Tuesday, November 24, 2009

மறு ஒளிபரப்பு

0 comments

ராகவனுக்கு படுக்க மணி பதினொன்று ஆகி விட்டது. மைதிலி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். தண்ணி குடித்து விட்டுப் படுக்கும் சமயம் செல் போன் அடித்தது. இந்த அகாலத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார். விஜியிடமிருந்துதான் போன்.

"என்னம்மா? இந்த நேரத்திலே?"

"அப்பா; அம்மாவை ஒரு நிமிஷம் எழுப்புங்கோ."

"எதுக்கும்மா?"

"அப்ப்பா. கொஞ்சம் எழுப்புங்கோளேன்."

"மைதிலி; பாரு விஜி போன் பண்ணறா. எதோ ஒங்கிட்ட சொல்லணுமாம்"

"என்னடி விஜி; என்ன விஷயம்? எதுக்குப் போன் பண்னே?"

"அம்மா டி.வியை ஆன் பண்ணேன். தூர்தர்ஷ்ன் சானல் போடு"

"எதுக்கு?..."

"என்னடி இது? என்னோட டான்ஸ் வருது?..."

"ஆமாம்மா. இந்தக் குரங்கு டி.வி போட்டாத்தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிச்சா. சேனல் மாத்திண்டே வரும்போது, திடீர்னு, "பாட்டி டான்ஸ், பாட்டி டான்ஸ்ன்னு" கத்த ஆரம்பிச்சுட்டா. சரின்னு உடனே ஒனக்குப் போன் பண்ணிச் சொல்லலாமேன்னுதான் பண்ணினேன்"

சமீபத்தில் எழுபதுகளில் தூர்தர்ஷனில் ஆடிய தனது டான்ஸை பார்த்துவிட்டு படுத்த மைதிலிக்குத் தூக்கம் வர வெகு நேரமாயிற்று.

- சிமுலேஷன்

வெக்கிலா...வெக்கிலா...கொஞ்சம் சிரி

2 comments

அந்தக் காலத்தில் உடம்பு ஜுரமாக இருந்தால், டாக்டர் சாமிக்கண்ணுவிடம் போவது பழக்கம். அவரிடம் போய் உட்கார்ந்தவுடன், "வெளிக்கி எப்படிப் போச்சு?" என்றெல்லாம் விபரமாக கேட்டுவிட்டு, மெஜரால் போன்ற மாத்திரைகள் கொடுப்பார். அதனைப் பொடி செய்து தேனில் குழைத்துத் தருவார் அம்மா. ஒரிரு நாட்களில் ஜுரம் சரியாகிவிடும். அதுவரை சாத்துக்குடி, ப்ரெட் என்று சற்று விசேஷக் கவனிப்பு நடக்கும். அதனால அப்பப்ப ஜுரம் வந்தால் கூட நன்றாக இருக்குமே என்று ஒரு நப்பாசை வரும்.

சாமிக்கண்ணு டாக்டரின் பையன் ஜெயசீலனுக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயசுதான். ஒரு முறை டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கும்போது அவருக்கு இரண்டாவதா ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தோம். குழந்தையைக் காண எங்களுக்கு ரொம்ப ஆர்வம். ஜெயசீலனிடம், "தங்கச்சி பேர் என்ன?", என்று கேட்க, "வெக்கிலா" என்று சொன்னான். வித்தியாசமான பேராக இருக்கே என்று நினைத்த போது, என் அக்கா சொன்னாள். அவங்க எல்லாம் கிரிஸ்டியன்ஸ். இந்த மாதிரியெல்லாம் பேர் வெப்பாங்க என்றாள். நாங்களும் புரிந்து கொண்டு, அந்தப் பச்சைக் குழந்தை அருகே போய், "வெக்கிலா, வெக்கிலா, இங்க பாரு. வெக்கிலா சிரி" என்றெல்லாம் கொஞ்ச ஆரம்பித்தோம்.

அப்போது டாக்டரின் மனைவி வந்தார். அவர் சொன்னார், "அவளுக்கு இன்னமும் பேர் வெக்கலை. அடுத்த மாசம்தான் பேர் வெப்போம்." என்று. அப்போதுதான் உறைத்தது, அந்தப் பையன் தங்கச்சிக்குப் பேர் வெக்கிலை என்று சொல்லியிருக்கான் என்று.

- சிமுலேஷன்

Sunday, November 22, 2009

எம்.எஸ்.உதயமூர்த்தியும் தம்பிதுரையும்

0 comments

80கள். சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. மேதினக் கூட்டம். சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களும். எம்.எஸ்.உதயமூர்த்தி தனது உரையில் வழக்கம் போல் வாழ்க்கையின் வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை எப்படித் தேவை என்றும், எப்படி மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கம் தரும் உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

அடுத்து பேச வந்த தம்பிதுரை அவர்கள், "ஐயா சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். எல்லாத்துக்கும் மேல தேவையானது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நம்பணும். எனக்கு அந்த அதிர்ஷடம் இருந்தது. அதனாலதான் எங்கியோ இருந்த என்னை, இந்தியாவின் நாலாவது குடிமகனாக, எம்.ஜி.ஆர் உக்காத்தி வைச்சார்.", என்றார்.

- சிமுலேஷன்

ஆதித்யா-அனிருத்

0 comments

ஆதித்யா- அம்மா, இவனைப் பாருங்கோ! என் கண்ணைக் குத்திட்டான்.

அம்மா - ஏண்டா அனிருத், அவன் கண்ணைக் குத்தினே?

அனிருத் - இல்ல அம்மா, கன்னத்லே அறையத்தான் போனேன்; நகந்துன்ட்டான்; அதனாலதான் கண்ணுலெ விரல் பட்டுருத்து.

--------------
அம்மா - அனிருத், அவன் உனக்கு அண்ணா. இனி மேல பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. அண்ணான்னுதான் கூப்பிடணும், தெரியறதா?

அனிருத் - சரிம்மா.

ஆதித்யாவைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய், "யேய். இனிமே நீயும் என்னைத் தம்பின்னுதான் கூப்பிடணும் தெரியுமா?

Saturday, November 21, 2009

பதிவர்களுக்கு மார்க் போட்டது யாரு?

0 comments

க்ளாஸ்லே மொத்தம் நாப்பது பேரு! எல்லாரோட மார்க்கும் போட்டுருக்காங்க.

நம்மளோட மதிப்பெண்கள்

ஆங்கிலம் - 5
தமிழ் - 3
கணக்குக் - 0
விஞ்ஞானம் - 4
வரலாறு - 5
புவியியல் - 2
வணிகம் - 0
கணினி - 0
விளையாட்டு - 0

மொத்த மதிபெண்கள் - 19

ஒன்பது பேருக்கு மேல 54 மார்க் வாங்கி முதலிடம் பிடிக்கிறாங்க. ஆனா பத்து பேருக்கும் மேல ஒத்த இலக்க மதிபெண்கள்தான்தான்.

உங்களோட மார்க்கையும் பார்க்கணுமா? இங்கே போய்ப் பாருங்க.

http://spreadsheets.google.com/pub?key=poYMG16Cp6GAN3WCTwl72TQ&output=html&gid=0&single=true

Thursday, November 19, 2009

சென்னையிலே இந்த இடம் எங்கே இருக்கு?

6 comments


Saturday, October 24, 2009

அக்கறை-100

9 comments

தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரபலமான "அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும்" வடிவமைத்தவரும், குமுதம் "அரசு" பதில்கள் தருபவரில் ஒருவருமான ஜ.ரா.சுந்தரேசன் என்ற பாக்யம் ராமஸ்வாமி "அக்கறை" என்ற குழுவினை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை, தனது அலுவலகத்தில் ஒத்த கருத்துடைய பத்திரிகையாளர், இதழாளர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆன்மிக அன்பர்கள், சமூக சேவர்கர்கள் என பல்தரப்பட்ட மனிதர்களும் அளவளாவ ஏற்பாடு செய்துள்ளார். பாக்யம் ராமஸ்வாமியின் புதல்வர் (லோகேஷ் (?) இந்தக் கூட்டங்கள் அனைத்திற்கும் உறுதுணையாக உள்ளார்.

இந்தக் குழுவில் உள்ளவர்களில் சிலர், எழுத்தாளர்கள் ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், அறந்தை மணியன், நகுபோலியன், இனியவன், லேனா தமிழ் வாணன், பி.எஸ்.ரங்கநாதன் (கடுகு-அகஸ்தியன்), திருப்பூர் கிருஷ்ணன், வாதூலன், தூர்தர்ஷன் நடராஜன், மானஸா (எஸ்.சந்திரமௌலி), விஸ்வபாலா (பாலா விஸ்வநாதன்), காந்தலக்ஷ்மி சந்திரமௌலி, சியாமளா சுவாமிநாதன், மெலட்டூர் நடராஜன், இசைக்கலைஞர்கள் கௌசல்யா சிவக்குமார், நகைச்சுவை நடிகர் எஸ்,வி.சேகர், நாடக நடிகர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி, பம்பாய் கண்ணன், திரைப்படத் தயாரிப்பாளர் கலைமாமணி எஸ்.எம்.உமர், மக்கள் தொடர்பு ஈ.வெ.ரா.மோகன் ஆகியோர்

நண்பர் மெலட்டூர் நடராஜன் அவர்களது அறிமுகத்தால் இந்தக் குழுவில் நானும் ஒரு அங்கமானேன். கூட்டங்களில் குழுவில் உள்ள அனைவரும் எந்தத் தலைப்பிலும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.

இந்த அக்கறை அமைப்பின் நூறாவது கூட்டமும் எட்டாவது ஆண்டு விழாவும், நேற்றைய தினம் (24.10.2009) காஸ்மாபோலிட்டன் க்ளப் பல்லவா ஹாலில் நடந்தது. பல் வேறு சுவையான நிகச்சிகள் நடைபெற்றன.

மங்களகரமான கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சியை துவக்கிய மாஸ்டர் "அஜீத்(?)"

"திரும்பிப் பார்க்கிறோம்" என்ற தலைப்பில் அக்கறையின் கடந்தகால கூட்டங்களை அசை போடுகிறார் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்யம் ராமஸ்வாமி)

நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவனும் திரும்பிப் பார்க்கின்றார்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய "செஞ்சுரி அடியுங்க" வினாடி வினா

"தமிழ்த் திரை - 100" என்ற தலைப்பிலே சுவையான வினாடி வினா நடத்திய அறந்தை மணியன்.

"தமிழ்த் திரை - 100" வினாடி வினாவில் பங்கு பெற்ற கூட்டத்தினர்

ஜி.எஸ்.சுப்பிரமணியன் நடத்திய மற்றுமொரு வேடிக்கை விளையாட்டு

பாக்யம் ராமஸ்வாமி எழுதிய "ஒரு கணவன்-ஒரு மனைவி -ஒருமுதுகு" என்ற நகைச்சுவை நாடகத்தை நடித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியவர்கள் குருகுலம் எம்.பி.மூர்த்தி குழுவினர்.

எந்த ஒரு கூட்டத்தையும் காலத்தே முடிக்க அனவைரையும் பழக்கி, விழாவினைச் சுவையாகவும், விறுவிறுப்பாகவும் நடத்தி ஒரு மனதாக அனைவரது பாராட்டுதல்களையும் பெற்ற ராணி மைந்தன்

அக்கறை நண்பர்களுக்கு அளிக்கப்பட்ட அன்புப் பரிசு

விழாவின் சிறப்பு அம்சமான அக்கறை நண்பர்களின் முகவரி கையேடு.

ஒவ்வொரு உறுப்பினர்களின் புனை பெயர், ஆர்வம், முகவரி முதலான விவரங்கள நேர்த்தியாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதற்கான பாராட்டுதல்கள மீண்டும் பெறுபவர் ராணி மைந்தன்.

- சிமுலேஷன்

Wednesday, October 21, 2009

முத்திரை பதித்த தமிழர்கள்

3 comments












































Saturday, October 17, 2009

சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன்

0 comments

கர்நாடக இசையை மக்கள் இசை ஆக்கிய சங்கீத மேதையின் அரிய சரித்திரம்



திரை இசையை படைத்த இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரைப் பற்றி, "திரை இசை அலைகள்" என்ற ஒரு முழுமையான படைப்பைத் தந்த கலைமாமணி வாமனன் எழுதிய இன்னமொரு சரித்திரப் புத்தகம் இது. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற இறவாத படங்களுக்கு சிறந்த முறையிலே இசை அமைத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களது சரித்திரத்தினை 300 பக்கக்களில் சுவையாகச் சொல்லியிருக்கின்றார் வாமனன்.

ராமநாதன் அவர்களது குடும்பத்தில் அவருடைய அண்ணா சுந்தர பாகவதர் எப்படி தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டுவர பாடுபடுகின்றார் என்றும் எப்படி இந்தச் சகோதரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை அழகாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் விவரிகின்றார் வாமனன்.

டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பாடகர்களின் திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்தவர் ஜி.ராமநாதந்தான் என்பதை விறுவிறுப்போடு எழுதிருக்கின்றார்.

1940 ஒல் துவங்கிய ராமநாதனது திரையிச வாழ்க்கையில் கிட்டத்தட்ட 85 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை:-
  • ஆர்ய மாலா
  • சிவகவி
  • ஹரிதாஸ்
  • ஜகதலப்ரதாபன்
  • ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
  • மந்திரி குமாரி
  • தூக்குத் தூக்கி
  • நான் பெற்ற செல்வம்
  • மதுரை வீரன்
  • அம்பிகாபதி
  • ஆரவல்லி
  • வணங்காமுடி
  • உத்தமபுத்திரன்
  • காதவராயன்
  • சாரங்கதாரா
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • கப்பலோட்டிய தமிழன்
  • அரசிளங்குமரி
  • பட்டினத்தார்
இந்தப் புத்தகத்திலிருந்து கிடைக்கபெற்ற சில சுவையான துக்கடாக்கள் (Trivia)

  • தியாகராஜ பாகவதர் நடித்துப் புகழ் பெற்ற "சிவகவி" என்ற திரைப்படத்தின் கதையினை எழுதியவர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

  • அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில் ஜி.ராமனாதன் அமைத்த அழகான பாடல் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்). ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது. செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம். ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ்பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும்.

  • ஒரு குறிப்பிட்ட பாடல், படத்தின் உச்சக்கட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் இழுவை என்று யாரோ கூறிவிட, படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் பாடலைக் கத்தரித்து விடலாம் என்று எண்ணத் தொடங்கினார். இசை அமைப்பாளரான ராமநாதனுக்கு தூக்கிவாரிப்போட்டதாம். அவர் மிகுந்த உற்சாகத்துடன் இசை அமைத்த் பாடல் அது. "படம் வெளியானதும் முதல் நாள் மட்டும் இந்தப் பாட்டு இருக்கட்டும். மக்களின் ரசனையைப் பார்த்துவிட்டு, பாடல் எடுபடவில்லை என்றால் அதை நீக்கி விடுவோம்" என்று சுந்தரத்திடம் பாடலுக்கு ஒரு நாள் வாய்தா வாங்கினார் ராமநாதன். படம் வெளியாகி பார்த்துவிட்டுச் சென்ற ரசிகர்கள் அனைவரும் முணுமுணுத்துக் கொண்டே சென்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மந்திரி குமாரி". பாடல் "வாராய்...நீ வாராய்.. போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய்" திருச்சி லோகனாதனின் அருமையான் குரலிலே வந்த அந்தப் பாடல் கத்திரியிட்மிருந்து மயிரிழையில் தப்பிய ஒரு படைப்பு.


  • கைரோ ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு சிறைந்த நடிகருக்கான் பதக்கம் கிடைத்ததென்றால், சிறந்த இசை அமைப்பாளர்ருக்கான விருது ஜி.ராமநாதனுக்கு வழங்கப்பட்டது (படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்). எகிப்து அதிபர் நாஸர் இந்தியா வந்த போது, ராமநாதன் அவர்களைப் பாராட்டும் வகையில், ஒரு வெள்ளி வீணையை அளித்து மகிழந்தாராம்.

  • சிவாஜி. எம்.ஜி.ஆர் போல பாடகர்களில் அந்தக் காலகட்டத்தில் புகழ் அடைந்தவர்கள் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். இந்த இருவரின் திரையிசை வாழக்கைக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ஜி.ராமநாதன் அவர்களே.

  • ராமநாதனின் மகள் சாயிதேவியின் மகள் உமாமகேஸ்வரியை மணந்தவர் நடிகர் எஸ்.வி.சேகர்.

  • இந்தப் புததகத்தில் ராமநாதன் அவர்களது வாழ்க்கையை மட்டுமின்றி, அவர்தம் சம்பந்தப்பட்ட பலரது வாழ்க்கைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார். உதாரணம் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பெரிதும் அடிபட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர். இவை தவிர பல அரிய அந்தக் காலத்துப் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

புத்தக ஆசிரியர்: வாமனன்
பதிப்பு: மணிவாசகர் பதிப்பகம், மதுரை
வெளியீடு: 2006
விலை: Rs.100.00

Thursday, October 15, 2009

சிமுலேஷன் கவிதைகள்

0 comments

சிமுலேஷன் கவிதைகள்

வசரமாய் ஆட்டோவில் பறந்தாலும்,
படகுக் காரில் பவனி வந்தாலும் பாதியில் நிறுத்தித் துப்பு.
பன்றிக் காய்ச்சல் பரப்பு.
-----0-----

நாலு படமும் நாற்பது நாள் ஓடியது;
நடிகர் பொழப்பு நாறிப் போச்சு;
பாலபிஷேகம், பீரபிஷேகம்.
-----0-----

“‘கேக்கை எடுத்து முகத்தில் அடிப்பது கேவலமா இருக்கு!
ஆசிட் முட்டை அடித்து விளையாடலாமா?” கேட்டது,
சீரியல் பார்க்கும் சித்தியின் பேத்தி.
-----0-----

ஜாமூன், ஜாங்கிரி,
வறுவல், பொரியல், துவையல்.
எச்சில் இலைகள்.
-----0-----

நில்,
கவனி,
பிச்சை போடு,
செல்.
-----0-----

“கடை விரித்தேன்;
கொள்வாரில்லை”
விளம்பரம் செய்தாயா?
-----0-----

ழ்துளைக் கிணறுகள் வெட்ட,
அதில் விழும் குழந்தைகளை மீட்க
அமைச்சகம் ஒன்று அமைப்போமா?
-----0-----
றிவியலுக்கு ஒரு முகம்
ஆன்மீகத்திற்கு ஒரு முகம்
அனானியாய் எழுத ஒரு முகம்
குஜாலாய் எழுத ஒரு முகம்
கும்மியடிக்க ஒரு முகம்
அலுப்பாயிருக்குதமிழ் வலையுலகம்.
-----0-----
- சிமுலேஷன்

Tuesday, September 22, 2009

எங்க வீட்டு கொலு

12 comments


எங்க வீட்டு கொலு










Saturday, September 12, 2009

ஸ்டண்ட் மாஸ்டரிடம் கற்றுக்கொண்ட சங்கீதம்

0 comments

1934 ஆம் வருடம். "ஸ்ரீநிவாச கல்யாணம்" என்ற திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. படப்பிடிப்பும் நடக்கும்போதே, மரத்தடியில் ஆர்கெஸ்ட்ராக கலைஞர்கள் உட்கார்ந்து இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். படப்பிடிப்பு நல்ல முறையில் நடை பெற்றாலும், பாடலில் இடையிலோ, இறுதியிலோ ஏதேனும் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும், படப்பிடிப்பை மீண்டும் முதல் சீனிலிருந்து துவங்க வேண்டும். விஷ்ணுவாக முக்கியப் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பி.எஸ்.ஸ்ரீநிவாச ராவ் என்பவரே இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர். இசைக் குழுவை சேர்ந்த எவரோ ஒருவர் ஒரு சிறிய தப்புச் செய்துவிட, இசைப் புலமை கொண்ட ஸ்ரீநிவாச ராவின் காதில், அந்த அபஸ்வரம் ஒலித்து விடுகின்றது. உடனே அவர், " கட்" என்று சொல்கின்றார். ஆனால், திரைப்பட இயக்குநரோ இதனைக் கவனிக்காமல், படத்தை எடுத்து கொண்டிருக்கின்றார். எடிட்டர் இறுதியில் என்ன செய்தாரென்று புரியவில்லை. மிண்ட் சாலையில் அமைந்த "க்ரௌன்" தியேட்டரில் ஸ்ரீநிவாச கல்யாணத்தின் முதல் காட்சி. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் விழுந்து, விழுந்து சிரிக்கின்றார்கள். ஆமாம். தமிழில் பாடிக்கொண்டிருக்கும் விஷ்ணு திடீரென்று ஆங்கிலத்தில், "கட்" என்று சொன்னால் எப்படியிருக்கும்? வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசா சினிடோன் ஸ்டுடியோவிற்கு தகவல் உடனே பறக்கின்றது. காற்றைவிட வேகமாகச் சென்ற டெக்னிசியன் ஒருவர் சம்பந்தப்பட்ட ஃபிலிம் ரீலை வெட்டி எறிகின்றார். மீண்டும் வெளியான இந்தப் படத்தில், இந்த இடத்தில் இப்படி ஒரு இடைவெளி ஏற்பட்டதை அந்தக் காலத்தில் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை.

"மின்னல் கொடி" 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரீநிவாசராவுடன் (போலீஸ் அதிகாரி), கே. டி. ருக்மணி (மின்னல் கொடி, மோகினி), பாட்சா (வில்லன்), கொக்கோ (காமெடி நண்பன்) ஆகியோர் நடித்தனர். மோகினி என்ற இளம்பெண் மின்னல் கொடி எனும் புரட்சிக்காரன் சாகும் தருவாயில் தன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்க, முகமூடி ஆணுடை தரித்து தொடர்ந்து மின்னல் கொடியாகி எதிரிகளை அழிக்கிறாள். தீயவர் அழிந்து காதலர் இணைவதோடு படம் சுபமே முடிகிறது.

பஸ்மாசூர மோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்."பாக்ய லீலா" 1938 ஆம் ஆண்டு மீண்டும் கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த வெளிவந்த இன்னொரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்திலும் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எஸ்.ஆர்.பத்மா மற்றும் கே.டி.ருக்மிணி ஆகியோருடன் கதாநாயகனாய் நடித்தார். "ஜெய பாரதி" 1940 ஆம் ஆண்டு ராஜா யாக்னிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ்.ஸ்ரீநிவாச ராவ், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். "நண்பன்" 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், டி. எஸ். பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அவர் இயக்கிய மற்றொரு படம் ஷாந்தா (1942). "வீர வனிதா" 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் பட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஜீவ ஜோதி" 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கே. முல்தணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாச ராவ் இயக்குநர், இசை வித்தகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த ஸ்டண்ட் கலைஞராகவும் இருந்து ஒரு பன்முககக் கலைஞராக விளங்கினார். துக்ளக் இதழில் தொடர் கட்டுரை எழுதிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள், ஸ்ரீநிவாச ராவின் ஸ்டண்ட் படங்கள் குறித்து விபரமாக் எழுதி இருந்ததாக ஞாபகம். என்னென்ன படங்கள் என்று நினவில்லை.

மெல்லிசையில் புலமை பெற்ற ஸ்ரீநிவாச ராவ், எம்.எஸ் அவர்களுக்குப் பல் வேறு ஹிந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லிக் கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு சூர்தாஸ் பஜன்ஸ்க்கும் இசையமைத்துள்ளார். இவருடைய பஜனனகளில் யாரும் கேள்விப்படாத பல புதுமையான மற்றும் இனிமையான் ராகங்களைப் பயன்படுத்தினார். உதாரணமாக, பட்தீப், கௌன்ஸி கானடா, பஞ்சம ராகேஸ்ரீ, மிஸ்ர பத்மாவதி ஸாரங், ஜயந்த மல்ஹார், மிஸ்ர ஜோகியா, திலக் காமாஜ் போன்ற இந்த இனிமயான ராகங்களில் அமைந்த பாடல்களின் அழகினை வார்த்தைளில் விவரிக்க முடியாது.

தனது இறுதி நாட்களில், மயிலை பாரதீய வித்யா பவனில் ஹிந்துஸ்தானி பஜன்ஸ் சொல்லிக் கொடுத்து வந்தார். டாக்டர். மாதங்கி ராமக்ருஷணன், தங்கம் அய்யா துரை, ஒய்.ஜி.சுந்தர் (தபலா) ஆகியோர் இவரிடம் பயின்றும், இசைத்தும் வந்தனர். சமீபத்தில் 1988-90 களில் நானும் இங்கே ஒரு உறுப்பினன். அப்போது ஸ்ரீநிவாச ராவ் அவர்களின் அருமை, பெருமையெல்லாம் தெரியவில்லை. வெகு நாட்களுக்கும் முன்பு, 90கள் என்று நினைக்கின்றேன் ஹிந்து நாளிதழில் அவரை பற்றி விரிவான் கட்டுரை ஒன்று வந்திருந்தது.அதையும் பத்திரப்படுத்தாமல் விட்டேன். சில நாட்களுக்கும் முன்பு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களின் புத்தகம் படிக்கும்போது, ஸ்ரீநிவாச ராவ் அவர்களைப் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று தோன்றியதால் எழுந்த பதிவு இது. அவரை பற்றி மேலதிக விபரங்கள் ராண்டார் கை அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவரை எப்போதாவது பார்த்தால் கேட்க எண்ணியுள்ளேன். அது வரை, வலைப் பதிவர்கள் யாரேனும் மேலதிக விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் தெரிந்தால் / இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மேலும் 88-90களில் என்னுடன் பாரதீய வித்யாபவனில் ஸ்ரீநிவாச ராவ் அவர்களிடம் பஜன் கற்றுக் கொண்ட அலம்னிகளும் தங்களிடம் ஏதேனும் ஒலிப் பேழை இருந்து தகவல் தெரிவித்தால் தன்யனாவேன்.

ஸ்ரீநிவாச ராவ் அவர்கள் இசையமைத்த 'பட்தீப்' ராகத்தில் அமைந்த பஸ்வேஸ்வரவசன் அவர்களின் பஜன் ஒன்றினை நான் பாடி தரவேற்றம் செய்ய எண்ணியும், ராண்டர்கையையும், ஒய்.ஜி.சுந்தர் அவர்களையும் தொடர்பு கொண்டு ஸ்ரீநிவாசராவ் அவர்களது புகைப் படத்தையும் பெற்று இந்த இடுகையை முடிக்க வேண்டுமென்று வெகுநாட்களாக இந்த இடுகை முற்றுப் பெறாமலே இருந்தது. இரண்டு நோக்கங்களும் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்ததாலும் இதற்கு மேலும் தள்ளிப் போடக்கூடாதென்றெண்ணியதாலும் இன்று இந்த இடுகையை முடிவு செய்து வெளியிடுகின்றேன்.

புகைப்படமும், ஒலிப்பதிவும் கிடைக்கும்போது அவற்றைப் பின்னொரு நாளில் வலையேற்றுகின்றேன்.

- சிமுலேஷன்

Monday, August 03, 2009

கலக்கலா ஒரு கலாச்சாரம்

7 comments

பெர்க்ளே யூனிவர்சிட்டியின் அந்த மையமண்டபத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த கூட்டத்தில் கபிலனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமாயிருக்கவில்லை வீழிநாதனுக்கு. கபிலனை உணவகத்திகு அழைத்து சென்றார்.

“என்ன கபிலன். கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சென்னை போகப்போறதா...”
“ஆமா ஐயா. என்னுடைய ஆராய்ச்சியை முடிச்சுட்டேன். அடுத்து என்ன பண்ணப் போறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.”

“ஏன். உங்கள மாதிரி ஆட்களை எங்களோட கலிபோர்னியா யூனிவர்சிட்டிலே கொத்திக் கொண்டு போய்விட மாட்டோமா? இன்னமும் ரெண்டு நாள்லே உங்களோட பேசறேன் அது சம்பந்தமா. நீங்க இங்க இருந்த அஞ்சு வருஷதுல “தமிழர் பண்பாடு” பற்றி ஆராய்ச்சி பண்ணினது பெரிய விஷயம் இல்லை. ஆனா அத பத்தி சமயம் வரும்போதெல்லாம் இங்க இருக்கற மக்கள்ளுக்கெல்லாம் எடுத்துச் சொன்னீங்க பாருங்க. அது பெரிய விஷயம். அதுவும் சான்டாக்ளரால மட்டும் கிட்டத்தட்ட எழுவது நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கீங்க. எப்படி முடிஞ்சுது இதெல்லாம்?”

“ஐயா! உன்மையிலேயே நான் பண்ணின ஆராய்ச்சி பத்தி எல்லோரோடையும் பகிர்ந்துக்க்ணும்னு ஒரு ஆர்வம்தான். இந்த ஆராய்ச்சியிலே நான் படிச்சுத் தெரிஞ்சுகிட்டதைவிட, பட்டுத் தெரிஞ்சுகிட்டதுதான் அதிகம்.”

“அப்படியா! கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க கபிலன்.”

“ஐயா, என்னோட இந்த ஆராய்ச்சிக்கு ரொம்ம்பவுமே உதவியாய் இருந்ததுன்னா, அது என் குடும்பம்தான். தமிழர் பண்பாடு அப்படின்னு சொன்னா, அதுக்கு உதாரணமா எங்க குடும்பத்தப்பத்தி சொல்லலாம். அதாவது, “விருந்தோம்பல்”, “அடுத்தவங்களுக்கு உதவி செய்யுறது”, “சுற்றுபுறத்தை சுத்தமா வச்சிக்கிறது” அப்படின்னு பல உதாரணாம் சொல்லலாம்.
எங்க வீட்ல எந்த நேரத்துலே எந்த உறவுக்காரங்க வந்தாலும், சாப்பிடாமப் போக முடியாது. எங்கப்பா விட்டாலும் எங்கம்மா விட மாட்டாங்க. அதே மாதிரி, எங்க பாட்டி, பள்ளிக் கூடத்துக்குப் போனதில்லையே ஒழிய, எல்லா இதிகாசமும், இலக்கியமும் படிச்சவங்க. இலக்கியத்திலே பாதி எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அவங்கதான். ஒவ்வொரு வாரமும், சிவ்வயும், வெள்ளியும், அவங்க பூஜை பண்ணிட்டு, எனக்கும் என் தங்கைக்கும், எங்க சித்தப்பா பசங்களுக்கும் இதெல்லாம் அழகாச் சொல்லிக் கொடுப்பாங்க. என்னோட தங்கை பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டின்னு எந்தப் போட்டியாயிருந்தாலும் கலந்துகிட்டு பரிசு வாங்கிட்டு வத்துடுவா. அவ்வளவு ஆர்வம். எங்கப்பா வியாபரத்திலே நல்லா சம்பாதிகிறார். ஆனா ஊதரித்தனமா செலவு செய்யறது பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், சம்பாதிக்கிறதுல ஒரு பங்கை தனம், தர்மத்துக்கும் செலவு பண்றதுக்குத் தயங்கவே மாட்டார்.”

“கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கபிலன். நானும் அடுத்த மாசம் சென்னக்கு வருவேன். வந்தால் உங்களைக் கண்டிப்பா வந்து சந்திப்பேன். வாழ்த்துக்கள்.”

காத்தே பசிபிக் விமானம் சென்னையத் தொட்டபோது அதிகாலை மணி 2. விமான நிலையத்திற்கு யாரையும் வரவேண்டாமென்று சொன்னத்தும் நல்லதாகப்பட்டது கபிலனுக்கு. கஸ்டம்ஸ் சோதனைகள் முடிந்து வீட்டிற்கும் நுழைய காலை மணி ஆறாகி விட்டது.

“என்ன அப்பா. ஒரே அமக்களமா இருக்கு. அமெரிக்காவிலேர்ந்து வர்றது பெரிய விஷயமா?”

“கபிலா. இது உனக்காக மட்டுமில்லை. நம்ம ரித்திஷுக்குகாகவும் தான். அவனுக்கு இன்னிக்குப் பர்த்டே.”

“ஆஹா ரித்திஷ். வா...வா... பிறந்தநாள வாழ்த்திக்கள். எப்படிடா படிக்கிறே?”

“மாமா. அசையாதே. சுட்டுறுவேன்.”

“டேய் . என்னடா இது நிஜத் துப்பாக்கி மாதிரியே இருக்கு?”

“மாமா. இது தாத்தா எனக்கு நேத்திக்கு வாங்கிக் கொடுத்தாங்க.ஐநூறு ரூபாய். எனக்கு இன்னிக்கி பர்த்டே. என்னோட ஃப்ரண்ட்ஸுக்கெல்லாம் சாயங்காலம் பார்ட்டி. அவங்களுக்க்கெல்லாம் ரிடர்ன் கிஃப்ட் கொடுக்கணும். எதுனாச்சும் வாங்கிட்டு வந்திருக்கியா?”

“கொஞ்ச நேரம் பொறு. குளிச்சிட்டு வந்து கிஃப்டெல்லாம் எடுத்துத் தர்ரேன்.”

“கபிலா வாடா. எப்டிடா கண்ணு இருக்கே. பாத்து எத்தினி நாளாச்சு. குளிச்சிட்டு வந்து சாப்பிடு. குட்டித் தூக்கப் போடு. அப்புறமா கடைக்குப் போய், மெழுகுவர்த்தி. கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா, எல்லாம் வாங்கிட்டு வந்திடு”

“யாருக்கும்மா”

“எல்லாம் ரித்தீஷோட ஃப்ரண்ட்ஸுக்குத்தான். இன்னிக்கி சாயந்தரம் பர்த்டே பார்ட்டி இல்லியா?”
“கேக்கு, பர்கர், பீஸா, கோக்கு, சமோசா இதெல்லாம் ஒரே நேரதிலே பசங்க சாப்பிட்டா என்னவாகும்”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடா. அவுங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும்”

“சரி. சரி. கோயிலுக்குப் போயிட்டு வந்தாச்சா?”

“இல்லைப்பா. இன்னம் இல்லை; இன்னிக்கி டீ.வியிலே நடிகை தயனநாரா பேசுனாங்க. அவங்களோட யார் வேணும்னாலும் பேசலாம். தாத்தா போன் போட்டுப் பேசிச்சு. கொஞ்ச நேரத்திலே ஒளிபரப்பாகப் போவுது.”

“அப்படியா! தாத்தா என்னம்மா பேசினார்?”

““என்ன பேசறது. அவருக்குக் கையே ஓடலை. லைன் கெடச்சதே பெரிய விஷயம். ஒங்களோட பேசணுன்னு ரொம்ப நாளா நெனைச்சேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” அப்படீன்னு சொல்லிட்டுப் போனை டொக்குன்னு வெச்சிட்டார்.”

“அப்படீன்னா சாயந்திரம் கோயிலுக்குப் போறோமா?”

“சாமி எங்கப்பா போகப் போகுது? அடுத்த வருஷம் பாத்துக்கலாம். பர்த்டே பார்ட்டிக்கு எற்பாடு பண்ணனும்லே.”

“அண்ணா, எப்படிண்ணா இருக்கே. நல்ல வேளை நீ இன்னிக்கி வந்தே. நாளைக்கு என்னை கார்லே எக்மோர் கொண்டு போய் விடறியா? அழகி போட்டி, செமி ஃபைனல்லே ஜெயிச்சுட்டேன். அடுத்தது ஃபைனல்ஸ்தான்.”

“என்னப்பா இது? என்னமோ அழகிப் போட்டி அது இதுங்றா”

“ஆமாம்ப்பா. இப்பவே மிஸ்.அண்ணாநகர் ஆகிட்டா. அடுத்து ஜெயிச்சா, மிஸ்.சென்னைதான். அப்புறம் நமக்கு எல்லாம் பெருமைதானே.”

“சரி.சரி. பாட்டி எங்கே? பாட்டியைப் பாக்கவேயில்லையே.”

“பாட்டி பாரு டீ.வி. ரூமுக்குள்ளே இருக்கு”

என்னது டீ.வி ரூமா? என்ன பாட்டி, ரொம்ப வேலையோ?

“ஆமாண்டா. நேத்திகே, “மொட்டுக்கள்” பாக்கலை. கரெக்டா எழு மணிக்கு உங்க சித்தப்பா வந்து கழுத்தறுத்துட்டான். நல்ல வேளை. மறுநாள் காலைலே மறு ஒளிபரப்புறான். “மொட்டுக்கள்” ரொம்ப சூப்பராப் போவுது. ஒரே சஸ்பென்ஸ். ராஜாவைக் கொலை பண்ணினது யாருன்னே தெரியலை. அவன் பொண்டாட்டி சந்தியா? இல்லை. அவளோட கள்ளக் காதலன் சாரதியா. இல்லை ராஜாவோட அண்ணன் மூர்த்தியா? யாருன்னே கண்டு பிடிக்க முடியலை.”

“அது சரி, எப்படி உங்க ராமாயணம். மகாபாரதம் எல்லம் போகுது. பெரியபுராணம் மனப்பாடம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டே இருப்பீகளே. முடிச்சிட்டீங்களா?”

“இல்லைடா. ரெண்டு சீரியல் பாக்கறதுக்குள்ளேயே களைப்பா ஆயிடுது. அதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது”

“கபிலா போன அடிக்குது பாரு. அமெரிக்காலேர்ந்துன்னு நெனைக்கிறேன்”

“கபிலா. நாந்தான் வீழி பேசறேன். சென்னை போய்ச் சேர்ந்தாச்சா? முக்கியமான விஷயம். கலிபோர்னியா யூனிவசிட்டிலே ஒரு இடல் உனக்காகப் பிடிச்சிட்டேன். அடுத்த மாசம் சேரனும். ஆனா, இன்னிக்கே உன்னோட சம்மதம் வேனும். வெளீநாட்டு மக்களுக்கு நம்ம பண்பாடு, கலாசாரம்னு சொல்லிக் கொடுத்த உங்களை விட நாங்க தயாரா இல்லை. என்ன சொல்லறே?””

“ஐயா. நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, என்னை மன்னிக்கணும். நான் இப்ப உள் நாட்டிலே பண்ண வேண்டிய வேலையே நெறைய இருக்கு.”

-----0-----
- சிமுலேஷன்

Friday, February 06, 2009

ரவி சுப்பிரமணியன்

2 comments



எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் படித்துவிட்டு தொலைபேசியில் கருத்துக்களைக் கூறியவர்களில் ரவி சுப்பிரமணியமும் ஒருவர். நாலைந்து முறை பேசிய போதும், நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சென்ற வாரம்தான் கிடைத்தது. சாகித்ய அகாடமியின் விருது பெறுபவர்கள் பொதுவாகச் சற்றே பழுத்தவர்களாக இருப்பார்களென்று நான் எண்ணியிருந்த வேளையில், அதன் பரிந்துரைக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் ரவி சுப்பிரமணியம் நடுத்தர வயதினராக இருந்தது சற்றே வியப்பை அளித்தது. கர்நாடக சங்கீதமும், பரத நாட்டியமும் கற்றிருக்கின்ரார் என்றபோது அதிகரித்த வியப்பு, சொந்த ஊர் கலைக்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தச் சேர்ந்த கும்பகோணம் என்றபோது புரிந்து அடங்கியது.

இலக்கியத்தில் பெரிதும் பரிச்சயம் கொண்ட ரவி சுப்பிரமணியம், சமீப காலமாக சிறு கதைகளும் புனையத் துவங்கியுள்ளார். கச் சமீபத்தில் கல்கி இதழில் வெளியான "அதுவும் தாத்தா சொன்னதுதான்" மற்றும் விகடனில் வெளியான " உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும்" ஆகிய கதைகள் கர்நாடக சங்கீதத்தினை அடிநாதமாகக் கொண்டவை. இயல்பான இவரது நடையை வெகுவும் ரசித்தேன். தொண்ணூறுகளிலேயே தனது "ஒப்பனை முகங்கள்" தொகுப்பின் மூலம், நவீன தமிழ்க் கவிதை உலகில் தனது வருகையைப் புலப்படுத்தியவர். மேலும் "காத்திருப்பு" மற்றும் "காலாதீத இடைவெளி" ஆகிய கவிதை நூல்களுக்கும் இவரே ஆசிரியர். இவற்றியெல்லாம் நான் இனிமேல்தான் படித்துப் பார்க்க வேண்டும். முதல் கவிதைத் தொகுப்பே பரிசு பெற்றதாக அறிகின்றேன்.

இளையராஜா அவர்களுடன் நட்பு பாராட்டும் ரவி சுப்பிரமணியன், தம் கவிதைகளுக்கு அவரையே இசையமைக்கவும் வைத்திருக்கின்றார். "தேஷ்" ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கவிதையை அழகுறப் பாடுகின்றார். பாடலின் வரிகளை விட, பாடலுக்கு அமைக்கப்பட்ட இசையினை விட, ஒவ்வொரு சொற்களுக்கும் எப்படி இந்த இசை ஏற்ற இறக்கங்களுடன் பொருந்தி வருகின்றது என்று அவர் விளக்கியது ரசிப்புத்தன்மையிலும் இவர் ஒரு வித்தகர் என்று தெளிவுபடுத்தியது. இந்திரா பார்த்தசாரதி, வைரமுத்து, கனிமொழி என்று பலருடனும் இவரது நட்பு வட்டம் படர்கின்றது. இலக்கியம், இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தாலும், ரவி சுப்பிரமணியத்தின் தனிச்சிறப்பு ஆவணப் படங்கள் எடுப்பதாகும். புகழ்பெற்ற தொலக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள இவர், கணக்கிலடங்கா ஆவணப் படங்கள் எடுத்துள்ளார்.

இவரது தொப்பியின் சமீபத்திய இறகு, "ஜெயகாந்தன்" குறித்த ஆவணப் படமாகும். "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தினை தயாரித்தது இசைஞானி இளையராஜா இலக்கியப்
பெருமன்றமாகும். இளையராஜாவே இதற்கு இசையும் அமைத்துள்ளார். ஓவியர் ஆதிமூலம் அவர்களின் படைப்புகள் அழகுறப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரவி சுப்பிரமணியத்தின் எண்ணம், எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படைப்பில், நேர்காணல் மற்றும் பின்னணிக் குரல் செய்திருப்பவரும் அவரே.

தனது புதுமையான மற்றும், புரட்சியான கருத்துக்களால் உலக வாசகர்களைக் கவர்ந்த ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஒரு ஆவணப்படம் என்றால், அது நிச்சயம் தனிதன்மையுள்ளதாக இருக்க வேண்டுமென்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை
ரவி சுப்பிரமணியன் நிச்சயம் வீணாக்கவில்லை. படத்தினைப் பார்க்க உட்கார்ந்தால் எழுந்திருக்க இயலாதபடி, வெகு சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கின்றார். டெஸ்ட் மேட்ச் போலத் துவங்கும் இந்த ஆவணப் படம், முடிவினை நோக்கிச் செல்லச் செல்ல ஒரு நாள் அல்லது 20:20 கிரிக்கெட் போல வேகம் எடுத்துச் செல்கின்றது. "ராமன் நல்லவனா?", "கெட்ட பழக்கங்களை ஏன் நண்பர்களுக்கும் பழக்குகின்றீர்?", "இன்றைய காலகட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு தேவையா?" என்று மாறி மாறி ரவி சுப்பிரமணியன் கூக்ளி, பவுன்சர் என மாறி மாறிப் போட, ஜெயகாந்தன் (ஜெயசூர்யா போல) அடித்து ஆடுவதைப் பார்க்கப் பரவசமாக இருக்கின்றது.

ரவி சுப்பிரமணியன் அவர்கள் மென்மேலும் இது போன்ற நல்ல பல ஆவணப் படங்கள் எடுப்பாரென்றும், கலை உலகில் பல படைப்புகள் தருவாரென்றும் நம்புகின்றேன்.

- சிமுலேஷன்

Sunday, February 01, 2009

சமீபத்தில் படித்தவையும் மீள் வாசிப்பு செய்தவையும்

5 comments

சமீபத்தில் படித்த மற்றும் மீள் வாசிப்பு செய்த புத்தகங்களுக்காக இந்த இடுகை.

படித்ததில் பிடித்தது குறித்துக் குறிப்பிடுவேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

- சிமுலேஷன்

Tuesday, January 06, 2009

இசை விழா - 2008-09

2 comments

1. ரசித்த அரங்கம்: பார்க்கிங் தொந்திரவு பெரிதும் இல்லாத, ஓங்கி வளர்ந்த மரங்கள் நடுவே அமைந்த அமைதியான சிவகாமி பெத்தாச்சி அரங்கம். குத்தகை எடுத்திருந்தது ப்ரும்மகான சபா.
2. அசத்தும் அரங்கம்: அன்றும், இன்றும் கலைஞர்களையும் ரசிகர்களையும் கவரும் மியூசிக் அகாடெமியின் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் ஹால். மேலும் வேலட் பார்ர்க்கிங், மற்றும் வயதான ரசிகர்களைக் கையைப் பிடித்து இருக்கையில் அமர வைக்கத் தொண்டர்களை அமைத்துக் கொடுத்தது போன்ற value added service செய்து கொடுத்த மியூசிக் அகாடெமி.
3. ஹோம்லியான அரங்கம்: மயிலை லஸ்ஸில் தாத்தா கடையில் புத்தகங்கள் வாங்கிய பின், சட்டென்று நுழையத் தோதாக அமைந்த எளிமையான ஸ்ரீனிவாஸ ஸாஸ்திரி ஹால். போரடித்தால் கீழ்தளத்திலுள்ள ரானடே லைப்ரரி சென்று பேப்பர் படிக்கலாம்.
4. மீண்டும் வரத் தூண்டிய இடம்: மியூசிக் அகாடெமி வளாகத்தில் அமைக்கப் பெற்றுள்ள டிஜிட்டல் ஆடியோ லைப்ரரி. அமைத்துக் கொடுத்த் TAG நிறுவனத்திற்கு நன்றி.
5. மிஸ் பண்ணியது: நாரதகான சபாவின் வழமையான "ஞானாம்பிகா" கேண்டீன் மற்றும் அவர்களது கனிவான உபசரிப்புக்கள்.
6. ரசித்த கேண்டீன்: பார்த்தசாரதி சபாவின் கேண்டீன் மற்றும் அவர்களது சூடான போண்டா.
7. புதுமையான சேவை: சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனுக்கு "ஜோக்"காக எழுதியதை, இன்று நடைமுறையில் இலவச சேவையாக வழங்கிய Fortune நிறுவனத்தின் "கர்னாடிகா எக்ஸ்பிரஸ்" என்ற அரங்கங்களுக்கிடையேயான ஷட்டில் ஸர்வீஸ்.
8. மார்கழி பஜனை: மயிலாப்பூர் கபாலி கோவிலின் மாடவீதிகளில், மார்கழி மாத அதிகாலை வேளைகளில், அரைமணி இடைவெளிகளில் கிட்டத்தட்ட அரை டஜன் பஜனை கோஷ்டிகளைக் காணலாம். பாபநாசம் சிவன் அவர்களது புதல்வி ருக்மிணி ரமணி அவர்களின் குழுவில் கலந்து கொண்டது ஒரு் நாள் மட்டுமே.

9. ரசித்த இளம் ஆண் பாடகர்: கிட்டத்தட்ட மூன்று கச்சேரிகள் கேட்ட பின்னும் அலுக்காத அபிஷேக் ரகுராம். அகாடமியில் பாடிய 'காபி' ஏ க்ளாஸ். "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது" என்று சொல்லத் தோன்றியது. ஒரு பாடலின் நடுவே,"பெங்களூரிலிருந்து நேற்றைய தினம் வந்திருக்கும் எனது நண்பருக்காக இந்தப் பாடலை டெடிகேட் செய்கின்றேன்" என்று அகாடெமி மேடையில் தைரியமாகச் சொன்னது மட்டும் கொஞ்சம் ஓவர்தான்.

10. ரசித்த இளம் பெண் பாடகர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் புதல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் ரசிகர்களை மகிழ்வித்தார்.

11. ரசித்த இரட்டையர்கள்: திருச்சூர் சகோதரர்கள் வாசிக்கும் எல்லாக் கச்சேரிகளுக்கும் மோகன் என்ற வித்வான் மட்டுமே மிருதங்கம் வாசிக்கின்றாரே என்று வியந்து நின்றபோது, அவரே இந்த இரட்டையரின் தந்தை என்று புரிந்தது. இருவரும் மாறி, மாறி ராகம் பாடுவதுவும், ஒருவர் ராகம் பாடும்போது, மற்றவர் கார்வை பிடிப்பவதுவும் சுகமாக இருந்தது.இளமையான இந்த இரட்டையரிடம், "எக்ஸ்க்யூஸ் மீ, எந்தக் காலேஜ்லே படிக்கறீங்க?" என்று கேட்கக் போக, இருவரும் C.A படித்து முடித்து ப்ராக்டீஸ் செய்வதாக அறிந்து அதிர்ச்சி. மூத்தவருக்குத் திருமணமும் ஆகிவிட்டதாம். பார்தசாரதி சபா, ப்ரும்மகான சபா, கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் என்று அவர்கள் பாடும் அரங்கிற்கெல்லாம் துரத்தித் துரத்திப் போய்க் கேட்டேன். பெத்தாச்சி அரங்கில், 6 மணிக்குத் துவங்க வேண்டிய கதக் நாட்டிய நிகழ்ச்சி தாமதமாக, ப்ரும்மகான சபாவின் பாலு, மேலும் நேரம் ஒதுக்கித் தந்தார். கிடைத்த வாய்ப்பினை நழுவ விடாமல் திருச்சூர் சகோதரர்கள் அடித்து ஆடிய, " ஜோக் (JOG)" ராகத்தில் அமைந்த RTP, ரசிகர்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசாகும்.


12. ரசித்த லெக்-டெம்: அகாடெமியில் நடைபெற்ற, ஸ்ரீராம் பரசுராம் அவர்களின் "கர்நாடக இசையில் ஹிந்துஸ்தானி ராகங்களின் பங்கு" குறித்த விரிவுரையும் விளக்கமும். Shriram, What a vocabulary, man!

(மேலே இஞ்சிக்குடி குழுவினர்: கீழே: ரசிகப்ரியா/சங்கீதப்ரியா அமைப்பபளர்கள்; சில பதிவர்களும் படத்தில் உண்டு. கண்டுபிடியுங்கள்)
13. ரசித்த லெக்-கான்: தினமும் 80000 ஹிட்ஸ்க்கு மேல் பெறும் sangeethapriya.com அமைப்பின் விருது வழங்கும் விழாவின் முடிவினிலே இடம் பெற்ற "மல்லாரி" குறித்த விரிவுரையும், நாதசுர இசை நிகழ்ச்சியும். வழங்கியது இஞ்சிக்குடி எம். சுப்பிரமணியன் குழுவினர், ராகசுதா அரங்கினில். சுபபந்துவராளியில் பிஸ்மில்லாகானனக் கண்டோம்.
14. ரசித்த நாட்டிய நாடகம்: Three Musketeers என்ற ஃப்ரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு "Man with Iron Mask" என்ற தலைப்பில் கலாக்ஷேத்ரா புகழ் ஸ்ரீஜித் க்ருஷ்ணா குழுவினர் நடத்திய நாட்டிய நாடகம். ஃப்ரெஞ்சு உடைகள் அணிந்து வந்த ஆண் கலைஞர்கள் ஆடிய பரதம் பிரமாதம். ஒப்பனை, அரங்க அமைப்பு, கோரியோக்ராபி, வேடப் பொருத்தம் என்ற வகையில் கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ், மேத் என்று எல்லாமே வேலை செய்தது. நாரத கான சபாவில் இருந்த அனவைரையும் கட்டிப் போட்ட இந்த நாட்டிய நாடகம் முடிந்தபின் மணி பார்த்தபோது, இரவு மணி பத்தரை. ஸ்ரீஜித்தின் எந்த நிகழ்ச்சியும் ஏமாற்றுவதில்லை.
15. ரசித்த மியூசிகல் என்ஸெம்பிள்: வயலின் எம்பார் கண்ணனைத் தளபதியாகக் கொண்ட, கடம் கார்த்திக்கின் "Heart பீட்" என்ற வாத்ய விருந்தா. எம்பாரின் "ஜோக்" இராக வாசிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பாரதீய வித்யாபவன் மெயின் ஹாலில் ஒரு முறையும், பார்த்தசாரதி சபாவில் ஒரு முறையும் கேட்டேன். வடமொழியில் ஆராய்ச்சி செய்துள்ள Dr.கார்த்திக் பாடியது பெரும்பாலும் தமிழில். கீ போர்ட் சத்யா வழக்கமான அசத்தல். அதே போல் ரிதம் பேடில் அருண்குமார் அபாரம். குறிப்பாக சந்தூர் ஒலிகளைக் கொணர்ந்தற்கு. கஞ்சிரா புருஷோத்தமன் சொல்லவே தெவையில்லை. இன்று கஞ்சிரா உலகில் அவரே ஆட்சி.
16. சமீபத்திய பிரசுரம்: "Do away with Thematic Concerts!" என்ற தலைப்பில் எழுதிய குறுங்கட்டுரை பிரசுரமானது Kutcherybuzz Newsletter மற்றும் Kutcherybuzzonline.comல்.




(இந்த வருடப் படம் கிடைக்காததால் போன வருடப் படம். ஞாநியும் ஒரு நடுவர்.)
17. சமீபத்திய மகிழ்ச்சி: போன வருடம் மூத்த மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்டு "முத்ரா குவிஸ்"ஸில் பெற்றது இரண்டாம் பரிசு. இந்த முறை முதல் பரிசு பெற்றே தீர வேண்டும் என்று வந்த இடத்தில், தகுதிச் சுற்றில் பங்கு கொள்ள வந்தோர் மட்டுமே 50க்கும் மேல். தகுதிச் சுற்றில் தேறிய 12 பேர்களில் பெயரைக் குலுக்கிப் போட மனைவியும், நானும் ஒரே குழுவில் அமைந்தது எதிர்பாராத அதிசயம். இசைக் கலைஞர் Dr.ராதா பாஸ்கர், நடனக் கலைஞர் ரோஜா கண்ணன், தூர்தர்ஷன் புகழ் குவிஸ் மாஸ்டர் சுப்பிரமணியன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வாய்ப்புகளை நழுவ விடாமல் பதிலளித்துத் தட்டிச் சென்றது முதல் பரிசு தலா ஆயிரம் ரூபாய்.
18. வெறுப்பேத்திய விஷயம்: Lec-dem என்ற பெயரில் மூத்த இசைவாணர்கள் (Musicologists, not Musicians) தங்களது சொந்தக் குரலில் பாடி எரிச்சல் மூட்டியது. பல பேருக்கு சிஷ்யர்கள் இருந்தும் பாடுவதற்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள மனம் வரவில்லை.
19. வியந்த நபர்: அகிரா என்ற ஜப்பானிய இளைஞர். நாரத கான சபாவினருகில் வசிக்கும் அகிராவை எல்லா சபாக்களிலுல் பார்க்கலாம். ஆம். இவர் ஒரு திறமையான புகைப்படக் கலைஞர். இந்திய இசைக் கலைஞர்களைப் புகைப்படம் பிடிப்பதே இவருக்குப் பிடித்த விஷயம். முத்ரா குவிஸ்ஸில், ஆடியன்ஸ் ரவுண்டில் கேட்ட கேள்விக்கு "கரகரப்ரியா" என்று தவறான விடையைச் சொன்னாலும், தனது மழலைச் சொல்லால் மனங்கவர்ந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

20. சமீபத்திய நட்பு: நாரதகான சபாவில் நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்த சாருஹாசனிடம் சும்மாப் பேச்சுக் கொடுக்க, அப்போது வந்த என் மாமனார் சந்திரஹாசன் அவர்களுடன் தான் பரமக்குடியில் ஒன்றாகப் பணிபுரிந்த நினைவலைகளைக் கூற, எளிமையாகப் பழகும் அவரின் நட்பு கிடைத்தது. வீட்டிற்குச் செல்ல கார் வரத் தாமதமானபடியால். எல்டாம்ஸ் ரோடிலுள்ள மணிரத்னம்-சுஹாசினி வீட்டில் சாருஹாசனை drop செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டி.டி.கே சாலையிலிருந்து எல்டம்ஸ சாலைக்கிச் செல்ல இருந்த 5-10 நிமிடங்களில் பேசிய பேச்சுக்களில் அவர்தம் இசையார்வம் வெளிப்பட்டது. "பூச்சி ஸ்ரீநிவாசய்யரின் காபி ராகத் தில்லானாவை ஏன் யாரும் பாடுவதில்லை?" என்றெல்லாம் எளிமயாகப் பேசிக் கொண்டே வந்தார். மெயிலில் தொடர்பு கொண்டால் உடனடி பதில் உத்தரவாதம்.

- சிமுலேஷன்

Thursday, January 01, 2009

மார்கழி ராகம் - விமர்சனம் - Spoiler

19 comments

எந்த ஆங்கிலப் புத்தாண்டு வருடப் பிறப்பிற்கும் புதிய சபதங்கள் ஏற்பதுவுமில்லை. கோயிலுக்கு செல்வதுவுமில்லை. ஆனால் விடுமுறை தினமாதலால், எதேனும் புதிய நிகழ்ச்சிகள் இருந்தால் தவறாமல் செல்வதுண்டு. இந்த வருடம் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, முதலிலும் முடிவிலும் தோன்றியது "மார்கழி ராகம்".

சென்னையில் சத்யம் தியேட்டரில், மார்கழி ராகம் பார்க்க வந்திருந்த மயிலாப்பூர், மாம்பலம் மற்றும் மடிப்பாக்க மாமா, மாமிக்களை, மடியில் குண்டு வைத்திருக்கின்றார்களா என்று சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
அணமையில் மறைந்த ஒலிவித்தகர் எச்.ஸ்ரீதர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து படம் துவங்கியது. முதலில், பாம்பே ஜெயஸ்ரீயின் அமைதியான "ஸர்வ மங்கள மாங்கல்யே" என்ற ஸ்லோகத்தினைத் தொடர்ந்து மாயாமாளவககௌளையில் "மாயாதீத ஸ்வரூபிணி". அடுத்து வந்தது சுகமான நீலாம்பரியில் "அம்பா நீலாயதாஷி". இம்முறை நீல நிறப் புடவையில் வந்தார் ஜெயஸ்ரீ. மூன்றாவதாக ரீதிகௌளையில் "ஜனனீ நின்னுவினா". நல்ல உருக்கம்தான். ஆனால் வரிசையாக எல்லாப் பாடல்களுமே சவுக்க காலத்தில்

பாடியபடியாலும், பி.சி.ஸ்ரீராமின் மங்கிய காமிரா வெளிச்சத்திலும் சற்றே தூக்கம் வந்தது. "ஜனனீ நின்னுவினா"வில், சரணத்தில் நிரவல் செய்து, "ஜனனீ"யில் ஸ்வரம் பாடினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் செய்யப்பட்ட கைதட்டல்களைக் கேட்டபோது, சத்யம் தியேட்டரில் இருக்கின்றோமா இல்லை நாரத கான சபாவில் இருக்கின்றோமா என்று தோன்றியது. தனி ஆவர்த்தனம் இடம் பெற்றபோது, யாரேனும் எழுந்து போவார்களோ என்று பார்த்தேன். யாரும் எழுத்து போகவில்லை. எம்பார் கண்ணன் வயலின் வழக்கமான சுகத்துடன் வாசித்தார். மிருதங்கம் பட்றி சத்தீஷ் குமார். இவரும் நன்றாகவே வாசித்த போதிலும், சற்றே அதிகப்படியான "கும்கி"யோ என்று தோன்றியது.

தனி ஆவர்த்தனதில் திடீரென்று மிருதங்கத்தில் அருண் பிரகாஷும், கஞ்சிராவில் புருஷோத்தமனும் சேர்ந்து கொண்டு, 'தனி'யினை பரிமளிக்கச் செய்தார்கள். தனி முடிக்கும் போது, பல்லவியினை எடுத்துக் கொண்டு ரஜனி போல் எண்ட்ரி கொடுத்தார் டி.எம்.கிருஷ்ணா. பொதுவாகக் கச்சேரியின் பின் பகுதியில் பாட வேண்டிய "ஸாரமைன மாடலெந்தோ" என்ற பெஹாக் ராக ஜாவளியுடன் துவங்கினார். பின்னர் வராளி ராகத்தில் ராகம்-தானம்-பல்லவி.

சற்றே சிக்கலான வராளி RTPக்கு ஸ்ரீராம் குமாரின் வயலின் அருமையாக ஈடு கொடுத்தார். சாமா மற்றும் காபியில் ராகமாலிகையில் பாடிய ஸ்வரங்களைக் கேட்டுக் கொண்டெயிருக்கலாம் போல இருந்தது.
அடுத்தபடியாக கிருஷ்ணா பாடியது கமாஸ் ராகத்தில் "சீத்தாபதி நாமன சுனா". கமாஸ் ராக உருப்படிக்குப் பின்னர், இம்முறை மீண்டும் ஜெயஸ்ரீ திரையில் தோன்றி, "வடரே சயனம்" என்ற முகுந்தாஷ்டகத்தினை தேஷ், பாகேஸ்ரீ மற்றும் காபி ராகங்களில் பாடினார். பின்னர், கிருஷ்ணா மத்யம ஸ்ருதியில், காபியில் "ஜெகதோதாரணா" பாடினார்.

ஜெயஸ்ரீ சுவானுபூதி என்ற பெயரில் பெரும்பாலான நேரங்களில் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். ஆனால், கிருஷ்ணாவோ, பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு நல்ல ஊக்கம் தந்து, அவர்களுடன் ஒரு நல்லதொரு interactionம் வைத்திருந்தார். அதனால் அவரை இன்னமும் ரசிக்க முடிந்தது.

ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணா இருவருமே ஒவ்வொரு பாடலுக்கும் உடை மாற்றம் செய்திருந்தனர். ஆனால் எதுவுமே கண்ணைப் பறிக்காத வகையில் ரம்மியமாக இருந்தது. ஜெயஸ்ரீ செய்திருந்தது அவரின் வழக்கமான எளிமையானதொரு ஒப்பனை. கிருஷ்ணாவின் ராஜ குமாரன் போன்ற பட்டு ஜிப்பாக்களும், ஜரிகை அங்க வஸ்திர உடைகளும் அபாரம். இறுதியாக இருவரும் சேர்த்திசைத்த்து, பாரதியாரின் "வந்தே மாதரம்" அதற்கு அவர்கள் போட்டிருந்த வெண்ணிற உடைகள் மிகப் பொருத்தம்.


சமீபத்தி மறைந்த ஒலி வித்தகர் ஸ்ரீதர் அவர்களுக்கு எதனால் இத்தனை புகழ் என்று யாருக்கேனும் தோன்றினால், மார்கழி ராகம் பார்த்தால் விடை கிடைத்துவிடும். அப்படி ஒரு துல்லியமான ஒலி அமைப்பு. அதே போல், காமிராவைப் பற்றியும் சொல்லி கொண்டேயிருக்கலாம். குறிப்பாக கிருஷ்ணா ஸ்வரங்கள் பாடும்போது, காமிரா கட் செய்து செய்து காட்டுவது அருமையாக இருந்தது.

குறைகள் என்று சொல்ல எதுவும் தோன்றவில்லை. ஆனால் தொன்றிய சில சந்தேகங்கள்.

கஞ்சிராவுக்கு இடம் கொடுத்தவர்கள் கடத்திற்கு இடம் கொடுக்க மறந்ததேனோ?

எப்படியாவது ஒரு தில்லானாவினையும் நுழைத்திருக்கலாமே?

கர்னாடக இசை உலகில் ஒரு முழு நீளக் கச்சேரியை இது போன்று திரை வடிவில் காண்பிப்பது ஒரு புதிய பரிணாமம். இதனை இசை உலகின் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக வெளி நாட்டில் வாழும் இசை ரசிகர்கள் இப்படிப்பட்ட முயற்சிகளை வரவேற்பார்கள்.

Pictures Courtesy : http://www.margazhiraagam.com/

- சிமுலேஷன்

Thursday, November 20, 2008

தமிழ்த் திரையிசையில் ஸ்வராக்ஷரம்

5 comments

ஸ்வராக்ஷரம் என்பது கர்நாடக இசையின் ஒரு படிமம். ஸ்வராக்ஷரம் என்ற வார்த்தையினைக் கூர்ந்து கவனித்தால் அது ஸ்வரம், அக்ஷரம் என்ற இரு வார்த்தைகளின் கலவை என்பது புரியும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.

ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும்.

திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி" என்ற பாடலில், "தாருக்குதவி செய்யும் அடுத்தாருக்குதவி செய்யும் தாய் உனைவிட வேருளதா? தாமதமின்றி வேதபுரி தாசனுக்கருந்த என்பதறிதா, பெரிதா, வரம் தா" என்று தைவதத்தை வைத்து ஜாலம் செய்திருப்பார்.

ஜி.என்.பி அவர்களது 'சதாபாலய", பிறகு,கேதாரத்தில் துவங்கி வலசி என்ற நவராகமலிகை வர்ணத்தில், பதஸரோஜ" என்ற இடம், ஹிந்தொள இராகத்தில் அமைந்த "ஸாமகான லோல", ஆனந்த பைரவியில் அமைந்த மற்றோரு "ஸாமகான" ஆகியவை ஸ்வராக்ஷரங்களுக்கு நல்ல உதாராணங்களாகும்.

திரையிசையில் இவ்வாறு ஸ்வரக்ஷரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாவென்று பார்த்தால், ஒரு சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.

அகத்தியர் என்ற படத்தில் வரும், "வென்றிடுவேன்... எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்", என்ற பாடலில் வரும் சில ஸ்வராக்ஷரங்கள்:-

மனிதா மத மனிதா - ம நீ தா... ம த... ம நீ தா
பாதக மனிதா - பா த க... பா நீ தா
சாகசமா - ஸ க ஸ மா

ஸ்வரக்ஷரம் அழகாக அமையப் பெற்ற ஓரிரு தமிழ்த் திரைப் பாடல்களில் ஒன்று, "உன்னால் முடியும் தம்பி" படத்தில் இடம் பெற்ற, "என்ன சமையலோ" என்ற பாடலாகும். இதில் ஸ்வராக்ஷரம் என்பது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இடம் பெற்றிருப்பது ஒர் சிறப்பம்சமாகும்.




ஸ்வராக்ஷரம் என்றால் என்னவென்று இப்போது பிடிபட்டிருக்கும்.

இப்போது இந்த "என்ன சமையலோ" என்ற பாடலில் வரும் ஸ்வராக்ஷரங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

- சிமுலேஷன்

Thursday, September 25, 2008

செம்மங்குடி மாமாவும் ஏர்போர்ட் கச்சேரியும்

0 comments

(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்)

"சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். தனது தந்தையார் கட்டளையிட்ட ஒரு காரணமாகவே தனது இறுதிநாள் வரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை அவர். இப்படி எந்த வெளிநாடுகளுக்கும் சென்றிருக்காத செம்மங்குடி அவர்கள் "ஏர்போர்ட் கச்சேரி" என்ற ஒரு கச்சேரி செய்ததாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இரயில் பயணங்களிலோ, இரயில் நிலையங்களிலோ கச்சேரி செய்யும் ஒரு வாய்ப்புள்ளது. அது எப்படி ஏர்போர்ட் கச்சேரி? எனக் குழம்பலாம். மேலும், இந்த ஏர்போர்ட் கச்சேரி எந்த ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? எதற்காக ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? போன்ற குழப்பமான தகவல்கள் உண்டு.

இந்தக் கச்சேரியில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலினும், திருச்சி சங்கரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்துள்ளதாகத் தெரிகின்றது. சமீபத்தில் 1971ல், மும்பையில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் இந்தக் கச்சேரி நடைபெற்றதாகவும், கச்சேரியின்போது, அருகில் பறக்கும் ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இன்னம் சிலரோ, இல்லை இல்லை, இந்தக் கச்சேரி இன்னமும் சமீபத்தில் 1960ல் தாம்பரத்தில்தான் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர். கடைசியாகக் கிடைத்த தவலின்படி இது தாம்பரத்தில்தான் நடைபெற்றதாகத் திருச்சி சங்கரன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தருகே ஆகாய விமானங்களின் வரத்து அதிகம் இருந்ததால், செம்மங்குடி மாமா கடுப்பானதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயத்தில், "வந்துட்டான் அசுரன்"னு அவர் சொல்வதைக் கேட்கும்போது, இது உண்மைதான் என்று புரிகின்றது.


இப்போது ஜெட் ஏர், கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர், கோ ஏர், இண்டிகோ, பாராமவுண்ட் என்று பல விமானக் கம்பெனிக்கள் இருப்பதால் விமானப் போக்குவரத்து அதிகம் இருக்கின்றது. சுமார் 30-40 ஆண்டுகள் முன்னாலே எப்படி விமான போக்குவரத்து அதிகமாக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்டபோது, கிடைத்த விளக்கம் என்னவென்றால், அந்த சமயத்தில் விமான நிலைய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தக் கச்சேரி நடைபெற்ற நன்னாளில், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், விமானப் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்தை செம்மங்குடி மாமாவே இசைக் கல்லுரியில் ஒரு முறை சொன்னாராம்.

இந்தக் கச்சேரியில் கிட்டத்தட்ட 18 உருப்படிகள் பாடியுள்ளார். அருமையான இந்த நிகழ்ச்சியினை அவரே வெகுவாக இரசித்துப் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில், "இன்னிக்கிப் பாடிண்டே இருக்கலாம் போல இருக்கு" என்று சொல்கின்றார். இந்தக் கச்சேரியின் ஒரு சில பாடல்களை தரவேற்றலாம் என்றால், மிகப் பெரிய கோப்பாக உள்ளது. எனவே உண்மையிலேயே ஏர்போர்ட் கச்சேரி கேட்க ஆவலாக உள்ளவர்கள் இங்கே சென்று இரசியுங்கள். முடிந்தால் எந்தப் பாட்டில் "வந்துட்டான் அசுரன்"னு சொல்றார்னு என்பதனையும் சொல்லுங்கள்.

- சிமுலேஷன்

Sunday, September 07, 2008

"ரெகார்ட் ப்ளேயர்" காலம்

1 comments

"டெலெராட்" என்ற பெயர் கொண்ட வால்வ் ரேடியோ மட்டும் வைத்திருந்த எங்கள் இசை வாழ்வில் வசந்தம் வீசியது ஒரு நாள். உறவினரின் திருமணத்திற்கு கோவை சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் திரும்பி வரும்போது சர்ப்ரைஸாக "ரெகார்ட் ப்ளேயர்" ஒன்று வாங்கி வந்தது கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், அதற்கு எலெக்ட்ரிக் கனெக்ஷன் எப்ப்டிக் கொடுப்பது என்பது மட்டும் புரிபடவில்லை. எந்த இடத்தில் எலெக்ட்ரிக் ப்ளக் இருக்கு என்றே தெரியவில்லை. மறுநாளே, கோவைக்கு ரெகார்ட் ப்ளேயரை எடுத்துச் சென்று கடையில் விசாரித்தபோது, அதன் அடிப்பாகத்தில் உள்ள ஒரு மூடியில் உள்ள ஒரு மரையில் ஒரு நாலணா காசினை வைத்துத் திருக அழகாகத் திறத்து கொண்டது. 210 வோல்டியிருந்து 12 வோல்ட்டுக்குக் குறைக்கும் ஒரு டி.சி. எலிமினேட்டரும் வெளிப்பட்டது. அவர்கள் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் திரும்பி வரும் வரை, வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தோம்.

மின்சார இணைப்பு கொடுத்தவுடன் இசை மேடை சுழலத் தொடங்கியது. இசைத் தட்டினைப் போட்டு இயக்கியவுடன், ஒலியும் வரத் தொடங்கியது. ஆனால், இப்போது வேறு பிரச்னை. இந்த முறை எம்.எஸ் அவர்கள் எம்.டி.ராமனாதன் குரலில் ழ்.ழ்ழ்ழ்ழ் என்று முழங்கினார்கள். எல்லா இசைத்தட்டிலும் இதே பிரச்னை. மீண்டும் ஒரு மணி நேர கோவை பயணம். "என்ன செய்தீர்கள்?" என்று கடைக்காரர் கேட்டு பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். என்ன கூத்துவென்றால், இசைத்தட்டின் மேல் வைக்கும் முள்ளைப் பாதுகாக்க பித்தளையில் ஒரு கவசம் (protection guard) ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கவசத்தினை எடுக்காமல், அப்படியே இசைத்தட்டின் மேல் வைத்திருந்திருகின்றோம்.

இந்த மாதிரியான கூத்துக்கள் ஒய்ந்த பின் இசைத்தட்டுக்களை ஒவ்வொன்றாக ஓடவிட்டு இரசித்தோம். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தபின் இசைத்தட்டுக்களை கேட்பது வாடிக்கையானது. நண்பர்களை அழைத்து வந்து 45 rpm ல் பாடிய பாலமுரளி கிருஷ்ணாவை 78 rpmல் ஒடவிட்டு கீச்சுக்குரலில் பாடவைப்பதும் ஒரே தமாஷாக இருக்கும்

எலெக்ரானிக் யுகத்தில், முன்னேறங்கள் ஏற்பட்டு, கேஸட் ப்ளேயர், சி.டி, டி.வி.டி, ப்ளூ ரே, என்று எத்தனையோ தொழில் நுட்பங்களப் பார்த்தாலும், முதன் முதலாக் ரேடியோ நிகழ்ச்சிகள் போல அல்லாமல் ரெகார்ட் ப்ளேயர் மூலம் எந்தப் பாட்டையும் எவ்வளவு முறையும் கேட்க முடியும் என்றபோது அடைந்த ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.

நாங்கள் வைத்திருந்த ரெகார்ட் ப்ளேயர் ரிப்பேராகி, சரி செய்ய ஆளில்லாமல் பின்னர் ஒரு நாள் அதனைத் தூக்கிப் போட்டோம். இசைத் தட்டு நினவலைகளை கேட்டுக் கேட்டு, மனைவிக்கும் அதனைக் கேட்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால் இசைத்தட்டுக்கள் இருந்ததே ஒழிய, ப்ளேயர் இல்லாத காரணத்தால்,ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

இத்தனை நாட்கள் கழித்து, நேற்று மூர்மார்க்கெட்டில் ஒரு பழைய HMV Fiesta மாடல் ரெகார்ட் ப்ளேயரை 500 ரூபாய்க்கு வாங்கினேன். சுமார் 35 ஆண்டுகள் கழித்து, இசைத்தட்டுக்களைத் தூசி தட்டி எடுத்து மீண்டும் ஒட விட்டபோது, அடைந்த ஆனந்தம் மட்டற்றது.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". பதிவர்களே! விரைவில் எதிர்பாருங்கள் எமது இசைத்தட்டு ஒலிபரப்பினை.

- சிமுலேஷன்

Thursday, August 21, 2008

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

3 comments

"சென்னை தினம்", மற்றும் "சென்னை வார" விழாக்களையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, நேற்று முன் தினம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற "அனில் ஸ்ரீனிவாஸின்" பியானோ இசை மற்றும் சென்னை இசை குறித்தான 'லெக்டெம்'. காதுக்கு அருமையான விருந்து. கூடப் பாடியவர் சுபிக்ஷா ரங்கராஜன். ("கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடியவர்) இப்படிக்கூடஒரு காம்பினேஷன் இருக்க முடியுமா என்று முதலில் யோசிக்க வைத்துப் பின்னர் பார்வையாளர் அனைவரையும் பரவசப்படுத்தினார் 'கஞ்சிரா' புருஷோத்தமன். உண்மையிலேயே இந்த பியானோ-கஞ்சிரா காம்பினேஷன் இரசிகர்கள் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. அனில் ஸ்ரீனிவாஸ் சென்னையில் வாழ்ந்த மேல்நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பு, சென்னையின் மேல் பாடப்பெற்ற பாடல்களைப் பற்றியும் அலுப்புத் தட்டாமல் பேசினார். இதில் சென்னையில் வாழ்ந்து பன்முகத் திறன் கொண்ட கல்கி அவர்களின் பங்களிப்பும் இடல் பெற்றது. கல்கி அவர்களின் "பூங்குயில் கூவும் பூஞ்சோலை" என்ற பாடல் சுபிக்ஷா ரங்கராஜனால் பாடப்பெற்றது. அந்த்க் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய் பாடலென்று நினைக்கின்றேன்.

காபி இராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் வரிகளும், மெட்டும், இசையும் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. கூகிளார் உபயத்தில் நித்யஸ்ரீ அவர்கள் இதனைப் பாடியுள்ளதாக அறிந்தேன். நீங்களும் இதனைக் கேளுங்களேன்.



பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பனி மலரதனில் புது மணம் கண்டேன்
பனி மலரதனில் புது மணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்...ஒரு நாள்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் ஒரு நாள்...ஒரு நாள்...

- சிமுலேஷன்

Thursday, August 14, 2008

பிறந்தநாள் வேஷ்டியும் காலணிப் பரிசும்

4 comments

பொதுவாகவே பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும், 'பிராண்டட்' சட்டை பேண்ட் மற்றும் ஹோட்டல் வகையறாக்களுக்கு 1500-2000 ரூபாய் வரை செலவாவது வழக்கம். இந்த முறை சற்றே வித்தியாசமாகக் கொண்டாட எண்ணி, பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டு வேஷ்டி சட்டையுடன் முடித்துவிடத் திட்டம் போட்டேன். காரணம்*** இறுதியில் சொல்கிறேன். ஒரிரு நாட்கள் முன்பு தி.நகரில் கண்ணில் பட்ட ராம்ராஜ் ஷோ ரூமுக்குச் செல்ல எண்ணினேன். நடிகர் ஜெயராமை கலக்கலாக மாடலிங் செய்ய வைத்து, வேஷ்டி மார்க்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ள ராம்ராஜ் நிறுவனம் தி.நகர் பாண்டி பஜாரில் சமீபத்தில் தமது வேஷ்டி வகையறாக்களுக்காகப் பிரத்யேக ஷோ ரூம் ஒன்றினைத் திறந்துள்ளார்கள். சாதாரண ஜரிகை வேஷ்டி, மயில்கண் வேஷ்டி தவிர எத்தனை வெரைட்டி? ஆச்சரியமாக உள்ளது. இது வரை நீங்கள் பார்க்காத வண்ணங்களில், விதவிதமான கரைகளில் வேஷ்டிகள் இருப்பதைப் பார்த்தால் வேஷ்டிப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான். (ராம்ராஜ் எத்தனை நாடுகளில் மில் வைத்துள்ளாரகள் என்பது மற்றுமொரு வியப்பான விஷயம்? )
( மயில்கண் ஜரிகை வேஷ்டி)

(பருத்தி வேஷ்டி)

இந்த வேஷ்டி வகையறாக்கள் சாமான்யரும் வாங்கும் வண்ணம் சுமார் 200 ரூபாயிலிருந்து இருக்கின்றன. பாரம்பரிய உடை அணிய விருப்பம் இருப்பவர்களை ஒரு முறை இந்த ஷோ ரூமுக்கு விஜயம் செய்ய பரிந்துரைக்கின்றேன். வெளிநாடு வாழ் மக்களே, விரைவில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகமும் செய்யவுள்ளார்கள்.

***இன்று (14th) ஆங்கில வருடப்படி பிறந்தநாள்; நாளை நட்சத்திரம். நாளைய தினம் அருகிலுள்ள பள்ளிக்குக் குடும்பத்துடன் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது 80 பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கவுள்ளோம். சந்தோஷத்திலேயே அதிக சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் தெரிகின்றது.

- சிமுலேஷன்

Monday, July 07, 2008

உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?

0 comments

  • உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?அவர் சீக்கிரம் விடுதலையாகி பத்திரமாக வீடு திரும்ப நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்துகள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ராக் வாட்டர் மற்றும் ஸ்வீட் செஸ்ட்நட்.
  • உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் (IC Unit), “இப்போது ஏதும் சொல்ல முடியாது”, என்று டாக்டர்கள் கைவிட்ட கேசுகளில் (மூளையில் இரத்தப் பெருக்கு, மூன்றாவது ஹார்ட் அட்டாக்) நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ஸ்வீட் செஸ்ட்நட் மற்றும் கார்ஸ் ஆகிய நான்கு மருந்துகளையும் சேர்த்து (2-4 மணிக்கோர் தடவை) நோயாளி விரவில் குணமாகி விடுவார்.
  • கடவுளால் உண்டாக்கப்பட்ட பணம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது நியதி. கடவுள் நமக்கு நிறைய கொடுக்கத்தானே வேண்டும்? பண்டிகக்குச் செலவு செய்யும்படி வைத்தால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்கும்படி செய்ய வேண்டுமல்லவா? ஆனால், நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. இஃது ஏனெனில் பண்டிகையை எப்ப்டிக் கொண்டாடுவது எப்படி என நமக்குத் தெரியாமல் போய்விட்டதுதான். “வாட்டர் வயலட்” என்ற மலர் மருந்து, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பும், பின்பும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர, தீபாவளிக்குச் செலவழித்த பணம் எதோ ஒரு விதத்தில் 1-3 மடங்காக திரும்பி வருவது பலரது அனுபவம்.
  • வயது வந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் ஸ்வீட் செஸ்ட்நட் என்ற் மலர் மருந்து சாப்பிட்டு வர. 1-2 மாதங்களில் “வரதட்சிணை வேண்டாம். உங்கள் பெண்தான் வேண்டும்” என நல்ல குணம் அமைந்த நிறைய சம்பாதிக்கும் பையனின் பெற்றோர்கள் வலிய வந்து பெண் கேட்பார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கபடுகின்றன. பெண்ணிற்கு வரன் தேடி, வீடு வீடாக ஏறிச் சென்று “என் பெண்ணை பார்க்க வாருங்கள்” என நமது மூளையை உபயோகித்துச் செயல்படுவதால், சொர்க்கம் செய்யும் வேலைக்குத் தடங்கல் செய்கின்றோம். அதனால் சரியில்லாத பையனுக்கு திருமணம் செய்து கொடுத்து, பெற்றோரும் அப்பெண்ணும் காலம் பூராவும் கஷ்டத்திலே நொந்து போகின்றனர்.
  • ஒரு பஸ்ஸை, ஒரே நேரத்தில் இரண்டு டிரைவர்கள் (ஸ்டீரிங்கைப் பிடித்து) ஓட்டினால் விபத்துதான் நிகழும்.பெற்றோர்கள் ஸ்வீட் செஸ்ட்நட் சாப்பிட்டு வர, மாப்பிள்ளை தேடும் விஷயத்தில் மட்டும் அம்மருந்து நமது மூளையை நிறுத்தி வைத்துவிடுவதால், சொர்க்கம் தனது வேலையை சுலபமாகச் செய்துவிடுகிறது. (The Beach remedy Chestnut switches off our mind so that heaven can a free play in selecting the right boy and sending him to the girl’s house)
  • திருமணம் நிச்சியமானவுடன், இம்மருந்தை பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, திருமண செலவுக்கான பணம் நிறைய வந்து கொண்டே இருக்கும். (ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல) இது எப்படி?

    சொர்க்கத்தில் உள்ல கடவுள் திருமணத்தை நிச்சியிகின்றார் எனில், அந்தக் கடவுலள் திருமண செலவுக்கு நிறையப் பணம் அனுப்பித்தானே ஆக வெண்டும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவ்வாறு எவருக்கும் நடைபெறவில்லையே என அங்கலாய்க்கும் நபர்களைப் பார்த்து, “ஸ்வீட் செஸ்ட்நட் மருந்து சாப்பிட்டுப் பாருங்கள்” என இயற்கை அறைகூவல் விடுக்கிறது.

    “ஸ்வீட் செஸ்ட்நட் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது? திருமண வைபவத்திற்கு நாம் “திட்டமிடுதம்” மனதில் செயலை மாத்திரம் இம்மருந்து நிறுத்தி விடுவதால் (switch off) கடவுள் நம் மூலமாக வேலை செய்வது தங்கு தடையின்றி நடைபெற்றுவிடுகிறது.

    “எட்வர்ட் பாட்ச்” என்ற இலண்டன் மாநகர மருந்துவர் கண்டுபிடித்த “மலர் மருந்துகள்” பற்றித் தமிழ் வார இதழ் ஒன்றில் வந்த விளம்பரம்தான் இது.

    மேற்கண்ட விபரங்களைத் தெரிந்து கொண்ட வலைப்பதிவர்கள், “மலர் மருந்துகள்” சாப்பிட்டால் இன்னும் என்னென்ன நன்மைகள் விளையலாம் என்று தோன்றும் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.
- சிமுலேஷன்

Saturday, July 05, 2008

கரம்சந்த் காந்தியும் கறி முயல்களும்

0 comments

நாங்கள் உங்களுக்கு உயர்ரக முயல்கள் தருகின்றோம். அது போடும் குட்டிகள் 4 மாதம் கழித்து, 3 கிலோ வந்ததும் கிலோ நூறு ரூபாய் வீதம் அனைத்துக் குட்டிகளையும் உயிருடன் உங்கள் இடத்திலேயே வந்து, எடை போட்டு எடுத்துக் கொள்கின்றோம்.

மேலும் ஈமு கோழிகளையும் நாங்கள் தருகின்றோம். நீங்கள் பெற்று அதை முறையாக வளர்க்க வேண்டும். அது போடும் முட்டைகளை, ஒரு முட்டை 1500 ரூபாய் வீதம் நாங்களே உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். இதனுடைய கறி உயிருடன் எடை போட்டு கிலோ 800 வீதம் உங்கள் இடத்திலேயே வந்து பெற்றுக் கொள்கின்றோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளத் தேவையான இடம்:
மகாத்மா காந்தி அறக்கட்டளை

பிரபல வார இதழ் ஒன்றில் சமீபத்தில் பார்த்தது மேற்கண்ட விளம்பரம்.

- சிமுலேஷன்

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா

1 comments

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது.

மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த ஓல்ஸோல் மிளகாய் மற்றும் வெல்ல வியாபாரியான ஏகாம்பரத்தின் இதயம் ஒரு தடவை துடிக்கிறதை நிறுத்திட்டு நின்று போய் அப்புறம் படபடவென்று அடிச்சுகிச்சி.

ஆசிரியருக்குக் கடிதத்தில் “காமத்தீ என்ற கதைக்கு ஜெயராஜ் படம் ரொம்ப ஓவர் ஸார்! ச.ராஜரத்தினம்”, என்ற ஒரு கடிதமும், “பராசக்தியாரே! கருணை பெரியதா? காதல் பெரியதா?”ன்னு ஒரு கேள்வி-பதில் மட்டுமே எழுதி அனுபவம் பெற்றிருந்த “அரச மணி’ என்ற புனை பெயரும் கொண்ட ராஜரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம், “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற சூத்திரத்தை அழகாக விளக்குகின்றார் வாத்தியார் சுஜாதா. எண்பதுகளில் வத்திருந்த காரணத்தினால், “சுஜாதா சிறுகதைப் பட்டறை” என்ற ஒரு அமைப்பு இருந்தது கூடப் பலருக்கும் தெரிந்திருக்காது.

விசா பப்ள்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பின் விலை ரூபாய் 50 தான்.

- சிமுலேஷன்

Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு...சிமுலேஷன் பாடிய சிவன் பாடல்-01

5 comments



மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே




பதிகம்: திருநீற்றுத் திருப்பதிகம்

பாடல்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

தலம்: திரு ஆலவாய் (மதுரை)

பாடியவர்: சிமுலேஷன்

இராகம்: யமன் கல்யாணி

Saturday, May 17, 2008

கொய்யா மரத்துடன் ஒரு டேட்டிங்

1 comments

பண்பலை வானொலி நிலையங்களுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும், திரைப்படப் பாடல்களைத் தொடர்ந்து ஒலி/ஒளிபரப்ப ஏதெனும் ஒரு காரணம் வேண்டும். ஏதாவது ஒரு பெயரில் நிகழ்ச்சி ஒன்றினை வைத்து, இடையிடயே திரைப்படப் பாடல்களைப் போட ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு "கருத்து" (theme) எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, "ரோட்டில் எச்சில் துப்புவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கலாம்" என்று ஒவ்வொரு நேயரிடமும் கேட்டுவிட்டு, அவர்களுக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்புவது ஒரு வகை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில், ஏதேனும் பயனுள்ள கருத்து ஒன்றினைப் பகிர்ந்து கொள்கின்றார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இன்னும் பயங்கர மொக்கையாக சில கருத்து (theme) நிகழ்ச்சிகள் இருக்கும். நீங்கள் ஒரு சாதாரணமான மனிதராக இருந்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளளப் பார்த்தாலோ, கேட்டடலோ இரத்தக் கொதிப்பு எகிறும் வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் சில நாட்கள் முன்பு, காரில் சென்று கொண்டிருக்கும்போது, பொழுது போவதற்காக, ஒரு பண்பலை நிகழ்ச்சியினை கேட்டுக் கொண்டே சென்றேன்.

"ஹலோ... வணக்கம்"

"ஹலோ... வணக்கம்"

"யார் பேசறீங்க"

"நான் தாம்பரத்திலேர்ந்த்து சாந்தி பேசறேன்"

"சாந்தி எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"நானும் சூப்பரா இருக்கேன். சரி நீங்க எந்த மரத்தை லவ் (love) பண்ணறீங்க"

(சரி...சரி இன்னிக்கி மரவளர்ப்பு தினம் அல்லது வனபாதுகாப்பு வாரம் போலிருக்கிறது)

"சார்... நான் கொய்யா மரத்தை லவ் பண்ணறேன் சார்"

"ஆஹா, கொய்யா மரமா? ஏன் கொய்யா மரத்தை லவ் பண்ணறீங்க?"

"அதெல்லாம் தெரியாது சார். ஆனா கொய்யா மரத்தை லவ் பண்ணறேன்"

"சரி. கொய்யா மரத்தை எங்க டேட்டிங் கூட்டிகிட்டுப் போவீங்க?"

(அடப்பாவிங்களா... ஆம்பிளையும் ஆம்பிளையும் கல்யாணம் பண்ணினீங்க. பொம்பளையும், பொம்பளையும் கல்யாணம் பண்ணினீங்க. நாயையும், கழுதையயும் கல்யாணம் கட்டிகிட்டீங்க. இப்ப மரத்தைக்கூட விட்டு வைக்கமாட்டீங்களா? அவ்வ்வ்...)

"டேட்டிங்கா சார்? நான் கொய்யா மரத்தை மெரினா பீச்சுக்கு டேட்டிங் கூட்டிகிட்டுப் போவேன் சார்"

"வெரி குட். அது ஏன் மெரினா பீச்?"

"அங்கதான் சார், தண்ணி, காத்து எல்லாம் நெறையக் கெடைக்கும்"

"ஓகே. உங்களுக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு பாடுங்க"

"இப்பிடி திடீர்னு கேட்டா எப்படி சார்"

"பரவாயில்ல. எதாவது ஒரு பாட்டு பாடுங்க"

"கல்யாணம்தான் கட்டிகிட்டு ஒர்டிப் போலாமா...
ஓடிப் போய்த்தான் கல்யாணத்தைக் கட்டிக்கிடலாமா..."

"சூப்பர் சாந்தி... சூப்பர். இப்ப உங்களுக்குப் பிடிச்ச பாடல் வந்துகிட்டே இருக்கு"

இதேபோல், மற்றொரு நாள் மற்றொரு நிகழ்ச்சி.

"உங்களுக்கு எதிலே பறந்து போறது பிடிக்கும்? உங்களுக்கன் ஆப்ஷன்ஸ் (options) a.பாய், b. ஸ்பூன் c.கரண்டி"

"எனக்குக் கரண்டிதான் மேடம் பிடிக்கும்?"

"சொல்லுங்க, ஒங்களுக்கு ஏன் கரண்டிலே பறக்கறது பிடிக்கும்?"

"கரண்டிலேதான் நல்லா உக்கார்ந்துகிட்டு சூப்பராப் பறக்கலாம்"

"ரொம்ப நன்றி. இப்ப ஒங்களுக்குப் பிடிச்ச பாடல் ஒண்ணு வந்துகிட்டே இருக்குது"

(இவையெல்லாம் வெறும் மொக்கை ஒலி/ஒளிபரப்புகளா அல்லது பின் நவீனத்துவ வகையிலும் வருவதற்கான் வாய்ப்புகள் இருக்கா? யாராவது சொல்ல முடியுமா?)



Friday, May 16, 2008

புகைப்படப் புதிர்-6

14 comments

1) இந்த அம்மிணி யார்?
2) இவர் ஏன் இப்படிப் பார்க்கின்றார்? இப்படிப் பார்ப்பதனை என்னவென்று சொல்லலாம்?

3) இவ்ன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்?

4). இந்த வியாதிக்கு என்ன பெயர்? ஏன் அந்தப் பெயர்?

5). இவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்?

6) இது என்ன? எதற்குப் பயன்படுகின்றது?


விடைகளை உடனே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடைகள் நாளை வெளியிடப்படும்.

- சிமுலேஷன்

Saturday, April 12, 2008

ராகசிந்தாமணி கிளப் - ஹேமவதி - தர்மவதி - நீதிமதி

9 comments

"எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். கர்னாடிக் ம்யூசிலே ஒங்களுக்கெல்லாம் இருக்குற ஆர்வத்தைப் புரிஞ்சுண்டு, இன்னிக்கி "ராகசிந்தாமணி ம்யூசிக் க்ளப்"போட இந்த மொதல் மீட்டிங்குக்கு வந்திருக்கிற, ஒங்க எல்லாருக்கும் நன்றி. ஏற்கெனவே சொன்னபடி இந்த விவாதக் களம், ஒரு இன்ஃபார்மல் 'கெட்-டு-கெதர்'தான். அதனால, யார் வேணும்னாலும், எந்த ஆர்டர்ல வேணும்னாலும் பேசலாம்."

"ஆனா தலைப்பு மட்டும் என்னென்னு நாங்க ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம்."

"ஹேமவதி-தர்மவதி-நீதிமதி". இதுதான் இன்னிக்கித் தலைப்பு."

"பாலா!, நீங்க வேணும்னா மொதல்ல ஆரம்பியுங்கோ"

"தேங்ஸ், சிமுலேஷன். இன்னிக்கி நான் ஹேமவதி ராகத்தைப்பத்திப் பேசப் போறேன். ஹேமவதி ராகம். இது 58ஆவது மேளகர்த்தா ராகம்."

"சாரி பாலா சார், இன்ட்ரப்ட் பண்றதுக்கு. இந்த ராகம்பத்தி அவ்வளவா கேள்விப்பட்டதேயில்ல. தியரியெல்லாம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் பாடித்தான் காட்டுங்களேன்."

"மொதல்லே நான் தியரியெல்லாம் எதுவும் சொல்லப் போறதிலே. இரண்டாவது நான் பாடவும் போறதில்லே. பேசத்தான் தெரியும். வேணும்னா, நம்ம நூக்கல சின்ன சத்யநாராயணாவைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஆரோகணம், அவரோகணம் எல்லாம் பாடி, ஒரு அஷ்டபதியும் பாடுவார். கேளுங்கோ."

"நல்ல இன்ட்ரொடக்ஷன். பாலா, ஹேமவதி ராகத்லே என்னென்ன பாட்டு இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"முத்துஸ்வாமி தீட்சிதரோட "ஸ்ரீகாந்திமதிம்" அப்படீங்கற பாட்டுத்தான் ரொம்பப் பாப்புலர். இப்ப கணேஷ் குமரேஷ் வயலின்லே இந்தப் பாட்டைக் கேப்போமா?"

"அட்டகாசம். அடுத்து வேறென்னென்ன பாட்டெல்லாம் இருக்கு?"

"பாபநாசம் சிவன் நெறையப் பண்ணியிருக்கார். "சிவனுக்கிளைய சேயே", "என்னைக் காத்தருள்" அப்படீன்னு"

"வெயிட்...வெயிட்...தமிழ்னாலே சிவன்தானா? "சிவனுக்கிளைய சேயே" அவரோட பாட்டா? கெடையவே கெடையாது."

"ஆஹா ருக்மிணி மாமி, கண்டு பிடிச்சிட்டேளா? சரி...சரி... அது யாரோட பாட்டுன்னு சொல்றவாளுக்கு, ஒரு பரிசு. (ஒங்களைத் தவிர)"

"XXXX XXXX XXXX தானே?"

"அடடா. சூரஜா கண்டுபிடிச்சது. இந்தாடா பிடி. ஒரு கேட்பரி சாக்லேட்"

"சிமுலேஷன் ஆன்ஸரை சத்தமாச் சொல்லதீங்கோ. இப்ப இந்த வலைப்பதிவர்களெல்லாம் கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கலாம்."

"சரி, இப்ப அடுத்ததா, தர்மவதியப் பத்தி யார் பேசப் போறா?"

"தாமு மாமா. தர்மவதி ஒங்களோட ஃபேவரைட்டாச்சே. நாலு வார்த்தை சொல்லுங்கோ"

"ஆமாம். நாந்தான் தர்மவதியப்பத்திப் பேசப் போறேன். சூப்பரான ராகமாச்சே. இது மேளகர்த்தாவில் 59ஆவது ராகமாகும். இதனோட ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸா, அவரோகணம்: ஸா நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ"

"பாடிக் காண்பியுங்கோ....பாடிக் காண்பியுங்கோ...."

"பாலா சார் மாதிரியே நானும் நூக்கல அண்ணாவக் கூப்பிட்டுடறேன். அவரே ஆரோகணம், அவரோகண்ம் எல்லாம் பாடிக் காண்பிப்பார். வாங்கோ. கேட்டுடலாமா?. "

"சிமுலேஷன். "இளஞ்சோலை பூத்ததா", தர்மவதி ராகம்தானே?"

"ஆமாமாம். கரெக்ட். என்ன படம்னு யாருக்காவது தெரியுமா?"

"ரொம்பவே அழகான பாட்டுத்தான். என்ன படம்னுதான் தெரியலே"

"உனக்காகவே வாழ்கிறேன்" இதுதான் படத்தோட பேரு. இந்தப் பாட்ட எஸ்.பி.பி, யாருக்காகப் பாடினாருன்னு தெரியாம நானும் இத்தன நாள் முழிச்சிட்டிருந்தேன். இப்பத்தான் தெரியும், சிவகுமாருக்காகவும், நதியாவுக்காகவும்தான் இந்தப் பாட்டுன்னு. சிவகுமார் நடிப்பையும், நதியா டான்சையும் கொஞ்சம் பொறுத்துண்டு இந்தப்பாட்டைக் கேட்டால் ரொம்பவுமே எஞ்ஜாய் பண்ணலாம்."

"ராமூ, அதே மாதிரி, "உத்தரவின்றி உள்ளே வா?" படத்லே ஒரு நல்ல பாட்டு வருமே அது என்னடா?"

"அதுவா? நம்ம ரவிச்சந்திரன் நடிச்ச படம்தானே?, "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?"இந்தப் பாட்டைத்தானே சொல்றே?"

"கொஞ்சம் சைலன்ஸ் ப்ளீஸ். இந்தப் பாட்டையும் இப்பக் கேக்கப் போறோம்."

"மாமா, ரெண்டு தர்மவதியுமே சூப்பர். போறதுகுள்ளே, அந்த ரெண்டு பாட்டையும் என்னோட ஐ.பாட்லே காபி பண்ணிக் கொடுத்துடறீங்களா?"

"ஆஹா. கர்னாடிக்னா காத தூரம் ஓடறது. சினிமாப் பாட்டுன்னா என்னமா இன்ட்ரஸ்ட்?"

"மாமி. அதுனால ஒண்ணும் தப்பே இல்ல. அவங்களுக்காகத்தான் இந்த க்ளப்பே. சினிமாப் பாட்டைக் காம்பிச்சி, ஸ்லோவா, கர்னாடிக் ம்யூசிக்லே ஆர்வத்த உண்டுபண்றதுதான் நம்ம கோலே"

"ஆஹா. சிமுலேஷன், அப்படீன்னா, இன்னோரு சினிமாப் பாட்டுப் போடுங்கோ"

"ஜெண்டில் மேன்"ல் வர்ற "ஒட்டகத்தக் கட்டிக்கோ"கூட தர்மவதிதான். இன்னிக்கிப் போடலாம்னு நெனச்சுண்டிருந்தேன். ஆனா, You Tubeலேர்ந்து தூக்கிட்டாங்களே!"

"தாமு மாமா, கர்னாடிக் ம்யூசிக்லே என்னென்ன பாட்டுன்னு சொல்லுங்கோ"

"மைசூர் வாசுதேவாசாரியார் எழுதின "பஜனசேய ராதா", அப்புறம் முத்துசாமி தீட்சிதரின் "பரந்தாமவதீ" இதெல்லாமும்கூட தர்மவதியில இருக்ற பிரபலமான பாடல்களாகும். அப்புறம் பெரியசாமி தூரன் எழுதின "ஒரு நாள் வாழ்வே", கோடீஸ்வர ஐயர் எழுதின "கந்தா பக்த" இந்த கிருதிகளெல்லாம் கூட இந்த ராகத்திலேதான் இருக்கு."

"இப்ப நாம கேக்கப் போறது அம்புஜம் கிருஷ்ணா எழுதி, சுதா ரகுநாதன் பாடின "ஓடோடி வந்தேன் கண்ணா"

"ஏன்னா. ஒங்களைத்தான். அதுக்குள்ளே கொட்டாவியா? கோவிந்தான்னு சொன்னாப் போதுமே. முழிச்சுங்கோ. ஜூனியர் சிமுலேஷன் வேற வந்து போட்டோவெல்லம் எடுத்துண்ட்றக்கன்."

"இன்னிக்கிக் கடோசி ராகம் நீதிமதி. இதப்பத்திப் பேசப் போறது நீலா மாமி."

"இது 60ஆவது மேளகர்த்தான்னு உங்க எல்லார்க்கும் தெரிஞ்சுருக்கும். மொதல்லே கேக்கப் போறது, நூக்கல சின்னசத்யநாராயணாவோட, இன்ட்ரொடக்ஷன்."

"மாமி. இது ஒரு விவாதி ராகம்தானே?"

"கரெக்ட். செல்வன் எப்டிக் கண்டுபிடிச்சே? எப்டிடா முடியறது உன்னாலே?"

"மாமி, செல்வன் பயங்கரமாத் தேறிட்டான். எல்லாம் ஆர்வம்+உழைப்புதான். ஆனா, இன்னிக்கி விவாதி ராகத்தப்பத்திப் பேசத்தான் டைம் இல்லை. அடுத்த் க்ளப் மீட்டிங்லே, செல்வன் விவாதி ராகத்தப்பத்தி ஒரு தனி லெக்சரே கொடுக்கப் போறான்."

"சரி. நான் இப்ப வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன் பாடின, "மோகனகர முத்துக்குமரா", இந்தப் பாட்டைப் போடறேன். கேளுங்கோ."

"கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைதானே. லிரிக்ஸ் கெடைக்குமா சிமுலேஷன்?"

"எஸ்.ராஜம் புக் போட்டுருக்காரே. இப்ப இம்மீடியட்டா வேணும்னா, இங்க போய்ப் பாக்கலாம்."

"ஆஹா. கிட்டதட்ட ஒண்ற மணி நேரம் போனதே தெரியல. அடுத்த க்ளப் மீட்டிங்க்காக ஆர்வமாக் காத்திண்ட்ருக்கோம்."

"மொதல் மீட்டிங்க நல்லபடியா நடத்திக் கொடுத்த எல்லார்க்கும் நன்றி. இதே மாதிரி எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கணும். இப்போ ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், காபி வருது. மெதுவா சாப்பிட்டுட்டுப் போகணும். மறுபடியும் எல்லார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!".

- சிமுலேஷன்

Friday, April 04, 2008

ஓர் உத்தம தினம்

4 comments

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள வாத்யாரின் "ஓர் உத்தம தினம்" (சுஜாதா சுவடுகள்) என்ற சிறுகதையின் முடிவினை யாரேனும் விளக்க முடியுமா?

(ஹி...ஹி... நான் நினைச்ச முடிவேதான் நீங்களும் நினைச்சிருக்கீங்களான்னு செக் பண்ணத்தான்).

- சிமுலேஷன்

Saturday, March 22, 2008

ஜெயமோகனைக் கண்டித்தவர்கள் இதனை ஏன் கண்டிக்கவில்லை?

1 comments

ஜெயமோகனைக் கண்டித்தவர்கள் இதனை ஏன் கண்டிக்கவில்லை?

Monday, March 17, 2008

மயிலை திருத்தேர்

3 comments

"கயிலையே மயிலை; மயிலையே கயிலை" என்றழைக்கப்ப்டும் மயிலாப்பூர் கபாலி திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திரப் ப்ரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

"காணக் கண் கோடி வேண்டும்" என்று பாடல்பெற்ற இந்த அழகிய திருத்தேர் வைபவத்திற்கு, மயிலாப்பூர் KUTCHERIBUZZன் இந்த இணைப்பில் நேரடி வர்ணனை செய்யப்படுகின்றது. வர்ணன கொடுப்பவர் வின்சென்ட் டிசோசா என்று நம்புகின்றேன்.

வெளியூர் ஆத்திக அன்பர்களும் அயல்நாடு வாழ் இந்தியர்களும் நேரடி வர்ணனையைக் கண்டு மகிழுங்கள். வர்ணனை ஆங்கிலத்தில் இருப்பதால் உங்கள் வெளிநாட்டு நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்.

- சிமுலேஷன்

Saturday, March 15, 2008

டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு

5 comments


சுஜாதா எழுதி பூர்ணம் விசுவநாதன் இயக்கத்தில் வெளிவந்த "அடிமைகள்" போன்ற நாடகங்கள் சிலவற்றை எண்பதுகளில் பார்த்திருக்கின்றேன். நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது நாரத கான சபாவில், குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் குழுவினரின் "டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் மூலம்.

நாடகத்தின் ஆரம்பக் காட்சியே கோர்ட் சீனாகும். அடுத்த இரண்டு மணி நேரமும் இந்தக் கோர்ட்டிலேயே இருக்கப் போகின்றோம் என்பதினை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்து விட்டு, சென்னையிலுள்ள ஒரு பொது மருத்துவமனையில், டெபுடி டைரக்டராக இருக்கும் டாக்டர் நரேந்த்திரன், தற்போது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கிறார்.

அவர் மீது, மூன்று முக்கியக் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார் பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் நாகராஜன். பெரியவர் சரவணனுக்குச் சென்று கொண்டிருந்த குளூக்கோஸ், ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கிவிட்டு, அவரைச் சாகடித்தது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தான் வேலை செய்யும் பொது மருத்துவமனையிலேயே, தனது காரியதரிசி மஞ்சுளாவிற்குக் கருக்கலைப்பிற்கு ஏற்பாடு செய்தார் என்பது. லூக்கேமியா என்ற இரத்தப்புற்று நோயினால் போராடிக் கொண்டிருக்கும், ரவி என்ற சிறுவனுக்குத் தவறான மருந்தைக் கொடுத்து, அவன் சாவதற்கும் காரணமாயிருந்தார் என்பது மூன்றாம் குற்றச்சாட்டு.

"எனக்கு வக்கீல் யாரும் தேவையில்லை, நானே எனக்காக வாதாடிக் கொள்கிறேன்," என்று சொல்லி, குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, தண்டனை வேண்டும் என்று கூறிக் கோர்ட்டாரைக் குழப்புகிறார் வினோதமான டாக்டர் நரேந்திரன். இதனை ஒப்புக் கொள்ளாத ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், கணேஷும், வசந்தும் டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். வழக்கமான டிடெக்டிவ்களாக வரும் இருவருக்கும், துப்பறியும் வேலை என்று ஒன்றும் பெரியதாக இல்லை. இவர்கள் நடத்தும் இந்தக் கேஸில் நியாயம் வென்றதா? அரசியல் வென்றதா? யதார்த்தம் என்ன? என்பதே கதை.

குருகுலம் குழுவினர் திறம்பட நடித்துள்ளனர். "பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் தனது வாதங்களைச் சொல்லலாம்," என்ற வழமையான கோர்ட் வசனங்களையே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு, ஜட்ஜ் வழக்கறிஞர்களைப் பெயர் சொல்லி அழைப்பது (நாகராஜன், உங்க க்ராஸ் எக்ஸாமினேஷனை ஆரம்பியுங்க...) புதுமையாகவும், உண்மையிலேயே கோர்ட் விவாதங்கள் இப்படித்தான் யதார்த்தமாகவும் இருக்குமோ என்றும் யூகிக்கத் தோன்றுகின்றது. ஜட்ஜ் பாத்திரம் ஏற்ற குருகுலம் M.B.மூர்த்தி முதல், "எளவு" எனப்படும் இளவழகன் வரை அனைவரும் அளவாகவே நடித்திருக்கிறார்கள் எனலாம். ஓவ்வொரு வசனங்களிலும் தோன்றும், அங்கதத்திலும் சுஜாதா எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். பாத்திரங்களின் வேடப் பொருத்தங்கள் அருமை. டாக்டர் நரேந்திரனின் உயரமான ஆளுமை, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றது. ஒரு நேரத்தில், கோர்ட்டிலேயே, "போடா" என்று சொல்லுவது அவரது கேரக்டரைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. முதிர்வான கணேஷும், நடிகர் சூர்யா போன்ற இளமையான வசந்த்தும் பாத்திரப் பொருத்தத்தில் நிச்சியமாக ஏமாற்றவில்லை. ஆனால் குறுந்தாடியுடன் கூடிய கணேஷையும், ஜொள்ளுவிட வாய்ப்பில்லா வசந்த்தையும் யாரும அவ்வளவாக எதிர்பார்த்திருக்க முடியாது. சிறுவன் ரவி, பார்வையாளர்கள் பெரும்பான்மையோரை அழ வைத்திருப்பான். பத்தாம் வகுப்புப் பாடங்களைப் படித்துவிட்டு, வகுப்பாசிரியரிடம் பாடம்(!) வாங்கிப் பின்னர், அப்பாவிடமும் பெல்ட்டால் அடி வாங்கும்போது, ஏனோ "தாரே ஜமீன் பர்" ஞாபகத்திற்கு வந்தது.

"அன்னியன்", "இந்தியன்" போன்ற கதைகளையெழுதி வந்த வாத்தியாருக்குப் பல ஆண்டுகளாகவே, இந்தியச் சமூகத்தின் மேல் இருந்து வந்த ஒரு சினிசிசத்தினை டாக்டர் நரேந்திரன் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் "அறிவாளியாகவும், மனிதாபிமானமும் மிக்க ஒரு மனிதன், மதியூகத்துடனும் செயல்பட முடியாதா?," என்ற கேள்வி மனதினில் எழாமலில்லை. மஞ்சுளாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாமே! ரவியின் பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வைத்திருக்கலாமே," என்றெல்லாம் யோசித்தால் கதையாவது, நாடகமாவது.

இடைவேளை ஏதுமில்லாமல், காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு கூட்டிக்கொண்டே சென்று பார்வையாளர்களை இரண்டு மணிநேரம் பரவசப்படுத்தினாலும், தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு, அவர் எழுத்தினால் ஏற்பட்ட தாக்கத்தை, அவரது சினிமாவோ, நாடகங்களோ தரவில்லை; தரவும் இயலாது," என்பதே உண்மை.

- சிமுலேஷன்

Sunday, February 24, 2008

மாரமணனும் மாயக்கூத்தனும்

1 comments

சென்ற முறை டல்லஸ் சென்றபோது, "உன்னிக்கிருஷ்ணன் கச்சேரி உள்ளது போலாமா?" என்றான் வைத்யா. ஆஹா, அமெரிக்கா வந்து மண்டை காய்ந்து கொண்டிருக்கும் நமக்கு "கரும்பு தின்னக் கூலியா?" என்றெண்ணி, உடனே சரியென்றேன். டல்லஸ்ஸின் "இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமி", அந்த சனி மாலை, நம்மவர்களால்களை கட்டியிருந்தது. "உன்னோட 'ராக சிந்தாமணி' புத்தகத்தையும் கொண்டு வா. யாராவது ஆர்வம் காட்டக்கூடும்" என்றதால், புத்தகப் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன்.

கச்சேரி ஆரம்பிக்க அரை மணிநேரம் இருந்ததால் யாரை மொக்கை போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் வந்தார். வந்தவர் நேராக் "என்னிடம், நீங்கள்தானே சிமுலேஷன்?" என்றார். "ஆஹா, நம்மை எப்படிக் கண்டுபிடிதார் இவர்?", என்று இன்ப அதிர்ச்சியில் இருந்த எனக்கு, பதில் சொல்ல ஒரு சில நிமிடங்கள் ஆனது. "ஆமாம், நான் தான் சிமுலேஷன். மன்னிக்கவும். உங்க்களைத் தெரியவில்லையே!" என்றேன்". தனது பெயர் "மாயா" என்ற மாயக்கூத்தன் கிருஷணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அது சரி. எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்' என்றதற்கு, "உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தின் அட்டையில் இருக்கும் போட்டோவை பலமுறை, உங்களது வலைப்பதிவில் பார்த்துளேன். அதனை வைத்தே கண்டுபிடித்தேன்" என்று மாயா சொன்னபோது, இவர்தான் அந்த 'அமெரிக்காவின் சி.ஐ.டி.சங்கரோ" என்று ஆச்சரியப்பட்டேன்.

பழகுவத்ற்கு இனிய மாயா, அவர்தம் நண்பர் கார்த்திக்கையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள்தாம் டல்லஸ்ஸின் "இணடியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமியினைத் திற்ம்பட நிர்வகித்து வரும் நிர்வாகிகளுள் சிலர்.



(மாயா மற்றும் கார்த்திக்குடன் சிமுலேஷன்)

(உன்னிக்கிருஷணன் மற்றும் வைத்யாவுடன்)

(மாயா மற்றும் உன்னிக்கிருஷ்ணனுடன்)



(களைகட்டிய கச்சேரி மேடை)


அன்றைய மாலை உன்னிக்கிருஷ்ணன் புண்ணியத்தால் அருமையாகக் கழிந்தது. அதிலும் குறிப்பாக, "மாரமணன் உமா ரமணன்" என்ற பாபநாசம் சிவன் அவர்களது ஹிந்தோள ராகப்பாடல் அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது. இந்தப் பாடல் சிவனையும், திருமாலையும் ஒரே நேரத்தில் அழகுற வர்ணிக்கும் பாடல் என்பது சங்கீதம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பாடலின் வரிகளும் பொருளும் தெரியவேண்டுவோர் 'லலிதா ராமின்' இந்தக் கட்டுரையில் அவற்றைக் காணலாம்.




வீடியோ குவாலிட்டியினைப் பொறுத்தருள்க.

Tuesday, December 18, 2007

பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபி

7 comments

"பேஷ்..பேஷ்... காபின்னா, இதான் காபி"

"என்ன அத்திம்பேர்.இந்த மினிஹால்லே, கான்டீன்னும் கெடையாது. காபியும் கெடையாது. எங்க போய் காபி சாப்பிட்ட்டேள்?"

"டேய் குடிச்சாதான் காபியா? கேட்டாக் காபியில்லையா? அபிஷேக் ராகுராம்னு ஒரு பையன் காபி ராகம் பாடினான் பாரு. அட்டகாசம்."

"அத்திம்பேர். மோகனம், கல்யாணின்னு சொன்னாப் புரியறது. சங்கராபரண்ம்னு சொன்னாப் புரியறது. காபின்னா என்ன? தமிழ்ப் பேரா?"

"அதெல்லாம் தெர்யலையேப்பா. வடநாட்லே kaafiனு சொல்றா. நாம் காபி, இல்லாட்டி காப்பி அப்டீங்கறோம்."

"குடிக்க்ற காப்பிலெ கும்பகோணம் டிகிரி,பீபரி, ரொபஸ்டா, சிக்கரி கலந்த காபின்னு வெரைட்டி இருக்றாப்ல, காபி ராகத்லேயும் வெரைட்டி இருக்கா?"

"நிச்யமா. கர்நாடக காபி, உபாங்க காபி, ஹிந்துஸ்தானி காபின்னு பலவகை இருக்கு. அதைத் தவிர வடநாட்ல வேற எந்த ப்ளெண்ட் போட்டாலும் அதை, 'மிஸ்ர காபி'ன்னு சொல்லிடுவாங்க.நாம பெரும்பாலும் பாடறது ஹிந்துஸ்தானி காபிதான். இந்தக் காபி ராகம் கரஹரப்ரியாங்ற 22ஆவது மேள்கர்த்தாவின் ஜன்ய ராக்ம். அப்படீன்னா, இதனோட ஆரோகணம், அவரோகணம் சொல்லு பார்ப்போம்."

"கரஹரப்ரியாவுக்கு, ஸ,ரி2,க2,ம1,ப,த2,நி2,ஸா - ஸா,நி2,த2,ப,ம1,க2,ரி2,ஸ .



காபிக்கு,

ஆரோகண்ம்; ஸ,ரி2,ம1,ப,நி3,ஸா
அவரோகண்ம்: ஸ்,நி2,த2,நி2,ப,ப1,க2,ம1,ட2,ப்,க2,ரி2,ஸ,ந்3,ஸ

சரியா, அத்திம்பேர்?"

"ஆஹா. கலக்றியே. ஆரோகணம் எவ்வளவு சிம்பிளா இருக்கோ, அவரோகணம் அவ்வளவுக்கவ்வளவு காம்ளெஸா இருக்கு பார்த்தியா. ஆனா, நான் ஏற்கெனவே சொன்னா மாதிரி வெறும் ஆரோகணம், அவரோகணங்றது ஒரு ஸ்கேல் மட்டும்தாண்டா.

இந்திய இசைன்னாலே, கமகம் முக்கியம். சரி. சரி. கமகத்தைப் பத்தி அப்புறமா வெளக்கிச் சொல்றேன். ஒனக்கு, காபில்லே என்னென்ன பாட்டு தெரியும் சொல்லு?"

"நான் சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கவா? நம்ம கர்நாடிக், "என்ன தவம் செய்தனை யசோதாவையே, பார்த்திபன் கனவுலே, வேற மாதிரி ஹாண்டில் பண்ணியிருக்கார் பாருங்கோ. கேட்கறேளா?"

"ஆஹா. வீடியோ ஐபாடெல்லாம் வாங்கிட்டியா? பார்ததிபன் கனவு-ஆலங்குயில் பாட்டுதானே. போடு, போடு. பாக்கறேன்."



"ரோஜா படத்லே வந்த, 'காதல் ரோஜாவே'காபிதான். அப்புறம், ரஜனி ஸ்ரீதேவி நடிச்சு, "ப்ரியா"ன்னு ஒரு படம் வந்ததே எய்ட்டிஸ்லே. இளையராஜாவோட "ஹேய் பாடல் ஒன்று. ஜேஸுதாஸும், ஜானகியும் பாடினது. அதுவும் ஒரூ நல்ல காபிதான்."

"சரி. அதையும் கேட்டுடலாம்"



பாலபாஸ்கர்ங்றவரோட ஃப்யூஷன் ஒண்ணு இங்க இருக்கு. பாருங்கோ.



"சரிடா. ஒரேடியா சினிமாப் பாட்டு, ஃப்யூஷன்னு போட்டுண்டிருக்கியே. கர்நாடிக்லே என்ன தெரியும். ஒரு கர்நாடிக் பாட்டுப் போடேண்டா. "

"'என்ன தவம் செய்தனை' சொல்லிட்டேன். த்யாகராஜரோட, 'இந்த சௌக்ய', 'மீ வல்ல குணதோஷமேமி, அப்புறம், 'பருலன்ன மாட'ன்னு ஒரு ஜாவளி உண்டு.

இப்ப புரந்தரதாசரோட 'ஜகதோதாரணா' எம்.எஸ் பாடிக் கேட்கலாமா? இல்ல. பாக்கலாமா?"



ஒரு நிமிஷம் அத்திம்பேர். பாட்டைக் கேட்டுண்டுருங்கோ. இத வந்துடறேன். ஆபீஸ் கலீக் ஒருந்தன் வந்திருக்கான். அவனைப் பாத்துட்டு வந்துடறேன். காபி சாப்பிடத்தான் கூப்பிடறான் போலயிருக்கு.

Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

11 comments

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது ஒவ்வொரு ராகத்துக்கும் ஆரோகணம், அவரோகணம்ன்னு ஏழு ஸ்வரங்கள் ஏறு வரிசையிலும், எறங்கு வரிசையிலும் இருக்கும். இப்படி அடுத்தடுத்தாப்ப்ல வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு நட்பு இருந்தால், அவை பாடுவதற்கு சுலபமா இருக்கும். அந்த மாதிரி இல்லாம, அடுத்தடுத்ததா வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு ஒறவோ, நட்போ இல்லாமலிருந்தா அந்த ராகங்கள் ரொம்ப நேரம் பாடறதுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த ராகங்களைத் தான் விவாதி ராகம்ன்னு சொல்றோம். 72 மேளகர்த்தா ராகங்கள்ல 40 ராகங்களை விவாதி ராகங்கள்ன்னும் மத்ததையெல்லா "சம்வாதி" ராகங்கள்ன்னும் சொல்றோம்.

சரி, சரி விவாதியப் பத்தி நெறைய விவாதம் பண்ணியாச்சு. இப்ப நம்ம ரசிகப்ரியாவுக்கு வருவோம். இந்த இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் இதோ;

ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸா
ஸா நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

ரொம்ப நேரம் பாடறத்துக்கு கொஞ்சம் கஷ்டமான ராகம் அப்படீன்னு சொன்னாலும், ரசிகப்ரியா ஒரு அழகான, ரசிக்கும்படியான ராகமாகும் (தலைப்பு வந்தாச்சு. ஓகேவா?). ஆனா, இதுலே நெறயப் பாட்டு இல்ல. இருக்கற ஒண்ணு, ரெண்டு பாட்டைத்தான் இங்கே போடலாம்னுதான் ஒரு ஐடியா.

மொதல்ல சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கலாமா? "கோவில் புறா" அப்படீங்கற படத்ல வர்ற "சங்கீதமே"ங்ற இந்தப் பாட்டு, ரசிகப்ரியா ராகம்தான். ஆனா வழக்கமான சினிமாப் பாட்டு மாதிரியே, இதிலும் ஒரே ராகம்தான் முழுசும் இருக்கும்னு கேரண்டியெல்லாம் கொடுக்க முடியலை. சரி, பாட்டை இப்பக் கேட்கலாமா?



கர்நாடக சங்கீதத்லே மொதல்லே நாம் கேக்க இருக்கறது, ரவிகிரண் பாடின "ரசிகப்ரியே, ராக ரசிகப்ரியே" என்ற பாடல். அதனன இங்கே கேக்கலாம்.

ரசிகப்ரியாவின் ஆரோகணம், அவரோகணம் என்னென்னு ஏற்கெனவே பார்த்தோம். அதனை டெவலெப் செய்வது எப்படின்னும், ஜெயதேவரின் அஷ்டப்தி ஒண்ணும் இங்கே கேப்போம் இப்ப.

இப்ப அடுத்ததா கேக்கப் போறது ஒரு அழகான தில்லானா. இதைப் பாடினது யாருன்னா, மறைந்த பண்டிட்.விஸ்வேஸ்வரன்அவர்கள். நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் கணவர். இந்தத் தில்லானாவை, ஒரு முறை ஒரு ஊர்லேர்ந்து, இன்னோரு ஊருக்குக் கார்ல போகும்போது இயற்றினாராம். கர்நாடிக், ஹிந்துஸ்தானி சந்தூர், கிடார்னு எது எடுத்தாலும், ஒரு ஆர்வத்துடன் செய்த ஒரு மேதை அவர்.






சிதம்பரம் அகாடெமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்லேர்ந்து இந்தத் தில்லானா அடங்கின "அந்தர்த்வனி" ங்கற "சிடி"ய வெளிட்ருக்காங்க.

அடுத்ததா இப்ப நாம் பாக்கப்போறது "காவலம் ஸ்ரீகுமார்" என்ங்றவரோட பாட்டு. மனுஷன் ஜேஸுதாஸையும், பாலமுரளி கிருஷ்ணாவையும் கலந்த மாதிரி என்னமாப் பாடறார் பாருங்க. எளிமையான இருந்து கொண்டு எப்படி அலட்டாமல் பாடறார்ன்னும் பாருங்க. இவர் "கைரளி"ங்ர மலையாள டி.வி சானல் ஒண்லே அருமையான ப்ரொக்ராம் ஒண்ணு கொடுப்பார்ங்றது மட்டும்தான் இத்தன நாள் தெரிஞ்ச விஷயம். இப்பதான் புரியுது, ஸ்ரீகுமார் ஒரு பெரிய வித்வான்னு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்க்ருதம், இந்த மொழிகள்லதான் கர்நாடிக் கச்சேரிலே பொதுவாக் கேட்போம். ஆனா, மலையாள மொழிலே பாடறதே இல்லியேன்னு நெனைக்கறது உண்டு. இப்போ நீங்க கேக்கப் போறது ஒரு மலையாளக் க்ருதி. "குட்டிகுஞ்சு தங்காச்சி" அப்படீங்றவர் எழுதினது.






Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

3 comments

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ ..........................................................................

"வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!"

- வீரபாண்டிய கட்டபொம்மன்

"கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"

- பராசக்தி

"கேள்வியை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?

- திருவிளையாடல்

"கை வீசம்மா, கை வீசு; கடைக்குப் போகலாம் கை வீசு"

- பாசமலர்

"நீ முந்திண்டா நோக்கு...; நான் முந்திண்டா நேக்கு..."

- வியட்நாம் வீடு

"வேற ஒண்ணும் இல்லடி. கிளிக்கு றெக்க மொளச்சுடுது. ஆத்தவிட்டு பறந்து போய்டுத்து.

- கௌரவம்

by சிமுலேஷன்

Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...

2 comments


பல்லவி

அண்ணலின் ஆணையேந்தி
அன்னை ஜானகியைத் தேடி
அலைகடல் கடந்தாய் அன்றே
அஞ்சனைத் தவப் புதல்வா!

அனுபல்லவி

அசோகவனம் அழித்தாய்
அக்சனை அங்கே மாய்த்தாய்
இலங்கையை கடைந்தெரிந்தாய்
இடர்களைக் களைந்தெரிந்தாய்
இத்தனை செயல் புரிந்தும்
இறுமாப்பே இல்லையானாய்
எத்தனை எட்டினாலும் ஐய
நின் நிகருமுண்டோ

சரணம்

ஒப்பிலா வலிமை பெற்றாய்
ஓதுவோம் உந்தன் நாமம்


இராகம்: கல்யாண வசந்தம்
தாளம்: ஆதி

பாடியவர்: ஆதித்யா
மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ்


Tuesday, February 06, 2007

புனைபெயர்களும் புதிரும்...

25 comments

புனைபெயரில் எழுதி வந்துள்ள பலரின் உண்மையான பெயர் என்னெவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கலாம். சிலருக்கு அவர்கள் யாரென்பது தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் சொல்லலாமே.


**** வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கு பின்னூட்ட்டங்கள் மூலம் விடைகள் வந்துவிட்டன.

01. அகஸ்தியன்
02. அகிலன்
03. அசோகமித்திரன்
04. அம்பை
05. ஆதவன்
06. இந்திரா பார்த்தசாரதி
07. ஏ.கே.செட்டியார்
08. கல்கி
09. கல்யாண்ஜி
10. கண்ணதாசன்
11. கடுகு
12. கர்நாடகம்
13. கரிச்சான் குஞ்சு
14. காந்தன்
15. சாவி
16. சாண்டில்யன்
17. சிட்டி
18. சுபா
19. சுஜாதா
20. செம்பியன்
21. சோ
22. ஜெகச்சிற்பியன்
23. ஸ்ரீ வேணுகோபாலன்
24. ஜீவா
25. ஸ்டெல்லா புரூஸ்
26. தமிழ்வாணன்
27. தாமரை மணாளன்
28. துமிலன்
29. தேவன்
30. பசுவய்யா
31. பரணீதரன்
32. பரந்தாமன்
33. பாக்கியம் ராமஸ்வாமி
34. புதுமைப் பித்தன்
35. புஷ்பா தங்கதுரை
36. பூவண்ணன்
37. பொன் வண்ணன்
38. ஞானி
39. ரகமி
40. ராண்டார்கை
41. ராஜெஷ் குமார்
42. மகரம்
43. மதன்
44. மனுஷ்ய புத்திரன்
45. மாயாவி
46. மெரினா
47. மௌனி
48. லஷ்மி
49. நாடோடி
50. வல்லிக் கண்ணன்
51. வண்ணதாசன்
52. வாதூலன்
53. வாண்டு மாமா
54. வாலி
55. விடையவன்

விடைகளும், விடுபட்டவைகளும் வரவேற்கப்படுகின்றன.


- சிமுலேஷன்

Saturday, January 27, 2007

ஒடிசி குவிஸ் 2007 (2)

6 comments

1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?)

2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருட