Sunday, July 24, 2016

அமானுஷ்யன்



அது ஒரு சனிக்கிழமை மாலை! மனைவியையும், அம்மாவையும் கபாலி கோயில் வாசலில் இறக்கிவிட்டு விட்டு வாகனத்தை நிறுத்த, வாகான இடம் தேடினேன். அதிஷ்டவசமாக, அந்த பிச்சுப்பிள்ளை தெரு எனப்படும் குட்டிச் சந்தில், காரை நிறுத்த இடம் கிடைத்தது. காரை விட்டு இறங்கலாமென நினைக்கையிலேதான் அந்த ஆளைப் பார்த்தேன். பார்த்தேன் என்றால் நேருக்கு நேர் அல்ல…..காரின் ரியர்-வியூ மிர்ரர் வழியாகத்தான் பார்த்தேன். நல்ல ஆறடி உயரம்…. தடியான தேகம்…. இன்சர்ட் செய்யப்பட்ட சட்டை. ஐம்பது வயது இருக்கலாம்.
என்னுடைய காரின் பின்பகுதியில் சந்தேகமான முறையில் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். டாஸ்மாக் கேஸாக இருக்குமோவென நினைத்தேன். எதுவோ, என்னவோ, அவர் அப்படி சாய்ந்து நின்று கொண்டிருந்தது, சற்று சந்தேகமாகவே இருந்தது…. சரி…, இன்னிக்கு ஏதோ பிரச்னையில் மாட்டப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன். மொபைல் போனை எடுத்து, ரியர்வியூ மிர்ரர் வழியாகப் பார்த்துக் கொண்டேவாராத ஒரு காலை எடுத்துக் பேசுவது போல பாவலா செய்தேன்.
சில நிமிடங்களில் அந்த ஆசாமி, என் காரை விட்டு அந்தப் பக்கமாகச் சென்று நின்றார். கொஞ்சம் நிம்மதி கிடைத்தது எனக்கு. சரி காரை விட்டு இறங்கலாம் என்று எத்தனிக்கையில், அந்த ஆள் மீண்டும் எனது காரின் கதவருகே வந்தார்....இல்லை. இல்லை…. வந்து கத்த ஆரம்பித்தார்.
"சார்.. ஒங்களுக்கு கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கா? நீங்க உண்மையிலேயே மனுஷன்தானா?”
ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
"என்ன சார்? என்ன ப்ராபளம்? எதுக்கு கத்தறீங்க?"
"சார், ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க!.... நான் ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி மயக்கம் போடப் போனேன்…. கீழே விழாம இருக்க, ஒங்க கார் மேலே சாஞ்சு நின்னேன்….ஆனா, நீங்களோ கொஞ்சம் கூடக்  கண்டுக்கல.  உங்களை மாதிரி யாரையும் பாத்ததில்லே
"சார். நானே ஒரு போன் கால்ல பிசியா இருந்தேன். உங்களை எங்க நான் பாத்தேன்?"
அவர் ஒரு நிமிஷம் முறைத்துப் பார்த்தார்.
"இது நல்லதுக்கில்ல…. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்"
கிட்டத்தட்ட சாபமாகவே சொன்னார்.
சரியான கேஸு போலிருக்கு….இந்த ஆளுடன் வாக்குவாதம் பண்ணுவது எந்த வித பிரயோசனமும் இல்லை. சரிதான் கோயிலுக்குப் போகலாமென எண்ணினேன்.
அப்போதுதான் பார்த்தேன். அந்த ஆளுக்கு வேர்வை ஊத்திக் கொண்டிருப்பதை. கொஞ்சம் படபடப்பாக வேறு மூசசு வாங்கிக் கொண்டிருந்தார்…. அவர் ஒரு சர்க்கரை நோயாளியாகவோ, அல்லது இருதய நோயாளியாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே திரும்பப் போனேன் அவரிடம்.
"சார்…. ஒங்களுக்கு இப்படி வேர்த்து ஊத்துதுஎன்னமோ கஷ்டப்படறீங்க போலிருக்கு….. தப்பா எடுத்துக்கலேன்னா, ஒங்களை வீட்லே கொண்டு போய் விட்டுர்றேன்…. ஒங்க பேர், அட்ரஸ் கொடுக்க முடியுமா?"
"பரவாயில்ல. என் பேர் பி.க்யூ.எஸ்.எஸ். ஆர். ராவ்!...என்னைக் கூட்டிட்டுப் போக வீட்லேந்து ஆள் வர்றாங்ககவலைப்படாதீங்க"
ஆஹா!....பி.க்யூ.எஸ்.எஸ். ஆர். ராவ்!.... இந்தப் பேரைச் சொல்லிச் சொல்லியே இவருக்கு மயக்கம் வந்திருக்குமோ!
"சரி. போகட்டும்…..நான் ஒங்களுக்கு ஒரு ட்ரிங்க் வாங்கி தர்றேன். சரியா?"  
"தேவையே இல்ல….நீங்க எதுக்க்காக எனக்கு ட்ரிங்க் வாங்கித் தரணும்?"
"சார். நான் எதுவும் பெருசாப் பண்ணறேன்னு சொல்லல. நீங்க மயக்கமா இருக்கீங்க.   ஒரு ட்ரிங்க் குடிச்சாத் தேவலை."
"நான் பாத்துக்கறேன்…. நீங்க போங்க வேலையாய் பாத்துகிட்டு."
"ப்ளீஸ். சொன்னா கேளுங்க.. "
பேசிப் பேசி கிட்டத்தட்ட எனக்கே மயக்கம் வரும் போல இருந்தது. கடைசியாக என் கையில் ஒரு இருபது ரூபாய் நோட்டைத் திணித்தார்.
ஒடம்பு நல்லாட்டாலும், ஜம்பத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லைன்னு நினைத்துக் கொண்டே பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து தெற்குமாட வீதிக்கு ஓடினேன். ஓடிப் போய் ஒரு டெட்ராபேக் ட்ரிங்க் வாங்கினேன். ஐந்து நிமிடத்திற்குள் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தேன்!...ஆனால் அங்கே என் அருமை நண்பர் மாயம்!
எங்கேடா என் நண்பர், என்று பார்த்தால், சந்தின் ஒரு ஓரமாக, ஒரு சிறிய வீட்டின் முன்னால், ஒரு ஈஸிசேரில் கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டுக்காரர் ஈஸிசேர் கொடுத்து உதவியிருக்கிறார் போல. கண்கள் மூடியிருந்தாலும், அவரது வாய் என்னவோ மூணு,முணுத்துக் கொண்டிருந்தது.
மனுஷர் கண்ணைத் திறப்பதாகத் தெரியவில்லை. கையால் தட்டி எழுப்பினேன். விழித்துப் பார்த்து, "என்ன" என்றார்.
"சார். ட்ரிங்க்.... ஒங்களுக்கு..."
"என்ன ட்ரிங்க்? எனக்கு எதுக்கு?
"சார்… ஞாபகம் இல்லையா? இப்பத்தான் 10 நிமிஷம் முன்னாடி பணம் கொடுத்தீங்க"
அடுத்தது அவர் சொன்னதுதான் தூக்கி வாரிப்போட்டது!
"சார். நான் இப்ப... இன்னும் 30 நிமிஷத்திலே சாகப் போறேன். இப்ப 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' சொல்லிட்டிருக்கேன்…. ப்ளீஸ். என்னை விடுங்க."
என்னது. முப்பது நிமிஷத்திலே சாகப் போறாரா? இந்த ஆள் என்ன சொல்றார்?
சூரிய அஸ்தமனமாகிக் கொண்டிருந்த அந்த நேரம்விளக்குகள் எரியாத இருள் குவிந்திருந்த அந்த இடம், எல்லாமே எனக்கு ரொம்பக் குழப்பமாக இருந்தது. இந்த மாதிரி, முப்பது நிமிஷத்திலே சாகப் போற ஒரு மனுஷனப் பாக்கறது இதுதான் முதல் முறை. அவருடைய மூளைக்கு ரத்தம் சரியாகப் போகவில்லை போலிருக்கு. அதனால்தானோ இப்படியெல்லாம் ஒளறிக்கிட்டே இருக்காரே என்னமோ? நான் குழப்பத்தில் இருந்தாலும், என்னுடைய மூளை வேலை செய்தது.
"சார் இப்ப நீங்க இந்த இந்த ட்ரிங்கைக் குடிங்க. இதை நான் என் காசுல வாங்கலை. நீங்கதான் பணம் கொடுத்தீங்க!"
தயக்கத்துடன் வாங்கினார் டிரிங்கை. மட,மடவெனக் குடித்தார்.
"சரி…, நீங்க கொடுத்ததை குடிச்ச்சுட்டேன். இப்ப என்னை நிம்மதியா சாக விடுங்க…. நாளைக்கு காலைல என்னோட   போட்டொ பேப்பர்ல வரும்…. பாத்துக்குங்க!"
"சரி…. இப்ப நான் ஒங்கள வீட்லே மட்டும் கொண்டு போய் விட்டுடறேன்."
"சார், என்ன நிம்மதியா சாக விட மாட்டீங்களா? இப்ப ஒங்களுக்கு என்னதான் வேணும்?... என்ன ஏன் இப்படித் தொந்தரவு பண்றீங்க?"
இந்த முறை அவர் உரக்கவே கத்திவிட்டார்….தெருவிலுள்ள அனைவரது பார்வையும் என் மீது.
சரி. இப்ப இடத்தக் காலி பண்ணிவிட்டு கபாலீஸ்வரரைப் பார்க்கப் போலாமென முடிவு செய்தேன். கோயிலுக்குச் சென்று என் நண்பருக்காகவும் பிரார்த்தனை செய்தேன். அன்று இரவு நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டேன்! எப்படா பேப்பர் வருமென்று காத்துக் கொண்டிருந்தேன். பேப்பர் வந்தவுடன் முதலில் ஆபிச்சுரி காலத்தை மேய்ந்தேன். ஒவ்வொரு பேராகப்பார்த்துக் கொண்டே வந்தேன். ரங்கா ராவ்’, ‘ராமா ராவ் என இரண்டு ராவ் பெயர்கள் இருந்ததே தவிர, என் நண்பர் பெயர் இல்லை.
சற்று நிம்மதி அடைந்தவனாக, முதல் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்!... இரண்டாம் பக்கத்தைப் புரட்டினவனுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. உண்மையில் ஆச்சர்யம் அல்ல!...அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு பெரிய புகைப்படம்! ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். அது பி.க்யூ.எஸ்.எஸ்.ஆர்.ராவேதான். அதுவும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்  பக்கத்தில். புகைப்படத்துக்குக் கீழே எழுதியிருந்தது.
"நேற்று மாலை, புது டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்சசி ஒன்றில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்தியாவின் தலைசிறந்த பாரா-நார்மல் சயிண்டிஸ்ட் பி.க்யூ.எஸ்.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார்.”
அப்ப நேற்று நான் பார்த்தது!