Showing posts with label Asokamithiran. Show all posts
Showing posts with label Asokamithiran. Show all posts

Friday, September 09, 2011

தேவன் நினைவு சொற்பொழிவு - இந்திரா பார்த்தசாரதி - அசோகமித்திரன்

செப்டம்பர் 8ஆம் தேதியன்று சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் 'மெட்ராஸ் புக் க்ளப்'பின் ஆதரவில் நடைபெற்ற "தேவன் அறக்கட்டளை தொடர் சொற்பொழிவின்" முதல் கட்டமாக இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுத்தாளர் தேவன் அவர்களை நினவு கூறும் வண்ணம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அசோகமித்திரன் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். ஸ்ருதி இதழின் ஆசிரியர் ராம் நாராயண் முன்னுரை கொடுத்து இவர்களை அறிமுகம் செய்தார். இவற்றின் ஆடியோத் தொகுப்புக்கள் இங்கே:-



    Get this widget |     Track details  | eSnips Social DNA    



    Get this widget |     Track details  | eSnips Social DNA    


- சிமுலேஷன்

Sunday, January 30, 2011

மானசரோவர் – அசோகமித்திரன் – நூல் விமர்சனம்



தமிழில் திரைப்படத்துறையைப் பின்னணியாகக் கொண்டு வந்த நாவல்களில் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" முதன்மையானது. அந்த அளவுக்கு திரைப்பட உலகின் விவரங்களை எடுத்துச் சொல்லாவிட்டாலும், இதே திரைப்படப் பின்னணியில் வந்த மற்றுமொரு நாவல்,

அசோகமித்திரனின் "மானசரோவர்". எண்பதுகளில் ‘சாவி’யில் தொடராக வெளி வந்ததாம் இது. திரையுலகின் கீழ் மட்டத்தில் இருக்கும் ஆனால் ஓரளவு செல்வாக்கு கொண்ட கோபால் என்ற ஸ்கிரிப்ட் ரைட்டருக்கும், சத்யன் குமார் என்ற புகழ் பெற்ற வடநாட்டு நடிகனுக்கும் உள்ள உறவு அல்லது நட்பு அல்லது தொடர்பு ஆகியவைதான் மானசரோவர் நாவலின் முக்கிய அம்சம். 'நத்தானியெல் வெஸ்ட்', 'டாக்டர் ஜிவாகோ' என்று படிக்கும் இருவரையும் அறிவுஜீவிகள் என்று சொல்லலாமாவென்று தெரியவில்லை. (சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் அருண் கோடர்ட் படிப்பது நினைவுக்கு வருகின்றது)


நாவலை எட்டுப் பாகங்களாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு பகுதியிலும் கோபாலும், சத்யன் குமாரும் மாறி, மாறி 'தன்மை' (1st person) நிலையிலிருந்து ‘கதைசொல்லி’களாக அமைத்திருப்பது சற்றே வித்தியாசமான பாணி. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சுமார் 25 பாத்திரங்களுக்கு மேலே வந்து போகின்றார்கள். ஆனாலும் அதில் முக்கியமானவர்கள், கோபால்ஜி என்றழைக்கபடும் கோபால், யூசுப் என்ற சத்யன் குமார், கோபாலின் மனைவி ஜம்பகம், புகையிலைச் சித்தர், ஜெயசந்திரிகா என்ற நடிகை, சியாமளா என்ற துணை நடிகை, கோபாலின் பெண் காமாட்சி, அவரின் பையன் ராஜா, ஆகியோர் மட்டுமே.

பிரிவினைக்கு முன் பெஷாவரிலிருந்து பம்பாய் வந்தவன் நடிகன் சத்யன் குமார். பெற்றோர்களையும் உறவினர்களையும் பிரிந்து வந்தவனுக்கு, பெற்றவர்களிடம் பாசம் காட்டியதேயில்லையே என்ற குற்ற உணர்வு எப்போதும் கொண்ட சத்யன் குமாருக்கு, போட்டிகள் நிறைந்த யதார்த்த உலகம் வெறுப்பளிக்கின்றது. அந்த சமயத்தில் கோபால் ஆதர்ச நண்பனாகத் தெரிகின்றான். மேலுன் தான் மதிக்கும் மெஹர் பாபா போலவும், கோபால் தோற்றமளிப்பதால் அவனை கோபால்ஜி என்றும் மரியாதையுடன் அழைக்கின்றான். கோபாலுக்கு ஒரு சமயம குடும்பத்தில் பெரிதும் இக்கட்டான தருணம் ஏற்படுகின்றது. அதனை இங்கே விரிவாக விவரித்தால் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும், எனபதனால் அவற்றை இங்கே தவிர்கின்றேன்.

கோபால் யாரும் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுகின்றான். அவன் வீட்டை தன்னந்தனியனாகக் காலி செய்யும் கட்டம்,பச்சாதாபத்தினை ஏற்படுத்தும் கட்டமாகும். புகழ்பெற்ற நடிகனுக்கே உண்டான பிஸி ஷெட்யூலிலும், கோபால்ஜியைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கின்றான் சத்யன் குமார். அவனக் கண்டுபிடிக்கவேண்டுமென்று மெனக்கெடுகின்றான். அது எதற்கு எனபதுதான் 'மானசரோவர்' என்ற தலைப்பை நியாயப்படுத்தும் விஷயமாகும்.

இந்த நாவலில் வரும் சத்யன் குமாரும், கோபால்ஜியும் 1ste personல் பேசிக்கொண்டேயிருப்பது என்னவோ, பாலகுமாரன் நாவல்களில் வரும் நாயகர்களைச் சித்திரிப்பது போலத் தோன்றுகின்றது. தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் போல அனாவசியக் காட்சிகளையும், பாத்திரங்களையும் (ஜவர்ஹர்லால் நேருவின் மரணம் இன்ன பிற) வலிந்து புகுத்தியிருப்பது போல எனக்கு முதலில் தோன்றியது. குறிப்பாக எனக்கு இந்த சித்தர் முதலான பாத்திரங்கள் வேறு எரிச்சலைத் தந்தன. அதுவும் சித்தர்கள் என்றாலே, புகையிலை, கஞ்சா, அபினி கேஸ் போலவும், ஆனால் அவர்களுக்கு மட்டும் உலகில் நடக்கும் சூழ்ச்சுமங்கள் எல்லாம் ஞானக்கண்ணால் தெரியும் என்று பில்டப் கொடுப்பதும். ஆனால் வாசகர்களுக்கு கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் யதார்த்தமாகக் காண்பிக்க வேண்டுமென்றால் இவையனைத்தும் அவசியமென்று அசோகமித்திரன் நினைத்திருக்கக்கூடும்.

சிறந்த படைப்பினை வாசித்தாலோ, கேட்டோலோ, பார்த்தாலோ அது வாசகர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணி, அவர்களை ஒரிரு நாடகளாகவாவது தூங்க விடாமல் செய்ய வேண்டும். அந்த பாத்திரங்களை வாசகர்கள் வெகு காலத்திற்கு மறக்கக் கூடாது. அந்த வகையில் ‘மானசரோவர்’ படித்து முடித்த வாசகர்களை, வெகு காலம் வரை கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் மறக்க முடியாமல் செய்ததில் அசோகமித்திரன் வெற்றி பெற்றே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஜம்பகம், சியாமளா முதலானோர், ‘நல்லவர்களா? கெட்டவர்களா?’ என்ற கேள்விக்கும் விடை கிடைக்காது என்ற காரணத்தால் அவர்களையும் கட்டாயம் மறக்க மாட்டார்கள்.

புத்தகம்: மானசரோவர்
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பதிப்பாண்டு: 2006 (முந்தயவை 1989, 1999)
பக்கங்கள்: 208
விலை: Rs. 90

- சிமுலேஷன்

Monday, May 10, 2010

புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.

கதை இலாகாவில் ஒரு முக்கியப் புள்ளியாகிய சர்மாவும், இவரும் ஒரு நாள் ஸ்டுடியோவில் தனியே அமர்ந்திருக்கும்போதுதான் "டகர் பாயிட் காதர்" வருகின்றான். வெள்ளை என்ற ஏஜெண்ட் சொல்லி அனுப்பியதாகச் சொல்லி வந்து வேலை கேட்கின்றான். அவனுக்குக் கொடுப்பதற்கு தோதாக ஒரு பாத்திரமும் இல்லை என்று திருப்பி அனுப்ப எண்ணுகிறார்கள். ஆனால் அவன் இடத்தைக் காலி பண்ணுவதாக இல்லை.


"டகர் பாய்ட் வரும்க; என் பேரே டகர் பாய்ட் காதர்தானுங்க" என்கிறான் காதர். கதையின் பெயர் "புலிக்க்கலைஞன்" என்றிருப்பதால், "டகர் பாய்ட்" என்றால் "டைகர் ஃபைட்" என்று புரிந்துகொள்ள முடிகின்றது. டகர் பாய்ட்டிலே சுவாரசியம் செலுத்தாமலே இருப்பவர்களை எப்படியாவது இம்ப்ரஸ் செய்ய எண்ணுகின்றான் காதர்.


தான் கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து, புலித்தலை ஒன்றினை எடுத்துத் தலையில் மாட்டிக் கொள்கிறான். அதற்கப்புறம் அவன் செய்யும் சாகசங்களை விலாவாரியாக விவரிக்கின்றார் அசோகமித்திரன். அங்கேதான் அ.மி ஒரு கை தேர்ந்த கதை சொல்லி என்று புரிய வைக்கின்றார்.


புலிக்கலைஞனின் சாகசங்களால் கவரப்பட்ட சர்மாவும், மற்றவர்களும் அவனுக்கு ஒர் வாய்ப்பு கொடுப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் கதையில் ஒர் இடைச்செருகல் செய்யத் தீர்மனிக்கிறார்கள்.சில நாட்கள் கழித்து காதர் கொடுத்திருந்த விலாசத்திற்குக் ஒர் கடிதமும் போடுகிறார்கள். ஆனால் கடிதம் திரும்பி வந்து விடுகின்றது. எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. அவன் அகப்பட்டிருந்தாலும் பயன் இருந்திருக்காது. கமர்சியல் சினிமாவின் காரணிகள் அப்படி.


இந்தக் கதையில் புலிக்கலைஞனான டகர் பாய்ட் காதர்தான் கதாநாயகன். அனால் வில்லன்கள் என்று யாருமே இல்லை. சிறுகதைகளின் இலக்கணப்படி முதல் பாராவிலேயே வாசகர்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அதிரடி வாக்கியங்கள் ஏதுமில்ல. ஆனால், வாசகனுக்குத் தனது கூர்ந்த கவனிப்பின் மூலம், புலிக்கலைஞன் என்றால் எப்படி இருப்பானென்றும், இந்த மாதிரி விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்றும் புரிய வைப்பதில் வெற்றி பெற்றுவிடுகின்றார் அசோகமித்திரன்.


- சிமுலேஷன்

Friday, December 18, 2009

ஒற்றன்-அசோகமித்திரன்



அசோகமித்திரன் என்ற ஆளுமையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது ஒற்றன் பற்றிப் பேசப்படுதல் கண்டுள்ளேன். ஒற்றன் என்ற தலைப்பினைக் கேட்டவுடன், ஒரு துப்பறியும் நாவலாக இருக்குமோ அல்லது ஒரு உளவாளியின் வாழ்க்கை வரலாறோ என்றெண்ணத் தோன்றினாலும், அசோகமித்திரன், இந்த மாதிரி வம்பு தும்புக்கெல்லாம் போகமாட்டரே என்று அழுத்தமாகப்பட்டது தவறாகவில்லை. (ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, "இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்" என்று சொன்னார். !!!).

இது புதினமா அல்லது அனுபவக் கட்டுரையா என்றெண்ணி முகவுரைக்குள் நுழையும்போது, இது ஒரு புனைகதை வடிவம் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் படித்துப் பார்த்தால் பயண அனுபவமே என்று புரிந்து கொள்ளலாம். இதன் களம் - ஐக்கிய அமெரிக்கா.

ஐயோவா சிட்டியில் நடக்கும் உலக எழுத்தாளர்கள் பட்டறைக்கு அழைக்கப்படுகின்றார் அசோகமித்திரன். அமெரிக்காவில் அப்போது இருந்த ஏழு மாத வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கின்றார் இந்த ஒற்றனில். இதில் வரும் விவரிப்புகள் அமெரிக்க வாழ் வாசகர்களுக்கோ அல்லது அமெரிக்க அடிக்கடி சென்று வந்தவர்களுக்கோ, புதிதாக என்ன சொல்லிவிடப் போகின்றார் என்று முதலில் ஆயாசம் எற்படுத்தலாம். ஆனால், அசோகமித்திரனின் அனுபவங்கள் நடந்தது 197 74 ஐச் சேர்ந்த காலம் என்பதனை நினைவில் வைத்தால் மேலே படிக்க ஆர்வம் உண்டாகும். மேலும், அமெரிக்காவிலுள்ள கட்டடங்கள் பற்றிய வர்ணனையோ அல்லது, இயற்கை அழகின் வர்ணனையோவா முக்கியம்? மனிதர்கள் முக்கியம். மனிதர்களைப் பற்றிப் பேசுவது அ.மித்திரனுக்குக் கை வந்த கலை. இந்த ஏழு மாதங்களில் மட்டும் நிறையவே மனிதர்களைப் பார்க்கின்றார். (கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். இது மாதிரி நிறைய.) ஒரு முறை Span பத்திரிக்கை ஐயோவா சிட்டி பயணம் குறித்து ஒரு கட்டுரை கேட்க, அ.மித்திரன் எழுதித் தந்ததை சிறுகதை என்ற பெயரில் பத்திரிக்கை வெளியிட்டுவிட்டது!. பயணம் செய்த பத்து வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்து எழுதிய இந்தத் தொகுப்பு 14 அத்தியாயஙள் கொன்டது. காலச் சுவடு பதிப்பு.

முகவுரை: (ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது, எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்தத் தெரிந்தவன் என்று எல்லோரும் என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று அவர்களுக்குத் தெரியாது.)

1.விமான நிலையத்தில்: (எனக்கு முன்னால் நின்ற ஐரோப்பியனுக்கு மிகப் பெரிய உடல். அவன் முதுகில் உலக வரைபடத்தை தெளிவாக எழுத்திவிடலாம்....
ஐரோப்பிய மாது. அவளுடைய பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படம் என்றென்றைக்கும் அவளுக்கு வெட்கமூட்டும்... எந்த புகைப்படம் எடுத்தாலும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது.)

2.படகுப் பயணம்: அமெரிகா வந்த முதல் நாளே மார்க் ட்வெயினின் மிசிசிபி நதிக்குப் பயணம் செய்கிறார்கள். இறைச்சி இல்லாத உணவு என்று கேட்டு சீரில் ஃபுட் வாங்குகின்றார். அதில் பாலை ஊற்றி ஊற வைக்க 'பொத,பொத'வென்றாகிவிட்டது போலும். பல இடங்களில் இது, 'அமெரிக்கப் பொங்கலா'கின்றது அசோகமித்திரனுக்கு. படகுப் பயணத்தில் ஜானையும், வெண்டூராவையும் சந்திகின்றார். வெண்டூரா படகுப் பயணம் ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுக்க, ஜானும், அ.மித்திரனும் உதவுகிறார்கள்

3.கவிதை வாசிப்பு:
டெமாயின் நகரத்துப் பிரமுகர்கள் இறுநூறு பேர் சர்வதேச எழுத்தாளர்களின் கவிதை வாசிப்புக்குக் காத்திருக்க, ஒரு மணிநேரம் தாமதமாக வருகிறார்கள். உபயம் வழி தெரியாத ஜிம்மின் குளறுபடி. தான் கவிஞன் அல்லாததாலும், இந்த கவிதை வாசிப்பு நிகழ்ச்சி தனக்கு முன்னமே தெரியாததாலும், நிராதரவாக உணர்கிறார் அ.மி. ஆனால் விட மாட்டேங்கிறார்கள் அமைப்பாளர்கள். உடனே மூளையைக் குடைந்து, கடைந்து, ஞானக்கூத்தனின் "அன்று வேறு கிழமை"யை ஆங்கிலப்படுத்தி வாசிக்கிறார். கவிதை வேறொருவருடையது என்று கூறினாலும், பாராட்டித் தள்ளுகின்றார்கள் கூட்டத்தினர். மேலும் எல்லோரையும் 'பாட' வேறு சொல்கின்றார்கள்.
(உனக்குத் தெரியுமா? நான் பாட்டெதுவும் பாடவில்லை. எங்கள் தமிழ் மொழியின் 30 எழுத்துக்களைத்தான் நான் ராகம் போட்டுப் பாடினேன். அவன் வியப்படைந்ததாகத் தெரியவில்லை. "அப்படியா? நானல்லவா அப்படிச் சமாளித்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழியின் எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்.)

4.பூண்டு: பட்டினி கிடக்குக் அசோகமித்திரனுக்கு காபி கூடக் குடிக்க முடியாமல் போய் விடுகின்றது பூண்டு வாசனை கொண்ட காபியால். பூண்டு புகழ் அறை நண்பனின் அம்மா இறந்த செய்தி கேட்டவுடன் ஆறுதல் தருகின்றார்.

(கறுப்புத் தோலும், கறுப்புத் தலைமைரும் நான் இந்திய நாட்டுக்காரன் என்பதை என் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. ஆனால் என் பெயரோ, கீழை நாட்டவர் என மேலை நாட்டவர் என இரு சாரார்க்கும் அடங்காத புதிராக இருந்தது.)

இதனாலதான் அ.மித்திரனின் ஒரிஜினல் பெயரான தியாகராஜனை ஜப்பான் நாட்டு கஜுகோ 'டகராஜனா'க்கிவிடுகின்றாள்.

5.இலாரியா: பன்மொழி வித்தகி இலாரியாவுடன் நட்பு பாராட்டுகின்றார். அவள் அறைக்கு வந்து மாக்ரோனி வேறு செய்து கொடுத்துவிட்டுப் போகின்றாள். தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சுய பச்சாபத்துடன் அழுது கொண்டேயிருக்கும் இலாரியாவுக்குக் 'கட்டிப்புடி' வைத்தியம் செய்து ஆறுதல் சொல்கின்றார்.

6.வீழ்ச்சி: அயோவா சிட்டியில் உறைபனி பெய்த முதல் நாளிலேயே சறுக்கி விழுகின்றார். இதற்குப் அப்புறம் கே-மார்ட் ஷு (ஜோடுகள்) கதை ஒன்று பெரிதாக வருகின்றது. சுவாரசியமாக.

7. அந்த இன்னொரு பஸ் நிலையம்: போர்ட் காலின்ஸிலிருந்த்து பஸ் பிடித்து கிரீலிக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் ஒரே ஒரு பஸ். ஆளும், அரவம், அசைவும் கிடையாத இடத்தில் வந்து காத்திருப்பது ஒரு சோதனைதான். பஸ்ஸுக்காகக் காத்திருந்து கடைசியில் பஸ் எனப்படும் ஒரு மினி லாரியில் ஏறி ஊருக்குச் செல்கிறார். அதுவரை நமக்கு, ஐயோ, பாவம் இந்த ஆளை விட்டுவிட்டுப் போயிடப் போறாங்களே", என்று தோன்றுகிறது உண்மைதான்.

8. கே-மார்ட் ஷூ: பனிக்காலத்திற்கென்று பிரத்யேகமாக கே-மார்டி சென்று ஜோடுகள்(ஷூக்கள்) வாங்குகின்றார். இந்த ஜோடுகளைப் போட்டுக் கொண்டு துடியாய்த் துடிக்கின்றார். இந்த அவதிப்படல்தான் ஒரு அத்தியாயம் எழுதும் அளவுக்கு. அப்புறம் பரம கஞ்சனான வெண்டூரா டைப் ரைட்டர் வாங்கி கஷ்டப்படும் படலமும் இங்கே வருகின்றது.

9. இப்போது நேரமில்லை: தனது ஆட்டோமேடிக் கடிகாரம் வேலை செய்வது நின்று விட்டதால் அமெரிக்காவில் அதனை ரிப்பேர் செய்ய முடியுமாவென்று பார்க்கும் அளவுக்கு அப்பாவி நம்ம அ.மி. இறுதியாக ஒரு கடைக்குச் சென்று 'பேனா கடிகாரம்" வாங்கி ஆச்சரியப்படுகின்றார். நான் கூட பி.யு.சி படிக்கும் போது ஒரு பேனா கடிகாரம் வாங்கி ஆனந்தப்பட்டது நினைவுக்கு வந்தது. அந்தப் பேனா கடிகாரத்தையும் தொலைத்து, பின்னர் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்கின்றார்.

10. ஒற்றன்: "ஆஹா! எங்கே ஒற்றன்? எங்கே ஒற்றன்?" என்று நாம் தேடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பத்தாம் அத்தியாயத்தில்தான் ஒற்றன் வருகின்றான். அபே குபேக்னா என்ற எத்தியோப்பிய எழுத்தாளனின் விடா முயற்சியால் உருவான் நாவல்தான் ஒற்றன். இந்த மாதிரி அவே குபேக்னா என்று உண்மையாகவே ஒரு எழுத்தாளர் இருந்தாரா என்று கூகிளிட்டுப் பார்த்ததில், அது உண்மைதான் என்று தெரிய வருகின்றது. அவரது சில மேற்கோள்கள் புகழ் பெற்றவை என்றும் தெரிய வருகின்றது. அபே ரொம்பவும் சிரமப்பட்டு ஒரு சூட் தைக்கிறான். அதனை அணிந்த பின்பு மாசக்கணக்கில் கழட்டாமல், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அணிந்து கொண்டேயிருக்கின்றான். பல நாட்கள் பூட்டிய அறையினில் அஞ்ஞாத வாசம் போல இருந்து "ஒற்றன்" நாவலை முடிக்கின்றான். கஜுகோ, 'டகராஜன்' என்று அன்போடு அழைத்துப் பேசுவது அபேக்குப் பொறாமைத்தீயை மூட்டிவிட ஒருநாள் அ.மியை அடித்தே விடுகின்றான். ஒற்றன் என்ற தலைப்புக்குச் சொந்தமானவன் என்பதாலும் இன்னும் பிற காரணங்களுக்காகவும் அபே குபேக்னா ஒரு சுவையான மனிதாகத் தெரிகின்றான்.

11. மகா ஒற்றன்: அசோகமித்திரனின் வாழ்க்கையில் அபே குபேக்னா பிரவேசித்த அதே காலகட்டத்தில் வந்தவன்தான் பிராவோ. அவனைப்பற்றிக் கூறாமல் விடுவது நியாயமில்லை என்கிறார். குபேக்னா ஆப்பிரிக்கக் கண்டமென்றால், பிராவோ தென் அமெரிக்கக் கண்டம். இவன் நாவல் எழுது உத்தியே தனிதான். அசோகமித்திரனை அறைக்கு அழைத்து சென்று, ஒரு வரைபடம் போன்ற சார்ட் ஒன்றினைக் காட்டுகின்றான். இந்தச் சார்ட்தான் நாவலுக்கான டெம்ப்ளேட் போலும். பிராவோ அதனை விவரிக்கும் போது, நமக்கும் அதனைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற அடக்க முடியாத ஆவல் தோன்றுகின்றது. இந்த மாதிரி சார்ட் ஒன்று இருந்தால் நாமும் கூட நாவல் எழுத முயற்சித்துப் பார்க்கலாமே என்ற ஆசையும் எட்டிப் பார்கின்றது. பிராவோவின் நாவலின் தலைப்புதான் "மகா ஒற்றன்".

12. கண்ணாடி அறை: ஜிம் பார்க்கர் என்ற ஓவியனுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உளள சூசி வீட்டிற்கு செல்கிறார்கள். சூஸி வீட்டில் இருக்கும் விருந்தினர்களின் நடவடிக்கைகள் அசோகமித்திரனுக்கு ஆச்சரியம் ஏற்படுத்துகின்றது. திடீரென்று ஒரு இரவு சூஸியின் கணவன் அ.மிதான் சூஸியின் கள்ளக் காதலன் என்றெண்ணிச் சுட வருகின்றான். கண்ணாடி அறையினில் ஒளித்து வைக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றார் அ.மி. (இனி இந்த நாட்டினில் இருக்கப் போகும் நான்கைந்து மாதங்களுக்கு எந்தப் பணக்காரக் குடிகாரனைப் பார்த்தாலும் அவன்தான் என்னைக் கொலை செய்யத் துடிக்கும் சூஸியின் கணவனோவென்று நடுங்கிக்கொண்டிருக்க வேண்டும்.)

13. அம்மாவின் பொய்கள்: அசோகமித்திரனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஞானக்கூத்தனின் "அம்மாவின் பொய்கள்" அவருக்குத் தெரியாமலேயே, விக்டோரியா குழுவினரால் நடித்துக் காட்டப்பட ஒரே ஆச்சரியம்.

14. ஏப்ரல் 27, 1974: பயிற்சிப் பட்டறையின் கடைசி நாள். ஒரு பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் போல இறுதி நாளில் பிரியும் சோகம் அனைவருக்கும். ஏன்? வபின்ஸ்கி, கஜுகோ போன்ற பலரையும் பிரியும் நமக்கும்தான்.

- சிமுலேஷன்