Tuesday, January 14, 2020

கதை விமர்சனங்களுக்கான காணொளிப் பதிவுகள்

பலப் பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதும் வலைப்பதிவு இது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு இந்த வலைத்தளத்தில் நூல் விமர்சனம் செய்துள்ளேன். அட்டேன்க்ஷன் டெபிசியன்ஷி சின்ரோம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்த நூல் விமர்சனங்களையே வீடியோ முறைகள் செய்தாலென்ன என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் "நூல்வி" என்றதொரு சேனல் ஐந்து நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் ஒவ்வொரு வீடியோவும். செய்வதாகத் திட்டம். இதுவரை இடம் பெற்றுள்ள நூல் விமர்சனங்கள் வருமாறு:-

1 . அசோகமித்திரனின் நாவலுக்கு ஒரு "ஒற்றன்" என்றால், அவரது சிறுகதைக்கு ஒரு "புலிக்க்கலஞன்" என்று சொல்லலாம். அசோகமித்திரன் ஒரு ஸ்டுடியோக் கம்பெனியில் வேலை செய்தவர் என்று அறிந்ததாலும், 1973ல் எழுதப்பட்ட இந்தக் கதையின் களமும் ஒரு ஸ்டுடியோவே என்பதாலும், இது ஒரு முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக இருக்க முடியாதென்பதும், அனுபவம் கலந்த புனைவாகவே இருக்க முடியும் என்பதும் புலனாகிறது.


2. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், வாழ்க்கையை சுவாரசியமாக்கிய விஷயங்கள் பல இருந்தன. அவை காசு செலவில்லாத மிக எளிமையானவை. அவற்றில் ஒன்றுதான், வார இதழகளில் வரும் தொடர்கதைகளை வழி மேல் விழி வைத்துப் படிப்பது. எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த சுஜாதாவின், “கரையெல்லாம் செண்பகப்பூ” படிக்கக் குடும்பமெல்லாம் போட்டி போடும். க்ரைம், விஞ்ஞானம் என்று தன்னை முத்திரை குத்தி விடக் கூடாது என்ற வகையில், கவிதை, சரித்திரம், இலக்கியம், போன்ற மற்ற பல பரிமாணங்களில் வலம் வந்தவர், நாட்டுப்புறப் பாடல்களுடன் ஊடாடி வந்த ஒரு அருமையான கதையினையும்  கிராமத்துச் சூழ்நிலையில் தந்தார். கிராமத்துச் சூழ்நிலை என்றாலும் அமானுஷ்யம், மர்மம், கிளுகிளுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சம் வைக்கவில்லை வாத்தியார்.



3. அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை அப்பட்டமாக எழுத்தில் பதிவு செய்வதில் இந்திரா பார்த்தசாரதி என்றுமே தயங்கியதில்லை. அவரது புனைவுகளில் கூட, ஊடாடியிருக்கும் நிஜங்களைக் கண்டுபிடித்துப் படிப்பது சுவாரசியமானதாக இருக்கும். அப்படியிருக்க, அரசியல் பின்னணியைக் களமாகக் கொண்ட "சுதந்தர பூமி", நாவல் அரசியல் விரும்பும் வாசகர்களைக் கவருவதில் வியப்பேதுமில்லை. சுதந்தர பூமி டெல்லி அரசியலில் உள்ள அரசியல் தரகர்கள் பற்றியும் அங்கு நடைபெறும்  உள்ளடி வேலைகள் பற்றியும் குறித்துப் பேசும் நாவல். 



4. ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை. இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது.



உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.
நன்றி.
- சிமுலேஷன் சுந்தர்

0 comments: