Thursday, November 20, 2008

தமிழ்த் திரையிசையில் ஸ்வராக்ஷரம்

ஸ்வராக்ஷரம் என்பது கர்நாடக இசையின் ஒரு படிமம். ஸ்வராக்ஷரம் என்ற வார்த்தையினைக் கூர்ந்து கவனித்தால் அது ஸ்வரம், அக்ஷரம் என்ற இரு வார்த்தைகளின் கலவை என்பது புரியும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.

ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும்.

திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி" என்ற பாடலில், "தாருக்குதவி செய்யும் அடுத்தாருக்குதவி செய்யும் தாய் உனைவிட வேருளதா? தாமதமின்றி வேதபுரி தாசனுக்கருந்த என்பதறிதா, பெரிதா, வரம் தா" என்று தைவதத்தை வைத்து ஜாலம் செய்திருப்பார்.

ஜி.என்.பி அவர்களது 'சதாபாலய", பிறகு,கேதாரத்தில் துவங்கி வலசி என்ற நவராகமலிகை வர்ணத்தில், பதஸரோஜ" என்ற இடம், ஹிந்தொள இராகத்தில் அமைந்த "ஸாமகான லோல", ஆனந்த பைரவியில் அமைந்த மற்றோரு "ஸாமகான" ஆகியவை ஸ்வராக்ஷரங்களுக்கு நல்ல உதாராணங்களாகும்.

திரையிசையில் இவ்வாறு ஸ்வரக்ஷரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாவென்று பார்த்தால், ஒரு சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.

அகத்தியர் என்ற படத்தில் வரும், "வென்றிடுவேன்... எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்", என்ற பாடலில் வரும் சில ஸ்வராக்ஷரங்கள்:-

மனிதா மத மனிதா - ம நீ தா... ம த... ம நீ தா
பாதக மனிதா - பா த க... பா நீ தா
சாகசமா - ஸ க ஸ மா

ஸ்வரக்ஷரம் அழகாக அமையப் பெற்ற ஓரிரு தமிழ்த் திரைப் பாடல்களில் ஒன்று, "உன்னால் முடியும் தம்பி" படத்தில் இடம் பெற்ற, "என்ன சமையலோ" என்ற பாடலாகும். இதில் ஸ்வராக்ஷரம் என்பது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இடம் பெற்றிருப்பது ஒர் சிறப்பம்சமாகும்.




ஸ்வராக்ஷரம் என்றால் என்னவென்று இப்போது பிடிபட்டிருக்கும்.

இப்போது இந்த "என்ன சமையலோ" என்ற பாடலில் வரும் ஸ்வராக்ஷரங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

- சிமுலேஷன்

Thursday, September 25, 2008

செம்மங்குடி மாமாவும் ஏர்போர்ட் கச்சேரியும்

(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்)

"சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். தனது தந்தையார் கட்டளையிட்ட ஒரு காரணமாகவே தனது இறுதிநாள் வரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை அவர். இப்படி எந்த வெளிநாடுகளுக்கும் சென்றிருக்காத செம்மங்குடி அவர்கள் "ஏர்போர்ட் கச்சேரி" என்ற ஒரு கச்சேரி செய்ததாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இரயில் பயணங்களிலோ, இரயில் நிலையங்களிலோ கச்சேரி செய்யும் ஒரு வாய்ப்புள்ளது. அது எப்படி ஏர்போர்ட் கச்சேரி? எனக் குழம்பலாம். மேலும், இந்த ஏர்போர்ட் கச்சேரி எந்த ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? எதற்காக ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? போன்ற குழப்பமான தகவல்கள் உண்டு.

இந்தக் கச்சேரியில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலினும், திருச்சி சங்கரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்துள்ளதாகத் தெரிகின்றது. சமீபத்தில் 1971ல், மும்பையில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் இந்தக் கச்சேரி நடைபெற்றதாகவும், கச்சேரியின்போது, அருகில் பறக்கும் ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இன்னம் சிலரோ, இல்லை இல்லை, இந்தக் கச்சேரி இன்னமும் சமீபத்தில் 1960ல் தாம்பரத்தில்தான் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர். கடைசியாகக் கிடைத்த தவலின்படி இது தாம்பரத்தில்தான் நடைபெற்றதாகத் திருச்சி சங்கரன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தருகே ஆகாய விமானங்களின் வரத்து அதிகம் இருந்ததால், செம்மங்குடி மாமா கடுப்பானதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயத்தில், "வந்துட்டான் அசுரன்"னு அவர் சொல்வதைக் கேட்கும்போது, இது உண்மைதான் என்று புரிகின்றது.


இப்போது ஜெட் ஏர், கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர், கோ ஏர், இண்டிகோ, பாராமவுண்ட் என்று பல விமானக் கம்பெனிக்கள் இருப்பதால் விமானப் போக்குவரத்து அதிகம் இருக்கின்றது. சுமார் 30-40 ஆண்டுகள் முன்னாலே எப்படி விமான போக்குவரத்து அதிகமாக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்டபோது, கிடைத்த விளக்கம் என்னவென்றால், அந்த சமயத்தில் விமான நிலைய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தக் கச்சேரி நடைபெற்ற நன்னாளில், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், விமானப் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்தை செம்மங்குடி மாமாவே இசைக் கல்லுரியில் ஒரு முறை சொன்னாராம்.

இந்தக் கச்சேரியில் கிட்டத்தட்ட 18 உருப்படிகள் பாடியுள்ளார். அருமையான இந்த நிகழ்ச்சியினை அவரே வெகுவாக இரசித்துப் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில், "இன்னிக்கிப் பாடிண்டே இருக்கலாம் போல இருக்கு" என்று சொல்கின்றார். இந்தக் கச்சேரியின் ஒரு சில பாடல்களை தரவேற்றலாம் என்றால், மிகப் பெரிய கோப்பாக உள்ளது. எனவே உண்மையிலேயே ஏர்போர்ட் கச்சேரி கேட்க ஆவலாக உள்ளவர்கள் இங்கே சென்று இரசியுங்கள். முடிந்தால் எந்தப் பாட்டில் "வந்துட்டான் அசுரன்"னு சொல்றார்னு என்பதனையும் சொல்லுங்கள்.

- சிமுலேஷன்

Sunday, September 07, 2008

"ரெகார்ட் ப்ளேயர்" காலம்

"டெலெராட்" என்ற பெயர் கொண்ட வால்வ் ரேடியோ மட்டும் வைத்திருந்த எங்கள் இசை வாழ்வில் வசந்தம் வீசியது ஒரு நாள். உறவினரின் திருமணத்திற்கு கோவை சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் திரும்பி வரும்போது சர்ப்ரைஸாக "ரெகார்ட் ப்ளேயர்" ஒன்று வாங்கி வந்தது கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், அதற்கு எலெக்ட்ரிக் கனெக்ஷன் எப்ப்டிக் கொடுப்பது என்பது மட்டும் புரிபடவில்லை. எந்த இடத்தில் எலெக்ட்ரிக் ப்ளக் இருக்கு என்றே தெரியவில்லை. மறுநாளே, கோவைக்கு ரெகார்ட் ப்ளேயரை எடுத்துச் சென்று கடையில் விசாரித்தபோது, அதன் அடிப்பாகத்தில் உள்ள ஒரு மூடியில் உள்ள ஒரு மரையில் ஒரு நாலணா காசினை வைத்துத் திருக அழகாகத் திறத்து கொண்டது. 210 வோல்டியிருந்து 12 வோல்ட்டுக்குக் குறைக்கும் ஒரு டி.சி. எலிமினேட்டரும் வெளிப்பட்டது. அவர்கள் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் திரும்பி வரும் வரை, வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தோம்.

மின்சார இணைப்பு கொடுத்தவுடன் இசை மேடை சுழலத் தொடங்கியது. இசைத் தட்டினைப் போட்டு இயக்கியவுடன், ஒலியும் வரத் தொடங்கியது. ஆனால், இப்போது வேறு பிரச்னை. இந்த முறை எம்.எஸ் அவர்கள் எம்.டி.ராமனாதன் குரலில் ழ்.ழ்ழ்ழ்ழ் என்று முழங்கினார்கள். எல்லா இசைத்தட்டிலும் இதே பிரச்னை. மீண்டும் ஒரு மணி நேர கோவை பயணம். "என்ன செய்தீர்கள்?" என்று கடைக்காரர் கேட்டு பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். என்ன கூத்துவென்றால், இசைத்தட்டின் மேல் வைக்கும் முள்ளைப் பாதுகாக்க பித்தளையில் ஒரு கவசம் (protection guard) ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கவசத்தினை எடுக்காமல், அப்படியே இசைத்தட்டின் மேல் வைத்திருந்திருகின்றோம்.

இந்த மாதிரியான கூத்துக்கள் ஒய்ந்த பின் இசைத்தட்டுக்களை ஒவ்வொன்றாக ஓடவிட்டு இரசித்தோம். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தபின் இசைத்தட்டுக்களை கேட்பது வாடிக்கையானது. நண்பர்களை அழைத்து வந்து 45 rpm ல் பாடிய பாலமுரளி கிருஷ்ணாவை 78 rpmல் ஒடவிட்டு கீச்சுக்குரலில் பாடவைப்பதும் ஒரே தமாஷாக இருக்கும்

எலெக்ரானிக் யுகத்தில், முன்னேறங்கள் ஏற்பட்டு, கேஸட் ப்ளேயர், சி.டி, டி.வி.டி, ப்ளூ ரே, என்று எத்தனையோ தொழில் நுட்பங்களப் பார்த்தாலும், முதன் முதலாக் ரேடியோ நிகழ்ச்சிகள் போல அல்லாமல் ரெகார்ட் ப்ளேயர் மூலம் எந்தப் பாட்டையும் எவ்வளவு முறையும் கேட்க முடியும் என்றபோது அடைந்த ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை.

நாங்கள் வைத்திருந்த ரெகார்ட் ப்ளேயர் ரிப்பேராகி, சரி செய்ய ஆளில்லாமல் பின்னர் ஒரு நாள் அதனைத் தூக்கிப் போட்டோம். இசைத் தட்டு நினவலைகளை கேட்டுக் கேட்டு, மனைவிக்கும் அதனைக் கேட்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால் இசைத்தட்டுக்கள் இருந்ததே ஒழிய, ப்ளேயர் இல்லாத காரணத்தால்,ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

இத்தனை நாட்கள் கழித்து, நேற்று மூர்மார்க்கெட்டில் ஒரு பழைய HMV Fiesta மாடல் ரெகார்ட் ப்ளேயரை 500 ரூபாய்க்கு வாங்கினேன். சுமார் 35 ஆண்டுகள் கழித்து, இசைத்தட்டுக்களைத் தூசி தட்டி எடுத்து மீண்டும் ஒட விட்டபோது, அடைந்த ஆனந்தம் மட்டற்றது.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". பதிவர்களே! விரைவில் எதிர்பாருங்கள் எமது இசைத்தட்டு ஒலிபரப்பினை.

- சிமுலேஷன்

Thursday, August 21, 2008

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

"சென்னை தினம்", மற்றும் "சென்னை வார" விழாக்களையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று, நேற்று முன் தினம் தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற "அனில் ஸ்ரீனிவாஸின்" பியானோ இசை மற்றும் சென்னை இசை குறித்தான 'லெக்டெம்'. காதுக்கு அருமையான விருந்து. கூடப் பாடியவர் சுபிக்ஷா ரங்கராஜன். ("கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி" பாடியவர்) இப்படிக்கூடஒரு காம்பினேஷன் இருக்க முடியுமா என்று முதலில் யோசிக்க வைத்துப் பின்னர் பார்வையாளர் அனைவரையும் பரவசப்படுத்தினார் 'கஞ்சிரா' புருஷோத்தமன். உண்மையிலேயே இந்த பியானோ-கஞ்சிரா காம்பினேஷன் இரசிகர்கள் அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று. அனில் ஸ்ரீனிவாஸ் சென்னையில் வாழ்ந்த மேல்நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பு, சென்னையின் மேல் பாடப்பெற்ற பாடல்களைப் பற்றியும் அலுப்புத் தட்டாமல் பேசினார். இதில் சென்னையில் வாழ்ந்து பன்முகத் திறன் கொண்ட கல்கி அவர்களின் பங்களிப்பும் இடல் பெற்றது. கல்கி அவர்களின் "பூங்குயில் கூவும் பூஞ்சோலை" என்ற பாடல் சுபிக்ஷா ரங்கராஜனால் பாடப்பெற்றது. அந்த்க் காலத்தில் டி.கே.பட்டம்மாள் பாடிய் பாடலென்று நினைக்கின்றேன்.

காபி இராகத்தில் அமைந்த இந்தப் பாடலின் வரிகளும், மெட்டும், இசையும் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. கூகிளார் உபயத்தில் நித்யஸ்ரீ அவர்கள் இதனைப் பாடியுள்ளதாக அறிந்தேன். நீங்களும் இதனைக் கேளுங்களேன்.



பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்

மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
மாமயில் மீது மாயமாய் வந்தாய்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
இன்னமுதென்ன என் மொழி பகர்ந்தொரு
மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மின்னலைப்போலே...மறைந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்...ஒரு நாள்

பனி மலரதனில் புது மணம் கண்டேன்
பனி மலரதனில் புது மணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
தனிமையில்...இனிமை கண்டேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்...ஒரு நாள்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
வள்ளி மணாளன் என்னையே மறவான்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பேரருலாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தால் மெய் மறந்தேன்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
மாமயில் மீது மாயமாய் வந்தான்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் ஒரு நாள்...ஒரு நாள்...

- சிமுலேஷன்

Thursday, August 14, 2008

பிறந்தநாள் வேஷ்டியும் காலணிப் பரிசும்

பொதுவாகவே பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும், 'பிராண்டட்' சட்டை பேண்ட் மற்றும் ஹோட்டல் வகையறாக்களுக்கு 1500-2000 ரூபாய் வரை செலவாவது வழக்கம். இந்த முறை சற்றே வித்தியாசமாகக் கொண்டாட எண்ணி, பட்ஜெட்டைக் குறைத்துக் கொண்டு வேஷ்டி சட்டையுடன் முடித்துவிடத் திட்டம் போட்டேன். காரணம்*** இறுதியில் சொல்கிறேன். ஒரிரு நாட்கள் முன்பு தி.நகரில் கண்ணில் பட்ட ராம்ராஜ் ஷோ ரூமுக்குச் செல்ல எண்ணினேன். நடிகர் ஜெயராமை கலக்கலாக மாடலிங் செய்ய வைத்து, வேஷ்டி மார்க்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ள ராம்ராஜ் நிறுவனம் தி.நகர் பாண்டி பஜாரில் சமீபத்தில் தமது வேஷ்டி வகையறாக்களுக்காகப் பிரத்யேக ஷோ ரூம் ஒன்றினைத் திறந்துள்ளார்கள். சாதாரண ஜரிகை வேஷ்டி, மயில்கண் வேஷ்டி தவிர எத்தனை வெரைட்டி? ஆச்சரியமாக உள்ளது. இது வரை நீங்கள் பார்க்காத வண்ணங்களில், விதவிதமான கரைகளில் வேஷ்டிகள் இருப்பதைப் பார்த்தால் வேஷ்டிப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான். (ராம்ராஜ் எத்தனை நாடுகளில் மில் வைத்துள்ளாரகள் என்பது மற்றுமொரு வியப்பான விஷயம்? )
( மயில்கண் ஜரிகை வேஷ்டி)

(பருத்தி வேஷ்டி)

இந்த வேஷ்டி வகையறாக்கள் சாமான்யரும் வாங்கும் வண்ணம் சுமார் 200 ரூபாயிலிருந்து இருக்கின்றன. பாரம்பரிய உடை அணிய விருப்பம் இருப்பவர்களை ஒரு முறை இந்த ஷோ ரூமுக்கு விஜயம் செய்ய பரிந்துரைக்கின்றேன். வெளிநாடு வாழ் மக்களே, விரைவில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகமும் செய்யவுள்ளார்கள்.

***இன்று (14th) ஆங்கில வருடப்படி பிறந்தநாள்; நாளை நட்சத்திரம். நாளைய தினம் அருகிலுள்ள பள்ளிக்குக் குடும்பத்துடன் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது 80 பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கவுள்ளோம். சந்தோஷத்திலேயே அதிக சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் தெரிகின்றது.

- சிமுலேஷன்

Monday, July 07, 2008

உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?

  • உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?அவர் சீக்கிரம் விடுதலையாகி பத்திரமாக வீடு திரும்ப நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்துகள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ராக் வாட்டர் மற்றும் ஸ்வீட் செஸ்ட்நட்.
  • உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் (IC Unit), “இப்போது ஏதும் சொல்ல முடியாது”, என்று டாக்டர்கள் கைவிட்ட கேசுகளில் (மூளையில் இரத்தப் பெருக்கு, மூன்றாவது ஹார்ட் அட்டாக்) நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ஸ்வீட் செஸ்ட்நட் மற்றும் கார்ஸ் ஆகிய நான்கு மருந்துகளையும் சேர்த்து (2-4 மணிக்கோர் தடவை) நோயாளி விரவில் குணமாகி விடுவார்.
  • கடவுளால் உண்டாக்கப்பட்ட பணம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது நியதி. கடவுள் நமக்கு நிறைய கொடுக்கத்தானே வேண்டும்? பண்டிகக்குச் செலவு செய்யும்படி வைத்தால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்கும்படி செய்ய வேண்டுமல்லவா? ஆனால், நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. இஃது ஏனெனில் பண்டிகையை எப்ப்டிக் கொண்டாடுவது எப்படி என நமக்குத் தெரியாமல் போய்விட்டதுதான். “வாட்டர் வயலட்” என்ற மலர் மருந்து, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பும், பின்பும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர, தீபாவளிக்குச் செலவழித்த பணம் எதோ ஒரு விதத்தில் 1-3 மடங்காக திரும்பி வருவது பலரது அனுபவம்.
  • வயது வந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் ஸ்வீட் செஸ்ட்நட் என்ற் மலர் மருந்து சாப்பிட்டு வர. 1-2 மாதங்களில் “வரதட்சிணை வேண்டாம். உங்கள் பெண்தான் வேண்டும்” என நல்ல குணம் அமைந்த நிறைய சம்பாதிக்கும் பையனின் பெற்றோர்கள் வலிய வந்து பெண் கேட்பார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கபடுகின்றன. பெண்ணிற்கு வரன் தேடி, வீடு வீடாக ஏறிச் சென்று “என் பெண்ணை பார்க்க வாருங்கள்” என நமது மூளையை உபயோகித்துச் செயல்படுவதால், சொர்க்கம் செய்யும் வேலைக்குத் தடங்கல் செய்கின்றோம். அதனால் சரியில்லாத பையனுக்கு திருமணம் செய்து கொடுத்து, பெற்றோரும் அப்பெண்ணும் காலம் பூராவும் கஷ்டத்திலே நொந்து போகின்றனர்.
  • ஒரு பஸ்ஸை, ஒரே நேரத்தில் இரண்டு டிரைவர்கள் (ஸ்டீரிங்கைப் பிடித்து) ஓட்டினால் விபத்துதான் நிகழும்.பெற்றோர்கள் ஸ்வீட் செஸ்ட்நட் சாப்பிட்டு வர, மாப்பிள்ளை தேடும் விஷயத்தில் மட்டும் அம்மருந்து நமது மூளையை நிறுத்தி வைத்துவிடுவதால், சொர்க்கம் தனது வேலையை சுலபமாகச் செய்துவிடுகிறது. (The Beach remedy Chestnut switches off our mind so that heaven can a free play in selecting the right boy and sending him to the girl’s house)
  • திருமணம் நிச்சியமானவுடன், இம்மருந்தை பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, திருமண செலவுக்கான பணம் நிறைய வந்து கொண்டே இருக்கும். (ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல) இது எப்படி?

    சொர்க்கத்தில் உள்ல கடவுள் திருமணத்தை நிச்சியிகின்றார் எனில், அந்தக் கடவுலள் திருமண செலவுக்கு நிறையப் பணம் அனுப்பித்தானே ஆக வெண்டும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவ்வாறு எவருக்கும் நடைபெறவில்லையே என அங்கலாய்க்கும் நபர்களைப் பார்த்து, “ஸ்வீட் செஸ்ட்நட் மருந்து சாப்பிட்டுப் பாருங்கள்” என இயற்கை அறைகூவல் விடுக்கிறது.

    “ஸ்வீட் செஸ்ட்நட் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது? திருமண வைபவத்திற்கு நாம் “திட்டமிடுதம்” மனதில் செயலை மாத்திரம் இம்மருந்து நிறுத்தி விடுவதால் (switch off) கடவுள் நம் மூலமாக வேலை செய்வது தங்கு தடையின்றி நடைபெற்றுவிடுகிறது.

    “எட்வர்ட் பாட்ச்” என்ற இலண்டன் மாநகர மருந்துவர் கண்டுபிடித்த “மலர் மருந்துகள்” பற்றித் தமிழ் வார இதழ் ஒன்றில் வந்த விளம்பரம்தான் இது.

    மேற்கண்ட விபரங்களைத் தெரிந்து கொண்ட வலைப்பதிவர்கள், “மலர் மருந்துகள்” சாப்பிட்டால் இன்னும் என்னென்ன நன்மைகள் விளையலாம் என்று தோன்றும் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.
- சிமுலேஷன்

Saturday, July 05, 2008

கரம்சந்த் காந்தியும் கறி முயல்களும்

நாங்கள் உங்களுக்கு உயர்ரக முயல்கள் தருகின்றோம். அது போடும் குட்டிகள் 4 மாதம் கழித்து, 3 கிலோ வந்ததும் கிலோ நூறு ரூபாய் வீதம் அனைத்துக் குட்டிகளையும் உயிருடன் உங்கள் இடத்திலேயே வந்து, எடை போட்டு எடுத்துக் கொள்கின்றோம்.

மேலும் ஈமு கோழிகளையும் நாங்கள் தருகின்றோம். நீங்கள் பெற்று அதை முறையாக வளர்க்க வேண்டும். அது போடும் முட்டைகளை, ஒரு முட்டை 1500 ரூபாய் வீதம் நாங்களே உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். இதனுடைய கறி உயிருடன் எடை போட்டு கிலோ 800 வீதம் உங்கள் இடத்திலேயே வந்து பெற்றுக் கொள்கின்றோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளத் தேவையான இடம்:
மகாத்மா காந்தி அறக்கட்டளை

பிரபல வார இதழ் ஒன்றில் சமீபத்தில் பார்த்தது மேற்கண்ட விளம்பரம்.

- சிமுலேஷன்

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா - நூல் விமர்சனம்

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது.

மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த ஓல்ஸோல் மிளகாய் மற்றும் வெல்ல வியாபாரியான ஏகாம்பரத்தின் இதயம் ஒரு தடவை துடிக்கிறதை நிறுத்திட்டு நின்று போய் அப்புறம் படபடவென்று அடிச்சுகிச்சி.

ஆசிரியருக்குக் கடிதத்தில் “காமத்தீ என்ற கதைக்கு ஜெயராஜ் படம் ரொம்ப ஓவர் ஸார்! ச.ராஜரத்தினம்”, என்ற ஒரு கடிதமும், “பராசக்தியாரே! கருணை பெரியதா? காதல் பெரியதா?”ன்னு ஒரு கேள்வி-பதில் மட்டுமே எழுதி அனுபவம் பெற்றிருந்த “அரச மணி’ என்ற புனை பெயரும் கொண்ட ராஜரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம், “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற சூத்திரத்தை அழகாக விளக்குகின்றார் வாத்தியார் சுஜாதா. எண்பதுகளில் வத்திருந்த காரணத்தினால், “சுஜாதா சிறுகதைப் பட்டறை” என்ற ஒரு அமைப்பு இருந்தது கூடப் பலருக்கும் தெரிந்திருக்காது.

விசா பப்ள்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பின் விலை ரூபாய் 50 தான்.

- சிமுலேஷன்

Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு...சிமுலேஷன் பாடிய சிவன் பாடல்-01



மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே


Get this widget | Track details | eSnips Social DNA

பதிகம்: திருநீற்றுத் திருப்பதிகம்

பாடல்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

தலம்: திரு ஆலவாய் (மதுரை)

பாடியவர்: சிமுலேஷன்

இராகம்: யமன் கல்யாணி

Saturday, May 17, 2008

கொய்யா மரத்துடன் ஒரு டேட்டிங்

பண்பலை வானொலி நிலையங்களுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும், திரைப்படப் பாடல்களைத் தொடர்ந்து ஒலி/ஒளிபரப்ப ஏதெனும் ஒரு காரணம் வேண்டும். ஏதாவது ஒரு பெயரில் நிகழ்ச்சி ஒன்றினை வைத்து, இடையிடயே திரைப்படப் பாடல்களைப் போட ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு "கருத்து" (theme) எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, "ரோட்டில் எச்சில் துப்புவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கலாம்" என்று ஒவ்வொரு நேயரிடமும் கேட்டுவிட்டு, அவர்களுக்குப் பிடித்த பாடலை ஒலி/ஒளிபரப்புவது ஒரு வகை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில், ஏதேனும் பயனுள்ள கருத்து ஒன்றினைப் பகிர்ந்து கொள்கின்றார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இன்னும் பயங்கர மொக்கையாக சில கருத்து (theme) நிகழ்ச்சிகள் இருக்கும். நீங்கள் ஒரு சாதாரணமான மனிதராக இருந்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளளப் பார்த்தாலோ, கேட்டடலோ இரத்தக் கொதிப்பு எகிறும் வாய்ப்புகள் அதிகம். அப்படித்தான் சில நாட்கள் முன்பு, காரில் சென்று கொண்டிருக்கும்போது, பொழுது போவதற்காக, ஒரு பண்பலை நிகழ்ச்சியினை கேட்டுக் கொண்டே சென்றேன்.

"ஹலோ... வணக்கம்"

"ஹலோ... வணக்கம்"

"யார் பேசறீங்க"

"நான் தாம்பரத்திலேர்ந்த்து சாந்தி பேசறேன்"

"சாந்தி எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"நானும் சூப்பரா இருக்கேன். சரி நீங்க எந்த மரத்தை லவ் (love) பண்ணறீங்க"

(சரி...சரி இன்னிக்கி மரவளர்ப்பு தினம் அல்லது வனபாதுகாப்பு வாரம் போலிருக்கிறது)

"சார்... நான் கொய்யா மரத்தை லவ் பண்ணறேன் சார்"

"ஆஹா, கொய்யா மரமா? ஏன் கொய்யா மரத்தை லவ் பண்ணறீங்க?"

"அதெல்லாம் தெரியாது சார். ஆனா கொய்யா மரத்தை லவ் பண்ணறேன்"

"சரி. கொய்யா மரத்தை எங்க டேட்டிங் கூட்டிகிட்டுப் போவீங்க?"

(அடப்பாவிங்களா... ஆம்பிளையும் ஆம்பிளையும் கல்யாணம் பண்ணினீங்க. பொம்பளையும், பொம்பளையும் கல்யாணம் பண்ணினீங்க. நாயையும், கழுதையயும் கல்யாணம் கட்டிகிட்டீங்க. இப்ப மரத்தைக்கூட விட்டு வைக்கமாட்டீங்களா? அவ்வ்வ்...)

"டேட்டிங்கா சார்? நான் கொய்யா மரத்தை மெரினா பீச்சுக்கு டேட்டிங் கூட்டிகிட்டுப் போவேன் சார்"

"வெரி குட். அது ஏன் மெரினா பீச்?"

"அங்கதான் சார், தண்ணி, காத்து எல்லாம் நெறையக் கெடைக்கும்"

"ஓகே. உங்களுக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு பாடுங்க"

"இப்பிடி திடீர்னு கேட்டா எப்படி சார்"

"பரவாயில்ல. எதாவது ஒரு பாட்டு பாடுங்க"

"கல்யாணம்தான் கட்டிகிட்டு ஒர்டிப் போலாமா...
ஓடிப் போய்த்தான் கல்யாணத்தைக் கட்டிக்கிடலாமா..."

"சூப்பர் சாந்தி... சூப்பர். இப்ப உங்களுக்குப் பிடிச்ச பாடல் வந்துகிட்டே இருக்கு"

இதேபோல், மற்றொரு நாள் மற்றொரு நிகழ்ச்சி.

"உங்களுக்கு எதிலே பறந்து போறது பிடிக்கும்? உங்களுக்கன் ஆப்ஷன்ஸ் (options) a.பாய், b. ஸ்பூன் c.கரண்டி"

"எனக்குக் கரண்டிதான் மேடம் பிடிக்கும்?"

"சொல்லுங்க, ஒங்களுக்கு ஏன் கரண்டிலே பறக்கறது பிடிக்கும்?"

"கரண்டிலேதான் நல்லா உக்கார்ந்துகிட்டு சூப்பராப் பறக்கலாம்"

"ரொம்ப நன்றி. இப்ப ஒங்களுக்குப் பிடிச்ச பாடல் ஒண்ணு வந்துகிட்டே இருக்குது"

(இவையெல்லாம் வெறும் மொக்கை ஒலி/ஒளிபரப்புகளா அல்லது பின் நவீனத்துவ வகையிலும் வருவதற்கான் வாய்ப்புகள் இருக்கா? யாராவது சொல்ல முடியுமா?)



Friday, May 16, 2008

புகைப்படப் புதிர்-6

1) இந்த அம்மிணி யார்?
2) இவர் ஏன் இப்படிப் பார்க்கின்றார்? இப்படிப் பார்ப்பதனை என்னவென்று சொல்லலாம்?

3) இவ்ன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவன்?

4). இந்த வியாதிக்கு என்ன பெயர்? ஏன் அந்தப் பெயர்?

5). இவர் எதற்காக இப்படிச் செய்கின்றார்?

6) இது என்ன? எதற்குப் பயன்படுகின்றது?


விடைகளை உடனே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடைகள் நாளை வெளியிடப்படும்.

- சிமுலேஷன்

Saturday, April 12, 2008

ராகசிந்தாமணி கிளப் - ஹேமவதி - தர்மவதி - நீதிமதி

"எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். கர்னாடிக் ம்யூசிலே ஒங்களுக்கெல்லாம் இருக்குற ஆர்வத்தைப் புரிஞ்சுண்டு, இன்னிக்கி "ராகசிந்தாமணி ம்யூசிக் க்ளப்"போட இந்த மொதல் மீட்டிங்குக்கு வந்திருக்கிற, ஒங்க எல்லாருக்கும் நன்றி. ஏற்கெனவே சொன்னபடி இந்த விவாதக் களம், ஒரு இன்ஃபார்மல் 'கெட்-டு-கெதர்'தான். அதனால, யார் வேணும்னாலும், எந்த ஆர்டர்ல வேணும்னாலும் பேசலாம்."

"ஆனா தலைப்பு மட்டும் என்னென்னு நாங்க ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம்."

"ஹேமவதி-தர்மவதி-நீதிமதி". இதுதான் இன்னிக்கித் தலைப்பு."

"பாலா!, நீங்க வேணும்னா மொதல்ல ஆரம்பியுங்கோ"

"தேங்ஸ், சிமுலேஷன். இன்னிக்கி நான் ஹேமவதி ராகத்தைப்பத்திப் பேசப் போறேன். ஹேமவதி ராகம். இது 58ஆவது மேளகர்த்தா ராகம்."

"சாரி பாலா சார், இன்ட்ரப்ட் பண்றதுக்கு. இந்த ராகம்பத்தி அவ்வளவா கேள்விப்பட்டதேயில்ல. தியரியெல்லாம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் பாடித்தான் காட்டுங்களேன்."

"மொதல்லே நான் தியரியெல்லாம் எதுவும் சொல்லப் போறதிலே. இரண்டாவது நான் பாடவும் போறதில்லே. பேசத்தான் தெரியும். வேணும்னா, நம்ம நூக்கல சின்ன சத்யநாராயணாவைப் பாடச் சொல்லிக் கேட்போம். ஆரோகணம், அவரோகணம் எல்லாம் பாடி, ஒரு அஷ்டபதியும் பாடுவார். கேளுங்கோ."

"நல்ல இன்ட்ரொடக்ஷன். பாலா, ஹேமவதி ராகத்லே என்னென்ன பாட்டு இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"முத்துஸ்வாமி தீட்சிதரோட "ஸ்ரீகாந்திமதிம்" அப்படீங்கற பாட்டுத்தான் ரொம்பப் பாப்புலர். இப்ப கணேஷ் குமரேஷ் வயலின்லே இந்தப் பாட்டைக் கேப்போமா?"

"அட்டகாசம். அடுத்து வேறென்னென்ன பாட்டெல்லாம் இருக்கு?"

"பாபநாசம் சிவன் நெறையப் பண்ணியிருக்கார். "சிவனுக்கிளைய சேயே", "என்னைக் காத்தருள்" அப்படீன்னு"

"வெயிட்...வெயிட்...தமிழ்னாலே சிவன்தானா? "சிவனுக்கிளைய சேயே" அவரோட பாட்டா? கெடையவே கெடையாது."

"ஆஹா ருக்மிணி மாமி, கண்டு பிடிச்சிட்டேளா? சரி...சரி... அது யாரோட பாட்டுன்னு சொல்றவாளுக்கு, ஒரு பரிசு. (ஒங்களைத் தவிர)"

"XXXX XXXX XXXX தானே?"

"அடடா. சூரஜா கண்டுபிடிச்சது. இந்தாடா பிடி. ஒரு கேட்பரி சாக்லேட்"

"சிமுலேஷன் ஆன்ஸரை சத்தமாச் சொல்லதீங்கோ. இப்ப இந்த வலைப்பதிவர்களெல்லாம் கண்டுபிடிக்கறாங்களான்னு பாக்கலாம்."

"சரி, இப்ப அடுத்ததா, தர்மவதியப் பத்தி யார் பேசப் போறா?"

"தாமு மாமா. தர்மவதி ஒங்களோட ஃபேவரைட்டாச்சே. நாலு வார்த்தை சொல்லுங்கோ"

"ஆமாம். நாந்தான் தர்மவதியப்பத்திப் பேசப் போறேன். சூப்பரான ராகமாச்சே. இது மேளகர்த்தாவில் 59ஆவது ராகமாகும். இதனோட ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸா, அவரோகணம்: ஸா நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ"

"பாடிக் காண்பியுங்கோ....பாடிக் காண்பியுங்கோ...."

"பாலா சார் மாதிரியே நானும் நூக்கல அண்ணாவக் கூப்பிட்டுடறேன். அவரே ஆரோகணம், அவரோகண்ம் எல்லாம் பாடிக் காண்பிப்பார். வாங்கோ. கேட்டுடலாமா?. "

"சிமுலேஷன். "இளஞ்சோலை பூத்ததா", தர்மவதி ராகம்தானே?"

"ஆமாமாம். கரெக்ட். என்ன படம்னு யாருக்காவது தெரியுமா?"

"ரொம்பவே அழகான பாட்டுத்தான். என்ன படம்னுதான் தெரியலே"

"உனக்காகவே வாழ்கிறேன்" இதுதான் படத்தோட பேரு. இந்தப் பாட்ட எஸ்.பி.பி, யாருக்காகப் பாடினாருன்னு தெரியாம நானும் இத்தன நாள் முழிச்சிட்டிருந்தேன். இப்பத்தான் தெரியும், சிவகுமாருக்காகவும், நதியாவுக்காகவும்தான் இந்தப் பாட்டுன்னு. சிவகுமார் நடிப்பையும், நதியா டான்சையும் கொஞ்சம் பொறுத்துண்டு இந்தப்பாட்டைக் கேட்டால் ரொம்பவுமே எஞ்ஜாய் பண்ணலாம்."

"ராமூ, அதே மாதிரி, "உத்தரவின்றி உள்ளே வா?" படத்லே ஒரு நல்ல பாட்டு வருமே அது என்னடா?"

"அதுவா? நம்ம ரவிச்சந்திரன் நடிச்ச படம்தானே?, "காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?"இந்தப் பாட்டைத்தானே சொல்றே?"

"கொஞ்சம் சைலன்ஸ் ப்ளீஸ். இந்தப் பாட்டையும் இப்பக் கேக்கப் போறோம்."

"மாமா, ரெண்டு தர்மவதியுமே சூப்பர். போறதுகுள்ளே, அந்த ரெண்டு பாட்டையும் என்னோட ஐ.பாட்லே காபி பண்ணிக் கொடுத்துடறீங்களா?"

"ஆஹா. கர்னாடிக்னா காத தூரம் ஓடறது. சினிமாப் பாட்டுன்னா என்னமா இன்ட்ரஸ்ட்?"

"மாமி. அதுனால ஒண்ணும் தப்பே இல்ல. அவங்களுக்காகத்தான் இந்த க்ளப்பே. சினிமாப் பாட்டைக் காம்பிச்சி, ஸ்லோவா, கர்னாடிக் ம்யூசிக்லே ஆர்வத்த உண்டுபண்றதுதான் நம்ம கோலே"

"ஆஹா. சிமுலேஷன், அப்படீன்னா, இன்னோரு சினிமாப் பாட்டுப் போடுங்கோ"

"ஜெண்டில் மேன்"ல் வர்ற "ஒட்டகத்தக் கட்டிக்கோ"கூட தர்மவதிதான். இன்னிக்கிப் போடலாம்னு நெனச்சுண்டிருந்தேன். ஆனா, You Tubeலேர்ந்து தூக்கிட்டாங்களே!"

"தாமு மாமா, கர்னாடிக் ம்யூசிக்லே என்னென்ன பாட்டுன்னு சொல்லுங்கோ"

"மைசூர் வாசுதேவாசாரியார் எழுதின "பஜனசேய ராதா", அப்புறம் முத்துசாமி தீட்சிதரின் "பரந்தாமவதீ" இதெல்லாமும்கூட தர்மவதியில இருக்ற பிரபலமான பாடல்களாகும். அப்புறம் பெரியசாமி தூரன் எழுதின "ஒரு நாள் வாழ்வே", கோடீஸ்வர ஐயர் எழுதின "கந்தா பக்த" இந்த கிருதிகளெல்லாம் கூட இந்த ராகத்திலேதான் இருக்கு."

"இப்ப நாம கேக்கப் போறது அம்புஜம் கிருஷ்ணா எழுதி, சுதா ரகுநாதன் பாடின "ஓடோடி வந்தேன் கண்ணா"

"ஏன்னா. ஒங்களைத்தான். அதுக்குள்ளே கொட்டாவியா? கோவிந்தான்னு சொன்னாப் போதுமே. முழிச்சுங்கோ. ஜூனியர் சிமுலேஷன் வேற வந்து போட்டோவெல்லம் எடுத்துண்ட்றக்கன்."

"இன்னிக்கிக் கடோசி ராகம் நீதிமதி. இதப்பத்திப் பேசப் போறது நீலா மாமி."

"இது 60ஆவது மேளகர்த்தான்னு உங்க எல்லார்க்கும் தெரிஞ்சுருக்கும். மொதல்லே கேக்கப் போறது, நூக்கல சின்னசத்யநாராயணாவோட, இன்ட்ரொடக்ஷன்."

"மாமி. இது ஒரு விவாதி ராகம்தானே?"

"கரெக்ட். செல்வன் எப்டிக் கண்டுபிடிச்சே? எப்டிடா முடியறது உன்னாலே?"

"மாமி, செல்வன் பயங்கரமாத் தேறிட்டான். எல்லாம் ஆர்வம்+உழைப்புதான். ஆனா, இன்னிக்கி விவாதி ராகத்தப்பத்திப் பேசத்தான் டைம் இல்லை. அடுத்த் க்ளப் மீட்டிங்லே, செல்வன் விவாதி ராகத்தப்பத்தி ஒரு தனி லெக்சரே கொடுக்கப் போறான்."

"சரி. நான் இப்ப வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன் பாடின, "மோகனகர முத்துக்குமரா", இந்தப் பாட்டைப் போடறேன். கேளுங்கோ."

"கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைதானே. லிரிக்ஸ் கெடைக்குமா சிமுலேஷன்?"

"எஸ்.ராஜம் புக் போட்டுருக்காரே. இப்ப இம்மீடியட்டா வேணும்னா, இங்க போய்ப் பாக்கலாம்."

"ஆஹா. கிட்டதட்ட ஒண்ற மணி நேரம் போனதே தெரியல. அடுத்த க்ளப் மீட்டிங்க்காக ஆர்வமாக் காத்திண்ட்ருக்கோம்."

"மொதல் மீட்டிங்க நல்லபடியா நடத்திக் கொடுத்த எல்லார்க்கும் நன்றி. இதே மாதிரி எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கணும். இப்போ ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், காபி வருது. மெதுவா சாப்பிட்டுட்டுப் போகணும். மறுபடியும் எல்லார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!".

- சிமுலேஷன்

Friday, April 04, 2008

ஓர் உத்தம தினம்

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள வாத்யாரின் "ஓர் உத்தம தினம்" (சுஜாதா சுவடுகள்) என்ற சிறுகதையின் முடிவினை யாரேனும் விளக்க முடியுமா?

(ஹி...ஹி... நான் நினைச்ச முடிவேதான் நீங்களும் நினைச்சிருக்கீங்களான்னு செக் பண்ணத்தான்).

- சிமுலேஷன்

Saturday, March 22, 2008

ஜெயமோகனைக் கண்டித்தவர்கள் இதனை ஏன் கண்டிக்கவில்லை?

ஜெயமோகனைக் கண்டித்தவர்கள் இதனை ஏன் கண்டிக்கவில்லை?

Monday, March 17, 2008

மயிலை திருத்தேர்

"கயிலையே மயிலை; மயிலையே கயிலை" என்றழைக்கப்ப்டும் மயிலாப்பூர் கபாலி திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திரப் ப்ரம்மோற்சவ நிகழ்ச்சியின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

"காணக் கண் கோடி வேண்டும்" என்று பாடல்பெற்ற இந்த அழகிய திருத்தேர் வைபவத்திற்கு, மயிலாப்பூர் KUTCHERIBUZZன் இந்த இணைப்பில் நேரடி வர்ணனை செய்யப்படுகின்றது. வர்ணன கொடுப்பவர் வின்சென்ட் டிசோசா என்று நம்புகின்றேன்.

வெளியூர் ஆத்திக அன்பர்களும் அயல்நாடு வாழ் இந்தியர்களும் நேரடி வர்ணனையைக் கண்டு மகிழுங்கள். வர்ணனை ஆங்கிலத்தில் இருப்பதால் உங்கள் வெளிநாட்டு நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்.

- சிமுலேஷன்

Saturday, March 15, 2008

டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு - நூல் விமர்சனம்


சுஜாதா எழுதி பூர்ணம் விசுவநாதன் இயக்கத்தில் வெளிவந்த "அடிமைகள்" போன்ற நாடகங்கள் சிலவற்றை எண்பதுகளில் பார்த்திருக்கின்றேன். நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது நாரத கான சபாவில், குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் குழுவினரின் "டாக்டர்.நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் மூலம்.

நாடகத்தின் ஆரம்பக் காட்சியே கோர்ட் சீனாகும். அடுத்த இரண்டு மணி நேரமும் இந்தக் கோர்ட்டிலேயே இருக்கப் போகின்றோம் என்பதினை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அமெரிக்காவில் கை நிறைய சம்பாதித்து விட்டு, சென்னையிலுள்ள ஒரு பொது மருத்துவமனையில், டெபுடி டைரக்டராக இருக்கும் டாக்டர் நரேந்த்திரன், தற்போது குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கிறார்.

அவர் மீது, மூன்று முக்கியக் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார் பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் நாகராஜன். பெரியவர் சரவணனுக்குச் சென்று கொண்டிருந்த குளூக்கோஸ், ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கிவிட்டு, அவரைச் சாகடித்தது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தான் வேலை செய்யும் பொது மருத்துவமனையிலேயே, தனது காரியதரிசி மஞ்சுளாவிற்குக் கருக்கலைப்பிற்கு ஏற்பாடு செய்தார் என்பது. லூக்கேமியா என்ற இரத்தப்புற்று நோயினால் போராடிக் கொண்டிருக்கும், ரவி என்ற சிறுவனுக்குத் தவறான மருந்தைக் கொடுத்து, அவன் சாவதற்கும் காரணமாயிருந்தார் என்பது மூன்றாம் குற்றச்சாட்டு.

"எனக்கு வக்கீல் யாரும் தேவையில்லை, நானே எனக்காக வாதாடிக் கொள்கிறேன்," என்று சொல்லி, குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, தண்டனை வேண்டும் என்று கூறிக் கோர்ட்டாரைக் குழப்புகிறார் வினோதமான டாக்டர் நரேந்திரன். இதனை ஒப்புக் கொள்ளாத ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், கணேஷும், வசந்தும் டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். வழக்கமான டிடெக்டிவ்களாக வரும் இருவருக்கும், துப்பறியும் வேலை என்று ஒன்றும் பெரியதாக இல்லை. இவர்கள் நடத்தும் இந்தக் கேஸில் நியாயம் வென்றதா? அரசியல் வென்றதா? யதார்த்தம் என்ன? என்பதே கதை.

குருகுலம் குழுவினர் திறம்பட நடித்துள்ளனர். "பப்ளிக் ப்ராஸ்க்யூட்டர் தனது வாதங்களைச் சொல்லலாம்," என்ற வழமையான கோர்ட் வசனங்களையே கேட்டுப் புளித்துப் போன காதுகளுக்கு, ஜட்ஜ் வழக்கறிஞர்களைப் பெயர் சொல்லி அழைப்பது (நாகராஜன், உங்க க்ராஸ் எக்ஸாமினேஷனை ஆரம்பியுங்க...) புதுமையாகவும், உண்மையிலேயே கோர்ட் விவாதங்கள் இப்படித்தான் யதார்த்தமாகவும் இருக்குமோ என்றும் யூகிக்கத் தோன்றுகின்றது. ஜட்ஜ் பாத்திரம் ஏற்ற குருகுலம் M.B.மூர்த்தி முதல், "எளவு" எனப்படும் இளவழகன் வரை அனைவரும் அளவாகவே நடித்திருக்கிறார்கள் எனலாம். ஓவ்வொரு வசனங்களிலும் தோன்றும், அங்கதத்திலும் சுஜாதா எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். பாத்திரங்களின் வேடப் பொருத்தங்கள் அருமை. டாக்டர் நரேந்திரனின் உயரமான ஆளுமை, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றது. ஒரு நேரத்தில், கோர்ட்டிலேயே, "போடா" என்று சொல்லுவது அவரது கேரக்டரைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. முதிர்வான கணேஷும், நடிகர் சூர்யா போன்ற இளமையான வசந்த்தும் பாத்திரப் பொருத்தத்தில் நிச்சியமாக ஏமாற்றவில்லை. ஆனால் குறுந்தாடியுடன் கூடிய கணேஷையும், ஜொள்ளுவிட வாய்ப்பில்லா வசந்த்தையும் யாரும அவ்வளவாக எதிர்பார்த்திருக்க முடியாது. சிறுவன் ரவி, பார்வையாளர்கள் பெரும்பான்மையோரை அழ வைத்திருப்பான். பத்தாம் வகுப்புப் பாடங்களைப் படித்துவிட்டு, வகுப்பாசிரியரிடம் பாடம்(!) வாங்கிப் பின்னர், அப்பாவிடமும் பெல்ட்டால் அடி வாங்கும்போது, ஏனோ "தாரே ஜமீன் பர்" ஞாபகத்திற்கு வந்தது.

"அன்னியன்", "இந்தியன்" போன்ற கதைகளையெழுதி வந்த வாத்தியாருக்குப் பல ஆண்டுகளாகவே, இந்தியச் சமூகத்தின் மேல் இருந்து வந்த ஒரு சினிசிசத்தினை டாக்டர் நரேந்திரன் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் "அறிவாளியாகவும், மனிதாபிமானமும் மிக்க ஒரு மனிதன், மதியூகத்துடனும் செயல்பட முடியாதா?," என்ற கேள்வி மனதினில் எழாமலில்லை. மஞ்சுளாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாமே! ரவியின் பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வைத்திருக்கலாமே," என்றெல்லாம் யோசித்தால் கதையாவது, நாடகமாவது.

இடைவேளை ஏதுமில்லாமல், காட்சிக்குக் காட்சி விறுவிறுப்பு கூட்டிக்கொண்டே சென்று பார்வையாளர்களை இரண்டு மணிநேரம் பரவசப்படுத்தினாலும், தீவிர சுஜாதா ரசிகர்களுக்கு, அவர் எழுத்தினால் ஏற்பட்ட தாக்கத்தை, அவரது சினிமாவோ, நாடகங்களோ தரவில்லை; தரவும் இயலாது," என்பதே உண்மை.

- சிமுலேஷன்

Sunday, February 24, 2008

மாரமணனும் மாயக்கூத்தனும்

சென்ற முறை டல்லஸ் சென்றபோது, "உன்னிக்கிருஷ்ணன் கச்சேரி உள்ளது போலாமா?" என்றான் வைத்யா. ஆஹா, அமெரிக்கா வந்து மண்டை காய்ந்து கொண்டிருக்கும் நமக்கு "கரும்பு தின்னக் கூலியா?" என்றெண்ணி, உடனே சரியென்றேன். டல்லஸ்ஸின் "இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமி", அந்த சனி மாலை, நம்மவர்களால்களை கட்டியிருந்தது. "உன்னோட 'ராக சிந்தாமணி' புத்தகத்தையும் கொண்டு வா. யாராவது ஆர்வம் காட்டக்கூடும்" என்றதால், புத்தகப் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன்.

கச்சேரி ஆரம்பிக்க அரை மணிநேரம் இருந்ததால் யாரை மொக்கை போடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் வந்தார். வந்தவர் நேராக் "என்னிடம், நீங்கள்தானே சிமுலேஷன்?" என்றார். "ஆஹா, நம்மை எப்படிக் கண்டுபிடிதார் இவர்?", என்று இன்ப அதிர்ச்சியில் இருந்த எனக்கு, பதில் சொல்ல ஒரு சில நிமிடங்கள் ஆனது. "ஆமாம், நான் தான் சிமுலேஷன். மன்னிக்கவும். உங்க்களைத் தெரியவில்லையே!" என்றேன்". தனது பெயர் "மாயா" என்ற மாயக்கூத்தன் கிருஷணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். "அது சரி. எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்' என்றதற்கு, "உங்கள் கையில் இருக்கும் புத்தகத்தின் அட்டையில் இருக்கும் போட்டோவை பலமுறை, உங்களது வலைப்பதிவில் பார்த்துளேன். அதனை வைத்தே கண்டுபிடித்தேன்" என்று மாயா சொன்னபோது, இவர்தான் அந்த 'அமெரிக்காவின் சி.ஐ.டி.சங்கரோ" என்று ஆச்சரியப்பட்டேன்.

பழகுவத்ற்கு இனிய மாயா, அவர்தம் நண்பர் கார்த்திக்கையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள்தாம் டல்லஸ்ஸின் "இணடியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடெமியினைத் திற்ம்பட நிர்வகித்து வரும் நிர்வாகிகளுள் சிலர்.



(மாயா மற்றும் கார்த்திக்குடன் சிமுலேஷன்)

(உன்னிக்கிருஷணன் மற்றும் வைத்யாவுடன்)

(மாயா மற்றும் உன்னிக்கிருஷ்ணனுடன்)



(களைகட்டிய கச்சேரி மேடை)


அன்றைய மாலை உன்னிக்கிருஷ்ணன் புண்ணியத்தால் அருமையாகக் கழிந்தது. அதிலும் குறிப்பாக, "மாரமணன் உமா ரமணன்" என்ற பாபநாசம் சிவன் அவர்களது ஹிந்தோள ராகப்பாடல் அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது. இந்தப் பாடல் சிவனையும், திருமாலையும் ஒரே நேரத்தில் அழகுற வர்ணிக்கும் பாடல் என்பது சங்கீதம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பாடலின் வரிகளும் பொருளும் தெரியவேண்டுவோர் 'லலிதா ராமின்' இந்தக் கட்டுரையில் அவற்றைக் காணலாம்.




வீடியோ குவாலிட்டியினைப் பொறுத்தருள்க.