Wednesday, September 28, 2011

கொலு வைப்பது எப்படி? - 07

கொலுவுக்கு அழைத்தல்
அந்தக் காலத்தில் கொலுவிற்கு நண்வர்களை அழைக்க குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை போன்ற வேடங்களிட்டு அவர்களைப் போய் எல்லோரையும் அழைத்துவிட்டு வரச் சொல்வது வழக்கம். பின்னர் நேரில்  சென்று அழைக்க இயலாதவர்கள் போஸ்ட் கார்டில் நவராத்திரி அழைபிதழ்கள் அனுப்பத் துவங்கினார்கள். அதில் தங்கள் கைவண்ணத்தையும் காண்பிக்க முடிந்தது. அப்புறம் போன் மூலமாகவும் இமெயில் மூலமாகவும் அழைப்புகள் அனுப்புவது வாடிக்கையாயிற்று. தற்போது சோஷியல் மீடியாக்கள் பிரபலமாக, பேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற மீடியாக்கள் மூலம் அழைக்க முடிகின்றது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குப் போகும் பட்சத்தில், எல்லோரையும் எல்லா நாட்களிலும் எண்டர்டெய்ன் பண்ணுவது கடினம்தான். எனவே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், உடன் வேலை செய்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனைத்தனியாக நாள் ஒதுக்கி அழைத்தால் ஈஸியாக இருக்கும். மேலும் ஒவ்வொரு க்ரூப்புக்கும் ஒவ்வொரு விதமான கிப்ட் வாங்கியிருக்கலாம். ஒரே நாளில் வருபவர்களுக்கு  ஒவ்வொரு விதமான் கிப்ட் கொடுத்து அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.

வருபர்களுக்கு பாய் விரித்து அமரச் செய்து, கொலுவினை ஆற, அமரப் பார்க்கச் சொல்லலாம். பின்னர் பாடத் தெரிந்தவர்களைப் பாடச் சொல்லலாம்.   பின்னர் வெத்தலை, பாக்கு, பழம், தேங்காய் உள்ளிட்ட தாம்பூலம், சுண்டல் மற்றும் கிப்ட் பொருட்களைத் தரலாம். அவற்றை எடுத்துச் செல்ல வசதியாக பை ஒன்றும் கொடுத்தால் நல்லது. இவற்றையெல்லாம் அழகழகாக அடுக்கி வைப்பது, விருந்தினர்களுக்குக் கொடுப்பது போன்ற வேலைகளை வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்தால் அவர்கள் ஆர்வமுடன் செய்வது மட்டுமின்றி, விருந்தினர்களை உபசரிப்பது எப்படி போன்ற பண்புகளையும் கற்றுக் கொள்வார்கள்.

ஒன்பது அல்லது பத்து நாட்களும் ஒவ்வொரு வகை சுண்டல்கள் செய்யலாம். இதற்கு முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுதல் நல்லது. சிலர் வெள்ளிக் கிழமைகளில் புட்டும், சனிக் கிழமைகளில் எள்ளாலான பண்டங்களும் செய்வார்கள். இது தவிர பொட்டுக் கடலை உருண்டை, பொட்டுக் கடலை மாவு, நிலக்கடலை உருண்டை ஆகியவற்றைச் செய்து வைத்துக் கொண்டால் சுண்டல் தட்டுப்பாடு ஏற்படும் போது சமாளிக்க உதவும். சுண்டல் முதலிய பண்டங்களை காலையிலோ அல்லது மாலையிலோ எப்போது செய்கின்றோமோ அப்போதே நைவேத்யம் செய்ய வேண்டும்.

கொலுப்படிகள் முன்பு மாக்கோலம் போட்டு, காவி இட்டு, குத்து விளக்குகள் ஏற்றி வைப்பது நல்லது. கலர்ப் பொடிகள் கொண்டு ரங்கோலி கோலம் போட்டாலும் கவர்ச்சியாக இருக்கும். இது தவிர ஜவ்வரிசி கொண்டு “முத்தால் ஆரத்தி” எடுப்பது விசேஷம். அதாவது ஒரு தட்டை எடுத்துக் கொண்டு அதில் பேனாவினால் கோலம் வரைந்து கொண்டு, பின்னர் ஒரு மெல்லிய குச்சியினால் பெவிகால் அல்லது கோந்தை தொட்டுக் கொண்டு கோலத்தின் மீது வரைய வேண்டும். பின்னர் இதன் மீது ஜவ்வரிசிகளை ஓட விட அவை சரியாக பசை உள்ள இடங்களில் ஒட்டிக் கொண்டு விடும். இப்போது காலியாக உள்ள இடங்களில் வண்ணப் பொடிகளைத் தூவிட, முத்தாலாரத்தி தயார். ஒவ்வொரு நாள் இரவும் இந்தக் கோலத்தின் மீது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும். நவராத்திரியில் அம்மனுக்குப் பூஜையாக தினமும் கொலு முன் விளக்கேற்றீ, தெரிந்த ஸ்லோகங்கள் சொல்லி, பாட்டுப் பாடி வந்த விருந்தினர்களுக்கு தாம்பூலம், சுண்டல் ஆகியவை கொடுத்து அனைவரும் சென்ற பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.

உங்கள் வீட்டு கொல்லு பெரிய முறையிலோ அல்லது திமாட்டிக் கொலுவாகவோ அமைக்கப்படிருக்கும் பட்சத்தில் அதனை வந்திருக்கும் விருந்தினர்களுக்கு பொறுமையாக, அழகாக விளக்கிக் கூற வேண்டும். சில குழந்தைகள் ஆர்வக் கோளாறினால் அன்ங்உம் இங்கும் ஓடி உங்கள் ஏற்படுகளைக் கலைத்து விடலாம். இவர்களிடமிருந்து உங்கள் ஏற்பாடுகளைச் சற்றே கவனமாகப்  பார்த்து கொள்ள வேண்டும்.

உறவினர்கள், அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்லாது, நம் வீட்டில் வேலை செய்பவர்கள், காவல் வேலை செய்பவர்கள் போன்ற விளிம்புநிலை மாந்தர்களையும் கொலுவுக்கு அழைத்து பொம்மைகளையெல்லாம் காட்டி, வெத்தலை, பாக்கு, சுண்டல் ஆகியவற்றைக் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நமக்கும் அவர்களையும் மதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது என்ற ஒரு திருப்தி கிடைக்கும்.

நவராத்திரியின் நிறைவு நாளன்று ஆயுத பூஜை, விஜயதசமி பூஜகள் செய்ய வேண்டும். ஆய்த பூஜயன்று, உங்கள் புத்தகங்கள், இசைக் கருவிகள், ஓவியம் உள்ளிட்ட மற்ற கலைகள் சம்பந்தமான கருவிகள், உங்கள் தொழிற்கருவிகள் ஆகியவற்றை கடவுள் முன் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஆய்த பூஜையன்று படிப்பற்கும், பாடுவதற்கும் ஓய்வு கொடுப்பார்கள். இன்றைய தினம், பிரசாதமாக சிலர் கடலைப் பருப்பு சுண்டலும், சுகியனும் செய்வார்கள். மறுநாள விஜயதசமியன்று மீண்டும் கடவுள் முன்பு வைக்கப்பட்ட கருவிகளுக்கு எல்லாம் மீண்டும் பூஜை செய்து புத்தகங்கள் படித்து, பாட்டுப் பாடி, இசைக் கருவிகள் இசைத்து அறிவு வளர வேண்டிக் கொள்ள வேண்டும்.
-       தொடரும்
 - சிமுலேஷன்

1 comments:

துளசி கோபால் said...

எல்லாம் நோட்டட்:-)