Showing posts with label Jeyakanthan. Show all posts
Showing posts with label Jeyakanthan. Show all posts

Saturday, August 07, 2010

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன் - நூல் விமர்சனம்







தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பல ஆண்டுகளாகப் பாதித்து வருவது திரையுலகமாகும். அது விடுதலைப் புரட்சியாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் புரட்சியாக இருக்கட்டும். பல்வேறு தளங்களில் திரையுலகம் தனது பங்கையளித்துள்ளது என்றால் உண்மையில்லாமலில்லை. ஆனால் அது ஆற்றிய நன்மைகளை விட ஆற்றிய சீரழிவுகள்தான் அதிகம் என்று பொங்கியெழுந்து தைரியமாகத் தன் கருத்துக்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தவர் ஜெயகாந்தன்.  சினிமாவுலகத்தின் மீதான பெருங்கோபத்தினை தனது "சினிமாவுக்குப் போன சித்தாளு" கதையின் மூலம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

செல்லமுத்து சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண ரிக்சாக்காரன். சிங்காரம் போல 'திருக்கூஸ்' எல்லாம் பண்ணும் கெட்டிக்காரன் அல்ல. ரிக்சா ஓட்டுவதும் சினிமா பார்ப்பதுவும் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. சினிமா பார்த்தே வந்த 'பசி'யால் கிராமத்துக்கு ஓடிப் போய் அவனுக்காகவே வளர்ந்திருந்த கம்சலையைக் கட்டிக்கொண்டு, பட்டணம் வருகின்றான். தனக்குத் தெரிந்திருந்த ஒரே பொழுதுபோக்கான சினிமாவுக்குப் கூட்டிச் சென்று அவளையும் சினிமாப் பைத்தியமாக்க்கி விடுகின்றான். கம்சலையோ சினிமாப் பைத்தியம் மட்டுமல்லாது, வாத்தியார் பைத்தியமுமாகவும் ஆகிவிடுகின்றாள். வாத்தியாரையே இருபத்து நாலு மணி நேரமும் நினக்கும் அளவுக்கு. அது எந்த அளவுக்கு முத்தி விடுகின்றது என்று தெரியும்போது செல்லமுத்து மட்டுமல்ல, வாசகர்களும் அதிர்ச்சிகுள்ளாகின்றனர். வாத்தியார் படமாயிரு்ந்தாலும் சரி, வேறு எந்தப் படமாயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்று கண்டிசனாச் சொல்லிவிடுகின்றான் செல்லமுத்து. ஒரு மாதம் பொறுத்திருந்த கம்சலைக்கு வாத்தியாரின் புதுப்படம் வெளியானவுடன் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "கோடியில் ஒருவர்" படம் பார்க்கச் சென்ற அனுபவம் அவளது வாழ்க்கையை எப்படி சீரழித்து விடுகின்றது என்பதுதான் மீதிக்கதை.

மெட்ராஸ் பாஷை ஆகட்டும், அக்ரஹாரத்து பாஷையாகட்டும். சிறந்த நேட்டிவிட்டியுடன் எழுதுவதில் ஜெயகாந்தனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. விறுவிறுபான நடையில் எழுதப்பட்ட நடை. விளிம்பு நிலை மாந்தர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தன்னை மறந்து ஏதோவொரு கதாநாயகன் பின்னாலோ அல்லது கட்சிக்காரன் பின்னாலோ வாழ்க்கையத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை கம்சலை மூலமாகத் தெரிவிக்கும் அதே ஜெயகாந்தன், 'எல்லை தாண்டுவது முறையல்ல; நமக்கும் வாழ்க்கை நெறிமுறைகள் உண்டு', என்பதனை செல்லமுத்து மூலம் தெரிவிக்கத் தவறவில்லை.    

இருவர் படம் எடுத்த மணிரத்தினம் அந்த இருவர்களைப் பற்றிப் பெரிதாக எதிர்மறைக் கருத்துக்கள் ஏதும் வைக்காவிடாலும், அந்தப் படம் குறிப்பிட்ட இருவரைப் பற்றிய படம் அல்ல என்று தற்காப்பாகக் கூறியிருந்ததாக ஞாபகம். ஆனால் ஜெயகாந்தன் எம்.ஜி.ஆர் என்ற பெயரை நேரிடையாகக் குறிப்பிடாவிட்டாலும், வாய்க்கு ஒரு முறை வாத்தியார், வாத்தியார் என்று குறிப்பிடுகின்றார். அதுவும் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்தில் இப்படி தைரியமாக அவரை எதிர்மறையாகக் குறிப்பிட்டு ஒரு கதை எழுத பெரும் தைரியம்தான் வேண்டும்.எம்.ஜி.ஆர் இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? ஒருவேளை அனாவசியப் பப்ளிசிட்டி கொடுக்காமல் அடக்கி வாசிக்கலாமென்று வாத்தியார் நினைத்திருக்கக் கூடும்.

முன்னுரையில் இந்தக் கதைக்கு வெளி வந்த எதிர்ப்புக்களையும்,அந்த எதிர்ப்புக்கள் இலக்கிய சம்பந்தமுடைய கருத்துக்கள் அல்ல என்பதால் அவற்றுக்குச் சமாதனமோ, பதிலோ கூற வேண்டுவது தன் பொறுப்பல்ல என்று ஜெயகாந்தன் கூறுகின்றார்.

முடிவாக இந்தக் கதையின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஜெயகாந்தன் முன்னுரையில் கூறியிருக்கும் மேலும் சில கருத்துக்களைப் இங்கு பதிய வேண்டியிருக்கின்றது.

"அறியாமையும், பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுயாபிமானமிழந்து திரிகிறார்கள். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமு சிதைந்து போவதற்கு நமது சினிமாக்களும் அது சம்பந்தப்பட்ட நடிக, டைரக்டர், தயாரிப்பாளர்களும் பெஉம் பொறுப்பு வகிக்கிறார்கள். "பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்" என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய "பொழுதுபோக்கும்", "கொஞ்சம் நேரம் மக்ழ்ந்திருந்தலும்" ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும், இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா? என்கிற பதைப்புதான் என்னை இக்கதையை எழுதத் தூண்டியது".  

"இந்தக் கேவலமான் சினிமாத்தனம் பதிரிகைகளையும், எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்த நகரத்து இளைஞர்களையும் சமூகத்தின் மேல் தரத்து மனிதர்களையும் முற்றாகப் பிடித்திருக்கிறது. என்ற காரணத்தினாலேயே, குறைவான நாசத்துக்கு ஆளாயிருக்கும் நகரத்துக் கூலிக்கார வர்க்கத்திலிருந்து  ஒருத்தியை நான் தேர்ந்தெடுத்தேன்."

பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

பதிப்பாண்டு : முதற் பதிப்பு 1972 - ஏழாம் பதிப்பு - 2002
விலை: Rs.35

Friday, February 06, 2009

ரவி சுப்பிரமணியன்



எனது "ராகசிந்தாமணி" புத்தகத்தினைப் படித்துவிட்டு தொலைபேசியில் கருத்துக்களைக் கூறியவர்களில் ரவி சுப்பிரமணியமும் ஒருவர். நாலைந்து முறை பேசிய போதும், நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு சென்ற வாரம்தான் கிடைத்தது. சாகித்ய அகாடமியின் விருது பெறுபவர்கள் பொதுவாகச் சற்றே பழுத்தவர்களாக இருப்பார்களென்று நான் எண்ணியிருந்த வேளையில், அதன் பரிந்துரைக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் ரவி சுப்பிரமணியம் நடுத்தர வயதினராக இருந்தது சற்றே வியப்பை அளித்தது. கர்நாடக சங்கீதமும், பரத நாட்டியமும் கற்றிருக்கின்ரார் என்றபோது அதிகரித்த வியப்பு, சொந்த ஊர் கலைக்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தச் சேர்ந்த கும்பகோணம் என்றபோது புரிந்து அடங்கியது.

இலக்கியத்தில் பெரிதும் பரிச்சயம் கொண்ட ரவி சுப்பிரமணியம், சமீப காலமாக சிறு கதைகளும் புனையத் துவங்கியுள்ளார். கச் சமீபத்தில் கல்கி இதழில் வெளியான "அதுவும் தாத்தா சொன்னதுதான்" மற்றும் விகடனில் வெளியான " உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும்" ஆகிய கதைகள் கர்நாடக சங்கீதத்தினை அடிநாதமாகக் கொண்டவை. இயல்பான இவரது நடையை வெகுவும் ரசித்தேன். தொண்ணூறுகளிலேயே தனது "ஒப்பனை முகங்கள்" தொகுப்பின் மூலம், நவீன தமிழ்க் கவிதை உலகில் தனது வருகையைப் புலப்படுத்தியவர். மேலும் "காத்திருப்பு" மற்றும் "காலாதீத இடைவெளி" ஆகிய கவிதை நூல்களுக்கும் இவரே ஆசிரியர். இவற்றியெல்லாம் நான் இனிமேல்தான் படித்துப் பார்க்க வேண்டும். முதல் கவிதைத் தொகுப்பே பரிசு பெற்றதாக அறிகின்றேன்.

இளையராஜா அவர்களுடன் நட்பு பாராட்டும் ரவி சுப்பிரமணியன், தம் கவிதைகளுக்கு அவரையே இசையமைக்கவும் வைத்திருக்கின்றார். "தேஷ்" ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கவிதையை அழகுறப் பாடுகின்றார். பாடலின் வரிகளை விட, பாடலுக்கு அமைக்கப்பட்ட இசையினை விட, ஒவ்வொரு சொற்களுக்கும் எப்படி இந்த இசை ஏற்ற இறக்கங்களுடன் பொருந்தி வருகின்றது என்று அவர் விளக்கியது ரசிப்புத்தன்மையிலும் இவர் ஒரு வித்தகர் என்று தெளிவுபடுத்தியது. இந்திரா பார்த்தசாரதி, வைரமுத்து, கனிமொழி என்று பலருடனும் இவரது நட்பு வட்டம் படர்கின்றது. இலக்கியம், இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தாலும், ரவி சுப்பிரமணியத்தின் தனிச்சிறப்பு ஆவணப் படங்கள் எடுப்பதாகும். புகழ்பெற்ற தொலக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள இவர், கணக்கிலடங்கா ஆவணப் படங்கள் எடுத்துள்ளார்.

இவரது தொப்பியின் சமீபத்திய இறகு, "ஜெயகாந்தன்" குறித்த ஆவணப் படமாகும். "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தினை தயாரித்தது இசைஞானி இளையராஜா இலக்கியப்
பெருமன்றமாகும். இளையராஜாவே இதற்கு இசையும் அமைத்துள்ளார். ஓவியர் ஆதிமூலம் அவர்களின் படைப்புகள் அழகுறப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரவி சுப்பிரமணியத்தின் எண்ணம், எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படைப்பில், நேர்காணல் மற்றும் பின்னணிக் குரல் செய்திருப்பவரும் அவரே.

தனது புதுமையான மற்றும், புரட்சியான கருத்துக்களால் உலக வாசகர்களைக் கவர்ந்த ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஒரு ஆவணப்படம் என்றால், அது நிச்சயம் தனிதன்மையுள்ளதாக இருக்க வேண்டுமென்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை
ரவி சுப்பிரமணியன் நிச்சயம் வீணாக்கவில்லை. படத்தினைப் பார்க்க உட்கார்ந்தால் எழுந்திருக்க இயலாதபடி, வெகு சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கின்றார். டெஸ்ட் மேட்ச் போலத் துவங்கும் இந்த ஆவணப் படம், முடிவினை நோக்கிச் செல்லச் செல்ல ஒரு நாள் அல்லது 20:20 கிரிக்கெட் போல வேகம் எடுத்துச் செல்கின்றது. "ராமன் நல்லவனா?", "கெட்ட பழக்கங்களை ஏன் நண்பர்களுக்கும் பழக்குகின்றீர்?", "இன்றைய காலகட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு தேவையா?" என்று மாறி மாறி ரவி சுப்பிரமணியன் கூக்ளி, பவுன்சர் என மாறி மாறிப் போட, ஜெயகாந்தன் (ஜெயசூர்யா போல) அடித்து ஆடுவதைப் பார்க்கப் பரவசமாக இருக்கின்றது.

ரவி சுப்பிரமணியன் அவர்கள் மென்மேலும் இது போன்ற நல்ல பல ஆவணப் படங்கள் எடுப்பாரென்றும், கலை உலகில் பல படைப்புகள் தருவாரென்றும் நம்புகின்றேன்.

- சிமுலேஷன்