Thursday, July 23, 2015

அவதானிப்பு



"சார்! இது ஒரு புதுமையான ஓவியப் போட்டி. ஒரு போட்டோவை பவர்பாய்ண்ட்லெ போட்டுக்க் காம்பிக்கறோம். அஞ்சு நிமிஷம் மட்டும் அத நல்லாப் பாத்துக்கணும். அதுக்கப்புறம் ஜஸ்ட் ரெண்டு மணி நேரம் மட்டும் தருவோம். அப்புறம் யார் தத்ரூபமாக வரையறாங்கன்னு பாத்துப் பரிசு தர்றோம்"

"சரி. நான் இப்ப என்ன பண்ணனும்?"

"ஒரு பத்து நிமிசம் ரெஸ்ட் எடுங்க சார்? இன்னம் பத்து நிமிஷத்லே வரஞ்சு முடிச்சுருவாங்க."

நகுலன் முதல் போட்டியாளரின் ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தார். நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ குறை தென்பட்டது. ஆமாம் தாடிதான் வித்தியாசம். கிட்டத்தட்ட டி.ஆர் தாடி மாதிரி வரஞ்சுருக்கான் மனுஷன். தாடிய ஒழுங்கா வரஞ்சுருந்தா கொஞ்சமாவது ரியலிஸ்டிக்கா இருந்திருக்கும்.

அடுத்த ஓவியத்தைப் பார்க்க எடுத்துக் கொண்ட நேரம் மொத்தம் மூணு நிமிஷங்கள் மட்டுமே.

"சார்! சார்! அந்த மூணாவது டேபிள்லே போய்ப் பாருங்க சார்! எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்?"

மூணாவது டேபிள் ஓவியன் அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான். ஆடிப் போய் விட்டார் நகுலன்.

"மணி, அந்த ப்ரொஜெக்டர ஆன் பண்ணு. ஒரிஜினல் படம் எப்படி இருக்குன்னு பாக்கறேன்."

ப்ரொஜெக்டரை ஆன் செய்த அடுத்த நொடி, அந்தக் கல்லூரி வளாகத்திலிருந்த கிட்டத்தட்ட ஐநூறு பெரும் திரையிலிருந்த புகைப்படத்தையும், ஓவியத்தையும் மாறி, மாறிப் பார்த்து வியந்தனர்.

"மவனே! இது எப்படி? ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியலியே!"

"அதுவும் அத்தனை டீடெயில்ஸும் அஞ்சு நிமிஷத்லே அப்சர்வ் பண்ணியிருக்கானே."

நகுலன் ஒரிஜினலுக்கும், நகலுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா என்று உத்து உத்துப் பார்த்தார். தோல்விதான்!

"தம்பி! ரொம்ப நல்லா வரஞ்சுருக்கீங்க. ஒங்க பேரு....?"


"எம்.எல்.என்.எஸ். ரவி சார்"!

Friday, May 29, 2015

தேவதை வந்தாள்


"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..."
கேப்டன், ராதிகாவைத் தள்ளி விட்டு மாவாட்டிக் கொண்டிருந்த காட்சியைக் டி.வி.யில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராமசர்மா.

"என்னடி இது? அப்பா போய் சினிமாப் பாட்டெல்லாம் டி.விலே பாத்திண்டிருக்கார்?"

"சித்தப்பா, நான் அப்புறமா சொல்றேன். நீங்க மொதல்லே, உங்க கையாலே அவருக்கு இந்தத் தயிர் சாதத்தை ஊட்டி விடுங்கோ"

கஞ்சனூர்   ராமசர்மான்னா எப்படிக் கூட்டம் அலை மோதும். கும்மோணத்லேந்தும், தஞ்சார்லேந்தும் வண்டி வெச்சுக் கூட்டிண்டு போவாளே! ஆனா, இப்ப மனுஷன் இப்படிப் படுத்த படுக்கையாக் கெடக்கறாரே!

"சரஸா, டாக்டர் என்ன சொல்றாரு?"

"சித்தப்பா, அப்பாக்கு அல்ஷைமெர்ஸ் டிஸீஸ் வந்துடுத்து. என்ன பண்றார்னு அவருக்கே தெரியல. பட்டப் பகல்லே கோயிலுக்குப் கெளம்பிப் போயிடறாரு, நடை சாத்தியிருக்கும்னு கூடத் தெரியாம. கிட்னி எல்லாம் கூட வீக்காயிடுத்தாம். அவருக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்திடுங்கோன்னு டாக்டர் சொல்லிட்டார். சரின்னு அவருக்குப் பிடிச்ச காசி ஹல்வா, கடுகுப் பச்சடின்னு ஒவ்வொண்ணாப் பண்ணிக் கொடுத்துட்டேன். ஆகஸ்ட் வந்தா தொண்ணூத்தி நாலாகப் போறது. நெறவா வாழ்ந்துட்டார். பிரச்னை இல்லாம எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச் சரி."

"அப்புறம் அன்னிக்குப் போன்லே என்னமோ சொன்னியே, ஹரிஹரன் வரணும்னுட்டு. நாளைக்கிக் கார்த்தால வந்துடுவன். இந்நேரம் மெட்ராஸ்லே வந்து எறங்கியிருப்பன்"

"ஆமாம் சித்தப்பா, “தேவதை எப்ப வருவா", தேவதை எப்ப வருவா?”ன்னு கேக்காத நாளே இல்ல"

ஒரே ஒரு தெருவையே கிராமம்னு சொல்லிக் கொள்ளும் அந்தக் கோட்டூர் கிராமத்தில் ஸ்கார்ப்பியோ வந்து நின்ற போது, அந்த தெருவிலுள்ள இருபது குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தன.

"பாத்து பாத்து அண்ணா! மேலே உத்தரம் இடிக்கப் போறது"

சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து நிமிர்ந்த ஹரிஹரன் முன்னால் பாய் போடப்பட்டிருந்தது.

"அண்ணா ஸ்ருதி பாக்ஸ்?"

"அதெல்லாம் வேணாம்மா. மொபைல்லேயே ஆப் இருக்கு. அது போதும்."

" ஸ..ரி...க.. . பா.... நீ..ஸா"

ஆரோகணத்தில் கோடி காட்டிவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிஷாதத்தில் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தான் ஹரிஹரன்.

ராமசர்மா கண்ணைத் திறந்து வாஞ்சையுடன் பார்த்தார்.

"ம்..ம்..மேலே பாடுன்னுசொல்வது போல இருந்தது.

"ஸரஸ்வதி...ஸ்ரொதஸ்வனி..."

ஹரிஹரன் பல்லவி எடுக்க ராம சர்மா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சரஸா, உனக்குக் கூட ஸ்ரொதஸ்வனின்னுதானேப் பேரு. அப்றம்  எப்படி நீ சரஸாவானே?"

"சித்தப்பா அப்பாக்கு இந்த ராகம்னா உசிரு. கீரவாணியோட ஜன்யம். எனக்கும் அப்பா இந்தப் பேரத்தான் வெச்சார். ஆனா அம்மாதான் கூப்பிட முடியலேன்னு ஸரஸ்வதின்னு மாத்திட்டா. கடேசிலே இப்ப சரஸாவாயிட்டேன். அப்புறம் இந்த "சிந்திய வெண்மணி" ஏன் பாக்கறார்னு கேட்டேளே! அதுவும் இதே ராகம்தான். அப்பா போட்ட பாட்டைப் பாட யாரும்  இல்லைன்னுதான் இந்தப் பாட்டு டி.விலே வந்தா ரொம்ப ஆசையாக் கேப்பார். "           

ஹரிஹரன் அனுபல்லவியிலிருந்து சரணத்துக்கு வருவதற்குள் சித்தப்பவாவிடம் இவ்வளவும் சொல்ல முடிந்தது.  ஆனால் ஹரிஹரனும், ராமசர்மாவுமோ வேறு ஓர் உலகத்திலிருந்தார்கள்.


ஹரிஹரன் சரணம் முடித்து, மறுபடியும், ‘ஸரஸ்வதிஸ்ரொதஸ்வனின்னு பல்லவி எடுக்கும்போது ராமசர்மா அந்த ராக தேவதையுடன் சங்கமமாகியிருந்தார்.

(சிமுலேஷன்)

Saturday, April 25, 2015

சில வித்தியாசமான விளம்பரங்கள்-08


சில வித்தியாசமான விளம்பரங்கள்


Friday, March 27, 2015

ஊரை ஏமாற்றும் நடிப்பு

வட  மாநிலத்து அரசியல் தலைவர்கள், பொது இடங்களில் சந்திக்கும் போது முகமன் கூறிக் கொள்கிறார்கள் என்றும், பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொள்கிறார்கள் என்றும் அப்படிப்பட்ட கலாச்சாரம் தமிழகத்தில் இல்லாதது வருத்தளிக்கும் விஷயம் என்று பல ஊடகங்களில் பல முறை எழுதப்பட்டுள்ளது. கருத்தால் மட்டுமே பிரிந்து நிற்கிறொமென்றால் அது சாத்தியம்; அது எற்கப்படுவத்து கூட.

ஆனால் இன்று நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும் போது எதிரணியில் இருப்பவர்களை ஊழல்வாதிகளென்று ஆதாரத்துடன் கூறுவது மட்டுமல்லாது அவரகள் ஜாதி, மத ரீதியாகவும் இழிவு செய்து பேசவும் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் பொது இடங்களில் பார்க்கும் போது மட்டும்
ஒருவருக்கொருவர் குசலம் செய்து குலாவுவது என்பது ஊரை ஏமாற்றும் நடிப்பு  அல்லவா?

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

Wednesday, March 11, 2015

லகர, ளகர, ழகர வேறுபாடுகள்




Tuesday, November 04, 2014

தாயார் சாகேப் தெருவும், தாதாபாய் நௌரொஜியும்


கத்தார் ஏர்வேஸ் விமானம் மினம்பக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மணி அதிகாலை 2.30. பாராசுட்டிளிருந்து குதிக்கத் தயாரானவர்கள் போல், ஸ்டொவ் செய்யப்பட்ட பெட்டிகளை எடுத்து கொண்டு குதிக்கத் தான பயணிகளை விமான நிலையம் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்தது. பிஸினஸ் க்ளாஸ் பெருமகனார்கள் முதலில் இறங்க, 'கேட்டில் க்ளாஸ்' பயணிகள் பின் தொடர்ந்தனர்.    

எரோப்ரிட்ஜில் ஜருகண்டி சொல்லாத குறையாக ஒவ்வொருவராக மெதுவாக முன்னேறினர். காரணம், எரோப்ரிட்ஜின் முடிவில், ஏர்போர்ட் பணியாளர் அனைவருக்கும் படிவம் ஒன்றினை வழங்கிக் கொண்டிருந்தார். அதனால்தான் தள்ளு முள்ளு.

இமிக்ரேஷன் படிவம் தான் விமானம் திருப்பதி மேல் பறக்கும் போதே பில்லப் செய்து விட்டோமே, இது என்னடா புதுப படிவம் என்று பார்த்தால், "வெளிநாட்டிலிருந்து 'எபோலா' வைரஸ் இறக்குமதி செய்கின்றீர்களா என்று சோதனை செய்வதற்கான படிவம் அது. அதாவது ஆத்மா சோதனை. உங்களுக்கு காய்ச்சல், கீய்ச்சல் ஏதாவது இருக்கின்றதா என்று நீங்களே சொல்ல வெண்டும்.

ஒரிஜினல் படிவத்தினைப் போட்டோ காபி செய்த ஆசாமி 'என்லார்ஜ்'பட்டனுக்குப் பதிலாக, 'ரிடக் ஷன்' பட்டனை அமுக்கித் தொலைத்து விட்டார் போலும். அவ்வளவு பொடி எழுத்துக்கள். படிவத்தில் வெற்றுப் பரப்புதான் எண்பது சதவிகிதம். அபடிவத்தினை வாங்கியவர்கள் பலரும் அதனைப் பூர்த்தி செய்து கொண்டிருக்க, 'இது வேலைக்காகாது. நேர விரயம்' என்றெண்ணி படிவத்துடன் ஓட்டமாய் ஓடி வந்து க்யூவில் நின்றேன். இது 'எபோலா'வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு சில குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் மட்டும் பூர்த்தி செய்தால் போதும். ஆனால் எங்கேயாவது இமிக்ரேஷனில் பிரச்னை வந்து விடுமோ என்று பயந்து அனைத்துப் பயணிகளும் சின்சியராக பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.

க்யூவில் எனக்குப பின்னாடி நின்று கொண்டிருந்த நபர், "மெடிக்கல் ஆபீசர்' கையெழுத்து வாங்கி விட்டீர்களா?" என்று கேட்க அதிர்ச்சி. 'ஆஹா, வடை போச்சே' என்று சொல்லிக் கொண்டே வந்து மெடிக்கல் ஆபிசர்ரிடம் கையெழுத்து வாங்க மற்றொரு க்யூவில் நின்றேன். நாம் நிற்கும் க்யூதான்  நம்ம ஜாதகப்படி மெதுவாக நகருமே! எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த வெள்ளைக்கார அம்மணி, மெடிக்கல் ஆபிசரிடம் விவாதம் செய்து கொண்டிருந்தார். என்ன விஷயம் என்றால், படிவத்தில் எங்கு தங்கப் போகிறார், அந்த இடத்தில் தொலைபேசி எண் என்ன என்ற விபரங்களைத் தெரிவிக்கவில்லையாம். அவளோ, "எனக்கு எப்படித் தெரியும், அன்னை அழைத்துப் போய், தங்க வைப்பவர்களுக்குத்தான் அந்த விபரங்கள் தெரியும்" என்று விவாதித்துக் கொண்டிருந்தாள். அது அப்படி "எனக்கு மட்டும் எப்போதும் முன்னாடி இருக்கிறவன்/ள் 'குடம், குடமாய்...'?

ஒருவழியாக மெடிக்கல் ஆபிசரிடம் படிவத்தில் சீல் வாங்கிகே கொண்டு வந்து மீண்டும் இமிக்ரேஷன் க்யூவில் நின்றேன். எனது முறை வந்தது. படிவத்தினை, பாஸ்போர்ட்டில் வைத்துக் கொடுத்தேன். படிவத்தினை ஏறெடுத்தும் பார்க்காது, பாஸ்போர்ட்டில் சீல் அடித்துக் கொடுத்தார். பின்னர் கன்வேயர் பெல்டில் பெட்டிகளுக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து கஸ்டம்ஸ் கிளியரன்ஸும் முடித்து வெளியெ வந்தேன்.

ஒரு மாதமாக ஸ்டார்பக்ஸ் கருமாந்திரங்களைக் குடித்த கடுப்பு நீங்க, அதிகாலை நான்கு மணிக்கு சூடா பில்டர் காபி ஆர்டர் செய்தேன். காபியை வாயில் வைக்கும் அந்தத் தருணம், நாராயணனைப் பார்த்தேன். முதல் நாள்தான் சூடானில் இருந்த அவனுடன் சாட் செய்து கொண்டிருந்தேன். ஜுரமாக இருக்கிறது. மறுநாள் எப்படிப் பயணம் செய்வது என்று புரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது பார்த்தான் இங்கே சங்கீதாவில்.

''என்னடா உடம்பு ஜுரம்னு சொல்லின்டிருந்தே. எப்படி டிராவல் பண்ணினே?"

"ஒரு பாராசிடமால் போட்டுட்டு ப்ளைட் ஏறியாச்சு. ஏழு மணி நேரத்லே     வந்திறங்கியாச்சு?"

"அது சரி; எபோலா பார்ம்லே டீடைல் எல்லாம் கேட்டிருப்பானே; அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் வேறெல்லாம் கேட்கறான்; வீட்டுக்கு
 வந்து வேற செக்கப் பண்ணுவானாம்மே?"

"பர்ர்ர்ர்!!!. அதுக்குத்தானே எப்போது கைவசம் ஒரு பேரும், ஒரு அட்ரசும் வெச்சிருக்கோம்.

பெயர் - தாதாபாய் நௌரோஜி, விலாசம் - நெம்பர் 10, தாயார் சாஹேப் தெரு"

"அடப்பாவிகளா! ரொம்பத்தான் வாத்யார் கதை படிச்சுக் கெட்டுப் போயிட்டாங்க"!
               
- சிமுலேஷன்



Monday, October 06, 2014

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் - நூல் விமர்சனம்




இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும்
(ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்)
மதிப்புரை - சுந்தரராமன் (சிமுலேஷன்)

இன்று மதிப்புரை.காமில் பிரசுரமானது

"என்னய்யா படம் எடுத்திருக்கான்? கதைலே பயங்கர ஓட்டை!" அப்படீன்னு யாரவது சொன்னால், உடனே "நீயாயிருந்தா எப்படி எடுத்திருப்பே?" என்று நண்பர்கள்  கேட்பது வழக்கம்.

"எனக்கு விமர்சனம் பண்ணத்தான் தெரியும். படம் எப்படி எடுக்கணும்னு எனக்கெப்படி தெரியும்?" என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்.

ஆனால், படத்தில் உள்ள பழுது என்ன என்பதனை சொல்வது மட்டுமல்லாமல், அதனை எப்படி நீக்குவது என்றும் சொல்லும்படியாக ஒரு தொகுப்பு வெளி வந்ததுள்ளது. பழுது நீக்கும் யோசனைகள் சொல்வபர் பி.ஆர்.மகாதேவன்.

இவர் எடுத்துக் கொண்டுள்ளவை, பத்திரிகைகளால் பாராட்டப்பட்டு ஓரளவு ஓடிய புகழ்பெற்ற எட்டு படங்கள். நந்தலாலா, அங்காடித்தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள் ஆகிய எட்டு படங்களை பீஸ், பீஸாகக்  கிழித்திருக்கிறார் மகாதேவன். புத்தகத்தின், சிறப்பான நான்கு அம்சங்கள்:-

·          குறிப்பட்ட படங்களில் உள்ள  சிறப்புக்கள் - எடுத்து கொண்ட எட்டு படங்களுமே குறைகள் உள்ள படங்கள் என்று மகாதேவன் நினைக்கவில்லை. திறமை உள்ள இயக்குனர்கள் திரைக்கதையில் இன்னம் கொஞ்சம் மெனக் கெட்டிருக்க்கலாமெ என்று எண்ணுகின்றார். எனவே நிறைகளையும் அவ்வப்போது எடுத்துக் கூறத் தயங்கவில்லை. ஆனால் மகாதேவன் பட்டியலிடும் நிறைகள் வெகு சொற்பமே.

·          குறிப்பட்ட படங்களில் உள்ள குறைகள் – ‘ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்’ என்று மகாதேவன் உப தலைப்பு கொடுத்திருப்பதால், இவருக்கும் திரைத் துறையில் நுழைய வேண்டும் என்றுள்ள ஆர்வம் புரிகின்றது. இருந்த போதும் குறைகளைப் பற்றிக் கூறும் போது, தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை மனுஷன். ஒரு விமர்சகனுக்குண்டான நேர்மையுடன் தைரியமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்கின்றார். நந்த லாலா, தெய்வத் திருமகள் போன்ற படங்கள் ஆங்கிலப் படங்களின் காப்பி என்று கூறுபவர், ஒரிஜினல் படத்திற்கு மரியாதை தராத தமிழ்ப் பட இயக்குனர்களைக் காய்ச்சுகின்றார்

·          குறைகளை நீக்கி எப்படிப் படம் எடுத்திருந்திருக்கலாம் என்ற யோசனைகள் - குறிப்பிட்ட படங்களில் குறிப்பிடட்ட சீனில் லாஜிக் எப்படி உதைக்கின்றது என்று விரிவாக எடுத்துரைக்கின்றார். படிக்கின்ற நமக்கும், 'அட, இவர் சொல்வது சரிதானே' என்று பல இடங்களில் உரைக்கின்றது.  எந்த இடங்களில் என்ன பழுது உள்ளது என்று கூறும் இவர், பழுது நீக்கக் கூறும் குறிப்பிட்ட யோசனைகளும் நன்றாகவே உள்ளன. 'ஆடுகளம்' திரைப்படத்தில் சேவல்கள் எப்படித் தயார் செய்யபடுகின்றன என்பதற்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை’ என்று சொல்லுவது நியாயமாகவேபடுகின்றது. வெறுமனே உருண்டையை உருட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் போதாது' என்று சாடுகிறார்.  ‘விளம்பரத்தில் முந்தானையை விரிச்சு ஆட வேண்டுமென்றும், கண்ணைப் பறிக்கிற கலர்ல புடவை வேண்டும் என்றும் அண்ணாச்சி சொல்கிறார். இவையெல்லாம் ஒரு சாதாரண விளம்பர இயக்குனருக்குக் கூடத் தெரிந்த விஷயங்களே. அண்ணாச்சியின் வர்த்தகத் திறமை இதைவிடவும் ஆழமானது. கவுரவமானது’ என்று சொல்லும் போது மகாதேவன் எந்த மாதிரி விஷயங்கள் படங்களில் இடம் பெற வேண்டுமென்று நினைக்கின்றார் என்று புரிகின்றது.

ஒவ்வொரு படத்தைப் பற்றியும் குறைகளையும் அபத்தங்களையும் சொல்லி விட்டு, பின் தானே அந்த திரைக்கதையை எப்படி அமைத்திருப்பேன், என்னெவெல்லாம் மாற்றங்கள் செய்திருப்பேன் என்று ஒவ்வொரு படத்துக்கும் ஒரு புது திரைக்கதை ஒன்றை எழுதுகிறார். இவை பெரும்பாலும் இம்சையாகவே இருகின்றன. இது சங்கீத விமர்சனம் செய்யும் சுப்புடு கச்சேரி பண்ணுவது போல உள்ளது. குறிப்பாக 'அஞ்காடித் தெரு', மற்றும் 'அழகர்சாமியின் குதிரை' ஆகிய படங்களுக்குக் மாற்றாகக் கொடுக்கும் கதைகள் தலை சுற்ற வைக்கின்றன.      

·           குறிப்பிட்ட இடங்களை விமர்சனம் செய்யும்போது அடிக்கும் நக்கல் மற்றும் நையாண்டி-  இந்த நாலாவது அம்சத்திற்காகவே புத்தகத்தைப் படிக்க வெண்டும் போல உள்ளது. நான் ரசித்த சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

“ஐம்பது வயதான் நாயகன் விக் வைத்து, சட்டையை இன் பண்ணி, கையில் ஒரு நோட்புக்குடன் நடந்து போனால் கல்லூரி மாணவன் என்று புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் தமிழ் பார்வையாளர்களுக்கு உண்டு. கூடவே ஒரு ஜியாமென்டரி பாக்ஸ் இருந்தால் பள்ளி மாணவனாகி விடலாம். ஸிப்பர் பாட்டில் கையில் இருந்தால் எல்.கே.ஜி மாணவனாகி விடலாம். தமிழ் மக்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்.”

“செந்தில் முருகன் ஸ்டோர் தன பணியாளர்களை கொத்தடிமை போல் நடத்துவதான் படம் முழுவதும் வருகிறது. அண்ணாச்சியின் வலதுகரமான   கருங்க்காலிதான் படத்தில் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டும் இருக்கிறார். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கதாநாயகனுக்கும், நாயகிக்கும் எற்படும் கோர விபத்தை க்ளைமேக்ஸாக வைத்திருக்கிறார். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை என்றால் பாம்பு எப்படி தப்பிக்கிறது.... அல்லது கீரி எப்படி ஜெயிக்கிறது என்பதுதான்  க்ளைமேக்ஸாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாம்பின் மேல் ஒரு பாறாங்கல் விழுந்து அது இறந்து விடுகிறது என்று காட்டினால் அது அசட்டுத்தனம்.”

“ஒன்று, குழ்ந்தை மன வளர்ச்சி குன்றிய அப்பாவுடன் இருக்க வெண்டும்.....இல்லையென்றால் தாத்தாவுடன் இருக்க வேண்டும் என்று ஜார்ஜ் புஷ் போல் ஏன் ஒரு பிரச்னையை அணுக வெண்டும்?”

“பாட்டி வடை சுட்ட கதையில் காக்கா பேசியது என்று சொன்னால் காக்காய் எப்படிப் பேசுமென்று கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், பாட்டி சுட்டு வைத்த வடை காக்காய் கொத்திக் கொண்டு போகும்போது பணியாரமாக மாறிவிட்டதாகச் சொன்னால் கேள்வி வரத்தான் செய்யும். ஒவ்வொரு கதைக்கும் ஒரு தர்க்கம் இருக்கும். அந்தத் தர்க்கத்தை அந்தக் கதையிலேயே மீறினால் அது தவறுதான்.”

“அந்தப் புள்ளி மானுக்கு ரொம்பவும் பயமா இருந்துச்சாம். அதனால ஒரு புலியைத் துணைக்கு வான்னு கூப்பட்டுச்சாம் என்று கதை சொன்னால், ரெண்டு வயசுக் குழந்தை கூட, மண்டையில், 'ணங்' என்று குட்டி விடும்.”

மகாதேவனது ரிப்பேர்க்  கடைக்குச் சென்று வந்த பின்னர் அவர் சொல்வதை ஒத்துக் கொள்ளாமல், 'எதையும் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது" என்றெல்லாம் சிலர் விமர்சனம் வைக்கலாம். ஆனால் தமிழத் திரையுலகை அடுத்த கட்டத்த்ற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் நமக்கு பி.ஆர்.மகாதேவன்களும் அவர்களது விமர்சனங்களும் கட்டாயம் தேவை. அந்த விதத்தில் தமிழ் சினிமா ரசிர்கள் படிக்க வேண்டிய புத்தகம் மகாதேவனது 'இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்'

புத்தகம்- இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்
ஆசிரியர் - பி.ஆர்.மகாதேவன்
பதிப்பு  - நிழல் வெளியீடு
பதிப்பாண்டு - டிசம்பர் 2011
பக்கங்கள் - 160

விலை – Rs. 120    

- சிமுலேஷன்
  

Tuesday, October 02, 2012

கொலு வைப்பது எப்படி? - ஒரு மீள் பதிவு

கடந்த வருடம் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதன் மீள் பதிவு இங்கே:-


முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது.

மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது.

நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது.

ஆறாம் பதிவில் தீமாட்டிக் கொலு குறித்து விளக்கப்பட்டது.

ஏழாம் பதிவில் கொலுவுக்கு அழைக்கும் முறையும், பூஜை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.  

எட்டாம் பதிவில் கொலுப் போட்டிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

ஒன்பதாம் பதிவில் கொலு முடிந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விளக்கப்பட்டது.

நவராத்திரியின் போது கொலு வைக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவுகள் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று நம்புகின்றேன்.

-       சிமுலேஷன்

Wednesday, June 20, 2012

இதற்காகவெல்லாம் இவர்களைப் புகழுதல் சரிதானா? - 01

நம் நாட்டில் பலவேறு தலைவர்களும், பிரபலங்களும் இருந்தார்கள். அனவரிடம் உள்ள நிறைகளைப் போலவே,  மனிதர்களுக்கே உண்டான குறைகளும் இருந்தன. அவற்றைப் பெரிதுபடுத்தாமல் போவதில் தவறில்லை. ஆனால் ஹீரோ வொர்ஷிப் செய்தே பழக்கப்பட்ட நமக்கு இந்தப் பிரபலங்கள் செய்த எல்லா விஷயங்களையுமே தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோமே! இது சரிதானா? இது குறித்து என்னுள் எப்போதுமே நெருடிக் கொண்டிருக்கும் சில கேள்விகள் இங்கே:-

 

ஒவ்வொரு முறையும் ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்களின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார் ஸாஸ்திரி. ஆனால், பிரதமர் நேருவோ அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். மீண்டும் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ஸாஸ்திரி மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் அதனை ஏற்றுக் கொள்கின்றார்.

லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணம் என்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்வது ஒரு வகையில் நியாயம். விபத்துக்கு தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது எதற்கு? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியா? சரியோ, தவறோ, இதற்காகப் போய் அவரை நாம் பாராட்டுவதும் சரிதானா?


காமராஜர் இந்திய அரசியலில் ஒரு முன்னுதாரணமாக, எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கல்வித் துறையிலும், தொழிற்துறையிலும் உண்மையாகவே மாபெரும் சாதனைகள் படைத்தவர். எத்தனையோ காரணங்களுக்காக அவரிப் புகழ்ந்து கொண்டே போகலாம்.

இருந்த போதும், அவரை King Maker என்று புகழுவது சரிதானா? ஸாஸ்திரின் அமைச்சரவையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும், சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர், பிரதமர் பதவிக்கு காமராஜர் ஏன் இந்திரா காந்தியின் பெய்ரை முன்மொழிய வேண்டும்? இந்திரா காந்தி, சாஸ்திரியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது ஏதேனும் பெரிய சாதனைகள் செய்தாரா? நேருவின் மகள் என்பதற்காக மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கு காமராஜர் பரிந்துரை செய்திருந்தால், அதற்காக காமராஜர் King Maker என்று புகழப்படத்தான் வேண்டுமா?


மது தண்டவதே சிறந்த பொருளாதார அறிஞர். மொரார்ஜி அமச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும், வி.பி.சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ரயில்வே அமைச்சராக இருந்த போது நல்ல பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். வாழ்வின் இறுதி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தவர்.

மது தண்டவதேயைப் பற்றி ஊடகங்களில் எழுதும் போதெல்லாம், அவர் கலர் டி.வி.கூட வைத்துக் கொள்ளாதவர் என்று பெருமையாக எழுதுவார்கள். எளிமையாக இருப்பது நல்லதுதான். அதற்காக கலர் டி.வி தொழில் நுட்பம் வந்த பின்பு கூட 'கருப்பு-வெள்ளை' டி.வி.தான் பார்ப்ப்பேன் என்று சொன்னால் அதில் என்ன பெருமை? மது தண்டவதே கலர் டி.வி பார்க்காததால் நாட்டுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டதா? இந்த ஒரு விஷயத்திற்காக மது தண்டவதே அவர்களைப் போற்றிப் புகழ்வது சரிதானா?

 

ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கள்ளுக் கடை மறியல் போராட்டம் எற்பட்ட போது அவருக்குச் சொந்தமான தென்னந் தோப்பிலிருந்த அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தினார் என்று பெருமையாகச் சொல்வார்கள். கள் வேண்டாமென்றால் தென்னை மரத்திலிருந்து 'கள்' இறக்குவதனை நிறுத்தினால் போதுமே! எதற்காக காய்த்துக் குலுங்கும் மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்காக ஈ.வெ.ரா அவர்களைப் புகவது சரிதானா?

மேலும் வரும்...

- சிமுலேஷன்