Tuesday, December 18, 2007

பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபி

"பேஷ்..பேஷ்... காபின்னா, இதான் காபி"

"என்ன அத்திம்பேர்.இந்த மினிஹால்லே, கான்டீன்னும் கெடையாது. காபியும் கெடையாது. எங்க போய் காபி சாப்பிட்ட்டேள்?"

"டேய் குடிச்சாதான் காபியா? கேட்டாக் காபியில்லையா? அபிஷேக் ராகுராம்னு ஒரு பையன் காபி ராகம் பாடினான் பாரு. அட்டகாசம்."

"அத்திம்பேர். மோகனம், கல்யாணின்னு சொன்னாப் புரியறது. சங்கராபரண்ம்னு சொன்னாப் புரியறது. காபின்னா என்ன? தமிழ்ப் பேரா?"

"அதெல்லாம் தெர்யலையேப்பா. வடநாட்லே kaafiனு சொல்றா. நாம் காபி, இல்லாட்டி காப்பி அப்டீங்கறோம்."

"குடிக்க்ற காப்பிலெ கும்பகோணம் டிகிரி,பீபரி, ரொபஸ்டா, சிக்கரி கலந்த காபின்னு வெரைட்டி இருக்றாப்ல, காபி ராகத்லேயும் வெரைட்டி இருக்கா?"

"நிச்யமா. கர்நாடக காபி, உபாங்க காபி, ஹிந்துஸ்தானி காபின்னு பலவகை இருக்கு. அதைத் தவிர வடநாட்ல வேற எந்த ப்ளெண்ட் போட்டாலும் அதை, 'மிஸ்ர காபி'ன்னு சொல்லிடுவாங்க.நாம பெரும்பாலும் பாடறது ஹிந்துஸ்தானி காபிதான். இந்தக் காபி ராகம் கரஹரப்ரியாங்ற 22ஆவது மேள்கர்த்தாவின் ஜன்ய ராக்ம். அப்படீன்னா, இதனோட ஆரோகணம், அவரோகணம் சொல்லு பார்ப்போம்."

"கரஹரப்ரியாவுக்கு, ஸ,ரி2,க2,ம1,ப,த2,நி2,ஸா - ஸா,நி2,த2,ப,ம1,க2,ரி2,ஸ .



காபிக்கு,

ஆரோகண்ம்; ஸ,ரி2,ம1,ப,நி3,ஸா
அவரோகண்ம்: ஸ்,நி2,த2,நி2,ப,ப1,க2,ம1,ட2,ப்,க2,ரி2,ஸ,ந்3,ஸ

சரியா, அத்திம்பேர்?"

"ஆஹா. கலக்றியே. ஆரோகணம் எவ்வளவு சிம்பிளா இருக்கோ, அவரோகணம் அவ்வளவுக்கவ்வளவு காம்ளெஸா இருக்கு பார்த்தியா. ஆனா, நான் ஏற்கெனவே சொன்னா மாதிரி வெறும் ஆரோகணம், அவரோகணங்றது ஒரு ஸ்கேல் மட்டும்தாண்டா.

இந்திய இசைன்னாலே, கமகம் முக்கியம். சரி. சரி. கமகத்தைப் பத்தி அப்புறமா வெளக்கிச் சொல்றேன். ஒனக்கு, காபில்லே என்னென்ன பாட்டு தெரியும் சொல்லு?"

"நான் சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கவா? நம்ம கர்நாடிக், "என்ன தவம் செய்தனை யசோதாவையே, பார்த்திபன் கனவுலே, வேற மாதிரி ஹாண்டில் பண்ணியிருக்கார் பாருங்கோ. கேட்கறேளா?"

"ஆஹா. வீடியோ ஐபாடெல்லாம் வாங்கிட்டியா? பார்ததிபன் கனவு-ஆலங்குயில் பாட்டுதானே. போடு, போடு. பாக்கறேன்."



"ரோஜா படத்லே வந்த, 'காதல் ரோஜாவே'காபிதான். அப்புறம், ரஜனி ஸ்ரீதேவி நடிச்சு, "ப்ரியா"ன்னு ஒரு படம் வந்ததே எய்ட்டிஸ்லே. இளையராஜாவோட "ஹேய் பாடல் ஒன்று. ஜேஸுதாஸும், ஜானகியும் பாடினது. அதுவும் ஒரூ நல்ல காபிதான்."

"சரி. அதையும் கேட்டுடலாம்"



பாலபாஸ்கர்ங்றவரோட ஃப்யூஷன் ஒண்ணு இங்க இருக்கு. பாருங்கோ.



"சரிடா. ஒரேடியா சினிமாப் பாட்டு, ஃப்யூஷன்னு போட்டுண்டிருக்கியே. கர்நாடிக்லே என்ன தெரியும். ஒரு கர்நாடிக் பாட்டுப் போடேண்டா. "

"'என்ன தவம் செய்தனை' சொல்லிட்டேன். த்யாகராஜரோட, 'இந்த சௌக்ய', 'மீ வல்ல குணதோஷமேமி, அப்புறம், 'பருலன்ன மாட'ன்னு ஒரு ஜாவளி உண்டு.

இப்ப புரந்தரதாசரோட 'ஜகதோதாரணா' எம்.எஸ் பாடிக் கேட்கலாமா? இல்ல. பாக்கலாமா?"



ஒரு நிமிஷம் அத்திம்பேர். பாட்டைக் கேட்டுண்டுருங்கோ. இத வந்துடறேன். ஆபீஸ் கலீக் ஒருந்தன் வந்திருக்கான். அவனைப் பாத்துட்டு வந்துடறேன். காபி சாப்பிடத்தான் கூப்பிடறான் போலயிருக்கு.

Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது ஒவ்வொரு ராகத்துக்கும் ஆரோகணம், அவரோகணம்ன்னு ஏழு ஸ்வரங்கள் ஏறு வரிசையிலும், எறங்கு வரிசையிலும் இருக்கும். இப்படி அடுத்தடுத்தாப்ப்ல வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு நட்பு இருந்தால், அவை பாடுவதற்கு சுலபமா இருக்கும். அந்த மாதிரி இல்லாம, அடுத்தடுத்ததா வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு ஒறவோ, நட்போ இல்லாமலிருந்தா அந்த ராகங்கள் ரொம்ப நேரம் பாடறதுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த ராகங்களைத் தான் விவாதி ராகம்ன்னு சொல்றோம். 72 மேளகர்த்தா ராகங்கள்ல 40 ராகங்களை விவாதி ராகங்கள்ன்னும் மத்ததையெல்லா "சம்வாதி" ராகங்கள்ன்னும் சொல்றோம்.

சரி, சரி விவாதியப் பத்தி நெறைய விவாதம் பண்ணியாச்சு. இப்ப நம்ம ரசிகப்ரியாவுக்கு வருவோம். இந்த இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் இதோ;

ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸா
ஸா நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

ரொம்ப நேரம் பாடறத்துக்கு கொஞ்சம் கஷ்டமான ராகம் அப்படீன்னு சொன்னாலும், ரசிகப்ரியா ஒரு அழகான, ரசிக்கும்படியான ராகமாகும் (தலைப்பு வந்தாச்சு. ஓகேவா?). ஆனா, இதுலே நெறயப் பாட்டு இல்ல. இருக்கற ஒண்ணு, ரெண்டு பாட்டைத்தான் இங்கே போடலாம்னுதான் ஒரு ஐடியா.

மொதல்ல சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கலாமா? "கோவில் புறா" அப்படீங்கற படத்ல வர்ற "சங்கீதமே"ங்ற இந்தப் பாட்டு, ரசிகப்ரியா ராகம்தான். ஆனா வழக்கமான சினிமாப் பாட்டு மாதிரியே, இதிலும் ஒரே ராகம்தான் முழுசும் இருக்கும்னு கேரண்டியெல்லாம் கொடுக்க முடியலை. சரி, பாட்டை இப்பக் கேட்கலாமா?



கர்நாடக சங்கீதத்லே மொதல்லே நாம் கேக்க இருக்கறது, ரவிகிரண் பாடின "ரசிகப்ரியே, ராக ரசிகப்ரியே" என்ற பாடல். அதனன இங்கே கேக்கலாம்.

ரசிகப்ரியாவின் ஆரோகணம், அவரோகணம் என்னென்னு ஏற்கெனவே பார்த்தோம். அதனை டெவலெப் செய்வது எப்படின்னும், ஜெயதேவரின் அஷ்டப்தி ஒண்ணும் இங்கே கேப்போம் இப்ப.

இப்ப அடுத்ததா கேக்கப் போறது ஒரு அழகான தில்லானா. இதைப் பாடினது யாருன்னா, மறைந்த பண்டிட்.விஸ்வேஸ்வரன்அவர்கள். நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் கணவர். இந்தத் தில்லானாவை, ஒரு முறை ஒரு ஊர்லேர்ந்து, இன்னோரு ஊருக்குக் கார்ல போகும்போது இயற்றினாராம். கர்நாடிக், ஹிந்துஸ்தானி சந்தூர், கிடார்னு எது எடுத்தாலும், ஒரு ஆர்வத்துடன் செய்த ஒரு மேதை அவர்.






சிதம்பரம் அகாடெமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்லேர்ந்து இந்தத் தில்லானா அடங்கின "அந்தர்த்வனி" ங்கற "சிடி"ய வெளிட்ருக்காங்க.

அடுத்ததா இப்ப நாம் பாக்கப்போறது "காவலம் ஸ்ரீகுமார்" என்ங்றவரோட பாட்டு. மனுஷன் ஜேஸுதாஸையும், பாலமுரளி கிருஷ்ணாவையும் கலந்த மாதிரி என்னமாப் பாடறார் பாருங்க. எளிமையான இருந்து கொண்டு எப்படி அலட்டாமல் பாடறார்ன்னும் பாருங்க. இவர் "கைரளி"ங்ர மலையாள டி.வி சானல் ஒண்லே அருமையான ப்ரொக்ராம் ஒண்ணு கொடுப்பார்ங்றது மட்டும்தான் இத்தன நாள் தெரிஞ்ச விஷயம். இப்பதான் புரியுது, ஸ்ரீகுமார் ஒரு பெரிய வித்வான்னு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்க்ருதம், இந்த மொழிகள்லதான் கர்நாடிக் கச்சேரிலே பொதுவாக் கேட்போம். ஆனா, மலையாள மொழிலே பாடறதே இல்லியேன்னு நெனைக்கறது உண்டு. இப்போ நீங்க கேக்கப் போறது ஒரு மலையாளக் க்ருதி. "குட்டிகுஞ்சு தங்காச்சி" அப்படீங்றவர் எழுதினது.






Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ ..........................................................................

"வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!"

- வீரபாண்டிய கட்டபொம்மன்

"கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"

- பராசக்தி

"கேள்வியை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?

- திருவிளையாடல்

"கை வீசம்மா, கை வீசு; கடைக்குப் போகலாம் கை வீசு"

- பாசமலர்

"நீ முந்திண்டா நோக்கு...; நான் முந்திண்டா நேக்கு..."

- வியட்நாம் வீடு

"வேற ஒண்ணும் இல்லடி. கிளிக்கு றெக்க மொளச்சுடுது. ஆத்தவிட்டு பறந்து போய்டுத்து.

- கௌரவம்

by சிமுலேஷன்

Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...


பல்லவி

அண்ணலின் ஆணையேந்தி
அன்னை ஜானகியைத் தேடி
அலைகடல் கடந்தாய் அன்றே
அஞ்சனைத் தவப் புதல்வா!

அனுபல்லவி

அசோகவனம் அழித்தாய்
அக்சனை அங்கே மாய்த்தாய்
இலங்கையை கடைந்தெரிந்தாய்
இடர்களைக் களைந்தெரிந்தாய்
இத்தனை செயல் புரிந்தும்
இறுமாப்பே இல்லையானாய்
எத்தனை எட்டினாலும் ஐய
நின் நிகருமுண்டோ

சரணம்

ஒப்பிலா வலிமை பெற்றாய்
ஓதுவோம் உந்தன் நாமம்


இராகம்: கல்யாண வசந்தம்
தாளம்: ஆதி

பாடியவர்: ஆதித்யா
மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ்


Tuesday, February 06, 2007

புனைபெயர்களும் புதிரும்...

புனைபெயரில் எழுதி வந்துள்ள பலரின் உண்மையான பெயர் என்னெவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கலாம். சிலருக்கு அவர்கள் யாரென்பது தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் சொல்லலாமே.


**** வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கு பின்னூட்ட்டங்கள் மூலம் விடைகள் வந்துவிட்டன.

01. அகஸ்தியன்
02. அகிலன்
03. அசோகமித்திரன்
04. அம்பை
05. ஆதவன்
06. இந்திரா பார்த்தசாரதி
07. ஏ.கே.செட்டியார்
08. கல்கி
09. கல்யாண்ஜி
10. கண்ணதாசன்
11. கடுகு
12. கர்நாடகம்
13. கரிச்சான் குஞ்சு
14. காந்தன்
15. சாவி
16. சாண்டில்யன்
17. சிட்டி
18. சுபா
19. சுஜாதா
20. செம்பியன்
21. சோ
22. ஜெகச்சிற்பியன்
23. ஸ்ரீ வேணுகோபாலன்
24. ஜீவா
25. ஸ்டெல்லா புரூஸ்
26. தமிழ்வாணன்
27. தாமரை மணாளன்
28. துமிலன்
29. தேவன்
30. பசுவய்யா
31. பரணீதரன்
32. பரந்தாமன்
33. பாக்கியம் ராமஸ்வாமி
34. புதுமைப் பித்தன்
35. புஷ்பா தங்கதுரை
36. பூவண்ணன்
37. பொன் வண்ணன்
38. ஞானி
39. ரகமி
40. ராண்டார்கை
41. ராஜெஷ் குமார்
42. மகரம்
43. மதன்
44. மனுஷ்ய புத்திரன்
45. மாயாவி
46. மெரினா
47. மௌனி
48. லஷ்மி
49. நாடோடி
50. வல்லிக் கண்ணன்
51. வண்ணதாசன்
52. வாதூலன்
53. வாண்டு மாமா
54. வாலி
55. விடையவன்

விடைகளும், விடுபட்டவைகளும் வரவேற்கப்படுகின்றன.


- சிமுலேஷன்

Saturday, January 27, 2007

ஒடிசி குவிஸ் 2007 (2)

1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?)

2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருடங்கள் கழித்து, நோபல் சொசைட்டி தங்கப் பதக்கங்களை மீண்டும் வழங்கியது ஏன்? (கரையாத மனமும் உண்டோ?)

3. 1980ஆம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற 'நேஷனல் ஹாக்கி லீக்' போட்டிகளின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 110,000 கலந்துகொண்டு ஒரு புதிய சாதனை செய்தார்கள். அது என்ன? (அலை பாயுதே கண்ணா)

4. சென்னை ம்யூசிக் அகாடெமி வழங்கும் 'சங்கீதக் கலாநிதி' விருதினை 1946 மற்றும் 1967 ஆண்டுகளில், பெற்றவர்களிடையே உள்ள ஒற்றுமை என்ன? (ஹேப்பி பர்த் டே தியாகு)

5. ரே ஹாருன் என்னும் கார் பந்தய வீரர், 1911ஆம் ஆண்டு தனது காரில் ஒரு சிறிய மாற்றம் செய்த காரணத்தினால், பந்தயத்தில் முதலாவதாக வர முடிந்தது. அதன்பின் எல்லாக் கார்களிலும் ஏற்பட்ட அந்த மாற்றம்தான் என்ன? (1953ல் சிவாஜியுடன் பண்டரி பாய்)

- சிமுலேஷன்

ஒடிசி குவிஸ் 2007

நேற்றைய தினம் சென்னை ம்யூசிக் அகாடெமியில், "ஒடிசி குவிஸ்" நடை பெற்றது. 'ஒடிசி' சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த்கக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்டுதோறும, பெரிய குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்திப் பல பரிசுகளையும் வழங்குகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இந்திய ரூபாயாகும். சில மாதிரிக் கேள்விகள் இங்கே. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.



01. மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார்? இந்தப் படத்தின் சிறப்பு என்ன?


02. இந்தக் கொடியினை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றியவர் யார்?



03. இந்த விலங்கின் பெயர் என்ன? எந்த அமைப்ப, இந்த விலங்கினை தனது சின்னமாகக் (Logo) கொண்டுள்ளது?


04. இந்த வரைபடத்தில் உள்ள நாட்டிற்கும், நாம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அது என்ன?



05. இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும்


இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன?

- சிமுலேஷன்

Thursday, January 25, 2007

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து



பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


மாணிக்கவாசகரின் திருவாசகம்

பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்

(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)



இராகம்: பாகேஸ்ரீ
பாடியவர்: ஆதித்யா

Friday, January 05, 2007

பாட்டுக் கேட்கப் போனார்...படம் வரைந்து வந்தார்

இசை விழாக்களுக்குச் செல்லும் பலரும், கச்சேரிகளைக் கேட்பது மட்டுமின்றி, அரட்டை அடிப்பது, கேன்டீனில் ரவுண்டு கட்டுவது போன்ற இன்ன பிறவும் செய்வதுண்டு. ஆனால், ஆள்வார்ப்பேட்டை சீத்தம்மா காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தணிக்கை அதிகாரியும், வருமானவரி ஆலோசகருமான வி.சுப்பிரமணியன், புதுமையான பொழுதுபோக்கு ஒன்றினை வைத்துள்ளார்.

கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக்களை இரசித்துக் கொண்டே, இசைக் கலைஞர்களை வரைந்து தள்ளுகின்றார். கச்சேரி முடிவதற்குள்ளாகவே, வண்ணமும் அடித்து, முடிவில் அந்தந்த இசைக் கலைஞர்களிடம், தான் வரைந்த படத்தினைக் காண்பித்து ஆட்டோகிராஃபும் வாங்கி விடுகின்றார். இதனால் எல்லா இசைக் கலைஞர்களிடமும், இவருக்கு நன்கு பரிச்சயமுண்டு. இந்த வருட இசை விழாவில் இவர் வரைந்த சில படங்களை இங்கே காணலாம்.


01. ப்ரவசனக் கலைஞர் விசாகா ஹரி

02. ஓ.எஸ்.அருண் மற்றும் குழுவினர்

03a. மஹதி
03b. கர்னாடிகா சகோதரர்கள் சசிகிரண் & கணேஷ்

04. சாருலதா மணி
05. காயத்ரி கிரீஷ்

06. சரஸ்வதி வாக்கியேயக்காரா டிரஸ்ட் நிறுவனர் என்.வி.எஸ்

07. சங்கீதக் கலாநிதி டி.என்.கிருஷ்ணன்

08a. ஐஷ்வரியா வித்யா ரகுநாத்
08b. வி.சங்கர நாராயணன்

09. மதுரை சுந்தர்

10a. ஆர்.பாலசுப்ரமணியன்
10b. டி.கே.கோவிந்தராவ்

11. புல்லாங்குழல் என்.ரமணி மற்றும் குழுவினர்

12. சவிதா நரசிம்மன்

13. சுகுணா புருஷோத்தமன்


14. சிக்கில் குருசரண்

இவரது 'அனைவரையும் கவரும் ஹரிதாஸ் பஜன்' படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

- சிமுலேஷன்