Saturday, February 19, 2011

கண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்

"கண்டு கொள்ளுவோம் கழகங்களை" மற்றும் "திராவிட மாயை - ஒரு பார்வை" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் எழுத்தப்பட்ட புத்தகங்கள். ஆனால் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். திராவிடக் கட்சிகளின் மூதாதையர் வரலாறு, அக்கட்சிகளின் நிலையில்லாத கொள்கைக் கோட்பாடு போன்றவற்றின் போலித்தனம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன இரண்டுமே.




"கண்டு கொள்ளுவோம் கழகங்களை"

"கண்டு கொள்ளுவோம் கழகங்களை" என்ற கட்டுரைத் தொடர் மூலம் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள் எண்பதுகளில் துக்ளக் இதழில் எழுதி வந்தார். அவரது மகனும், 'அகடவிகட அக்கப்போர்' என்ற அரசியல் பத்திரிகையின் ஆசிரியருமான ஜெ.மோகன்ராஜ் அவர்கள் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பல புதிய விஷயங்களைத் தரும் விதமாகவும், எண்பதுகளில் துக்ளக் இதழில் ஜெபமணியின் கட்டுரைகள் படித்து வந்த எம்மைப் போன்ற தலைமுறையினருக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன இந்தக் கட்டுரைகள்.

இந்தத் தொகுப்பிலிருந்து சில சுவாரசியமான விஷயங்கள்:

- 1942ல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டப் போராட்டமாக,"இனி போராட்டமே கிடையாது... வெள்ளையனே வெளியேறு... மக்களே... செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள்" என்று அறிவிக்க,, அண்ணாதுரை அவர்கள் கிண்டலாக த்ம்பிமார்களுக்கு பின்வருமாறு எழுதினாராம். "தம்பி காந்தியாருக்கு நல்ல பைத்தியம் பிடித்திருக்கிறது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது. ரெயில் ஓடாது. தந்தி இருக்காது. டேலிபோன் இருக்காது. ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்த்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூடச் செய்ய முடியாது. புரிகிறதா தம்பி?"

- நீதி கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் மதச்சின்னங்களை அணிவார்கள். சர்.ராமசாமி முதலியார், சர்.பி.டி.ராஜன் போன்ற நீதிக்கட்சியின் தலைவர்கள்,, நெற்றியில் மதக்குறி இல்லாமல் வெளியே வரவே மாட்டார்கள்.

- தூத்துக்குடியில் புதுக் கிராமக் கொடுமைகள் பற்றி குறிப்பிடுகின்ற்றார் ஜெபமணி. ஆனால் விபரங்கள் தரவில்லை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்குக் கொடுமைகள் போலும்.

- நீதிக் கட்சியில் இருந்த அமைச்சர்கள் பெற்ற மாதச் சம்பளம் 5333 ரூபாய், 5 அணா, 4 பைசா. அவர்கள் காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ரூபாய் 8 அணா. அரிசி ரூபாய்க்கு 18 படி கிடைத்து வந்தது. நீதிக் கட்சியின் அமைச்சர்கள், அன்று அவர்கள் வாங்கிய சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் 395 சவரன்களை வாங்கிக் கொள்ளலாம்.

- ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அண்ணாதுரை எழுதியது பற்றிக் குறிப்பிட்ட ஜெபமணி, "ஜஸ்டிஸ்" என்பதில் மூன்று வட எழுத்துக்கள். ஒன்றுதான் தமிழ் எழுத்து. அதை மூன்று வடமொழி எழுத்துக்களுடன் அப்படியே எழுத அண்ணாதுரைக்குத் தயக்கமில்லை. ஆனால் இராஜாஜி என்பதை "இராசாசி" என்று மட்டும் எழுதுகிறார்", என்கிறார்.

- "டால்மியாபுரம் (கல்லக்குடி) என்ற ஊரின் பயரை மாற்ற வேண்டுமென்று புறப்பட்டவர்கள். மதுரையிலுள்ள "ஹார்விபட்டி"யினை ஏன் எதிர்க்கவில்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையினை ஏன் எதிர்க்கவில்லை" என்று கேட்கின்றார் ஜெபமணி.

- தேசிகாச்சாரி சாலை, தேசிகா சாலை ஆனது. ஆனால், தியாகராய நகரிலுள்ள டி.எம்.நாயர் சாலை மட்டும் மாறாமல் இருக்கிறது. முரணைச் சுட்டிக் காட்டுகின்றார்.

- பகுத்தறிவு உள்ளவர் ஒருவர் வீட்டில் திருமணம் நடந்ததாம். அவர். "பகலில் திருமண வீட்டில் குத்து விளக்கா... எவ்வளவு அறீவீனம்?" என்று சொல்லி விளக்கை ஊதி அணைத்தார்ராம். அவர் இப்போது சட்ட சபை உறுப்பினராகத்தான் இருக்கிறார். (யார் இதுவெனத் தெரியவில்லை.) அன்னார் அண்ணா சமாதியில், பகலிலும் எரியக்கூடிய விளக்கைப்பற்றி ஒன்றும் சொல்லவும் இல்லை. பகுத்தறிவுக்கு இது விரோதமாச்சே என்று அவர் அதனை அணிக்கவும் இல்லை.

- ஹிந்தி போராட்டத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றின் முடிவில், "மதுவைக் குடிக்கச் உதவியவர்கள், மொழியைப் படிக்க உதவ மறுத்ததேன்? மதுவை விட மொழி கொடியதா"" என்று வினவுகின்றார் ஜெபமணி.

- தியாகிகளுக்கும், இராணுவத்தினருக்கும் நிலமற்ற ஏழைகளுக்கும்தான் அரசு நிலங்கள் கொடுக்கப்படும். இதுதான் அரசின் கொள்கை. அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வருக்கு, சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள, பல இலட்சங்கள் பெறுமானமுள்ள, அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்தார். "என் சொத்து பூராவும் மக்களுக்குச் சொந்தம்" என்று சொல்லிக் கொள்ளும், இந்நாள் முதமைச்சர் தாம் இலவசமாகப் பெற்ற அரசு நிலத்தை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை" என்று சாடுகின்றார் ஜெபமணி. (அட்டைப் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் படமும் சேர்த்திருப்பதால், இது அவரைப் பற்றிய செய்தியாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.)

பெயர்: கண்டு கொள்ளுவோம் கழகங்களை
ஆசிரியர்: தியாகி நெல்லை ஜெபமணி
பதிப்பு: முத்துமாலையம்மன் பதிப்பகம், கிழக்கு அபிராமபுரம், சென்னை-4
பதிப்பசிரியர்: ஜெ.மோகன்ராஜ்
கிடைக்குமிடம்: அகடவிகட அக்கப்போர் அலுவலகம், தணிகாசலம் தெரு, ஹிந்தி பிரச்சார சபா எதிரில். தி.நகர், சென்னை-17
பக்கங்கள்: 254
விலை: Rs.100




திராவிட மாயை - ஒரு ஆய்வு

"திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் சுப்பு என்ற கேட்டபோது, கம்யூனிஸ்ட், காங்க்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளில் 'எம்.எல்.ஏ'வாக இருந்த சுப்புவோ என்றுதான் எண்ணியிருந்தேன். பிறகுதான் தெரிந்தது. இவர் வேறு ஒருவரென்று. 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்று தெரிந்தது. தமிழ் ஹிந்து இணைய இதழில், "போகப் போகத் தெரியும்" என்ற பெயரில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே "திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற இந்நூல்.

வலைப்பதிவர்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன் படிப்பவர்களை இழுக்கும் வண்ணம் பல கட்டுரைகளுக்குத் தலைப்புகள் வைத்திருக்கின்றார். உதாரணாமாக, "கால்டுவெல்லின் தாயாதிகள்", "புறநானூற்றுப் பூனைகள்" போன்றவை.

நெல்லை ஜெபமணியின் புத்தகத்தை போலவே, சுப்புவின் இந்தப் புத்தகத்தை படிக்கும்போதும் பல பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

- திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர், சர்.பி.டி.தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைக்க்கின்றார்.

- ஜெபமணி கூறியது போலவே, சுப்புவும், நீதிக்கட்சியின் த்லவர்கள் மாதச் சம்பளம் Rs.4333 (ஜெபமணி சொன்னதூ Rs.5333)) பெற்றது குறித்துச் சொல்லுகிறார். ஜெபமணி இந்த்தப் பணத்தில் மாதம் 395 சவரன்கள் வாங்க முடியும் என்று சொல்லும் போது, சுப்பு இந்தப் பணத்தில் எத்தனை இட்லிக்கள் வாங்காலாமென்று கேட்கின்றார். அந்தக் காலகட்டத்தில் ரூபாய்க்கு 64 இட்லிக்களாம்.

- குமு.அண்ணல் தங்கோ என்பவர் எழுதிய வரிகளை மேற்க்கோள் காட்டி, இது "காவிய தண்டனை" என்கின்றார் சுப்பு.

- "திரைப்படங்களில் பாரதி பாடல்களைத் தடை செய்த நீதிக் கட்சியினரின் அரசு, திரைப்படங்களில் வெளியிடப்பட்ட ஆபாசம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. நாராயணன் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கிய "லைலா எஸ்ரெல்ல நட்சத்திரம்" (1931) என்ற படத்தில் வந்த நடிகைகள் மறைக்க வேண்டியதெல்லாம் காட்டிவிட்டார்கள். கமலஹாசன் பொறாமைப்படும் அளவுக்கு முத்தக் காட்சிகளும் இருந்தன. அதாவது, கவர்ச்சிக்குத் தடையில்லை. கருத்துக்குத் தடையுண்டு என்பது அந்த அரசின் கொள்கையாக இருந்தது" என்கிறார்.

- "வாழ முடியாதாவர்கள்" என்ற தலைப்பில் வெளியான (ஆபாசம்)கதை குறித்து கண்ணதாசன் நொந்து போய்த் தன் கருத்துக்களைத் (வனவாசம்) தெரிவித்திருக்கின்றாராம்.

- திருப்பதி சென்று வந்ததற்காக சிவாஜி கணேசனைக் குறிவைத்து, அவரது போஸ்டரில் சாணி அடித்தும். அவரது கார் மீது கல்லெறிந்த்தும் அவமானப்படுதியவர்கள், "தனிப்பிறவி" என்ற திரைப்படத்தில் "முருகனாக" நடித்த எம்.ஜி.ஆர் மீது ஒரு முணுமுணூப்பும் தெரிவிக்கவில்லையாம்.

- திராவிடக் கட்சிகளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், அடிக்கடி கிறிஸ்தவ, முஸ்லீம் பிரச்சாகர்களைப்பற்றிக் கூற ஆரம்பித்து விடுவதேன் என்று புரியவில்லை. ஒருவேளை திராவிட இயக்கங்களின் ஒருதலைப்பட்சமான மத இணக்கத்தினை சுட்டிக் காட்டுவதற்கோ?

சுப்பு அவர்களின் கட்டுரைகளின் தலைப்புகள் புதுமையாக இருந்தாலூம் அத்தலைப்புகள் மூலம் சொல்ல வரும் சேதி என்னெவென்று புரியவில்லை. உதாரணமாக, "ஐய்யப்பமாரின் அதிர்வேட்டு", "எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏன் வரவில்லை", "எருமைத் தலையனுக்கு எக்ஸ்டிரா டைம்" போன்றவை. இவை ஒருவேளை வலையுலக மேதவிகளுக்குப் புரியுமோ என்னவோ, சாமானிய வாசகனுக்குக் கண்டிப்பாகப் புரியாது.   வலைப்பதிவுக் கட்டுரைகளைத் புத்தகமாக வெளியிடும்போது, அவற்றை அப்படியே பதிப்பிக்காமல். அதீத அக்கறை எடுத்து தொகுத்து வெளியிட வேண்டியது பதிப்பகத்தின் கடமை. அந்த வகையில், விறுவிறுப்பாக இல்லாமல் "என்ன சொல்ல வர்றே" என்று எண்ணும் வண்ணம், படிப்பவருக்குச் சோர்வை ஏற்படுத்துகின்றது இந்தத் தொகுப்பு.

பெயர்: திராவிட மாயை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125

திராவிட இயக்கங்களின் கொள்கைக் குழப்பங்கள் என்ற ஒரே விஷயத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம், இரு வேறு காலங்களைச் சேர்ந்த, இரு வேறு நபர்கள் எழுதும் போது அது எப்படி வேறுபடுகின்றது என்று அறிய ஒரே மூச்சில் இந்த இரண்டு புத்தகங்களையும் படித்து அறியலாம்.  இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுபவர்கள் கூட, எதிர்க் கருத்துக் கூறவேனும் இவற்றை ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

- சிமுலேஷன்

Saturday, February 12, 2011

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் – நூல் விமர்சனம்


இ.பா என்றழைக்கப்படும் இந்திரா பார்த்தசாரதியின் கதைகளில் ஒன்றான் “ஹெலிகாப்டர்கள் தரையில் இறங்கிவிட்டன” படித்த பின்பு, அதனைப் பர்றி ஒரு பதிவு இடவேண்டுமென்று எண்ணி இதுநாள் வரை அது நிறைவேறவில்லை. ஆனால் சமீபத்தில் படித்த “இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்” படித்தவுடன் அவை குறித்து உடனே பதிவு இடவேண்டுமென்ற வகையில் அவை சுவாராசியமானவை.

இவரது கட்டுரைகளில், சங்க இலக்கியம் மற்றும் தமிழரின் தற்கால வாழ்க்கை முறைகள் பற்றி அதிகம் பேசுகின்றார். அடுத்ததாக மார்க்ஸிசம் பற்றிப் பேசுகின்றார். கட்டுரைகளின் தலைப்புகள் அழகாகவும், அதில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு பொருத்தமாகவும் உள்ளன. இக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டம் தொண்ணூறுகளின் இறுதியாக இருந்திருக்கலாம். புத்தகத்தின் முதற்ப் பதிப்பு 2000ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டு இருப்பதனால். எல்லாக் கட்டுரைகளிலும் தற்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த எரிச்சலைத் தெரிவித்தாலும், இ.பா போன்ற ஒரு சிலராவது இது போன்ற கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார்களே என்று மெத்த  மகிழ்ச்சி ஏற்படுகின்றது. 

“பாரத வர்ஷே; பரத கண்டே” என்ற இந்தக் கட்டுரையில் ‘தேசபக்தி’ என்ற சொல்லாடலே இந்தியாவில் இருந்ததில்லை என்றும் , அது ஒரு உருவாக்கப்பட்ட ‘சொல்லாடல்’ என்றும் குறிப்பிடுகின்றார். ‘தேசபக்தி’ என்று ஜல்லியடிப்பவர்களைப் பார்த்து இ.பா பெரிதும் கடுப்பானவர் போலத் தெரிகின்றது. தாய்நாடு, தாய்மொழி என்ற கருத்துக்கள் யாவும் மேல் நாட்டிலிருந்து இறக்குமதியானவை என்கிறார்.  ‘மாத்ருபூமி’ அல்லது ‘தாய்நாடு’ என்ற சொல்லாட்சி, மேல் நாட்டுப் பாதிப்புக்கு முன்னால் இந்தியாவில் வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை. தேசப்பற்று என்ற பிரக்ஞை அக்கால மக்களுக்கு அரசியல் அடிப்படையில் இல்லை என்றாலும், ‘ஊர்ப்பற்று’ இருந்திருக்கிறது. அதாவது ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவரோ அந்த ஊரின் பால் உணர்ச்சிகரமான ஈடுபாடு நம்நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றது, என்றும் சொல்லுகின்றார். அளவுக்கு மீறிய இந்த ‘ஊர்ப் பற்றை’ச் சாடுவதற்காகவே ‘கணியன் பூங்குன்றனார்’, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, என்று பாடினோரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. “தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கட்டுரையில் ஆரிய, திராவிடப் பிரச்னையைச் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எழுப்பிக் கொண்டிருப்பது, இ.பாவுக்கு ‘டான் குயோட்ட்டோ’வை (Don Quixote) நினவூட்டுகின்றதாம். கடந்து போன பொற்க்காலக் கதாநாயகனாகத் தன்னைப் பார்த்துக் கொண்டு, காற்றாலை இயந்திரங்களை எதிரிகளாக நினைத்து, அவற்றுடன் போரிடுவத்து டான் குயோட்டின் பொழுதுபோக்கு.  இந்தக் கட்டுரையில்  ‘மகாபலிபுரம், தஞ்சைப்பெரிய கோயில், தாராசுரம், சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம்” எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் போய்க் கொண்டிருக்கின்றதே என்று அங்கலாய்க்கின்றார். ‘தரம் தாழ்ந்த திரைப்படம், அரசியல், வழிபாட்டுணர்வு’ ஆகிய மூன்றின் கலவையே தமிழர்களின் சமுதாய நெறிகளாக மாறிவிட்டது என்று சொல்லும்  இ.பாவின் குரல் எனக்கு ஜெயகாந்தனின் கருத்துக்களைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுகின்றது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற இந்தக் கட்டுரையில் பரத நாட்டியத்தையும், கர்நாடக இசையையும், ஓர் உயர்தர ரசனை நிலையிலிருந்து அனுபவிக்கும் தமிழ்ப் புரவல மேட்டுக் குடியினர் எத்தனை பேர் நடனத்துக்கும், இசைக்கும் அவர்கள் பயன்படுத்தும் அளவுகோல்களை வைத்துக் கொண்டு இக்காலத் தமிழிலக்கியம் படிக்கைன்றார்கள்?” என்பது போன்ற நமது பல ரசனைக் குறைபாடுகளை சுட்டிக் காட்டும் இ.பா, பிரச்னைக்குத் தீர்வும் நம் கையிலேதான் உள்ளது என்கிறார். “என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்” என்ற தலைப்பில் “பேசும் தமிழ் மொழிக்கும், எழுதும் மொழிக்கும் பெரிய இடைவெளி இருப்பதனால், செந்தமிழ், நவீனத் தமிழ் என்று இரண்டு வகைத் தமிழும் தேவை”, என்று வலியுறுத்துகின்றார். “என்று தணியும் இந்த அடிமையின் மோகம்” என்ற தலைப்பில் ‘நூற்றைம்பது ரூபாய் கொடுத்து ஆர்தர் ஹெய்லி வாங்குவோமே தவிர, முப்பது ரூபாய் கொடுத்து ஜெயகாந்தன் வாங்குவோமா?’ என்று வினவும், இ.பா, காலனி ஆதிக்கத்தின் எச்சமாகிய மொழி அடிமை உணர்வு நம்மைவிட்டு இன்னும் அகலவில்லை என்றும் கூறுகின்றார். அடுத்து வரும் “வேரில்லா அற்புதங்கள்” என்ற கட்டுரையில் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் மகள் கான்வெண்டிட்டில் படித்து வந்ததாகவும், அவள் ஒரு முறை எதிர்வீட்டுப் பஞ்சாபி பெண்ணுடன் சண்டை போடும்போது, அமெரிக்கன்  “ஸ்லாங் டிக்ஷனரி” கூட போடுவதற்குக் கூச்சப்படும், ‘பசுமையான சொற்களை’ப் பயன்படுத்தும்போது, திகைத்துப் போய் நிற்கின்றார்.  ‘வரலாற்றின் நகைச்சுவை என்ற கட்டுரை படிக்கும்போது பல புதிய தகவல்கள் தெரிகின்றன. அதாவது தொழில்கள் பரம்பரை வழியனவாக இருந்தனவாக ஆரம்ப ரிக் வேதத்தில் கூறப்படவில்லையாம். ஒரு ரிஷி தாம் கவிஞரென்றும், தம் தந்தை மருத்துவரென்றும், தாய்வழிப் பாட்டனார் ‘கல் உடைப்பவர்’ என்றும் கூறுகின்றாராம்.  வரலாற்று கதாநாயகர்களைப் பற்றி ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதியபோது, அவர்களின் பலங்களையும், பலகீனங்களையும் சொல்லியிருப்பது போல, நம்நாட்டு வரலாற்றுக் கதாநாயகர்களைப் பற்றி நம் கதாசிரியர்கள்  கூற முடியுமா? ராஜ ராஜன் காலத்தில் தேவதாசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? (எனக்குத் தெரியவில்லை). மாமன்னர் அக்பர் ஒரு சின்னப் பெட்டியில் விஷம் தோய்ந்த இனிப்புப் பண்டங்களையும், இன்னொரு பெட்டியில் நல்ல இனிப்புப் பண்டங்களையும் வைத்து, (வேலைக்காரர்களை?) பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்து உண்ணச் சொல்லுவாராம். அதிர்ஷ்டமிருந்தால் நல்ல பெட்டியிலிருந்த்து தேர்ந்தெடுப்பான். இல்லாவிட்டால் மரணம். இது அக்பருக்கு ஒரு விளையாட்டாம். ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்ற கட்டுரையில் பெண் விடுதையைப் பற்றிப் பேசும்போது, பாரதி கூட ‘பெட்டைப் புலம்பல்’ என்று அவரையறியாமல் கூருகின்றான் என்கிறார். பாரதிதாசன் காணும் பெண்ணோ, தமிழ் ஆண்கள் சுயநலத்தின் காரணமாக மத்தில் உருவகிக்கும் பெண்ணின் படிவம்தான். ஔவையாரைப் பற்றிக் கூறும்போது, முதுமையை வலிந்து ஏற்றுக் கொண்ட நிலையில்தான் ஆண்களாகிய அரசர்களுடன் தோழமை கொண்டாட முடிகிறதென்றும், அழகிய இளம் பெண்ணாகவே தொடர்ந்திருந்தால், ஏதாவ்து ஒர்ர் அரசரின் அந்தப்புரத்தை அலங்கரிக்க நேர்ந்திருக்கும். இந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் முதலிலும், முடிவிலும் தீர்மானமாக இ.பா சொல்வது, ‘பெண்களைக் கண்டு அஞ்சும் ஆண்கள் ஒன்று அவர்களை அடக்கி ஆள நினைக்கிறார்கள் அல்லது தெய்வமாக்க விரும்புகிறார்கள். ‘படமாடும் கோயில்களும் நடமாடும் நம்பர்களும்’  என்ற தலைப்பில்  கோயில்களின் தூய்மை பற்றியும், பொதுவாகவே இந்து ஆலயங்கள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் சொல்லுகின்றார்.

மேற்கண்ட கட்டுரைகள் போல இந்தப் புத்தகத்தில் பல்வேறு தைஅலூகளில் மொத்தம் 27 கட்டுரைகள் உள்ளன. அவற்றில் போஸ்டர் கலாசாரம், சாதிப் பாகுபாடுகள். சினிமாக் கவர்ச்சி, உள்வட்டக் கண்ணோட்டம் (Elitism), நாடகங்கள், கபிலரின் கவிதை, கண்ணகியின் கற்பு  போன்ற பல்வேறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றார்.

200 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பினை வாசித்த பின், பல புதிய விஷயங்களும் , பல புதிய  கண்ணோட்டங்களும் கிடைத்துள்ளன. இ.பாவின் மற்றைய ஆக்கங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டுள்ளன இந்தக் கட்டுரைகள்.

பெயர்:       இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
பதிப்பு:      அருந்ததி நிலையம் – 2000
விலை:      Rs.55

-      - சிமுலேஷன்

Sunday, January 30, 2011

மானசரோவர் – அசோகமித்திரன் – நூல் விமர்சனம்



தமிழில் திரைப்படத்துறையைப் பின்னணியாகக் கொண்டு வந்த நாவல்களில் சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை" முதன்மையானது. அந்த அளவுக்கு திரைப்பட உலகின் விவரங்களை எடுத்துச் சொல்லாவிட்டாலும், இதே திரைப்படப் பின்னணியில் வந்த மற்றுமொரு நாவல்,

அசோகமித்திரனின் "மானசரோவர்". எண்பதுகளில் ‘சாவி’யில் தொடராக வெளி வந்ததாம் இது. திரையுலகின் கீழ் மட்டத்தில் இருக்கும் ஆனால் ஓரளவு செல்வாக்கு கொண்ட கோபால் என்ற ஸ்கிரிப்ட் ரைட்டருக்கும், சத்யன் குமார் என்ற புகழ் பெற்ற வடநாட்டு நடிகனுக்கும் உள்ள உறவு அல்லது நட்பு அல்லது தொடர்பு ஆகியவைதான் மானசரோவர் நாவலின் முக்கிய அம்சம். 'நத்தானியெல் வெஸ்ட்', 'டாக்டர் ஜிவாகோ' என்று படிக்கும் இருவரையும் அறிவுஜீவிகள் என்று சொல்லலாமாவென்று தெரியவில்லை. (சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் அருண் கோடர்ட் படிப்பது நினைவுக்கு வருகின்றது)


நாவலை எட்டுப் பாகங்களாகப் பிரித்து, அதில் ஒவ்வொரு பகுதியிலும் கோபாலும், சத்யன் குமாரும் மாறி, மாறி 'தன்மை' (1st person) நிலையிலிருந்து ‘கதைசொல்லி’களாக அமைத்திருப்பது சற்றே வித்தியாசமான பாணி. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் சுமார் 25 பாத்திரங்களுக்கு மேலே வந்து போகின்றார்கள். ஆனாலும் அதில் முக்கியமானவர்கள், கோபால்ஜி என்றழைக்கபடும் கோபால், யூசுப் என்ற சத்யன் குமார், கோபாலின் மனைவி ஜம்பகம், புகையிலைச் சித்தர், ஜெயசந்திரிகா என்ற நடிகை, சியாமளா என்ற துணை நடிகை, கோபாலின் பெண் காமாட்சி, அவரின் பையன் ராஜா, ஆகியோர் மட்டுமே.

பிரிவினைக்கு முன் பெஷாவரிலிருந்து பம்பாய் வந்தவன் நடிகன் சத்யன் குமார். பெற்றோர்களையும் உறவினர்களையும் பிரிந்து வந்தவனுக்கு, பெற்றவர்களிடம் பாசம் காட்டியதேயில்லையே என்ற குற்ற உணர்வு எப்போதும் கொண்ட சத்யன் குமாருக்கு, போட்டிகள் நிறைந்த யதார்த்த உலகம் வெறுப்பளிக்கின்றது. அந்த சமயத்தில் கோபால் ஆதர்ச நண்பனாகத் தெரிகின்றான். மேலுன் தான் மதிக்கும் மெஹர் பாபா போலவும், கோபால் தோற்றமளிப்பதால் அவனை கோபால்ஜி என்றும் மரியாதையுடன் அழைக்கின்றான். கோபாலுக்கு ஒரு சமயம குடும்பத்தில் பெரிதும் இக்கட்டான தருணம் ஏற்படுகின்றது. அதனை இங்கே விரிவாக விவரித்தால் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும், எனபதனால் அவற்றை இங்கே தவிர்கின்றேன்.

கோபால் யாரும் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுகின்றான். அவன் வீட்டை தன்னந்தனியனாகக் காலி செய்யும் கட்டம்,பச்சாதாபத்தினை ஏற்படுத்தும் கட்டமாகும். புகழ்பெற்ற நடிகனுக்கே உண்டான பிஸி ஷெட்யூலிலும், கோபால்ஜியைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருக்கின்றான் சத்யன் குமார். அவனக் கண்டுபிடிக்கவேண்டுமென்று மெனக்கெடுகின்றான். அது எதற்கு எனபதுதான் 'மானசரோவர்' என்ற தலைப்பை நியாயப்படுத்தும் விஷயமாகும்.

இந்த நாவலில் வரும் சத்யன் குமாரும், கோபால்ஜியும் 1ste personல் பேசிக்கொண்டேயிருப்பது என்னவோ, பாலகுமாரன் நாவல்களில் வரும் நாயகர்களைச் சித்திரிப்பது போலத் தோன்றுகின்றது. தொலைக்காட்சி மெகாத் தொடர்கள் போல அனாவசியக் காட்சிகளையும், பாத்திரங்களையும் (ஜவர்ஹர்லால் நேருவின் மரணம் இன்ன பிற) வலிந்து புகுத்தியிருப்பது போல எனக்கு முதலில் தோன்றியது. குறிப்பாக எனக்கு இந்த சித்தர் முதலான பாத்திரங்கள் வேறு எரிச்சலைத் தந்தன. அதுவும் சித்தர்கள் என்றாலே, புகையிலை, கஞ்சா, அபினி கேஸ் போலவும், ஆனால் அவர்களுக்கு மட்டும் உலகில் நடக்கும் சூழ்ச்சுமங்கள் எல்லாம் ஞானக்கண்ணால் தெரியும் என்று பில்டப் கொடுப்பதும். ஆனால் வாசகர்களுக்கு கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் யதார்த்தமாகக் காண்பிக்க வேண்டுமென்றால் இவையனைத்தும் அவசியமென்று அசோகமித்திரன் நினைத்திருக்கக்கூடும்.

சிறந்த படைப்பினை வாசித்தாலோ, கேட்டோலோ, பார்த்தாலோ அது வாசகர்களின் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணி, அவர்களை ஒரிரு நாடகளாகவாவது தூங்க விடாமல் செய்ய வேண்டும். அந்த பாத்திரங்களை வாசகர்கள் வெகு காலத்திற்கு மறக்கக் கூடாது. அந்த வகையில் ‘மானசரோவர்’ படித்து முடித்த வாசகர்களை, வெகு காலம் வரை கோபால்ஜியையும், சத்யன் குமாரையும் மறக்க முடியாமல் செய்ததில் அசோகமித்திரன் வெற்றி பெற்றே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஜம்பகம், சியாமளா முதலானோர், ‘நல்லவர்களா? கெட்டவர்களா?’ என்ற கேள்விக்கும் விடை கிடைக்காது என்ற காரணத்தால் அவர்களையும் கட்டாயம் மறக்க மாட்டார்கள்.

புத்தகம்: மானசரோவர்
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பதிப்பாண்டு: 2006 (முந்தயவை 1989, 1999)
பக்கங்கள்: 208
விலை: Rs. 90

- சிமுலேஷன்

Friday, January 28, 2011

மஹாராஜபுரம் குளோன்ஸ்

மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
மஹாராஜபுரம் சந்தானம்

மஹாராஜபுரம் ராமசந்திரன்

மஹாராஜபுரம் ஸ்ரீனிவாசன்
 
மஹாராஜபுரம் கணேஷ்

- சிமுலேஷன்






Sunday, January 23, 2011

ஒரு சின்ன புதிர் (குவிஸ்)


1. சூல் கொண்ட மேகம் போல் பொழிந்தவன் செய்த சிலேடை என்ன?

விடை: காளமேகப் புலவர் துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் உள்ள சிலேடையை வைத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.



2. என்னாளும் பொன்னாளகட்டும் என்று எழுதுவது எந்தப் புத்தகத்தில்?

விடை: எ.எஸ். பஞ்சாபகேச ஐயரின் காநாம்ருத போதினி


3. ஸ்ரீ தியாக ப்ரம்ம கான சபா (வாணி மஹால் லோகோ) விலுள்ள் சத்குரு தியாகராஜர் சௌக்யமாய்ப் பாடும் பாடல் என்ன? அல்லது என்ன ராகம்?

விடை: சத்குரு தியாகையர் முன்பாக இரண்டு டம்ளர்கள் இருப்பதால் அவர் காபி சாப்பிட்டுவிட்டு, காபி ராகத்தில் "இந்த சவுக்யமு" பாடியிருப்பார் என்பது என் அபிப்ராயம். ஹி ஹி.


4. நடுநாயகமாய் அமர்ந்திருப்பவர் யார்? தென்னாங்கூர் சென்று தேடண்டாம்?

விடை: சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள்.

5. யாதரத்னம் பொன்னுசாமி கம்பெனிக்கும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

விடை: யாதரத்னம் பொன்னுசாமி கம்பெனியில் எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடிக்கத் துவங்கினார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிவாஜி கணேசன் அவர்கள் முதன் முதலில் நடிக்கத் துவங்கினார்.

Saturday, January 22, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - சுத்த தன்யாசி

மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று "சுத்த தன்யாசி". இது மேளகர்த்தா ராகமான நடபைரவியின் ஜன்யமாகும். இந்த ராகம் :உதய ரவிச்சந்திரிகா" என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 ப ம1 க2 ஸ

முதலாவது "பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடல். சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிவாஜி, மற்றும் எம்.ஆர்.ராதா இருவரின் ஏட்ட்க்குப் போட்டிகும், அங்க சேஷ்டைக்களுக்காகவும் புகழ்பெற்றது.



அடுத்ததாக எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும் நடித்த படகோட்டி படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற "தொட்டால் பூ மலரும்" என்ற சுத்தமான சுத்த தன்யாசிப் பாடல்.



எண்பதுகளில் இளையராஜாவின் ராஜாங்கம் துவன்கிய பின், அவர் சில ராகங்களில் எக்கச்சக்கப் பாடல்களில் இசையமைத்தார். உதாரணமாக ஹம்சத்வனி, கல்யாணி போன்றவை. இதே வரிசையில் வந்ததுதான் சுத்த தன்யாசியும். அவருக்குப் பிடித்த ராகம் என்றால் அவரே பாடவும் செய்து விடுவார். உதாராணம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெரும் "விழியில் விழுந்து இதயம் கலந்து"



அடுத்தபடியாக நாம் கேட்க இருப்பது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வந்த 'பூவரசம் பூ பூத்தாச்சு" என்ற பாடல். பின்னணியில் இடல் பெறும் கூட்ஸ் வண்டியின் இசை ரசிக்கும்படியாக இருக்கும்.



மீண்டும் அதே படத்தில் இடம் பெறும் 'மாஞ்சோலைக் கிளிதானோ' என்ற பாடல் மூலம் இளையராஜா என்பதுகளில் சுத்த தன்யாசியின் மேலே எவ்வளவு காதலாக இருந்திருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம்.



இப்போது கேட்க இருப்பது 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் இடம் பெறும் 'ஆயிரம் மலர்களே, மலருங்க: என்ற பாடல்.



அடுத்து, கல்லுக்குள் ஈரம்' படத்தில் இடம் பெறும் 'சிறு பொன்மணி அசையும்' என்ற பாடல்.



அடுத்து சோர்ந்து கிடப்பவர்களை தட்டியெழுப்பும் வண்ணம் அமைந்த "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' என்ற 'உன்னால் முடியும் தம்பி' படப் பாடல்.



தமிழ்த் திரையிசையில் சுத்த தன்யாசியின் பட்டியல் மிகப் பெரியது. குறிப்பாக ராஜாவின் பங்கால். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். நேரம் கிடைக்குபோது இந்தப் பதிவில் மற்றைய சுத்த தன்யாசிப் பாடல்களை தரவேற்றுவேன்.

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

வ.உ.சியும் வாலேஸ்வரனும்



இந்த மாத "அக்கறை" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்வராமனை அறிமுகப்படுத்தினார். வ.உ.சி அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.அவர்களில் கடைசியாகப் பிறந்தவரான 'வாலேஸ்வரன்' அவர்களின் புதல்வர்தான் செல்வராமன் அவர்கள்.

அவரை அறிமுகப்படுத்திய பின்பு, செல்வராமன் அவர்களின் அப்பாவான வாலேஸ்வரனுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றும் சிதம்பரநாதன் கூறினார். சுவையாக இருந்தது அந்த விஷயம்.  சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் ஆகிய பெயர்களில் ஒன்றான வாலீஸ்வரர் பெயரை வைத்திருப்பாரோ என்று எண்ணியிருந்த வேளையில், அவர் பெயர், வாலீஸ்வரன் அல்ல; வாலேஸ்வரன் என்று உரைத்தது.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வ.உ.சி அவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், சட்டம் பயின்ற அவர் வழக்கு மன்றம் ஏறாமலிருக்கும்படி அவரது ‘சன்னத்’தைப் பறித்தும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்குத் தண்டனை அளித்தது. பின்னர் ஒரு நாள் அவரது சிறைத் தண்டனையைக் குறைத்தும் அவர் மீண்டும் வக்கீல் தொழிலில் ஈடுபடவும் வகை செய்து ஒரு ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் பெயர் "வாலஸ்". அவர் நினவாக வ.உ.சி அவர்கள் தனது கடைசிக் குழந்தைக்கு இட்ட பெயர்தான் "வாலேஸ்வரன்".
-      
             - சிமுலேஷன்

Saturday, January 15, 2011

நான் ரசித்த நன்றி நவிலல்

திருச்சி, கலைக்காவிரிக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டியக் கருத்தரங்கின் நிறைவில் அக்கல்லூரியின் இசைத்துறை விரிவுரையாளர் நடராஜன் சற்றே வித்தியாசமாக நன்றி கூறினார். நான் மிகவும் ரசித்தேன் இதனை.  - சிமுலேஷன்

Saturday, January 01, 2011

ஒரு ரசிகனின் டிசம்பர் மாத டைரிக்குறிப்புகள்

இந்த வருடம் எந்த கச்சேரிக்கும் விமர்சனம் எழுதப் போறதில்லை. போன வருஷம் தனி வலைப்பதிவே துவங்கியும் ஒரு விமர்சனமும் உருப்படியா எழுத முடியலை. இருந்தாலும் டைரி மட்டும் எழுதத்தான் போறேன்.


5th Dec
• ஜயந்தி தன்னுடைய தற்போதைய இசைக்கான குருவான “வித்யா மற்றும் நித்யா” ஆகியோரின் கச்சேரிக்குப் போகவேண்டுமென்று சொன்னாள். கொட்டும் மழையில் சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் நடைபெற்ற “வித்யா மற்றும் நித்யா” கச்சேரிக்குச் சென்றோம்.

• மாலை 4.30 மணிக்குக் “கச்சேரி பஸ்”ஸின் வின்ஸெண்ட் டிசோசா, அவருடைய ஆபீசில் இசை விமர்சகர்களுக்கான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். வின்ஸெண்ட், ரேவதி மற்றும் நான் மட்டுமே ஆஜர். மூன்று பேரின் மீட்டிங் சுமார் முப்பது நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.


• மாலை 6 மணிக்கு எல்டாம்ஸ் ரோடு தத்வலோகாவில் அபிஷேக் ரகுராமின் கச்சேரி. நான் மட்டுமே சென்றேன். முன்வரிசையில் பி.எஸ்.நாராயணஸ்வாமி உட்கார்ந்திருந்தார். கொட்டும் மழையிலும் நல்ல கூட்டம். ஸ்யாமா ஸாஸ்திரிகள் சிறப்புக் கச்சேரியாம். பூச்சி ஸ்ரீனிவாசயங்காரின் “நின்னுகோரி” வர்ணம் தவிர, மற்ற உருப்படிகள் எல்லாமே ஸ்யாமா ஸாஸ்திரிகளுடையதுதான். அதில் ஸாஸ்திரிகளின் “தருணம் இதம்மா” என்ற தமிழ் உருப்படியும் அடக்கம். அபிஷேக் ரகுராமோ, நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களோ ஸ்யாமா ஸாஸ்திரிகள் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது எனக்கு ஏமாற்றமே. மேடையக் கவனித்த போது, அபிஷேக்கிலிருந்து அனைத்துக் கலைஞர்களுக்கும், தம்பூராக் கலைஞர் உட்பட, இரண்டிரண்டு மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன. என்ன காரணமோ?


15th Dec
• மியூசிக் அகாடெமியின் துவக்க விழா. கலந்து கொள்வதில் ஆர்வத்திற்கு ஒரு காரணம் என்னவென்றால், நிகழ்ச்சிக்கு எங்கள் நிறுவனதின் தலைவர் ஷிவ் நாடார்தான் சிறப்பு விருந்தினர். மேலும் ஷிவ்நாடார் பவுன்டேஷன் மியூசிக் அகாடெமிக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது மற்றுமொரு முக்கியமான விஷயம். இது தவிர மியூசிக் அகாடெமியில் மாதாமாதம் HCL Monthly Concert ஸ்பான்ஸர் செய்வதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.



16th Dec
• அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வசிக்கும் கனிக்ஸ் எனப்படும் புரஃபசர் கன்னிகேஸ்வரன் எனது நண்பரும் கூட. அவருடைய லெக்டெம், மியூசிக் அகாடெமியில். தலைப்பு “வடநாட்டு துருபத் இசைமுறைக்கும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் படைப்புகளுக்குமுண்டான ஒற்றுமைகள்”. ஜயந்தியும் நானும் சென்றோம். மனுஷருக்கு தீக்ஷிதர் குறித்த அனைத்து விஷயங்களும் அத்துபடி. ஒரிரு வருடங்கள் முன்பு ஹ்யூஸ்டன் நகரில் மீனாட்சி கோயிலில் கேட்ட லெக்டெமுடன் ஒப்பிட்டபோது, இந்த முறை ‘ஸ்லைடு ஷோ’ கொஞ்சம் சுமார்தான். ஆனாலும் விஷயத்துக்குப் பஞ்சமில்லை. ‘தீக்ஷிதர் வடநாட்டு சங்கீதத்தால் இன்ப்ளூயன்ஸ் ஆனதாகத்’ தனது உரையில், கனிக்ஸ் ஒரு போதும் சொல்லவேயில்லை. ஆனால் பேனலிஸ்டுகள் என்ற பெயரில், வேதவல்லி. டி..எம்.கிருஷ்ணா, வி.ஸ்ரீராம் ஆகியோர் அவர் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகச் சொல்லி வெட்டி விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீராம் ப்ளாக்கில் இது குறித்து எனது கருத்தினைப் பதிவு செய்தேன்.

18th Dec
• ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை பந்துலராமாவின் அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள்.

19th Dec
• ஸங்கீதப்ரியா மற்றும் ரசிகப்ரியா மடலாறக்குழுவில் நானும் ஒரு உறுப்பினன்தான். இந்தக் குழுக்களின் ஒருங்கிணைப்பளர்கள் “குளோபல் ரசிகாஸ் மீட்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தி.நகர் ராமக்ருஷ்ணா பள்ளியில். நானும் பல வேறு சுவையான நிகழ்ச்சிகள் இருக்கும் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்பில், தூங்கிக் கொண்டிருந்த ஆதித்யாவையும் எழுப்பி அழைத்துச் சென்றேன். அமைப்பாளர் அமெரிகாவிலிருந்த வந்தவர் என்ற காரணத்தால், எடுத்ததெற்கெல்லாம் அமெரிக்காவையும், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களையும், ரொனால்டு ரீகனையும் வேறு உதாரணம் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு ரசிகர் ஒருவர் ஆற்றிய சேவைக்கான வாழ்த்துப்பா பாடவேண்டி வந்த மற்றொருவர் இந்த வாய்ப்பு தனது வாழ்நாளில் கிடைத்ததில் பெரிதும் ‘தன்யனானேன்’ என்ற ரேஞ்சில் பேசினார். ரசிகர்கள் எல்லோரும் தங்களது கருத்துக்களையெல்லாம் கூறலாம் என்று கூறிவிட்டு, அந்த செஷனை ஒரு சில நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டு விட்டு, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரின் 5-6 வயதுப் பேத்தியின் கச்சேரி நடைபெறும் என்று அறிவித்தாளர்கள். அட. இதுக்குதானா இவ்வளவு பில்டப்பு. விசேஷம் என்னவென்றால், இந்தக் குழந்தையின் கச்சேரியினைக் கேட்க இவ்வளவு பிஸியான் சீசன் சமயத்தில் இசைப் பிரபலங்கள் பலரும் வந்து உட்கார்ந்திருந்ததுதான். ஆனால் ஆதித்யா, உஷாராக அரங்கினிலிருந்து வெளியேறி அருகிலிருந்த இன்போஸிஸ் அரங்கினில் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்ஷய் பத்மநாபன் கச்சேரிக்கு சென்றுவிட்டான். ஓரு சில நிமிடங்களில் அம்மாவும் நானும் இன்போஸிஸ் அரங்கினில் தஞ்சம் புகுந்தோம். அந்தோ பரிதாபம். எங்கள் குடும்பத்து மூவரையும் சேர்த்து அரங்கினில் மொத்தமே 11 பேர்தான். அதில் இருவர் அப்போதுதான் முதல் கச்சேரிக்கு வாசித்துவிட்டு வந்த பக்க வாத்தியக் கலைஞர்கள். தாட்சண்யத்திற்காக உட்கார்ந்திருப்பார்கள் போலும். இத்தனைக்கும் அன்று பாடிய அக்ஷய் பத்மனாபன் சிறந்த பாடகர்தான். நன்றாகவும்தான் பாடிக் கொண்டிருந்தார். கூட்டமே இல்லாத அரங்கினிலே பாடுவருக்கு மட்டுமல்ல, கேட்டுகொண்டிருக்கும் 11 பேர்களில் ஒருவராகிய நமக்கும்கூட டீமோடிவேஷன் ஏற்பட்டுவிடுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே. அம்மாம் பெரிய அரங்கினிலே தனியாக இருந்தால் பயமாக வேறு இருக்காதா? இங்கே கூட்டம் எப்போதுமே இப்படித்தானா? அல்லது அன்று மட்டும்தான் இப்படியா? எதுவாயினும் முத்ரா பாஸ்கரும், ராதா பாஸ்கரும் காரணங்களைக் கண்டறியத் தருணம் இதே.
இன்றும் ஜயஸ்ரீயும், ராம்நாத்தும் அம்மாவை அகாடெமி கச்சேரிக்கு அழைத்து சென்றார்கள். மல்லாடி சகோதரர்கள் கச்சேரி.

21st Dec
• அகாடெமியில், புல்லாங்குழல் சிக்கில் மாலா சந்திரசேகரின் லெக்டெம் முடியும் தருவாயில் ஜயந்தியும், நானும் சென்றோம். லெக்டெம் முடிந்த பின் நடக்க இருக்கும் கலந்துரையாடலில், பிரச்னைக்குரிய விவாதங்களில் இறங்கப்போவதில்லை என்று மாலா உஷாராகவே சொன்ன போதும், சஷாங் மைக்கைப் பிடித்து அவரை வம்புக்கு இழுத்தார். நல்லவேளை நிகழ்ச்சியின் மட்டுறுத்துநராக இருந்த பப்பு வேணுகோபால்ராவ் விவாதம் முடிந்து விட்டதாக அறிவித்தார். மியூசிக் அகாடெமியின் காலை நேர லெக்டெம்கள் சிலருக்கு நல்ல “ஈகோ பூஸ்டராக” அமைகின்றது போலிருக்கின்றது.


• அடுத்தாக இடம் பெற்ற லெக்டெம், பத்மஸ்ரீ டாக்டர் பத்மா சுப்ரமணியன் அவர்களுடையது. “நாட்டியக் கலைக்குத் தஞ்சைப் பெரிய கோயில் ஆற்றிய பங்கு” என்பது அவரது சப்ஜெக்ட். இந்தத் தலைப்பில் பேசுவதற்கு அவரைவிடப் பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லை. 60களில் தொல்லியல் துறையைச் சேர்ந்த கடைநிலை ஊழியரான பாலகிருஷ்ணன் என்பவர் கோபுரங்களில் வளர்ந்திருந்த அரச மரங்களை வெட்டச் சென்றாராம். அப்போது அங்கே கோபுரத்தில் புதிதாக ஒரு வாயிலைப் கண்டுபிடித்திருகின்றாராம். உள்ளே எட்டிப் பார்த்தால் அரிய வகை நாட்டியச் சிற்பங்கள். ஆனால் அங்கே யாரும் எளிதில் நுழையாதபடிக்கு வவ்வால் எச்சங்கள். ஏத்தனை வருடத்து எச்சங்கள் தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரம் வருடத்து எச்சங்கள். ஆமாம்? பல அடி உயரத்திற்கு ஆயிரம் வருடத்து வவ்வால் எச்சங்கள். அதனை அகற்றப் பணியாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பலரும் மயக்கமடைகின்றார்கள். சிலருக்கு ரத்தவாந்திகூட ஏற்படுகின்றது. எல்லாம் எச்சத்திலிருந்து வெளிப்பட்ட மீத்தேன் போன்ற வாயுக்களின் உபயம். பல்வேறு நபர்களின், பல மாதப் போரட்டத்திற்குப் பின், அழகிய பல சிற்பங்கள் கிடைக்கின்றன. எல்லாம் நாட்டியத்தின் ‘கரணங்களைக்” குறிப்பிடும் அரிய சிற்பஙள். மொத்தமுள்ள 108 கரணங்களில் 81 கரணங்களுக்கான சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை வைத்தே சுமார் 10 வருடங்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெறுகின்றார் பத்மா சுப்ரமணியன் அவர்கள்.

21st Dec
• மதியம் 1.45க்கு அகாடெமியில் ஷேர்தலை ரெங்கநாத ஷர்மாவின் கச்செரி. அம்மாவுடன் சென்றிருந்தேன். 2,00 மணியான பின்பும் கச்சேரி ஏனோ ஆரம்பிக்கவில்லை. அகாடெமியின் பங்சுவாலிட்டிக்கு என்னாச்சு? 2.05க்கு மைக்கில். ஷேர்தலை வந்து கொண்டிருப்பதாகத் தகவல். ஓரு வழியாக, 2.15க்குக் கச்சேரி தொடங்கியது. அதெப்படி இந்த மலையாளிகளுக்கு (யேசுதாஸ். காவலம், ஷேர்தலை…) மட்டும் இப்படிக் கருகருவென்று ஒரு தாடி. ஜயஸ்ரீக்காக அம்மா ‘த்யாராஜர் க்ருதிக்கள்’ புத்தகம் வாங்கினார்.

22nd Dec
• ஜயந்தியின் தோழி டாக்டர்.ப்ரியஸ்ரீ ராவ் “Textual Referece in Indian Classical Dance” என்ற தலைப்பில் அகாடெமியில் உரை நிகழ்த்துகின்றார். இந்திய நடனக்கலை குறித்தான நூல்கள் குறித்து ஏகப்பட்ட விஷயதானம் செய்கின்றார். ஆனால், ஸ்லைடு ஷோவில், ஏனோ மருந்துக்குக் கூட ஒரு படமும் இல்லை.



23rd Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவின் ஆதரவில், வித்யாபாரதி மண்டபத்தில், ஸ்ரீராம் பரசுராம் “Gamakas, Anuswaras - Oceans of Musical Possibilities” என்ற தலைப்பில் லெக்டெம் கொடுத்தார். அம்மாவும், நானும் சென்றோம். மாமாவும். மாமியும்கூட வந்தார்கள். ஸ்ரீராம் வடநாட்டு இசையும் அறிந்தவராதலால், நெறையவே பாடியும், வயலின் வாசித்தும் கமகங்களை விளக்கினார். 


நிகழ்ச்சியின் முடிவில் நடிகரும், நண்பருமான சாருஹாசனுடன் நாங்கள் அளவளாவினோம். மாமா, பரமக்குடியில் சந்திரஹாசனுடன் வேலை செய்ததை நினைவு கூர்ந்தார். பின்னர், தான வரைந்திருந்த ஓவியத்தைக் காட்ட, சாரு தான் சின்ன வயதில் குதிரை படம் வரைந்திருந்தாகவும், அது கழுதை போலத் தோன்றியதால், படத்தின் கீழே, ‘கழுதை’ எழுதிவிட்டதகவும் கூறினார். படத்தை வாங்கிப் பார்த்த ஆசிரியர், “உனக்கு என்ன பிக்காசோ என்று நினைப்பா? படம் வரைந்து, கீழெ கையெழுத்தும் போட்டிருக்கியே!” என்று பகடி செய்தாராம்.



• வலையப்பட்டி நாதாலயா ஆதரவில் அடையார் அனந்தபத்மநாபர் கோயிலில் நடபெற்ற சிக்கில் குருசரண் கச்சேரிக்கு அனிருத், ஜயந்தியுடன் சென்றிருந்தேன். 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி 7 மணி வரை ஆரம்பிக்கவில்லை. மிருதங்கம் திருவாரூர் பக்தவசலம் லேட்டாக வந்தார் போலிருகின்றது. அவரது சிஷ்யர்கள் மூவர் கலர், கலராக் குர்தா அணிந்து கொண்டு வந்து, சிக்கில் குருசரண் கேட்ச் கொடுத்தால், அதனைப் பிடிக்க வேண்டிய ஸ்லிப்ஸ் போல மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.


27th Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் நெய்வேலி சந்தானகோபாலனின் “மும்மூர்த்திகள் சங்கமம்” என்ற தலைப்பில் லெக்டெம். பாடுவதை விட, அதன் பொருளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பெரிதும் ஆர்வம் நெய்வேலிக்கு. சங்கீத மும்மூர்த்திகள் சந்தித்திருந்தால் என்னெவெல்லாம் பேசியிருந்திருப்பார்கள் என்ற ஒரு அழகான கற்பனை. ஏகப்பட்ட பாடல்களுக்கு பொருள் சொன்னார். செறிவான இந்தத் விஷயங்கள் 'ஓபரா' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் தோதான கருத்து. யாரேனும் முயற்சிக்கலாம்.



• அடுத்து நான் ஆவலுடன் காணச் சென்றிருந்த டாக்டர் கடம் கார்த்திக்கின் ‘என்ஸெம்பிள்’ நிகழ்ச்சி. பெரும்பாலான சமயங்களில் நாம் விரும்பி மீண்டும் செல்லும் நிகழ்ச்சியில் கதாநாயகர்கள் சொதப்பி விடுவார்கள். ஆனால் ஒருபோது கார்த்தி ஏமாற்றியதில்லை. நான் பெரிதும் விரும்பும் எம்பார் கண்ணன் மற்றும் கீபோர்ட் சத்தியநாராயணாவும் அந்தக் குழுவில் உணடு. மற்றைய கலஞர்கள் போல அல்லாமல், தன்க்குத் திருப்தி அளிக்கும் ஆடியோ செட்டிங்க்ஸ், ஆடியன்ஸுக்கும் திருப்தியாக இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்த கொண்ட பின்வே நிகழ்ச்சியினைத் துவங்குவார். அன்றைய தினம் மேடையிலே இருந்த எல்லா கலைஞர்களும் ஒருவருக்கொருவர் உறவினர்களாம். வயலின் எம்பாரும், கீபோர்ட சத்தியாவும் மாமன், மருமான்கள். அதே போல மோர்சிங் கிருஷ்ணனும், கஞ்சிரா சுந்தர் குமாரும் மாமன், மருமான்கள். மிருதங்கம் பூங்குளம் சுப்பிரமணியனும், தானும் “தெய்வ மச்சான்கள்” என்றும் குறிப்பிட்டார் கார்த்திக். புஜங்கினி என்ற புதிய ராகம் வாசித்தார்கள். எம்பாரின் பாகேஸ்ரீ கேட்கக் கேட்கத் திகட்டாதது. அதில் ஒரு சிறு பகுதியினை எனது வலைப்பதிவில் தரவேற்றினேன். கார்த்திக் கம்போஸ் செய்திருந்த “நடையும் நவரசமும்” என்ற நவரச கன்னடா ஐட்டம் அன்றைய ஸ்பெஷல்.


• இன்றைய தினம் நல்ல வேட்டை. நெய்வேலி, கடம் கார்த்திக் ஆகியோரின் இனிய நிகழ்ச்சிக்குப் பின்னர், மாலையில் தியாகப் ப்ரம்ம கான சபா ஆதரவில் தி.நகர் வாணிமஹால் வளாகத்தில் உள்ள ஓபுல் ரெட்டி அரங்கில் திருச்சூர் ப்ரதர்ஸின் கச்சேரி. நாரதகான சபாவில் இம்முறை காணாமற் போன ஞானானந்தா கேட்டரர்ஸ்ஸின் கேண்டீன் இங்கு வாணி மஹாலில். வழக்கப் போல நல்ல உணவுடன் நல்ல உபசாரமும் கூட. தியாகப் ப்ரம்ம கான சபாவின் லோகோவில் தியாகராஜர் முன்பு இரண்டு டம்ளர்கள். காபியா? காபி சாப்பிட்டுக் கொண்டேதான், ‘இந்த சௌக்யமுமனினே’ என்று பாடியிரிருப்பாரோ பாகவதர்? மேடையில் பாடும் கலைஞர்கள் பின்னே பெரிய பெரிய கூல் லெமன் ட்ரிங் படங்கள். பாடகர்களுக்கு ஆகாதே!

28th Dec
•  ஸ்ரீபார்த்தசாரதி சவாவில் 'Manodharma Sangeetham - An extension of Kalpita Sangitam' என்ற தலைப்பினில் குழு விவாதம். சசிகிரண்தான் மட்டுறுதுநர். ரவி கிரண், சுகுணா புருஷோத்தமன், M.B.வேதவல்லி, N.S.ஜெயலக்ஷ்மி ஆகியோருடன் கலந்துரையாடல். ஜெயலக்ஷ்மி விஷயமாகப் பேசினார். ஒவ்வொரு முறையும் அவர் பேசி முடித்தவுடன் பார்வையாளர்கள் கைதட்டினார்கள் என்றால் பாருங்கள்.
எனக்கு முன்னாடி வரிசையில்  ஒரு 50-60 வயது மதிக்கத் தக்க தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். கணவர் ஒரு பையில் கையைவிட்டு ப்ளாக்பெர்ரி உள்ளிட்ட “கிஸ்மோஸா”கள் ஒவ்வொன்றாக எடுத்து என்னமோ பண்ணிக் கொண்டேயிருந்தார்.  பிறகு தொழில்முறை நண்பருக்கு 40 டன் SAE 1018 கிரேடு ஸ்டீல் பாருக்கு ஆர்டர் கொடுத்தார். அஞ்சு நிமிஷத்தில் கிளம்பிச் சென்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 
• ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஐயர் ப்ரதர்ஸின் இரட்டை வீணைக் கச்சேரி அகாடெமியில் கேட்டேன். கூட யாரும் வரவில்லை.  
• பாரத் கலாச்சார் ஒய்.ஜி.பி ஆடிட்டோரியத்தில் சித்ரா விஸ்வேஸ்வரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” நாட்டிய நிகழ்ச்சி. ஜயந்தியும் ஆடுகின்றாள். எனவே மாமியும், அனிருத்தும் நானும் சென்றோம். இந்த நிகழ்ழ்ச்சிக்கு முதல் நிகழ்ச்சி, கன்யாகுமரியின் வயலின் கச்சேரி. சற்றே சீக்கிரமாக வந்ததால் அதனையும் சிறிது கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. திருப்பதியில் பாடப்படும், “வேங்கட ரமணா கோவிந்தா” என்ற ரேவதி ராகப் பாடலை, ஏழெட்டு ராகங்கள் கொண்ட ராகமாலிகையாக மாற்றி, விறுவிறுவென வாசித்து ஜாலங்கள் செய்தார். உடன் வாசித்த அவர்தம் சிஷ்யரும் நன்றாகவே ஈடு கொடுத்தார். சித்ரா விஸ்வேரன் குழுவினரின் “சக்தி த்ரயீ” வெகு நேர்த்தியாகக் கோரியோகிராபி செய்யப்பட்டு முதன்முறையாக அரங்கேறியது. வழக்கம் போல நடனமணிகளின் ஆடை வடிவமைப்பு சிம்ப்ளி சூப்பர்ப். மெயின் ஐட்டமான சக்தி த்ரயீயில், முப்பெருந்தேவியரின் அற்புதங்களை விளக்கும் காட்சிகள். அதற்கான பாடலை கம்போஸ் செய்து கொடுத்திருப்பவர், ராஜ்குமார் பாரதி. பாடலைல் தூய தமிழ் வார்த்தைகளைப் பாவித்திருந்தார் என்பதைத் தவிர, எதுகையோ, மோனையோ, சந்தமோ சற்றும் இல்லை. இருந்தபோதும், பாட்டின் மெட்டின் காரணமாகவும், கோரியோகிராபியின் காரணமாகவும், பாடலின் குறை பெரியதாகத் தெரியவில்லை. கடைசி உருப்படியான, ரசிகப்ரியா தில்லானா, எனது பேவரைட் தில்லானாவாகும். விஸ்வேஸ்வரனின் ஒப்பற்ற படைப்பு அது.



29th Dec
• ஜப்பானிய இசைக்கருவிகளில் புலமை பெற்றவரும், இந்திய இசையில் பெரிது ஆர்வம் கொண்டவரும், எனது நண்பருமான ப்ரொபஸர் டிம் ஹாஃப்மேன், அகாடெமியில், “இந்திய இசையில், ஜப்பானிய இசைக் கருவிகளான கோட்டொ, ஷாகுகாச்சி போன்றவற்றின் பங்கு” குறித்து உரை நிகழ்த்துகின்றார். கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதாலோ என்னவோ, மிகுந்த பதட்டத்துடனே உரையாடினார். சில வருடங்கள் முன்பு, மயிலை எம்.சி.டி.எம் பள்ளியில் இவர் நடத்திய லெக்டெமுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிகழ்ச்சி சுமாரகவே இருந்தது. இசைக் கச்சேரிகளின்போது மேடையிலுள்ள கலஞர்களை நிகழ்ச்சி நடக்கும்போதே வரைந்து அவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் எனது மாமனாருடன் (சுப்ரமணியன்) சென்று டிம் ஹாஃப்மேனுடன் போட்டொ எடுத்துக் கொண்டென். பேஸ்புக்கிலும் அதனைத் தரவேற்றினேன்.


30th Dec
• லலிதா ராம், பாரதி ராமசுப்பன் பற்றி சிலாக்கியமாய் விமர்சனம் எழுதியிருந்ததின் பேரில் அவர்தம் அகாடெமி 12 மணி கச்சேரிக்குச் சென்றேன். பாரதி ராமசுப்பன் ஏமாற்றவில்லை. நன்றாகவே பாடினார். லலிதா ராமுக்குத் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்.
• சாப்பிட்டுவிட்டு சிவகாமி பெத்கச்சி அரங்கினில், ஸ்ரீவல்சன் மேனன் கச்செரிக்குப் போக எண்ணி, சற்று சீக்கிரமாகவே போனதற்குக் கிடைத்த போனஸ், ஐயர் சகோரிகளின் கச்சேரி. அவர்களின் கல்யாணியும், இறுதியாகப் பாடின ராகேஸ்ரீ ராகத் தில்லானாவும் கேட்டேன். தில்லானா ஜோர்.
• ஐயர் சகோதரிகளளின் கச்சேரி முடிந்த பின், அடுத்தாக ஸ்ரீவல்சன் மேனன் அவர்களின் கச்சேரி. ஏற்கெனவே முன்பே ஒரு முறை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் கேட்ட குரல், இம்முறையும் ஏமாற்றவில்லை. இந்த சீசனில் கேட்ட நாலாவது கல்யாணியென்றாலும் திகட்டவில்லை.

31st Dec
• ஸ்ரீபார்த்தசாரதி சபாவில் புஷ்பா ஆனந்தின் அபங் பஜனை. கிட்டத்தட்ட அருணா சாய்ராம் பாணியில் வாய்விட்டுப் பாடுகின்றார். அது போதாதென்று மைக் வேறு ஏனோ அலறுகின்றது. மைக் வால்யூமைக் குறைத்தால் நல்ல ட்யூன்களை ரசித்து கேட்கலாம்.  12 மணிக்கு அகாடெமியில் சஞ்சய் சுப்பிரமணியத்தின் சீடர் ஸ்வர்ணரேதஸ் கச்சேரி. ஒன்றும் சொல்லும்படி இல்லை.









• வழக்கம் போல இந்த வருடமும் புத்தாண்டு தினத்தை குடும்பத்துடன் மியூசிக் அகாடெமியில் கொண்டாடுவது என முடிவு செய்தோம். புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை செவ்வனே செய்திருந்தார் கர்னாடிகாவின் சசிகிரண். முதலில் ரமணியின் புல்லாங்குழலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பிறகு பந்துலராமா. அப்புறம் காயத்ரி வெங்கட்ராகவனின் கச்சேரி. அடுத்ததாக மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவின் பாட்டுக் கச்சேரி. மாயாமாளவகௌளையில் பாடின தேவதேவவும், தில்லானாவும் வித்யாசமாகவும், ரசிக்கும்படியும் இருந்தன. பிறகு சுபஸ்ரீ தணிக்காசலம் குழுவினரின் (சைந்தவி, வினயா, சித்ரவீணா கணேஷ், காயத்ரி) மெட்லீ. எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்யாவுடன் ஒரு சிறப்பு மெட்லீ. பிறகு புத்தாண்டு சரியாகத் துவங்கும் வேளையில் அனைத்துக் கலைஞர்களும் சேர்ந்திசை. அடுத்து மல்லாடி ச்கோதரர்கள் பாட, சூர்யப்ரகாஷ் நிறைவு செய்தார். குண்டேச்சா சகோதரர்களின் துருபத் இசையினைத் தொடர்ந்து, கடம் கார்த்திக்கின் கலக்கல் காமெடி. அடுத்து வந்தது சென்கோட்டை ஹரி குழுவினரின் ‘ஹரிநாம சங்கீர்த்தனம்’. அவருடைய ப்ருகாவுக்கு, குழுவில் யாரும் ஈடு கொடுக்க முடியவில்லை. மோண்டும் ஒரு முறை, விச்ராந்தியாகக் கேட்க வேண்டும். அடுத்து சூர்யப்ரகாஷ், துவங்க இருக்கும்போது, மணி இரண்டைத் தாண்டி விட்டது. வெளியே வந்து சங்கீதா கேட்டரர்ஸ் வழங்கிய கேசரியையும், புளியோதரையையும் சாப்பிட்டு வீடு வந்து சேர மணி விடியற்காலை 2.30.


வழக்கம் போல ஒரு கச்சேரிக்கும் டிக்கெட் எடுக்கவில்லை. எல்லாமே ஓசிக் கச்சேரிகள்தான். மொத்தத்தில்


கேட்டு ரசித்த கச்சேரிகள் – 11
இசையறிவை விருத்தி செய்ய லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்ஸ் – 9
பார்த்து ரசித்த நாட்டிய நிகழ்ச்சி -1
கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் - 4




கச்சேரி பஸ் சங்கீத ஸ்பெஷல் நாளிதழுக்கு நான் அனுப்பிய சிறு கட்டுரைகள் பிரசுரமாயின. ஆன்லைன் வெர்ஷனிலும் இவற்றைக் காணலாம்.

-சிமுலேஷன்

Monday, December 27, 2010

இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் இதைக் கேட்க வேண்டாம்

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் அன்புக்குரிய்வரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்பவரா? அல்லது இளகிய நெஞ்சம் கொண்டவரா? அடிக்கடி ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி சோகப்படுபவரா? அப்படியானால் இந்த இசையினை நிங்கள் கேட்க வேண்டாம்.


    Get this widget |     Track details  | eSnips Social DNA    
                                                                                  இந்த இனிய பாகேஸ்ரீ ராகத்தினை வாசித்தவர் எம்பார் கண்ணன் அவர்கள். வாசித்த பொழுது கடம் கார்த்திக் குழுவினரின் “என்ஸெம்பிள்” நிகழ்ச்சி. இடம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா. நாள் 27th Dec 2010.
சிமுலேஷன்

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது

மிஸ்டர் எக்ஸ் கச்சேரிக்குப் போனபோது...


1.    1. மிருதங்கம், கடம், கஞ்சிரா எல்லாம் சேர்ந்து வாசிக்கும்போது கூட 'தனி ஆவர்த்தனம்'னு சொல்லறாங்களே! ஏன்?  

2. ஏன் ஒரு கச்சேரிலேகூட ‘மங்களம்’ மொதல்ல பாட மாட்டேங்கறாங்க?

3. சங்கீத முமோர்த்திகள் ஏன் ‘ஜம்பை’ ராகத்தில் ஒரு கீர்த்தனை கூடப் போடல்லே?

4. ‘தம்பூரா கண்ணன்’ ஏன் ‘ஸோலோ’ கச்சேரி செய்யறதில்லே?

5. Portable, Vennai, Portable Thamboor கண்டுபிடிச்சா மாதிரி Portable Flute, Portable Mohrsing ஏன் யாரும் கண்டுபிடிக்கல?

6. நேத்திக்குக் கச்சேரிலே காம்போதி ராகத்திலே வாசிச்ச ‘மல்லாரி’ சூப்பர்!

7. தனி ஆவர்த்தனத்தின் போது எல்லோரும் எந்திரிச்சுப் போயிடராங்களாமே. ஏன் மொதல் அயிட்டமா, தனி ஆவர்த்தனத்தை வச்சுக்கக் கூடாது?

8. பசி நேரத்திலே கேட்கக் கூடாத ராகம் எது? தாளம் எது? 
- காபி ராகம், அட தாளம்                                                                  

9. மரியாதையான ராகங்கள் எது?
- வலஜி, காம்மோஜி

10. மரியாதை இல்லாத ராகங்கள் எவை?
- அடாணா, கானடா, பேகடா

11. மூக்கைப் பிடிச்சுண்டு பாட வேண்டிய ராகம் எது?

- பீலூ

12. கடம் விதவான் மாதிரி, மிருதங்க வித்வானும் ஏன், மிருதங்கத்தைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க மாட்டேங்கறாரு?

- சிமுலேஷன்