Tuesday, April 11, 2006

ஊழிக்கூத்து



மகாகவி சுப்ரமணிய பாரதியின் "ஊழிக்கூத்து" என்ற தலைப்பில் அமைந்த "வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட" என்ற பாடல் எமக்குப் பிடித்த பாடலாகும், இந்தப் பாடலுக்கு எங்கள் அம்மா, சந்திரகௌன்ஸ் இராகத்தில் மெட்டமைத்துக் கொடுத்த பின்னர் வீட்டில் எல்லோரும் அதனைப் பாடிக் கொண்டேயிருப்போம். சகோதரிகள் எந்த இடத்தில் பாரதிப் பாடல் போட்டி நடை பெற்றாலும், கலந்து கொண்டு இந்தப் பாடலைப் பாடிப் பரிசுகளை வாங்கி வந்து விடுவார்கள்.

இந்தப் பாடலின் வரிகள் இங்கே.

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

இதனை ஒலி வடிவில் கேட்க இங்கே.




பாடல்: மகாகவி சுப்ரமணிய பாரதி
இசையமைப்பு: எனது அம்மா
பாடியவர்: எனது முதல் மகன் ஆதித்யா
பின்னணி: எனது இரண்டாம் மகன் அநிருத்
இராகம்: சந்திரகௌன்ஸ்
தாளம்: ரூபகம்