Sunday, September 11, 2011

6961 - சுஜாதா - நூல் விமர்சனம்


இன்றைக்குச் சரியாக 50 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத்  தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோ, கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு.   இந்தக் கதையையும், கல்கி இதழில் வெளிவந்த "ரோஜா" என்ற கதையையும், தினமணிக் கதிரில் வெளிவந்த "ஜோதி" என்ற கதையையும் விசா பப்ளிகேஷன்ஸ் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார் இதனை.

ரசனையற்ற ராஜேஷிடன் பந்தம் ஏற்பட, சலிப்பூட்டும் மணவாழ்க்கையில் ஈடுபடும் விமலாவின் மனப்போராட்டத்தினை வருணித்து, அந்த மனப் போராட்டத்திற்கு ஆதாரமாக நடந்த ஒரு நிகழ்ச்சினையே கதைக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளார் சுஜாதா.  இந்த ஆதார நிகழ்ச்சியினை உற்றுக் கவனித்தால் அது, சுஜாதாவின் "அடிமைகள்" என்ற நாடகத்தில் ஏற்படும் முக்கிய சம்பவத்துடன் ஒத்திருப்பதனைக் கவனிக்கலாம்.  தமிழ்க் கதை படிக்கும் வாசகர்களுக்கு, வட இந்தியக் கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட கதை, ஒரு போதும் சோர்வை ஏற்படுத்தாமலும் அன்னியப்படுத்தாமலும் எழுதப்பட்டதில் சுஜாதாவின் திறமை நன்கு பளிச்சிடுகின்றது. 50களில் எழுதப்பட்டு கதை என்பதை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டே படித்தால், "அப்போதும், இப்போதும், எப்போதும் வாத்யார், வாத்யார்தான்", என்பதை வாய்விட்டுக் கூறிக் கொண்டேயிருக்கலாம்.

முன்பே கூறியது போல இதே தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற இரு கதைகள் "ரோஜா" மற்றும் :ஜோதி". ரோஜா கதையில் ஒரு அப்பாவிப் பெண் , அரசியல் வியாதியான மிருகத்திடம் பலியாகிறாள். பலிஆனது யார் (லட்சுமி)? பலி வாங்கியது யார் (துரை)? என்று முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர் கூறிவிட,  இப்போது கதையினை எப்படி நகார்த்திச் செல்லப் போகின்றார் என்பதுதான் வாசகர்களுக்கு விருந்து.

அடுத்து வரும் ஜோதியில் மீண்டுமொரு பெண் பலியாகின்றாள். இம்முறை குற்றவாளி யார் என்று புரிந்தாலூம் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.    நமக்கு மட்டுமல்ல. இன்ஸ்பெக்க்டருக்கும் கூடத்தான். க்ளைமேக்ஸை அறிய ஆவல் கொண்டு பக்கத்தை புரட்ட, அடுத்த கதை ஆரம்பித்து விட நாம் பல்பு வாங்க்குகின்றோம்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் மூன்றிலுமே உள்ள பொது அம்சம், அப்பாவிப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதுதான். அந்த்க் கால கட்டத்தில் இந்த வகைக் கதைகள் மூலம் சுஜாதா பரபரப்பாகப் பேசப்பட்டிருப்பார். Poetic Justice எனப்படும் 'கவித்துவாமான நீதி' வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தாலும், நடைமுறை வாழ்க்கையில்  அப்படி ஒன்றும் நல்லவர்கள்  எப்போதும் வாழ்ந்ததாகவும், கெட்டவர்கள் எப்போதும் வீழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லையே! எனவே நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு சாராருமே  வாழ்வதும், வீழ்வதும் சகஜமே என்ற நடைமுறை யதார்த்தினை உணர்த்துகின்றன இந்த மூன்று கதைகளுமே.

கதை:            6961
ஆசிரியர்:  சுஜாதா
பதிப்பு:         விசா பப்ளிகேஎஷன்ஸ், 1989-2004
பக்கங்கள்: 120
விலை:        Rs.52

- சிமுலேஷன்