Sunday, February 26, 2006

பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு



"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|"

பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசாரதியிடமிருந்து. அதே நேரம் , "அம்மா போன்; உங்களுக்குத்தான்" என்று மாலினியிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள், சாந்தி.

"போன் அடிச்சது கூடக் காதிலே விழல. உங்க அப்பா வழக்கம் போல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரா".

இது வழக்கமான பல்லவி. தினமும் நடக்கும் கூத்துதான். பார்த்தா தினமும் சத்தமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவார். மாலினியும் உடனே கத்த ஆரம்பித்து விடுவாள். அது என்னவோ, சத்தமாக சொல்வதே அவருக்குத் திருப்தி அளிக்கும் விஷயம். மாலினிக்கோ, "பிரார்த்தனை என்பது மனதுக்குள்ளே சொல்ல வேண்டிய விஷயம்; அதனை எதற்காக இப்படி உரக்கச் சொல்ல வேண்டும்" என்பது அவள் வாதம்.

"இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம புக்கை யார் எடுத்தது? எதெதுதான் காணமப் போறதுங்குற வெவஸ்தையே இல்லாமப் போச்சு" என்று அலுத்துக் கொண்டார் பார்த்தா.

"கிட்டத்தட்ட இரண்டு வருஷமா, இந்தச் ஸ்லோகத்தை சொல்றேள்; இன்னிக்கி ஒரு நாள்
புக் இல்லாம சொல்ல முடியாதா?"

"ஒன்னால முடிஞ்சா எடுத்துக் கொடு; ப்ரீ அட்வைஸை யாரும் கேட்கலை"

சரி. வேற வழியில்லை. புக் இல்லாமலேயே சொல்லுவோம் என்று ஆரம்பித்தார், பார்த்தா. சரளமாக வாயிலிருந்து தட தடவென்று வந்து விழுந்தது. பரவயில்லையே, கலக்குகிறோமே என்று எண்ணிய அடுத்த வினாடியே, சறுக்கல்.

"பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத...பகவான் பகஜ்ஹாநந்தீ... பகவான்..."

"என்ன ஆச்சு? அடுத்த வரி மனதிற்குள் வர மேட்டேங்கிறதே. என்ன செய்ய? நா¨ளைக்குப் புக் கெடச்ச உடனே இரண்டு தரம் சொல்லிவிட வேண்டியதுதான்" என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே,

"ஆதித்யோ ஜ்யோத்ரதிய..." என்ற அடுத்த அடி உரக்கக் கேட்டது.

தனது பக்தியை மெச்சி, ஸாட்சாத் பகவானே அசரீரியாய் அடுத்த வரி எடுத்துக் கொடுத்து விட்டாரோ என்று ஆடிப் போய்விட்டார், பார்த்தா.

ஆனால், குரல் எதுவோ பரிச்சயமான குரலாக இருக்கின்றதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாலினி,

"என்னது, பட்டம்மா; நீயா விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொன்னது" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ஆமாம்மா. ஐயா தெனைக்கும் பூஜை செய்யும் போது, ஒரக்க இது சொல்றாரில்லையாம்மா. நானும் பாத்திரம் தேய்க்கும்பாது, இத்தெ கேட்டுக்கிகினே இருப்பேன். அப்படியே மனசிலே பதிஞ்சி போயிருச்சு. அம்மா தப்பா எடுத்துக்காதீங்க"

----------0----------

Friday, February 24, 2006

அமெரிக்க அனுபவங்கள்-01



ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்கா
------------------------
அமெரிக்காவில் பொதுவாகப் போலீஸை, ஆபீசர்ஸ் என்று குறிக்கிறார்கள். இங்கு அவர்கள் அனவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்களும் அதற்குத் தக்கபடி, மக்களின் தோழனாகவும், குற்றம் செய்பவருக்குக் கிலியாகவும் இருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்காவுடன், எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சில அனுபவங்கள்.

நரேஷ், ராஜன், ராமன் மற்றும் நான் நால்வரும் அப்போது நியூஜெர்சியிலுள்ள, டிரைடென்டிற்கு ஒரு ப்ரோஜெக்டிற்காகச் சென்றிருந்தோம். மதிய உணவிற்காக, மான்மோத் மாலுக்குச் செல்வது
வழக்கம். போய் வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடும். அப்போது எங்களிடம் காரெல்லாம் கிடையாது. எனவே நாங்கள் ஒரு குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்து எளிதில் போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால், ஜார்ஜ் எங்களைக் கூப்பிட்டு எச்சரித்தார். " னீங்கள் போகும் வழியிலே garage campaus** (residetial vehicle?) உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்," என்றார் (**இதன் சரியான பெயர் ஞாபகம் வரவில்லை. பெரிய கன்டெயினர் போல போர்ட்டபிள் வீடுகள் முப்பது, நாப்பது இருக்கும் ஒர் இடம். இதில் குடியிருப்போர் பெரும்பாலானோர் வசதிக் குறைவானவர்கள். சண்டை மற்றும் அடி, தடிக்குப் போகத் தயங்காதோர்) நாங்கள் இரண்டு வாரமாக, அந்த வழியிலேயே போய் வருகிறோமே, ஒரு பிரச்னையும் வரவில்லையே1" என்று எண்ணி, ஜார்ஜ் கூறிய அறிவுரையை அலட்சியம் செய்து விட்டோம்.

ஒரு நாள் இந்த காரேஜ் குடியிருப்பின் வழியே வந்து கொண்டிருக்கும் போது, அங்குள்ள ஒரு குட்டிப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் எங்களைப் பார்த்து. " நீங்கள் எங்கிருந்து வருகிறிர்கள்?, என்றான். அவனுடன் பேசும் ஆவலில், நாங்கள்,"இந்தியா" என்று உடனே பதில் சொன்னோம். அவன் எங்களை செவ்விந்தியர்கள் என்றெண்ணி, "அப்படியானால் உங்கள் வில், அம்பு முதலானவை எங்கே?அவற்றைக் காட்ட முடியுமா?", என்றான். உடனே எங்களிலொருவர், "மான்மோத் மால் அருகே, ஸ்னீக்கர்ஸ் ஸ்டேடியம் உள்ளது. அங்கே அவை கிடைக்கும்." என்றார். அந்தப் பையன் அப்போது போய் விட்டான். நாங்களும் எங்கள் வேலையப் பார்க்கச் சென்று விட்டோம்.

மறுனாள் மதியம், மான்மோத் மாலிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி, எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். இது ஏதோ விபரீதம் என்றெண்ணி, எட்டி நடை போட்டோம். உடனே, அந்த்தப் பெண்மணியுடன், இரண்டு, மூன்று பேர் சேர்ந்து எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். "எங்கள் பையனுக்கு வில், அம்பு போன்ற ஆயுதங்கள் வாங்கித் தருவதாகச் சொன்னீர்களா?," என்று ஏதோதோ உளறிக் கொண்டே வந்தனர்கள் அவர்கள். என்ன சொன்னார்கள் என்று அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால், அந்த அமெரிக்கச் சிறுவன், எங்களைப் பற்றி அவன் குடும்பத்தாரிடம் ஏதோ நன்றாகப் போட்டுக் கொடுத்திருக்கிறான்
என்று மட்டும் புரிந்தது.

ஆனால் நாங்கள் எங்களைத் தொடர்ந்த நாலு பேரையும் பொருட்படுத்தாமல், பேசாமல் அலுவலகத்தை நோக்கி நடந்தோம். இன்னமும் நாலைந்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகம் வந்து விடும் என்ற தெம்பில். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டால் நிம்மதி என்றெண்ணியிருந்த்த எங்களுக்கு ஒர் அதிர்ச்சி. அலுவலக் வாசலில், பளீர் பளீர் என்று காரில், சிவப்பு மற்றும் நீல நிற எச்சரிக்கை விளக்குகள் எரிய அமெரிகாவின் ஆபீசர்கள். எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்மணிதான், அதற்குள் போன் செய்து போலீஸை வரவழைத்திருக்கிறாள். ஒரு சிறுவனைக் கடத்த முயன்றதாகப் புகார் வந்திருப்பதாக போலீஸ் ஆபீசர்கள், டிரைடன்ட் தலைவரிடம் சொன்னார்கள். பின்னர், தலை வந்து, "இவர்கள்
இந்தியாவிலிருந்து வந்துள்ள என்ஜினியர்கள். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். கடத்தல் போன்ற வேலைகளிலெல்லாம் ஈடுபட, இந்த தயிர்சாத கோஷ்டிகளுக்குத் தெரியாது", என்று சமாதானம் சொன்னார். சமாதானமடைந்த போலீசாரும், பயந்தாக்கொள்ளிக் குடும்பத்தினரும், இடத்தை விட்டு அகன்றனர்.

அன்றிலிருந்து, யாரிடமும் அனாவசியமாக வாயைக் கொடுத்து, மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முடிவு செய்தோம்.

...தொடரும்.

Thursday, February 23, 2006

ஜப்பான் அனுபவங்கள்



"இகேபுகரோ"விலுள்ள "விங்ஸ்" ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிடா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, ஷட்டில் பஸ் பிடித்து வந்து விடுங்கள்" என்ற செய்தியும், இகேபுகரோ வரை படமும் இமெயிலில் அனுப்பியிருந்தார், நககோமி ஸான். சரிதான், இதொ வந்து விடும் என்று எண்ணி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், சுமார் இரண்டு மணி நேரப் பயணம். வரும் வழியெங்கும் சிக்கலான மேம்பாலங்கள். ஒவ்வொன்றும் ராட்சத சங்கிலிகள் கொண்டு பிணைக்கப்ப்ட்டிருந்தன. அடிக்கடி வரும் நில நடுக்கத்தால் சேதம் ஏற்படாமலிருக்க இந்த ஏற்பாடாம்.

விங்ஸ் ஹொட்ட்டலில் அனியாயத்திற்குச் சின்ன அறை. ஆனால், அந்தச் சின்ன அறையிலேயே, டி.வி, ப்ரிட்ஜ் முதலானவைகள் இருந்தன. சந்துரு போன்ற நண்பர்கள் வந்தால், உடம்புக்கு ஒரு அறையும், கால்களுக்கு ஒரு அறையும் தேவைப்படும். இதற்கு ஒர் இரவுக்கு சுமார் 70 டாலர்கள். நண்பர் ராய் சொனனார்; கேப்ஸ்யூல் ரூம்களும் இங்கே 30 டாலருக்குக் கிடைக்கும். இவை பெரும்பாலும், குடித்துவிட்டு, இரயிலைத் தவறவிட்ட கோஷ்டிகள் தங்குவதற்கான இடமாகும். இந்த கேப்ஸ்யூல் ரூம்கள், சாதாரண அறைகளே அல்ல. சவப் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்ப் போல் இருக்குமாம். தங்க வேண்டிய நபர் தனது உடைமைகளை, லாக்கரில் வைத்து விட்டு, இந்த சவப் பெட்டி போன்ற கேப்ஸ்யூலில் ஏறிப் படுத்துக் கொள்ள வேண்டுமாம். மறுனாள் காலை எழுந்து, வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வார்களாம்.

இகேபுகரோ, நல்ல பெரிய ஸ்டேஷன்.எஜமானுக்காகக் காத்திருந்து, காத்திருந்து இறந்த நாய் ஒன்றிற்கு, இரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் சிலை ஒன்று செய்து வைத்த கதை ஒன்று, சின்ன வயதிலே படித்திருபீர்களே!. அது இங்குதான். தானியங்கி இயந்திரத்தில் காசை அள்ளிப் போட்டு, டிக்கெட் வாங்கி, கதவிலே செருக, தானாகவே வழிவிடும் அமைப்பு எல்லா நாடுகளிலும் இருப்பது போலத்தான். ஆனால், டிக்கெட் மட்டும் கருப்பு நிறத்தில், பளபளப்பாக இருக்கிறதே, என்றெண்ணி, நண்பரிடம் விசாரித்தேன். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும், முட்டையின் ஒடுகளிலிருந்து தயாரிக்கக்ப்படுகின்றது என்று சொன்னார். எதற்கு என்று புரியவில்லை.

ஒரு முறை வாங்கிய டிக்கெட் என்றால், இயந்திரம் அதனை வாங்கி முழுங்கி விட்டு, வழி விடும். சீஸன் டிக்கெட் என்றால் வழிவிட்டு, டிக்கெட்டை மறு கேட்டில் திரும்பக் கொடுக்கும். சரவணன், ஒரு முறை பயன்படுத்த்ப்படும் டிக்கெட்டை வாங்கிவிட்டு, வெளி கேட்டில் மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டார். எங்களுக்கோ ஆச்சரியம். இது எப்படி முடியுமென்று. அப்போது ஒரு ஜப்பானியர் ஒடி வந்து, "அது என்னோட சீஸன் டிக்கெட்" என்று கத்தியபடியே வந்து தனது டிக்கெட்டைக் கேட்டார். அப்போதுதான் புரிந்தது. சரவணன், மின்னல் வேகத்தில், தனக்குப் பின்னால் வந்த்த் ஜப்பானியரின் சீஸன் டிக்கெட்டைத் தவறுதாலக எடுத்து வந்து விட்டாரென்று.

டிரெயினில் கூட்டமென்றால் அப்படி ஒரு மாம்பாலக் கூட்டம். ஒர் ஒழுங்கோடு, டிரெயினில் இறங்குபவர்களுக்கு வழி விட்டு, வாயிலில் இரு புறமும், இரு வரிசைகள் அமைத்து நிற்கிறார்கள். அதே போல் டிரெயினில், ஒருவரோடு ஒருவர் பேச வேண்டுமே. மூச். எல்லாருடய கையிலும், புத்தம் புதிய மாடல்களில் மொபைல் போன்கள். ஆனால், யாருமே பயணத்தின் போது பேசுவதில்லை. பெரும்பாலோர், மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வெளி நாடுகளையும் போலவே, அடுத்து வரும் ஸ்டேஷன் என்னவென்று, அழகாக அறிவுப்பு செய்கிறார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனது பெயர், தக்கனோடபாபா. முதல் நாள், தக்கனோடபாபா, தக்கனோடபாபா என்று சொல்லிச் சொல்லிப் பார்த்ததில், முதன் முறையாக நாக்கு சுளுக்கிக் கொண்டது.

நாங்கள் வேலை செய்து அலுவலகம் மிக ஒழுங்குடன் இருந்தது. சீனியாரிட்டிப்படி சீட்ட்ங் அரேஞ்மென்ட் இருந்தது. வாரம் ஒரு முறை தலைவர், பொதுவான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லுவார். இதற்காக யாரும் மீட்டிங் ரூமுக்குச் செல்வதில்லை. அவரவர், அவரவர் இடத்திலேயே நிற்க, தலைவர் 5 முதல் 10 நிமிடங்கள் பேச, வாரந்திர மீட்டிங் சுருக்கமாய் முடிந்துவிடும்.

இந்தியாவில் புதிது புதிதாய்க் கிடைக்கும் ரெடிமேட் சப்பாத்தி, பரொத்தா, குருமா வகையறாக்கள் கொண்டு போயிருந்தோம். அவற்றை எப்படிச் சுட வைத்துச் சாப்பிடுவது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது, மார்க்கெட்டிங் மானேஜர், எங்களைத் தரதரவென அருகிலுள்ள மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று, எலெக்ரிகல் தவா ஒன்று வாங்கிக் கொடுத்தார். அதனைக் கொண்டு வந்து மதியம் ஆபீசிலேயே ஆன் செய்து சுரேஷ் மலபார் பரோட்ட்டாவும், எம்.டி.ஆர் மசாலாவும் சுட வைக்க ஆரம்பித்தான். அலுவலகத்திலுள்ள அனவரும் எட்டிப் பார்த்தனர். இண்டியன் கறியின் வாசனை, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த்தில் ஆச்சரியமில்லை. முதல் ஒரிரு வாரங்களிலேயே, கொண்டு வந்த்திருந்த சரக்கு அனைத்தும் தீர்ந்துவிட, இப்போது இண்டியன் ரெஸ்டாரென்டுகளைத் தேடிப் படையெடுத்தோம். நியூ டெல்லி, ஜ்யோதி பொன்ற பல இண்டியன் ரெஸ்டாரென்டுகள் இருந்த்தன. எல்லா இடங்களிலும், ஒரே மெனுதான். அரிசிச் சாப்பாடு மற்றும் கறி அல்லது டால். சாப்பாடுக்குப் பதில் "நான்" வேண்டுமானால் கேட்கலாம்.

ஒரே ஒரு வாரக் கடைசியில், ஷிஞ்சுகுக்கு என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம். நான் பார்த்தவரை, மற்ற நாட்டினரை விட, ஜப்பானியர், மரியாதையுடனும், அன்பாகவும் இருக்கிறார்கள். குமார் ஸான், ராமன் ஸான், என்று எல்லோரையும் ஸான் சேர்த்துக் கூப்பிடுகிறார்கள். இவர்களுக்கு ஏனோ, "ல" கரமே வருவதில்லை. கோகுல் என்பவரை, கோகுற் என்பார்கள். லைலாவை, றைறா என்பார்களோ?

அலுவலகத்திலிருந்து, பெரும்பாலும் 8 அல்லது 9 மணிக்கே கிளம்புகிறார்கள். எங்கே? வீட்டிற்கு மற்றும் பாருக்குதான். மறுநாள் காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் ஆஜராகி விடுகிறார்கள். இரவில் எவ்வளவுதான் தண்ணி போட்டாலும், மறுநாள், ஹேங்கோவர் ஏதுமின்றி, அமைதியாக அலுவலகம் வந்து விடுகிறார்கள். பெரும்பாலோனோர் சிகரெட் புகைக்கின்றார்கள். பேஸிவ் ஸ்மோக்கிங்கினால் பொது இடங்களில் நிற்கவே முடியாத அளவிற்கு சிகரெட் புகை.

டெக்னாலஜியில் முன்னணியிலிருக்கும் ஜப்பானியர், புதிது புதிதாக ஏதேனும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சில பொருட்கள் உள் நாட்டு உபயோகத்திற்கு மட்டுமே. ஒரு புத்தக் கோயிலுக்கு, ஜப்பானிய நண்பரொருவருடன் சென்றிருந்தேன். மணியடித்து விட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள். ஓட்டைக் காலணா போண்ற, நாணயமொன்றை விசேஷமானது என்று சொல்லி கோவிலில் வீசி எறிகிறார்கள். அதன் மதிப்பு 5 யென் மட்டுமே. (என்ன போங்கு?)

சில மார்க்கெட்டுகளில், கம்ப்யூட்ட்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் விற்பதற்கான கடைகள் உண்டு. ஒவ்வொன்றும் 9 அல்லது 10 மாடிக் கட்டடங்களாக இருக்கும். பேக்ஸ் மெஷினுக்கென்று ஒர் தளம். வீடியோ கேம்ஸ்க்கன ஒர் தளம் என்று. பெரும்பாலான கடைகளின் வாசலில், மெகபோன் வைத்து, கம்ப்யூட்டரைக் கூவிக் கூவி விற்கிறார்கள்.

இகேபுகரோ மற்றும் ஷிஞ்சுகுக்கு போன்ற இரயில் நிலையங்கள், சிக்கலானதும், நெருக்கடியானதுமாகும். இந்த இரயில் நிலையங்களுக்கு, குறைந்தபட்சம், பத்து தெருக்களிலாவது நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் டோக்கியோ வரை சென்ற எங்களுக்கு புல்லட் ட்ரெயினில் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் தெருவில் நடந்து போகும் போது, இந்தியர் ஒருவரைப் பார்த்து விசாரிக்க, அவர், இந்திய தூதகரகத்தில் பணி புரியும் தெலுங்குக்காரர் என்று தெரிந்தது. ஸ்ரீகாந்த் அவருடன் தெலுங்கில் மாடலாடி மகிழ்ச்சி கொண்டான்.

இறுதியாக, இந்தியா திரும்புமுன் ஒர் சம்பவம். ஹோட்டலிலிரிந்து, விமான் நிலையம் செல்ல ஷட்டில் பஸ்ஸில் அமர்ந்தேன். போகும் வழியில்லுள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து, பிலிம் காட்ட வேண்டுமென்று, டிஜிட்டல் கேமிராவை பையிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு மணினேரப் பயணத்தில் அசந்து தூங்கிவிட்டேன். காமிராவை மறந்து இறங்கி விட்டேன். நாரிட்டா விமான நிலையத்தின், இன்டீரியர் டெகொரேஷனால் கவரப்பட்டு, காமிராவின் மூலம் படம் எடுக்க எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஷட்டில் பஸ்ஸிலேயே, காமிராவைத் தவற விட்டிருப்பதை உணர்ந்தேன்.

காமிரா கிடைக்குமா, கிடைக்காதாவெறு எண்ணியபடியே, இன்பர்மேஷன் கவுண்டரை அணுகினேன். புகார் ஒன்று கொடுக்க்கப்பட்டது. எங்கிருந்து வந்தேன், எந்தப் பஸ்ஸில், எந்த சீட்டில் உட்கார்ந்தேன் போன்ற விபரங்கள் பெறப்பட்ட்டன. கவுண்டரிலிருந்த பெண்மணி, " தகவல் அனுப்பியுள்ளேன்; காத்திருங்கள்" என்ராள். ஐந்து நிமிடல் கழித்து,

"உங்கள் காமிரா கிடைத்து விட்டது; அது மேல் தளத்திற்கு ஐந்து நிமிடங்களில் வந்து சேரும்; சென்று வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள்.

வியப்புடன் மேல் தளத்திற்குச் சென்றேன். ஐந்து நிமிடம் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து, ஒர் ஊழியர், எனது காமிராவைக் கொண்டு வந்து கொடுத்தார். "கால தாமதத்திற்கு வருந்துகிறோம், மன்னிய்ங்கள்." என்று அவர் வந்து சொன்ன போது, வியப்பு மீண்டும் அதிகமானது.

மேற்கண்ட காமிரா சம்பவத்தை, இங்கு வந்து எல்லோரிடமும் சொன்ன போது, "ஜப்பான்னா, ஜப்பான் தான்; இங்கே நடக்குமா இப்படி" என்று சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரி கூறினார்கள்.

நடு ராத்திரி சென்னை வந்திறங்கிய, எனது லக்கேஜ்களைப் பார்த்த எனது மனவிக்கு அதிர்ச்சி. "லேப்டாப் எங்கே?" என்றாள். பகீரென்றது. லேப்லாப் பையில், லேப்டாப், அலுவலகம் குறித்த முக்கிய காகிதங்கள். பாஸ்போர்ட், அலவன்ஸாகக் கொடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் அனைத்தும் அல்லவா வைத்திருந்தேன். டாக்ஸியில் விட்டு விட்டேன் போலிருக்கிறதே என்று எண்ணி, நானும், பையனும், புறப்பட்டுக் கொண்டிருந்த் டாக்ஸியத் துரத்தத் தொடங்கினோம். பெட்ரோலின் வேகத்துடன், மனித சக்தியால் போட்டி போட முடியவில்லை.

வந்த டாக்ஸீ, ப்ரீ பெய்ட் டாக்ஸியாக இருந்ததால், சிறிது நம்பிக்கை இருந்தது. பில்லை வைத்து, நம்பரைக் கண்டு பிடித்து, விமான நிலையத்திலிருக்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, " இப்போதே வருகிறோம்" என்றோம்.

நடு இரவில், காரை எடுத்திக் கொண்டு, விமான நிலையம் சென்று, ப்ரீ பெய்ட் டாக்ஸியின் அலுவலகத்து நபரை விசாரிக்க, அவர், "இதோ டிரைவர் வந்து விட்டார்," என்றார். பத்து நிமிடத்தில் டிரைவர், லேப்டாப்பை அதிலுள்ள பொருட்களுடன் கொண்டு வந்து கொடுத்தார். போன உயிரே வந்தது போலிருந்தது. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்து, சன்மானமும் கொடுத்து விட்டு வந்தோம்.

ஜப்பானில் காமிரா தொலைந்து கிடைத்த சம்பவத்தை, நண்பர்களிடம் பகிர்ந்த்து கொள்ளும் போதெல்லாம், அவர்களிடமிருந்து,

"என்ன இருந்தாலும் ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா?"

என்ற கமெண்ட்ஸ் கேட்கும் போதெல்லாம்,

"இல்லை, இல்லை, இங்கேயும் நேர்மை உண்டு; இதெல்லாம் இங்கேயும் நடக்கும்; தொலந்து போன லேப்டாப் கூடக் கிடைத்திருக்கிறது"

என்று சொல்ல நினைத்தாலும்,

"பொருட்களைத் தொலைப்பதே உம் வழக்கமோ; லேப்டாப் கூடத் தொலப்பீரோ"

என்று யாரேனும், கேலி பேசுவார்களோ என்ற அச்சத்தினாலும்,

"எல்லாச் சாமான்களையும் நான் எடுத்துக் கொண்டு இற்ங்கினேனா என்று அந்த டாக்ஸி டிரைவர் பார்த்திருக்க வேண்டாமோ?: மற்ந்து விட்ட லேப்டாப்பை அப்படியே அமுக்கி விடலாமா; வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து, விற்கப் போய் மாட்டிக் கொண்டு விடப்போகின்றோம்; ஆகவே கொடுத்து விடலாம்" என்ற எண்ணத்தில்தான் திருப்பிக் கொடுத்திருப்பானோ என்ற எணணமும் ஏற்பட்டாதாலும்,

"ஆமாம்; ஆமாம்; ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா" என்றே சொல்லி வருகிறேன்.

அனைவரையும் கவரும் ஐயப்பன் ஆலயம்



சமீபத்தில் திருச்சி சென்ற போது, அங்குள்ள கன்டோன்மென்ட் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். இந்த ஆலயத்தில் என்னையும் மற்றும் பெரும்பாலோனரையும் கவர்ந்த அம்சங்கள் வருமாறு:-

1. எந்த மதத்தினரும் ஆலயத்தில் நுழையலாம்.

2. ஆண்டவன் பெயரிலே மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.

3. அமைதிக்கு முக்கியத்துவம் தந்து, "அமைதியாய் இருக்கலாமே!", "மெளனமாய் தரிசிக்கலாமே!" என்று ஆங்காங்கே பலகைகள். இப்படிப் பல்வேறு அறிவுரைப் பலகைகள். ஆனால் எதுவுமே வலிந்து பேசாதவை. உ-ம்;"அருகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாமே".

4. காமிரா, மொபைல் போன் அனுமதியில்லை.

5. குறிப்பிட்ட இடம் தவிர,எந்த இடத்திலும் சூடம், விளக்கு எற்றக் கூடாது.

6. உண்டியல் கிடையாது.

7. தட்டில் காசு போடுதல் கிடையாது.

8. கேசட், ஸ்பீக்கர் கொண்டு பாடல்களை அலற வைக்கும் வழக்கம் இல்லை. மென்மையான சங்கீதம் காற்றில் தவழ்ந்து வருகின்றது.

9. புல்வெளிகளும், பூங்காக்களும் பச்சைப் பசேலென்று பராமரிக்கப்படுகின்றன.

10. மலஜலம் கழித்துவிடக் கூடிய கைக்குழந்தைகளைத் தவிர்க்குமாறு தாய்மார்கள் வேண்டப்படுகின்றார்கள்,

11. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரம் வரை அமைதியாய் அமர்ந்து தியானம் செய்ய, தியான மண்டபம் உள்ளது.

12. பக்தர்கள் அனைவரும் கண்ணியமான உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி, ஜீன்ஸ் முதலியனவற்றைத் தவிர்க்க வேண்டும். பெண்களும் அவ்வாறே. துப்பட்டாவுடன் கூடிய சூடிதார் மட்டுமே அணிய வேண்டும். துப்பட்டா இல்லாதவற்கு, ஆலயத்தின் வாயிலில் துப்பட்டா வழங்கப்படுகின்றது. இதனையும் கண்ணியமாக அணிவது எப்படி எனவும் ஓர் பலகை விளக்குகின்றது.

Wednesday, February 22, 2006

அரசு ஆவணம்-1846

1. சந்த்ரமா, பாங்க், டிளா பட்டியைக் கட்டக் கூடாது.
2. புடவை, ஸாடி, பந்தளம் இவைகளுக்குக் கூட முந்தாணிக்கு ஜாலர் தைக்கக் கூடாது.
3. குசூம்பா நாடா போடக் கூடாது.
4. நாடாவுக்கு துய்யா தைக்கக் கூடாது.
5. மக்தாபீ ரவிக்கை போட்டுக் கொள்ளக் கூடாது.
6. பூ ராக்கடிக்கு பஞ்ஜ்யாவையும் களைகளையும் போட்டுக் கொள்ளக் கூடாது.
7. க்ருஷ்ண கொண்டை, முத்துவின் கொத்தைப் போடக் கூடாது.
8. சடையின் நுனியில் தங்கத்தில் குஞ்சத்தைத் தவிர பட்டுக்குஞ்சலத்தைப் போடக் கூடாது.
9. புத்தியை வாங்கக் கூடாது.
10. துப்பட்டாவைப் புழங்கக் கூடாது.
11. தாண்டாவிற்கு எலுமிச்சம்பழம் போடக் கூடாது.
12. குங்குமம் நெற்றியின் குறுக்கே தடவிக் கொள்ளக் கூடாது.

ஜபாணி குப்பண்ணா ஜாதவ்.

அரசு ஆவணம்-1846

1846 ஆம் ஆண்டு அரசு வெளியிடப்பட்ட மேற்க்காணும் ஆவணம் ஒன்றில், தேவதாசிகள் எவ்விதம் நடக்க வேண்டுமென விளக்குகின்றது.

ஆதாரம்

மரபு தந்த மாணிக்கங்கள்
தஞ்சாவூர் பி.எம். சுந்தரம்
டாக்டர் வே.ராகவன் நிகழ் கலை மையம்
சென்னை - 20

படித்தால் சிரிப்பு வரவழைக்கும் இந்த ஆவணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்த பட்சம், இதில் உள்ள தமிழ்(?) வார்த்தைகளுக்காவது யாரேனும் பொருள் கூற முடியுமா?

ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தமக்கென்று ஒரு தாய் மொழியைக் கொண்டுள்ளன. உதாரணமாக...

தமிழ் நாடு - தமிழ்
புதுச்சேரி - தமிழ்
கேரளம் - மலையாளம்
லட்சத் தீவுகள் - மலையாளம்
கர்னாடகா - கன்னடம்
ஆந்திரப் பிரதேசம் - தெலுங்கு
ஒரிஸ்ஸா - ஒரியா
மஹாராஷ்டிரம் - மராட்டி
குஜராத் - குஜராத்தி
தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி - குஜராத்தி
டாமன் மற்றும் டையூ - குஜராத்தி
கோவா - கொங்கணி
பிகார் - மைதிலி
ஜார்க்கண்ட் - சந்தாலி
ஜம்மு மற்றும் காஷ்மீர் - உருது, காஷ்மீரி மற்றும் டோக்ரி
அஸ்ஸாம் - அஸ்ஸாமீஸ், போடோ
மேற்கு வங்கம் - பெங்காலி
திரிபுரா - பெங்காலி
மணிப்பூர் - மணிப்புரி
சிக்கிம் - நேபாலி
டார்ஜிலிங் - நேபாலி
அருணாசலப் பிரதேசம் - நேபாலி
பஞ்சாப் - பஞ்சாபி, டோக்ரி
ஹிமாச்சலப் பிரதேசம் - டோக்ரி
ராஜஸ்தானி - மார்வாரி

இந்த எல்லா மொழிகளையும் நாடு முழுவதற்கும் ஆட்சி மொழியாக்குவது என்பது இயலாத காரியம்தான். ஆனால், இவ்வளவு மொழிகள் இருக்க, ஹிந்தி ஆட்சி மொழியானது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவல். (நான் அறிந்த வரையில், ஸம்ஸ்க்ருதமும், ஹிந்தியும் ஆட்சி மொழிக்குப் போட்டி போட, முன்னாள் குடியரசுத்தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் ஹிந்தி ஆட்சி மொழியானதாக அறிகின்றேன்.) மேலும் விபரமறிந்தவர்கள் ஹிந்தி தேசிய மொழியான வரலாறு சொல்லவும்.

Tuesday, February 21, 2006

தூண்டுதல்

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திறம்பட நிர்வகித்தவர் திரு.வி.ஆர்.தீனதயாளு. அவர் ஒருமுறை அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களுடன் உரையாடும் போது, தனது ஆலையிலுள்ள எழுத்துச் சிற்பிகளின் எழுத்தோவியங்கள் கொண்ட ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவ்வாறே ஒரு சிறப்பிதழ் எங்களுக்கென ஒதுக்கப்பட்டது. எனது கதை ஒன்றும் அதில் பிரசுரமானது. வெளிவந்த காலம் - ஆகஸ்ட் 1990.








Saturday, February 18, 2006

தமிழ்த் தாத்தா உ.வே.சா

காவேரி வாய்ப்படவும், கறையான் வாய்ப்படவும், இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை, ஊரூராகவும், தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும், திரிந்து தேடியும், விறகுத் தலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை ¦கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாகவும், பிறர்க்குப் பெரும் பயன்படவும், வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர், உ.வே.சாமினாதயரே (1855-1942) என்று தமிழ்ப் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் எழுதி இருந்த போதும், "தமிழ்த் தாத்தா" என்ற பெயருக்கான காரணம் புரிபடவில்லை, அன்னாரின் தமிழ் பதிப்புப் பணிப் பட்டியலைப் பார்க்கும் வரை.




ஆண்டு வயது பதிப்பு
------ ----- ------
1878 23 வேணுவனலிங்க விலாசச் சிறப்பு (க.தொ)
1885 30 மத்தியார்ச்சுன மான்மியம் (உ)
1887 32 சீவக சிந்தாமணி
1889 34 பத்துப் பாட்டு
1892 37 சிலப்பதிகாரம்
1894 39 புறநானூறு
1895 40 புறப்பொருள் வெண்பாமாலை
1897 42 திருப்பெருந்துறைப் புராணம்
1998 43 மணிமேகலை
பௌத்த மும்மணிகள் (உ)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (உ)
1999 44 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.2)
1900 45 பௌத்த மும்மணிகள் (ப.2)
1901 46 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.3)
1902 47 பௌத்த மும்மணிகள் (ப.3)
1903 48 ஐங்குறுநூறு
வீரவனப் புராணம்
சீகாழிக் கோவை
திருவாவடுதுறைக் கோவை
1904 49 பதிற்றுப் பத்து
சூரை மாநகர்ப் புராணம்
திருக்காளத்தி நாதருலா
திருப்பூவண நாதருலா
1905 50 திருவாரூர்த் தியாகராஜ லீலை
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.4)
1906 51 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருவிளையாடற் புராண பயங்கர மாலை
திருவுசாத்தான நான்மணி மாலை
கடம்புவன புராணம் (ஒரு பகுதியுடன்)
1907 52 சீவக சிந்தாமணி (ப.2)
தனியூர்ப் புராணம்
மண்ணிப் படிக்கரைப் புராணம்
தேவையுலா
1908 53 பௌத்த மும்மணிகள் (ப.4)
1909 54 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.5)
1910 55 திருவாரூருலா
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1911 56 பௌத்த மும்மணிகள் (ப.5)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.6)
1912 57 திருக்காளத்திப் புராணம்
1913 58 திருக்காளத்திப் புராணம் (ப.2)
1914 59 திருத்தணிகை திருவிருத்தம்
1915 60 புறப்பொருள் வெண்பாமாலை (ப.2)
1917 62 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.7)
1918 63 பத்துப் பாட்டு (ப.2)
பரிபாடல்
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
நன்னூல் மயிலை நாதருரையுடன்
1919 64 திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் (ப.2)
1920 65 சிலப்பதிகாரம் (ப.2)
ஐங்குறுநூறு (ப.2)
பதிற்றுப்பத்து (ப.2)
பெருங்கதை
1921 66 மணிமேகலை (ப.2)
1922 67 சீவக சிந்தாமணி (ப.3)
1923 68 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.8)
1924 69 புறநானூறு (ப.2)
1925 70 நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரையுடன்
1926 71 உதயணன் கதைச் சுருக்கம்
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1927 72 சிலப்பதிகாரம் (ப.3)
பூண்டி அரங்கநாத முதலியார் (உ)
1928 73 கமலை ஞானப் பிரகாசர் (உ)
1929 74 சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (உ)
பௌத்த மும்மணிகள் (ப.6)
1930 75 மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது
திரிமயிலை திரிபந்தாதி
தக்கயாகப் பரணி
கோபாலகிருஷ்ண பாரதியார் (உ)
1931 76 பத்துப் பாட்டு (ப.3)
மணிமேகலை (ப.3)
மதுரைச் சொக்கநாதருலா
ஆனத்தருத்ரேசர் வண்டு விடுதூது
1932 77 கடம்பர் கோயிலுலா
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
கொட்டையூர் ஸ்ரீசிவக் கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
மதுரை மும்மணிக்கோவை
பழனி இரட்டைமணி மாலை
பழனி பிள்ளைத் தமிழ்
1933 78 சங்கர நயினார் கோயில் சங்கரலிங்க உலா
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
மயிலை யமக அந்தாதி
பாசவதைப் பரணி
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (முதற்பாகம்) (உ)
1934 79 விளத்தொட்டிப் புராணம்
ஸ்ரீதியாராஜ செட்டியார் பிரபந்தங்கள்
சங்கர நயினார் கோயிலந்தாதி
வலிவுல மும்மணிக் கோவை
சத்யவாசகர் இரட்டை மணிமாலை
புறப்பொருள் வெண்பா மாலை (ப.4)
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (இரண்டாம்பாகம்) (உ)
1935 80 புறநானூறு (ப.3)
பரிபாடல் (ப.2)
பெருங்கதை (மூலம் குறிப்புரை மட்டும்)
ஆற்றூர்ப்புராணம்
திருஇலஞ்சி முருகனுரை
பழமலைக் கோவை
கலசைக் கோவை
உதயண குமார காவியம்
நன்னூல் சங்கர நமச்சிவாயம் உரையுடன் (ப.2)
1936 81 புறநானூறு (மூலம் அரும்பத உரையுடன்)
மண்விடு தூது
கோபால கிருஷ்ண பாரதியார் (உ)
மகாவைத்யநாதையர் (உ)
நான் கண்டதும் கேட்டதும்
பழையதும் புதியதும் (உ)
திருவள்ளுவரும் திருக்குறளும் (உ)
1937 82 குறுந்தொகை
சிராமலைக் கோவை
திருவாரூர்க் கோவை
தமிழ் நெறி விளக்கம்
நல்லூர்க் கோவை (முதற்பாகம்) (உ)
1938 83 திருக்கழுக்குன்றத்து உலா
அழகர் கிள்ளை விடு தூது
சிவசிவ வெண்பா
திருமலை ஆண்டவர் குறவஞ்சி
திருக்காளத்தி நாதர் இட்ட காம்ய மாலை
நல்லுரைக் கோவை (இரண்டாம் பாகம்) (உ)
1939 84 தணிகாசலப் புராணம்
புகையிலை விடுதூது
ஸ்ரீகுமர குருபர் சுவாமிகள் பிரபந்தங்கள்
திருப்பேரை மகர நெடுங் குழைக் காதர் பாமாலை
1940 85 வில்லைப் புராணம்
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
நினைவு மஞ்சரி (உ)
1951 86 பதிற்றுப் பத்து (ப.3)
மணிமேகலை கதைச் சுருக்கம் (ப.10)
1952 87 வித்துவான் தியாகராஜச் செட்டியார் (உ)
நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்)
செவ்வைச் சூடுவார் பாகவதம் (பதிப்புப் பணி ஏற்பு மட்டும்)
சீவக சிந்தாமணி (ப.4)
ப - பதிப்பு
உ - உரை நடை நூல்

Friday, February 17, 2006

விடையவன் விடைகள்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில
கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று
சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

(மரத்தடியில் ஏற்கெனெவே நான் பிரசுரித்த மேற்காணும் கேள்விகளை எனது இந்தப் பதிவில் மீண்டும் பிரசுரம் செய்கின்றேன்)

இழிது இழிது ஈயெனெ இரத்தல் இழிது; அதனினும் இழிது.....

நியூயார்க் 'பென்' (Penn) ஸ்டேஷனில், ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளில், "தட்டு ஏந்துபவர்களை ஊக்குவிக்காதீர்கள்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளன" (Do not encourage pan-handlers; Charities are there to take care of them), என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த அமெரிக்கவாசிகள், மாதா மாதம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, டாலர்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டுக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், நம்ம பாடு கஷ்டம்தான். அது போன்ற ஒழுங்குடன் உருப்படியாக அமைப்புகள் ஏதும் இருக்காது. எங்கு திரும்பினாலும், பிச்சைக்கார்கள் மயம்தான். கோவில் வாசலில் பிச்சை, ஹோட்டல் வாசலில் பிச்சை, டிராபிக் சிக்னலில் பிச்சை. அவர்களுக்குப் பிச்சை போடாவிட்டால், மனித நேயம் இல்லாத மனிதனா நீ என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்து விடும். போடுவது ஒரு ரூபாயோ, ஐம்பது பைசாவோ பிச்சை இட்டாலோ, பிச்சைக்காரர்களை ஊக்குவித்து ஒரு சோம்பேறிச் சமுதாயத்தை வளர்க்க நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும்.

டிராபிக் சிக்னலில், பாதுகாப்பு விதிகளை மீறி, வண்டிகளுக்கு நடுவே பூந்து புறப்பட்டுப் பிச்சையெடுப்பவர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும். ஒரு வாரக் கடைசியில் குடும்பத்துடன், ஹோட்டலுக்குச் சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு, வெளியே வந்தவுடன், உடனே ஹோட்டல் வாசலில், நாலைந்து கைகள் நீளும். இதில் எந்தக் கை உண்மையிலேயே தானம் பெறத் தகுதியான கை என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையாலுமே பசியால் வாடும் பார்ட்டியாக இருக்கலாம். அல்லது, உழைக்காமலே சோம்பேறித்தனமாகவே உட்கார்ந்து சாப்பிடப் பிறந்த ஜென்மமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரும் முறையும், பிச்சை போடக் கூடாது என்று முடிவு செய்து, பின்னர், அவர்களின் பாவப்பட்ட முகங்களப் பார்த்தவுடன், பிச்சை போட்டு விடுவது வழக்கம்.

கமல் நடித்த 'பேசும் படம்' என்ற ஒரு படத்தில் ஒரு பிச்சைக்காரனது பாத்திரம் வரும். இறுதியில்தான் தெரியும், கோஷ்டி, படு வெயிட்டான பார்ட்டி ஒன்று என்று. இது போல, புகழ் பெற்ற கோவில்களின் வாசல்களில், பிச்சை எடுப்பதையே வாழ்நாள் முழுவதும், முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் பல பேரைப் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு ஒருக்காலமும் உதவி செய்வதில்லை என்று தீர்மானித்ததுண்டு. ஆனால் இதே கோவில் வாசல்களில், உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய சிலரைப் பார்க்கலாம். அவர்களுக்கு உதவி செய்யாமலிருக்க மனசு வராது.

பெரும்பாலான மதங்கள், தானம் கொடுப்பதை, (பிச்சை போடுவதை) ஊக்குவிக்கின்றன. ஆனால் அது, அந்தக் காலத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம்.தற்காலத்தில் இது சரியா? தெரியவில்லை. பசியோடு வந்து பிச்சை கேட்கும் ஒரு சிறுவனிடம், "ஏண்டா, உழைத்துச் சம்பாதிக்க மாட்டேங்கிறாய்? நான் வேலை வாங்கித் தரட்டா?", என்று சில பேர் ப்ளேடு போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

"போடுவது ஐம்பது பைசாவோ அல்லது ஒரு ரூபாயோ. இதற்காகவென்று ஒரு பதிவு வேறு தேவையா?" என்று நீங்கள்கூடக் கேட்கலாம். பிரச்னை அதுவல்ல. பிச்சைக்காரர்களை ஊக்குவிக்கலாமா அல்லது கூடாதா என்பதுதான் இங்கு வாதம். உங்கள் கருத்து என்னெவென்று சொல்லுங்கள்.

Thursday, February 16, 2006

கச்சா எண்ணெய்க்கு ஒரு வாழ்த்து




(வலைப்பதிவு இல்லாத காலமாயிருந்தாத்தான் என்ன. வாய்ப்பு கிடைச்சா விடுவமா (கிறுக்க).)

கச்சா எண்ணெய் நாயகியே,
கறுப்புத் தங்கக் காதலியே,
மண்மகளின் பொன் மகளே,
மணலி ஆலையின் மருமகளே!
காலமெல்லாம் பொன்னாக
களிப்புடன் வாழி எந்நாளும்.

வளைகுடா நாடுகளில்
வனப்புடனே வளைய வந்தாய்
அரவிக்கடல் முதல் அஸ்ஸாம் வரை
அழகுடனே பவனி வந்தாய்- இன்றோ
எம்தமிழர் மகிழும் வண்ணம்
எழில் நதியாம்
காவேரிப் படுகைதன்னில்
களிப்புடனே விளைகின்றாய்!

சுத்திகரிப்பு ஆலைதன்னில்
பக்குவமாய் பல உருவம் பெறுகின்றாய்.
எந்தனை வடிவம் எடுத்தாலும்
அத்தனையும் அகிலமெங்கும்
அடைந்து நன்மை செய்வதற்கே!

சடுதியில் சமையல் செய்ய
அடுப்படியில் எரிகின்றாய்,
எல்பிஜி எனும் பெயரில்!

உரத் தொழிற்சாலை, உந்து வாகனம்
உனதருளின்றி
உண்மையிலே இயங்கிடுமோ,
விளக்கெரிக்கும் மண்ணெண்ணையாக
விமானம் ஓட்டும் ஜெட் எண்ணெயாக
சிந்தை மகிழும் வண்ணம்
விந்தைகள் செய்கின்றாய்.
வந்தனங்கள் செய்திடுவேன்
வாழ்த்துப்பா பாடிடுவேன்.
கச்சா எண்ணெய் நாயகியே,
களிப்புடன் வாழி எந்நாளும்.

(எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி புரிந்த காலத்தில், house magazineக்கு எழுதியது.)

Monday, February 13, 2006

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்

1. பி.எஸ்.கிருஷ்ஸ்வாமி ஐயங்கார்
2. மதுரை.ஏ.வைத்தியனாத ஐயர்
3. எல்.என்.கோபால்சாமி ஐயர்
4. னீதிபதி.வி.பாஷ்யம் ஐயங்கார்
5. கல்லிடைக்குறிச்சி பு.யக்ஞேஸ்வர சர்மா
6. கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர்
7. கல்லிடைக்குறிச்சி லஷ்மி சங்கர ஐயர்
8. ஜி.மகாதேவன்
9. தேவகோட்டை எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்
10. மானாமதுரை எஸ்.ராமஸ்வாமி ஐயர்
11. எஸ்.ராஜம் ஐயங்கார்
12. தேவகோட்டை ரங்கண்ணா
13. டாக்டர். ஆர்.காளமேகம் ஐயர்
14. மாயனூர்.கே.ஜி.சிவசாமி ஐயர்
16. ஜே.நடராஜ ஐயர்
17. பெரம்பலூர் நரசிம்ம ஐயங்கார்
18. அன்பில் ராஜகோபால ஐயங்கார்
19. டாக்டர். ராமச்சந்திர ஐயர்
20. டாக்டர்.பி.வி.முத்துகிருஷ்ண ஐயர்
21. டாக்டர் வி.வி.நாகநாத ஐயர்
22. தஞ்சை வி.பூவராக ஐயங்கார்
23. டாக்டர் எம்.கே.சாம்பசிவ ஐயர்
24. நாராயண ஐயர்
25. சின்னசேலம் கே.வெங்கடேச ஐயர்
26. டாக்டர் .பி.எஸ்.சீனிவாசன்
27. டாக்டர் .பி.எஸ்.ரகுராமன்
28. எஸ்.சோமசுந்தரம் ஐயர்
29. சேலம் வாஞ்சிநாத ஐயர்
30. திருச்செங்கோடு தியாகராஜ ஐயர்
31. நாமக்கல் ஏ.ரங்காச்சாரி
32. கோத்தகிரி ஜி.மகாதேவ ஐயர்
33. பி.என்.சங்கரநாராயண ஐயர்
34. கோபி ஸ்ரீகண்ட ஐயர்
35. கோபி வி.ராம ஐயங்கார்
36. மாயனூர் சாம்பசிவ ஐயர்
37. வை.சங்கரன்

புதிரோ புதிர்... விடைகள்

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?

- 1927ல் தேவகோட்டையில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும், 1928ல் திருச்சி ஸ்ரீரங்கம் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும்ஏற்படுத்தி மின்சார வினியோகம் செய்ய ஆரம்பித்தனர். தனியார் மின்சார வினியோகத்தில் அவர்களே முன்னோடிகள்.

2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?

- திருத்தணி

3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம் படித்து, 150 படங்களுக்கும் மேல் கதானாயகனாக நடித்த தமிழ் நடிகர் யார்?

- ஜெய்சங்கர்

4. 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மானாட்டுக்கு, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு உதவி செய்து மானாட்டை வெற்றிகரமாக முடிக்க உதவி செய்த திரைப்படப் பிரபலம் யார்?

- எஸ்.எஸ்.வாசன்

5. பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண ஸாஸ்திரியார்) அவர்கள் எத்தனை காலம் உயிர் வாழ்ந்தார்?

- 32 வருடங்கள்

6. தஞ்சையில் மருத்துவம் பயின்று, மலேசியாவில் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்.சிவசுவாமி, பின்னாளில் வேறு ஒரு பெயருடன் புகழ்பெற்றார். அவரது பின்னாள் பெயர் என்ன?

- ஸ்வாமி.சிவானந்தா

7. பட்டிமன்றம் போலவே, தமிழில் வழக்காடு மன்றம் என்ற ஒரு புது னிகழ்ச்சியினை கண்டு பிடித்து, அறிமுகப்படுத்தியவர் யார்?

- புலவர் கீரன்

8. தமிழின் தொன்மையான, தொல்காப்பியத்தினை, "பயப்படாதீர்கள்" என்ற தலைப்பில், ஒரு எளிய நூலாக எழுதியவர் யார்? அவருக்கு 'ஜோதி' என்ற புனை பெயரும் உண்டு.

- வாகீசகலானிதி. கி.வா.ஜகன்னாதன்

9. சுவாமி சித்பவானந்தர், எந்தப் பிரபல அரசியல்வாதியின் சிறிய தகப்பனார்? இந்தப் பிரபலம் ஒரு பாரத்ரத்னா கூட.

- முன்னாள் நிதியமைச்சர் பாரதரத்னா.சி.சுப்பிரமணியம்.

10. "மகாதேவ்லைட்" என்றால் என்ன? எங்குள்ளது?

- புவியியல் விஞ்ஞானி டாக்டர்.மகாதேவன் அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில், நரசிம்மராவ் பேட்டை என்ற இடத்தில் கண்டு
பிடித்த ஒரு தாதுப் பொருள் (mineral finding).

11. பாரத்ரத்னா விருதினை முதன்முதலில் பெற்ற தமிழ்னாட்டைச் சேர்ந்தமூவர் யார் யார்?

- ராஜாஜி
- டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன்
- டாக்டர்.சர்.சி.வி.ராமன்

12. வைஸ்ராய் இர்விங் பிரபு, 1927ஆம் ஆண்டு, கோவை மாகரிலுள்ள இந்த இடத்திற்குச் சென்ற போது, "இது போன்ற அதிசயத்தை னான் எங்கும் கண்டதில்லை" என்றார். அது எந்த இடம்?

- கலப்பினக் கரும்புப் புரட்சி செய்து வந்த கரும்பு இனப் பெருக்க ஆய்வு நிலையம்

13. விற்பனை வரி என்ற ஒரு வரியினை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் வருவாயினைக் கணிசமாக உயர்த்திய
முதலமச்சர் யார்?

- ராஜாஜி

14. ஜவுளிக்கடை, வேர்க்கடலைக் கடை, மோட்டார்க் கம்பெனி ஆகிய இடங்களில் வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை, ஆயுர்வேத மருத்துவரிடம் வேலை, குதிரைப் பந்தய சூதாட்டக் கிளப்பில் வேலை என்று பல்வேறு இடங்களிலும் சிற்சில காலங்கள் பணி புரிந்த புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் யார்?

- பி.எஸ்.ராமையா

Saturday, February 11, 2006

புதிரோ புதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?

2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?

3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம் படித்து, 150 படங்களுக்கும் மேல் கதானாயகனாக நடித்த தமிழ் நடிகர் யார்?

4. 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மானாட்டுக்கு, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு உதவி செய்து மானாட்டை வெற்றிகரமாக முடிக்க உதவி செய்த திரைப்படப் பிரபலம் யார்?

5. பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண ஸாஸ்திரியார்) அவர்கள் எத்தனை காலம் உயிர் வாழ்ந்தார்?

6. தஞ்சையில் மருத்துவம் பயின்று, மலேசியாவில் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்.சிவசுவாமி, பின்னாளில் வேறு ஒரு பெயருடன் புகழ்பெற்றார். அவரது பின்னாள் பெயர் என்ன?

7. பட்டிமன்றம் போலவே, தமிழில் வழக்காடு மன்றம் என்ற ஒரு புது னிகழ்ச்சியினை கண்டு பிடித்து, அறிமுகப்படுத்தியவர் யார்?

8. தமிழின் தொன்மையான, தொல்காப்பியத்தினை, "பயப்படாதீர்கள்" என்ற தலைப்பில், ஒரு எளிய நூலாக எழுதியவர் யார்? அவருக்கு 'ஜோதி' என்ற புனை பெயரும் உண்டு.

9. சுவாமி சித்பவானந்தர், எந்தப் பிரபல அரசியல்வாதியின் சிறிய தகப்பனார்? இந்தப் பிரபலம் ஒரு பாரத்ரத்னா கூட.

10. "மகாதேவ்லைட்" என்றால் என்ன? எங்குள்ளது?

11. பாரத்ரத்னா விருதினை முதன்முதலில் பெற்ற தமிழ்னாட்டைச் சேர்ந்த மூவர் யார் யார்?

12. வைஸ்ரால் இர்விங் பிரபு, 1927ஆம் ஆண்டு, கோவை மாகரிலுள்ள இந்த இடத்திற்குச் சென்ற போது, "இது போன்ற அதிசயத்தை னான் எங்கும் கண்டதில்லை" என்றார். அது எந்த இடம்?

13. விற்பனை வரி என்ற ஒரு வரியினை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் வருவாயினைக் கணிசமாக உயர்த்திய முதலமச்சர் யார்?

14. ஜவுளிக்கடை, வேர்க்கடலைக் கடை, மோட்டார்க் கம்பெனி அகிய இடங்களில் வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை, ஆயுர்வேத மருத்துவரிடம் வேலை, குதிரைப் பந்தய சூதாட்டக் கிளப்பில் வேலை என்று பல்வேறு இடங்களிலும் சிற்சில காலங்கள் பணி புரிந்த புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் யார்?

Wednesday, February 08, 2006

அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் - புதிர்கள்

1. "அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்" புத்தகத் தொகுப்பினைத் தலை மீது வைத்து நடந்த்து வந்த ஐந்து வயது அருண்குமாரின் அப்பா ஆச்சரியப்பட்டார். ஏன்?

2. உஷாஸ்ரீயும், தேவாவும் பஸ் ஸ்டாண்டில் தமது பெண் குழந்தைகளுடன் பஸ்ஸ¤க்காகக் காத்திருந்தனர். தேவாவையும், குழந்தைகளைªயும், 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் ஏற்றி விட்டு, அடுத்த பஸ்ஸில் தான் வருவதாகச் சொல்கிறார் உஷாஸ்ரீ. எப்படி?

3. 1988ல் ரகுராமையா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்றிருந்த அணியில், தானும் இருந்தாக, வினோத் காம்ப்ளி சொன்ன போது, சச்சின் டெண்டுல்கர், விழுந்து விழுந்து சிரித்தார். ஏன்?

4. கார்ப்பொரேஷன் மைதானத்தில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த்த, கோல் கீப்பர் கண்ணனுக்கு, பந்து தலையில் பட்டு, மண்டை உடைந்தது. எப்படி?

5. ராம் யாதவ் வளர்த்து வந்த ஒரு கருப்பு ஆடு, கிருஷ்ண யாதவ்வின் கருப்பு ஆட்டு மந்தைக்குள் நுழைந்து விட்டது. ஊனம் ஒன்றுமில்லாத தனது ஆட்டை, நொடியில் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டான் ராம் யாதவ். எப்படி?