படித்ததில் பிடித்தது குறித்துக் குறிப்பிடுவேன். நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
- சிமுலேஷன்
A blog on my experiences with Carnatic Music, Quizzing, Book Review etc.
9. ரசித்த இளம் ஆண் பாடகர்: கிட்டத்தட்ட மூன்று கச்சேரிகள் கேட்ட பின்னும் அலுக்காத அபிஷேக் ரகுராம். அகாடமியில் பாடிய 'காபி' ஏ க்ளாஸ். "பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது" என்று சொல்லத் தோன்றியது. ஒரு பாடலின் நடுவே,"பெங்களூரிலிருந்து நேற்றைய தினம் வந்திருக்கும் எனது நண்பருக்காக இந்தப் பாடலை டெடிகேட் செய்கின்றேன்" என்று அகாடெமி மேடையில் தைரியமாகச் சொன்னது மட்டும் கொஞ்சம் ஓவர்தான்.
10. ரசித்த இளம் பெண் பாடகர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் புதல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் ரசிகர்களை மகிழ்வித்தார்.
11. ரசித்த இரட்டையர்கள்: திருச்சூர் சகோதரர்கள் வாசிக்கும் எல்லாக் கச்சேரிகளுக்கும் மோகன் என்ற வித்வான் மட்டுமே மிருதங்கம் வாசிக்கின்றாரே என்று வியந்து நின்றபோது, அவரே இந்த இரட்டையரின் தந்தை என்று புரிந்தது. இருவரும் மாறி, மாறி ராகம் பாடுவதுவும், ஒருவர் ராகம் பாடும்போது, மற்றவர் கார்வை பிடிப்பவதுவும் சுகமாக இருந்தது.இளமையான இந்த இரட்டையரிடம், "எக்ஸ்க்யூஸ் மீ, எந்தக் காலேஜ்லே படிக்கறீங்க?" என்று கேட்கக் போக, இருவரும் C.A படித்து முடித்து ப்ராக்டீஸ் செய்வதாக அறிந்து அதிர்ச்சி. மூத்தவருக்குத் திருமணமும் ஆகிவிட்டதாம். பார்தசாரதி சபா, ப்ரும்மகான சபா, கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் என்று அவர்கள் பாடும் அரங்கிற்கெல்லாம் துரத்தித் துரத்திப் போய்க் கேட்டேன். பெத்தாச்சி அரங்கில், 6 மணிக்குத் துவங்க வேண்டிய கதக் நாட்டிய நிகழ்ச்சி தாமதமாக, ப்ரும்மகான சபாவின் பாலு, மேலும் நேரம் ஒதுக்கித் தந்தார். கிடைத்த வாய்ப்பினை நழுவ விடாமல் திருச்சூர் சகோதரர்கள் அடித்து ஆடிய, " ஜோக் (JOG)" ராகத்தில் அமைந்த RTP, ரசிகர்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசாகும்.

12. ரசித்த லெக்-டெம்: அகாடெமியில் நடைபெற்ற, ஸ்ரீராம் பரசுராம் அவர்களின் "கர்நாடக இசையில் ஹிந்துஸ்தானி ராகங்களின் பங்கு" குறித்த விரிவுரையும் விளக்கமும். Shriram, What a vocabulary, man!

(மேலே இஞ்சிக்குடி குழுவினர்: கீழே: ரசிகப்ரியா/சங்கீதப்ரியா அமைப்பபளர்கள்; சில பதிவர்களும் படத்தில் உண்டு. கண்டுபிடியுங்கள்)
13. ரசித்த லெக்-கான்: தினமும் 80000 ஹிட்ஸ்க்கு மேல் பெறும் sangeethapriya.com அமைப்பின் விருது வழங்கும் விழாவின் முடிவினிலே இடம் பெற்ற "மல்லாரி" குறித்த விரிவுரையும், நாதசுர இசை நிகழ்ச்சியும். வழங்கியது இஞ்சிக்குடி எம். சுப்பிரமணியன் குழுவினர், ராகசுதா அரங்கினில். சுபபந்துவராளியில் பிஸ்மில்லாகானனக் கண்டோம்.
14. ரசித்த நாட்டிய நாடகம்: Three Musketeers என்ற ஃப்ரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு "Man with Iron Mask" என்ற தலைப்பில் கலாக்ஷேத்ரா புகழ் ஸ்ரீஜித் க்ருஷ்ணா குழுவினர் நடத்திய நாட்டிய நாடகம். ஃப்ரெஞ்சு உடைகள் அணிந்து வந்த ஆண் கலைஞர்கள் ஆடிய பரதம் பிரமாதம். ஒப்பனை, அரங்க அமைப்பு, கோரியோக்ராபி, வேடப் பொருத்தம் என்ற வகையில் கெமிஸ்ட்ரி, ஃபிஸிக்ஸ், மேத் என்று எல்லாமே வேலை செய்தது. நாரத கான சபாவில் இருந்த அனவைரையும் கட்டிப் போட்ட இந்த நாட்டிய நாடகம் முடிந்தபின் மணி பார்த்தபோது, இரவு மணி பத்தரை. ஸ்ரீஜித்தின் எந்த நிகழ்ச்சியும் ஏமாற்றுவதில்லை.
15. ரசித்த மியூசிகல் என்ஸெம்பிள்: வயலின் எம்பார் கண்ணனைத் தளபதியாகக் கொண்ட, கடம் கார்த்திக்கின் "Heart பீட்" என்ற வாத்ய விருந்தா. எம்பாரின் "ஜோக்" இராக வாசிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பாரதீய வித்யாபவன் மெயின் ஹாலில் ஒரு முறையும், பார்த்தசாரதி சபாவில் ஒரு முறையும் கேட்டேன். வடமொழியில் ஆராய்ச்சி செய்துள்ள Dr.கார்த்திக் பாடியது பெரும்பாலும் தமிழில். கீ போர்ட் சத்யா வழக்கமான அசத்தல். அதே போல் ரிதம் பேடில் அருண்குமார் அபாரம். குறிப்பாக சந்தூர் ஒலிகளைக் கொணர்ந்தற்கு. கஞ்சிரா புருஷோத்தமன் சொல்லவே தெவையில்லை. இன்று கஞ்சிரா உலகில் அவரே ஆட்சி.
16. சமீபத்திய பிரசுரம்: "Do away with Thematic Concerts!" என்ற தலைப்பில் எழுதிய குறுங்கட்டுரை பிரசுரமானது Kutcherybuzz Newsletter மற்றும் Kutcherybuzzonline.comல்.

(இந்த வருடப் படம் கிடைக்காததால் போன வருடப் படம். ஞாநியும் ஒரு நடுவர்.)
17. சமீபத்திய மகிழ்ச்சி: போன வருடம் மூத்த மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்டு "முத்ரா குவிஸ்"ஸில் பெற்றது இரண்டாம் பரிசு. இந்த முறை முதல் பரிசு பெற்றே தீர வேண்டும் என்று வந்த இடத்தில், தகுதிச் சுற்றில் பங்கு கொள்ள வந்தோர் மட்டுமே 50க்கும் மேல். தகுதிச் சுற்றில் தேறிய 12 பேர்களில் பெயரைக் குலுக்கிப் போட மனைவியும், நானும் ஒரே குழுவில் அமைந்தது எதிர்பாராத அதிசயம். இசைக் கலைஞர் Dr.ராதா பாஸ்கர், நடனக் கலைஞர் ரோஜா கண்ணன், தூர்தர்ஷன் புகழ் குவிஸ் மாஸ்டர் சுப்பிரமணியன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு வாய்ப்புகளை நழுவ விடாமல் பதிலளித்துத் தட்டிச் சென்றது முதல் பரிசு தலா ஆயிரம் ரூபாய்.
18. வெறுப்பேத்திய விஷயம்: Lec-dem என்ற பெயரில் மூத்த இசைவாணர்கள் (Musicologists, not Musicians) தங்களது சொந்தக் குரலில் பாடி எரிச்சல் மூட்டியது. பல பேருக்கு சிஷ்யர்கள் இருந்தும் பாடுவதற்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள மனம் வரவில்லை.
19. வியந்த நபர்: அகிரா என்ற ஜப்பானிய இளைஞர். நாரத கான சபாவினருகில் வசிக்கும் அகிராவை எல்லா சபாக்களிலுல் பார்க்கலாம். ஆம். இவர் ஒரு திறமையான புகைப்படக் கலைஞர். இந்திய இசைக் கலைஞர்களைப் புகைப்படம் பிடிப்பதே இவருக்குப் பிடித்த விஷயம். முத்ரா குவிஸ்ஸில், ஆடியன்ஸ் ரவுண்டில் கேட்ட கேள்விக்கு "கரகரப்ரியா" என்று தவறான விடையைச் சொன்னாலும், தனது மழலைச் சொல்லால் மனங்கவர்ந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

20. சமீபத்திய நட்பு: நாரதகான சபாவில் நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்த சாருஹாசனிடம் சும்மாப் பேச்சுக் கொடுக்க, அப்போது வந்த என் மாமனார் சந்திரஹாசன் அவர்களுடன் தான் பரமக்குடியில் ஒன்றாகப் பணிபுரிந்த நினைவலைகளைக் கூற, எளிமையாகப் பழகும் அவரின் நட்பு கிடைத்தது. வீட்டிற்குச் செல்ல கார் வரத் தாமதமானபடியால். எல்டாம்ஸ் ரோடிலுள்ள மணிரத்னம்-சுஹாசினி வீட்டில் சாருஹாசனை drop செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. டி.டி.கே சாலையிலிருந்து எல்டம்ஸ சாலைக்கிச் செல்ல இருந்த 5-10 நிமிடங்களில் பேசிய பேச்சுக்களில் அவர்தம் இசையார்வம் வெளிப்பட்டது. "பூச்சி ஸ்ரீநிவாசய்யரின் காபி ராகத் தில்லானாவை ஏன் யாரும் பாடுவதில்லை?" என்றெல்லாம் எளிமயாகப் பேசிக் கொண்டே வந்தார். மெயிலில் தொடர்பு கொண்டால் உடனடி பதில் உத்தரவாதம்.
- சிமுலேஷன்
எந்த ஆங்கிலப் புத்தாண்டு வருடப் பிறப்பிற்கும் புதிய சபதங்கள் ஏற்பதுவுமில்லை. கோயிலுக்கு செல்வதுவுமில்லை. ஆனால் விடுமுறை தினமாதலால், எதேனும் புதிய நிகழ்ச்சிகள் இருந்தால் தவறாமல் செல்வதுண்டு. இந்த வருடம் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, முதலிலும் முடிவிலும் தோன்றியது "மார்கழி ராகம்".
அணமையில் மறைந்த ஒலிவித்தகர் எச்.ஸ்ரீதர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து படம் துவங்கியது. முதலில், பாம்பே ஜெயஸ்ரீயின் அமைதியான "ஸர்வ மங்கள மாங்கல்யே" என்ற ஸ்லோகத்தினைத் தொடர்ந்து மாயாமாளவககௌளையில் "மாயாதீத ஸ்வரூபிணி". அடுத்து வந்தது சுகமான நீலாம்பரியில் "அம்பா நீலாயதாஷி". இம்முறை நீல நிறப் புடவையில் வந்தார் ஜெயஸ்ரீ. மூன்றாவதாக ரீதிகௌளையில் "ஜனனீ நின்னுவினா". நல்ல உருக்கம்தான். ஆனால் வரிசையாக எல்லாப் பாடல்களுமே சவுக்க காலத்தில் பாடியபடியாலும், பி.சி.ஸ்ரீராமின் மங்கிய காமிரா வெளிச்சத்திலும் சற்றே தூக்கம் வந்தது. "ஜனனீ நின்னுவினா"வில், சரணத்தில் நிரவல் செய்து, "ஜனனீ"யில் ஸ்வரம் பாடினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் செய்யப்பட்ட கைதட்டல்களைக் கேட்டபோது, சத்யம் தியேட்டரில் இருக்கின்றோமா இல்லை நாரத கான சபாவில் இருக்கின்றோமா என்று தோன்றியது. தனி ஆவர்த்தனம் இடம் பெற்றபோது, யாரேனும் எழுந்து போவார்களோ என்று பார்த்தேன். யாரும் எழுத்து போகவில்லை. எம்பார் கண்ணன் வயலின் வழக்கமான சுகத்துடன் வாசித்தார். மிருதங்கம் பட்றி சத்தீஷ் குமார். இவரும் நன்றாகவே வாசித்த போதிலும், சற்றே அதிகப்படியான "கும்கி"யோ என்று தோன்றியது.
தனி ஆவர்த்தனதில் திடீரென்று மிருதங்கத்தில் அருண் பிரகாஷும், கஞ்சிராவில் புருஷோத்தமனும் சேர்ந்து கொண்டு, 'தனி'யினை பரிமளிக்கச் செய்தார்கள். தனி முடிக்கும் போது, பல்லவியினை எடுத்துக் கொண்டு ரஜனி போல் எண்ட்ரி கொடுத்தார் டி.எம்.கிருஷ்ணா. பொதுவாகக் கச்சேரியின் பின் பகுதியில் பாட வேண்டிய "ஸாரமைன மாடலெந்தோ" என்ற பெஹாக் ராக ஜாவளியுடன் துவங்கினார். பின்னர் வராளி ராகத்தில் ராகம்-தானம்-பல்லவி.
சற்றே சிக்கலான வராளி RTPக்கு ஸ்ரீராம் குமாரின் வயலின் அருமையாக ஈடு கொடுத்தார். சாமா மற்றும் காபியில் ராகமாலிகையில் பாடிய ஸ்வரங்களைக் கேட்டுக் கொண்டெயிருக்கலாம் போல இருந்தது.
சமீபத்தி மறைந்த ஒலி வித்தகர் ஸ்ரீதர் அவர்களுக்கு எதனால் இத்தனை புகழ் என்று யாருக்கேனும் தோன்றினால், மார்கழி ராகம் பார்த்தால் விடை கிடைத்துவிடும். அப்படி ஒரு துல்லியமான ஒலி அமைப்பு. அதே போல், காமிராவைப் பற்றியும் சொல்லி கொண்டேயிருக்கலாம். குறிப்பாக கிருஷ்ணா ஸ்வரங்கள் பாடும்போது, காமிரா கட் செய்து செய்து காட்டுவது அருமையாக இருந்தது.
குறைகள் என்று சொல்ல எதுவும் தோன்றவில்லை. ஆனால் தொன்றிய சில சந்தேகங்கள்.
கஞ்சிராவுக்கு இடம் கொடுத்தவர்கள் கடத்திற்கு இடம் கொடுக்க மறந்ததேனோ?
எப்படியாவது ஒரு தில்லானாவினையும் நுழைத்திருக்கலாமே?
கர்னாடக இசை உலகில் ஒரு முழு நீளக் கச்சேரியை இது போன்று திரை வடிவில் காண்பிப்பது ஒரு புதிய பரிணாமம். இதனை இசை உலகின் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக வெளி நாட்டில் வாழும் இசை ரசிகர்கள் இப்படிப்பட்ட முயற்சிகளை வரவேற்பார்கள்.
Pictures Courtesy : http://www.margazhiraagam.com/
- சிமுலேஷன்
(செம்மங்குடி, லால்குடி மற்றும் திருச்சி சங்கரன்)
"சங்கீதப் பிதாமகர்" என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரை ரசிக்காத பாரம்பரிய கர்நாடக இசையின் இரசிகர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். தனது இடைவிடாத உழைப்பாலும், இசையோடு ஒன்றிப் பாடும் பாவத்தினாலும், எளிமையான வாழ்க்கையாலும் அனைவரின் நன்பதிப்பையும் பெற்றவர் செம்மங்குடி மாமா. குறிப்பாக, ஒரு காலத்தில் இசையுலகில் சிலர் முன்னே, பின்னே இருப்பது சகஜமாக இருந்த போதிலும், தனி மனித ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர். தனது தந்தையார் கட்டளையிட்ட ஒரு காரணமாகவே தனது இறுதிநாள் வரை எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை அவர். இப்படி எந்த வெளிநாடுகளுக்கும் சென்றிருக்காத செம்மங்குடி அவர்கள் "ஏர்போர்ட் கச்சேரி" என்ற ஒரு கச்சேரி செய்ததாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இரயில் பயணங்களிலோ, இரயில் நிலையங்களிலோ கச்சேரி செய்யும் ஒரு வாய்ப்புள்ளது. அது எப்படி ஏர்போர்ட் கச்சேரி? எனக் குழம்பலாம். மேலும், இந்த ஏர்போர்ட் கச்சேரி எந்த ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? எதற்காக ஏர்போர்ட்டில் செய்யப்பட்டது? போன்ற குழப்பமான தகவல்கள் உண்டு.
இந்தக் கச்சேரியில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலினும், திருச்சி சங்கரன் அவர்கள் மிருதங்கமும் வாசித்துள்ளதாகத் தெரிகின்றது. சமீபத்தில் 1971ல், மும்பையில் உள்ள ஷண்முகானந்தா ஹாலில் இந்தக் கச்சேரி நடைபெற்றதாகவும், கச்சேரியின்போது, அருகில் பறக்கும் ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்பதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இன்னம் சிலரோ, இல்லை இல்லை, இந்தக் கச்சேரி இன்னமும் சமீபத்தில் 1960ல் தாம்பரத்தில்தான் நடைபெற்றது என்றும் கூறுகின்றனர். கடைசியாகக் கிடைத்த தவலின்படி இது தாம்பரத்தில்தான் நடைபெற்றதாகத் திருச்சி சங்கரன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தருகே ஆகாய விமானங்களின் வரத்து அதிகம் இருந்ததால், செம்மங்குடி மாமா கடுப்பானதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயத்தில், "வந்துட்டான் அசுரன்"னு அவர் சொல்வதைக் கேட்கும்போது, இது உண்மைதான் என்று புரிகின்றது.
இப்போது ஜெட் ஏர், கிங் பிஷர், ஸ்பைஸ் ஜெட், டெக்கான் ஏர், கோ ஏர், இண்டிகோ, பாராமவுண்ட் என்று பல விமானக் கம்பெனிக்கள் இருப்பதால் விமானப் போக்குவரத்து அதிகம் இருக்கின்றது. சுமார் 30-40 ஆண்டுகள் முன்னாலே எப்படி விமான போக்குவரத்து அதிகமாக இருந்திருக்க முடியும் என்று சிலர் கேள்வி கேட்டபோது, கிடைத்த விளக்கம் என்னவென்றால், அந்த சமயத்தில் விமான நிலைய அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தக் கச்சேரி நடைபெற்ற நன்னாளில், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதால், விமானப் போக்குவரத்து அதிகம் இருந்ததாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்தை செம்மங்குடி மாமாவே இசைக் கல்லுரியில் ஒரு முறை சொன்னாராம்.
இந்தக் கச்சேரியில் கிட்டத்தட்ட 18 உருப்படிகள் பாடியுள்ளார். அருமையான இந்த நிகழ்ச்சியினை அவரே வெகுவாக இரசித்துப் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. ஏனென்றால் ஒரு இடத்தில், "இன்னிக்கிப் பாடிண்டே இருக்கலாம் போல இருக்கு" என்று சொல்கின்றார். இந்தக் கச்சேரியின் ஒரு சில பாடல்களை தரவேற்றலாம் என்றால், மிகப் பெரிய கோப்பாக உள்ளது. எனவே உண்மையிலேயே ஏர்போர்ட் கச்சேரி கேட்க ஆவலாக உள்ளவர்கள் இங்கே சென்று இரசியுங்கள். முடிந்தால் எந்தப் பாட்டில் "வந்துட்டான் அசுரன்"னு சொல்றார்னு என்பதனையும் சொல்லுங்கள்.
- சிமுலேஷன்
"டெலெராட்" என்ற பெயர் கொண்ட வால்வ் ரேடியோ மட்டும் வைத்திருந்த எங்கள் இசை வாழ்வில் வசந்தம் வீசியது ஒரு நாள். உறவினரின் திருமணத்திற்கு கோவை சென்றிருந்த அம்மாவும், அப்பாவும் திரும்பி வரும்போது சர்ப்ரைஸாக "ரெகார்ட் ப்ளேயர்" ஒன்று வாங்கி வந்தது கண்டு நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனால், அதற்கு எலெக்ட்ரிக் கனெக்ஷன் எப்ப்டிக் கொடுப்பது என்பது மட்டும் புரிபடவில்லை. எந்த இடத்தில் எலெக்ட்ரிக் ப்ளக் இருக்கு என்றே தெரியவில்லை. மறுநாளே, கோவைக்கு ரெகார்ட் ப்ளேயரை எடுத்துச் சென்று கடையில் விசாரித்தபோது, அதன் அடிப்பாகத்தில் உள்ள ஒரு மூடியில் உள்ள ஒரு மரையில் ஒரு நாலணா காசினை வைத்துத் திருக அழகாகத் திறத்து கொண்டது. 210 வோல்டியிருந்து 12 வோல்ட்டுக்குக் குறைக்கும் ஒரு டி.சி. எலிமினேட்டரும் வெளிப்பட்டது. அவர்கள் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் திரும்பி வரும் வரை, வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தோம்.

- சிமுலேஷன்
(பருத்தி வேஷ்டி)இந்த வேஷ்டி வகையறாக்கள் சாமான்யரும் வாங்கும் வண்ணம் சுமார் 200 ரூபாயிலிருந்து இருக்கின்றன. பாரம்பரிய உடை அணிய விருப்பம் இருப்பவர்களை ஒரு முறை இந்த ஷோ ரூமுக்கு விஜயம் செய்ய பரிந்துரைக்கின்றேன். வெளிநாடு வாழ் மக்களே, விரைவில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகமும் செய்யவுள்ளார்கள்.
***இன்று (14th) ஆங்கில வருடப்படி பிறந்தநாள்; நாளை நட்சத்திரம். நாளைய தினம் அருகிலுள்ள பள்ளிக்குக் குடும்பத்துடன் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது 80 பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கவுள்ளோம். சந்தோஷத்திலேயே அதிக சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான் என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் தெரிகின்றது.
- சிமுலேஷன்
ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

|
