் அதே வேளையில், ஒரு வித மெல்லிய சோகமும் இழையோடுவது தர்மவதி ராகத்திற்குரிய சிறப்பு என்று நினைக்கின்றேன். அந்த உணர்ச்சிகளை இந்தப் பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.



நிறைவாகப் பார்க்க இருப்பது "ஜென்டில்மேன்" படத்தில் இடம் பெற்ற "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" என்ற பாடல். ஏ.ஆர்.ரகமான் இசையில் அமைந்த 'ரிதம்முடன்' கூடிய தர்மவதி ராகத்தில் அமைந்த ஒரு அழகான் பாடல். இயக்குநர் சங்கரின் பிரம்மாண்டம், ரசிக்கத்தக்க நடனம், ஒப்பனை, இசை என்று ஒவ்வொருவரின் திறமைகளையும் ஒருங்கே கொண்டு வந்த பாடல்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

Tuesday, November 09, 2010

கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா - நூல் விமர்சனம்





இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார். 



நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ச்சி செய்யும்  பொருட்டு, “திருநிலம்” என்ற கிராமத்திற்கு வருகின்றான் கல்யாணராமன். அங்கு சந்த்திக்கும் வெள்ளி என்ற கிராமத்துப் பெண் மீது அவனுக்கு ஒரு கிரஷ். அவளுக்கோ பரிசம் போட்ட மருத்முத்து மேலே ஒரே பைத்தியம். இதனிடையே ஸ்நேக் எனப்படும் சிநேகலதா என்ற பட்டணத்துப் பெண் வேறு வருகின்றாள். மருதமுத்துவின் கவனம் ‘சிநேகம்மா’வின் மீது விழுகிறது. சிநேகம்மா மருதமுத்துவுடனும் சிநேகமாக இருந்துகொண்டு, கல்யாணராமனுக்கும் ரூட்டுப் போடுகின்றாள். இவர்கள் உறவுகளுக்கிடையே நடக்கும் பல மர்மச் சம்பவங்கள், வாசகர்களின் அடுத்து என்ன எண்ரு ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன். நாவலாக இல்லாமல் தொடர்கதையாக இருக்கும்போது இன்னம் கொஞ்சம் சுவாரசியம் அதிகமாக இருந்து அடுத்த வெள்ளி எப்போது வருமோ? என்றெண்ணத் தூண்டியது.

நா.வானமாமலை அவர்கள் அழகாகத் தொகுத்து NCBH நிறுவனம் வெளியிட்ட “தமிழர் நாட்டுப் பாடல்கள்” புத்தகத்திலிருந்து பல பாடல்களை சுஜாதா இடத்திற்கேற்றாற் போல கையாண்டிருக்கின்றார். மேலும் “பழையனூர் நீலியம்மன் கதை” கதை வேறு இடம் பெருகின்றது. ஒரு தேர்ந்த எழுத்தாளன் கதை சொல்லும்போது, முக்கியமாகச் சொல்ல வேண்டியவை, கதை நடக்கும் களன் பற்றிய விவரணைகள், கதை மாந்தர்கள் பற்றிய வர்ணனைகள் ஆகியவைதான். அப்போதுதான், வாசகனை அந்தக் களத்திற்குக் கூட்டிச் செல்ல முடியும். அதற்கு எந்தக் குறையும் வைக்காத சுஜாதா, நம்மையெல்லாம் ‘திருநிலத்திற்கே’ கூட்டிச் சென்றுவிடுகின்றார். கல்யாணராமன், வெள்ளி, மருதமுத்து, சிநேகலதா, தங்கராசு ஆகியோர் எப்படி இருப்பார்கள் என்று வாசகர்கள் நன்றாகவே கற்பனை செய்து கொள்ள முடிகின்றது.  ரசித்த சில இடங்கள்:-

“கிராம நாய்களின் பொதுப்பெயர் கொண்ட ‘மணி’ வாலாட்டிக்கொண்டு வந்தது.”

“பயந்து போயிட்டீங்களா? டவுசர் எல்லாம் ஈரமாக இருக்குது?”

“இல்லே! அந்தக் கான் ஒழுகறது” என்றான் எரிச்சலுடன்.

வழக்கம் போல சுஜாதா கதை வெளியாகிக் கொண்டிருக்கும்போதே அதனை படமாக்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்து கடைசியாக ஜி.என்.ரங்கராஜன், பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, சுமலதா, மனோரமா ஆகியோரைப் போட்டுப் படம் எடுத்தார். இந்தப் படம் நான் பார்த்த நினைவில்லை. அபிப்ராயம் சொல்ல முடியவில்லை. சுஜாதா ஓரளவு சந்த்தோஷப்பட்டார் போல. வெள்ளி பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாவும், சிநேகலதா பாத்திரத்திற்கு சுமலதாவும், நாட்டுப் பாடல் கிளவிக்கு மனோரமாவும் பொருந்தமாக இருந்திருப்பார்கள். ஆனால் பிரதாப் போத்தன் பெரும்பாலான படங்களில் லூஸு கேரக்டர் பண்ணியதாலோ என்னவோ, கல்யாணராமன் பாத்திரத்திற்கு பொருந்தினாராவென்று தெரியவில்லை. மேலும் இந்தக் கதை திரைப்படமாக வந்ததிற்குப் பதிலாக, தொலைக்காட்சிட் தொடராக வந்த்திருந்திருக்கலாம். ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் சஸ்பென்ஸ் வைக்கத் தோதான கதை.

தலைப்பு: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்:சுஜாதா
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பதிப்பு: 1993 (முதல்) 1997 (இரண்டாவது)
பக்கங்கள்: 224
விலை: Rs. 39.00

-       சிமுலேஷன்

Saturday, November 06, 2010

பந்து விளையாட்டும், பஞ்சரத்ன கீர்த்தனையும்


சமீபத்தில் 'பெட்ரோடெக் 2010" மாநாட்டிற்காக புது டெல்லி சென்றிருந்தேன். நோய்டாவிலிருந்து வந்த டாக்சி டிரைவர் ராம்சிங்கிற்கு புது டில்லி அவ்வளவு பரிச்சயம் இல்லை போலும். ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்பாத், ஜனபாத், அக்பர் தெரு போன்ற முக்கிய தெருக்களிலெல்லாம் அழைத்துச் செல்கிறார். நானோ 'ஹிந்தி நஹி மாலும் ஹை' கேஸ். இருவரும் சேர்ந்து கொண்டு "விக்ஞான் பவனை" தேடிக்கொண்டு, இந்தியா கேட்டினை ஐந்து முறை வலம் வந்துவிட்டோம்.

திடீரென புதிதாக வாங்கிய நோக்கியா E71ல் GPS இருப்பது ஞாபகம் வந்தது. நேவிகேட்டர் துணை கொண்டு விக்ஞான் பவனைத் தேட அதுவோ, மீண்டும் மீண்டும் இந்தியா கேட்டையே சுற்றி வந்தது. வழியில் எங்கும் நிறு்த்த அனுமதி இல்லாத அதிகாரவர்க்கம் நிறைந்த மையப்பகுதி. டிரைவர் வண்டியை கூலாக நிறுத்தி வழி கேட்கப் போக, புது டில்லியில் ஏ.கே7 கையால்தான் இறுதி மூச்சோ என்று எனக்குப் பதைபதைப்பு. ஒருவழியாக வழி கண்டுபிடித்து, விக்ஞான்  பவனுக்கு என்னை கொண்டு சேர்த்தார்.

E71ல் GPS எனது கவனத்தை ஈர்த்த ஒரு இடம் த்யாகராஜ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் (Thyagaraj Sports Complex). த்யாகராஜ் என்றால் தமிழ்ப் பெயர் போல இருக்கின்றதே என்று யோசித்தேன். ஹாக்கியில் தன்ராஜ் பிள்ளையின் பெயர் தெரியும். ஆனால் த்யாகராஜ் என்பது யார் என்று யோ்சித்தேன், யோசித்தேன். யார் அவர் என்று என் சிற்றறிவுக்குச் சிறிதும் எட்டவில்லை. சரி கூகுளார் உதவியை நாட விடை கிடத்துவிட்டது. விடை தெரிந்தவுடன் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!!

இந்த ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் சமீபத்தில்தான் காமன்வெல்த் கேம்ஸுக்காக கட்டப்படதாம். யார் பெயரில் கட்டப்பட்டது என்றால், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸத்குரு த்யாகராஜ ஸ்வாமிகளின் பெயரிலாம். அவருக்கும் விளையாட்டுத் துறைக்கும் என்னய்யா சம்பந்தம்? பந்துவராளியிலும், கௌளிபந்துவிலும் பாடினது தவிர. சரி பெயரை வைத்ததுதான் வைத்தார்கள். ஒரு அடைமொழி? வேண்டாம். த்யாகராஜர் என்ற முழுப் பெயரையாவது வைத்திருக்கலாமே? அதென்னெ ஸ்டைலாக சத்யராஜ், சிபிராஜ் மாதிரி த்யாகராஜ். யார் இப்படி ரூம் போட்டு யோசிச்சது?

உங்களில் யாருக்கேனும் காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

- சிமுலேஷன்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும். இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த் திரையிசையிலும் பெரிதும் இடம் பெற ஆரம்பித்தது.

இந்த இராகத்தின் விபரங்கள் வருமாறு:-

இராகம்:சாருகேசி
26ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ

மேலே உள்ள 26ஆவது மேளகர்த்தா ராகமாகிய இந்த சாருகேசி ராகத்தின் ஆரோகணத்தினையும், அவரோகணத்தினையும் கூர்ந்து பார்த்தால்,  பூர்வாங்கம் சங்கராபரணத்தினைப் போலவும், உத்தராங்கம் தோடியினைப் போலவும் இருப்பதனைக் கவனிக்கலாம்.

இப்போது சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் பார்ப்போமா?

பாடல் - திரைப்படம்

01. ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீராகவேந்திரர்
02. ஆடல் காணீரோ - மதுரை வீரன்
03. அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
04. அம்மம்மா தம்பி என்று - ராஜபார்ட் ரங்கதுரை
05. அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன்
06. சின்னத் தாயவள் - தளபதி
07. எங்கெங்கே எங்கெங்கே - நேருக்கு நேர்
08. காதலி காதலி - அவ்வை ஷண்முகி
09. மலரே குறிஞ்சி மலரே - Dr.சிவா
10. மணமாலையும் மஞ்சளும் - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
11. மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
12. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - அரங்கேற்றம்
13. மாறன் அவதாரம் - ராஜகுமாரி
14. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
15. மொட்டு விட்ட முல்லக் கொடி - அறுவடை நாள்
16. நடந்தாய் வாழி காவேரி - அகத்தியர்
17. நாடு பார்த்ததுண்டா - காமராஜ்
18. நடு ரோடு - எச்சில் இரவுகள்
19. நீயே கதி ஈஸ்வரி - அன்னையின் ஆணை
20. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் - ராணி சம்யுக்தா
21. நோயற்றே வாழ்வே - வேலைக்காரி
22. ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - தேனிலவு
23. பெத்த மனசு - என்னப் பெத்த ராசா
24. ரத்தினகிரி வாழும் சத்தியமே - பாட்டும் பரதமும்
25. சக்கர கட்டி சக்கர கட்டி - உள்ளே வெளியே
26. செந்தூரப்பாண்டிக்கொரு ஜோடி - செந்தூரப்பாண்டி  
27. சிறிய பறவை உலகை - அந்த ஒரு நிமிடம்
28. தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
29. தூங்காத கண்ணின்று ஒன்று - குங்குமம்
30. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி
31. உயிரே உயிரின் ஒலியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
32 வசந்த முல்லைப் போலே வந்து - சாரங்கதாரா


ஜி.ராமநாதன் அமைத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிப் பெரும் புகழ் பெற்ற "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்) பாடலை முதலில் கேட்போம்.


"இந்தப் புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்" என்ற புகழ்பெற்ற வசனத்துடன் துவங்கும் "வசந்தமுல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என்ற பாடல் சாருகேசியில் அமைந்த புகழ்பெற்ற பாடலாகும். இடம் பெற்ற படம் 1957ல் வந்த சிவாஜி கணேசன் நடித்த 'சாரங்கதாரா".


மீண்டும் சிவாஜி கணேசன் மற்றும் சாரதா நடித்த "குங்கு்மம்" படத்திலிருந்து மற்றுமொரு பாடல், சாருகேசி ராகத்தில்.


ரஜனி நடித்த ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ஜேஸு்தாஸ் குரலில் வந்த "ஆடல் கலையே தேவன் தந்தது" சாருகேசி ராகத்தில் அமையப்பெற்ற ஒரு அழகான பாடலாகும்.


சாருகேசி ராகம் ஒரு மென்மையான ராகம் என்பதற்கு ஒரு உதாரணம் "சிங்காரவேலன்" படத்தில் வந்த "தூது செல்வதாரடி கிளியே" என்ற பாடல்.


சமீபத்தில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் "உதயா உதயா உளருகிறேன்" என்ற பாடலாகும். இந்தப் பாடலை முதன்முறையாக "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" இறுதிச் சுற்றில் ரோஷன் என்ற சிறுவன் ஆண்-பெண் குரலில் பாடியபோது அது நெஞ்சைவிட்டு அகலவில்லை. அவ்வளவு இனிமையான பாடல். ஆனால் இந்தப் பாட்டு எந்தப் படப் பாடல் என்று தேடிப்பார்த்த போது, எப்படி ஒரு அழகான பாடலைக்கூட திரையுலகில் கேவலமான ஒரு கோரியாகிரபி மூலம் கொல்லமுடியும் (விஜய், சிம்ரன் குத்து) என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.இதே பாடலை ரூபா என்பவர் பாடியுள்ளதைக் கேளுங்கள்.




தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

Thursday, November 04, 2010

இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை

மற்ற எந்த இந்துப் பண்டிகைகளுக்கும் இல்லாத பல விசேஷங்கள் தீபாவளித் திருநாளுக்கு உண்டு. அவை என்னவென்றால்:

  • குழந்தைகளையும், பெரியவர்களையும் பரவசப்படுத்தும் பட்டாசுகளும், மத்தாப்புக்களும் தீபாவளிக்குப் பலநாடகள் முன்பிருந்தே வெடிக்கப்படும்.
  • நான்கைந்து நாட்கள் முன்பாகவே, இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்களும், பலகாரங்களும் செய்யப்படும். மற்ற பண்டிகைகள் போல பண்டிகை தினம் நைவேத்யம் செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டுமென்ற கட்டாயம், தீபாவளிக்கு இல்லை. அடுப்படியிலிருந்து  அப்படியே சுடச்சுட எடுத்துச் சாப்பிடலாம்.
  • மற்ற பண்டிகைகளுக்கு புதுத் துணிமணிகள் எடுக்காவிட்டாலும், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கியணிவது பலரின் வழக்கம்.
  • பல ஊர்களில் இருந்தாலும், தீபாவளியன்று குடும்பத்தினர் அனவரும் ஒன்று சேருவது  ஒரு குதூகலம்.
  • வீட்டிலுள்ள பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ தலைதீபாவளி என்றால் இரட்டிப்பு சந்தோஷம்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட தீபாவளித் திருநாள், மற்ற பண்டிகைகள் போல அல்லாமல் விடிய,விடிய கொண்டாடப்படும் பண்டிகை இது ஒன்றே.  தீபாவளியின் முதல் தினமும், மறுநாள் விடியற்காலையிலும், தீபாவளியன்ரின் இரவும் பெருத்த குதூகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களையொட்டி அமைந்துவிட்டால், இந்தக் கொண்டாட்டங்களை குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியும். அப்படியில்லாமல் வாரத்தின் மைய நாட்களில் வந்து விட்டால், உற்சாகம் சற்றே குறைந்து விடும். இதற்குப் பெரிய காரணம், வெளியூரில் இருக்கும் குடும்பத்தின் ஒரு அங்கத்தினருக்குக் கிடைக்கும் 'ஒரே ஒரு நாள்' விடுமுறையேயாகும். இந்த ஒரு நாள் விடுமுறையின் காரணமாக வெளியூரில் இரு்க்கும் நபர், தீபாவளியின் முதல் நாள் மட்டுமல்லாது, தீபாவளி தினத்தின் இரவிலும், அவர் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் தீபாவளித் திருநாளைக்கு இரண்டி தினங்கள விடுமுறை அளித்தாலென்ன? உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்மஸ், தேங்ஸ் கிவ்விங் டே போன்ற பல முக்கிய தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்படுகின்றது. ஏன்? தமிழ்நாட்டிலேயே பொங்கல் திருநாளையொட்டி, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று தினங்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இவ்வாறு தீபாவளிக்கு ஒரு நாளைக்கும் மேல் விடுமுறை வேண்டும் என்று எனக்குத் தெரிந்து எந்த ஊடகத்திலும் கோரிக்கை வைக்கப்படவில்லை. இந்து அல்லாத Vincent Desouza of Mylapore Times மட்டுமே ஓரிரு வருடங்கள் முன்பு இது குறித்து மயிலாப்பூர் டைம்ஸில் கட்டுரை எழுதியதாக நினைவு.  இந்த இடுகை எழுதும் முன்னர் சற்றே கூகிள் செய்தபோது, முஸ்லிம்கள் பெரிதும் வாழும் மலேசியா நாட்டில்கூட தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அறிந்துகொள்ள முடிகின்றது.


நாத்திகம் பேசும் நண்பர்கள்கூட தனது மனைவி வீட்டாருகாகவும், தமது குழந்தைகளின் குதூகலத்திற்காகவும், தமது கொள்கைகளத் தியாகம் செய்துகொண்டு தீபாவளித் திருநாளைக் குதூகலத்துடன் கொண்டாடி வரும் இந்த நாட்களில், "இனிய தீபாவளிக்கு வேண்டும் இரண்டு தினங்கள் விடுமுறை" என்ற கோஷம் தவறாக ஒலிக்கவில்லை.


- சிமுலேஷன்

Sunday, October 24, 2010

பாரதி இருந்த வீடு - சுஜாதா- நாடகம் - நூல் விமர்சனம்

தலைமுறை இடைவெளி கொண்ட தாத்தாக்களின் கதையென்றால் சுஜாதாவுக்கு அல்வா. அதில் ஒன்றுதான் "பாரதி இருந்த வீடு்". இதில் ஓய்வு பெற்ற சுப்ரமண்ய அய்யர்தான் கதாநாயகர். இரண்டு மருமகள்களிடமிருந்தும், 'அம்மா, தாயே!' என்று அவர்கள் பின்னே செல்லும் பையன்களிடமிருந்தும்  படாதபாடுபடுகின்றார். திருவல்லி்க்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஒரு வீடு மட்டுமதான் அவருக்குச் சொந்தம். அதில் ஒரு டைலர் 22 ரூபாய் வாடகை கொடுத்துக் கொண்டு 22 வருடமாகக் குடியிருந்துகொண்டிருக்கின்றான். பாரதியார் கூட இந்த வீட்டில் ஒரு மாசம் இருந்திருக்கின்றாராம்.

பேரன் பேத்திகளின் நடவடிக்கைகள் கூட தாத்தாவுக்குப் பிடிக்கவில்லை. அத்னை அவ்வப்போது வெளிப்படையாகத் தெரிவிக்கவும் செய்கின்றார். ஒரு பைசாவுக்கும் வக்கிலாமல், ஆனால் சதா காலமும் தனது குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டேயிருப்பது மருமகளுக்க்குப் பிடிக்காத காரணத்தால் அவரை டில்லியிலிருக்கும் இன்னொரு பையன் வீட்டிற்கு அனுப்பத் திட்டம் போடுகின்றாள். இரண்டு பையன்கள் வீடுமே நரகமாக இருப்பதாக எண்ணுவதால், வேறு என்ன செய்யாலாமென்று திகைத்துக் கொண்டிருக்கும் சுப்ரமண்ய அய்யருக்கு நண்பர் மணி உதவுகின்றார்.

இதற்கிடையில் 'பாரதி' தங்கியிருந்த காரணத்தால் தாத்தாவின் வீடு நினௌச் சின்னமாக அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாகத் தகவல் வருகின்றது. அதற்குப் பிறகு அவருக்குக் கிடக்கும் ராஜ மரியாதைதான், தற்கால சமூகத்தின் மேல்  சுஜாதா வைக்கும் பார்வை. மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்ப்ட்ட இந்த நாடகத்தை அரங்கேற்றினால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துவிடும் போல. அவ்வளவு சிறிய கதை. ஆனால் அவ்வளவு சிறிய கதைக்குள்ளாக, சமூகத்தின் மேலே உள்ள எள்ளல், அங்கதம், சின்னச் சின்ன நகைச்சுவை ஆகியவற்றை வெளிப்படுத்த்துகின்றார். கதை எண்பதுகளில் எழுதப்பட்டிருக்கலாம். ஜுனூன் (பிடிவாதம்) போன்ற தமிழாக்கக்கத் தொடர்கள் மீது சுஜாதவுள்ள கடுப்பு பல இடங்களில் வெளிப்படுகின்றது. மனமுதிர்ச்சி சற்றே குன்றியுள்ள சுவேதாவை கட்டாயத்தின் பேரில் பெண்பார்க்க வந்த ரவியிடம், "ப்ரபவ, விபவ" என்று தமிழ் வருடப் பெயர்கள அடுக்கும் போதும், தொண்ணூதொம்பது, தொண்ணூத்தெட்டு என்று நூறிலிருந்து தலைகீழாக எண்ணும்போது, ரவி பிடிக்கின்றான் ஒரு ஓட்டம். நாடக அரங்கினில் பார்வையாளர்களிடமிருந்து பலத்த சிரிப்பைப் கட்டாயம் பெற்றிருக்கும் இந்தக் காட்சி.

கருத்து பொதிந்துள்ள 60 பக்கங்களுக்கும் குறைவான "பாரதி இருந்த வீடு" சுஜாதாவின் ஒரு சுவையான நாடகம்.

குமரிப்பதிப்பகத்தின் இந்த வெளிய்யீட்டில், "ஆகாயம்" என்ற விஞ்ஞானக் கதையும், உலகப் பிரசித்தி பெற்ற டெலிவிஷன் நாடகங்களில் ஒன்றான "Rabbit Trap" என்கிற ஜே.பி.மில்லரின் நாடகத்தை ஒட்டி எழுத்தப்பட்ட "முயல்" என்கின்ற மத்யமர் ரகக் கதையும் அடக்கம். "ஆகாயம்" அவ்வளவாக என்னைக் கவரவில்லை. ஆனால்,  "முயல்" என்னை பெரிதும் கவர்ந்தது. பின்னர் ஒரு நாளில அதனைப்பற்றி எழுதுகின்றேன்.

தலைப்பு: பாரதி இருந்த வீடு  (நாடகம்)
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: குமரிப் பதிப்பகம்

Friday, October 15, 2010

எங்க வீட்டு கொலு





காணொளியில் இங்கே காணுங்கள்.

சென்ற வருடக் கொலு இங்கே.



- சிமுலேஷன்

Friday, September 24, 2010

கடம் கார்த்திக்கின் கலக்கல் மிமிக்ரி - பாலமுரளி கிருஷ்ணா மற்றும் சேஷகோபாலன்

கடந்த சில வருடங்களாக "கர்னாடிகா.காம்" (Carnatica.com) என்ற அமைப்பு ஆங்கில வருட புத்தாண்டு துவங்கும் வேளையில் சென்னை மியூசிக் அகாடெமியில் கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்த பல புதுமையான நிகழ்ச்சிகள் நடத்துவதுவும் வழக்கம். நானும் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்குத் தவறாமல் செல்வது வழக்கம். 2010 வருடத் துவக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்தது Dr.கடம் கார்த்திக்கின் மிமிக்ரி நிகழ்ச்சியாகும். அவர் பெரிதும் மதிக்கும் Dr.பாலமுரளி் கிருஷ்ணா அவர்களும் சேஷகோபாலன் அவர்களும் சேர்ந்து ஒரு ஜுகல்பந்தி நிகழ்ச்சி கொடுத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து இந்த மிமிக்ரி நிகழ்ச்சியினை வழங்கியுள்ளார். கர்னாடக இசை ரசிகர்களின் காதுகளுக்கு இது ஒரு நல்ல விருந்து. வெகு நாட்களாக இதனைத் தரவேற்றம் செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். இன்றுதான் கை கூடியது. எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள்.

- சிமுலேஷன்


Saturday, August 07, 2010

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன் - நூல் விமர்சனம்







தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வருவது திரையுலகமாகும். அது விடுதலைப் புரட்சியாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் புரட்சியாக இருக்கட்டும். பல்வேறு தளங்களில் திரையுலகம் தனது பங்கையளித்துள்ளது என்றால் உண்மையில்லாமலில்லை. ஆனால் அது ஆற்றிய நன்மைகளை விட ஆற்றிய சீரழிவுகள்தான் அதிகம் என்று பொங்கியெழுந்து தைரியமாகத் தன் கருத்துக்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தவர் ஜெயகாந்தன்.  சினிமாவுலகத்தின் மீதான பெருங்கோபத்தினை தனது "சினிமாவுக்குப் போன சித்தாளு" கதையின் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

செல்லமுத்து சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ரிக்சாக்காரன். சிங்காரம் போல 'திருக்கூஸ்' எல்லாம் பண்ணும் கெட்டிக்காரன் அல்ல. ரிக்சா ஓட்டுவதும் சினிமா பார்ப்பதுவும் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. சினிமா பார்த்தே வந்த 'பசி'யால் கிராமத்துக்கு ஓடிப் போய் அவனுக்காகவே வளர்ந்திருந்த கம்சலையைக் கட்டிக்கொண்டு, பட்டணம் வருகின்றான். தனக்குத் தெரிந்திருந்த ஒரே பொழுதுபோக்கான சினிமாவுக்குப் கூட்டிச் சென்று அவளையும் சினிமாப் பைத்தியமாக்க்கி விடுகின்றான். கம்சலையோ சினிமாப் பைத்தியம் மட்டுமல்லாது, வாத்தியார் பைத்தியமுமாகவும் ஆகிவிடுகின்றாள். வாத்தியாரையே இருபத்து நாலு மணி நேரமும் நினக்கும் அளவுக்கு. அது எந்த அளவுக்கு முத்தி விடுகின்றது என்று தெரியும்போது செல்லமுத்து மட்டுமல்ல, வாசகர்களும் அதிர்ச்சிகுள்ளாகின்றனர். வாத்தியார் படமாயிரு்ந்தாலும் சரி, வேறு எந்தப் படமாயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்று கண்டிசனாச் சொல்லிவிடுகின்றான் செல்லமுத்து. ஒரு மாதம் பொறுத்திருந்த கம்சலைக்கு வாத்தியாரின் புதுப்படம் வெளியானவுடன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "கோடியில் ஒருவர்" படம் பார்க்கச் சென்ற அனுபவம் அவளது வாழ்க்கையை எப்படி சீரழித்து விடுகின்றது என்பதுதான் மீதிக்கதை.

மெட்ராஸ் பாஷை ஆகட்டும், அக்ரஹாரத்து பாஷையாகட்டும். சிறந்த நேட்டிவிட்டியுடன் எழுதுவதில் ஜெயகாந்தனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. விறுவிறுபான நடையில் எழுதப்பட்ட நடை. விளிம்பு நிலை மாந்தர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன்னை மறந்து ஏதோவொரு கதாநாயகன் பின்னாலோ அல்லது கட்சிக்காரன் பின்னாலோ வாழ்க்கையத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை கம்சலை மூலமாகத் தெரிவிக்கும் அதே ஜெயகாந்தன், 'எல்லை தாண்டுவது முறையல்ல; நமக்கும் வாழ்க்கை நெறிமுறைகள் உண்டு', என்பதனை செல்லமுத்து மூலம் தெரிவிக்கத் தவறவில்லை.    

இருவர் படம் எடுத்த மணிரத்தினம் அந்த இருவர்களைப் பற்றிப் பெரிதாக எதிர்மறைக் கருத்துக்கள் ஏதும் வைக்காவிடாலும், அந்தப் படம் குறிப்பிட்ட இருவரைப் பற்றிய படம் அல்ல என்று தற்காப்பாகக் கூறியிருந்ததாக ஞாபகம். ஆனால் ஜெயகாந்தன் எம்.ஜி.ஆர் என்ற பெயரை நேரிடையாகக் குறிப்பிடாவிட்டாலும், வாய்க்கு ஒரு முறை வாத்தியார், வாத்தியார் என்று குறிப்பிடுகின்றார். அதுவும் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்தில் இப்படி தைரியமாக அவரை எதிர்மறையாகக் குறிப்பிட்டு ஒரு கதை எழுத பெரும் தைரியம்தான் வேண்டும்.எம்.ஜி.ஆர் இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? ஒருவேளை அனாவசியப் பப்ளிசிட்டி கொடுக்காமல் அடக்கி வாசிக்கலாமென்று வாத்தியார் நினைத்திருக்கக் கூடும்.

முன்னுரையில் இந்தக் கதைக்கு வெளி வந்த எதிர்ப்புக்களையும்,அந்த எதிர்ப்புக்கள் இலக்கிய சம்பந்தமுடைய கருத்துக்கள் அல்ல என்பதால் அவற்றுக்குச் சமாதனமோ, பதிலோ கூற வேண்டுவது தன் பொறுப்பல்ல என்று ஜெயகாந்தன் கூறுகின்றார்.

முடிவாக இந்தக் கதையின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஜெயகாந்தன் முன்னுரையில் கூறியிருக்கும் மேலும் சில கருத்துக்களைப் இங்கு பதிய வேண்டியிருக்கின்றது.

"அறியாமையும், பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுயாபிமானமிழந்து திரிகிறார்கள். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமு சிதைந்து போவதற்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக, டைரக்டர், தயாரிப்பாளர்களும் பெஉம் பொறுப்பு வகிக்கிறார்கள். "பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்" என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய "பொழுதுபோக்கும்", "கொஞ்சம் நேரம் மக்ழ்ந்திருந்தலும்" ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும், இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா? என்கிற பதைப்புதான் என்னை இக்கதையை எழுதத் தூண்டியது".  

"இந்தக் கேவலமான் சினிமாத்தனம் பதிரிகைகளையும், எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்த நகரத்து இளைஞர்களையும் சமூகத்தின் மேல் தரத்து மனிதர்களையும் முற்றாகப் பிடித்திருக்கிறது. என்ற காரணத்தினாலேயே, குறைவான நாசத்துக்கு ஆளாயிருக்கும் நகரத்துக் கூலிக்கார வர்க்கத்திலிருந்து  ஒருத்தியை நான் தேர்ந்தெடுத்தேன்."

பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

பதிப்பாண்டு : முதற் பதிப்பு 1972 - ஏழாம் பதிப்பு - 2002
விலை: Rs.35

Sunday, June 20, 2010

தமிழிசை - ஒரு மீள் மீள் பதிவு

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அருமையான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.
பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது

இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸுஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும். தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:

பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும். ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும். புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.
மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:

நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.
பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.

பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

- சிமுலேஷன்

இந்தப் பதிவு ஒரு மீள் பதிவு. எனவே இந்தப் பதிவிற்கு முன்பு வந்த பின்னூட்டங்களையும் இங்கு பதிகின்றேன். ஏற்கெனெவே பின்னூட்டமிட்டவர்களுக்கும், இந்தப் பதிவில் பின்னூட்டமிட இருக்கின்ற்வர்களுக்கும் நன்றி!


          ஓகை said...
பதிவுக்கு நன்றி சிமுலேஷன்.  Krishna (#24094743) said... அருமையான அலசல் சிமுலேஷன் அவர்களே. 'constructive criticism' என்பதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. விஷயம் தெரிந்தவர் என்பது கண்கூடு.  மதுரையம்பதி said... ஸிமுலேஷன், அருமையான பதிவு. நன்றி enRenRum-anbudan.BALA said... சிமுலேஷன், //சிமுலேஷன், இன்று மட்டுமே பல முறை உங்கள் பதிவை படித்து விட்டேன். மிக அருமையான பதிவு. இப்பதிவினைத் தந்தமைக்கு நன்றி. // Ditto ! A fantastic analysis, Your knowledge and tolerance come out nicely !  SK said... ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். தேர்ந்த ஒரு இசைஅறிஞரால் எழுதப்பட்ட ஒன்று. உங்கள் கருத்துகள் அனைத்துடனும் ஒன்றுகிறேன். ஒரே ஒரு குறை! "தாயே யசோதா" உங்கள் பதிவில் இடம் பெறவில்லையே என்பதே அது! :)) பூவை. செங்குட்டுவனும் சில நல்ல பாடல்களை அளித்திருக்கிறார். 'என்ன கவி பாடினாலும்' எனும் அடாணா ராகப் பாடலை மதுரை சோமுவும், 'கபாலி'யை மதுரை மணி ஐயரும் பாடக் கேட்கணும்! மிக நல்ல பதிவு ஐயா! மதுமிதா said... நன்றி அருமையான பதிவு. அசைந்தாடும் மயிலொன்று கண்டால் என்று இருக்க வேண்டும். அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும். அவருடையது அனைத்துமே அருமையான பாடல்கள் . "மகர குண்டலங்கள் ஆடவும் அதற்கேற்ப மகுடம் ஒளிவீசவும்..... எனத் தொடர்ந்து வரும் வரிகள். அய்யோ பிறகு எல்லா பாடலும் சொல்ல ஆரம்பித்துவிடுவேன். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.  Anonymous said... // சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். // முக்கியமான பதிவாக கருதுகிறேன் - நன்றிகள் பலப்பல. இதில் சின்னச்சின்ன செய்திகளை எடுத்துக்கொண்டு கொஞ்சம் விரிவாக எழுதலாமே...! எனக்குப்பிடித்த வேறு சில தமிழ்ப்பாடல்கள்: - சாபாபதிக்கு வேறு தெய்வம் - வருவாரோ, வரம் தருவாரோ - கொஞ்சி கொஞ்சி வா குமரா - காண வேண்டாமே, இரு கண் - காண கண் கோடி வேண்டும் - ஏன் பள்ளி கொண்டீரய்யா // சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். // முக்கியமான பதிவாக கருதுகிறேன் - நன்றிகள் பலப்பல. இதில் சின்னச்சின்ன செய்திகளை எடுத்துக்கொண்டு கொஞ்சம் விரிவாக எழுதலாமே...! எனக்குப்பிடித்த வேறு சில தமிழ்ப்பாடல்கள்: - சாபாபதிக்கு வேறு தெய்வம் - வருவாரோ, வரம் தருவாரோ - கொஞ்சி கொஞ்சி வா குமரா - காண வேண்டாமே, இரு கண் - காண கண் கோடி வேண்டும் - ஏன் பள்ளி கொண்டீரய்யா தி. ரா. ச.(T.R.C.) said... good analysis and unbiased version   kannabiran, RAVI SHANKAR (KRS) said... சரியான நேரத்தில் ஒரு மீள் பதிவு! நன்றி சிமுலேஷன்! தமிழிசை பற்றி மொழி உந்துதலால், வெறுமனே உணர்ச்சிப்பூர்வமாக பேசிக் கொண்டிருப்பது வேறு! சிவன் மற்றும் இன்ன பிற பாடல் ஆசிரியர்கள் போல் செயலில் இறங்குவது வேறு! "யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே, ஐயன் கருணையைப் பாடு, முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு!" கவிதைக்கும் பாடலுக்கும் அழகாக வேறுபடுத்திக் காட்டி உள்ளீர்கள்! ஒரு வேண்டுகோள்: மார்கழியில் உங்கள் இசைப் பதிவுகள் மேலும் தர வேண்டுகிறேன்! Hariharan # 26491540 said... //தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்// //தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். // //பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும்// சிமுலேஷன், மிக நேர்த்தியான அலசல். இது நடக்க தமிழகத்தின் சூழலில் பல மாற்றங்கள் வரவேண்டும். மேற்கூறியவற்றை நடைமுறை வாழ்வில் சிமுலேட் செய்ய சகிப்புத்தன்மை அடிப்படையில் அதிகப்படுத்தப்பட வேண்டும். கேள்வி ஞானம் என்கிற அறிவுக்கு ஹிந்தி கூடாது, தெலுங்கு கூடாது, இதர மொழிகள் கூடாது என்று எதெடுத்தாலும் கூடாது என்று போடுகின்ற கொள்கைக் கூப்பாடுகள் குறைந்து ஆக்கமான வழிகளில் தமிழ்ச் சமூகத்தினை வழிநடத்த சகிப்புத்தன்மை வேண்டும். இசை தனிமனித வழிபாட்டுக்கானது அல்ல. தெய்வங்களின் மீதான பல்வேறு ஆராதனைகளே இசையின் அடிப்படை. தெய்வமே இல்லை என்று கொள்கையோடு ஆட்சி அதிகாரம் இருக்கும் சூழலில் இம்மாதிரியான தெய்வீகத்தன்மை பேசும் நுண்கலைகள் நொடித்துப் போவது அதிர்ச்சி தரவில்லை எனக்கு. பள்ளிகள் அளவில் சிறுபான்மையினரது சமயப் பாடல்கள் முன்னுரிமை தரப்படக் கட்டாயங்கள் பிறக்கும். ஊத்துக்காடு ராமசுப்பையர் பாடல்கள் ஜேசுதாஸ் பாடினாலோ, இல்லை பித்துக்குளி முருகதாஸ் பாடினாலோ சுகானுபவமாக இருப்பதற்குச் சொல்லும் அது புரிதலும் எத்துணை முக்கியமோ அத்துணைக்கும் பாடுபொருளான கண்ணனைத் தெய்வமாக ஏற்றுக்கொள்கின்ற மனமும். இந்த தெய்வத்தினை ஏற்றுக்கொள்ளும் மனம் இல்லாத நபர்களால் தமிழிசையை வளர்க்க இயலாது. இந்தியப் பாரம்பர்ய இசையும் இந்து தெய்வமும் பிரித்துப்பார்க்க முடியாதது. இறைமீது நம்பிக்கை இல்லாமல் கல் என்கிற கொள்கையுடையவர்கள் கல்மாதிரியான கடினத்தன்மையோடு அணுகக்கூடிய விஷயமாக இசை எப்போதும் இருக்காது. அன்புடன், ஹரிஹரன்   Simulation said... 'மார்கழி மகோத்ற்ஸ்வம்' என்ற நிகழிச்சியினை, சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியின் ஆதரவுடன் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாகவும் திறம்படவும் நடத்தி வருகின்றார். செட்டி நாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடை பெற்று வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வெள்ளியன்று நடைபெற்ற சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரியில், அவர் இராமலிங்க அடிகளின் திருவருட்பாக்கள் மட்டுமே கொண்ட இரண்டரை மணி நேரக் கச்சேரி (தீம் கான்செர்ட்) ஒன்றினை அருமையாகச் செய்தார். அவர்தம் நிகழ்ச்சி அருமையாக இருந்த போதினும், எனக்குத் தோன்றியது என்னவென்றால்... ஹிந்துஸ்தானிக் கச்சேரியினை, வடநாட்டுத் 'தாளி' என்று கொண்டால், பலமொழிகளில் பாடப்படும், தென்னக இசை எனப்படும் கர்னாடக இசைக் கச்செரியினை, பருப்பில் ஆரம்பித்து, பாயசம் வரை பறிமாறப்படும் தென்னிந்திய சாப்பாடு என்று கொள்ளலாம். இந்த மாதிரி வெரைட்டி எதிர்பார்த்து வந்த இரசிகர்களுக்கு, அருட்பாக்கள் மட்டுமே பாடப்படும், தீம் கான்செர்ட்ஸ், அலுப்பது நிச்சயமே. ஆமாம். சமையல்காரர் என்னதான் சுவையாகச் சமைத்திருந்தாலும், உங்கள் பந்தியிலே, வெண்டைக்காய் வறுவல், வெண்டைக்காய்ப் பச்சடி, வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டக்காய் சாம்பார் என்று சர்வம் வெண்டை மயமாக வந்தால், அடுத்தது வெண்டைப் பாயசமும் வந்துவிடுமோ, என்றவொரு அலுப்பும், அச்சமும் வாராதா? "கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி." இதன் தொடர்ச்சியாக, வெரைட்டி தரும் 'கச்சேரி பத்ததி' (Concert Format) பற்றி விரைவில் எழுதுகின்றேன். - சிமுலேஷன்