Friday, August 11, 2006

கிளைகளற்ற மரங்கள் - தேன் கூடு - உறவுகள் - கவிதைப் போட்டி



"அடுத்த வீட்டு ஆத்ரேயா,

அத்தை, மாமாவுடன் அலைந்தானாம்;

சின்னக் குட்டி ஷில்பாவோ,

சித்தி, சித்தப்பாவுடன் சென்றாளாம்.

எனக்கென்று அப்படி

யாருண்டு இன்றிங்கு?" என்று கேட்ட

பேரப் பிள்ளையிடம்,

பேச்சை மாற்றும் வழி மறந்து,

பேதலித்து நின்றாள்,

முப்பது வருட முன்பாக

முதல் குழந்தையுடன் போதுமென

முடிவெடுத்த

முத்துப் பாட்டி.


- சிமுலேஷன்

Sunday, August 06, 2006

பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதை போட்டி



பூனைக்குட்டிகள் - தேன்கூடு - உறவுகள் - சிறுகதைப் போட்டி ---------------------------------------------------------------------------------------------
அப்பா மத்தியானம் சாப்பிட்ட பின், ஈஸிசேரில் சிறிது நேரம் தலையைச் சாய்ப்பது வழக்கம். கால் மீது கால் போட்டுக் கொண்டு தூங்கும் அப்பாவின் கால் கட்டைவிரல் நகத்தில் வந்து உடம்பை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பூனை. இது ஒரு நாள், இரண்டு நாளாக நடப்பதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நடந்தது கொண்டிருக்கிறது. அதனை பொதுவாகப் பூனை என்று சொல்லுவதைவிட, புஸ்ஸி என்று சொல்லுவதையே எல்லோரும் விரும்பினர். அனுதினமும் வந்து போகும் புஸ்ஸியின் போக்கில், சிறிது மாற்றங்கள் தென்படலாயின. அது 'மாதமா'யிருக்கிறதோ என்னமோ என்று அம்மா சொன்னாள்.

அம்மா சொன்னது சரியாய்த்தான் போயிற்று. அன்று அதிகாலை வாசலிலுள்ள நெல் ரூமிலிருந்து, புஸ்ஸியிடமிருந்து பலமான சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில், 'ம்மியாவ், ம்மியாவ்', என்று காதைக் கிழிக்கும் ஒரே சப்தம். புஸ்ஸி குட்டி போட்டு விட்டாள் போல உள்ளது என்று அம்மா போய்ப் பார்த்தாள். ஜாக்கிரதை என்று எச்சரித்து விட்டு, அப்பா நெல் மூட்டைகளுக்கிடையே எட்டிப் பார்த்து, புஸ்ஸி குட்டி போட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்தார். அம்மா ஒரு கொட்டங்கச்சியில் பால் எடுத்து வந்து நெல் ரூமில் வைத்தாள். நாங்கள் அத்தனை பேரும் ஒடி வந்து, குட்டிகளைப் பார்க்க வந்தோம். மூட்டைகளின் பின்னால், எதோ கொசகொசவென்று தெரிந்தது. மொத்தம் ஆறு குட்டிகள், இல்லை, இல்லை ஏழு என்றான் அண்ணா. இத்தனை நாட்கள் சாதுவாக இருந்த புஸ்ஸி, ஆக்ரோஷமாக, பல்லைக் காட்டியபடி "பர்ர். பர்ர்ர்" என்று சப்தம் இட்டபோது, ஏதோ புலியைப் பார்ப்பது போல, நாங்களெல்லோரும் பயந்தே போய்விட்டோம். அப்பா எல்லோரையும் கவனமாக இருக்கும்படி மீண்டும் எச்சரித்தார். பூனைக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. காலை டிபன் சாப்பிடாமலேயே, எல்லோரும் பள்ளிக்கு ஓடினோம்.

மாலை வேகவேகமாக வந்து, டிபன் முடித்து, பூனைக்குட்டிகளைப் பார்க்க ஓடினோம். இப்போது புஸ்ஸி அங்கு இல்லை. குட்டிகளைச் சற்றுக் கூர்மையாகப் பார்க்க முடிந்தது. இப்போது ஏண்ணிப் பார்த்தால், மொத்தம் ஐந்து தான்.

"அம்மா, அம்மா, இங்கே வாங்கோளேன், பூனைக்குட்டி ரெண்டைக் காணோம்".

"அம்மாப்பூனைதான் சாப்பிட்டிட்டுருக்கும்", என்றாள் கீரைக்காரப் பட்டம்மா.

"என்னது அம்மாப்பூனை சாப்பிட்டுருக்குமா? என்று ஒரே நேரத்தில் கேட்டொம்.

"ஆமாங்கண்ணு. குட்டி போட்ட பூனைக்கு சத்தி வேணுமில்லே. அதனாலே ஒண்ணு, ரெண்டு குட்டிகளை சாப்பிட்ரும்"

எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது. புஸ்ஸி வந்தாலே அதனைத் துரத்தி அடிக்க வேண்டுமென முடிவு செய்தோம்.

இப்போது குட்டிகள், மூட்டையின் மேல் தமது கூரான நகங்களைக்கொண்டு ஏற முயற்சி செய்ய ஆரம்பித்திருந்தன. ஏற முயற்சி செய்வதும், சறுக்கி விழுவதும் பார்க்க முகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த விளையாட்டில், ஐந்தில், இரண்டு மட்டும் கலந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்தன.

"பங்கஜம் சித்தி மாதிரியே தூங்கிண்டுருக்கு பாரு" என்றான் அண்ணா.

"நீ மொதல்ல பங்கஜம் சித்தியப் பாத்திருக்கியாடா?" என்றாள் பத்மினி.

"தெரியாது. அம்மாதான் சொல்லுவா; பங்கஜம் சித்தி மாதிரி தூங்காதேன்னு."

கரெக்ட். அம்மா அடிக்கடி சொல்லுவதுண்டு. மைசூரிலுள்ள பங்கஜம் சித்தி, ஒரு தூங்குமூஞ்சியென்று. எப்போது பார்த்தாலும் தூங்கிண்டே இருப்பாளாம்.

இந்த இரண்டு தூங்குமூஞ்சிப் பூனைகளுக்கும், பங்கஜம் சித்தி போலெவே மூஞ்சியும் இருந்தன. என்ன, ஒண்ணு சின்னது; இண்ணோண்ணு கொஞ்சம் பெரிசு. எனவே, சின்னதுக்கு, 'சின்னப் பங்கஜம்' என்றும், பெரியதுக்குப் 'பெரிய பங்கஜம்' என்றும் பெயர் வைத்தோம்.

ஒரு பூனைக்குட்டி மட்டும், மூட்டை மீது பாதிவரை ஏறிவிட்டான். அங்கிருந்து மற்ற குட்டிகள் மீது ஒரே பாய்ச்சல். அப்பப்ப, நகங்களை வேறூ விரித்துக் காட்டுதல், பற்களை வைத்துக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்துதல் என்று தூள் கிளப்பிக் கொண்டிருந்தான். வீரதீர பராக்கிரமசாலியானஇந்தப் பூனைக்குட்டிக்கு, 'சூரப்புலி' என்று பேர் வைத்தோம்.

அடுத்தவனும் கிட்டத்தட்ட சூரப்புலியாவே இருந்தான். ஆனால், உருவம் மட்டும் சற்றே வித்தியாசம். கொஞ்சம் கட்டி முட்டியாக இருந்தான். மிருதுவான உடம்பில், வயிற்றுப் பாகத்தில் எலும்புகள் கட்டியாகத் தெரியும். அதற்கு என்னமோ, அண்ணா 'ஆழ்வார்ப் பேட்டை' என்று பெயர் வைத்தான், அவனுக்கு இரண்டு நாட்கள் முன்புதான் தமிழ்ப் பாடத்தில் வந்த, "குடை" என்று வந்த பாடலில், வந்த ஆழ்வார்ப் பேட்டை என்ற வந்த பெயர் பிடித்திருந்தது. அதனையே இரண்டு நாட்கள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பூனைக்குட்டிக்குப் பேராக வத்து விட்டான். அவன் எப்போது அப்படித்தான். பாடத்தில் ஏதேனும், புதுமையாகப் பேர் ஒன்று கிடைத்து விட்டால் போதும், அதனையே அலப்பிக்கொண்டிருப்பான். 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', 'அல்லசாணி பெத்தண்ணா அப்பாஜி', என்று அக்காவின் நண்பர் வீட்டுக்குச் சென்று உளறிக் கொண்டிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது ஒரு தனிக் கதை.

நாங்கள் எல்லோருமே கடைசியாகப் பார்த்தது ஒரு கலக்கலான கரும்பூனைக்குட்டி. இந்தக் கரும்பூனக்குட்டி ரொம்ப ரொம்பவே அழகாக இருந்தது. ஸாஃப்டாக, அப்போதுதான் குளித்துவிட்டு வத்த கைக்குழந்தையைப் போல இருந்தது. அதனைத் தொட்டுப் பார்க்க எல்லொருக்கும் ஆசை. அண்ணா, தான் ஒரு தைரியசாலி என்று காட்டிக் கொள்ள வேண்டுமென்று, அந்தக் கரும்பூனைக்குட்டியைக் கையால் தூக்கினான், "ம்மியாவ். மீயாவ்" எண்று கத்தத் தொடங்கின அடுத்த நிமிடம், எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் வந்தது புஸ்ஸி. அண்ணா கையில் இருந்த குட்டியைப் பாய்த்து வந்து தனது வாயால் கவ்வி எடுத்து சென்றது.

"போதும் பூனையோட விளையாடினது. போய்த் தூங்குங்கோ" என்று அப்பா சப்தம் போட்டார்.

மறுநாள் நெல் ரூமில் போய்ப் பார்த்தால், புஸ்ஸியையும் காணவில்லை. குட்டிகளையும் காணவில்லை. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறும்தான் ஆஃபீஸ் ரூமுலிருந்து, குட்டிகளின் சப்தம் வருவதைப் பார்த்தோம். 'தாய்ப் பூனை, குட்டிகளை, இப்படி அடிக்கடி இடம் மாற்றி கொண்டேயிருக்கும்', என்று பட்டம்மாவிடம் சொல்லத் தெரிந்து கொண்டோம். புஸ்ஸி வந்து அந்தக் கரும்பூனைக்குட்டியை நாக்கால் நக்கிக் கொண்டேயிருந்தது. இந்தப் பூனைக் குட்டியிடம், ஒரு வெள்ளை முடி கூடக் கிடையாது. அத்தனையும் கருப்பு முடி. புஸு, புஸுவெனெ பார்க்கவே ரொம்ப அழகாக இருந்த, இந்தக் குட்டியை மட்டும் புஸ்ஸி, தனியாகக் கவனிப்பது போலத் தோன்றியது. 'அழகான குட்டி என்று அதிகப் பெருமையா? இல்லை, கறுப்பாக இருக்கும் குட்டிக்கு தனிக் கவனிப்பா', என்று புரியவில்லை. ஆனால், புஸ்ஸிக்கு, இந்தக் கறுப்பன் மட்டும் செல்லம் என்று புரிந்தது. எங்களுக்கும் செல்லமாகி விட்ட, இந்த கரும்பூனக்குட்டிக்கு 'செல்லம்' என்றே பெயர் வைத்தோம். எப்படியோ, ஐந்து குட்டிகளுக்கும் பெயர் வைக்கும் படலம் அன்று முடிந்தது.

வீட்டுப் பாடங்களைப் பள்ளியிலேயே முடித்துவிட்டு, ஓடோடி வருவோம். அம்மாவிடம் கேட்டு, கொட்டாங்கச்சியில் பால் வைப்போம். சின்னப் பங்கஜமும், பெரிய பங்கஜமும் பல நாட்கள் பால் குடிக்கக்கூட எழுந்து வராமல், தூங்கிக் கொண்டேயிருக்கும். சூரப்புலிக்கும், ஆழ்வார்ப் பேட்டைக்கும் பால் குடிப்பதிலே, பலத்த சண்டை நடக்கும். செல்லம் மட்டும் தனியாக ஒய்யாரமாக வந்து பால் குடிக்கும் அழகே தனிதான். குட்டிகள் பெரிதாகப் பெரிதாகப் புஸ்ஸியின் வருகை குறைந்து கொண்டே வரத் தொடங்கியது.

ஐந்து பூனைக்குட்டிகளுக்கும் விளையாட்டுகள் பல காண்பிப்போம். சோடா மூடிகளை, ஹாலின் இந்தப் பக்கதிலிருந்து அந்தப் பக்கத்திற்கு, முன்னங்கால்களால், ட்ரிபிள் பண்ணிக் கொண்டு செல்வது பார்க்க, மிகவும் நன்றாக இருக்கும்.அப்புறம் சணல் உருண்டைகளைப் போட்டு அவற்றைக் குதறிக், குதறி விளயாடும் அழகு இருக்கிறதே. அதனைப் பார்த்தால்தான் புரியும். சொன்னால் புரியாது. உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும் செல்லத்தைக் காட்டி, அதன் புகழ் பாடாமல் இருக்கவே மாட்டோம்.

அன்றைக்குச் சாப்பிடும்போது, சித்தப்பா கல்யாணம் குறித்து அப்பா சொன்னார், மெட்ராஸில் நடக்கவிருக்கும் வேணுச் சித்தப்பா கல்யாணம் என்றதுமே எல்லோரும் துள்ளிக் குதித்தோம். வெள்ளியன்று மாலை கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏகப்பட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று, அக்கா பூனைக்குட்டிகளை என்ன செய்வது என்று கேட்டாள். அவள் எங்களுடைய எந்த விளையாட்டிலும் கலந்து கொள்ளமாட்டாள். ஆனால், இன்று அவள் எங்கள் பூனைக்குட்டிகளைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி, ஒரு முக்கியமான சமயத்தில் விவாதப் பொருளாக எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

"அப்பா, அப்பா, பூனையெல்லாம் ஒரு கூடையில் போட்டு, மெட்ராஸுக்கு எடுத்துக் கொண்டு போலாம் அப்பா" என்றான் அண்ணா.

"பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போலாமே", என்றாள் அக்கா.

"ஆமா, அவாதான் ரொம்பப் பாத்துக் கிழிச்சுடப் போறா. பால்காரியிடம் கொடுத்துட்டுப் போலாம்", என்றாள் அம்மா.

"கோவாப்ரேடிவ் சூப்பர் மார்க்கெட்டில் விட்டாலென்ன? ராஜேந்திரன் அன்னிக்கே கேட்டார். கடையில் எலித் தொந்தரவு ரொம்ப இருக்குன்னு" என்றார் அப்பா.

"அது கூட நல்ல ஐடியாதான்; நாமளும் நாலு நாள் கழிச்சி வந்து அவன்கிட்டேயிருந்து வாங்கிக் கொள்ளலாம்" என்று அம்மா, முடிவாகச் சொன்னாள்.

சாயந்தரம் சூப்பர் மார்க்கெட் போய் அப்பா ராஜேந்திரனிடம் பேசிவிட்டு வந்த்தார். அவர் இரண்டு பூனைகளை மட்டும் எடுத்துக்கொள்வதாகச் சொன்னாராம். பியூன் பழனியப்பன் துணை கொண்டு, சின்னப் பங்கஜத்தையும், பெரிய பங்கஜத்தையும் கொண்டு போய் சூப்பர் மார்க்கட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தோம். எங்களுக்கு என்னாவோ போல இருந்தது. ஆனாலும், செல்லம், ஆழ்வார்ப்பேட்டை, சூரப்புலி இன்னமும் எங்களிடமே இருந்ததால் ரொம்பப் பெரியதாக ஃபீல் செய்யவில்லை.

மறுநாள் காலை பூனைகளின் சப்தம் கேட்டு எழுந்தோம். கீரைக்காரப் பட்டம்மாவிடம் அம்மா பேசிக் கொண்டிருந்தாள்.

"பார்த்துப் பத்திரமா எடுத்துட்டுப் போ பட்டம்மா"

தனது காலிக் கூடையில், சும்மாட்டுத் துணியை வாகாக வைத்து, ஆழ்வார்ப்பேட்டையையும், சூரப் புலியையும் வைத்துத் தூக்கிச் சென்றாள். இப்போது செல்லம் மட்டும் தனியாக, மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுருந்தது. சுமார் எட்டு மணியிருக்கும். பால்காரி தனம் வந்து செல்லத்தையும் தூக்கிச் சென்றாள். எப்படித்தான் நாலு நாட்கள் இவர்களைப் பிரிந்து இருக்கப் போகிறோமோ என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதே, வெள்ளோட்டிலிருந்து, பாட்டியுடன் ராஜன் சித்தப்பாவின் பையன்கள் கண்ணனும் கோபியும் வந்தார்கள். மாலையில் நீலகிரி எக்ஸ்பிரசில், எல்லொரும் மெட்ராஸ் கிளம்பினோம். சித்தப்பா கல்யாணம் படு ஜோராக நடை பெற்றாலும் என்னவோ போல, சுரத்தில்லாமல் இருந்தோம்.

பாட்டி கூடக் கேட்டாள், ஏண்டி, ராஜம், கொழந்தைங்க ரொம்ப டல்லா இருக்காளே. உடம்புக்கு ஒண்ணுமில்லேயே"

"நேத்திக்குத்தான் சொன்னேனே அம்மா. பூனைக்குட்டிகளப்பத்தி. அதுகள விட்டுட்டு வந்தது, இதுகளுக்குத் தாங்கலே. வேற ஒண்ணுமில்லே"

"வேற வேலை இல்லாயாக்கும்? நாலுக்கும் பாட்டு படிப்புண்ணு ஒண்ணுமில்லாம, பூனையோடயே வெளயாடிண்டுருக்கணுமாமா?". கேட்ட பாட்டியை நாங்கள் முறைத்துப் பார்த்தோம்.

சித்தப்பா கல்யாணம் முடிந்து, திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ப்ளூவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம். காலையில் கோயமுத்தூரிலேயே டிபன் சாப்பிட்டுவிட்டதால், வந்தவுடன் குளித்துவிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பினோம். மாலை ஸ்கூலிலிருந்து வந்தவுடன், சூப்பர் மார்க்கெட்டுக்குப் படையெடுத்தோம். ராஜேந்திரன் இல்லை அங்கே. சூபர்வைசர்தான் இருந்தார். பூனை எங்கே என்றோம். 'அங்கேதான் எங்கியாவது இருக்கும்', என்றும் 'எனக்கு தெரியாது' என்றும் மாற்றி மாற்றிக் குழப்பிச் சொன்னார். அந்த மார்க்கெட்டுக்குள் எங்களால் ஒன்றும் தேட முடியவில்ல்லை. காய்கறி மார்க்கெட்டுக்குப் போய், பட்டம்மா இருக்கிறாளா என்று பார்த்தால், அவளும் ஊருக்குப் போய் விட்டாளாம்.

பால் கொடுக்க, தனம் ராத்திரி எட்டு மணி சுமாருக்கு வந்தாள். செல்லத்தைத்தான் கொடுக்க வந்திருக்கிறாளோ என்று ஆவலாக ஓடினோம். அவள்பாட்டுக்கு பழைய பாக்கி பால் ஊத்திவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தாள். "பூனை எங்கே" பூனை எங்கே", என்று மூணு பேரும் கத்தினோம். அதுவா, முந்தா நேத்திக்கு செட்டியாரோட லாரிக்கு அடிலே மாட்டிகிச்சி. அங்கேயே ஒடனே செத்து போச்சு" என்றபடி நடையைக் கட்டினாள்.

"என்னது அம்மா; இப்படி சொல்றா. எல்லோரும் பாத்துண்டேயிருக்கோம்"

"சரிடா; நம்ம கையிலே என்ன இருக்கு? நாம இப்ப என்ன பண்ண முடியும்? எல்லாரும் சாப்பிட வாங்கோ"

தனக்கு சாப்பாடு வேண்டாமென்று கூறி அண்ணா போய்ப் படுத்துக் கொண்டான். பத்மினியோ, தனக்கு வயித்தை வலிக்கிறது; மோர் மட்டும் போதுமென்று கூறிவிட்டாள் எனக்கும்கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால், சாப்பிட மாட்டேனென்றால் அம்மா அடிப்பாள். அடியைவிட திட்டுதான் பயங்கரமாக இருக்கும்.

ராத்திரி இரண்டு மணியிருக்கும் அண்ணா என்னவோ அனத்திக் கொண்டேயிருந்தான். "செல்லம்,...செல்லம்" அப்டீன்னு சொன்னது போலத் தோன்றியது. அம்மா தொட்டுப் பார்த்தாள்.

"நரேஷுக்கு ஜொரம் அடிக்கறது பாருங்கோ. அந்தக் குரோசின் பாட்டில எடுத்துக் கொடுக்கிறேளா?", என்று அம்மா,அப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது சன்னமாகக் காதில் விழுந்தது.

-------0-------

Friday, June 30, 2006

மக்கள் குறை தீர்க்க மயிலை எம்.எல்.ஏவின் வலைப்பதிவு




தனது தொகுதி மக்கள் குறை தீர்க்கும் பொருட்டு, மயில எம்.எல்.ஏ, எஸ்.வி.சேகர் ஒரு வலைப்பதிவு துவக்கியிள்ளார்.

இதன் url: http://mylaporemla.blogspot.com/

இதற்கு முன்னர் இந்தியாவில், மக்கள் பிரதிநிதிகள், புதிய தொழில்நுட்பத்தினை இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்களாவென்று தெரியவில்லை.

- சிமுலேஷன்

Wednesday, May 31, 2006

வலைப்பூ குறித்த நூல் ஆய்வுப் பணிக்காக...

"அன்பு வலைப்பதிவாளர்களே!
ஓர் ஆய்வுக்காக இந்தப்பதிவு.வலைப்பூ குறித்த நூல் ஆய்வுப் பணியொன்றில் உள்ளேன்.
வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பூவினை இந்த ஆய்வுக்காக சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் பட்சத்தில், ஆய்வுநூலில் தங்கள் வலைப்பதிவினை சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்து, கீழே கொடுத்த விபரங்களை பூர்த்தி செய்து, தங்கள் வலைப்பூவில் தனிப்பதிவாக இட்டு, அதன் சுட்டியினை(url) இங்கே பின்னூட்டத்தில் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்ற மதுமிதா அவர்களின் வேண்டுகோளினையேற்று...

வலைப்பதிவர் பெயர்: சுந்தரராமன்

வலைப்பூ பெயர்: சிமுலேஷன் படைப்புகள்

சுட்டி(url): http://simulationpadaippugal.blogspot.com

ஊர்: பிறந்தது-மேட்டுப்பாளயம் (கோயமுத்தூர்)-25 வருடங்களுக்கு மேலாக வசிப்பது சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 20.08.2005

இது எத்தனையாவது பதிவு: 45

இப்பதிவின் சுட்டி(url): http://www.blogger.com/post-create.g?blogID=13812519

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பத்தில் மரத்தடியில் உறுப்பினர். அடிக்கடி வலைப்பதிவு என்ற வார்த்தையப் பற்றிக் கேள்விப்பட்டதால் அது என்னவென்று புரிந்து, அதன் அருமை றிந்து, அங்கும் காலடிபதிக்க ஆசை.

சந்தித்த அனுபவங்கள்: அனுபவங்களைப் பகிற்கிறேன்; (மற்றவர்கள்) பகிர்ந்தவற்றை அனுபவிக்கின்றேன்

பெற்ற நண்பர்கள்: ஒரு சிலர் (அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் சிலர் பலராகலாம்)

கற்றவை: ஒவ்வொரு நாளும் / ஒவ்வொரு ஆயிரம் நொடிகளிலும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் புதுப் புது விஷயங்கள்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சொல்ல ஒன்றுமில்லை

இனி செய்ய நினைப்பவை: ஆங்கிலத்திலுமோர் வலைப்பதிவு

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சுத்திகரிப்பு ஆலையில் கெமிகல் எஞ்ஜினீயராகத் துவங்கிய பணி, பின்னர் அங்கேயே மென்பொருள் துறையில் நுழைந்தது - உபயம் சிமுலேஷன் டெக்னாலஜி. தற்போது கற்றவற்றை மறந்துவிடாதபடி எண்ணெய் மற்றும் எரிசக்திக் துறைகளுக்கான மென்பொருள் ஆலோசகர் பணி.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: பொழுதுபோக்காய் "தமிழ்த் திரைப்பாடல்களில் இராகங்கள்" என்று பல வருடங்களாகத் தொகுத்தவற்றை, புத்தகமாகப் போடக் கிடைத்த தைரியம் மரத்தடியிலும், வலைப்பதிவிலும் எழுதிய பின்னரே கிடைத்தது. குடும்பத்தினர் ஒத்துழைப்பு அடுத்த வலிவான காரணம். மிகவும் ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சியான விஷயம் RagaChintamani என்ற பெயரில் ஆங்கிலத்தில் சொந்தச் செலவில் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு, மூன்றே மாதங்களில் விற்றுத் தீர்ந்தது. 160 இராகங்களில் அமைந்த 1800 பாடல்களின் விபரங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் இரண்டாம் பதிப்புக்கு, அலுவலக வேலைப்பளுவினால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

Tuesday, April 11, 2006

ஊழிக்கூத்து



மகாகவி சுப்ரமணிய பாரதியின் "ஊழிக்கூத்து" என்ற தலைப்பில் அமைந்த "வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட" என்ற பாடல் எமக்குப் பிடித்த பாடலாகும், இந்தப் பாடலுக்கு எங்கள் அம்மா, சந்திரகௌன்ஸ் இராகத்தில் மெட்டமைத்துக் கொடுத்த பின்னர் வீட்டில் எல்லோரும் அதனைப் பாடிக் கொண்டேயிருப்போம். சகோதரிகள் எந்த இடத்தில் பாரதிப் பாடல் போட்டி நடை பெற்றாலும், கலந்து கொண்டு இந்தப் பாடலைப் பாடிப் பரிசுகளை வாங்கி வந்து விடுவார்கள்.

இந்தப் பாடலின் வரிகள் இங்கே.

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய - வெறித்
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

இதனை ஒலி வடிவில் கேட்க இங்கே.




பாடல்: மகாகவி சுப்ரமணிய பாரதி
இசையமைப்பு: எனது அம்மா
பாடியவர்: எனது முதல் மகன் ஆதித்யா
பின்னணி: எனது இரண்டாம் மகன் அநிருத்
இராகம்: சந்திரகௌன்ஸ்
தாளம்: ரூபகம்

Tuesday, April 04, 2006

தய்யரத் தய்யா...தய்யரத் தய்யா - தேவையா இது?

"காற்றினிலே வரும் கீதம்" என்ற படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடல் விருப்பமான பாடலாகும்.அதனை வலையிலே தேடிய போது கிடைக்கவில்லை. நம்மைப் போல யாராவது தேடினால்.....




இந்தப் பாடலின் இராகம் என்னவென்று தெரியுமா? இராகத்தின் பெயர் "சாவித்ரி"

- சிமுலேஷன்

Sunday, March 26, 2006

உபவாசக் குரங்குகளும் உன்னதத் திட்டமிடலும்



ஒரு நாள் குரங்குக் கூட்டம் ஒன்று உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்தன. கூட்டத்திலுள்ள எல்லாக் குரங்குகளும் அதற்கு ஒத்துக் கொண்டன.

"உண்ணாவிரதம் முடிக்கும்போது ஏதேனும் சாப்பிட்டுத்தான் விரதத்தை முடிக்க வேண்டும். எனெவே, அதற்குத் தேவையான உணவை இப்போதே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்." என்றது தலைக் குரங்கு.

எல்லாக் குரங்குகளும் "ஆமாம்; ஆமாம்" என்றன.

குட்டிக் குரங்குக் கூட்டமொன்று உடனே தேடிச் சென்று, பழுத்த, சுவையான வாழைப் பழத்தார் ஒன்றினைக் கொண்டு வந்து சேர்த்தன.

"நான் நினைகின்றேன். அவரவர் பங்கை இப்போதே உண்ணாவிரதம் தொடங்கும் முன்னரே பிரித்துக் கொடுப்பது நல்லது. உண்ணாவிரதம் முடிந்த பின்பு எவ்வளவு களைப்பாக இருப்போம் தெரியுமா? அப்போது பிரித்துக் கொடுப்பது என்பது மிகவும் அலுப்பான வேலையாகும்" என்றது, தலையின் மனைவி.

எல்லாக் குரங்களும், இதுவல்லவா, யோசனை! என்று தங்கள் பங்கு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டன.

"நாம் ஏன், வாழப் பழத்தை உரித்துத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது" என்றது ஒரு இளம் குரங்கு.

"ஆமாம்; ஆமாம். இதுவும் சரியான யோசனைதான் என்றது மற்றோர் குரங்கு.

"சரி; தோலை உரித்து வைத்துக் கொள்வோம். ஆனால் யாரும் விரதம் முடிவதற்குள் சாப்பிட்டு விடக்கூடாது" என்றது தலை.

சரி. மாலை விரதம் முடிந்ததவுடன் சாப்பிட வேண்டுமென்ற முடிவுடன், தோலை உரித்த பழத்துடன், தயார் நிலயில் இருந்தன குரங்குகள்.

ஒரே ஒரு குட்டிக் குரங்கு மட்டும், தனது அப்பாவிடம், "நான் வாழைப் பழத்தை சும்மா, வாயில் வைத்துக் கொள்கின்றேன். சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். சரியா ப்ளீஸ்?" என்று கேட்டது.

"நல்ல யோசனை. எல்லோரும் இதே மாதிரியே செய்யலாம். உண்ணாவிரதம் முடிந்தவுடன், பழத்தை கடித்துச் சாப்பிட எளிதான வழி இதுதான்" என்றது தலை.

பின்னர் எல்லாக் குரங்குகளும் வாழைப் பழத்தின் தோலை உரித்து, பழத்தை வாயில் வைத்துக் கொண்டன. இப்போது திரு, திருவென்று ஒவ்வொரு குரங்கும் மற்ற குரங்கை பார்த்து அசடு வழிந்தன.

அடுத்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!!!

- 'தி ஹிண்டு'வின் 'யங் வேர்ல்ட்'டில் வந்த ஒரு கர்நாடக நாட்டுக் கதை

- சிமுலேஷன்

Monday, March 20, 2006

பரிமாற்றப் பகுப்பாய்வு-01



பரிமாற்றப் பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கின்றேன் என்று யாராவது சொன்னால் பயந்து விடாதீர்கள். நீங்களும், நானும் கூட செய்யலாம். வழக்கம் போல பரிமாற்றப் பகுப்பாய்வு என்றால் என்ன எண்டு முதலில் விளக்கம் தெரிந்து கொள்வோம்.

பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது ஆங்கிலத்தில் Transactional Analysis எனப்படுகின்றது. பரிமாற்றப் பகுப்பாய்வு என்பது மானுட நடைமுறைகளை அறிவதன் பொருட்டு, முறைபடுத்தி, வகைப்படுத்தப்பட்ட ஒரு அணுகுமுறையாகும்.

விரைவாகவே விஷயத்திற்கு வந்து விடுகின்றேன். மனித மனம் என்பது எளிதாகப் பிரித்து, பகுத்து அறியக் கூடிய மூன்று பகுதிகளாகக் கொண்டுள்ளது என்கிறனர் அறிவியல் அறிஞர்கள். இந்தப் பகுதிகளை ஆங்கிலத்தில் EGO STATES என்று கூறுகின்றோம். தமிழில் இதனை மனோநிலைகள் அல்லது மனோபாவம் என்று சொல்லலாம். இவை என்னவென்றால்

1. பெற்றோர் மனோபாவம்
2. குழந்தை மனோபாவம்
3. பக்குவ மனோபாவம்

1, பெற்றோர் மனோபாவம்: முதலில் பெற்றோர் மனோபாவம் என்றால் என்னவென்று பார்ப்போம். சிறு வயதில் நம்மை வளர்த்த பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்கள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் செயல்பட்டனரோ, அப்படியே இன்றும் நாம் செயல்படும் தன்மையை பெற்றோர் மனோபாவம் எனலாம். "இது நல்லது", "இது கெட்டது", "இதனைச் செய்யாதே", "அதனைச் செய்யாதே" என்பது அனைத்தும், இதனுள் அடங்கும் சட்ட திட்டங்கள், தர்ம நியாயங்கள், கலாச்சாரப் பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் பொன்றவன்றின் மொத்த வடிவமே பெற்றோர் மனோபவம் என்றும் கூறலாம். இதற்குக் கற்பிக்கப்பட்ட மனோபாவம் என்றும் பெயர் உண்டு.

2. குழந்தை மனோபாவம்: குழந்தைப் பருவத்தில் நாம் எப்படிச் செயல்பட்டோமோ, எண்ணினோமோ, உணர்ந்தோமோ. அப்படியே இன்றும் செயல்படுவதற்கு, குழந்தை மனோபாவம் எனலாம். தேவையின் அடிப்படையில் இயல்பாக இயங்கும் இயக்கங்கள், மற்றும் புறத் தூண்டுதல்களை எதிர்கொள்ளும் விதங்கள் அகியவற்றின் தொகுப்பினை குழந்தை மனோபாவம் என்றூ சொல்லலாம். இதற்கு உணர்ச்சி மனோபாவம் என்றும் பெயர் உண்டு.

3. பக்குவ மனோபாவம்: உணர்ச்சிகளுக்கு இடம் குடுக்காமல், விருப்பு. வெறுப்பின்றி , ஒரு கணிணியைப் போல், உண்மைகளை பகுத்தறிந்து நல்ல முடிவுகளை எடுக்கும் மனோபாவத்தைப் பக்குவ மனோபாவம் என்கின்றோம். இதனச் சிந்திக்கும் மனோபாவம் என்றும் கூறலாம்.

அடுத்த பாகத்தில், இந்த மனோபாவங்களின் உட்பிரிவுகளையும், உதாரணங்களையும், இன்னமுமே சுவாரசியமாகப் பார்க்கலாம்.

- தொடரும்

Tuesday, March 14, 2006

எட்டக எண் என்றால் என்ன?

இராம.கி அவர்கள் எழுதிய "புங்கம்" என்ற கட்டுரையில் சுத்திகரிப்பு ஆலை குறித்த சொல்லாடலில் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு octane numberக்குச் சொல்லப்பட்ட "எட்டக எண்" ஆகும். மற்றவை வருமாறு:-

பாறைநெய் (petroleum)
நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas)
நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates)
நெய்தை (naphtha)
கன்னெய் - கல்நெய் (petrol or gasoline)
மண்ணெய் (kerosene)
டீசல் - வளிநெய் (gas-oil).
துளித்தெடுத்தம் (distillation)
சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு (atmospheric distillation)
வெறுமத் துளித்தெடுத்தம் (vacuum distillation)
குறை அழுத்த துளித்தெத்தல் (distilled at low pressure)
பிரித்தெடுக்கும் செலுத்தங்கள் (separating processes)
வினையூக்கி மறுவாக்கம் (catalytic reforming)
பாறைநெய்ச் செலுத்தங்கள் (petroleum processes)
துளித்தெடுப்புக் கோபுரம் (distillation tower)
கொதிநிலை (boiling points)
பாய்மப் படுகை (fluidized bed)
வினையூக்கி உடைப்பு (catalytic cracking)
நீர்மம் (hydrogen)
நீர்ம உடைப்பு (hydrocracking) .
நீர்மக்கரியன்களே (hydrocarbons)
எட்டக எண் (octane number)
பிசுக்கைப் பொருள் (pitch)
கரிப்பிசுக்கு (coal-tar)
நடுவத் துளித்தெடுப்புகள்(middle distillates)
பிசுக்குமை (viscosity)
களிக்கரை (glycerol)
வெறியங்கள் (alcohol)
கொழுப்புக் காடி அத்துகள் (fatty acid esters)
பாய்மை (fluidity)
புதிரிகள் (problems)
புனைகள் (components)
செறிவைக் (concentration)
தெவிட்டுதல் (to saturate)
தெவிட்டாத காடி (unsaturated acid)
தெவிட்டாமை (unsaturation)
இரட்டைப்பிணை (double bond)

மேலும் அறிய...
(http://valavu.blogspot.com/2006/03/blog-post_114137405073613188.html)

Saturday, March 11, 2006

நிஜமல்ல... கதை



"வாங்க செல்வி. வாங்க. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லுங்கம்மா"

"மேடம், எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆகுது. ஆனா, நான் போன ஆறு மாசமாப் படற அவஸ்தை சொன்னாப் புரியாது".

"சொன்னாப் புரியாதுன்னு நீயா எப்படிம்மா சொல்ல முடியும்? என்ன கஷ்டப் படறீங்கன்னு, நீங்க வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியும். தயவு செய்து உங்க மனக்கஷ்டத்தை எல்லார் முன்னாடியும் கொட்டிருங்க. அப்பத்தான் உங்க மனச்சுமை குறையும்."

"மேடம், என்னோட கணவர், தினமும் என்னை சிகரெட்டால சுட்டு, இம்சை பண்ணறார்!."

"என்னது!. தினமும் சிகரெட்டால சுடுவாரா? என்னமோ டெய்லி காபி குடிக்கிற மாதிரி சொல்றீங்க!."

"ஆமாம். மேடம். ஒரு நாள் விடாம, தினமும் இந்தக் கொடுமை நடக்கும்"

"நேயர்களே. செல்விக்கு நடக்கிற இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா. இந்த மாதிரி கொடுமை செல்விக்கு மாத்திரமல்ல. இந்த நாட்டிலே பல பெண்களுக்கு ஏற்பட்டுகிட்டிருக்கு. ஆனா, இந்த மாதிரி கொடுமை ஏன் நடக்கிறது? அவர்கள் கணவர்கள் ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? சரி, செல்வியின் கணவர் கிருஷ்ணனும் இங்க வந்திருக்கிறார். அவரையே கேப்போம்."

"வாங்க, கிருஷ்ணன், செல்வி சொல்றது உண்மையா? நீங்க அவங்களை சிகரெட்டால
சூடு வப்பிங்களாமே."

"ஆமாம்." கிருஷ்ணன் தலையக் கவிழ்ந்து கொள்கிறார்.

"என்ன கிருஷ்ணன். இப்படி செய்யிறதுக்கு ஒங்களுக்கு வெக்கமாயில்லையா? ஏன் இப்படிப் பண்ணறீங்க?"

"மேடம். எனக்கும் அதுதான் தெரியலை. என்னயும் அறியாமப் பண்ணிடறேன்."

"கிருஷ்ணன். நீங்க பேசுறது எனக்குப் புரியவேயில்லை. அறியாம எப்படி இந்த மாதிரிப் பண்ண முடியும்?... ஒரு நிமிஷம் இருங்க. கிருஷ்ணன் ஒரு போன் கால் வருது."

"ஹலோ"

"ஹலோ!. மேடம் நான் தாம்பரத்திலேர்ந்து ராஜகோபால் பேசறேன்."

"சொல்லுங்க ராஜகோபால்"

"மேடம், இந்தப் ப்ரொக்ராமை டி.வியிலே பார்த்துகிட்டு இருக்கேன். நான் செல்வி, கிருஷ்ணன் இவங்க பக்கத்து வீட்லதான் குடியிருக்கேன்."

"அப்படியா ராஜகோபால். இவங்களை உங்களுக்குத் தெரியுமா? இந்த விஷயமும் தெரியுமா?"

"நெறையவே தெரியும் மேடம். இவங்க இரண்டு பேரும் நல்லாவே பொய் சொல்லறாங்க. இவங்க சொல்றது போல எதுவுமே நடப்பதில்லை. இவங்க இரண்டு பேரும் அவங்க மூஞ்சி டிவியிலே தெரியுணும்னு இப்படி நாடகம் ஆடறாங்க. ஆமாம் நான் சொல்றது உண்மைதான் மேடம். எப்படி நடிக்கணும்னு இவங்க போனவாரம் வீட்ல பேசிக்கிட்டிருந்ததை நானும் கேட்டிக்கிட்டுதான் இருந்தேன். ஆனா அவங்க, தாங்க இந்த மாதிரி திட்டம் போட்டது யாருக்கும் தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க."

செல்வி விக்கி விக்கி அழுகின்றார்.

"ஓகே. ராஜகோபால். எங்களுக்குப் போன் பண்ணி உண்மையைச் சொன்னதுக்கு ரொம்பத் தாங்ஸ். நிகழ்ச்சியத் தொடர்ந்து கவனியுங்க"

"செல்வி எதுக்கு இப்படி அழறீங்க. ராஜகோபால் சொன்னது உண்மதானா?"

"ஆமாம் மேடம். உண்மைதான்"

"எதுக்காக இப்படிப் பண்ணிட்டீங்க"

"இல்லை மேடம். என்னோட வொய்புக்கு டி.வியிலே வரணும்னு, குறிப்பா சீரியல்லே வரணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக நாங்க என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துட்டோம். ஒரு சான்ஸ் கூட கெடைக்கல. ஏதாவது பிரச்னை அப்படீன்னு சொல்லிகிட்டு இங்க வந்தா. அட்லீஸ்ட் ஒரு இருபது நினிஷம் டி.வியிலே வரலாமேன்னுதான் இப்படித் திட்டம் போட்டோம்."

"மேடம், எங்களை மன்னிச்சிடுங்க. எங்க மூஞ்சியும் டி.வியிலே வரணும்னு ஒரு வெறியிலே இப்படிப் பண்ணிடோம்."

"ஹலோ"

"ஹலோ"

"மேடம் நான் பிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஸ்டூடன்ட் கார்த்தி பேசறேன்"

"சொல்லுங்க கார்த்தி"

"மேடம். இப்ப டி.வியிலே வந்தாங்களே செல்வி. அவங்க அட்ரஸ் வேணும் மேடம்."

"எதுக்கு"

"அவங்க நடிப்பு நல்லா இருந்தது. இந்த மாதிரி இயல்பா நடிக்கிறவங்களைத்தான் நானும் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டுருந்தேன். அவங்க ஹஸ்பெண்டுக்கு ஆட்சேபணை இல்¨லன்னா, அவங்களை எங்கள் முதல் சினிமாவுக்கு ஹீரோயினா புக் பண்ண விரும்பறோம்."

செல்வியும், கிருஷ்னனும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகின்றனர்.

"கார்த்தி சார், ரொம்ப தாங்ஸ். உங்களுக்கு எங்க ப்ரொக்ரோம் மூலமா ஒரு ஹீரோயின் கிடைச்சது எங்களுக்கு ஒரு பெருமை."

"நேயர்களே, செல்வி பாருங்க. என்ன ஒரு தன்னம்பிக்கை! தன்னுடைய முகம் டி.வியி§லா, சினிமாவிலோ தெரியணும்கிறதுக்காக எப்படி கஷ்டப்பட்டு ஐடியா போட்டுகிட்டு வந்திருக்காங்க! அதுக்கு அவங்க கணவர் கிருஷ்ணனும் முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கார். புது டைரக்டர் கார்த்தியோட அறிமுகமாகப் போகிற செல்விக்கு நம்ம சமூகம் வாழ்த்துகளைத் தெரிவிச்சே ஆகணும். சமூகம்னா யாருங்க? நீங்களும், நானும்தான். நாளைக்கு இன்னொரு நிஜத்துடன் சந்திப்போம்."

----0-----

Sunday, February 26, 2006

பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு



"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|"

பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசாரதியிடமிருந்து. அதே நேரம் , "அம்மா போன்; உங்களுக்குத்தான்" என்று மாலினியிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள், சாந்தி.

"போன் அடிச்சது கூடக் காதிலே விழல. உங்க அப்பா வழக்கம் போல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரா".

இது வழக்கமான பல்லவி. தினமும் நடக்கும் கூத்துதான். பார்த்தா தினமும் சத்தமாக ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விடுவார். மாலினியும் உடனே கத்த ஆரம்பித்து விடுவாள். அது என்னவோ, சத்தமாக சொல்வதே அவருக்குத் திருப்தி அளிக்கும் விஷயம். மாலினிக்கோ, "பிரார்த்தனை என்பது மனதுக்குள்ளே சொல்ல வேண்டிய விஷயம்; அதனை எதற்காக இப்படி உரக்கச் சொல்ல வேண்டும்" என்பது அவள் வாதம்.

"இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம புக்கை யார் எடுத்தது? எதெதுதான் காணமப் போறதுங்குற வெவஸ்தையே இல்லாமப் போச்சு" என்று அலுத்துக் கொண்டார் பார்த்தா.

"கிட்டத்தட்ட இரண்டு வருஷமா, இந்தச் ஸ்லோகத்தை சொல்றேள்; இன்னிக்கி ஒரு நாள்
புக் இல்லாம சொல்ல முடியாதா?"

"ஒன்னால முடிஞ்சா எடுத்துக் கொடு; ப்ரீ அட்வைஸை யாரும் கேட்கலை"

சரி. வேற வழியில்லை. புக் இல்லாமலேயே சொல்லுவோம் என்று ஆரம்பித்தார், பார்த்தா. சரளமாக வாயிலிருந்து தட தடவென்று வந்து விழுந்தது. பரவயில்லையே, கலக்குகிறோமே என்று எண்ணிய அடுத்த வினாடியே, சறுக்கல்.

"பகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத...பகவான் பகஜ்ஹாநந்தீ... பகவான்..."

"என்ன ஆச்சு? அடுத்த வரி மனதிற்குள் வர மேட்டேங்கிறதே. என்ன செய்ய? நா¨ளைக்குப் புக் கெடச்ச உடனே இரண்டு தரம் சொல்லிவிட வேண்டியதுதான்" என்று குழம்பிக் கொண்டிருக்கும் போதே,

"ஆதித்யோ ஜ்யோத்ரதிய..." என்ற அடுத்த அடி உரக்கக் கேட்டது.

தனது பக்தியை மெச்சி, ஸாட்சாத் பகவானே அசரீரியாய் அடுத்த வரி எடுத்துக் கொடுத்து விட்டாரோ என்று ஆடிப் போய்விட்டார், பார்த்தா.

ஆனால், குரல் எதுவோ பரிச்சயமான குரலாக இருக்கின்றதே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மாலினி,

"என்னது, பட்டம்மா; நீயா விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொன்னது" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ஆமாம்மா. ஐயா தெனைக்கும் பூஜை செய்யும் போது, ஒரக்க இது சொல்றாரில்லையாம்மா. நானும் பாத்திரம் தேய்க்கும்பாது, இத்தெ கேட்டுக்கிகினே இருப்பேன். அப்படியே மனசிலே பதிஞ்சி போயிருச்சு. அம்மா தப்பா எடுத்துக்காதீங்க"

----------0----------

Friday, February 24, 2006

அமெரிக்க அனுபவங்கள்-01



ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்கா
------------------------
அமெரிக்காவில் பொதுவாகப் போலீஸை, ஆபீசர்ஸ் என்று குறிக்கிறார்கள். இங்கு அவர்கள் அனவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்களும் அதற்குத் தக்கபடி, மக்களின் தோழனாகவும், குற்றம் செய்பவருக்குக் கிலியாகவும் இருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்காவுடன், எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சில அனுபவங்கள்.

நரேஷ், ராஜன், ராமன் மற்றும் நான் நால்வரும் அப்போது நியூஜெர்சியிலுள்ள, டிரைடென்டிற்கு ஒரு ப்ரோஜெக்டிற்காகச் சென்றிருந்தோம். மதிய உணவிற்காக, மான்மோத் மாலுக்குச் செல்வது
வழக்கம். போய் வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடும். அப்போது எங்களிடம் காரெல்லாம் கிடையாது. எனவே நாங்கள் ஒரு குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்து எளிதில் போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால், ஜார்ஜ் எங்களைக் கூப்பிட்டு எச்சரித்தார். " னீங்கள் போகும் வழியிலே garage campaus** (residetial vehicle?) உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்," என்றார் (**இதன் சரியான பெயர் ஞாபகம் வரவில்லை. பெரிய கன்டெயினர் போல போர்ட்டபிள் வீடுகள் முப்பது, நாப்பது இருக்கும் ஒர் இடம். இதில் குடியிருப்போர் பெரும்பாலானோர் வசதிக் குறைவானவர்கள். சண்டை மற்றும் அடி, தடிக்குப் போகத் தயங்காதோர்) நாங்கள் இரண்டு வாரமாக, அந்த வழியிலேயே போய் வருகிறோமே, ஒரு பிரச்னையும் வரவில்லையே1" என்று எண்ணி, ஜார்ஜ் கூறிய அறிவுரையை அலட்சியம் செய்து விட்டோம்.

ஒரு நாள் இந்த காரேஜ் குடியிருப்பின் வழியே வந்து கொண்டிருக்கும் போது, அங்குள்ள ஒரு குட்டிப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் எங்களைப் பார்த்து. " நீங்கள் எங்கிருந்து வருகிறிர்கள்?, என்றான். அவனுடன் பேசும் ஆவலில், நாங்கள்,"இந்தியா" என்று உடனே பதில் சொன்னோம். அவன் எங்களை செவ்விந்தியர்கள் என்றெண்ணி, "அப்படியானால் உங்கள் வில், அம்பு முதலானவை எங்கே?அவற்றைக் காட்ட முடியுமா?", என்றான். உடனே எங்களிலொருவர், "மான்மோத் மால் அருகே, ஸ்னீக்கர்ஸ் ஸ்டேடியம் உள்ளது. அங்கே அவை கிடைக்கும்." என்றார். அந்தப் பையன் அப்போது போய் விட்டான். நாங்களும் எங்கள் வேலையப் பார்க்கச் சென்று விட்டோம்.

மறுனாள் மதியம், மான்மோத் மாலிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி, எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். இது ஏதோ விபரீதம் என்றெண்ணி, எட்டி நடை போட்டோம். உடனே, அந்த்தப் பெண்மணியுடன், இரண்டு, மூன்று பேர் சேர்ந்து எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். "எங்கள் பையனுக்கு வில், அம்பு போன்ற ஆயுதங்கள் வாங்கித் தருவதாகச் சொன்னீர்களா?," என்று ஏதோதோ உளறிக் கொண்டே வந்தனர்கள் அவர்கள். என்ன சொன்னார்கள் என்று அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால், அந்த அமெரிக்கச் சிறுவன், எங்களைப் பற்றி அவன் குடும்பத்தாரிடம் ஏதோ நன்றாகப் போட்டுக் கொடுத்திருக்கிறான்
என்று மட்டும் புரிந்தது.

ஆனால் நாங்கள் எங்களைத் தொடர்ந்த நாலு பேரையும் பொருட்படுத்தாமல், பேசாமல் அலுவலகத்தை நோக்கி நடந்தோம். இன்னமும் நாலைந்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகம் வந்து விடும் என்ற தெம்பில். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டால் நிம்மதி என்றெண்ணியிருந்த்த எங்களுக்கு ஒர் அதிர்ச்சி. அலுவலக் வாசலில், பளீர் பளீர் என்று காரில், சிவப்பு மற்றும் நீல நிற எச்சரிக்கை விளக்குகள் எரிய அமெரிகாவின் ஆபீசர்கள். எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்மணிதான், அதற்குள் போன் செய்து போலீஸை வரவழைத்திருக்கிறாள். ஒரு சிறுவனைக் கடத்த முயன்றதாகப் புகார் வந்திருப்பதாக போலீஸ் ஆபீசர்கள், டிரைடன்ட் தலைவரிடம் சொன்னார்கள். பின்னர், தலை வந்து, "இவர்கள்
இந்தியாவிலிருந்து வந்துள்ள என்ஜினியர்கள். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். கடத்தல் போன்ற வேலைகளிலெல்லாம் ஈடுபட, இந்த தயிர்சாத கோஷ்டிகளுக்குத் தெரியாது", என்று சமாதானம் சொன்னார். சமாதானமடைந்த போலீசாரும், பயந்தாக்கொள்ளிக் குடும்பத்தினரும், இடத்தை விட்டு அகன்றனர்.

அன்றிலிருந்து, யாரிடமும் அனாவசியமாக வாயைக் கொடுத்து, மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முடிவு செய்தோம்.

...தொடரும்.

Thursday, February 23, 2006

ஜப்பான் அனுபவங்கள்



"இகேபுகரோ"விலுள்ள "விங்ஸ்" ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிடா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, ஷட்டில் பஸ் பிடித்து வந்து விடுங்கள்" என்ற செய்தியும், இகேபுகரோ வரை படமும் இமெயிலில் அனுப்பியிருந்தார், நககோமி ஸான். சரிதான், இதொ வந்து விடும் என்று எண்ணி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், சுமார் இரண்டு மணி நேரப் பயணம். வரும் வழியெங்கும் சிக்கலான மேம்பாலங்கள். ஒவ்வொன்றும் ராட்சத சங்கிலிகள் கொண்டு பிணைக்கப்ப்ட்டிருந்தன. அடிக்கடி வரும் நில நடுக்கத்தால் சேதம் ஏற்படாமலிருக்க இந்த ஏற்பாடாம்.

விங்ஸ் ஹொட்ட்டலில் அனியாயத்திற்குச் சின்ன அறை. ஆனால், அந்தச் சின்ன அறையிலேயே, டி.வி, ப்ரிட்ஜ் முதலானவைகள் இருந்தன. சந்துரு போன்ற நண்பர்கள் வந்தால், உடம்புக்கு ஒரு அறையும், கால்களுக்கு ஒரு அறையும் தேவைப்படும். இதற்கு ஒர் இரவுக்கு சுமார் 70 டாலர்கள். நண்பர் ராய் சொனனார்; கேப்ஸ்யூல் ரூம்களும் இங்கே 30 டாலருக்குக் கிடைக்கும். இவை பெரும்பாலும், குடித்துவிட்டு, இரயிலைத் தவறவிட்ட கோஷ்டிகள் தங்குவதற்கான இடமாகும். இந்த கேப்ஸ்யூல் ரூம்கள், சாதாரண அறைகளே அல்ல. சவப் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்ப் போல் இருக்குமாம். தங்க வேண்டிய நபர் தனது உடைமைகளை, லாக்கரில் வைத்து விட்டு, இந்த சவப் பெட்டி போன்ற கேப்ஸ்யூலில் ஏறிப் படுத்துக் கொள்ள வேண்டுமாம். மறுனாள் காலை எழுந்து, வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வார்களாம்.

இகேபுகரோ, நல்ல பெரிய ஸ்டேஷன்.எஜமானுக்காகக் காத்திருந்து, காத்திருந்து இறந்த நாய் ஒன்றிற்கு, இரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் சிலை ஒன்று செய்து வைத்த கதை ஒன்று, சின்ன வயதிலே படித்திருபீர்களே!. அது இங்குதான். தானியங்கி இயந்திரத்தில் காசை அள்ளிப் போட்டு, டிக்கெட் வாங்கி, கதவிலே செருக, தானாகவே வழிவிடும் அமைப்பு எல்லா நாடுகளிலும் இருப்பது போலத்தான். ஆனால், டிக்கெட் மட்டும் கருப்பு நிறத்தில், பளபளப்பாக இருக்கிறதே, என்றெண்ணி, நண்பரிடம் விசாரித்தேன். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும், முட்டையின் ஒடுகளிலிருந்து தயாரிக்கக்ப்படுகின்றது என்று சொன்னார். எதற்கு என்று புரியவில்லை.

ஒரு முறை வாங்கிய டிக்கெட் என்றால், இயந்திரம் அதனை வாங்கி முழுங்கி விட்டு, வழி விடும். சீஸன் டிக்கெட் என்றால் வழிவிட்டு, டிக்கெட்டை மறு கேட்டில் திரும்பக் கொடுக்கும். சரவணன், ஒரு முறை பயன்படுத்த்ப்படும் டிக்கெட்டை வாங்கிவிட்டு, வெளி கேட்டில் மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டார். எங்களுக்கோ ஆச்சரியம். இது எப்படி முடியுமென்று. அப்போது ஒரு ஜப்பானியர் ஒடி வந்து, "அது என்னோட சீஸன் டிக்கெட்" என்று கத்தியபடியே வந்து தனது டிக்கெட்டைக் கேட்டார். அப்போதுதான் புரிந்தது. சரவணன், மின்னல் வேகத்தில், தனக்குப் பின்னால் வந்த்த் ஜப்பானியரின் சீஸன் டிக்கெட்டைத் தவறுதாலக எடுத்து வந்து விட்டாரென்று.

டிரெயினில் கூட்டமென்றால் அப்படி ஒரு மாம்பாலக் கூட்டம். ஒர் ஒழுங்கோடு, டிரெயினில் இறங்குபவர்களுக்கு வழி விட்டு, வாயிலில் இரு புறமும், இரு வரிசைகள் அமைத்து நிற்கிறார்கள். அதே போல் டிரெயினில், ஒருவரோடு ஒருவர் பேச வேண்டுமே. மூச். எல்லாருடய கையிலும், புத்தம் புதிய மாடல்களில் மொபைல் போன்கள். ஆனால், யாருமே பயணத்தின் போது பேசுவதில்லை. பெரும்பாலோர், மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வெளி நாடுகளையும் போலவே, அடுத்து வரும் ஸ்டேஷன் என்னவென்று, அழகாக அறிவுப்பு செய்கிறார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனது பெயர், தக்கனோடபாபா. முதல் நாள், தக்கனோடபாபா, தக்கனோடபாபா என்று சொல்லிச் சொல்லிப் பார்த்ததில், முதன் முறையாக நாக்கு சுளுக்கிக் கொண்டது.

நாங்கள் வேலை செய்து அலுவலகம் மிக ஒழுங்குடன் இருந்தது. சீனியாரிட்டிப்படி சீட்ட்ங் அரேஞ்மென்ட் இருந்தது. வாரம் ஒரு முறை தலைவர், பொதுவான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லுவார். இதற்காக யாரும் மீட்டிங் ரூமுக்குச் செல்வதில்லை. அவரவர், அவரவர் இடத்திலேயே நிற்க, தலைவர் 5 முதல் 10 நிமிடங்கள் பேச, வாரந்திர மீட்டிங் சுருக்கமாய் முடிந்துவிடும்.

இந்தியாவில் புதிது புதிதாய்க் கிடைக்கும் ரெடிமேட் சப்பாத்தி, பரொத்தா, குருமா வகையறாக்கள் கொண்டு போயிருந்தோம். அவற்றை எப்படிச் சுட வைத்துச் சாப்பிடுவது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது, மார்க்கெட்டிங் மானேஜர், எங்களைத் தரதரவென அருகிலுள்ள மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று, எலெக்ரிகல் தவா ஒன்று வாங்கிக் கொடுத்தார். அதனைக் கொண்டு வந்து மதியம் ஆபீசிலேயே ஆன் செய்து சுரேஷ் மலபார் பரோட்ட்டாவும், எம்.டி.ஆர் மசாலாவும் சுட வைக்க ஆரம்பித்தான். அலுவலகத்திலுள்ள அனவரும் எட்டிப் பார்த்தனர். இண்டியன் கறியின் வாசனை, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த்தில் ஆச்சரியமில்லை. முதல் ஒரிரு வாரங்களிலேயே, கொண்டு வந்த்திருந்த சரக்கு அனைத்தும் தீர்ந்துவிட, இப்போது இண்டியன் ரெஸ்டாரென்டுகளைத் தேடிப் படையெடுத்தோம். நியூ டெல்லி, ஜ்யோதி பொன்ற பல இண்டியன் ரெஸ்டாரென்டுகள் இருந்த்தன. எல்லா இடங்களிலும், ஒரே மெனுதான். அரிசிச் சாப்பாடு மற்றும் கறி அல்லது டால். சாப்பாடுக்குப் பதில் "நான்" வேண்டுமானால் கேட்கலாம்.

ஒரே ஒரு வாரக் கடைசியில், ஷிஞ்சுகுக்கு என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம். நான் பார்த்தவரை, மற்ற நாட்டினரை விட, ஜப்பானியர், மரியாதையுடனும், அன்பாகவும் இருக்கிறார்கள். குமார் ஸான், ராமன் ஸான், என்று எல்லோரையும் ஸான் சேர்த்துக் கூப்பிடுகிறார்கள். இவர்களுக்கு ஏனோ, "ல" கரமே வருவதில்லை. கோகுல் என்பவரை, கோகுற் என்பார்கள். லைலாவை, றைறா என்பார்களோ?

அலுவலகத்திலிருந்து, பெரும்பாலும் 8 அல்லது 9 மணிக்கே கிளம்புகிறார்கள். எங்கே? வீட்டிற்கு மற்றும் பாருக்குதான். மறுநாள் காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் ஆஜராகி விடுகிறார்கள். இரவில் எவ்வளவுதான் தண்ணி போட்டாலும், மறுநாள், ஹேங்கோவர் ஏதுமின்றி, அமைதியாக அலுவலகம் வந்து விடுகிறார்கள். பெரும்பாலோனோர் சிகரெட் புகைக்கின்றார்கள். பேஸிவ் ஸ்மோக்கிங்கினால் பொது இடங்களில் நிற்கவே முடியாத அளவிற்கு சிகரெட் புகை.

டெக்னாலஜியில் முன்னணியிலிருக்கும் ஜப்பானியர், புதிது புதிதாக ஏதேனும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சில பொருட்கள் உள் நாட்டு உபயோகத்திற்கு மட்டுமே. ஒரு புத்தக் கோயிலுக்கு, ஜப்பானிய நண்பரொருவருடன் சென்றிருந்தேன். மணியடித்து விட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள். ஓட்டைக் காலணா போண்ற, நாணயமொன்றை விசேஷமானது என்று சொல்லி கோவிலில் வீசி எறிகிறார்கள். அதன் மதிப்பு 5 யென் மட்டுமே. (என்ன போங்கு?)

சில மார்க்கெட்டுகளில், கம்ப்யூட்ட்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் விற்பதற்கான கடைகள் உண்டு. ஒவ்வொன்றும் 9 அல்லது 10 மாடிக் கட்டடங்களாக இருக்கும். பேக்ஸ் மெஷினுக்கென்று ஒர் தளம். வீடியோ கேம்ஸ்க்கன ஒர் தளம் என்று. பெரும்பாலான கடைகளின் வாசலில், மெகபோன் வைத்து, கம்ப்யூட்டரைக் கூவிக் கூவி விற்கிறார்கள்.

இகேபுகரோ மற்றும் ஷிஞ்சுகுக்கு போன்ற இரயில் நிலையங்கள், சிக்கலானதும், நெருக்கடியானதுமாகும். இந்த இரயில் நிலையங்களுக்கு, குறைந்தபட்சம், பத்து தெருக்களிலாவது நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் டோக்கியோ வரை சென்ற எங்களுக்கு புல்லட் ட்ரெயினில் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் தெருவில் நடந்து போகும் போது, இந்தியர் ஒருவரைப் பார்த்து விசாரிக்க, அவர், இந்திய தூதகரகத்தில் பணி புரியும் தெலுங்குக்காரர் என்று தெரிந்தது. ஸ்ரீகாந்த் அவருடன் தெலுங்கில் மாடலாடி மகிழ்ச்சி கொண்டான்.

இறுதியாக, இந்தியா திரும்புமுன் ஒர் சம்பவம். ஹோட்டலிலிரிந்து, விமான் நிலையம் செல்ல ஷட்டில் பஸ்ஸில் அமர்ந்தேன். போகும் வழியில்லுள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து, பிலிம் காட்ட வேண்டுமென்று, டிஜிட்டல் கேமிராவை பையிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு மணினேரப் பயணத்தில் அசந்து தூங்கிவிட்டேன். காமிராவை மறந்து இறங்கி விட்டேன். நாரிட்டா விமான நிலையத்தின், இன்டீரியர் டெகொரேஷனால் கவரப்பட்டு, காமிராவின் மூலம் படம் எடுக்க எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஷட்டில் பஸ்ஸிலேயே, காமிராவைத் தவற விட்டிருப்பதை உணர்ந்தேன்.

காமிரா கிடைக்குமா, கிடைக்காதாவெறு எண்ணியபடியே, இன்பர்மேஷன் கவுண்டரை அணுகினேன். புகார் ஒன்று கொடுக்க்கப்பட்டது. எங்கிருந்து வந்தேன், எந்தப் பஸ்ஸில், எந்த சீட்டில் உட்கார்ந்தேன் போன்ற விபரங்கள் பெறப்பட்ட்டன. கவுண்டரிலிருந்த பெண்மணி, " தகவல் அனுப்பியுள்ளேன்; காத்திருங்கள்" என்ராள். ஐந்து நிமிடல் கழித்து,

"உங்கள் காமிரா கிடைத்து விட்டது; அது மேல் தளத்திற்கு ஐந்து நிமிடங்களில் வந்து சேரும்; சென்று வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள்.

வியப்புடன் மேல் தளத்திற்குச் சென்றேன். ஐந்து நிமிடம் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து, ஒர் ஊழியர், எனது காமிராவைக் கொண்டு வந்து கொடுத்தார். "கால தாமதத்திற்கு வருந்துகிறோம், மன்னிய்ங்கள்." என்று அவர் வந்து சொன்ன போது, வியப்பு மீண்டும் அதிகமானது.

மேற்கண்ட காமிரா சம்பவத்தை, இங்கு வந்து எல்லோரிடமும் சொன்ன போது, "ஜப்பான்னா, ஜப்பான் தான்; இங்கே நடக்குமா இப்படி" என்று சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரி கூறினார்கள்.

நடு ராத்திரி சென்னை வந்திறங்கிய, எனது லக்கேஜ்களைப் பார்த்த எனது மனவிக்கு அதிர்ச்சி. "லேப்டாப் எங்கே?" என்றாள். பகீரென்றது. லேப்லாப் பையில், லேப்டாப், அலுவலகம் குறித்த முக்கிய காகிதங்கள். பாஸ்போர்ட், அலவன்ஸாகக் கொடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் அனைத்தும் அல்லவா வைத்திருந்தேன். டாக்ஸியில் விட்டு விட்டேன் போலிருக்கிறதே என்று எண்ணி, நானும், பையனும், புறப்பட்டுக் கொண்டிருந்த் டாக்ஸியத் துரத்தத் தொடங்கினோம். பெட்ரோலின் வேகத்துடன், மனித சக்தியால் போட்டி போட முடியவில்லை.

வந்த டாக்ஸீ, ப்ரீ பெய்ட் டாக்ஸியாக இருந்ததால், சிறிது நம்பிக்கை இருந்தது. பில்லை வைத்து, நம்பரைக் கண்டு பிடித்து, விமான நிலையத்திலிருக்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, " இப்போதே வருகிறோம்" என்றோம்.

நடு இரவில், காரை எடுத்திக் கொண்டு, விமான நிலையம் சென்று, ப்ரீ பெய்ட் டாக்ஸியின் அலுவலகத்து நபரை விசாரிக்க, அவர், "இதோ டிரைவர் வந்து விட்டார்," என்றார். பத்து நிமிடத்தில் டிரைவர், லேப்டாப்பை அதிலுள்ள பொருட்களுடன் கொண்டு வந்து கொடுத்தார். போன உயிரே வந்தது போலிருந்தது. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்து, சன்மானமும் கொடுத்து விட்டு வந்தோம்.

ஜப்பானில் காமிரா தொலைந்து கிடைத்த சம்பவத்தை, நண்பர்களிடம் பகிர்ந்த்து கொள்ளும் போதெல்லாம், அவர்களிடமிருந்து,

"என்ன இருந்தாலும் ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா?"

என்ற கமெண்ட்ஸ் கேட்கும் போதெல்லாம்,

"இல்லை, இல்லை, இங்கேயும் நேர்மை உண்டு; இதெல்லாம் இங்கேயும் நடக்கும்; தொலந்து போன லேப்டாப் கூடக் கிடைத்திருக்கிறது"

என்று சொல்ல நினைத்தாலும்,

"பொருட்களைத் தொலைப்பதே உம் வழக்கமோ; லேப்டாப் கூடத் தொலப்பீரோ"

என்று யாரேனும், கேலி பேசுவார்களோ என்ற அச்சத்தினாலும்,

"எல்லாச் சாமான்களையும் நான் எடுத்துக் கொண்டு இற்ங்கினேனா என்று அந்த டாக்ஸி டிரைவர் பார்த்திருக்க வேண்டாமோ?: மற்ந்து விட்ட லேப்டாப்பை அப்படியே அமுக்கி விடலாமா; வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து, விற்கப் போய் மாட்டிக் கொண்டு விடப்போகின்றோம்; ஆகவே கொடுத்து விடலாம்" என்ற எண்ணத்தில்தான் திருப்பிக் கொடுத்திருப்பானோ என்ற எணணமும் ஏற்பட்டாதாலும்,

"ஆமாம்; ஆமாம்; ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா" என்றே சொல்லி வருகிறேன்.

அனைவரையும் கவரும் ஐயப்பன் ஆலயம்



சமீபத்தில் திருச்சி சென்ற போது, அங்குள்ள கன்டோன்மென்ட் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். இந்த ஆலயத்தில் என்னையும் மற்றும் பெரும்பாலோனரையும் கவர்ந்த அம்சங்கள் வருமாறு:-

1. எந்த மதத்தினரும் ஆலயத்தில் நுழையலாம்.

2. ஆண்டவன் பெயரிலே மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.

3. அமைதிக்கு முக்கியத்துவம் தந்து, "அமைதியாய் இருக்கலாமே!", "மெளனமாய் தரிசிக்கலாமே!" என்று ஆங்காங்கே பலகைகள். இப்படிப் பல்வேறு அறிவுரைப் பலகைகள். ஆனால் எதுவுமே வலிந்து பேசாதவை. உ-ம்;"அருகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாமே".

4. காமிரா, மொபைல் போன் அனுமதியில்லை.

5. குறிப்பிட்ட இடம் தவிர,எந்த இடத்திலும் சூடம், விளக்கு எற்றக் கூடாது.

6. உண்டியல் கிடையாது.

7. தட்டில் காசு போடுதல் கிடையாது.

8. கேசட், ஸ்பீக்கர் கொண்டு பாடல்களை அலற வைக்கும் வழக்கம் இல்லை. மென்மையான சங்கீதம் காற்றில் தவழ்ந்து வருகின்றது.

9. புல்வெளிகளும், பூங்காக்களும் பச்சைப் பசேலென்று பராமரிக்கப்படுகின்றன.

10. மலஜலம் கழித்துவிடக் கூடிய கைக்குழந்தைகளைத் தவிர்க்குமாறு தாய்மார்கள் வேண்டப்படுகின்றார்கள்,

11. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரம் வரை அமைதியாய் அமர்ந்து தியானம் செய்ய, தியான மண்டபம் உள்ளது.

12. பக்தர்கள் அனைவரும் கண்ணியமான உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி, ஜீன்ஸ் முதலியனவற்றைத் தவிர்க்க வேண்டும். பெண்களும் அவ்வாறே. துப்பட்டாவுடன் கூடிய சூடிதார் மட்டுமே அணிய வேண்டும். துப்பட்டா இல்லாதவற்கு, ஆலயத்தின் வாயிலில் துப்பட்டா வழங்கப்படுகின்றது. இதனையும் கண்ணியமாக அணிவது எப்படி எனவும் ஓர் பலகை விளக்குகின்றது.

Wednesday, February 22, 2006

அரசு ஆவணம்-1846

1. சந்த்ரமா, பாங்க், டிளா பட்டியைக் கட்டக் கூடாது.
2. புடவை, ஸாடி, பந்தளம் இவைகளுக்குக் கூட முந்தாணிக்கு ஜாலர் தைக்கக் கூடாது.
3. குசூம்பா நாடா போடக் கூடாது.
4. நாடாவுக்கு துய்யா தைக்கக் கூடாது.
5. மக்தாபீ ரவிக்கை போட்டுக் கொள்ளக் கூடாது.
6. பூ ராக்கடிக்கு பஞ்ஜ்யாவையும் களைகளையும் போட்டுக் கொள்ளக் கூடாது.
7. க்ருஷ்ண கொண்டை, முத்துவின் கொத்தைப் போடக் கூடாது.
8. சடையின் நுனியில் தங்கத்தில் குஞ்சத்தைத் தவிர பட்டுக்குஞ்சலத்தைப் போடக் கூடாது.
9. புத்தியை வாங்கக் கூடாது.
10. துப்பட்டாவைப் புழங்கக் கூடாது.
11. தாண்டாவிற்கு எலுமிச்சம்பழம் போடக் கூடாது.
12. குங்குமம் நெற்றியின் குறுக்கே தடவிக் கொள்ளக் கூடாது.

ஜபாணி குப்பண்ணா ஜாதவ்.

அரசு ஆவணம்-1846

1846 ஆம் ஆண்டு அரசு வெளியிடப்பட்ட மேற்க்காணும் ஆவணம் ஒன்றில், தேவதாசிகள் எவ்விதம் நடக்க வேண்டுமென விளக்குகின்றது.

ஆதாரம்

மரபு தந்த மாணிக்கங்கள்
தஞ்சாவூர் பி.எம். சுந்தரம்
டாக்டர் வே.ராகவன் நிகழ் கலை மையம்
சென்னை - 20

படித்தால் சிரிப்பு வரவழைக்கும் இந்த ஆவணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்த பட்சம், இதில் உள்ள தமிழ்(?) வார்த்தைகளுக்காவது யாரேனும் பொருள் கூற முடியுமா?

ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தமக்கென்று ஒரு தாய் மொழியைக் கொண்டுள்ளன. உதாரணமாக...

தமிழ் நாடு - தமிழ்
புதுச்சேரி - தமிழ்
கேரளம் - மலையாளம்
லட்சத் தீவுகள் - மலையாளம்
கர்னாடகா - கன்னடம்
ஆந்திரப் பிரதேசம் - தெலுங்கு
ஒரிஸ்ஸா - ஒரியா
மஹாராஷ்டிரம் - மராட்டி
குஜராத் - குஜராத்தி
தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி - குஜராத்தி
டாமன் மற்றும் டையூ - குஜராத்தி
கோவா - கொங்கணி
பிகார் - மைதிலி
ஜார்க்கண்ட் - சந்தாலி
ஜம்மு மற்றும் காஷ்மீர் - உருது, காஷ்மீரி மற்றும் டோக்ரி
அஸ்ஸாம் - அஸ்ஸாமீஸ், போடோ
மேற்கு வங்கம் - பெங்காலி
திரிபுரா - பெங்காலி
மணிப்பூர் - மணிப்புரி
சிக்கிம் - நேபாலி
டார்ஜிலிங் - நேபாலி
அருணாசலப் பிரதேசம் - நேபாலி
பஞ்சாப் - பஞ்சாபி, டோக்ரி
ஹிமாச்சலப் பிரதேசம் - டோக்ரி
ராஜஸ்தானி - மார்வாரி

இந்த எல்லா மொழிகளையும் நாடு முழுவதற்கும் ஆட்சி மொழியாக்குவது என்பது இயலாத காரியம்தான். ஆனால், இவ்வளவு மொழிகள் இருக்க, ஹிந்தி ஆட்சி மொழியானது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவல். (நான் அறிந்த வரையில், ஸம்ஸ்க்ருதமும், ஹிந்தியும் ஆட்சி மொழிக்குப் போட்டி போட, முன்னாள் குடியரசுத்தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் ஹிந்தி ஆட்சி மொழியானதாக அறிகின்றேன்.) மேலும் விபரமறிந்தவர்கள் ஹிந்தி தேசிய மொழியான வரலாறு சொல்லவும்.

Tuesday, February 21, 2006

தூண்டுதல்

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திறம்பட நிர்வகித்தவர் திரு.வி.ஆர்.தீனதயாளு. அவர் ஒருமுறை அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களுடன் உரையாடும் போது, தனது ஆலையிலுள்ள எழுத்துச் சிற்பிகளின் எழுத்தோவியங்கள் கொண்ட ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவ்வாறே ஒரு சிறப்பிதழ் எங்களுக்கென ஒதுக்கப்பட்டது. எனது கதை ஒன்றும் அதில் பிரசுரமானது. வெளிவந்த காலம் - ஆகஸ்ட் 1990.








Saturday, February 18, 2006

தமிழ்த் தாத்தா உ.வே.சா

காவேரி வாய்ப்படவும், கறையான் வாய்ப்படவும், இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை, ஊரூராகவும், தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும், திரிந்து தேடியும், விறகுத் தலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை ¦கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாகவும், பிறர்க்குப் பெரும் பயன்படவும், வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர், உ.வே.சாமினாதயரே (1855-1942) என்று தமிழ்ப் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் எழுதி இருந்த போதும், "தமிழ்த் தாத்தா" என்ற பெயருக்கான காரணம் புரிபடவில்லை, அன்னாரின் தமிழ் பதிப்புப் பணிப் பட்டியலைப் பார்க்கும் வரை.




ஆண்டு வயது பதிப்பு
------ ----- ------
1878 23 வேணுவனலிங்க விலாசச் சிறப்பு (க.தொ)
1885 30 மத்தியார்ச்சுன மான்மியம் (உ)
1887 32 சீவக சிந்தாமணி
1889 34 பத்துப் பாட்டு
1892 37 சிலப்பதிகாரம்
1894 39 புறநானூறு
1895 40 புறப்பொருள் வெண்பாமாலை
1897 42 திருப்பெருந்துறைப் புராணம்
1998 43 மணிமேகலை
பௌத்த மும்மணிகள் (உ)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (உ)
1999 44 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.2)
1900 45 பௌத்த மும்மணிகள் (ப.2)
1901 46 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.3)
1902 47 பௌத்த மும்மணிகள் (ப.3)
1903 48 ஐங்குறுநூறு
வீரவனப் புராணம்
சீகாழிக் கோவை
திருவாவடுதுறைக் கோவை
1904 49 பதிற்றுப் பத்து
சூரை மாநகர்ப் புராணம்
திருக்காளத்தி நாதருலா
திருப்பூவண நாதருலா
1905 50 திருவாரூர்த் தியாகராஜ லீலை
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.4)
1906 51 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருவிளையாடற் புராண பயங்கர மாலை
திருவுசாத்தான நான்மணி மாலை
கடம்புவன புராணம் (ஒரு பகுதியுடன்)
1907 52 சீவக சிந்தாமணி (ப.2)
தனியூர்ப் புராணம்
மண்ணிப் படிக்கரைப் புராணம்
தேவையுலா
1908 53 பௌத்த மும்மணிகள் (ப.4)
1909 54 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.5)
1910 55 திருவாரூருலா
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1911 56 பௌத்த மும்மணிகள் (ப.5)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.6)
1912 57 திருக்காளத்திப் புராணம்
1913 58 திருக்காளத்திப் புராணம் (ப.2)
1914 59 திருத்தணிகை திருவிருத்தம்
1915 60 புறப்பொருள் வெண்பாமாலை (ப.2)
1917 62 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.7)
1918 63 பத்துப் பாட்டு (ப.2)
பரிபாடல்
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
நன்னூல் மயிலை நாதருரையுடன்
1919 64 திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் (ப.2)
1920 65 சிலப்பதிகாரம் (ப.2)
ஐங்குறுநூறு (ப.2)
பதிற்றுப்பத்து (ப.2)
பெருங்கதை
1921 66 மணிமேகலை (ப.2)
1922 67 சீவக சிந்தாமணி (ப.3)
1923 68 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.8)
1924 69 புறநானூறு (ப.2)
1925 70 நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரையுடன்
1926 71 உதயணன் கதைச் சுருக்கம்
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1927 72 சிலப்பதிகாரம் (ப.3)
பூண்டி அரங்கநாத முதலியார் (உ)
1928 73 கமலை ஞானப் பிரகாசர் (உ)
1929 74 சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (உ)
பௌத்த மும்மணிகள் (ப.6)
1930 75 மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது
திரிமயிலை திரிபந்தாதி
தக்கயாகப் பரணி
கோபாலகிருஷ்ண பாரதியார் (உ)
1931 76 பத்துப் பாட்டு (ப.3)
மணிமேகலை (ப.3)
மதுரைச் சொக்கநாதருலா
ஆனத்தருத்ரேசர் வண்டு விடுதூது
1932 77 கடம்பர் கோயிலுலா
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
கொட்டையூர் ஸ்ரீசிவக் கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
மதுரை மும்மணிக்கோவை
பழனி இரட்டைமணி மாலை
பழனி பிள்ளைத் தமிழ்
1933 78 சங்கர நயினார் கோயில் சங்கரலிங்க உலா
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
மயிலை யமக அந்தாதி
பாசவதைப் பரணி
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (முதற்பாகம்) (உ)
1934 79 விளத்தொட்டிப் புராணம்
ஸ்ரீதியாராஜ செட்டியார் பிரபந்தங்கள்
சங்கர நயினார் கோயிலந்தாதி
வலிவுல மும்மணிக் கோவை
சத்யவாசகர் இரட்டை மணிமாலை
புறப்பொருள் வெண்பா மாலை (ப.4)
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (இரண்டாம்பாகம்) (உ)
1935 80 புறநானூறு (ப.3)
பரிபாடல் (ப.2)
பெருங்கதை (மூலம் குறிப்புரை மட்டும்)
ஆற்றூர்ப்புராணம்
திருஇலஞ்சி முருகனுரை
பழமலைக் கோவை
கலசைக் கோவை
உதயண குமார காவியம்
நன்னூல் சங்கர நமச்சிவாயம் உரையுடன் (ப.2)
1936 81 புறநானூறு (மூலம் அரும்பத உரையுடன்)
மண்விடு தூது
கோபால கிருஷ்ண பாரதியார் (உ)
மகாவைத்யநாதையர் (உ)
நான் கண்டதும் கேட்டதும்
பழையதும் புதியதும் (உ)
திருவள்ளுவரும் திருக்குறளும் (உ)
1937 82 குறுந்தொகை
சிராமலைக் கோவை
திருவாரூர்க் கோவை
தமிழ் நெறி விளக்கம்
நல்லூர்க் கோவை (முதற்பாகம்) (உ)
1938 83 திருக்கழுக்குன்றத்து உலா
அழகர் கிள்ளை விடு தூது
சிவசிவ வெண்பா
திருமலை ஆண்டவர் குறவஞ்சி
திருக்காளத்தி நாதர் இட்ட காம்ய மாலை
நல்லுரைக் கோவை (இரண்டாம் பாகம்) (உ)
1939 84 தணிகாசலப் புராணம்
புகையிலை விடுதூது
ஸ்ரீகுமர குருபர் சுவாமிகள் பிரபந்தங்கள்
திருப்பேரை மகர நெடுங் குழைக் காதர் பாமாலை
1940 85 வில்லைப் புராணம்
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
நினைவு மஞ்சரி (உ)
1951 86 பதிற்றுப் பத்து (ப.3)
மணிமேகலை கதைச் சுருக்கம் (ப.10)
1952 87 வித்துவான் தியாகராஜச் செட்டியார் (உ)
நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்)
செவ்வைச் சூடுவார் பாகவதம் (பதிப்புப் பணி ஏற்பு மட்டும்)
சீவக சிந்தாமணி (ப.4)
ப - பதிப்பு
உ - உரை நடை நூல்

Friday, February 17, 2006

விடையவன் விடைகள்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில
கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று
சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

(மரத்தடியில் ஏற்கெனெவே நான் பிரசுரித்த மேற்காணும் கேள்விகளை எனது இந்தப் பதிவில் மீண்டும் பிரசுரம் செய்கின்றேன்)

இழிது இழிது ஈயெனெ இரத்தல் இழிது; அதனினும் இழிது.....

நியூயார்க் 'பென்' (Penn) ஸ்டேஷனில், ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளில், "தட்டு ஏந்துபவர்களை ஊக்குவிக்காதீர்கள்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளன" (Do not encourage pan-handlers; Charities are there to take care of them), என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த அமெரிக்கவாசிகள், மாதா மாதம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, டாலர்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டுக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், நம்ம பாடு கஷ்டம்தான். அது போன்ற ஒழுங்குடன் உருப்படியாக அமைப்புகள் ஏதும் இருக்காது. எங்கு திரும்பினாலும், பிச்சைக்கார்கள் மயம்தான். கோவில் வாசலில் பிச்சை, ஹோட்டல் வாசலில் பிச்சை, டிராபிக் சிக்னலில் பிச்சை. அவர்களுக்குப் பிச்சை போடாவிட்டால், மனித நேயம் இல்லாத மனிதனா நீ என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்து விடும். போடுவது ஒரு ரூபாயோ, ஐம்பது பைசாவோ பிச்சை இட்டாலோ, பிச்சைக்காரர்களை ஊக்குவித்து ஒரு சோம்பேறிச் சமுதாயத்தை வளர்க்க நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும்.

டிராபிக் சிக்னலில், பாதுகாப்பு விதிகளை மீறி, வண்டிகளுக்கு நடுவே பூந்து புறப்பட்டுப் பிச்சையெடுப்பவர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும். ஒரு வாரக் கடைசியில் குடும்பத்துடன், ஹோட்டலுக்குச் சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு, வெளியே வந்தவுடன், உடனே ஹோட்டல் வாசலில், நாலைந்து கைகள் நீளும். இதில் எந்தக் கை உண்மையிலேயே தானம் பெறத் தகுதியான கை என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையாலுமே பசியால் வாடும் பார்ட்டியாக இருக்கலாம். அல்லது, உழைக்காமலே சோம்பேறித்தனமாகவே உட்கார்ந்து சாப்பிடப் பிறந்த ஜென்மமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரும் முறையும், பிச்சை போடக் கூடாது என்று முடிவு செய்து, பின்னர், அவர்களின் பாவப்பட்ட முகங்களப் பார்த்தவுடன், பிச்சை போட்டு விடுவது வழக்கம்.

கமல் நடித்த 'பேசும் படம்' என்ற ஒரு படத்தில் ஒரு பிச்சைக்காரனது பாத்திரம் வரும். இறுதியில்தான் தெரியும், கோஷ்டி, படு வெயிட்டான பார்ட்டி ஒன்று என்று. இது போல, புகழ் பெற்ற கோவில்களின் வாசல்களில், பிச்சை எடுப்பதையே வாழ்நாள் முழுவதும், முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் பல பேரைப் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு ஒருக்காலமும் உதவி செய்வதில்லை என்று தீர்மானித்ததுண்டு. ஆனால் இதே கோவில் வாசல்களில், உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய சிலரைப் பார்க்கலாம். அவர்களுக்கு உதவி செய்யாமலிருக்க மனசு வராது.

பெரும்பாலான மதங்கள், தானம் கொடுப்பதை, (பிச்சை போடுவதை) ஊக்குவிக்கின்றன. ஆனால் அது, அந்தக் காலத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம்.தற்காலத்தில் இது சரியா? தெரியவில்லை. பசியோடு வந்து பிச்சை கேட்கும் ஒரு சிறுவனிடம், "ஏண்டா, உழைத்துச் சம்பாதிக்க மாட்டேங்கிறாய்? நான் வேலை வாங்கித் தரட்டா?", என்று சில பேர் ப்ளேடு போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

"போடுவது ஐம்பது பைசாவோ அல்லது ஒரு ரூபாயோ. இதற்காகவென்று ஒரு பதிவு வேறு தேவையா?" என்று நீங்கள்கூடக் கேட்கலாம். பிரச்னை அதுவல்ல. பிச்சைக்காரர்களை ஊக்குவிக்கலாமா அல்லது கூடாதா என்பதுதான் இங்கு வாதம். உங்கள் கருத்து என்னெவென்று சொல்லுங்கள்.